பக்கங்கள்

பாதிரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதிரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 அக்டோபர், 2022

பாரதியின் பிற மத வெறுப்பு (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (87)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (87)

நவம்பர் 1-15,2021

பாரதியின் பிற மத வெறுப்பு

நேயன்

“இதனிடையே என்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும்பாடு சொல்லுந்தரமன்று. அதோ பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் தெரிகிறதன்றோ? நடுவேயிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக்கொருத்தியாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மன ஒற்றுமை இல்லை என்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அவருக்கு வயது இருபத்திரண்டு. அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவருக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. வயது பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறார். குலாப்பிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்கு சம்மதமில்லை’’ என்ற  கற்பனைச் சித்திரத்தை 25.5.1920இல் எழுதினார்.

இதை ஓர் உண்மைச் சம்பவம் போலவே பாரதி எழுதியிருக்கவே, ஓர் இசுலாமியர் அதைப் படித்துவிட்டு, பாரதியிடம் வந்து, ‘ரெயில்வே ஸ்தானம்’ என்றொரு கதை எழுதியிருந்தீர்களே, அது மெய்யாக நடந்த விஷயமா? வெறும் கற்பனைக் கதைதானா?’’ என்றார். “வெறும் கற்பனை’’ என்று நான் சொன்னேன். “என்ன கருத்துடன் எழுதினீர்’’ என்று கேட்டார் வந்தவர்.

இந்த ‘ரெயில்வே ஸ்தானம்’ என்ற கதையிலும் ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால் அதனின்றும் அவனுக்குக் கஷ்டம்தான் விளையும் என்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்து கொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படிக் கதையினால் குறிப்பிடப்படும் உண்மைகளாகும் என்றேன். அப்போது அந்த முஸ்லிம் நண்பர் (‘அந்தக் கதையில் ஒரு பிழை இருக்கிறது’ என்றார். ‘என்ன பிழை?’ என்று கேட்டேன். அக்கதையில் ஒரு முகமதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண் (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடன் இருக்கும்போதே அவருடன் பிறந்த மற்ற ஸ்திரீயை ஒரு முஸ்லிம் மணம் புரிந்து கொள்ளக் கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை என்று அந்த முகமதிய நண்பர் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் நான்: ‘சரிதான். எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்களுக்குள்ளே உண்டாதலால் அதுபோல் முஹம்மதியர் களுக்குள்ளேயும் இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதிவிட்டேன்.

எனவே, அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப் பிரவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தாரென்பதை மாற்றித் தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தாரென்று திருத்தி வாசிக்கும்படி ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் எழுதி விடுகிறேன் என்றேன்’ என்று பாரதி எழுதியுள்ளார். தன்னிடம் வந்தவரிடம் பாரதி, ‘உங்களுக்குள்ளே ஸ்திரீகளை அந்தப்புரத்தில் மறைத்து வைப்பதாகிய கோஷா வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?’ என்று கேட்டார்.

அந்த முகமதிய நண்பர்: ‘முகம்மது நபி (ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப் போய்விட்டது. பிறகு முகமது நபி அதை மீளவும் விதியாக்கினார்’ என்றார்.

‘அதிலே திருத்தங்கள் செய்யக் கூடாதா?’ என்று பாரதி கேட்க, அந்த முஸ்லிம் நண்பர், ‘கூடாது. ஏனென்றால் முகமதுதான் கடைசி நபி. அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்தரவுகள். அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை’ என்றார்.

பாரதியார்: தென்ஜில்லாக்களிலே தமிழ் பேசும் முஸ்லிம் (ராவுத்தர்)களுக்குள்ளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே! என்று கேட்டார். இப்படிப் பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே சென்றது. பாரதி கடைசியாகத் துருக்கி தேசத்தில் ஸ்திரீகளுக்குள்ளே பிரமாண்டமான விடுதலைக் கிளர்ச்சி நடந்து வருவதைப் பற்றியும், ‘கோஷா’ வழக்கத்தை ஒழித்து விட்டு, கல்வி கேள்விகளில் தேர்ச்சியடைவதையும் கூறினார். வந்த முஸ்லிம் எனக்குத் தெரியாது என்று கூறிச் சென்று விட்டார்.

பாரதியார் அல்லாவைப் பற்றிப் பாடல் பாடியுள்ளாரே, அவரை எப்படி நீங்கள் குறை சொல்ல முடியும் எனச் சிலர் கேட்கலாம். 20.6.1920இல் பாரதி கடயத்தில் இருந்தபோது சில இசுலாமியர்கள் பாரதியை அழைத்து பொட்டல் புதூரில் இசுலாம் மார்க்கம் குறித்து ஒரு சொற்பொழிவு நிகழ்த்தக் கூறினார்கள். அப்போதுதான் பாரதியார் அல்லா, அல்லா என்ற பாடலைப் பாடினார். நபிகள் நாயகத்தின் வரலாற்றை மிக விரிவாகவும் சிறப்பாகவும் பேசி முடிக்கும் தறுவாயில், நபிகள் ஏன் ஏசு நாதனை ஒரு மகானாக, கடவுளின் அவதாரமாக ஏற்றுக் கொள்ளவில்லை? என்ற கேள்வியைக் கேட்டு விட்டுத்தான் வந்தார்.

இசுலாமியர்கள் தேசப்பற்று அற்றவர்கள் என்பது பாரதியின் கருத்து. இதை ‘இந்தியா’ ஏட்டில் ஒரு கருத்துப்படம் வெளியிட்டு பாரதி விளக்கியுள்ளார். மே 1, 1909இல் இப்படம் வெளியிடப்பட்டது. (திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார், பக்கம் 80-83)

அதேபோல் கிறித்துவ மதத்தையும், பாதிரியார்களையும் கடுமையாக எதிர்த்தார் பாரதியார்.

கிறித்துவ மதத்தையும் பாரதி கடுமையாக விமர்சனம் செய்கிறார். இந்து மதத்தைப் புகழும் பாதிரிகளை மிக நல்லவர்கள் என்கிறார். இந்து மதத்தைக் குறை கூறும் பாதிரிகளை மூடப் பாதிரிகள் என்கிறார்.

