திங்கள், 7 டிசம்பர், 2020
மாற்று மத காதல் - நீதி மன்ற தீர்ப்பு
சனி, 5 டிசம்பர், 2020
சாதிகளை உருவாக்கிய சதிகாரர்கள்
கல்லப்பாடி க.பெ.மணி
சாதியின் பெயரில் எத்துணை எத்துணை ஆணவக் கொடுமைகள் நாள்தோறும் நமது நாட்டில் நடந்து வருகின்றன என்பதை ஊடகங்கள் உலகத்தார்க்கு படம்பிடித்துக் காட்டிவருகின்றன. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போன்று 30.4.2019 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பக்கம் 6இல் கிராமங்களில் நிகழும் தீண்டாமையைப் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 மாவட்டங்களில் உள்ள 646 கிராமங்களில் தீண்டாமை மிகக் கொடூரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியைப் படிக்கும்போது நமது நாட்டின் முன்னேற்றம் கரடுமுரடான மூடநம்பிக்கைகள் மிகுந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.
கீதையின் ‘ஞானகர்ம சந்நியாச யோகம்’ என்ற 4வது அத்தியாயம், 13வது சுலோகத்திலும், ‘மோட்ச சந்நியாச யோகம்’ என்ற 18வது அத்தியாயத்தில் 41வது சுலோகத்திலும் ‘பிராம்மணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகிய நான்கு வகை சாதிகளை அவரவர் பிறப்பால் ஏற்பட்ட இயல்புகளுக்கு ஏற்ப கடமைகளை வகுத்து நான்தான் உருவாக்கினேன்’ என்று கிருஷ்ணன் அர்ச்சுனனிடம் கூறியுள்ளார். சாதிகளை உருவாக்கியதாகக் கூறும் இந்த இருவரில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? தந்தை சொல்வது உண்மையா? மகன் சொல்வது உண்மையா? இதில் வேடிக்கை என்னவென்றால் மகாவிஷ்ணு தந்தையாம். பிரம்மன் மகனாம். அரசியலில்தான் தந்தையும் மகனும் போட்டி போடுவர். இங்கு சாதிகளை உருவாக்குவதில் தந்தைக்கும் மகனுக்குமே போட்டி. வேண்டுதல் வேண்டாமை போன்ற உயரிய பண்புகளின் உறைவிடமாகக் கருதப்படும் கடவுள்கள் மக்களிடையே சாதிகளை உருவாக்கி சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவார்களா? சாதியின் பெயரில் ஆணவக் கொடுமைகள் நடக்க விடுவார்களா?
கிழிந்த பஞ்சாங்கத்தையும், காய்ந்த தர்பை புல்லையும் மூலதனமாகக் கொண்டு கடவுள்களின் பெயர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, சாதிகள் பெயரில் மக்களிடையே மூடப்பழக்க வழக்கங்களைப் பரப்பி, உழைக்காமல் தங்கள் வயிறைக் கழுவி உல்லாசமாக உயிர்வாழும் பழுது பார்க்கப்பட வேண்டிய மூளைக்குச் சொந்தக்காரர்களான ஒரு சோம்பேறி கூட்டத்தினர்தான் சாதிகள் உருவாகக் காரணமாக இருந்த சண்டாளர்கள் _ சழக்கர்கள் என்பது நன்கு விளங்குகிறது.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்து மதத்திற்கும், இந்து மதக் கடவுள்களுக்கும் தாங்கள்தான் ஏகபோக வாரிசு என்றும், கார்டியன் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையைப் போல் இப்பொழுது கடவுள்களின் சாதிகளைக்கூட அலச ஆரம்பித்து தங்கள் மேதாவித் தனத்தைக் காட்ட முயன்று வருகின்றனர். இந்துக்களின் கடவுள்களில் சக்திவாய்ந்த கடவுள் என்று சொல்லப்படுகின்ற ‘அனுமானை’ தாழ்த்தப்பட்ட ‘தலித்’ வகுப்பைச் சேர்ந்தவர் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாண்புமிகு யோகி கூறியுள்ளார். அனுமான் என்ற பெயர் உள்ளதால் அவர் ஒரு ‘முஸ்லிம்’ என்று சட்டமன்ற உறுப்பினர் திரு.நவாப் அவர்களும், ‘ஜாட்’ வகுப்பைச் சேர்ந்தவர் என்று திரு.லட்சுமி நாராயணன் என்பவரும், ‘ஆர்ய’ வகுப்பைச் சேர்ந்தவர் என்று திரு.சத்யபால் சவுத்ரி என்பவரும், மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர் என்று நண்டுகிஷோர் என்பவரும், தங்கள் தங்கள் மனநிலைக்கேற்ப விமர்சனம் செய்துள்ளனர். இந்த விவரங்கள் கடந்த 21.12.2018 அன்று தேதியிட்டு வெளியாகி உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழில் பக்கம் 9இல் பிரசுரமாகி உள்ளன.
பா.ஜ.க. ஒழிக என்று குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணை கிரிமினல்வாதியாக, தீவிரவாதியாக நினைத்து அவர்மீது நடவடிக்கை எடுத்தவர்கள் அனுமானைப் பற்றி கேவலமாக விமர்சித்துள்ள பா.ஜ.க.வினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? இந்துக்களின் கடவுளான அனுமனுக்கு சாதி கற்பித்த உ.பி. முதல்வர் திரு.யோகி மீது என்ன நடிவடிக்கை எடுக்கப் போகிறது மய்ய அரசு? அல்லது இந்து மதத்தையும் இந்து மதக் கடவுள்களையும் கிண்டல் செய்ய பா.ஜ-.க.வினர்க்கு மட்டும்தான் உரிமை உள்ளது என்று வாளா இருக்கப் போகிறார்களா? பகுத்தறிவு உலகம் பா.ஜ.க.வின் பதிலையும் மய்ய அரசின் நடவடிக்கையையும் எதிர்பார்க்கிறது.
கௌதம புத்தர் என்பவர் கடவுள் இல்லை என்று போதித்தார். ‘ஓடும் உதிரத்தில், வடிந்து ஒழுகும் கண்ணிரில் தேடிப் பார்த்தாலும் சாதி தெரிவதுண்டோ’ என்று சாதிகளை உருவாக்கிய சழக்கர்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார் கபிலர் என்பவர் ‘கபிலரகவல்’ என்ற குரு மொழியில்.
வட இந்தியாவில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களும், தென்இந்தியாவில் ஈரோட்டு வெண்தாடி வேந்தர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களும் தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை தீண்டாமையை எதிர்த்துப் போராடி உள்ளனர். “மதமும் கடவுளும்தான் சாதி முறைகளுக்கு மூலகாரணம் இவ்விரண்டும் என்று ஒழிகிறதோ அன்றுதான் சாதியும் ஒழியும்’’ என்று கூறினார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
அம்பேத்கரின், பெரியாரின் கனவு நிறைவேறவும் தீண்டாமையை ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதி கடுமையான திட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பெரியாரின் அறிவுரை சட்ட வடிவம் பெறவும் சாதிமத பேதமற்ற சமுதாயத்தை சமத்துவத்தைக் காண வேண்டுமாயின் சாதி முதலில் ஒழிந்தாக வேண்டும்; சாதி ஒழிப்பை சட்டமாக்க வேண்டும்.
- உண்மை இதழ் ஆகஸ்ட், 1 -15 .2019,
ஜனநாயகத்தை அம்பேத்கர் ஆதரித்தாரா? பெரியார் எதிர்த்தாரா?
எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (41) : ஜனநாயகத்தை அம்பேத்கர் ஆதரித்தாரா? பெரியார் எதிர்த்தாரா?
நேயன்
“இந்து மதத் தத்துவங்கள், விதிகள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக புதிய புரட்சி விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்.
இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியாக வகுப்பு ஒழுக்கமுறையே. இப்படி கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க மாட்டேன். இவ்வாறு மதம் என்று மக்களிடம் தவறாகக் காட்டப்படும் கட்டளைத் தொகுப்புகளின் முதல் தீமை, அறநெறி வாழ்க்கை இயற்கையாக, சுயேச்சையானதாக இருப்பதற்கு மாறாக, வெளியிலிருந்து சுமத்தப்படும் விதிகளைக் கவலையுடனும் அடிமைத்தனமாகவும் அனுசரித்து நடக்கும் செயலாக மாறி விடுகிறது என்பதாகும்.
லட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்குப் பதிலாக, கட்டளைகளுக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகி விடுகிறது. எல்லாவற்றிலும் பெரிய தீமை, அந்தச் சட்டங்கள் நேற்றும், இன்றும், இனி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதே. இவை ஒரு வகுப்பிற்கு இருப்பதுபோல இன்னொரு வகுப்புக்கு இல்லை என்பது இவற்றில் காணப்படும் அநீதி. எல்லாத் தலைமுறைகளுக்கும் இதே சட்டங்கள்தான் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதால் இந்த அநீதி நிரந்தரமாகிறது. தீர்க்கதரிசிகள் அல்லது சட்டம் அளிப்போர் என்று கூறப்படும் சில நபர்களால் இந்த விதித் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன என்பது ஆட்சேபிக்கப்படவில்லை. ஆனால், இவை இறுதியானவை, மாற்ற முடியாதவை என்று கூறப்படுவது ஆட்சேபத்துக்குரியது. இன்பம் என்பது ஒரு மனிதனின் நிலைமைகளுக்குத் தகுந்தபடி மாறக் கூடியது. அது மட்டுமின்றி வெவ்வேறு மக்களின் வெவ்வேறு காலங்களின் நிலைமைக்குத் தகுந்தபடியும் அது மாறக்கூடியது. அப்படியானால், என்றென்றைக்கும் மாறாத இந்தச் சட்டங்களைச் சகித்துக் கொள்ளச் செய்வது மக்களை நெருக்கிப் பிடித்துக் கட்டிப் போடுவது போலாகுமல்லவா? எனவே, இப்படிப்பட்ட மதத்தை அழிக்க வேண்டும் என்று கூறுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. இப்படிப்பட்ட மதத்தை அழிக்கப் பாடுபடுவது மதத்துக்கு விரோதமான செயல் அல்ல.
இம்மாதிரி ஒரு சட்டத்தை எடுத்து வைத்து மக்களிடம் அதற்கு மதம் என்று பொய்ப் பெயர் சூட்டியிருக்கும் முகமூடியைக் கிழித்தெறிவது உங்கள் கடமை என்று நான் கருதுகிறேன். இது நீங்கள் அவசியமாகச் செய்ய வேண்டிய காரியம். மக்கள் மனத்தில் உள்ள தவறான எண்ணத்தைப் போக்கி, அவர்கள் மதம் என்று நினைப்பது உண்மையில் சட்டமேயன்றி மதம் அல்ல என்று உணரச் செய்தால், பின்பு அதைத் திருத்த வேண்டும் என்றோ, ஒழிக்க வேண்டும் என்றோ அவர்கள் ஏற்கும்படியாகக் கூற முடியும். மக்கள் இதை மதம் என்று நினைக்கும்வரை அதை மாற்ற இணங்க மாட்டார்கள். ஏனென்றால், மதம் என்பது பொதுவாக மாற்றத்துக்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், சட்டம் என்பது மாற்றப்படக் கூடியது. ஆகவே, மதம் என்று தாங்கள் நினைப்பது உண்மையில் பழசாகிப் போன சட்டம்தான் என்று மக்கள் தெரிந்துகொண்டால், அதில் மாற்றம் செய்வதற்கு அவர்கள் தயாராயிருப்பார்கள். ஏனென்றால் சட்டத்தை மாற்றலாம் என்பது அவர்கள் அறிந்து, ஒப்புக்கொண்டுள்ள விஷயமே.
இந்து என்று சொல்லப்படும் ஒவ்வொருவரும் புரோகிதராய் வர அனுமதிக்க வேண்டும். (இதைத்தான் தந்தை பெரியார் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றார்.) புரோகிதர் அரசுப் பணியாளராக இருக்க வேண்டும். இதற்கான தகுதியை அரசு (அய்.சிஎஸ். அதிகாரிகளுக்கு செய்வதுபோல) வரையறுக்க வேண்டும். (ஆனால், தற்போது பிறப்பால் ஜாதியடிப்படையில் வரும் புரோகிதன் அறிவற்றவனாக, ஸிஃபிலிஸ், கொனோரியா போன்ற நோயுடையவனாக, ஒழுக்கக் கேடனாக இருக்கிறான்.) இதன்மூலம் பிராமணியத்தையும், அதன் வழிவரும் ஜாதியையும் ஒழிக்க முடியும்.’’
(ஆதாரம்: அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்)
(தமிழ் பக்கம் 111-114, ஆங்கிலம் பக்கம் 66 மற்றும் 76)
இந்து மதமும் இந்துக்களும் தவறான லட்சியங்களை நாடுவதாலும், தவறான வாழ்வை நடத்துவதாலும் நான் அவர்களை வெறுக்கிறேன். அவர்களின் சமூக நடத்தையிலுள்ள குறைபாடுகள் மீதல்ல என் சண்டை. அதைவிட அடிப்படையானது, அவர்களின் நெறிமுறைகள் பற்றியது.
இந்துத் தலைவர்கள் வெட்கமில்லாமல் நிகழ்காலத்துடன் எவ்விதத் தொடர்பும் அற்றுப் போய்விட்ட கடந்தகால லட்சியங்களை ஆதரித்து நிற்கிறார்கள். தாம் தோன்றிய காலத்தில் பொருத்தமாக இருக்கக்கூடிய இலட்சியங்களை இன்றைக்கு வழிகாட்டுவதற்குப் பதிலாக இப்படிச் செய்கிறார்கள்.
பிராமணர்கள் சாஸ்திர விரோதமாய் எல்லாத் தொழிலும் செய்கிறார்கள். செருப்பு விற்கும் பிராமணர்கள் அதிகமாகி வருகிறார்கள். அதேநேரத்தில் ஜாதியையும், சாஸ்திரத்தையும் தினம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்? என்று சாடுகிறார் அம்பேத்கர்.
(அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - ஜாதி ஒழிப்பு)
ஆக, அம்பேத்கர் சொல்ல வருவதென்ன? மனித பேதம் நீங்க வேண்டும், இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும், கடவுள் நம்பிக்கை இருக்கும்வரை புரோகிதர் தொழில் எல்லா ஜாதிக்கும் உரிமையாக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் எல்லாவற்றிலும் சம உரிமையும் சம தகுதியும் பெற வேண்டும். அதன் வழி ஜாதி ஒழிய வேண்டும். இதையடைய இந்து மதச் சட்டங்களை ஒழித்து விட்டு, காலத்திற்கேற்ப புரட்சியான சட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்கிறார். இதை ஜனநாயக வழியில் ஓட்டுப்போட்டுச் செய்ய முடியுமா? சற்றேறக்குறைய 70 ஆண்டுகள் ஆகியும் அம்பேத்கர் விரும்பிய மாற்றம் வரவில்லையே! இந்து மதக் கொடுமை, பேதம், இழிவு, தீண்டாமை, ஜாதி நீங்கவில்லையே!
அதற்குத்தான் பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களின் சர்வாதிகாரம் வேண்டும் என்றார். அம்பேத்கருடைய கருத்தும் அதுதான்.
மக்கள் அனைவரின் கருத்தறிந்து இதை ஒழிக்க முடியுமா? ஜாதியை மக்கள் விட்டுக் கொடுப்பார்களா?
