பக்கங்கள்

மாற்று மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்று மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 அக்டோபர், 2022

பாரதியின் பிற மத வெறுப்பு (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (87)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (87)

நவம்பர் 1-15,2021

பாரதியின் பிற மத வெறுப்பு

நேயன்

“இதனிடையே என்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும்பாடு சொல்லுந்தரமன்று. அதோ பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் தெரிகிறதன்றோ? நடுவேயிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக்கொருத்தியாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மன ஒற்றுமை இல்லை என்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அவருக்கு வயது இருபத்திரண்டு. அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவருக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. வயது பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறார். குலாப்பிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்கு சம்மதமில்லை’’ என்ற  கற்பனைச் சித்திரத்தை 25.5.1920இல் எழுதினார்.

இதை ஓர் உண்மைச் சம்பவம் போலவே பாரதி எழுதியிருக்கவே, ஓர் இசுலாமியர் அதைப் படித்துவிட்டு, பாரதியிடம் வந்து, ‘ரெயில்வே ஸ்தானம்’ என்றொரு கதை எழுதியிருந்தீர்களே, அது மெய்யாக நடந்த விஷயமா? வெறும் கற்பனைக் கதைதானா?’’ என்றார். “வெறும் கற்பனை’’ என்று நான் சொன்னேன். “என்ன கருத்துடன் எழுதினீர்’’ என்று கேட்டார் வந்தவர்.

இந்த ‘ரெயில்வே ஸ்தானம்’ என்ற கதையிலும் ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால் அதனின்றும் அவனுக்குக் கஷ்டம்தான் விளையும் என்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்து கொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படிக் கதையினால் குறிப்பிடப்படும் உண்மைகளாகும் என்றேன். அப்போது அந்த முஸ்லிம் நண்பர் (‘அந்தக் கதையில் ஒரு பிழை இருக்கிறது’ என்றார். ‘என்ன பிழை?’ என்று கேட்டேன். அக்கதையில் ஒரு முகமதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண் (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடன் இருக்கும்போதே அவருடன் பிறந்த மற்ற ஸ்திரீயை ஒரு முஸ்லிம் மணம் புரிந்து கொள்ளக் கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை என்று அந்த முகமதிய நண்பர் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் நான்: ‘சரிதான். எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்களுக்குள்ளே உண்டாதலால் அதுபோல் முஹம்மதியர் களுக்குள்ளேயும் இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதிவிட்டேன்.

எனவே, அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப் பிரவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தாரென்பதை மாற்றித் தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தாரென்று திருத்தி வாசிக்கும்படி ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் எழுதி விடுகிறேன் என்றேன்’ என்று பாரதி எழுதியுள்ளார். தன்னிடம் வந்தவரிடம் பாரதி, ‘உங்களுக்குள்ளே ஸ்திரீகளை அந்தப்புரத்தில் மறைத்து வைப்பதாகிய கோஷா வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?’ என்று கேட்டார்.

அந்த முகமதிய நண்பர்: ‘முகம்மது நபி (ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப் போய்விட்டது. பிறகு முகமது நபி அதை மீளவும் விதியாக்கினார்’ என்றார்.

‘அதிலே திருத்தங்கள் செய்யக் கூடாதா?’ என்று பாரதி கேட்க, அந்த முஸ்லிம் நண்பர், ‘கூடாது. ஏனென்றால் முகமதுதான் கடைசி நபி. அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்தரவுகள். அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை’ என்றார்.

பாரதியார்: தென்ஜில்லாக்களிலே தமிழ் பேசும் முஸ்லிம் (ராவுத்தர்)களுக்குள்ளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே! என்று கேட்டார். இப்படிப் பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே சென்றது. பாரதி கடைசியாகத் துருக்கி தேசத்தில் ஸ்திரீகளுக்குள்ளே பிரமாண்டமான விடுதலைக் கிளர்ச்சி நடந்து வருவதைப் பற்றியும், ‘கோஷா’ வழக்கத்தை ஒழித்து விட்டு, கல்வி கேள்விகளில் தேர்ச்சியடைவதையும் கூறினார். வந்த முஸ்லிம் எனக்குத் தெரியாது என்று கூறிச் சென்று விட்டார்.

பாரதியார் அல்லாவைப் பற்றிப் பாடல் பாடியுள்ளாரே, அவரை எப்படி நீங்கள் குறை சொல்ல முடியும் எனச் சிலர் கேட்கலாம். 20.6.1920இல் பாரதி கடயத்தில் இருந்தபோது சில இசுலாமியர்கள் பாரதியை அழைத்து பொட்டல் புதூரில் இசுலாம் மார்க்கம் குறித்து ஒரு சொற்பொழிவு நிகழ்த்தக் கூறினார்கள். அப்போதுதான் பாரதியார் அல்லா, அல்லா என்ற பாடலைப் பாடினார். நபிகள் நாயகத்தின் வரலாற்றை மிக விரிவாகவும் சிறப்பாகவும் பேசி முடிக்கும் தறுவாயில், நபிகள் ஏன் ஏசு நாதனை ஒரு மகானாக, கடவுளின் அவதாரமாக ஏற்றுக் கொள்ளவில்லை? என்ற கேள்வியைக் கேட்டு விட்டுத்தான் வந்தார்.

இசுலாமியர்கள் தேசப்பற்று அற்றவர்கள் என்பது பாரதியின் கருத்து. இதை ‘இந்தியா’ ஏட்டில் ஒரு கருத்துப்படம் வெளியிட்டு பாரதி விளக்கியுள்ளார். மே 1, 1909இல் இப்படம் வெளியிடப்பட்டது. (திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார், பக்கம் 80-83)

அதேபோல் கிறித்துவ மதத்தையும், பாதிரியார்களையும் கடுமையாக எதிர்த்தார் பாரதியார்.

கிறித்துவ மதத்தையும் பாரதி கடுமையாக விமர்சனம் செய்கிறார். இந்து மதத்தைப் புகழும் பாதிரிகளை மிக நல்லவர்கள் என்கிறார். இந்து மதத்தைக் குறை கூறும் பாதிரிகளை மூடப் பாதிரிகள் என்கிறார்.

“சென்னை கிறித்து கலாசாலையில் டாக்டர் மில்லர் என்று ஒரு பாதிரி இருந்தார். அவர் நல்ல புத்திசாலி என்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்ற எல்லா மதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளிவாகக் காட்டி யிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். சாதாரணப் பாதிரி கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்து கொண்டார்.

அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரச்சாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்து போய் மஹத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லு கிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்திரீகளை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை எல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.’’

இன்னும் ஒரு படி மேலே போய் பாரதியார், “கிறிஸ்துவ விவிலிய நூலில் வரும் தேவகுமாரன் என்பது வேறு யாருமல்ல; நம்முடைய சுப்ரமணியன்தான்” என்கிறார். (திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்,

பக்கம் 83-84)

(தொடரும்…)

திங்கள், 7 டிசம்பர், 2020

மாற்று மத காதல் - நீதி மன்ற தீர்ப்பு

https://drive.google.com/file/d/1odrEKcSE-tcPze9Mj4Lz2nA0LmyA1Dbo/view?usp=drivesdk

*எஸ்,முருகேசன்*
சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் என்பவர் தான் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண்ணும் தன்னை காதலித்து வந்ததாகவும், தாங்கள் இருவரும் மேஜர் என்றும், தங்கள் திருமணத்திற்கு காதலி வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் தனது காதலி வீட்டை விட்டு வெளியேறி தனது வீட்டுக்கு வந்து விட்டதாகவும், ஆனால் காதலியின் பெற்றோர்கள் தனது வீட்டுக்குள் புகுந்து காதலியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று சட்ட விரோதமாக காவலில் வைத்து இருப்பதாகவும் இதனால் தனது காதலியின் வாழும் உரிமையான அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தனது காதலியை கண்டுபிடித்து தர போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஒரு ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனுவை தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.


மனுவை விசாரித்த நீதிபதிகள் போலீசார் மற்றும் காதலியின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதனடிப்படையில் 10.4.2018 ஆம் தேதி காதலியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெண்ணின் தந்தையும் தனது வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.