“சென்னை கிறித்து கலாசாலையில் டாக்டர் மில்லர் என்று ஒரு பாதிரி இருந்தார். அவர் நல்ல புத்திசாலி என்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்ற எல்லா மதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளிவாகக் காட்டி யிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். சாதாரணப் பாதிரி கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்து கொண்டார்.

அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரச்சாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்து போய் மஹத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லு கிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்திரீகளை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை எல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.’’

இன்னும் ஒரு படி மேலே போய் பாரதியார், “கிறிஸ்துவ விவிலிய நூலில் வரும் தேவகுமாரன் என்பது வேறு யாருமல்ல; நம்முடைய சுப்ரமணியன்தான்” என்கிறார். (திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்,

பக்கம் 83-84)

(தொடரும்…)

திங்கள், 17 அக்டோபர், 2022

பாரதியின் இந்துமத வெறியும் மற்ற மத வெறுப்பும்! (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (86)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (86)

அக்டோபர் 16-31,2021

பாரதியின் இந்துமத வெறியும் மற்ற மத வெறுப்பும்!

நேயன்

பாரதி எல்லா மதங்களையும் சமமாக மதித்தவர் என்று பலரும் நம்பிக் கொண்டிருப்பது உண்மையல்ல. பாரதியின் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்தால் அவர் ஓர் இந்து மதவெறியர் என்பதை எளிதில் தெளியலாம்.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் எந்த அளவுக்கு இந்து மதத்தின் மீது வெறியும் பிற மதத்தின் மீது வெறுப்பும், எதிர்ப்பும், பகையும் கொண்டுள்ளார்களோ அதற்குச் சற்றுங் குறையாத வெறியும், வெறுப்பும் பகையும் கொண்டவராகவே பாரதி இருந்தார்; தன் கருத்துகளை அந்த உணர்வுகளை வெளியிட்டார்.

உலகிலே உயர்ந்த மதம் இந்து மதம் மட்டுமே என்று அவர் பலமுறை கூறியுள்ளார். புத்த மதத்தைக் கடுமையாக வெறுத்தார். கிறித்துவ மதத்தையும், இஸ்லாம் மதத்தையும் வெறுத்துப் பேசினார்.

இந்து மதத்தை உயர்வாக எண்ணியதால்-தான் இந்து மதத்தின் வர்ணாஸ்ரமத்தை ஏற்றுப் போற்றி எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

இந்து சாஸ்திரங்கள் எழுதப்பட்ட சமஸ்கிருதத்தை உலகின் உயர்மொழி, மூலமொழி என்று உண்மைக்கு மாறாய் உயர்த்திப் பேசினார்.

இந்து மதத்தின் முக்கிய செயல்முறையான ‘யாகம்’ செய்வதைக் கட்டாயக் கடமை என்றார். அதுவே இவ்வுலகை வாழ்விக்கும் என்றும் வலியுறுத்தினார். இதனால் யாகங்களை முற்றாக வெறுத்த புத்த மதத்தைக் கண்டித்தார்.

பாரதியின் பார்வையில் இந்துமதம் ஒன்றுதான் உலகிலேயே உயர்ந்த மதம், மற்றவையெல்லாம் தாழ்வான மதங்களே என்பது அவரின் கருத்து. முதலில் பவுத்த மதம் குறித்துப் பாரதியின் கருத்துகளைப் பார்ப்போம்:

“யாகங்களே பெரும்பாலும் பசுவதைகளும், குதிரைக் கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்கியமாகப் பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோக்ஷத்துக்கு வழி என்ற போலி வைதிகரைப் பழிசூட்டி அந்தக் கொலைச் சடங்குகளால் மனிதன் நரகத்துக்குத்தான் போவான் என்பதை நிலைநாட்டிய புத்த பகவானும், அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும், இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்தி விட்டார்கள். அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்ற ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சங்கராச்சாரியார் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துகளைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரங்களாகச் சேர்த்துக் கொண்டார். அவர் ஹிந்து தர்மத்துக்குச் செய்த பேருபகாரத்துக்காக ஹிந்துக்களிலே பெரும்பாலோர் அவரைப் (ஆதிசங்கரனை) பரமசிவனுடைய அவதாரமாகக் கருதிப் போற்றினார்கள்.

பவுத்த மதமே துறவு நெறியை உலகில் புகுத்திற்று. அதற்கு முன் அங்கங்கே சில சில மனிதர் துறவிகளாகவும், சில சில இடங்களில் துறவிக் கூட்டத்தாராகவும், ஓரிரு இடங்களில் வல்லமை உடையவர்களாகவும் இருந்தனர். பவுத்த மதம்தான் எங்கு பார்த்தாலும் இந்தியாவை ஒரே சந்நியாசி வெள்ளமாக ஆக்கியது.

உலக வாழ்க்கையாகிய ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்தது. உலகமெல்லாம் பொய்மயம் என்றும், துக்கமயம் என்றும் பிதற்றிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி, மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்தமதத்துக்கு உண்டு. அதை நல்ல வேளையாக இந்தியா உதறித்தள்ளி விட்டது. பின்னிட்டு புத்த தருமத்தின் வாய்ப்பட்ட பர்மா முதலிய தேசங்களிலும் புத்தமதம் இங்ஙனமே மடத்தை வரம்பு மீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது.’’

1912இல் பகவத்கீதைக்கு முன்னுரை எழுதும்போது, பாரதியார் பவுத்த மதத்தின் மீது எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறியலாம்.

பவுத்த மதத் துறவிகளைக் கொலைகள் செய்தே அழித்து ஒழித்த ஆதிசங்கரனைப் பாரதியார், சிவபெருமானின் அவதாரமாகவே காண்கிறார். சோவியத்தில் புரட்சி என்றால் கொலைகள், கொள்ளைகள் அதை ஏற்க முடியாது என்பவர், ஆதிசங்கரனின் கொலைகளை மட்டும் ஆதரிக்கக் காரணம் என்ன?

பவுத்தத்தால் ஆட்டங்கண்ட நால்வருணத்-தையும் பார்ப்பனர்களின் உயர்வையும், மீண்டும் புத்துயிர் பெறச் செய்தவன் ஆதிசங்கரன் என்பதால்தானோ?’’

இஸ்லாமிய மதத்தை, அதன் கொள்கை-களை இழிவுபடுத்தினார். அவர் 22.5.1920 சுதேசமித்திரனில் எழுதிய கீழ்க்கண்ட “ரெயில்வே ஸ்தானம்’’ என்ற கதையே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஒரு நாள் தென்காசி இரயில்வே ஸ்டேஷன் வெளிப்புறத்தில் பலர் உட்கார்ந்து கொண்டு இருந்ததாகவும், பாரதியார் அங்குச் சென்றதாகவும், இரயில் வண்டி அன்று 1 மணி நேரம் தாமதமாக வருவதாகக் கூறினார்களாம். பாரதியார் தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிது தூரம் சென்றாராம். அங்கு ஒரு மரத்தடியில் ஒரு மகமதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டாராம். அவன் கணகளிலிருந்து தாரைதாரையாகக் கண்ணிர் வந்து கொண்டிருந்ததாம். தம்பி ஏன் அழுகிறாய்? என்று பாரதியார் உருது மொழியில் அவனிடம் கேட்டதாகவும், அதற்கு அந்த முகமதிய வாலிபன் சொல்லியதாகப் பாரதி எழுதுகிறார்: எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்… என் தந்தை லாட்டரி சீட்டு வாங்கினார். அதில் ஒரு கோடி ரூபாய் விழுந்தது. அதை வைத்து வியாபாரம் செய்து ஏழு கோடி பணம் சேர்த்தார்.

என் தந்தைக்கு நான் ஒரே மகன். எனக்கு 15 வயது ஆகும்போது என் தந்தை இறந்துவிட்டார். அந்தச் சொத்து முழுவதும் எனக்கு வந்தது. என் வீட்டை மேற்பார்வை செய்ய என் சிறிய தகப்பனார் நியமிக்கப்-பட்டிருந்தார். என் தந்தை இறக்கும் தறுவாயில் என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார் முதலாவது வேலையாக, தம்முடைய மூன்று குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். என் பிதா இறந்த இரண்டு வருஷங்கள் ஆகுமுன்னரே மேற்படி விவாகம் நடைபெற்றது. என் சிறிய தகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண் பிரஜைதான் அவருக்குண்டு. ஆகவே, என்னுடைய சொத்து வெளிக் குடும்பங்-களுக்குப் போய்விடக் கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. என் தாயாருக்கு எனக்கு ஒரே பெண்ணைத்தான் மணம் புரிவிக்க வேண்டும் என்று எண்ணம். அதனால் சிறிய தகப்பனார் என்னை வேறு ஊருக்கு அழைத்துப் போய் என் தாயாருக்குத் தெரியாமல் அவருடைய மூன்று பெண்-களையும் எனக்கு மணம் முடித்து வைத்துவிட்டார்.

சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார் என் செய்கையால் ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலேயே உயிர் துறந்து விட்டாள். சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது…

(தொடரும்…)

ஆங்கில ஆட்சியை ஆதரித்த பாரதி! (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (85)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (85)

அக்டோபர் 1-15,2021

ஆங்கில ஆட்சியை ஆதரித்த பாரதி!

நேயன்

1920டிசம்பர் 1 ஆம் தேதியன்று பாரதியார் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ‘திராவிடக் கக்ஷி’ என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆரியர் _ திராவிடர் என்பதெல்லாம் பொய் என்றும், கிறித்துவப் பாதிரிகள் இந்து மதத்தை அழிக்க இக்கதைகளைக் கட்டி விட்டதாகவும் கூறுகிறார்.

அன்று பாரதி கூறிய இந்தக் கருத்தைத்தான் இன்றைய ஆர். எஸ். எஸ். காரர்களும் வேதவாக்காகக் கொண்டுள்ளனர். பாரதி தன் ஜாதிக்கு உயர்வு வேண்டும் என்கிற போது மூச்சுக்கு முந்நூறு தரம் ஆரியர் வீரத்தைப் பற்றிப் பேசுகிறார். அதற்கு எதிர்ப்பாகத் திராவிடர்கள் கட்சியைத் தொடங்கியவுடன் ஆரியர் _ திராவிடர் போராட்டம் பொய்க்கதை என்றும் கிறித்துவப் பாதிரிகளின் தூண்டுதல் என்றும் கதை அளக்கிறார்.

பாரதிக்குத் திராவிடர் இயக்கத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருந்தது என்பதை, அவர் நண்பர் ஆர்.சீனிவாசவரதன் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது. அவர் 1920இல் திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரசு மாநாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்புகையில் கடயத்தில் பாரதியைச் சந்தித்த போது நடந்த சம்பவம் இது.

“பாரதியிடம் அவ்வூர் அன்பர்கள் சிலர் வந்தனர். நடந்த சம்பாஷணையிலிருந்து அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போலத் தோன்றிற்று.

அன்பர்களே! ஆரியர்களுக்கு முன்னால் திராவிடர்கள்; அவர்களுக்கு முன்னால் ஆதித் திராவிடர்கள்; அதற்கு முன் இருந்தது மிருகங்கள்; ஜீவராசிகள். அவை வாழ்ந்த இடத்தை வெட்டித் திருத்தி வீடு கட்டிப் பயிர் செய்து நாம் வாழ்கின்றோம். அவை உரிமை கொண்டாடினால் அனைவரும் அவைகளிடம் விட்டு விட்டுப் போக வேண்டியதுதான்’’ என்று பாரதி கூறினார் என்கிறார்.

தமிழர்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள்; ஆரியர்கள் வந்தேறிகள் என்ற அப்பட்டமான உண்மையை ஏற்க மனமின்றி, இப்படிப்பட்ட பித்தலாட்ட வாதம் செய்கிறார் பாரதி.

டாக்டர் டி. எம். நாயர் ‘ஜஸ்டிஸ்’ இதழில் திராவிடருக்குத் தனிநாடு கொடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைக் கிண்டலடித்துப் பாரதி கூறியது இது. இப்படிப்பட்ட பாரதியைத்தான் நம்மில் பலர் போற்றுகிறார்கள் என்பது வேதனையாக உள்ளது.