குடிப்பவன் சம்மதத்தோடுதான் மதுவிலக்கு செய்ய வேண்டும் என்றால் அது சாத்தியமா? லாட்டரி சீட்டு தடை மக்கள் கருத்தறிந்து செய்யப்பட்டதா? ஆக, ஜனநாயகத்திலேகூட பலவற்றைச் செய்ய சர்வாதிகார நடைமுறைதானே தேவைப்படுகிறது. அதைத்தான் பெரியார் சொன்னார். அதைத்தான் அம்பேத்கர் விரும்பினார். இதில் என்ன முரண்பாடு?
இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்ய காந்தி உள்பட சனாதனிகள் எண்ணியபோது, இந்து மதத்தை அறவே ஒழித்து புதிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அம்பேத்கர் உறுதியாகக் கூறியதோடு,
இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டில் தோழர் ஈ.வெ.ரா. செய்து கொண்டிருக்கிறார் என்று அம்பேத்கரே சான்றிதழ் கொடுத்தார்.
அது மட்டுமல்ல; ஜாதியை ஒழிக்க என்ன வழி? என்ற என் ஆங்கில உரையை வெளியிட்டு, என்னைத் தமிழகத்தில் பிரபலப்படுத்தியவர் தோழர் ஈ.வெ.ரா. என்றார் அம்பேத்கர்.
இந்தியாவின் முதல் மனித உரிமைப் போரே ஈ.வெ.ரா.வின் வைக்கம் போராட்டம்தான்! தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராட என்னை உந்தித் தள்ளியதும் பெரியார்தான் என்று கூறினார், அம்பேத்கர்.
அப்படியிருக்க, அவர்கள் இருவருக்குள்ளே வேறுபாட்டை கற்பித்து பிரித்தாளத் துடிக்கும் பித்தலாட்டப் பிரச்சாரம் எங்களிடம் எடுபடாது; எம் மக்களிடமும் எடுபடாது. மாறாக, இன்னும் உறவு பலப்படும்; உணர்வும் வலுப்படும்!
(தொடரும்...)
- உண்மை இதழ், ஆகஸ்ட், 1 -15. 2019
வெள்ளி, 4 டிசம்பர், 2020
பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா?
எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா?
நேயன்
பெரியார் என்றாலே கடவுள் இல்லை, கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று அழுத்தம் திருத்தமாய் மூன்று முறை சொல்லி உறுதிபடக் கூறியவர்; பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர் என்பதைச் சின்னக் குழந்தைக்கூட சொல்லும். உண்மை அப்படியிருக்க இந்த அயோக்கிய சிகாமணி எப்பேர்ப்பட்ட அபாண்டப் புளுகை அவிழ்த்துவிட்டுள்ளார் பாருங்கள்.
இதற்கு அவர் காட்டும் ஆதாரமே மோசடியானது என்ன ஆதாரம்?
கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை, ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்துவன், முஸ்லீம் மாதிரி கும்பிடு என்றார் என்று பெரியார் கூறியதாக விடுதலையை ஆதாரமாகக் காட்டி கூறுகிறார்.
ஆரிய ஆர்.எஸ்.எஸ். திரிபுவாதிகளின் பித்தலாட்ட மோசடிப் பிரச்சாரத்திற்கு இது ஒரு சரியான சான்று. பெரியார் சிதம்பரம் வட்டம் சேத்தியாதோப்பில் 24.5.1959இல் பேசியபோது குறிப்பிட்டவற்றில் முக்கியமான பகுதியை நீக்கிவிட்டு தனக்குத் தேவையான பகுதியைக் கத்தரித்து ஒட்டி இம்மோசடிப் பிரச்சாரத்தைச் செய்திருக்கிறார்.
உண்மையில் பெரியார் பேசியது என்ன? “இந்து மதத்தில் ஒழுக்கமான கடவுள் ஏதாவது இருக்கிறதா? அன்பான சிவன் என்கிறாய் எது அன்பானது? கையிலே வேலாயுதம், இடுப்பிலே புலித்தோல், கழுத்திலே பாம்பு, மண்டை ஓடு பல பேரைக் கொன்றது, எப்படி அன்பான சிவன் ஆக இருக்க முடியும்?
பெண்டாட்டியைக் கூட்டிக் கொடுத்தால் மோட்சம் தரும் கடவுள்! உன் பெண்டாட்டியை வாடகைக்குக் கேட்டால் என்ன செய்வாய்? சம்மதிப்பாயா? உதைக்க மாட்டாயா? அடுத்தவன் மனைவி மேல் ஆசைப்பட்டு உதை வாங்கிய கடவுள்தானே இருக்கிறது? பிள்ளைக்கறி கேட்கிறது சாமி! பெற்ற பிள்ளையை கொல்வது பக்தியா?
அனுசுயா பத்தினியாக இருக்கிறாள். அவளைக் கற்பழிக்க வேண்டும் என்று நாரதர், சிவன், விஷ்ணு, பிரம்மா எல்லோரும் போகிறார்கள். அவள் இவர்களை குழந்தையாக மாற்றி தொட்டிலில் போட்டுவிட்டாள்! அடுத்தவன் மனைவி பத்தினியாய் இருப்பதைக் கெடுக்க கற்பழிக்கப் போனவர்களெல்லாம் கடவுளா?
இப்படிப்பட்ட கடவுளை ஏற்கலாமா? வணங்கலாமா? என்று பலவாறு கேட்டுவிட்டு, பக்தியை விடமுடியவில்லை. கடவுளை வணங்கித்தான் தீருவேன் என்று கடவுளை நம்புவதில் பிடிவாதமாய் இருப்பவர்களைப் பார்த்து, கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்துவன் மாதிரி, முஸ்லீம் மாதிரி கும்பிடு. தொலையட்டும், பரவாயில்லை. இப்படிக் காட்டுமிராண்டித்தனமான கடவுளை வைத்துக்கொண்டு அதற்கு பல சடங்கு பூசைகளை இந்த 1959ஆம் ஆண்டில் செய்யலாமா?’’ என்று பேசினார்.
இந்தப் பேச்சில் தனக்குத் தேவையானதைக் கத்தரித்து எடுத்துக்காட்டி, பொருத்தம் இல்லாதவைகளை அங்கொன்றும் இங்கொன்றும் பற்பல வெட்டல் ஒட்டல் வேலைகளைச் செய்து பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக்கொண்டது போலவும், அதுவே அவர் கொள்கை போலவும் காட்ட முயலும் இந்த மோசடிப் பேர்வழி எப்படிப்பட்டவர் என்பதைச் சிந்தியுங்கள்! எச்சரிக்கையாய் இருங்கள்.
அவர், கடவுளை கும்பிட்டே தீருவேன் என்பவர்களை பார்த்து, “அப்படி கடவுளை வணங்கித்தான் ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் நம்பிக்கையாளர்களைப் பார்த்து, அயோக்கிய கடவுளை விட்டுவிட்டு யோக்கியமான ஒரு கடவுளை வணங்கித் தொலை’’ என்றதான் கூறினார். ஒரேயடியாக எல்லா மக்களும் ஒரே நாளில் கடவுளை மறுத்துவிட மாட்டார்கள். அப்படியிருக்க, சீர்கேட்டை அகற்றி முட்டாள்தனத்தை முடிந்த மட்டும் குறைக்கும் முயற்சியில் அவர் கூறியதைக் காட்டி அவர் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டார் என்பது திரிபுவாதமல்லவா?
பெரியார் சொன்னதில் ‘தொலையட்டும், பரவாயில்லை’ என்ற வார்த்தைகளே முதன்மையானவை. ஒரு கடவுளை வணங்கித் தொலை என்றால் ஏற்றுக்கொண்டார் என்று பொருளா? அவர் ஏற்கவில்லை என்றாலும் பிடிவாதமான மக்களுக்கு அவர் சொன்ன அறிவுரை. அவ்வளவுவே!