அன்றைய தினம் காதலியை அழைத்து நீதிபதிகள் விசாரித்த போது, காதலி தான் மணிகண்டனை உயிருக்கு உயிராக காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் ஆனால் தனது பெற்றோர் தன்னை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்திருப்பதாகவும் கூறினார். மேலும் காதலன் இந்து மதத்தை சார்ந்தவராக இருக்கிறார் என்ற ஓரே காரணத்துக்காகவே திருமணத்திற்கு தனது பெற்றோர் மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறினார்.


அப்போது காதலியின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டனுக்கும், பெண்ணுக்கும் இடையே திருமணம் ஏதும் நடக்காத நிலையில் மணிகண்டன் எப்படி ரிட் மனு தாக்கல் செய்தார்? முதலில் காதலியை ஆஜர்படுத்த கோரி காதலன் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்ய முடியுமா? முதலில் ரிட் மனு தாக்கல் செய்ய மணிகண்டனுக்கு தகுதி உள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.


தந்தையின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை 16.4.2018 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் காதலிக்கு 19 வயதே ஆகியிருந்ததால் அவருக்கு அறிவுரைகளை வழங்கி பெற்றோருடன் காதலியை அனுப்பி வைத்தனர்.


அதன்பிறகு 16.4.2018 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் காதலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. அதனால் காதலியை மறுநாள் அதாவது 17 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி வழக்கை மறுநாளுக்கு ஒத்தி வைத்தனர். அதன்படி காதலி மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் மறுபடியும் நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் காதலி தனது காதலில் உறுதியாக இருந்தார்.


அதனால் முதலாவதாக காதலன் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வியை விவாதித்தனர்.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் கட்டளை 226 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரிக்கும் போது, ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது நீதிமன்றத்திற்கு தெரிய வந்தால் ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளலாம். எனவே ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய ஒருவருக்கு தகுதி உள்ளதா? இல்லையா? என்று ஆராய வேண்டியதில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தான் சட்ட விரோதமாக காவலில் இருப்பதாக கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட பெண் மேஜர் ஆவார். எனவே அவரது விருப்பப்படி வாழ முடியும் என்றனர்.


அப்போது தந்தை தரப்பில் குறுக்கிட்ட வழக்கறிஞர், உரிய வயதை அடைந்த ஒரு பெண் பெற்றோருடன் இருப்பதை சட்ட விரோத காவலில் இருப்பதாக கருத முடியாது என்று கூறி உச்சநீதிமன்றம் "லால் பரமேஸ்வர் Vs உல்லாஸ் NN (2014-CRLJ-192)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.


அதற்கு பதிலளித்த நீதிபதிகள், மகளுடன் பேச பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மகள் தனது காதலில் உறுதியாக இருப்பதோடு மட்டுமின்றி, தான் சட்ட விரோத காவலில் இருப்பதாக கூறுவதால் தந்தை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறினர். மேலும் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் என்பதால் மணிகண்டன் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு சட்டப்படி சரியான ஒன்று என்றனர்.


மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு எப்படிப்பட்ட உதவிகளை கட்டாயமாக மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்று " சத்தியவாகினி Vs யூனியன் ஆப் இந்தியா மற்றும் பலர் (W. P. NO - 231/2010 என்ற வழக்கில் 27.3.2018 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.


அந்த தீர்ப்பில்.....


கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் பஞ்சாயத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும்.


கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அவர்களை அதே மாவட்டத்தில் பாதுகாப்புள்ள வேறு வீட்டில் குடியமர்த்த வேண்டும்.


கலப்புத் திருமணம் செய்து கொண்ட நபர்களுக்கு பாதுகாப்பான வீட்டை ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அந்த பாதுகாப்பு வீடானது மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பியின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும்.


கலப்புத் திருமணம் செய்ய விரும்புபவர்கள் கொடுக்கும் கொலை மிரட்டல் மனுக்களை தீவிரமாக பரிசீலித்து கலெக்டர் மற்றும் எஸ்பி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகு அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான உதவிகளை செய்ய வேண்டும். திருமணத்தை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்பதியர் விரும்பினால் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அரசின் பாதுகாப்பில் அவர்கள் தங்க விரும்பினால் அவர்களிடமிருந்து குறைந்த கட்டணத்தை பெற்றுக் கொண்டு முதலில் ஒரு மாதத்திற்கும் பின்னர் ஒவ்வொரு மாதமாக சூழ்நிலைக்கு ஏற்ப தங்க அனுமதிக்க வேண்டும். மொத்தமாக ஒரு வருடத்திற்கு மேலாக கூட தங்க அனுமதிக்க வேண்டும்.


கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களிடமிருந்து மிரட்டல் புகார் பெறப்பட்டவுடன் கலெக்டர் அல்லது எஸ்பி, அந்தப் புகாரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு குறைவில்லாத ஒரு அதிகாரியிடம் விசாரணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


புகார் விசாரணைக்கு ஏற்கும் அதிகாரி புகாரில் உண்மையிருந்தால் அது குறித்த அறிக்கையை எஸ்பியிடம் வழங்க வேண்டும். அந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட எஸ்பி அதனை காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்து FIR பதிவு செய்ய சொல்ல வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றி துணை கண்காணிப்பாளர் வழக்கை புலனாய்வு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும். மிரட்டல் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் FIR பதிவு செய்து அவர்கள் மீது கூட்டுசதி மற்றும் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிற பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்.


இந்த நடைமுறைகளை கலெக்டர் மற்றும் காவல் அதிகாரிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். தவறினால் அதிகாரிகள் மீது 6 மாதங்களுக்கு உள்ளாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.


(அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எப்படி எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே "ஆறுமுகம் சேர்வை என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது)


அதனால் காதலின் தந்தையின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே காதலி தனது விருப்பம் போல வாழலாம் என்று கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-கட்செவி வழியாக வந்தது

திங்கள், 7 மே, 2018

இந்து மதக் கோயில்களுக்குள் ஏன் வேறுபாடு?

அயோக்கியன்


கடவுள் ஒருவர் உண்டு, - அவர் உலகத்தையும், அதிலுள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன் இச்சையால் - புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன். ("குடிஅரசு", 18.5.1930)

குருவாயூர் கிருஷ்ணன் கோயில் என்றாலே பார்ப்பனிய மேலாண்மைமிக்க கோயில்களுள் ஒன்றாக இருந்து வருவதாகும். அந்தக் கோயிலில் வழங்கப்படுகின்ற பிரசாதத்தை இந்துக்கள் அல்லாதவர்களும் பெற்றுக்கொண்டு சாப்பிடலாம் என்று கோயில் நிர்வாகம் கூறிவிட்டது என்றதும் பரவாயில்லையே, கோயில்களில் மதப் பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டுவிட்டதோ என்று பாராட்டத் தோன்றும்.

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் வழங்கப்படுகின்ற பிரசாதத்தை இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் சாப்பிடலாமாம். ஆனால், பிரசாதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கோயிலுக்குள் பிரசாதம் அளிக்கப்படுகின்ற பகுதிக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது எனும் உத்தரவு கோயிலின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் கோயிலுக்கு வெளிப்புறமாக  பிரசாதம் உண்ணுமிடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 500 பேர் அமர்ந்து உண்ணும் அளவிற்கு  ஊட்டுப்புரா எனும் உணவருந்துமிடம் குருவாயூர் கோயில்  தேவஸ்வம் நிர்வாகத்தின் சார்பில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கோயிலுக்குள்  பேண்ட், சட்டை, காலணி அணிந்து செல்லவும் மறுக்கப்பட்ட நிலையில் உணவருந்தும் பகுதிக்கு அணிந்து செல்வதற்கு தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளது.

உணவு அருந்துமிடமாக இரண்டு கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பழைமையானதாக உள்ள ஒன்று இந்துக்களுக்கு மட்டும் என்றும், கோயிலில் பின்பற்றப்பட்டு வருகின்ற பழைமையான  நடைமுறையின்படி, அப்பகுதிக்குள் பேண்ட், சட்டை காலணிகள் அணிந்து செல்வதற்கு அனுமதி கிடையாது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள உண்ணுமிடத்தில் எல்லோரும் உணவருந்தலாம். புதிய உணவுக்கூடத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. சாப்பிடுவதற்காக மட்டுமே வேகமாக வருபவர்களுக்கு வாய்ப்பாக கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன் நோக்கம் என்ன வென்றால், அனைவருக்கும் உணவு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்  என்று கோயில் நிர்வாகி பிரவீன் கூறுகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு ஆண்டுக்கு ஏழு லட்சம் பேர் செல்கிறார்கள்.  கேரள மாநில அரசு சார்பில் நியமிக்கப்படும் உறுப்பினர்களை உள்ளடக்கி, குருவாயூர் தேவஸ்வம் நிர்வாகக் குழு கோயில் நிர்வாகத்தை செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் தலைமை அர்ச்சகர் (தந்த்ரி) தினேசன் நம்பூத்ரி கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாத வர்களையும் அனுமதிக்கும் பரிந்துரையை அளித்தார். கேரள மாநில இடதுசாரி அரசின் அமைச்சர்கள் மற்றும் எதிர்க் கட்சியினரும் அப்பரிந்துரையை வரவேற்றனர். இந்துக்கள் அல்லாதாரை கோயிலுக்குள் அனுமதிப்பது என்பது எப்போதுமே விவாதத்துக்குரியதாக இருந்து வருகிறது. இந்துமத பக்திப்பாடல்களை பாடிவருபவரான கே.ஜே.ஏசுதாஸ் கோயில்களுக்கு செல்லவேண்டும் என்பதில் விருப்பம் தெரிவித்து வருபவராவார். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த வரான ஏசுதாஸ் இந்து மத நம்பிக்கை உள்ளவராகவே கூறிவந்தார். பிறப்பால் கத்தோலிக்க கிறித்துவரான பாடகர் கே.ஜே ஏசுதாஸ் கடந்த ஆண்டு செப்டம்பரில் திருவனந் தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயிலுக்குச்  சென்றார். அப்போது, அவரிடம் உறுதிமொழிப்பத்திரம் பெற்றுக்கொண்ட பின்னரே கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப் பட்டது. அவர் அளித்த உறுதிமொழிப்பத்திரத்தில், இந்துமத நம்பிக்கை கொண்டவர் என்றும், கோயிலுக்குள் சென்று தரிசித்திட விரும்புவதாகவும் தெரிவித்திட வலியுறுத்தப்பட்டு அதன்படியே அவர் குறிப்பிட்டார். அதன் பின்னரே அவர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குள் செல்வதற்கு பாடகர் கே.ஜே.ஏசுதாசுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைப் போன்று, திரும்பத்திரும்ப அவர் கோரிக்கை விடுத்தபோதிலும், குருவாயூர் கோயிலுக்குள் செல்வதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய  பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் கூறியதாவது: கரப்பான் பூச்சியாகவோ, ஈ ஆகவோ நான் பிறந்திருந்தால் குருவாயூர் கோயிலுக்குள் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றார்.

இந் நிலையில் குருவாயூர் கோயில் நிர்வாகி பிரவீன் கூறியதாவது:

கோயிலின் பழைமையான நடைமுறைகளை நாங்கள் இன்னமும் கடைப்பிடித்து வருகிறோம். இப்போதைக்கு நாங்கள் மாற்றங்கள் எதையும் செய்வதாக இல்லை என்றார்.

ஓர் இந்துக் கோயிலில் அனுமதி - இன்னொரு இந்துக் கோயிலில் அனுமதி மறுப்பு? இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

கடவுள் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் இல்லையா? இல்லை என்றால் ஒரு மதத்துக் கடவுள் இன் னொரு மதக்காரனுக்கு இல்லை என்று ஆகிவிடவில்லையா?

அப்படியானால் ஒரு மதத்துக்காரன் இன்னொரு மதக்காரனுக்கு நாத்திகன் தானே!

கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்ற தந்தை பெரியார் அவர்களின் கணிப்புதான் என்னே!

- விடுதலை நாளேடு, 4.5.18