திராவிட இயக்கத்தின் தலைவர்களைத் தேச விரோதிகள் என்கிறார் பாரதியார். “டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப்பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்ய பாஷா விரதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது’’ என்று கூறுகிறார் பாரதியார். டாக்டர் நாயர், தியாகராய செட்டியார் போன்றவர்களெல்லாம் 1916 வரையில் காங்கிரசில் இருந்தவர்கள்தான். அதில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் கண்டு சகிக்க முடியாமல் தான் 1916இல் திராவிடர் இயக்கத்தைத் தொடங்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். டாக்டர் நாயர் சுயநலமே இல்லாதவர் என்பதைப் பாரதியே 1906இல் எழுதியுள்ளார்.

1906ஆம் ஆண்டு சென்னை நகராட்சி உறுப்பினர்களில் இருந்து ஒருவரைச் சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். அன்று 32 உறுப்பினர்கள் வந்திருந்தனர். அவர்களில் நால்வர் போட்டியிட்டனர். முதல் முறை ஓட்டு வாங்கிய விவரம்:

டாக்டர் டி.எம்.நாயர் -_ 10

பி.எம்.சிவஞான முதலியார் _ 10

ஸர் வி.ஸி. தேஸிகாச்சாரி _ 6

சர்.பிட்டி தியாகராய செட்டியார் _ 5

கூடுதல் _ 31

16 ஓட்டுக்குமேல் வாங்கினால்தான் ஒருவராவது சட்டமன்றத்திற்குச் செல்ல முடியும். எனவே தியாகராய செட்டியார் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இரண்டாம் முறை ஓட்டுகள் பெற்ற விவரம்:

டாக்டர் டி எம். நாயர் _ 14

பி.எம். சிவஞான முதலியார் _ 11

ஸர். வி.ஸி. தேஸிகாச்சாரி _ 7

கூடுதல் _ 32

சபைத் தலைவர், குறைவாக ஓட்டு வாங்கிய தேசிகாச்சாரியாரை விலகிக் கொள்கிறாரா என்றார். அவர் விலக மறுத்துவிட்டார். இதேநிலை நீடித்தால் மாநகராட்சியின் சார்பாக ஒருவரும் சட்டமன்றம் செல்ல முடியாது. எனவே, டாக்டர் டி. எம். நாயர் அதிக வாக்குகள் பெற்றும், தான் போட்டியிலிருந்து விலகிவிட்டார். அந்த நேரத்தில் பாரதி எழுதியதாவது:

“தக்க சமயத்தில் டாக்டர் நாயர் விலகிக் கொள்ளாவிட்டால் சரியான மெஜாரிட்டி (16 வோட்டு) எவருக்கும் கிடைக்காமல் கார்ப்பரேஷன் மெம்பர் சட்டசபையில் இருப்பதற்கே இடமில்லாமல் போயிருக்கும். அதனால் கார்ப்பரேஷனுக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டிருக்கும். அந்த அவமானம் ஏற்படாமல் தடுத்த பெருமை டாக்டர் நாயருக்கே உரித்தாகும். என்ற போதிலும் மிகவும் தகுதி பெற்றவரும் அதிக வோட்டுகள் பெற்றவருமாகிய டாக்டர் நாயர் விலகிக் கொண்டமை மிகுந்த வருத்த முண்டாக்குகிறது.’’

இப்படி 1906இல் டாக்டர் நாயரைப் பற்றிப் பெருமையாக எழுதிய பாரதி 1917இல் டாக்டர் நாயரைத் தேசவிரோதி என்று எழுதுகிறார் என்றால் என்ன காரணம்? திராவிடர்கள் தனி இயக்கம் தொடங்கி விட்டார்களே என்ற ஆத்திரம்தானே! வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 1916 காலக் கட்டத்தில் பாரதி பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரரா என்ன? இல்லையே! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் 1916 டிசம்பர் 26இல் பாரதி, ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ஆங்கிலேயர் வெளியேற வேண்டாம் என்றுதானே எழுதியுள்ளார்!

“எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு- _ செலவு உள்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான், மற்றபடி, ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை’’ என்கிறார் பாரதி. 1916ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்ன பாரதி நீதிக்கட்சித் தலைவர்களைத் தேசவிரோதிகள் என்று கூறுவது பார்ப்பனச் ஜாதிவெறி ஒன்றைத் தவிர வேறென்ன?

நீதிக்கட்சி அமைச்சரவை அமைந்த போது அதையும் கிண்டலாகவும், குத்தலாகவும் எழுதுகிறார் பாரதி.

“புதிய யுகம் வரப்போகிறது; மாண்டேகு ஸ்வராஜ்யக் குட்டி போடப் போகிறார் என்று சத்தம் போட்டதெல்லாம் கடைசியாக வெங்கட்ட ரெட்டி, ஸுப்பராயலு ரெட்டி, ராமராயனிங்கார் என்ற மூவரும் நம்முடைய மாகாணத்துக்கு மந்திரிகளாக வந்திருக்கிறார்கள் இஃதென்ன விநோதம்’’ என்கிறார் பாரதியார்.

பாரதியார் டிராம் வண்டியில் செல்வது போலவும் எதிரிலே இரண்டு பேர் உரையாடுவது போலவும் ஒரு கற்பனைச் சித்திரம் வரைந்துள்ளார். அதிலே ஒரு முதலியார் கூறுவதாகப் பாரதி எழுதுகிறார்: “பிராமணர்கள் வந்தால் அதிகமாக ஆங்கிலேய உத்தியோகஸ்தருக்கு அடிமைப்பட மாட்டார்கள். எனவே, ஜனங்களுக்குக் கொஞ்சம் நியாயம் கிடைக்கும். மற்றக் கூட்டத்தார் இன்னும் சரியாகப் படிக்கவில்லை.’’

கலாசாலை மாணாக்கராகிய ஒரு அய்யர் கூறுவதாகப் பாரதி எழுதுவதாவது:

“பிராமணரைத் தவிர வேறு ஜாதியாரை நியமிப்பதில் பிராமண துவேஷம் ஒன்றையே பெருங்கடமையாகவும் பரம தர்மமாகவும், ஜன்ம லக்ஷ்யமாகவும் நினைக்கிறவர்களை விட்டு, இதர ஜாதியாரிலும் பிராமண துவேஷ மில்லாதவர்களையே லார்ட் வில்லிங்டன் நியமித்திருக்க வேண்டும்’’ என்றார்.

