பக்கங்கள்

வியாழன், 22 பிப்ரவரி, 2024

(பிப்.20) பொப்பிலி அரசர் பிறந்த நாள்! வேர்களை நினைவுகூர்ந்து நன்றி செலுத்துவோம்! – கி.வீரமணி-

 

இன்று (பிப்.20) பொப்பிலி அரசர் பிறந்த நாள்! வேர்களை நினைவுகூர்ந்து நன்றி செலுத்துவோம்! – கி.வீரமணி-

விடுதலை நாளேடு

‘நீதிக்கட்சி’ என்று வெகுமக்களால் அன்போடு அழைக்கப்பட்ட, அந்நாளைய திராவிடர் இயக்கம் (1917 இல் தொடங்கிய நிலையில்), அதன் முப்பெரும் காப்பாளர்களாகவும், தலைவர்களாகவும் விளங்கி வளர்த்தெடுத்தவர்கள் –
1. டாக்டர் சி.நடேசனார்
2. சர். பிட்டி தியாகராயர்
3. டாக்டர் டி.எம்.நாயர்

திராவிடர் எழுச்சிக்கும், மறுமலர்ச்சிக்குமான திட்டங்களை வகுத்தார்!
அது அரசியல் கட்சி என்ற நிலையில், தொடங்கிய மூன்றாண்டுகளிலேயே வந்த (அதிகாரம் குறைந்த இரட்டை ஆட்சிநிலையிலும்) 1920 தேர்தலிலேயே பெருவெற்றி பெற்று, தனித்து ஆட்சி அமைத்தது. அது முதலில் தந்த ‘‘பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிர கடனங்களைப்” படிப்படியாக நிறைவேற்றி, பார்ப்பன ரல்லாத – திராவிடர்களின் கல்வி, உத்தியோக, வாழ்வு உரிமைகளுக்கான சட்டங்களை சிறந்த முதலமைச்ச ரான பானகல் அரசர் (ராமராய நிங்கர்) அவர்கள் தலைமையில் அமலாக்கி வரலாறு படைத்து திராவிடர் எழுச்சிக்கும், மறுமலர்ச்சிக்குமான திட்டங்களை வகுத்து, அவர்களுக்குப் புது வாழ்வளித்து வரலாறு படைத்தது!
பதவியாசை, பல்குழு மனப்பான்மை, துரோகம் போன்ற அரசியல் வியாதிகளும் அக்கட்சிக்குள் உள்ளே நுழைந்தன. பானகல் அரசர் தான் பதவி யேற்காமல், வேறொருவருக்கு ஆதரவு தந்தும், சமூகநீதிக் கொள்கைகளை நிறைவேற்றினார்!
அவரது மறைவு ஒரு பெரும் பள்ளத்தை ஏற்படுத் திய பிறகு, பல சோதனைகளுக்கிடையே 1932-1936 ஆம் ஆண்டு முடிய முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து, ஜஸ்டிஸ் கட்சி நடத்திய ஆட்சி நேர்மையான ஆட்சியாக இருந்தாலும், அவதூறு சேற்றைப் பரப்புரைமூலம் சத்தியமூர்த்தி போன்றோர் வாரி இறைத்தனர்!