கடவுள் கருத்தில் பெரியாருக்குள்ள கருத்துகளையே அம்பேத்கரும் கொண்டிருந்தால் அதனால்தான் இந்து மதத்தை விட்டு, கடவுளை மறுக்கும் புத்த மதத்தை ஏற்றார். மற்றவர்களையும் ஏற்கும்படி பிரச்சாரம் செய்தார். உண்மை இப்படியாக அம்பேத்கர் பல கடவுளை ஏற்றுக்கொண்டது போல இவர் காட்ட முயல்வது மோசடியானது. (கடவுள் ம-றுப்பு பற்றி புத்த தம்மம் நூலில் விரிவாகக் காணலாம்.)
ஈ.வெ.ரா. ஒரு ஜனநாயகவாதியல்ல. ஆனால், அம்பேத்கர் ஒரு ஜனநாயகவாதி என்பது மூன்றாவது மோசடிப் பிரச்சாரம்.
இப்படியொரு கருத்தைச் சொல்லி இருவரும் முரண்பட்டக் கொள்கையையுடையவர்கள் என்று காட்ட முயலுகிறார் இவர். இதற்கு பெரியார் குடியரசில் எழுதிய கட்டுரையைக் காட்டுகிறார்.
பெரியார் அக்கட்டுரையை எழுதியது ரஷ்யாவின் கம்யூனிச தாக்கத்தால் கவரப்பட்டு, கம்யுனிசக் கொள்கைகளை பரப்ப முயன்ற நேரம். எனவே, இரஷ்யாவில் உள்ளது போன்ற ஆட்சி முறையை விரும்பி,
லெனின் ஆட்சிதான் மனித தர்மத்திற்கு உகந்த மனித நாயக ஆட்சியாக இருக்க முடியுமே அல்லாமல் மற்றபடி எந்த சீர்திருத்தம் கொடுத்து எந்த ஜனநாயக ஆட்சி கொடுத்து நடத்தினாலும் அது ஒரு நாளும் மனித தர்ம ஆட்சியாக இருக்க முடியாது என்று கூறுகிறார்.
இரஷ்ய ஆட்சி முறையில் ஏற்பட்ட புரட்சிகர மாறுதலால் கவரப்பட்டே பெரியார் இரஷ்யா சென்றார். இரஷ்யா செல்லும் முன்னமே பெரியாருக்கு கம்யூனிசம் பற்றியும், ரஷ்யா பற்றியும் உயர் எண்ணம் இருந்தது.
அப்படியொரு ஆட்சி வரவேண்டும் என்பதற்காகவே ஜனநாயகம் வேண்டாம் என்றார். சின்னாபின்னமாக்கப்பட்டு, சீரழிந்து கிடக்கும் ஒரு நாடோ, சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் கண்டிப்பாய் அந்த நாட்டிற்கு ஜனநாயகம் என்பது ஏற்றதல்ல. பல மதமாய், ஜாதியாய், வகுப்பாய் பிரிந்து கிடக்கும் 100க்கு 10 பேருக்குக் கூட கல்வியறிவு இல்லாமலிருக்கும் இந்தியாவிற்கு இன்று ஜனநாயக ஆட்சி என்பது சிறிதும் பயன்படாது என்றார்.
இந்திய நாட்டில் உள்ள மனித சமூகத்தில் சுமார் 6 கோடி மக்கள் தீண்டத்தகாதவர்களாக மனிதர்களால் தொடக்கூடாதவர்களாக அநேக விஷயங்களில் மனித உரிமைகளை அனுபவிக்கக் கூடாதவர்களாக -_ தெருவில் நடக்கவோ, குளத்தில் தண்ணீர் அருந்தவோ பொதுக்கோவில், மடம், சத்திரம், சாவடி என்பவைகளில் பிரவேசிக்கவோ, சில பொதுவிடங்களில் சென்று படிக்கவோ, கூலிவேலை செய்யவோ, உத்தியோகம் பார்க்கவோ தடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, கொடுமை செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதில் உரிய விடிவை ஜனநாயகம் மனித வர்க்கத்திற்குக் கொடுக்கக் கூடியதா? அல்லது அடிமைத்தனத்தைக் கொடுக்கக் கூடியதா? என்பதை சிந்திக்க வேண்டும்.
இன்று நமது மக்களின் ஜனநாயக உணர்ச்சியானது நமது தேசம், நமது மதம், நமது ஜாதி என்ற தத்துவத்தின் மீதும், முதலில் தேசம் என்ற பலரும், முதலில் மதம் என்று பலரும், முதலில் ஜாதி என்ற அநேகரும் கருதியே ஜனநாயகத் திட்டங்களை வகுக்கின்றனர். முதலில் மனித சமூகம் பிறகுதான் மற்றது என்கின்ற அறிவு இந்நாட்டில் மகாத்மா முதல் மாணவர்கள் வரையில் யாருக்காவது இருக்கிறதா?
(தொடரும்...)
இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி
சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி
நூல்: இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும்
நூற்றாண்டு கால நோய் சாதி
ஆசிரியர்: பொன்னீலன்
வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை -05
தொலைபேசி: 97907 06549 / 97907 06548
விலை: ரூ.120.
ஆதி வேர்களைத் தேடி
மனித சமூகங்களுக்கு முன்நோக்கிப் பாயும் ஆற்றலைத் தருகின்ற மூல ஆதாரங்களில் முக்கியமான ஒன்று சமூக வரலாறு. புதிய வரலாறு படைக்கச் சமூகங்கள் எந்த அளவுக்கு முன்னோக்கிப் பாய்கின்றனவோ, அந்த அளவுக்கு முனைப்பாக அவை தன் வரலாற்றையும் பின்னோக்கித் தேடுகின்றன. தன்னை ஒரு குடும்பமாக, ஒரு சாதியாக, ஒரு இனமாக, ஒரு மொழியாக, ஏதோ ஒரு வகையில் அடையாளப் படுத்துகிற மனிதர், அந்த எல்லையற்ற இருள்வெளியில் முடிந்த மட்டும் வெளிச்சத்தைப் பாய்ச்சிப் பின்நோக்கி நடக்கிறார்.
வரலாறு எல்லையில்லாமல் இறந்த காலத்துக்குள் நீண்டுக் கிடக்கிறது. மண்ணின் பரிணாமம் என்று தொடங்கியதோ, அன்றே உயிரின் பரிணாமமும், அதன் ஒரு சிறப்புக் கூறாகிய மனிதரின் பரிணாமமும் தொடங்கிவிட்டது. இந்தப் பரிமாணங்களின் இருள் படிந்த ஆழங்களுக்குள் செல்வதற்கு மனிதருக்கு இலக்கியம், மொழி, பண்பாடு, கல்வெட்டுகள், அகழ்வாய்வுகள், வாய்மொழி இலக்கியங்கள் போன்றவை பயன்படுகின்றன.
இருள்வெளியில் தடம் துலக்கும் இந்தப் பயணம் மிக மிகச் சிக்கலானது. சிறிய கவனக் குறைவு கூட பயணத்தின் திசையை மாற்றிவிடும். கணுக்கணுவாக வளர்ந்து வந்திருக்கும் இந்த மனித குல வரலாற்றில், நெடுந்தூரம் போய், பயனுள்ள தகவல்களைத் திரட்டி வருகிறவர்கள் வெகு சிலரே.
இந்தியா ஜாதிகளின் நாடு. ஏற்றத்தாழ்வான ஜாதிகள் ஆயிரக்கணக்காக உள்ள நாடு. ஆதிக்கமும் அடிமைத்தனமும் நீக்கமற நிறைந்த நாடு. இவை பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும், பண்பாட்டிலும், ஊடுருவிப் புரையோடிப் போன நாடு. இவைகளால் வரலாறு பொய்மை மலிந்து, பல பகுதிகள் மறைந்து தொடர்ச்சியற்றுத் துண்டு துண்டாய்க் கிடக்கும் நாடு.
மனித குலம் ஒரே இடத்தில் தோன்றி பல இடங்களுக்குப் படர்ந்தது என்று கொண்டாலும், பல இடங்களில் அவை தனித் தனியாகத் தோன்றிப் படர்ந்தவை என்று கொண்டாலும், ஆதியில் அவை சமத்துவ சமூகங்களாகச் சுதந்திரமாக வாழ்ந்தவைகளே, சுரண்டலும் ஒடுக்கு முறைகளும் இடைக்காலத் தீமைகளே.
ஆனால், சுரண்டலாலும், ஒடுக்கு முறைகளாலும் சமூகத்தின் மொத்த செல்வங்களையும், சந்தோஷங்களையும் அபகரித்துச் சுகமாக வாழ்கின்ற சமூகங்கள், இந்தச் சுரண்டல்களையும் ஏற்றத் தாழ்வுகளையும் நிரந்தரமானவை என்றும், மாற்ற முடியாதவை என்றும், காட்டுவதற்குக் கடுமையான முயற்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன.
மேல்நிலைச் சமூகங்கள் ஒடுக்கப் பட்டவர்களை, சுரண்டப்பட்டவர்களை பொருளாதார ஆதாரங்களிலிருந்து அந்நியப் படுத்துகின்றன. கல்வியிலிருந்து அன்னியப் படுத்துகிறார்கள். பண்பாட்டு நுகர்வு களிலிருந்து அன்னியப்படுத்துகிறார்கள். மொத்தத்தில் மனிதருக்கு வளர்ச்சியும், மேன்மையும் தருகின்ற எல்லாவற்றிலுமிருந்து அவரை ஒதுக்கி ஒடுக்குகிறார்கள். புருஷாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன் என்றும், புஜத்தில் பிறந்தவன் சத்திரியன் என்றும், இடுப்பில் பிறந்தவன் வைசியன் என்றும், பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்றும், பஞ்சமனோ புருஷவிலிருந்தே பிறக்காதவன் என்பதால் மனிதனிலே சேர்க்கத் தகுதியில்லாதவன் என்றும் கதை கட்டியிருக்கிறார்கள்.
தொடர்ந்து இவர்களால் எழுதப்பட்டு வரும் வரலாறுகளும் கதைகளும் இந்த அடிமைத்தனங்களை உறுதி செய்யும் வகையிலேயே உள்ளன. இவர்கள் அறியப்பட்ட வரலாறு முழுவதையும் தங்களுடைய உயர்வுக்கும், ஒடுக்கப்பட்டோரின் இழிவுக்கும் இசைவான முறையில் விளக்கி வியாக்கியானம் செய்கிறார்கள். அடித்தள மக்களின் உயர்வுக்குரிய கூறுகளையெல்லாம் தங்களுடையதாகத் திரித்து எடுத்துக் கொள்ளுகிறார்கள். திருத்தத்துக்கு உட்பட மறுப்பவர்களை, மறுப்பவைகளை அழித்து ஒழித்து விடுகிறார்கள். தங்கள் இருப்பைக் கேள்விக்கு உட்படுத்தும் சொற்களையும், சொற்றொடர்களையும் நீக்கி விடுகிறார்கள் அல்லது மாற்றி விடுகிறார்கள்.
இப்படி வரலாற்றில் செய்யப்பட்டுள்ள படுகொலைகளும், மாறாட்டங்களும் கணக்கில் அடங்காதவை. இதனால் தங்களைப் பற்றி உயர்வாக எண்ணுவதற்குக் கூட அஞ்சி நடுங்குகிறார்கள் அடித்தள மக்கள். ஒரு காலத்தில் தாங்கள் மதிப்பாக வாழ்ந்தது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையோ ஆதாரங்களையோ நேருக்கு நேர் சந்தித்தால்கூட அச்சம் கொண்டு விலகி ஓடி விடுகிறார்கள். ஆதிக்கச் சாதியில் பிறந்த நேர்மையானவர்கள்கூட இவற்றைச் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாகக் கடந்த சில நூற்றாண்டு காலமாக வரலாற்றில் செய்யப்பட்டிருக்கும் குளறுபடிகள், தகீடு தத்தங்கள் பயங்கரமானவை, ஒடுக்கப்பட்ட மக்களின் பழைய வரலாறுகளையே நிரந்தரமாக அழித்து ஒழிக்கக் கூடியவை.
இதனால் நம் வரலாற்றுச் சிந்தனையே மழுங்கி விட்டது. பல சாதிகள் பண்டைக் காலத்தில் இல்லாதவை போலவும், இடைக்காலத்தில் திடீர் திடீரென்ற பூமி வெடித்துப் புறப்பட்டவை போலவும் தோற்றமளிக்கின்றன. இது மாய்கை.
பூமியில் இன்றிருக்கும் மனிதர்கள் அத்தனை பேருக்கும், அத்தனை சாதிக்கும் வயது ஒன்றுதான். மனிதகுலம் என்று தோன்றியதோ அன்றிலிருந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் அத்தனை பேரும்.
ஆற்றலும் தன்மானமும் உள்ள வரலாற்றாளர்கள், ஒடுக்கப்பட்ட சாதி அல்லது இன வரலாற்றின் இன்றைய இழிவுகளைத் தாண்டிய பழைய சுதந்திர நிலைமைகளை வரலாற்றுப் புதைகுழிகளிலிருந்து மீட்டெடுக்க முயலுகிறார்கள். தங்கள் ஆற்றலுக்குத் தக்கவாறு இதை நன்றாகவோ அல்லது மோசமாகவோ செய்கிறார்கள். இடைக்காலத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதிகளான தேவர், பரவர், கோனார், நாடார், அரையர், மன்னர், பறையர், ஈழவர், புலையர், ஒட்டர் இன்னும் எத்தனையே ஜாதியைச் சார்ந்த அறிஞர்களும், உண்மை தேடும் வரலாற்றாளர்களும் இம்மாதிரித் தேடல் _துலக்கல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தத் தேடல்களில் தங்களுக்குத் துணையாகப் பழமரபுக் கதைகள், வாய்மொழி வரலாறுகள், மொழி அமைப்புகள், நாட்டுபுறக் கதைகள் தங்கள் தெய்வங்களின் கதைகள், பழக்க வழக்கங்கள், இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். வரலாறு அவர்கள் வழியாக மேலும் துலக்கம் பெறுகிறது.
இந்தச் சூழலில் வைத்துத்தான் டாக்டர் இமானுவல் அவர்கள் எழுதிய ராபர்ட் எல் ஹாட்கிரேவ் ஜீனியரின் “தமிழ்நாட்டு நாடார்கள்’’ என்னும் நூலுக்கான விமர்சனம் என்னும் நூலை மதிப்பிட வேண்டியிருக்கிறது. முனைவர் இமானுவல் இலக்கியத் துறையினரோ, வரலாற்றுத் துறையினரோ, பண்பாட்டுத் துறையினரோ அல்ல. பெட்ரோலியத் துறை என்னும் தொழில்நுபட்பத் துறையில் முனைவர் பட்டம் பெற்று உயர் பதவி வகித்த ஒரு முன்னாள் உயர் அதிகாரி அவர். அலுவலக ரீதியாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும், தங்கியிருக்கவும் தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார் இவர். இந்த ஆய்வுக்குத் தூண்டுகோலாக அமைந்தது ராபர்ட் எல் ஹாட் க்ரேவ் ஜீனியர் எழுதிய ‘தமிழக நாடார்கள்’ என்னும் சமூக வரலாற்று நூல்.
இந்த நூல் 1969இல் வெளிவந்தபோது பலர் பலவிதமான கருத்துகளைச் சொன்னார்கள். அதில் ஒரு கருத்து: இந்த இந்திய அரசியலில் 60களில் பிற்பகுதிகளில் மிகப் பெரும் சக்தியாக உயர்ந்தவர் காமராசர். இந்திய அரசியலில் பின்தங்கிய சமூகங்களில் இருந்து ஒருவர் இவ்வளவு ஆற்றல் மிக்கவராக உயர்ந்தது அப்போதுதான்.
இந்தியப் பொது அரங்கிலும், அதைவிட முக்கியமாக உலக அரங்கிலும், அவர் ஒரு தீவிர இடதுசாரியாக மதிப்பிடப்பட்டார். நேருவின் ஜனநாயக சோஷலிசச் சிந்தனையின் முகமாக அன்று அவர் கருதப்பட்டார்.
1966இல் என்று நினைக்கிறேன். அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் தங்கள் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்ய அவரை அழைத்தன. ஒரு கட்சித் தலைவர் என்ற நிலையில், எதிர் எதிர் முகாம்களாக அன்று செயல்பட்ட இரு வல்லரசுகளாலும் அழைக்கப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர் அவரே. அவரோ அமெரிக்காவின் அழைப்பைத் தள்ளி வைத்துவிட்டு ரஷ்யாவுக்குப் போனார்.
இந்தச் சூழலில்தான் அவரைத் திட்டமிட்டு அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்கித் தள்ளும் முயற்சிகள் நடந்தன. இந்த முயற்சிகளின் அமெரிக்க வனகப்பட்ட வடிவமே ஹாட்க்ரேவின் புத்தகம் என்று பரவலாகப் பேசப்பட்டது. இந்திய ஆட்சித் தலைவர்களை உருவாக்கிய காமராசர், கறுப்பு காந்தி என்று வருணிக்கப்பட்ட காமராசர், பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ பதவியில் அமர்வதற்கு வருக என்று பல தலைவர்களால் அழைக்கப்பட்ட காமராசர் ஒரு சோசலிசச் சிந்தனையாளர். அவர் முகத்தைச் சிதைக்க அன்றைய வலதுசாரிகள் முயன்றனர். அதற்கு அவர்களுக்குப் பல ஆயுதங்கள் தேவைப்பட்டன. அதில் ஒரு கூர்மையான ஆயுதமே காமராசர் தீண்டத்தகாத கள்ளிறக்கும் ஜாதியில் பிறந்தவர் என்ற பிரச்சார ஆயுதம். இந்திய சமூகச் சூழலில் இந்த ஆயுதம் எவ்வளவு வலிமையானது என்பது இந்தியர்களை விட அமெரிக்க ஆதிக்க சக்திகளுக்குத் தெளிவாகத் தெரியும்.
கள்ளிறக்கும் தீண்டத்தகாத ஜாதிக்காரர் காமராசர் என்ற கருத்தை வலியுறுத்த ஏராளமான ஆதாரங்களை ஹாட்கிரேவ் திரட்டித் தந்திட இந்த நூலில் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கடுமையாக முயன்றிருக்கிறார். இந்நூல் தமிழ்நாட்டு நாடார்களைப் பற்றிய முழுமையான விரிவான நூல் அல்ல. கன்னியாகுமரி மாவட்ட நாடார்கள், அதேபோல் வட தமிழ் நாட்டு நாடார்கள் இந்த நூலில் விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
1. நாடார்கள் அல்லது சாணார்கள் பனையிலிருந்து கள் இறக்கும் ஒரு அருவருப்பான ஜாதி.
2. சமூக நிலையில் இந்துக்களால் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்ட ஜாதி.
3. இந்த ஜாதிக்குத் தனக்கென்று சொல்லத்தக்க வரலாறோ பண்பாடோ இல்லை. சீர்திருத்த கிறிஸ்தவத்தால் முன்னுக்கு வந்த ஜாதி இது.
4. அதனுடைய பாவனைகள் அருவருக்கத்தக்கவை.
5. வியாபாரத்திலும் இவர்கள் நேர்மையானவர்கள் அல்ல.
19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நாடார் ஜாதியிடையே பணியாற்றிய மேற்கத்திய கிறிஸ்தவப் பாதிரியார்கள் தங்கள் தொண்டின் மதிப்பை மிகைப்படுத்துவதற்காகவும், மேற்கத்திய உலகின் கவனத்தைத் தங்கள் பால் திருப்புவதற்காகவும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், குறிப்புகள் மற்றும் அரச ஆவணங்கள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டது இந்த நூல். தமிழ்நாட்டு ஆதிக்க ஜாதியினரின் மதிப்பீடுகளை அளவுகோலாகக் கொண்டது. வரலாற்றின் ஆழங்களில் எதையும் தேடாது. விரிவான கள ஆய்வு செய்யப்படாமல், மேலேழுந்த வாரியாக எழுதப்பட்டது. நாட்டார் வழக்காற்றியல் தரவுகள் கூட பயன்படுத்தப்படவில்லை இதில்.
நாடார்களின் வீரர் கதைகள், சாமி கதைகள், இன உற்பத்திக் கதைகள், வரலாற்றுக் கதைகள், எவற்றையும் அவர் பரிசீலிக்கவில்லை. வலங்கை நூல், சின்ன நாடான் கதை, சிதம்பர நாடான் கதை, பிச்சைக்காலன் கதை, பொன்னணைந்த சுவாமி கதை போன்ற கதைகளெல்லாம் நாடார்களின் சமூக வரலாற்றுக் கதைகள், முத்தாரம்மன் கதை, பெருமாள்சாமி ஊடாகவும் இவர்களின் சிக்கலான சில வரலாற்று முடிச்சகளைக் கண்டு கொள்ள முடியும். தமிழ்நாட்டில் பரவலாகக் கிடைக்கும் பட்டையங்கள், செப்பேடுகள் போன்றவற்றிலிருந்தும் பல விஷயங்களைத் திரட்டிக் கொள்ள முடியும். இவ்வாறு சிரமப்பட்டு பல இடங்களில் துணுக்குத் துணுக்காகக் கிடைக்கும் விபரங்களைப் பொறுக்கி எடுத்து, நீண்ட வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதுதான் வரலாற்றாளனின் கடமை.
நாடார்களைப் பொறுத்தவரையில் பனை, பனை சார்ந்த வாழ்வு, பனை சார்ந்த பொருளியல் உற்பத்திகள், பனை சார்ந்த பண்பாட்டியல் உருவாக்கங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஒரு காலத்தில் ஆசியா முழுவதிலுமே மிக அதிகமாக நிறைந்திருந்த மரம் பனை. இவைகளின் ஊடாகப் பனை சார்ந்த வரலாற்றைத் துலக்க முடியும். அதேபோல் இன்னும் முக்கியமான அடையாளம் ஜாதிப் பெயர். நாடார்களைப் பொறுத்த வரையில் பல பெயர்கள் ஒரு பொது அடையாளத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
நாடான், சான்றோன், சாணான், சாணு, காவரா, கிராமணி, இண்டிகா இன்னும் எத்தனையோ கிளைப் பெயர்களில் இச்சாதி அழைக்கப்படுகிறது. 1901 திருவாங்கூர் குடி கணக்கு எடுப்பின்போது திருவாங்கூர் நாடார் ஜாதியில் 39 பிரிவுகள் இருந்ததாகப் பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரிவுகளில் பலர் இன்று வேறு வேறு ஜாதிகளில் இணைந்துள்ளனர். இந்த பெயர்களின் வழியாகவும் வரலாற்றின் இருள் குகையில் இவர்களின் தடங்களைத் தேட முடியும்.
அடுத்து இவர்களின் சாமிகள், பத்தரகாளி அல்லது பனங்காளி இவர்களுடைய ஆதி தெய்வம். அதே போல முத்தாரம்மன், இசக்கி, சுடலைமாடன் ஆகியவைகளும் இவர்களுடைய தெய்வங்கள். இந்தத் தெய்வங்களின் கதைகள் ஊடாகவும், வரலாறுகள் ஊடாகவும் இவர்களின் வரலாற்றின் முக்கியமானப் பகுதிகளைக் கண்டடைய முடியும். இதற்கு மேலே கல்வெட்டுகள். இந்திய ஜாதிகள் சமயங்களின் வரலாறுகளைத் தொகுக்க நாம் பின்பற்ற வேண்டிய புது முறை இது.
இந்த முறைகளில் முயன்றால் வரலாறு அற்று, வேர்கள் இற்று, பாசிகள் போல் மண்ணின் மேற்பரப்புகளில் மிதந்து கொண்டிருக்கும் பல சமூகங்களின் வரலாறுகளைக் கண்டடைய முடியும். தொகுத்துத் திரட்டவும் முடியும். அப்படித் திரட்டும்போதுதான் அந்தந்த இனங்கள் இன்றுள்ள உள்முக ஒடுக்கங்களிலிருந்து விடுபட்டு கம்பீரமாக நிமிர முடியும். சமூக விடுதலையில் இந்த அம்சம் மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு ஜாதியும் மொத்த மனித குலத்தில் யாருக்கும் குறைவில்லாத அருமையான வரலாற்றை உடையது. என்பதுதான் உண்மை. இந்த உண்மையை மெய்ப்பிக்கும் வேகத்துடனும் பன்முக ஆற்றல் என்னும் கைவிளக்குடனும் வரலாற்றுச் சுரங்கத்தினுள் மின்னும் ஒவ்வொன்றின் உள்ளும் புதைந்திருக்கும் செய்தியை வெளிப்படுத்தும் கருவிகளுடனும் மேலும் மேலும் இறங்குவதே வரலாற்று ஆய்வாளனின் கடன்.
சமீபத்தில் சேலம் போயிருந்தபோது, ஒட்டர் சமூகத்தைச் சார்ந்த சில இளைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். ஒட்டர்கள் தமிழ்நாட்டில் மிக மிகக் கடுமையான உழைப்புகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களைக் கொண்ட சமூகம். கல்லுடைத்தல், கிணறு தோண்டுதல், சாலை அமைத்தல், வீடு கட்டுதல் போன்ற கடுமையானப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் அவர்கள். அந்த இளைஞர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வியப்பான தகவல்கள் பலவற்றைச் சொன்னார்கள். மத்திய இந்தியாவிலுள்ள அவ்து என்ற நாட்டை ஆண்டு கொண்டிருந்த இனம் தங்கள் இனம் என்றும், வட இந்திய மன்னர்களை நீண்ட காலம் தெற்கே வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த இனம் அது என்றும், அவர்கள் சொன்னபோது வியப்படைந்தேன்.
இந்த நாட்டில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் ஆட்சி மட்டுமே செய்த தனி இனம் என்று ஒரு இனம் இருக்க முடியாது. உழைப்பாளிகள் இருப்பார்கள். வியாபாரிகள் இருப்பார்கள். போர் வீரர்கள் இருப்பார்கள். பூசாரிகள் இருப்பார்கள். ஆட்சியாளர்களும் இருப்பார்கள். அடிமைப்பட்ட இனம், ஆட்சி செய்யும் இனம் என்ற விசயங்களெல்லாம் இடைக்காலத்தவை. படையோடும் பெரிய நிர்வாக அமைப்போடும் ஆக்கிரமிப்பாளர்கள் தோன்றியதோடு தோன்றியவை. இடைக்காலச் சங்கதிகள் தொடக்கத்தில் எல்லா இனங்களுமே தம்மைத் தாமே ஆண்டு கொண்ட இனங்கள்தான். இதை ஏதாவது ஒரு வகையில் தெளிவுபடுத்தி விட்டால் போதும், அந்த இனத்தின் ஆன்மா ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ போல விரியத் தொடங்கி விடும். இந்தத் திசையை நோக்கி இறந்த காலங்களின் இருள் அடுக்குகளின் ஊடாகப் பயணம் செய்யும் வரலாற்றாளர்களை மனித குல விடுதலையாளர் என்ற வரிசையில் வைத்து போற்றிப் புகழ வேண்டும்.
இமானுவல் அவர்கள் முதல் அம்சமாக பனை சார்ந்த தொழில்கள், பனங்கள் என்ற திசை வழியில் தன் ஆய்வை மேற்கொள்கிறார்கள். இடைக்காலத்தில் தீட்டுப் பொருளாக வைதீகர்களால் இழிவுபடுத்தப்பட்ட இதே கள் பண்டையத் தமிழகத்தில் தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொருளாகவும், மன்னர்களிலிருந்து மக்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பானமாகவும் போற்றப்பட்டது. சேரனின் காவல் மரம் பனை. அவன் அன்றாடம் அணியும் மாலை பனம் பூ மாலை. சோழர்கள் போர் மேல் செல்லும்போது, படை வீரர்களில் ஒரு பிரிவினர் நுங்கும், இன்னொரு பிரிவினர் பனம்பழச்சாறும், மூன்றாவது பிரிவினர் சுட்ட பனங்கிழங்கும் சாப்பிடுவது ஒரு சடங்காக இருந்தது என்று தெளிவுபடுத்துகிறார் நூலாசிரியர் (பக்கம் 107). அது மட்டுமல்ல, வட இந்தியாவிலும் வேத காலத்திலிருந்து வேதச் சடங்குகளிலும், உயர்ந்த சபைகளிலும் அமிர்தம் என்ற பெயரிலும், சோமபானம் என்ற பெயரிலும், மது என்ற பெயரிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது இந்தக் கள்ளே என்பதற்கும் ஆதாரங்கள் தருகிறார்.
இரண்டாவதாக பனங்காளியாகிய பத்ரகாளியின் வரலாறு, அவள் வளர்த்த 7 மக்களின் கதை, அவர்களுக்கும் சோழ மன்னனுக்கும் ஏற்பட்ட முரண், அதன் விளைவுகள் என்ற திசையில் ஆய்வுகளை நிகழ்த்துகிறார். இதற்கு ஆதாரமாக நாடார் உற்பத்தி பற்றிப் பேசும் ஏட்டுச் சுவடியான ‘வலங்கை நூலை’ விரிவாகப் பயன்படுத்துகிறார்.
வரலாற்றில் நாடார்கள் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகள், சமஸ்கிருத பேரகராதி, பாலி மற்றும் இதர மொழி இலக்கியங்கள் ஆகிய ஏராளமான சான்றுகளை ஆதாரங்காட்டி நிறுவுகிறார். நாடார் ஜாதியின் பல்வேறு பெயர்கள் வழியாக வரலாற்று அடுக்குகளுக்குள் தடம் தேடிச் செல்லுகிறார்.
பொனீசியர்கள் என்பவர்கள் இந்தியாவில் தென்கோடியில் கி.மு.400க்கு முன்னே வாழ்ந்த பனை சார்ந்த மக்கள். இவர்கள் கடல் வழியாக பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளோடு வியாபாரம் செய்தவர்கள்.
அந்த மக்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர்கள் இவர்களே. இந்தச் செய்தியெல்லாம் ஹரடோட்டஸ் எழுதிய வரலாற்று நூலிலிருந்து எடுத்து தருகிறார்.
ஆய்வாளரின் ஆய்வு முடிவுகள் தமிழ் சமூகத்தின், அதனிலும் விசாலமாக திராவிட சமூகத்தின் முடிவுகள் இன்று கண்ணுக்கு தெரியும். நாடார் என்ற கிளையின் வழியாக ஆதி வேர்களைத் தேடி இறங்குகின்றன. இந்தத் தேடலில் அவர் திராவிட ஜாதிகளின் அல்லது தமிழ் ஜாதிகளின் ஆதிவேர் ஒன்றாக இருக்கிறது என்று கண்டடைகிறார். இந்த உண்மையை அவர் தமிழன் அல்லது திராவிடனின் ஆதிவேர் நாடார் வேறே என்று விளக்குகிறார். ஆனால் அவரே இன்னொரு பாதையில் சென்று நாடார்களைத் தமிழ் மரபுக்கு, அல்லது திராவிட மரபுக்குச் சம்பந்தமில்லாத சத்திரியராகவும் காணுகிறார். அதன் மறுதலையாக, சத்திரிய மரபினோர் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் எல்லாரையும் நாடாராகக் காணுகிறார். இது முரண்.
இந்திய மண்ணில் சகந்திரமான பூர்விகக் குடிகள் ஒரு ஆதி வேரிலிருந்து கிளைவிட்டு வளர்ந்தன எனக் கருதுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. ஆனால், கிளைவிட்டு வளர்ந்த பிறகு அவற்றின் தனித் தன்மைகளை அங்கீகரிப்பதும் அவற்றின் தனி வாழ்வைத் துலக்குவதும் வரலாற்றாளரின் தவிர்க்க முடியாத கடமையாகிவிடுகிறது.
இம்மாதிரி ஆதி வேர்களைத் துலக்க முயற்சிகள் எடுக்கும்போது, வளர்ச்சியின் ஒவ்வொரு கணுவிலும் கிளைகளும் பிசிறுகளும் இடுப்பதை வரலாற்றாளர் காணுவார். இந்த பிசுறுகளை உள்முகமாகப் பார்க்கும்போது இவற்றின் தனித்தன்மைகள் கண்ணிலிருந்து மறைந்து போக, நாம் தேடுகின்ற ஒன்று மட்டுமே மிச்சமாக நிற்கும்.
இன்னும் அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் இதர கூறுகளின் ஊடாகவும் நாடார்களைத் தேடுகையில், குறுக்கும் நெடுக்குமாக தட்டுப்படுகின்ற இதர வேர்களையும் அவற்றின் தனித்தன்மைகளையும் இனங் கண்டு அடையாளப்படுத்த முயன்றிருக்கலாம்.
தென்னிந்திய திராவிட சமூகங்களின், அல்லது தமிழ் சமூகங்களின் மிகப் பெரிய பலவீனம் என்று நான் கருதுவது அவர்களுடைய சத்திரியப் பாவனை. இந்தப் சத்திரியப் பாவனை தெரிந்தோ தெரியாமலோ சமூக வளர்ச்சிக்கு எதிர் நிலையான மனோபாவத்தையும் சாய்வையும் சார்பையும் தந்து விடுகின்றது.
இரண்டு அல்லது மூன்ற நூற்றாண்டுகளாக ஆதிக்க ஜாதிகளால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் நாடார்கள். இந்தக் கொடுமைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் எதிராகக் கடுமையான போராட்டம் நடத்தி மாபெரும் வெற்றிகளை ஈட்டியவர்கள் அவர்கள். இதன் மூலம் தங்கள் தங்கள் அடிமைத் தனங்களிலிருந்து விடுபட பிற ஜாதிகளுக்கத் தெளிவாக வழிகாட்டியவர்கள் அவர்கள். நவீன கால சமூக விடுதலைப் போராட்டங்களின் முன்னோடிகள் என்ற நிலையில் இந்தப் போராட்டத்தை ஒடுக்கப்பட்ட சகல ஜாதியினரின் வெற்றியை ஈட்ட வேண்டிய வரலாற்றுக் கடமைக்குரிய மூத்தவர்கள் அவர்கள். ஆனால், தங்கள் சத்திரிய பாவனைகளால் இவர்கள் இன்று தங்களைப் பல நூற்றாண்டுகள் அடக்கி ஒடுக்கிய ஆதிக்கச் சக்திகளோடு கூச்சமில்லாமல் அணி சேர்ந்து கொண்டு, தாங்கள் யாருடைய விடுதலைக்காகப் போராடக் கடமைப்பட்டவர்களோ அவர்களுடைய விடுதலைக்கு எதிராகவே தங்கள் சக்திகளைச் செலவிடுகிறார்கள். இவர்களைப் போன்றே இன்னும் பல ஜாதிகளும் உள்ளன. வரலாற்றுத் தெளிவும், சமூகக் கடமையும் மிக்க தமிழர்கள் இந்தத் தவறைத் திருத்த எல்லா வகையிலும் முயற்சி செய்ய வேண்டும்.
பூர்வீகத் தமிழர்களில் ஒரு பிரிவு பற்றி, அதன் ஆதிகால வேர்களை நோக்கி திரு.இமானுவேல் அவர்கள் ஆய்வைச் செலுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. அவருடைய முயற்சிகள் தேடல்கள், தவிப்புகள், மதிப்புக்குரியவை. இந்த முறையியல் வளமானது. வேரிழந்து கிடக்கும் அண்டைச் சமூகங்களின் வேர்களையும் ஆதியை நோக்கித் துலக்க இளம் ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும். ஆதிக்க உணர்வுள்ள ஆய்வாளர்களால் இன்று வரை அலட்சியப்படுத்தப்பட்டுள்ள வாய்மொழி வரலாற்றுச் செல்வங்களையும், நாட்டார் சமயம் சார்ந்த செய்திகளையும், வரலாற்று ஆய்வுகளுக்கு அவர்களுக்கு பயன்படுத்த உத்வேகம் தரும். ஆதிக்க மனோபாவம் உள்ள ஆய்வாளர்கள் திருத்த அல்லது அழிக்க அல்லது சிதைக்க நினைக்கின்ற அடித்தள மக்களின் வரலாறுகளுக்கு ஆதரவான சான்றுகளைத் தேடவும், துலக்கவும், பதிவு செய்யவும், ஆய்வு மேற்கொள்ளவும் அவர்களைத் தூண்டும்.’’
- உண்மை இதழ், ஜூலை, 16-31.19
பரிதிமாற்கலைஞர்
பிறந்த நாள்: 06.07.1870
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பரிதிமாற்கலைஞர். சூரியநாராயண சாஸ்திரியார் என்ற இயற்பெயர் பெற்ற இவர் பரிதிமாற் கலைஞர் எனப் புனைப்பெயர் கொண்டார். அந்தணர் குடும்பத்தில் பிறந்த இவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு குறிப்பிடத்தக்கது. முப்பத்திரண்டே ஆண்டுகள் வாழ்ந்த இவர், தமிழுலகில் பெருஞ்சாதனையைச் செய்தார்.
தனித்தமிழ் இயக்கம் தோன்றுவதற்கு முன்பே தன் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார். இவருடைய சங்கத்தமிழ் கண்டு வியப்புற்ற சி.வை.தாமோதரம் பிள்ளை, இவரைத் திராவிட சாஸ்திரி என்று பாராட்டினார்.
தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலாக நிலைநாட்டியவர் பரிதிமாற் கலைஞர்தாம்.
- உண்மை இதழ், ஜூலை, 1 -15 .2019
மறைமலையடிகள்
பிறந்த நாள்: 15.07.1876
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படக் கூடியவர் மறைமலை அடிகள்.- ஆரியத்தின் கடும் எதிரி! இந்து மதம் வேறு; தமிழர் சமயம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆகிய நாள்களில் தமிழ் அன்பர் மாநாடு நடைபெற்றது.
அம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மறைமலை அடிகளார் அவர்களுக்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933 இல் தந்தி ஒன்றை அனுப்பினார். அதற்கு மறைமலை அடிகள் அளித்த பதில்தான் மிகமிக முக்கியமானது. கடிதங்கள், அழைப்புகள், தந்தி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும், டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பண்பட்ட பழைய மொழிகளெல்லாவற்றிலும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டை நலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிற மொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைபிடிக்காத உங்களுடைய மகாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக! என்று பதில் எழுதியவர் தான் நமது போற்றுதலுக்கும், மதிப்புக்கும் உரிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள். சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டவர்.
தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமி ழில் பெயரைச் சூட்டும் உணர்வு கிளர்ந்தெழட்டும்! அதுதான் அந்தப் பெருமகனாருக்கு தமிழர்கள் காட்டும் உண்மையான மதிப்பாகும்.
- உண்மை இதழ், ஜூலை, 1- 15 .2019