(தொடரும்…)

வெள்ளி, 14 அக்டோபர், 2022

தமிழை தரம் தாழ்த்தும் பாரதி (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (84)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (84)

செப்டம்பர் 16-30,2021

தமிழை தரம்

தாழ்த்தும் பாரதி

நேயன்

இதே ஆண்டில், இவர் எழுதிய “சத்திரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது’’ என்னும் பாடலில்,

“வீரியம் அழிந்து மேன்மையும் ஒழித்து நம்

ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்.

… … …

பிச்சை வாழ்வுதந்த பிறருடைய ஆட்சியில்

அச்சமுற் றிருப்போன் ஆரியன் அல்லன்,

புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு

அன்பிலா திருப்போன் ஆரியன் அல்லன்.

மாட்டுதீர் மிலேச்சர் மனப்படிஆளும்

ஆட்சியில் அடக்குவோன் ஆரியன் அல்லன்

ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர்

யாரிவர் ஊர்அவர் யாண்டேனும் ஒழிக!

என்று சிவாஜி, தன் படைவீரர்களுக்கு இசுலாமியரின் கொடுமையைக் கூறியதாக, பாரதி எடுத்தியம்புகிறார்.

“ஆரிய பூமியில்

நாரியரும் நர

சூரியரும் சொலும்

வீரிய வாசகம் வந்தே மாதரம்”

என்று 1907இல், சுதேசமித்திரனில் இவர் எழுதிய “வந்தேமாதரம்’’ பாடலில் கூறுகிறார்.

இங்கு இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்கிறார்.

“அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே

ஆரியர் வாழ்வினைஆதரிப்போனே

வெற்றி தருந்துணை நின்னருள் அன்றோ?

… … …

ஆரிய நீயும் நின்அற மறந்தாயோ?

வெஞ்செயல் அரக்கரை விரட்டிடுவோனே

வீரசிகாமணி, ஆரியர் கோனே”               

               (இந்தியா, 1908)

என்று பாரதியார் “ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்’’ என்னும் பாடலில் கூறுகின்றார். இங்கு யாதவ குலத்தில் பிறந்த சூத்திரக் கடவுளை ஆரியர் கோன் என்கிறார்.

பாரதியார் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும் தன்னுடைய மூதாதையர்களின் மொழியாகிய ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழி என்பதோடு அதைத் தெய்வ மொழியாகவும் கூறுகிறார்.

“நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்.’’

இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது:

“தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே’’ என்கிறார் பாரதியார்.

இந்தியாவிலுள்ள அனைத்துச் செல்வங்-களையும் ‘ஆரிய ஸம்பத்து’ என்கிறார் பாரதியார். “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ‘ஆரிய ஸம்பத்து’. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலேயே துளஸிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி _ இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக் கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ் மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் _ இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆர்ய ஸம்பத்து.’’

இதில் திருக்குறள், சிலப்பதிகாரம், ஆண்டாள் திருமொழி, முதலிய தமிழ் இலக்கியங்களை ஆரியச் செல்வம் என்கிறார் பாரதி. மேலும் பவுத்தர்களின் எல்லோரா ஓவியங்கள், தஞ்சை மராட்டியர்களின் தஞ்சை மகால், சாஜகானின் தாஜ்மகால் முதலியவற்றையும் ஆரியச் செல்வம் என்கிறார். மற்றவர்களின் உழைப்பில் விளைந்த கலை, இலக்கியம் முதலியவற்றை ஆரியச் செல்வமாகப் பாரதி உரிமை கொண்டாடுவது அவரின் அளவு கடந்த ஆரிய வெறியைக் காட்டுவதாகவே அமைகின்றது.

‘உலகில் உள்ள எல்லா நாகரிகங்களுக்கும் மூலமாக இருப்பது ஆரிய நாகரிகமே’ என்கிறார் பாரதியார்.

பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சினை வந்தவுடன் பாரதி பார்ப்பனர்-களைக் காப்பதற்காக, ஆர். எஸ். எஸ். பாணியில் வேண்டுமென்றே ஒரு குழப்பமான கருத்தை எழுதுகிறார்.

பிராமணர் யார்? ஓர் உபநிஷத்தின் கருத்து என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு பாரதி எழுதியுள்ளார்:

“பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன் என்று வேத சாஸ்திரத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்று பரிசோதிக்கத் தக்கதாகும்… பிராமணன் வெள்ளை நிறமுடையவன்; ஷத்திரியன் செந்நிறமுடையவன்; வைசியன் மஞ்சள் நிறமுடையவன்; சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும் உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரமஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின் பிறப்புப் பற்றிப் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று… ஏனெனில் பல ரிஷிகள் ஜந்துக்களுக்குப் பிறந்திருக்கிறார்கள், ஆயின் அறிவினால் பிராமணன் என்று கொள்வோமாயின் அதுவுமன்று. அப்படியானால் யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.

வேதம், உபநிடதம், மனுநீதி முதலியவற்றை நன்கு படித்த பாரதியாருக்குப் பிறப்பினால் தான் பிராமணன் என்பது தெரியாதா என்ன? தெரியும். நம் முன்னோர்கள் பிராமணர் அல்லாதார் வளர்ச்சிக்கு என ஒரு கட்சி வைத்தவுடன் நம் மக்களைக் குழப்பத்தில் தள்ளவே பாரதி இக்கருத்தை எழுதியுள்ளார். இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பாரதியின் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள் பாரதியைப் பின்பற்றித்தான் ‘துக்ளக்’ சோ “எங்கே பிராமணன்?’’ என்று எழுதினார்.

(தொடரும்…)

தமிழை தரம் தாழ்த்தும் பாரதி (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (83)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (83)

செப்டம்பர் 1-15,2021

தமிழை தரம்  தாழ்த்தும் பாரதி

நேயன்

அகத்தியர் போன்ற ஆரிய முனிவர்கள் தமிழ் இலக்கணம் செய்த பின் தான் தமிழ்மொழி ஏற்கனவே உயர்ந்து விளங்கிய ஆரிய மொழியான சமசுக்கிருதத்திற்கு நிகராக விளங்கியதாம். பாரதியார் கருத்திது. நம்புபவர்கள் எத்தனையோ பேர் இருப்பர்.

“ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்

ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்”

_ என்பது அவர் கூற்று. இப்படி எழுதப் பாரதியார் வரலாறு தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். எளிய புலவர்கள் இவ்வாறு உண்மைக்கு மாறாக எழுதினாலும், பாரதியார் போலும் ஓரளவு சிறந்து விளங்கிய தேசியப் புலவர்கள் இவ்வாறு கற்பனைகளை உண்மைபோல் எழுதக்கூடாது. இப்படி எழுதுவதால் வரலாறு சிதைக்கப் பெற்று, உண்மை நிலைகள் உணரக் கூடாமற் போய்விடுகின்றன என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பாவலர்களும் இதற்கு நெறிவிலக்கினர் அல்லர். அவர்கள் கற்பனை, வரலாற்றைத் தழுவிய கற்பனையாக இருக்க வேண்டுமே தவிர, வரலாற்றுக்கு மாறான கற்பனையாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அத்தகைய கற்பனைகளால் எதிர்காலம் சிதைக்கப்படும் என்பதை உணர்தல் வேண்டும்.

இனி, தமிழர் தமிழ் மொழி சிறந்தது, உயர்ந்தது என்று பாராட்டிப் புகழ்ந்து எழுதுவதைப் போல், பாரதியாரும் ஆரிய மொழியையும் ஆரிய இனத்தையும் அவ்வாறு எழுதியிருக்கக் கூடாதா என்று சிலர் கேட்கலாம். பாரதியார் அவர் இனத்தையும் மொழியையும் எவ்வளவு உயர்வுக்கேனும் தூக்கட்டும். அதைப்பற்றி எவருக்கும் கவலையில்லை. ஆனால், அதை வரலாறாக்கக் கூடாது. அவர் தூக்கிப் பேசுகின்ற தன்மை இன்னொரு மெய்ப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பேசப் பெறுகையில் தான் வரலாறு சிதைக்கப் பெறுகின்றது. இந்திய வரலாற்றுச் சிதைவுக்கு ஆரியரின் இந்தக் குழப்ப நிலைகளே கரணியங்கள். அவர்களின் தொன்மங்களிலும், தொல்கதைகளிலும் உள்ள அரசர் பெயர்களில் சிலவும், நிகழ்ச்சிகளில் சிலவும் உண்மையே! ஆனால் அவ்வுண்மையைச் சார்ந்தவாறு பொய்ம்மைகளும் புளுகுகளும் நிரம்பப் படைக்கப் பெற்று அவற்றுள் இணைக்கப் பெற்றுவிட்டன. எனவே, உண்மை எது பொய்யெது என உணரமாட்டாமல் வரலாற்று மயக்கங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு, மக்களைப் பல்வேறு உணர்ச்சிகளுக்கு உள்ளாக்குகின்றன. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் இந்நிலைகள் மிகுதி. அதற்குக் கரணியம் ஆரியப் பூசல்களே!

பாரதியாருக்கு ஆரியவுணர்ச்சி அளவிறந்து இருந்ததுடன் வேதங்களே இந்திய நாட்டின் உயர்வுக்கு அடிப்படையானவை என்னும் மூடக் கொள்கையும் மிகுதியாகவிருந்தது. வேதங்களைப் பழிப்பவர்களை ‘வெளித்திசை மிலேச்சர்’ என்று இழித்தும் அயன்மைப்-படுத்தியும் கூறுகின்றார். மற்றும்,

“தெள்ளிய அந்தணர் வேதம்” – என்றும்,

 

“ஓதுமினோ வேதங்கள்

 ஓங்குமினோ ! ஓங்குமினோ!” – என்றும்,

 

“பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே

பார்மிசை யேதொரு நூல் இது போலே?”

               – என்றும்,

“நாவினில் வேத முடையவள் கையில்

நலந்திகழ் வாளுளடை யாள்” – என்றும்,

“அவள்; வேதங்கள் பாடுவாள் காணீர் – உண்மை

வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்’ – என்றும்,

 

“வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே!”

               – என்றும்,

 

“மீட்டு முனக் குரைத்திடுவேன் ஆதிசக்தி

வேதத்தின் முடியினிலோ விளங்கும் சக்தி!”

               – என்றும்,

 

“வேதமுடைய திந்த நாடு – நல்ல

வீரர் பிறந்திந்த நாடு;

 

சேதமில் லாத ஹிந்துஸ் தானம் – இதைத்

தெய்வமென்று கும்பிட்டி பாப்பா!” – என்றும்,

அவர் வேதப் பெருமைகளாகக் கூறுபவை யெல்லாம் ஆரியத்தின் பெருமைகளைப் பறை சாற்றவே கூறியவையாகும். வேதங்களை மட்டுமின்றி ஆரிய நூல்கள் அனைத்தையும் பாராட்டும் வகையில்,

“அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்

ஆணிமுத்துப் போன்ற மணி மொழிகளாலே

பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்,

பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்

இன்னும்பல் நூல்களிலே இசைத்தஞானம்

என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை                          இந்நாள்?”

_ என்று பலவாறாக உண்மைக்கு மாறாகக் கட்டி உரைப்பது அவர் ஆரிய மதி மயக்கத்தினின்று விடுபடவில்லை என்பதையே காட்டுவதாகும். மேலும் இவரைப் பற்றியும் இவர் எழுதியுள்ள கதைகள் கட்டுரைகள் முதலியவற்றில் உள்ள ஆரியக் கருத்துகள் பற்றியும் இன்னும் பிறரைப் பற்றியும் கூறுவதென்றால் இக்கட்டுரை அளவிறந்து நீளும் என்பதால் இக்கருத்துரைகளை இவ்வளவில் நிறுத்திக் கொள்வோம்.

மொத்தத்தில் நாம் குறிப்பிட வந்தது, ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ் நிலையிலாயினும் சரி, குமுகாய நிலையிலாயினும் சரி, அரசியல், தொழில், சமயம் முதலிய எந்த நிலைகளிலாயினும் சரி. அக்காலத்திலிருந்து இக்காலம் வரை, தமிழர்களுடன் இரண்டறக் கலந்து உறவாடவில்லை என்பதையும்; அவர்கள் தவிர்க்கவியலாத நிலையில் தமிழ்நாட்டில் தமிழர்களிடையில் தமிழர்-களைப் போன்றே வாழ நேரிட்டாலும், அவர்கள் மனநிலையில் எவ்வகை மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும், அவர்கள் இன்றும் தங்களை உயர்ந்தவர்களாகவும், தங்கள் மொழியையே தேவமொழி அதுவே உலகிற்கு மூலமொழி-யென்று நம்புபவர்களாகவும், அப்படி நம்பச் செய்பவர்களாகவும், அப்படி நம்புகின்ற பிற இனத்தவரையே தாங்கிப் போற்றிக் கொள்பவர்களாகவுமே இருக்கின்றார்கள் என்பதையும்; அந்த நிலைகளுக்கு உ.வே. சாமிநாதர் போலும் தமிழறிஞர்களும், பரிதிமாற்கலைஞர் போலும் தனித்தமிழ் வழிகாட்டிகளும், பாரதியார் போலும் பாவலர்களுங்கூட விலக்கல்லர் என்பதையும் உணர்த்த வேண்டியே ஆகும்.

“ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டஎம்

அன்னையின் மீது திகழ்

அன்பெனு மென்கொடி வாடிய காலை

அதற்குயிர் தந்திடுவான்

….. …. ….

வீரிய ஞானம் அரும்புகழ் மங்கிட

மேவிய நல் ஆரியரை

மிஞ்சி வளைத்திடு புன்மை…

… … …

வாழிய நல்ஆரிய தேவியின் மந்திரம்

வந்தே மாதரமே’’

இவர் இதே சுதேசமித்திரனில் 1906இல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்’’ என்ற தலைப்பில்,

“ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது                 போய்ப்

பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே

… … …

வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்

பேதைக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே!”

எனக் கூறி,

இங்கு “ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம் மறைந்து போயினவே’’ என்றும் மிகவும் வருத்தப்படுகிறார்.

(தொடரும்…)

பாரதியின் ஆரிய இனப்பற்று! (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (82)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (82) :பாரதியின் ஆரிய இனப்பற்று!

ஆகஸ்ட் 16-31,2021

நேயன்

ஆர்.எஸ்.எஸின் முதன்மை இலக்கு ஆரிய இனத்தை ஆதிக்க இனமாகவும், உயர்நிலை வர்ணமாகவும் வைத்து, மற்றவர்களை அவர்களுக்கு அடிமைகளாக வைத்திருப்பதாகும். ஆரியர்கள் தவிர மற்றவர்கள் விலங்குகளுக்குச் சமமானவர்கள் என்பதே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம். ஆர்.எஸ்.எஸின் சித்தாந்த கர்த்தா கோல்வால்கர்,

“நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள். இயற்கையின் விதிகளையும், ஆன்ம விதிகளையும் அறிந்தவர்கள் நாம்தான். மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியவற்றையெல்லாம் கொண்டு வந்தவர்களும் நாம்தான். அப்போது நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் இரண்டு கால் பிராணிகளைப் போல் அறிவற்றவர்களாகவே இருந்தனர். எனவே, நமக்கென்று குறிப்பிட்ட பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. சில நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் அறிவுத் திறனுடைய ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் மிலேச்சர்கள்’’ (இழிமக்கள்) என்று கூறுகிறார்.’’

சங்கராச்சாரிமுன் சுப்ரமணியசாமி நாற்காலியில் அமர, மத்திய மந்திரி பொன்.இராதாகிருஷ்ணன் தரையில் அமர்த்தப்பட்டதற்கு இதுதான் காரணம்.

அது மட்டுமல்ல, இந்த நாட்டையே ஆரிய நாடாகக் கூறுவதும் அவர்களின் வழக்கம். இந்த மண்ணின் உரிமையாளர்கள் தமிழர்கள் _ திராவிடர்கள். இது உறுதி செய்யப்பட்ட வரலாற்று உண்மை. ஆரியர்கள் பிச்சையெடுத்துப் பிழைக்க வந்தவர்கள். பின் மெல்ல மெல்ல தங்களின் சூழ்ச்சியால் ஆதிக்கவாதிகளாக மாறியவர்கள் என்பதும் வரலாற்று உண்மை. இந்திய நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதும் வரலாறு, அகழ்வாய்வு உறுதி செய்த _ செய்து வருகிற உண்மை. ஆனால், வரலாற்றைத் திரித்து _ மறைத்து, பித்தலாட்டம் செய்து, இந்த நாடு ஆரியர்க்கு ரியதாகவும், இந்தியக் கலாச்சாரம் ஆரியக் கலாச்சாரம் என்ப தாகவும் காட்ட தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த வேலையை பாரதியும் அப்போதே செய்துள்ளார். இந்த நாட்டையே ஆரிய நாடாகக் காட்டுவதை அவர் பெருமளவிற்குச் செய்துள்ளார்.

“பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்

ஆரிய நாடு என்று அறி’’

“முன்னை இலங்கை அரக்கர் அழிய

முடித்தவில் யாருடை வில்? – எங்கள்

அன்னை பயங்கரி பாரத தேவிநல்

ஆரிய ராணியின் வில்”

“சித்த மயம் இவ் வுலகம்; உறுதிநம்

சித்தத்தில் ஓங்கி விட்டால் – துன்பம்

அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்ன சொல்

ஆரிய ராணியின் சொல்”

 

– “எம்மை

ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்

ஆரிய தேவி”

 

“வீரிய வடிவம் – என்ன

வீரிய வடிவம் – இந்த

ஆரியன் நெஞ்சம், அயர்ந்ததென் விந்தை!”

 

“எங்கள் ஆரிய பூமி”

 

“ஆரிய பூமியில் நாரிய ரும்நர

சூரிய ரும்சொலும் வீரிய வாசகம்“

 

“உன்னத ஆரிய நாடெங்கள் நாடே

ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே”

 

“ஆதிமறை தோன்றியதால் ஆரியநா டெந்நாளும்

நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு”

எப்படி? பாரதியாருக்கு இது தமிழ் நாடாகவோ இந்தியாவாகவோ படவில்லை. அப்படிப் பட்டாலும் அவருக்குச் சொல்ல விருப்பமில்லை. இந்திய நாடு அனைத்தையும் பாரத நாடு என்று சொல்வதைவிட ஆரிய நாடு என்று சொல்வதில் தான் அவர்க்குப் பெருமையிருந்திருக்கின்றது. உண்மை அப்படியிருந்து அவ்வாறு அவர் சொல்லிப் பெருமைப்பட்டிருந்தாலும் தாழ்வில்லை. அவர் உண்மையைத்தானே சொன்னார்; அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்‘ என்று கேட்கலாம். அவர் உண்மையல்லாத ஒன்றை உண்மைபோல் பலமுறை பன்னிப் பன்னிப் பேசியிருக்கின்றார். இப்படிப் பாடல்களைப் பாடுவதாலும் பலமுறை சொல்வதாலும் வரலாற்று உண்மைகளையே மறைக்க முயற்சி செய்துள்ளார். நாடற்ற ஆரியர்களுக்கு இந்நாடு உரிமையுடையது என்றால் இந்நாட்டையே பிறந்தகமாகக் கொண்ட தமிழர்களுக்கு எந்த நாடு உரிமையுடையது? தமிழ்நாடு என்பதாகவே ஒரு நாடு இருப்பதாக அவர் நினைவு கொள்ளவில்லை. இந்திய நாட்டில் அடங்கிய பத்தொன்பது திரவிட நாட்டுப் பகுதிகளும் ஆரியர்களுடையனவே என்று வல்லடி வழக்கு நடத்தியிருக்கின்றார்.

‘ஆரியர்’ என்பது பெருமைக்காகச் சொல்லப் பெற்றதாகத் தெரியவில்லை. இந்திய நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரு பெயர் சொல்ல வேண்டுமே என்றுங் கூட அந்தப் பெயரைச் சொன்னதாகத் தெரியவில்லை. உண்மையிலேயே அவர்தம் இனப் பெருமையை நிலைநாட்டவே அவ்வாறு சொல்லியிருக்கின்றார். இந்நாட்டை ஆரிய நாடாகக் கருதியதை, அவர் பொது நோக்கங்கொண்டு சொன்னது என்பது, பித்தலாட்டமும் புரட்டுமாகும். வருங்காலத் தமிழ்க் குமுகாயத்தை இனி இவ்வாறெல்லாம் ஏமாற்ற முடியாது. மேலும் அவர் கூறியதைக் கவனியுங்கள்.

“ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்

சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!”

 

“வீரியம் ஒழிந்து மேன்மையும் ஒழிந்து, நம்

ஆரியர் புலையருக் கடிமைகள் ஆயினர்”

 

“மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்”

ஆரியரை இந்தியாவுக்கே உரிமையாக்கி, இந்தியாவை ஆரியர்க்கே உரிமையாக்கிப் பேசும் உணர்ச்சி பாரதியாரிடம் நிறைய இருந்திருக்கின்றது. ஆரியர் என்றால் அவர்களிடம் ஒரு தனித்தன்மை, சிறப்பு, எல்லாருக்கும் உயர்வான ஒரு தேவப் பெருமை இவையெல்லாம் இருப்பனவாகக் கற்பனை செய்து கொள்ளும் மனநிலை அவர் பாடல்களில் ஒலிக்கின்றது. இந்தியப் பண்பாடு, நாகரிகம், வீரம், சமயம் முதலிய அனைத்துப் பண்புகளையுமே அவர் ஆரியமாகப் பார்க்கின்றார். அப்பண்புகள் குறைந்தவரை அவர் ஆரியரினும் தாழ்ந்தவராகப் பேசுகின்றார்.

“ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்

யாரிவண் உளர்? அவர் யாண்டேனும் ஒழிக!”

 

“ஆரியர் இருமின் ஆண்களிங் கிருமின்;

வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!”

_ என்று பலவாறாக ஆரியர்களையே _ அல்லது அவரைச் சார்ந்தவர்களையே இந்நாட்டுக் குடிமக்களாக எண்ணிக் கொண்டு அவர் யாக்கும் வரிகள் இங்குள்ள எல்லாப் பிரிவினர்களையும் இழிவு செய்வனவாகும். வரலாற்றடிப்படையில் இந்நாட்டுக்கு உரிமையான ஓரினம் உண்டென்னும் ஒரு கருத்தை அவர் அடியோடு மறுப்பனவாகவே இவ்வரிகள் அமைகின்றன.

தமிழ்மொழியைப் பாராட்டுகையிலும், அஃது ஆரியச் சார்பு உடையதனால்தான் பெருமை கொண்டு விளங்குகின்றது என்னும் பொருள்படவே எழுதுகின்றாரே தவிர, அதன் தனித் தன்மை, பழைமைச் சிறப்பு, தாய்மை நிலை, வளமைக் கொழிப்பு முதலியன நிறைந்திருக்கும் தன்மையை அவர் ஒப்புக்கொள்வதில்லை.

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”

ஆதிசிவன் பெற்ற தமிழை ஆரிய மைந்தன் அகத்தியன்தான் சிறப்புறச் செய்தான் என்பது பாரதியார் கருத்து. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தது கி.மு. 1500இலிருந்து 2000க்குள் எனக் கூறலாம். அவர் தென்னாடு வந்தது அதற்குப் பின்னர்தான். அக்காலத்திற்கு முன்பே தமிழ் மிகவும் சிறப்புற்று விளங்கியிருந்தது. அவர்கள் தென்னாடு வந்த பின் அஃதாவது கடைக் கழகக் காலத்திற்குப் பின்னர்தான் தமிழ் மொழி, தமிழ் நாகரிகம், தமிழர் பண்பாடு முதலிய யாவும் சிதையத் தொடங்கின. இவர்கள் கூறிப் பெருமைப்படும் சமசுக்கிருத மொழி அதன் பின்னர்தான் செயற்கையாக உருவாக்கப் பெற்றது. இந்த வரலாற்று நிலைகளை யெல்லாம் உணராமல் அல்லது உணர்ந்தும் ஒப்புக்கொள்ளாமல் அல்லது ஒப்புக்கொண்டும் அவற்றை அடியோடு மறைக்கின்ற முயற்சியில் தமிழ்த்தாய் உரைப்பதாகப் பாரதியார் இப்படி எழுதுகிறார்.                   (தொடரும்)