தமது சொந்தப் பணத்திலிருந்து
நிதி உதவிகள் செய்தவர்
அதை எதிர்கொண்டு பிரச்சாரத்தை முறியடிக்க இயக்க அமைப்பையும், பிரச்சார பலத்தையும் வலிமையாக்கவேண்டும் என்று உணர்ந்து நிறுத்தப் பட்ட ‘விடுதலை’யை மீண்டும் தொடங்கி, சுயமரி யாதைச் சுடரொளி செ.தெ.நாயகம் போன்ற பெரு மகனை பொதுமேலாளராக நியமித்து, பிறகு தந்தை பெரியாரிடம் ஒப்படைத்து, மாதாமாதம் அப்பத்திரிகை நட்டத்தை ஈடு செய்ய தமது சொந்தப் பணத்திலிருந்து நிதி உதவிகள் செய்து, ஹிந்தி எதிர்ப்பு இயக்கம் போன்றவற்றிற்குக் கொள்கை ஆதரவு தந்து, பல சுயமரியாதை, நீதிக்கட்சி மாநாடுகளை நடத்திய வர்தான் பொப்பிலி அரசர் என்று அழைக்கப்பட்ட அந்நாள் நீதிக்கட்சித் தலைவர் பொப்பிலியின் ஜமீன்தார் ராமகிருஷ்ண ரங்காராவ்.
ஆங்கிலக் கல்விப் புலமையாளர், கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்ற அந்நாளைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர்.
நீதிக்கட்சியில் விசாகப்பட்டினம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட (ஆந்திரப் பகுதி) முனுசாமி நாயுடுவை தோற்கடித்து, சென்னை மாகாண நீதிக்கட்சி முதலமைச்சரான நேர்மையாளர் – கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.

பொப்பிலி அரசரை மீட்ட
அறந்தாங்கி தோழர்!
தஞ்சையில், அப்போது நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டின்போது, பொப்பிலி அரசரைக் கடத்திட, முனுசாமி நாயுடு ஆட்கள் முயற்சித்தபோது, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத் தீவிரத் தொண்ட ரான அறந்தாங்கி தோழர், (நான், அவரைப் பார்த்துப் பழகியுள்ளேன், திராவிடர் கழக கருப்புச்சட்டைக் காரனாக மாணவப் பருவத்தில் – இப்போது பெயர் நினைவிற்குவர மறுக்கிறது, அந்தக் கால அறந்தாங்கி தோழர்கள் மறைந்த தோழர் மெய்யநாதன், ஏ.டி.மாரியப்பன், இராவணன் போன்றவர்கள் அவரை அறிவர்) அவர் பொப்பிலி அரசரை அப்படியே குண்டுகட்டாகத் தனது தோளின்மீது தூக்கிக் கொண்டு ஓடி, அவரை மீட்டார்.
அன்றிலிருந்து, இவரை அப்பகுதி தஞ்சை மாவட்டத் தோழர்களும், குறிப்பாக தளபதி அழகிரி, அறந்தாங்கித் தோழர்களும் ‘பொப்பிலி’ என்றே பெயரிட்டு அழைப்பார்கள்.

‘விடுதலை’ நாளேட்டின் அந்நாளைய புரவலர் பொப்பிலி அரசர்
‘விடுதலை’ நாளேட்டின் மூல காவலர் – தந்தை பெரியார் அவர்கள் என்றால், அதற்கு முழு ஒத் துழைப்பு கொடுத்த அதன் அந்நாளைய புரவலர் பொப்பிலி அரசர் அவர்கள்தான்!
பெயரில் அரசர்; ஆளுமையில் மகத்தான ஆட்சித் தலைவர்; ஜஸ்டிஸ் கட்சி வளர்ச்சிக்குப் பல கோடி ரூபாய் சொத்துகளையும், உழைப்பையும் தியாகம் செய்த தீரர்!

பொப்பிலி, பானகல் அரசர் திராவிடர் ஆட்சி
இன்றும் தொடருகிறது!
அவர் தனது 77 ஆவது வயதில் மறைந்தார் (பிறந்த ஆண்டு: 1901 – 1978). அறிஞர் அண்ணா அவர்கள் எம்.ஏ., படித்து முடித்து, இவரிடம் சில காலம் தனி உதவியாளராகவும் இருந்தவர்.
அவரது பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 20). பொப்பிலி, பானகல் அரசர் திராவிடர் ஆட்சி இன்றும் தொடரு கிறது – இன்றைய திராவிடர் ஆட்சியின் நீட்சியாக!
வாழ்க பொப்பிலி அரசரின் மாட்சிமை!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
20-2-2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக