பக்கங்கள்

ஞாயிறு, 11 ஜூன், 2023

தேவதாசி என்னும் புனித விபச்சாரம். தோற்றமும் சில குறிப்புகளும்.



பிறருக்கு மிகவும் கொடுமையாகத் திகழும் சில விஷயங்களைப் பற்றி பேசும்போதும், கருத்து தெரிவிக்கும்போதும் நமக்கு மிகச் சுலபமாக இருக்கிறது. நாம் அந்தக் கொடுமைகளை அனுபவிப்பதில்லை. மிஞ்சிப்போனால் எவரோ எழுதியதைப் படிக்கிறோம், அல்லது எவரோ யாரிடமோ சொல்லும்போது கேட்டுக்கொள்கிறோம். பெரும்பாலும் கருத்துத் தெரிவித்தலுக்கு முன்பு நடக்கும் இந்த 'தெரிந்துகொள்தல்' படலம் மிகுந்த ஆராய்ச்சிக்கெல்லாம் நம்மை உட்படுத்துவதில்லை, குளிர்சாதன அறையிலேயே நடந்து முடிகிறது. தேவதாசி முறையைப் பற்றிய சில கலை ஆர்வலர்களின் கருத்துக்கள் இதுப்பொன்றவைதான். 

16 வயதே நிரம்பிய ரூபா தேவதாசி முறையில் கர்நாடகாவின் எல்லம்மா கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர். அவர் சொல்கிறார், "11வயதில் நான் பருவத்திற்கு வரும் முன்பே என் கன்னித்தன்மையை அர்ப்பணித்துவிட்டேன். முதல் முறை மிகவும் வலிதருவதாக இருந்தது. என்னுடன் இரவைக் கழித்தவர் ரேசர் ப்ளேடுகளால் என் பிறப்புறுப்பில் கீறலகளைப் போட்டார். இப்போது எனக்கு பழகிவிட்டது". இது 'ஒரு' தேவதாசியின் கதை. இந்தியக் கோவில்களின் வரலாறு நெடுகே கோடிக்கணக்கான ரூபாக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் பிறப்புறுப்புகளும், உடல்களும் உயர்சாதி ஆண்களால் பொழுதுபோக்கு மைதானங்களைப் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கொஞ்சம் ஆழமாய்த் தேடினால், தேவதாசிகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நெஞ்சை உறைய வைப்பதாக, கண்ணில் நீர் தழும்ப வைக்கும் கொடூரத்துடனேயே இருக்கின்றன.

இந்தியாவெங்கும் தேவதாசிகள் உருவானது புத்தமதம் அழிந்தபின்புதான் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. காமத்தை தன் மூலப்பொருளாகக் கொண்டு எழுதிய வாத்சாயனரோ, ஜடாகா கதைகளிலோ தேவதாசிகளைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் அவற்றுக்குப் பின், அதாவது புத்தமதம் இந்தியாவில் இருந்து விரட்டப்பட்டு சைவ-வைணவம் தழைத்தோங்கத் துவங்கிய காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளிலும்,  குறிப்புகளிலும் தேவதாசிகளைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இன்னும் அதிர்ச்சியூட்டும் செய்தி, புத்த துறவிகளாக இருந்தப் பெண்களை தேவதாசி முறையில் விபச்சாரப் பெண்களாக அக்காலத்திய சைவ-வைணவ புரோகிதர்கள் வலுக்கட்டாயமாக ஆக்கினார்கள் என்ற தகவலும் உள்ளது. ஜைன மதத்துறவிகளையும், புத்தமதத் துறவிகளையும் (ஆண் துறவிகளை) கழுவிலேற்றும், கொதிக்கும் சுண்ணாம்பில் எறியும் காட்சிகள் புடைப்போவியங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் உள்ளதை இன்றும் காணலாம். இப்போது பெண் துறவிகள் என்ன ஆனார்கள் என்ற கேள்வியையும், மேலே சொல்லப்பட்டுள்ள புத்தமத வீழ்ச்சியின் காலத்தையும், தேவதாசி முறையின் துவக்கத்தையும் ஒன்றிணைத்தோமானால் நமக்கு பதில் எளிதில் கிடைத்துவிடுகிறது.இப்படித் தோன்றிய இந்த முறை பின் வழிவழியாக தொடர தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை பயன்படுத்திக்கொண்டனர்.

தேவதாசி எனப்படும் தேவரடியார் முறையை நிறுவனமயமாக்கிய பெறுமை நம் ஊர் மன்னன் #ராஜராஜசோழனையே சேரும். தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட போது அதற்காக நாடெங்கிலும் இருந்து 400 சின்னப்பெண்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டனர். பெரும்பாலும் ஏழைக் கூலிகள், விவசாயிகளின் குழந்தைகளான இவர்கள் வறுமையின் காரணமாக விற்கப்பட்டிருக்கிறார்கள். ராஜராஜசோழனின் காலம் பார்ப்பனர்களுக்கும், அரசகுடும்பங்களுக்கும் பொற்காலமாக விளங்கியதேயொழிய ஏழைகளுக்கும், சாதிய படிமத்தில் கீழே இருந்தவர்களுக்கும் அல்ல. பார்ப்பனர்களுக்கு கிராமம் கிராமமாக அள்ளிவழங்கிய சோழர்கள்தான் வண்ணார்களின் சலவைக்கல்லுக்கு வரி விதித்த கேலிக்கூத்தையும் செய்தார்கள். பெண்களை உடன்கட்டை ஏறச்செய்வது, வர்ணாசிரம தர்மத்தை முறைப்படி கடைபிடிப்பது, தாழ்த்தப்பட்டோர் பள்ளங்களிலும், உயர்சாதியினர் மேடான இடங்களிலும் வாழவேண்டும் என உத்தரவிட்டது,  பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்று ஏழைகளைப் பிரித்து தனிச்சேரிகளில் வைத்தது என ராஜராஜசோழன் நிறுவனமயமாக்கிய அசிங்கங்கள் ஏராளம், ஏராளம். அவன் ஆரம்பித்து வைத்த அவளங்கள் தான் இன்னும் நம் நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.  இதைப் பற்றிப் பேசினால் தனிப்புத்தகமே வேண்டுமென்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

ஏழைக் குடும்பப் பெண்களை கடவுளின் பேரால் விபச்சாரிகளாக மாற்றியாகிவிட்டது. இப்போது இழப்பீடு வழங்கவேண்டுமல்லவா? அப்போதுதானே தொடர்ந்து தேவதாசியாக பெண்கள் வருவார்கள்! அதற்காக சோழர் காலத்தில் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
தரிசு நிலங்களை தேவதாசிகளுக்கும், விளைநிலங்களை பூசாரிகளுக்கும் ஒதுக்கிய பாரபட்சமும் நிகழ்ந்தேறியுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளின் போது கோவில் நகைகளை அணிந்து இவர்கள் ஆடியிருக்கின்றனர். திருமணம் போன்ற சடங்குகளில் இவர்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது. பின் கால ஓட்டத்தில் உடலுக்கு காசு என்ற அளவில் இந்த மரியாதை சுருங்கியது தனிக்கதை. இப்படி வழிவழியாக கோவிலில் தேவரடியார்களாக இருக்கும் இப்பெண்களின் ஆண் குழந்தைகள் நாதஸ்வரம், மிருதங்கம், தவில் போன்ற இசைக்கருவிகளைக் கற்று கோவிலிலேயே பணி செய்திருக்கிறார்கள். விபச்சாரம் ஒழிந்துவிட்டாலும் இன்னமும் கோவில்களில் இசைப்பணி புரியும் சமூகத்தவர்கள் இவர்கள் வழி வந்தவர்களே.

தேவதாசி முறை குறித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை ஒன்று, ஆளும் வர்க்கம் மற்றும் கடவுளை முழுதாய் கையில் வைத்திருந்த (வைத்திருக்கும்) பார்ப்பன வர்க்கத்திற்கும் நிலவிய காமத்தேவைக்கு வடிகாலாக தேவதாசி முறை பயன்பட்டதாகவும், அதன்காரணமாக தங்களிடமிருந்த கடவுள் மற்றும் மதத்தை பயன்படுத்தி தேவதாசி முறையை தோற்றுவித்தனர் என்றும் தெளிவாகத் தெரிவிக்கிறது. இதில் ஈடுபடுத்தப்பட்ட அத்துணை பெண் குழந்தைகளும் தாழ்த்தப்பட்ட சாதியை, சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர்கள். சூத்திர ஆண்கள் மனுதர்மப்படி தீண்டப்படக்கூடாதவர்கள், ஆனால் காமத்தில் ஏது தீண்டாமை? எல்லாவற்றுக்கும் தான் மனுதர்மத்தில் பரிகாரமும் இருக்கிறதே!!!

இப்படி கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்ட தேவரடியார்கள் அங்கேயே பகல் நேரத்தில் ஆடல், பாடல்களைக் கற்று இரவு நேரங்களில் விபச்சாரம் செய்வதுமாக இருந்திருக்கிறார்கள். பணம் மிகுந்த சில செல்வந்தர்கள் ஒரே பெண்ணை வைத்திருந்த கதைகளும் உண்டு. இந்தத் தொழிலில் வரும் வரும்படியில் ஏழ்மையில் உழலும் தங்கள் குடும்பத்தைக் காக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள எல்லம்மா தெய்வத்திற்கு இன்னமும் பெண் குழந்தைகள் தேவதாசிகளாக நேர்ந்துவிடப்படுகிறார்கள். ஏழ்மையான சூழ்நிலையில் இப்படி ஆக்கப்படும் குழந்தைகள் தங்கள் உடலை விற்று குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். ஏழு, எட்டு வயதிலேயே விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் இவர்கள் ஓரவிற்கு உடல் ஒத்துழைக்கும் வரை இத்தொழிலைச் செய்துவிட்டு 45வயதிற்கு மேல் கோவில் வாசலில் பிச்சை எடுக்கத் துவங்கிவிடுகிறார்கள். அரசால் சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்ட பழக்கமாக இருந்தாலும், கோவில் பூசாரிகள் இன்னமும் இச்சடங்குகளைச் செய்து பெண்களை தேவதாசிகளாக அனுமதிக்கிறார்கள்.

பெரும்பாலும் தேவதாசிகளாக தங்கள் குழந்தைகளை ஆக்கும் ஏழைப் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் விபச்சாரம்தான் செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தும், கடவுள்-மதம் எனக் காரணங்களைச் சொல்லி தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள். பல நேரங்களில் பச்சிளங்குழந்தைகள் கூட நேர்ந்துவிடப்படுகின்றன. இந்த குழந்தைகளை அங்கு ஏற்கனவே இருக்கும் ஜோகினிக்கள் (தாசிகள்) வளர்த்து, ஏழெட்டு வயதிலேயே படுக்கையறைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இந்திய தேவதாசி முறை குறித்து எழுதியிருக்கும் ஜோகன் ஷங்கர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இம்முறைக்கான மூலகாரணம் அக்காலத்திய புரோகித சமூகம் (பார்ப்பன சாதி) ஏனைய சமூகங்களை தனக்குக் கீழாக எப்போதும் வைத்திருக்க வேண்டுமென்பதால் அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும் வண்ணம் உருவாக்கியதே தேவதாசி முறை ஆகும் என்று குறிப்பிடுகிறார்கள். சாதி அடுக்கை காப்பாற்றும் அதே நேரம், காமவேட்கையையும் தீர்த்துக்கொள்ளும் முறையாகவே இது இருந்திருக்கிறது. கடவுளின் மனைவிகள் என நேர்ந்துவிடப்பட்டப் பெண்களை உயர்சாதி மனிதர்கள் மாறி மாறி புணர்ந்ததை கலாச்சார வளம் பொருந்தியதாய் பீற்றிக்கொள்ளும் ஒரு சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நகைமுரண்.

தேவதாசி முறைக்கு எதிராக பல சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், இன்னமும் இந்தியாவில் 2.5லட்சம் மேலான தேவதாசிகள் இருக்கிறார்கள் என இந்திய பெண்கள் ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். ஆந்திராவில் 16,625 தேவதாசிகளும், கர்நாடகவாவில் 22,941 தேவதாசிகளும், மஹராஷ்ட்ராவில் 2479 தேவதாசிகளும் உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை
தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ராஜராஜசோழனால் முழுவீச்சில் நிறுவனமயமாக்கப்பட்ட தேவதாசி முறை இன்று தமிழ்நாட்டில் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. இதில் பெரியார், முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரது பணி மிகவும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

இப்படி சாதியின் பேரால், கடவுளின் பேரால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பெண்களை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த ஒரு அசிங்கமான வழக்கத்தை பரதத்தில் பட்டம் பெற்ற சிலர் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். ஒருவேளை அந்த முறை எல்லாம் இன்னமும் வழக்கத்தில் இருந்திருந்தால் நாம் காஞ்சிகாமகோடி போன்றோரின் பிடியில் சிக்கியிருக்க வேண்டியதில்லையே என அவர்கள் உள்ளுக்குள் நினைத்தார்களோ என்னவோ!!

எல்லாவற்றுக்கும் மேலாக நம் ஊரில் மிகப்பெரிய கெட்டவார்த்தையாக கருதப்படுவனவற்றில் முக்கியமான ஒன்று "தேவடியா மகனே" என்பது. ஒருவேளை தேவரடியார்கள் நம் சமூகத்தில் மிகுந்த மரியாதையுடன், வளத்துடன் நடத்தப்பட்டிருந்தார்களேயானால் அவர்களின் பெயரில் எப்படி ஒரு கெட்டவார்த்தை உருவாகியிருக்க முடியும்? இன்று தேவதாசி முறையை போற்றிப்புகழக் கிளம்பியிருக்கும் மேட்டுக்குடி கூட்டத்தை நாம் "மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தேவடியா மகன்களே.. தேவடியா மகள்களே" எனக் குறிப்பிட்டால் பொறுத்துக் கொள்வார்களா?

விபச்சாரம் புனித விபச்சாரமாக சித்தரிக்கப்பட்டாலும் விபச்சாரம், விபச்சாரம் தானே! இல்லை அது புனிதம் தான் என்றால் அந்தத் தொழிலுக்கு வக்காலத்து வாங்கும் மேட்டுக்குடி கலை ஆர்வலர்கள் உடனடியாக அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தங்களை தேவதாசிகளாக பதிவுசெய்துகொண்டு எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்.

- டான் அசோக்
- அன்புச்செல்வன் முகநூல் பதிவு, 11.06.19

கட்டைவிரல் – அறிஞர் அண்ணா

 

கட்டைவிரல் – அறிஞர் அண்ணா

2023 சிறுகதை மே 1-15,2023

பார்த்திபனின் தொல்லை தாங்கமுடியவில்லை, துரோணாச்சாரி

யாரால். “கேவலம் ஒரு வேடன்! அவன் அறிந்திருக்கிறான். தாங்கள் எனக்காக மட்டும் என்று கற்றுக் கொடுத்த அபூர்வமான அஸ்திர வித்தையை, நம்பினேன் – மோசம் போனேன்’’ என்று கோபிக்கிறான். குரு, சீட சம்பந்தமே முறிந்துவிடக் கூடுமோ என்று சந்தேகிக்க வேண்டிய நிலைமை. “வா! போய் அந்த வேடனைக் கண்டு…’’ காலிலே வீழ்ந்து…’’ என்று கேலி பேசலானான் அர்ஜுனன். “ஏகலைவனிடம் இருக்கும் வித்தையைப் போக்கி விடுகிறேன், வா’’ என்று உறுதியுடன் கூறினார். இருவரும் சென்றனர்.

வேடன், நெடுந்தூரத்தில் இருந்தபடியே, துரோணரைக் கண்டுவிட்டான். அர்ஜுனன் பின் தங்கிவிட்டான். குரு மட்டும் வேகமாக முன்னால் சென்றார்_ ஏகலைவன் அவர் அடி தொழுதான்_ குரு மேலும் நடந்தார்_ அவன் பக்தியுடன் பின் தொடர்ந்தான். மவுனமாகச் சென்றார் துரோணர். ஏகலைவன், “குருதேவா! குருதேவா!” என்று அர்ச்சித்தபடி நடந்தான். அர்ஜுனன் கண்களுக்கு இரண்டு நிழல் உருவங்களே தெரிந்தன_ அவ்வளவு தொலைவு சென்றனர் இருவரும்.
மீண்டும் ஒருமுறை ஏகலைவன், துரோணரின் பாதத்தில் வீழ்ந்து எழுந்தான். மோன நிலையிலிருந்து மீண்டவர்போல, துரோணாச்சாரியார், அவனை ஏறிட்டுப் பார்த்தார். இருவருக்குள் உரையாடல் நடந்தது.

“குருதேவா! அடியேன் ஏகலைவன், நமஸ்கரிக்கிறேன்.’’

“எழுந்திரு அப்பா! என்னிடம் நீ, பாடம் கேட்டதில்லையே.’’

“அந்தப் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை. ஸ்வாமி! ஆனால், என் இருதயத்திலே தங்களையே குருதேவராகப் பிரதிஷ்டை செய்துகொண்டு நான் இந்த வில்வித்தை கற்று வந்தேன்.’’

“அபூர்வமான தேர்ச்சியும் அடைந்தி
ருக்கிறாய். அர்ஜுனன்கூட… ஆமாம்… சந்தோஷப்படுவான்…’’

“தங்கள் கிருபாகடாட்சம்’’

“ஏது, சொல்வித்தையிலும் தேர்ச்சி பெற்றவனாக இருக்கிறாய், திறமை தெரிகிறது. இனி உன் குணம் எப்படி என்று பரிட்சித்துப் பார்க்க வேண்டும்.’’

“நான் கிருதார்த்தனாகிறேன் குருதேவா.’’
என்னப்பா இது குரு, குரு, என்று ஓயாமல் சொல்கிறாய். ஒருநாள் கூட நான் உனக்குச் சிட்சை சொல்லிக் கொடுத்ததும் இல்லை – ஒரு ‘சல்லி’ கூட நீயும் குரு காணிக்கை செலுத்தினதில்லை.’’

“குருதேவா! காணிக்கை தரச் சித்தமாக இருக்கிறேன். தங்கள் தரிசனம் கிடைக்கட்டும் என்றே காத்துக் கிடந்தேன். ஏகலைவன் உமது ஏவலன்! என்ன கட்டளை பிறப்பித்தாலும்…’’

“தரச் சித்தமோ! என்ன தைரியமாகப் பேசுகிறாயப்பா! என்னிடம் பாடம் கேட்க வரும் அரசகுமாரர்கள் வெகு பேர் இப்படிக் கூறுவதுண்டு. அரசராகும்போது… நான் நான்தான்_ அவர்கள் ராஜாதான்.’’
அரசகுமாரர்களில் சிலர், நான் கேட்டதைக் கொடுத்திருக்கிறார்கள். சக்தி இருந்தது; தந்தனர். நாடு ஆள்பவர்களுக்குச் செல்வம், சேவடியில் கிடக்கும்; நீ பாபம் காட்டிலே உலவி…’’

“ஆமாம்! காட்டிலே உள்ள ஒரு வேடன்தான், ஆனால், என் குருபக்தி நாடாள்பவருக்கு உள்ளதைவிட மேலானது. அதிலே எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் ஸ்வாமி.’’
ஏகலைவா! உன் பக்தியைக் கண்டு மெச்சினேன்.
சுகமாக இரு. நான் வருகிறேன். எனக்கு என்ன தேவை இருக்கிறது?–_ உன்னைக் கேட்டுப் பெற.

“பாபி, நான், ஒரு காணிக்கையும் செலுத்தாத பதிதனாவதா! அய்யனே! என்னை ஆட்கொள்ள வேண்டும். கேவலம் வேடனால் என்ன தரமுடியும் என்று எண்ண வேண்டாம். நான், வேடனாயினும், வில்லும் அம்பும் பிடித்த வீரன்_ சொல் தவற மாட்டேன்_ நினைத்ததை முடிக்கவும் தவறேன் _ எதைத் தாங்கள் விரும்பினாலும் பெற்றுத் தருவேன்.’’

“உண்மைதான்! உன் வில்வித்தையின் பயனாக…’’

“அப்படியா! பாபம்! பிரபஞ்சம் தெரியாமல் பேசுகிறாய். நீயே, ‘முடியாது’ என்று கூறும்படியான, காணிக்கையைக் கேட்க முடியும் என்னால்.’’

“முடியாது_ என்ற சொல்லை வில்லேந்திய நான் கூறேன்.’’

“என்ன சொன்னாய்? ஏகலைவா! அஸ்திர வித்தை என்று எண்ணிவிடாதே! சத்யசோதனை. மகா கடினமானது. இதிலே தோற்றவர்கள் தொகையே அதிகம். அனைவரும், சொன்ன சொல்லின்படி நடந்துவிட முடியாது. வீணாக, அவசரப்பட்டு, வாக்கை விரயமாக்காதே, நான் வருகிறேன்.’’

“ஸ்வாமி! எனக்கு வாதிடத் தெரியவில்லை. அது முறையுமாகாது. ஆனால், நான் தாங்கள் கேட்கும் காணிக்கை, எத்தகையதாக இருப்பினும். தருவேன்; தவறேன்.’’

“பிடிவாதமே பேசுகிறாய் பித்தா! முடியாது. நீயே மிரள மிரள விழிக்கும்படியாகக் காணிக்கை கேட்க முடியும் என்னால்_ கேட்பது கஷ்டமா _ கொடுப்பது அல்லவா கஷ்டம்.’’

“கேளுங்கள் குருதேவா, கொடுக்கத் தவறினால், என்னிலும் கடையேன்…’’

“ஓஹோ, அப்படி என்ன கேட்டுவிடப் போகிறார், பொற்கட்டி, நவரத்னம், பொன்னாடை… இப்படி ஏதாவது கேட்பார், என்று எண்ணுகிறாய்!’’

“நான், தாங்கள் என்ன கேட்பீர்கள் என்பது பற்றியே சிந்திக்கவில்லை ஸ்வாமி! என் சிந்தனை எல்லாம், ஏகலைவனிடம், குருதேவர் காணிக்கை கேட்டார்; பெற்றார் என்று இருக்க வேண்டும், என்பதுதான்.’’

“கடைசி முறையாக உன்னை எச்சரிக்கிறேன். ஜ்வாலையைக் கிளப்பாதே, நீ, தாங்கமாட்டாய்.’’

“நான் அஞ்சேன் – சத்தியத்தின் வழி நடக்க.’’

“கேட்கிறேன் குரு காணிக்கை, குறை மதியால் குளறிக் கொட்டியவனே, கேள்! மிரளு, புலம்பு, அரண்டு ஓடு! வெட்கத்தால், துக்கத்தால் தாக்கப்பட்டு, காலில் விழுந்து, மன்னிப்புக்கேள்! குரு காணிக்கை தர முடியாத தூர்த்தன் என்று பெயர் பெறு.’’

“இன்னம், காணிக்கை என்னவென்று குறிப்பிடவில்லையே குருதேவா’’
குறிப்பிடவில்லையா! குறிப்பிடுகிறேன். செவியிலே சர்ப்பம் பாயும், கவனி ஏகலைவா! குரு காணிக்கையாக உன் வலது கை கட்டை விரலை அறுத்துக் கொடு…’’

“குருதேவா…’’

“என்ன செய்வேன். அந்தோ, எப்படி அதனைத் தருவேன், ஈரேழுபதினாறு லோகத்தையும் கூடத் தருவேன். கட்டை விரலை எப்படித் தர முடியும் ஸ்வாமி_ ஏன் வேட வீரனே! ஆரம்பி புலம்பலை!’’

“ஸ்வாமி, இதோ அரை விநாடியிலே வந்து விடுகிறேன்…’’

‘எடுக்கிறாயா ஓட்டம்… பேஷ் மகாவீரா…’’
(ஓடுகிறான், சொன்ன வண்ணம் திரும்பி ஓடி வருகிறான்_ கையில் கமண்டலத்துடன்)

“இதென்ன கமண்டலம்.’’

“தங்கள் பாதத்தை அபிஷேகிக்க.’’

“ஏன் அபிஷேகம் செய்த பிறகு அழுகுரலைத் துவக்கவா…’’
(கமண்டலம் நீர் கொண்டு துரோணரின் பாதத்தை அபிஷேகிக்கிறான், ஒரு வினாடியில் கட்டைவிரலை, அறுத்தெடுத்து, காலடியில் வைக்கிறான்.)

“இதோ காணிக்கை! குருதேவா என் வலது கர கட்டை விரல்! ஸ்வாமி! இரத்தக் கறை பட்டுவிட்டது பாதத்தில், கமண்டல நீரால், தங்கள் பாதத்தைச் சுத்தம் செய்துவிடுகிறேன்.’’

“ஆ! குருதேவா! ஏன் நெடுநேரமாக நின்று கொண்டிருந்ததால் களைப்போ? மயக்கமோ!… அய்யோ! குருதேவா! மெள்ள மெள்ள, அப்படியே சாய்ந்து கொள்ளுங்கள் – புல்தரைதான்… அடடா! மயக்க மேலிட்டு விட்டதே’’

(கமண்டல நீர்கொண்டு ஏகலைவன், துரோணாச்சாரியின் முகத்தில் தெளித்து மயக்கத்தைத் தெளியவைக்கிறான்)
குரு பக்தியின் மேன்மையை, ஏகலைவன் விளக்கிவிட்டான்- சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் என்பதை நிரூபித்துவிட்டான். அன்று முதல் இன்று வரை, ஏகலைவன், காட்டிய தியாக உணர்ச்சியை, பாராட்டிப் புகழாதார் இல்லை. அவனல்லவோ சீடன்? அதுவன்றோ குரு பக்தி! என்று வியந்து பேசுகிறார்கள். சரி, ஆனால், அந்த ரசிகர்கள்- போதகாசிரியர்கள் திவாதிகள் – அதே போது, அதாவது ஏகலைவனின் குருபக்தியைப் பாராட்டும்போது, துரோணாச்சாரியின் கடினசித்தம், கபட நோக்கம், கேவலமான போக்கு, அவரைத் தூண்டிய அர்ஜுனனின் அசூயைக் கணம், அவனுக்குக் கட்டுப்பட்டு, அவனைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற அவருடைய சபலபுத்தி, ஆகியவற்றைப் பற்றியும் கண்டிக்க வேண்டாமோ! சீடனின் சத்ய நெறியைப் பாராட்டியதுபோல, குரு கொண்ட கபட நோக்கத்தையும் கண்டிக்க வேண்டாமோ?

ஏகலைவன் கதை, சீடன் குருவிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்குச் சிலாக்கியமான பாடம் கற்பிப்பது, என்று மட்டுந்தானா! அன்று தொட்டு இன்று வரை, காட்ட உதவ வேண்டும். அந்த நாட்களில் அரசு குடும்பங்களுக்கு ஆசிரியர்களாக அமர்ந்தவர்களின் போக்குக்கு, ஓர் எடுத்துக்காட்டு இது, தங்களிடம் பாடம் கேட்பவர்களுள், யார் செல்வக்குடியினரோ, அவர்களுக்குத் திருப்தி ஏற்படும்படி நடந்துகொள்ளும் நயவஞ்சக குணம் கொண்டவர்கள், இந்தக் குருமார்கள் என்றும் இக்கதை காட்டவில்லையா!

எடுத்துக்காட்டினரா இந்தக் கருத்தை? காட்டுவாரா? காட்டிடும் நம்மையேனும், கயவன், கசடன், என்று கண்டிக்காமலிருப்பாரோ!

ஏகலைவன், கைக் கட்டைவிரலை இழந்தான்- ஒரு குற்றம் செய்யாமலே!
குருகாணிக்கையாக, அதனைக் கேட்டார் துரோணர்- அதுவும், ஏகலைவன் வில்வித்தையில் பெற்ற தேர்ச்சி, அர்ஜுனனுக்குப் பொறாமையை மூட்டிவிட்டது கண்டு, அர்ஜுனனைச் சந்தோஷப்படுத்த.
அரசகுமாரனின் மனம் களிப்படைய வேண்டும் என்பதற்காக அந்த ஆரிய குரு, வேடர்குல வீரனின் விரலை வெட்டித் தரச் செய்தார்.

இது ஏகலைவனின் குரு பக்தியை மட்டுமா- துரோணரின் கல்மனதைக் காட்டவில்லையா!
பன்னெடு நாட்கள் இப்பழங்கதை கொண்டு, குரு பக்தியின் மேன்மையைத்தான் பாடபோதகர்கள், விளக்கி வந்தனர்- இந்நாள் இத்தகு கதைகள், முன்னாளில் முனிவர் வேடமிட்டவர்கள், எவ்வளவு நேர்மையற்ற நெஞ்சிலிரக்கமற்ற காரியத்தையும் கூசாது செய்தனர் என்பதைக் காட்டவே, பயன்படுகின்றன.

இந்தப் புதிய பாடத்தை, மக்கள் பெறாமலிருக்க முடியாது – பெறும்போது, அவர்களுக்கு, மனதிலே, புயல் உண்டாகாமலிருக்காது! அந்தப் புயலைச் சுலபத்திலே அடக்கி விடவும் முடியாது.

ஏகலைவனைப் போல இன்று யாரும் இருக்கச் சம்மதிக்க மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, துரோணர் போலத் துணிந்து, காணிக்கை கேட்கமாட்டார்கள். அது மட்டுமல்ல, நாளாகவாக, இத்தகைய கதைகளை, நீதி போதிக்கும் சம்பவங்களாகக்கூட, பாடத் திட்டத்திலே, சேர்க்கமாட்டார்கள்.

இப்போது, சேர்க்கப்பட்டிருப்பினும், இதனைச் சொல்லித்தரும், ஆசிரியர் நன்கு அறிவார், மாணவர்கள், இத்தகைய கதை கேட்டு என்ன கருதுகின்றனர் என்பதை,ஒருநாள், இதே கதை மற்றோர் கருத்துக்குப் பயன்படும் விதமாகத் தீட்டப்பட்டுத்தானே தீரும்?

துரோணர் என்றோர் வில்வித்தை கற்பிக்கும் குரு இருந்தார். அவர் மிக மிகக் கல்மனம் படைத்தவர். அவருடைய அபாரமான வில்வித்தைத் திறனைக் கண்டு, வியந்த, ஏகலைவன் என்ற வேடனொருவன், அவரைத் தன் குருவாகப் பாவித்தான் – அவர்போல உருவம் அமைத்து வைத்துக் கொண்டு, வழிபட்டும் வந்தான். ஏகலைவன், சிறந்த வில்வித்தைக்காரனானான். இச்சேதி தெரிந்த, துரோணரின் சீடரில் அர்ஜுனன் என்பான், அருவருப்படைந்து, குருவைக் கண்டித்தான். குரு, அவனைச் சந்தோஷப்படுத்த எண்ணி, ஏகலைவனைச் சந்தித்து, சாகசமாகப் பேசி, அவனுடைய வலதுகைக் கட்டை விரலை, குரு காணிக்கையாகப் பெற்றார். அந்தக் காலத்தில், அவ்வளவு வஞ்சமும், கடின சித்தமும் கொண்ட குருமார்கள் இருந்தனர். அவர்கள் இதுபோல, பலப் பல வஞ்சகச் செயல்களால், ஏகலைவன் போன்ற பழங்குடி வீரர்களை அழித்தனர் – என்று கதை எழுதாமலா விடுவர்|

ஏகலைவன், துரோணாசாரியாரைக் குருவாகக் கருதிக் கொண்டதையே, அவன் குலத்தவர் கண்டித்தனர்.

“என்னதான் வில்வித்தைமீது ஆசை பிறந்தால் என்ன, கேவலம், அதற்காக நமது இனத்தின் மானத்தை இழந்துவிடுவதா? நாம், வேடர் குலம்; விலங்கினமும் பறவை இனமும், மனித குலத்தைவிட, அம்புக்குப் தப்பும் திறமையை அபாரமாகப் பெற்றவை. அவைகளையே நமது வித்தையால் சாகடிக்கிறோம் – பரம்பரை பரம்பரையாக வில்வித்தையில் தேர்ந்தவர்கள் நாம் _ சிட்டு முதல் சிங்கம் வரையில், நாம் நமது வில் வித்தையினால் மாய்த்திருக்கிறோம் – அப்படிப்பட்ட இனத்தில் பிறந்த நீ ஒரு ஆரியனிடம் வில்வித்தை கற்றுக்கொள்வதா! அதுவும் நேரிலே அல்லவாம்! உருவம் வைத்தாம்! என்ன காரியமடா செய்தாய் ஏகலைவா! நமது குலத் தொழில் இந்த வில்வித்தை; துரோணரின் குலத் தொழிலோ வெறும் புல்வித்தை. வேட குலத்து உதித்த நீ, எப்படி வெட்கமின்றி, அவரை “என் குரு’’ என்று கூறிக்கொள்கிறாய்!

எவ்வளவு கீர்த்தி நீ பெற்றாலும், உன் வில் வித்தையினால், நீ கண்டவர் வியக்கும் திறமை அடைந்தாலும் என்ன பயன்? ஓர் ஆரியனின் அருள்! அதனாலே வந்த திறமை என்றுதானே பேசுவர்-? வேடர் உலகு உன்னை மதிக்குமா! வேதியக் கூட்டம் உன்னைக் கவுரவிக்குமோ!

ஏகலைவா! உன் ஆற்றலால், புகழ் பெறும் நமது குலம் என்று நம்பினேன், நீ ஓர் ஆரியதாசன் என்ற அழியாத பழி சுமக்க முன்வந்தாய். ஏன் உனக்கிந்த மதி பிறந்தது? எம்மிலே, யாருமில்லையா. உனக்கு இந்த வில்வித்தையைக் கற்பிக்க?’’என்றுகூட, வேடர் தலைவன் ஒருவன் கூறினான். ஏகலைவன் அந்த நன்மொழியைக் கவனிக்கவேண்டும்.
கடைசியில், தன் கைக் கட்டை விரலை, இழந்து விட்டு, வீடு திரும்பியபோது, அந்தத் தலைவனைக் காண நேரிட்டது _ தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.

“ஏகலைவா! முதலிலேயே எச்சரித்தேன். கேட்கவில்லையே’’ என்று வேடர் தலைவன் விம்மும் குரலிற் கூறினான். வீரன்,

“விசாரப்படாதீர்! நான் இழந்தது, என் கைக் கட்டை விரல்! அவர் இழந்தது. கண்ணியத்தை! இதனை, உலகம், ஓர் நாள் உணரும்’’ என்று கூறினான்.

அயோத்திதாச பண்டிதர் – 20.5.1845-5.5.1914

 

அயோத்திதாச பண்டிதர் – 20.5.1845-5.5.1914

2023 பெட்டி செய்திகள் மே-16-31,2023

பேராசிரியர் சுப.வீ.

1845ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில், கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்தார் அயோத்திதாச பண்டிதர். சிறந்த ஆய்வு நுட்பங்கொண்ட மருத்துவர். தென்னநாட்டில் புத்தம் மறுமலர்ச்சியடையக் காரணமாய் அமைந்தவர். ஜாதி, மதம், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராய் மிகத் தீவிரமாகப் போராடியவர்.

ஆதிதிராவிடர்கள் தொடக்கத்தில் பவுத்தர்களே என்பதை வரலாற்றுத் தடயங்களோடு உறுதி செய்தவர். அயல்
நாடுகளிலிருந்து வந்தேறிய ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராய் உறுதியுடன் போராடியவர். சென்னை அடையாறு பகுதியில் ‘தியோசபிகல் சொசையிட்டி’யை 1884இல் நிறுவக் காரணமாக அமைந்தவர். தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்தைச் சென்னையில் நிறுவியவர். இச்சங்கம் பிற்காலத்தில் ‘தென்னிந்திய பவுத்த சங்கம்’’ என்ற பெயரில் செயல்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களிடையே மீண்டும் பவுத்தத்தைப் பரவச் செய்ய ‘தமிழன்’ என்ற இதழை நடத்தியவர்.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும், அறிவைத் திருடவும், தமிழ் இலக்கியங்களில் அவர்கள் செய்த செருகல்கள், தில்லுமுல்லுகள் எல்லாவற்றையும் சான்று காட்டி வெளிப்படுத்திய மாபெரும் பண்டிதர் இவர்.

‘தமிழன்’ வார இதழில் 1907 முதல் 1914 வரை ஏழாண்டுகள் அயோத்திதாசர் எழுதிய அரசியல் கட்டுரைகள் அவரது புலமையைப் புலப்படுத்தின. அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ‘சுதேசமித்திரன்’ ‘இந்தியா’ போன்ற தமிழ் இதழ்கள் வெளியிட்ட கட்டுரைகளுடன் அயோத்திதாசர் எழுதிய கட்டுரைகளை ஒப்பிட்டு நோக்கினால், அவரது கட்டுரைகள் நுட்பமும் திட்பமும் நிறைந்தவை என்பதை அறியலாம். அயோத்திதாச பண்டிதர் 5.5.1914 அன்று மரணம் அடைந்தார்.

– பொ. அறிவன்,
கழனிப்பாக்கம்

அயோத்திதாச பண்டிதர் -தந்தை பெரியார்,

 

அயோத்திதாச பண்டிதர்

2022 மே 16-31 2022

பிறந்த நாள்: 20.5.1845

“காலஞ்சென்ற அயோத்திதாஸ பண்டிதர் அவர்கள், அறிவு விளக்க நூல்களை நாங்கள் எப்படி குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றோமோ, அதுபோலவே குறைந்த விலையில் வழங்கி வந்தார். அயோத்திதாஸ பண்டிதருடன் அப்பாத்துரை அவர்கள் ஈடுபட்டுப் பணியாற்றி வந்திருக்கிறார்கள். இதன் காரணமாக எங்களுக்கு அவருடன் நெருங்கிய நேயம் உண்டாயிற்று.’’
– தந்தை பெரியார், (‘விடுதலை’ 15.5.1961)

அயோத்திதாச பண்டிதர் – மஞ்சை வசந்தன்

 

அயோத்திதாச பண்டிதர் – மஞ்சை வசந்தன்

2023 பெட்டி செய்திகள் மே 1-15,2023

1845 ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்த அயோத்திதாசர், தேர்ந்த சிறந்த ஆய்வுநுட்பங் கொண்ட மருத்துவர். தென்னகத்தில் புத்தம் மறுமலர்ச்சியடைய காரணமாய் அமைந்தவர். மனித விரோத ஜாதி, மதம், தீண்டாமை இவற்றிற்கு எதிராய் மிகத் தீவிரமாய்ப் போராடியவர். அவர் நடத்திய போர் அறிவு சார்ந்தது. தனது புலமையினால், ஆய்வு நுட்பத்தினால் உண்மைகளைக் கொண்டு வந்து, எதிரிகளின் சூழ்ச்சியை வீழ்த்தியவர்.

ஆதிதிராவிடர்கள் தொடக்கத்தில் பவுத்தர்களே என்பதை வரலாற்றுத் தடயங்களோடு உறுதி செய்தவர். அயல்நாடுகளிலிருந்து வந்தேறிய ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராய் உறுதியுடன் போராடியவர்.
அமெரிக்க மக்கள் உரிமைப் போராட்ட வீரர் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அவர்களின் நெருங்கிய நண்பர். தீண்டத் தகாதவர்களாய் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டவர். சென்னை அடையாறு பகுதியில் ‘தியோசபிகல் சொசையிட்டி’ யை 1884இல் நிறுவக் காரணமாய் அமைந்தவர்.

1894இல் கர்னல் ஆல்காட் அவர்களுடன் இலங்கை போன்ற பவுத்த நாடுகளுக்குச் சென்று பவுத்த தர்மக்
கொள்கைகளை விளக்கிப் பேருரையாற்றியவர். ‘தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்தைச் சென்னையில் நிறுவியவர். இந்தச் சங்கம்தான் பிற்காலத்தில் ‘தென்னிந்திய பவுத்த சங்கம்’ என்ற பெயரில் செயல்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களிடையே மீண்டும் பவுத்தத்தைப் பரவச் செய்ய, ‘தமிழன்’ என்ற இதழை நடத்தினார்.
ஆதிதிராவிடர்கள் பவுத்தர்கள்; அவர்களை இந்துக்களுடன் சேர்த்து ‘சென்செஸ்’ கணக்கெடுக்கக்கூடாது என ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையில் உள்ள நியாயத்தை அறிந்த ஆங்கில அரசு, 1910ஆம் ஆண்டு ‘சென்செஸ்’ முதல், ஆதிப் பழங்குடியினர் ஒரு ‘தனித் தேசிய இனம்’ என்று கணக்கிடப்பட்டது.

1954-இல் சென்னைக்கு வந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள், அயோத்திதாசரின் பவுத்த இலக்கியங்களைத் தேடிச் சேகரித்து, தம்முடன் கொண்டு சென்றார். அம்பேத்கரின் உள்ளத்தில் உயர்ந்த இடத்தை பிடித்தவர் அயோத்திதாசர் என்றால், அவர் பணி எத்தகையது என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். பவுத்தம் பற்றிய சிந்தனை அம்பேத்கர் உள்ளத்தில் வேரூன்றவும், தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பவுத்தம்தான் தகுந்த பாதுகாப்பிடம் என்பதை அவர் உணரவும் அயோத்திதாசரே காரணமாய் அமைந்தார். ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள் எங்கு பறிக்கப்படுகிறதோ, எங்கு அவர்கள் இழிவாக, அடிமைகளாக நடத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திய பெருமை இவரைச் சாரும். பின்னால் வந்த சமூகத் சீர்திருத்தத் தலைவர்களுக்கு இவர் முன்னோடியாகவும் அமைந்தார்.

ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெறுவதன் மூலமே தம்மை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதால், அவர்களின் கல்விக்காகப் பள்ளிகளைத் திறக்கவும், அங்கு பகலுணவு இலவசமாக அளிக்கவும் பின்னால் வந்தவர்கள் செய்த விரைவான நடவடிக்கைகளுக்கு விதையிட்டவர் இவரேயாவார்.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும், அறிவைத் திருடவும், தமிழ் இலக்-கியங்களில் அவர்கள் செய்த செருகல்கள், தில்லுமுல்லுகள் எல்லாவற்றையும் சான்று காட்டி வெளிப்படுத்திய மாபெரும் பண்டிதர் இவர்.எனவேதான் திரு.வி.க. அவர்கள், அயோத்திதாசரை, “நூல் பல கற்ற சால்பினன்’’ என்றும், “வல்லவர் போற்றும் கல்விமான்’’ என்றும், “இல்லறம் என்னும் நல்லறம் ஏற்று விருந்தினரை ஓம்பி இருந்தவன்’’ என்றும், “செந்தமிழ் பூண்ட அந்தணன்’’ என்றும், “பொறுமைக்கோர் உறைவிடம்’’ என்றும் பாராட்டினார்; சிறப்பித்
தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து இந்தச் சிறப்புகளைப் பெற எவ்வளவு கற்றிருக்க வேண்டும். எவ்வளவு எதிர்ப்புகளுக்கும், இடர்பாடு-களுக்கிடையேயும் கற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தால் நாம் வியப்படைய வேண்டியே வரும். உயர்குடியில் பிறந்த கல்வியாளர்களுக்கு இணையாகவும், ஆய்வுநுட்பத்தில் அறிவாற்றலில் அவர்களுக்கு மேலாகவும் விளங்கினார். தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றிருந்தார்.

மேலும்,
“ஆகமம் புராணம் இதிகாசம் மறைகோசங்கள்
அத்வைதம் வசிட்டாத்வைதம்
சமண முனிவர்களின் பஞ்சகாவியம் கலைஞானம்
ஆயுர்வேதம் தத்துவம்
யோகநிலை சாத்திரம் சித்தர்நூல் பக்தி நெறி
யுகமோடு பலது மாய்ந்து சிறந்தவர்..’’
என்று அவரைப் பற்றி சிறப்பித்துப் பாடினர்.

பாலி மொழியிலிருந்த திரிபிடகம், வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) இருந்த வேதங்கள் உபநிடதங்களையும், தமிழில் ஓலைச்சுவடிகளில் இருந்த தொல்காப்பியம், புறநானூறு, திருமந்திரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, நல்லாப்பிள்ளை பாரதம், சிவ வாக்கியம், தேவாரம், பெருந்திரட்டு, சிறு திரட்டு, பெருங் குறவஞ்சி, ஏரெழுபது போன்ற இலக்கியங்களையும், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், அறநெறிச்சாரம், நல்வழி, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நீதிவெண்பா, மூதுரை போன்ற அற நூல்களையும், பட்டினத்தார், பத்திரிகிரியார், தாயுமானவர், மச்சமுனி, இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய் சித்தர், கடுவெளி சித்தர் போன்ற துறவியாரின் பாடல்களையும், ஞானத்திரட்டு, ஞானபேதம், ஞானவாசிட்டம், பதஞ்சலியார் ஞானம், சொரூபசாரம், தருக்க கௌமுகி, சிவயோக சாரம் போன்ற சமய நூல்களையும், அரிச்சந்திர புராணம், வாதவூர் புராணம் போன்ற புராணங்களையும் தெளிவாகக் கற்றார். எட்வின் ஆர்னால்டு எழுதிய ‘ஆசியாவின் ஒளி’ என்ற நூலிலிருந்தும் மற்றைய மொழி நூல்களிலிருந்தும் அவர் மேற்கோள்களை எடுத்துக் காட்டி எழுதியது, பேசியது, அவருக்குள்ள படிப்பறிவைக் காட்டியது.

ஆதிக்கவாதிகளான மேல்ஜாதியினருடன் எதிர்த்து மோத இந்த அறிவு அவசியம் என்ற கட்டாயத்தில் எல்லா-வற்றையும், பயின்றார். காரணம் இவர் வன்முறைப் போரை விரும்பாமல், அறிவாயுதம் ஏந்தி எதிரியை வீழ்த்த முடிவு செய்தார்.

“நம்மை நெடுநாளாக ஏமாற்றி வருகிற பிராமணக் கொள்கை மிகத் தந்திரமானது. அதன் லட்சணமோ நம்மைக் கவரும் மந்திரத்தால் கட்டப்பட்டுள்ளது. அது இருண்ட இந்தியா என்னும் பெரிய மரமாகும். அம்மரத்திற்குக் கடவுள், மதம், வேதம், ஜாதி என்ற நான்கு கிளைகள் உண்டு. அக்கிளைகள் நடுவில் ‘இந்து’ என்னும் கூடு கட்டியுள்ளது.

அக்கூட்டில் மும்மூர்த்தி மதம் என்னும் ‘கல்’ முட்டை இட்டு’, அதை ஆரியப் பார்ப்பனர் என்ற கழுகு அடைகாத்துள்ளது. தன் கல் முட்டையைப் பொன்முட்டை என்று சொல்லி இந்திய மக்களின் மதியை மயக்கி வருதலைக் கண்ணிற் கண்டும், காதாற் கேட்டும், மனதில் உணர்ந்தும் கவலையற்றிருக்கிறோம். ஆராய்ச்சி என்னும் கல்லெறிந்து அந்தக் கழுகைக் துரத்தாமலும், சமதர்மம் என்னும் வாள்கொண்டு மரத்தை வெட்டிக் கூட்டை வீழ்த்தாமலும் பவுத்தம் என்னும் சஞ்சீவியை அக் கல் முட்டைமீது செலுத்தி, முட்டையை உடைத்து உண்மையை அறியாமல் அமைதியாய் இருக்கிறோம்’’ என்று ஆய்வு நுட்பத்தோடும், அறிவுநுட்பத்தோடும், இலக்கிய நயத்தோடும், எளிய எடுத்துக் காட்டோடும் பேசினார்.

– (ஆதாரம்: அயோத்திதாச பண்டிதர் சிந்தனைகள், தொகுதி – 1

தமிழர் வேதம் வாழ்வியல் சாரம்! -எதிர்வினை (121)

 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (121) – தமிழர் வேதம் வாழ்வியல் சாரம்!

2023 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை மே 1-15,2023

– நேயன்

 அரவிந்தன் நீலகண்டன் முன்வைக்கின்ற கருத்துக்கள் எதுவும் வரலாற்று ரீதியிலான உண்மைகளைக் கொண்டவையல்ல. தமிழரின் உறுப்பு வழிபாடு (சிவ வழிபாடு) ஆரியர்களின் ருத்திர வழிபாடாக மாற்றப்பட்டது.

தமிழர்களின் வேள்விமுறை ஆரியர்களின் யக்ஞமாக மாற்றப்பட்டது. வேள்வி என்பது தமிழர்களைப் பொருத்தவரை விருந்தோம்பல்.

வேள்வி என்பது வேள்+வி என்று பிரியும். வேட்டல் விரும்பல் என்பது அதன் பொருள். விருப்பத்தோடு பிறரை உண்பிப்பது தமிழர்களின் வேள்வி.

“தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்’’ என்ற தமிழ்ப்பாடலும்,

“இணைத்துணைத் தென்பதொன்றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்’’ (குறள்: 87)

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 81)
என்ற குறள்களும் வேள்வி என்பது விருந்தோம்பலைக் குறிப்பதை ஆழமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, தமிழர் வேள்வி என்பது விருந்து கொடுத்தல், விருந்து அளித்தல் என்பதேயாகும். தமிழரின் இந்தப் பண்பாட்டைப் பின்பற்றி, அதை மாற்றி ஆரியர்களின் வழிபடு தெய்வங்
களுக்கு விருந்து படைப்பதாய் மாற்றினர்.

தமிழர்கள் தன்னையொத்த மனிதர்களுக்கு விருந்து அளிப்பதை வேள்வி என்றனர். வீட்டிற்கு வந்தவர்களை அமரச் செய்து, அவர்கள் உண்ண உணவுகளை அளித்தனர்.

ஆனால், ஆரியர்கள் வருணன், இந்திரன், வாயு போன்ற தங்கள் தெய்வங்களுக்-கு உணவு படைப்பதை வேள்வி (யக்ஞம்) என்றனர். தமிழர்கள் உணவை மனிதர்கள் வயிராற உண்ண அளித்தனர். ஆனால், ஆரியர்கள், உணவை நெருப்பில் போட்டு, புகையாக்கி அதன் வழி கடவுளை அவ்வுணவுச் சென்று சேர்வதாய் யக்ஞம் செய்தனர்.
இதுதான் தமிழர் வேள்விக்கும் ஆரிய யக்ஞத்திற்கும் உள்ள வேறுபாடு. ஆரியர்களுக்-கென்ற சொந்தமானது எதுவும் இல்லை. எல்லாம் தமிழரிடம் திருடி, திரித்து மாற்றியவைதான். வேதங்களும் அப்படித்தான்.

வருணப்பிரிவுகள் கூட தமிழரிடம் இருந்த தொழில்சார் பகுப்பை திரித்தே வருணமாக்கினர்.
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்குப் பிரிவுகள் தொல் தமிழரிடையே இருந்தன. ஆனால் இவை ஜாதிப்பிரிவுகள் அல்ல. காரணம், இதில் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருடன் மணஉறவு கொண்டனர். வேளாளர் பெண்களை அரசர்கள் மணந்துள்ளனர். அதேபோல் மற்ற பிரிவினரும் இன்னொரு பிரிவினருடன் மணவுறவு கொண்டனர்.

இங்கு அந்தணர் என்போர், மற்ற மூன்று பிரிவிலும் உள்ளவர்கள் பொதுத் தொண்டாற்ற வீட்டைவிட்டுப் புறப்பட்டு ஊர் ஊராய்ச் சென்று மக்கள் தொண்டு செய்தனர்.

இந்த அந்தணப்பிரிவைத்தான் ஆரியர்கள் பிராமணர் என்று மாற்றினர். மக்கள் தொண்டை மாற்றி கடவுள் தொண்டு பிராமணர்க்குரியது என்று ஆக்கினர்.

அரசப்பிரிவை ஷத்திரியர் என்றும், வணிகப் பிரிவை வைசியர் என்றும், வேளாளர்ப் பிரிவை சூத்திரப் பிரிவு என்றும் ஆக்கினர்: இதற்கு பிரம்மன் முகத்திலிருந்து பிராமணரும், தோளிலிருந்து ஷத்திரியரும், இடுப்பிலிருந்து வைசியரும், காலிலிருந்து சூத்திரரும் பிறந்ததாய் கதைப்புனைந்து மக்களை ஏமாற்றி ஏற்கச் செய்தனர். செய்யும் தொழிலால் வந்த பிரிவை பிறப்பால் – கடவுளால் வந்த வருணப்பிரிவாக மாற்றினர். அந்தணர் என்ற தமிழ்ச் சான்றோர், தமிழ்த்தொண்டர் பிரிவை பிராமணர் என்ற பிரிவாகத் திரித்தனர்.

தமிழர்களின் மழைத்திருநாளை, பொங்கல் திருநாளை, போகியென்றும் சங்கராந்தி என்றும் திரித்தனர். அரசமரத்தடி புத்தர் உருவத்தை யானைத் தலையைப் பொருத்தி வினாயகராக்கினர். புலால் உண்ணாமை என்ற சமண, புத்தக் கோட்பாடுகளை தமதாக்கிக்கொண்டனர். புத்தமும் சமணமும் உருவாக்கப்படுவதற்கு முன்புவரை பசுமாட்டை வெட்டி, நெய் சொட்டச் சொட்ட சாப்பிட்ட ஆரியர்கள், புத்தம் செல்வாக்குப் பெறுவதைத் தடுக்க, புலால் உண்ணாமையைத் தங்கள் கொள்கையாக்கிக் கொண்டனர்.

இப்படி மற்றவர்களுடையதை மாற்றியும், திரித்தும் தங்களுடையதாக்கிக்கொண்ட ஆரியர்கள், தமிழர் வேதங்களை மறைத்து, ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற வேதங்களை காலப்போக்கில் உருவாக்கிக்கொண்டனர். அப்படி உருவாக்கப்பட்ட எதுவும் முதலில் எழுத்து வடிவில் இல்லை. எல்லாம் செவி வழியாக வந்தவையே.

ஆரிய வேதங்களை முழுமையும் படித்துப் பார்த்தால், இந்திரன், வருணன், வாயு போன்றவற்றிற்கு நெருப்பில் பொருள்களைப் போட்டு எரித்து, படையல் இட்டு, தங்களுக்கு நல்லதும், தங்கள் எதிரிகளுக்கு கெட்டதும் செய்ய வேண்டுவதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மைத் தெரியும்.

இப்படிப்பட்ட ஒன்றுக்கும் உதவாத வேதங்களைத்தான் உயர்ந்தவையென்றும், தமிழர் வாழ்விற்கே ஆதாரம் என்றும், தமிழ் இலக்கியங்களோடே அவையும் சேர்ந்தே இருந்தன என்றும் இந்த அண்டப்புளுகர் அரவிந்தன் நீலகண்டன் கூறுகிறார்.

கா.சு. பிள்ளையின் கருத்து தப்பு என்றும், அதை மறுத்து நூல்கள் வந்துள்ளன என்றும் கூறும் இந்த ஆள், அகழ்வாராய்ச்சி, மரபணு ஆராய்ச்சிகள் இனக் கோட்பாட்டை ஆரிய படையெடுப்பு என்பதை நிராகரிக்கின்றது என்று ஓர் அயோக்கியத்தனமான, உண்மைக்கு எதிரான கருத்தையும் கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி எழுதியுள்ளார்.

அகழ்வாராய்ச்சிகளும், அண்மையில் நடந்த மரபணு ஆராய்ச்சிகளும், தெற்காசியப் பகுதி முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்றும்; ஆரியர்கள் வந்தேறிகள் என்றும் உறுதி செய்துள்ளன. ஆனால், இந்த உண்மைகளை மறைத்து ஆரிய வேதமும், தமிழர் வாழ்வும் பின்னிப்பிணைந்தவை என்கிறார். இதற்கு தமிழ் இலக்கியங்களைக் காட்டுகிறார்.

தமிழ் இலக்கியங்கள், குறிப்பாக சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் எல்லாம் காலத்தால் மிகவும் பிற்பட்டவை. ஆரியர் பெருமளவில் ஊடுருவி, தமிழர் வாழ்வில், பழக்கவழக்கங்களில் தங்கள் கலாச்சாரத்தைக் கலந்து, மூட நம்பிக்கைகளைத் திணித்து, புராண நம்பிக்கைகளை மூளையில் ஏற்றியபின் எழுதப்பட்டவை. அதனால் ஆரிய வேதங்களின் தாக்கமும், ஆரிய புராணங்களின் தாக்கமும் தமிழர் இலக்கியங்களில், தமிழர் நம்பிக்கையில் கலந்துவிட்டன என்பதே உண்மை.

ஆனால், தொல்காப்பியத்திற்கு முற்பட்ட காலத்தில் தமிழர் வாழ்வில் எந்த மூடநம்பிக்கையும், புராண, கடவுள் நம்பிக்கையும், வழிபாடுகளும் அறவே இல்லை. இவை அனைத்தும் ஆரியரால் தமிழ்மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டவை.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களை சூத்திரர்கள் படிக்கக்கூடாது. என்றும், அப்படி மீறி படித்தால் நாக்கைத் துண்டிக்கவேண்டும் என்று கடுமையான நடைமுறை இருந்த நிலையில் இந்த வேதங்கள் எப்படித் தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைய முடியும்? சமய அறிஞர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பலரும் சூத்திரர்கள். அவர்கள் வேதம் கற்க முடியாது. அப்படியிருக்க, மேற்கண்ட ஆரிய வேதங்களை அவர்கள் எப்படித் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டிருக்க முடியும்? எனவே, தமிழ் அறிஞர்கள், சமயப்பெரியவர்கள் குறிப்பிடும் வேதம் ஆரிய வேதங்கள் அல்ல என்பது உறுதி!

வேதம் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் ஆரிய மொழியில் இல்லை. தமிழில்தான் உள்ளது. வேது + அம். வேது என்றால் சாரம். வாழ்வியல் சாரங்களைப் பிழிந்து தருபவை வேதங்கள். அப்படிப் பார்ப்பின் திருக்குறள் தமிழர் வேதம். திருக்குறளுக்கு முன் நிறைய தமிழ் வேதங்கள் இருந்தன. இவை கடல் கோளாலும் அழிந்தன. ஆரியர்களும் அழிக்கப்பட்டன. தப்பியவைதான் தொல்காப்பியமும் திருக்குறளும்.

ஊர்ப்புறங்களில் வேது பிடித்தல் என்று கூறுவர். அதாவது, தண்ணீரில் மூலிகைகளைப் போட்டு, வெளிவரும் ஆவியை முகத்தில் பிடிப்பர். அதற்கு வேது பிடித்தல் என்று பெயர். மூலிகையின் சாரம் ஆவியாக வருவதால் அது வேது எனப்பட்டது.

ஆரியரின் நான்கு வேதங்களில் எந்த வாழ்வியல் சாரமும் இல்லை. அவை அனைத்தும் வாழ்வியல் சாரம் அல்ல; வெறுப்பின், வக்கிரங்களின் கோரம்! வேதம் என்ற சொல்லே தமிழிலிருந்து ஆரியர்களால் திருடப்பட்டது. வேதத்திற்கு வேர்ச்சொல் ஆரியத்தில் இல்லை. எனவே, ஆரியர்களுடைய நான்கையும் வேதம் என்பதே தப்பு. அவற்றிற்கு அவர்கள் வேறு பெயர் வைத்துக்கொள்ள வேண்டும். ஆரிய கலாச்சாரங்களைத் தமிழர் பண்பாட்டோடு அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் கலக்க முற்படுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; எதிர்க்கத்தக்கது.

(தொடரும்

தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களும்… - எதிர்வினை (120)

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (120) – தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களும்…

2023 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ஏப்ரல் 16-30,2023

 நேயன்

பழமையான தமிழ் இலக்கியங்கள், வேதங்களைப் போற்றுகின்றன; வேதம், பண்டைய தமிழர் வாழ்க்கையில் ஆதார அச்சாக இருந்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். 19ஆம் நூற்றாண்டில், தமிழர்களுக்குத் தனி அடையாளம் தேவைப்பட்டது. வெள்ளைக்காரர்கள் புகுத்திய ஆரிய-_திராவிட இனவாதத்தைச் சில தமிழறிஞர்களும் ஆராயாமல் ஏற்றார்கள். இப்பெரியோரின் தமிழ்ப்பற்று குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. ஆனால், இவர்களிடம் சமஸ்கிருத வெறுப்புணர்ச்சி உருவாகியிருந்தது. அது, ஆரியர்களின் மொழி. இங்குள்ள பிராமணர்கள், வெளியில் இருந்து வந்தவர்கள்.

முதன்முதலாக, திராவிடமொழிக் குடும்பம் தனித்தன்மை கொண்டது என்பதைச்சொன்னவர் எல்லிஸ்தான். அதை அவர் கண்டுபிடிக்கத் துணை நின்ற சக ஆராய்ச்சியாளர்களே பிராமணர்கள்தான். ஆனால், இந்தியப் பண்பாடு குறித்த துவேஷம் எதுவும் எல்லிஸிடம் இல்லை. பின்னாள்களில், இந்த மொழியியல் கருத்தாக்கத்தை வளர்த்தெடுத்த கால்டுவெல், அதனை இனவாதக் கோட்பாடாக உருமாற்றினார்.அரசியல் தளத்திலும் கொண்டு வந்தனர். அது
தான், திராவிட இயக்கம். ஜாதி மோதல்கள், சமூகப் பிளவுகள் எந்த அளவு ஆழமாகின்றனவோ, அந்த
அளவு தனக்கு நல்லது என்பதை உணர்ந்திருந்த பிரிட்டிஷ் அரசாங்கமும் இதனை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்தது. எனவே, ஒரு வலுவான தமிழ் அறிஞர்கள் கூட்டம், இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதில் ஆச்சரியம் இல்லை. அதேபோல், பிராமணர்களிலும் தங்களை ‘ஆரிய இனத்தவர்’ என்று சொல்லிக்கொண்டவர்கள் கணிசமாக இருந்தார்கள். இதர தமிழக மக்களைக் காட்டிலும், பண்பாட்டிலும் இனரீதியாகவும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதிலும், ஏதோ ஒரு விதத்தில் வெள்ளைக்காரனுடன் இன உறவு உடையவர்கள் என்று சொல்லிக்கொள்வதிலும் அவர்களுக்குப் பெருமை இருந்தது.

சைவத் திருமறைகளும் சரி, பழைமையான தமிழ் இலக்கியங்களும் சரி, நால் வேதங்களைப் புகழ்கின்றன. உதாரணமாக, திருமூலர் தனது திருமந்திரத்தில், ‘வேதத்தை விட்ட அறமில்லை, வேதத்தின் ஓதத் தகும் அறமெல்லாம் உள‘ என்கிறார். சைவ சமயத்தின் மூவர் முதலிகளாக அறியப்பட்ட அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரும், பன்னிரண்டு ஆழ்வார்களும் வேதத்தைப் போற்றிப் புகழ்கின்றனர். எந்தக் காலகட்டத்தைச் சார்ந்து நமக்குத் தொன்மையான தமிழ் இலக்கியங்கள் கிடைத்துள்ளனவோ, அந்தக் காலகட்டத்திலேயே தமிழர் பண்பாட்டில், ஒருங்கிணைந்த இன்றியமையாத அங்கமாக வேதம் விளங்குகிறது.

இவையெல்லாம், பிராமணக் காழ்ப்பால் வேதத்தைத் தவிர்த்த தனித்தமிழ்ச் சமயம் ஒன்று தமிழர்களுக்கு இருப்பதாகக் காட்ட எண்ணிய தமிழ் ஆர்வலர்களுக்குப் பிரச்சனையாக இருந்தது. எனவே, அவர்கள் இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்டனர். இங்கு வேதங்கள் எனச் சொல்லப்படுபவை ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்கள் அல்ல. அவை, தமிழருக்கென உருவான தனிப்பெரும் நால் வேதங்கள், கடல்கோளால் அல்லது ஆரிய சூழ்ச்சியால் அவை அழிந்தபிறகு, ஆரியர் தமது நால் வேதங்களை சூழ்ச்சியால் புகுத்திவிட்டனர். சைவப் பெருமான்களும், தொல் தமிழ் இலக்கியங்களும் நான்கு வேதங்கள் எனச் சொல்வது அவற்றையே அன்றி வடமொழி வேதங்களை அல்ல.

தமிழர்களின் வேதங்கள் வேறு; ஆரியர்களின் வேதங்கள் வேறு. தமிழர்களின் தொன்மையான நான்கு வேதங்களை கடல்கோள் அழித்து விட்டது. இதையே, ஆரியர்கள் கண்டு தங்களிடமும் நான்கு வேதங்கள் இருப்பதாக உருவாக்கிக் கொண்டனர். இதுதான், தமிழ்ப் புத்தெழுச்சியாளர்கள் கூறியது. இதற்கு என்ன ஆதாரம்? அன்று, இன்றளவுக்கு புவியியல் துறை வளரவில்லை. கடல் கொண்ட ஒரு பெரிய நிலப்பரப்பு குறித்த அய்தீகம், தியஸோபிக்கல் சொஸைட்டி என்கிற பிரம்மஞான சபையினரால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நம்பிக்கை, தமிழ் இனவாதக் கோட்பாடுகளுடன் கலந்து, தமிழர் வாழ்ந்த லெமூரியாவாக, குமரிக் கண்டமாக உருவெடுத்தது. கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் வழ்ந்த நம் தொல்_தமிழ் மூதாதையர் உருவாக்கியதுதான் நான்மறைகள். அவற்றை நகலெடுத்து, பார்ப்பனர்கள் / ஆரியர்கள் உருவாக்கியவைதான் இன்றைய வேதங்கள்.

முக்கியமான தமிழ் அறிஞராகக் கருதப்படும் கா. சுப்பிரமணிய பிள்ளை என்கிற கா.சு. பிள்ளை, ‘திருநான்மறை விளக்கம்’ எனும் கட்டுரையை, 1920களில் வெளியிட்டார். அந்தக் கட்டுரையில், மேற்கூறிய கருத்துகளைப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் மற்றும் சைவத் திருமுறைகளையும், திருக்குறளையும் ஆதாரமாகக் காட்டி நிறுவ முற்பட்டார்.

அன்றைய உண்மையான வெறுப்புணர்ச்சி இல்லாத தமிழ் அறிஞர்கள், இந்த ‘தனித்தமிழ் மறை’ எனும் போலி ஆராய்ச்சிக்குத் தங்கள் மறுப்பை, பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சைவ வைணவ இலக்கியங்கள் அடிப்படையாகவே அளித்து வந்தனர். அவர்களுக்கு அன்று ஆரியப் படையெடுப்பு – திராவிட இனவாதக் கோட்பாடுகளை எதிர்க்க புற ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், இன்று நாம் அகழ்வாராய்ச்சி மற்றும் மரபணு சார்ந்து இந்த ஆரியப் படையெடுப்பு மற்றும் இனக்கோட்பாடுகளை நிராகரிக்க இயலும்.

தொல்காப்பியம், ‘நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான்’ முன்னர் அரங்கேறியது என்பது தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர், ‘இவை தைத்திரியமும், பவுடிகமும், தலவகாரமும் சாம வேதமும்’ எனக் கூறுகின்றார். இவை ரிக், யஜுர், சாம, அதர்வம் என்பது பொருந்தாது என்கிறார். எனவே, நச்சினார்க்கினியர் கூறும் இவை நான்கும் எவை என்பதை நாம் காணலாம்.

ஆக, பவுடியம், தைத்திரீயம், தலவகாரம் என்பவை, தெளிவாகத் தரும சூத்திரங்களைக் குறிப்பவை ஆகும். அவை ரிக், யஜுர், சாம, அதர்வ சேவதங்களைக் குறிப்பவை அல்ல. மாறாக, அவற்றை அடியொற்றியதாகக் கூறி எழுந்த வாழ்வியல் சட்ட நூல்களான தரும சாத்திரங்களைக் குறிப்பவை ஆகும். இந்த நூல்கள், மனுவுக்கு முந்தையவையும் ஆகும். தொல்காப்பியம், வாழ்வியலை வரையறுக்கும் இலக்கண நூல் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது தெளிவாக விளங்கும்.

தென் திருப்பேரை (தூத்துக்குடி மாவட்டம்) கிராமத்தின் அந்தணர்கள் அனைவரும், சாம சாகையைச் சேர்ந்தவரே. திராவிடத்தின் தனித்தன்மையாகிய ‘ழ’காரம், இந்தச் சாமசாகை ஓதுதலில் (பாடுதலில்) காணப்படுகிறது.
ஆக, தனித்தமிழ் வேதம் என்கிற போலிப் பெருமைக்கு அப்பால், வேதம் வளர்த்த தமிழகம் என்கிற உண்மைப் பெருமையே நமக்கு இன்னும் சிறப்பளிக்கிறது. என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.

(தொடரும்)

சிவன் வேறு; – ருத்திரன் வேறு! -எதிர்வினை (119)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (119) சிவன் வேறு; – ருத்திரன் வேறு!

2023 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ஏப்ரல் 1-15,2023

நேயன்

வேதத்தில் குறிப்பிடப்படும் ருத்திரன் மனித இனத்தவன் என்பதை வேதமே உறுதி செய்கிறது.
1:64 முழுவதும் மருத்துக்களை நோக்கிப் பாடப்படும் பாடல்கள் வருகின்றன. அதில்வரும் 10ஆவது பாடல்,
‘‘மனிதர்களின் தலைவர்களுமான மருத்துக்கள்’’ என்று குறிப்பிடப்படுகிறது. ஆக மருத்துக்கள் மனிதர்களின் தலைவர்கள் என்பது உறுதியாகிறது.

ரிக்வேதம் 2ஆம் மண்டலம் 33 ஆவது அத்தியாயம் முதல் பாடல் ருத்திரனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘‘மருத்துக்களின் தந்தையே!’’ என்று அழைக்கிறது.

அப்படியென்றால் என்ன பொருள்? மருத்துக்கள் மனிதர்களின் தலைவர்கள். அந்த மருத்துக்களின் தந்தை ருத்திரன் என்றால், ருத்திரன் மனிதன் என்பது உறுதியாகிறது. அப்படியிருக்கும் ருத்திரனைக் கடவுள் என்று காட்ட முற்படுவது தப்பான வாதம்.
‘‘சிவன் வேறு; ருத்திரன் வேறு. சிவன் திராவிடக் கடவுள்; ருத்திரன் ஆரியக்கடவுள். இவை இரண்டும் கலந்துவிட்டன என்று சொல்வோர் உண்டு. இது அபத்தமான கருத்து. ருத்திரன் ஆதித்தொன்ம வேர்களைக் கொண்ட ஒரு வடிவம். அதுவே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெரும்

சிவதெய்வமாக விளங்குகிறது’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.

இவர் கூறுவது முற்றிலும் தப்பு என்பதை மேற்கண்ட ரிக் வேதப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. ருத்திரன் மனிதர்களின் தலைவன், சிறந்த வீரன் என்ற அளவில்தான் ரிக் வேதம் கூறுகிறது. ஆனால், சிவ வழிபாடு என்பது நன்றியின்பாற்பட்ட வழிபாடாகத் தொடங்கி வளர்ந்தது.
மேலும், ரிக் வேதம் 8ஆவது மண்டலம் _ அத்தியாயம் 15ஆவது சுலோகம்,

‘‘பசு ருத்திரர்களின் அன்னையாயும், வசுக்களின் புதல்வியாயும், ஆதித்தியர்களின் சகோதரியாயும், அமிருதத்தின் நாபியாயும் இருக்கிறான்’’ என்கிறது.

இங்கு ருத்திரர்கள் என்று பன்மையில் சுட்டப்படுகிறது. எனவே, ருத்திரர்கள் ஒரு இனக்குழு என்பது உறுதியாகிறது. மனிதர்களுள் ஒரு கூட்டம்.
ஆனால், சிவ வழிபாடு என்பது வேறுபட்டது. தமிழர்களிடமிருந்த நன்றியின் பாற்பட்ட வழிபாடுகளில் ஆ-ண்-_பெண் உறுப்புகளைப் பொருத்தி வழிபாடு செய்வதும் ஒன்று. தங்களுக்குப் பயன்படுவனவற்றை வணங்குவது மட்டுமே தமிழரிடம் இருந்தது. மாறாக எந்தக் கடவுள் வழிபாடும் தென்மைத் தமிழர்களிடமில்லை.

நிலத் தலைவி வழிபாடு, நிலத் தலைவன் வழிபாடு, வீரர் வழிபாடு, பத்தினிப் பெண்டிர் வழிபாடு, குலப் பெரியோர் வழிபாடு வரிசையில் ஆண்-பெண் உறுப்பு வழிபாடும் செய்யப்பட்டது. இவையனைத்தும் பயன் தருவனவற்றை வணங்குதல் என்ற வழக்கத்தில் வந்தவை.
அந்த அடிப்படையில் வந்ததுதான் பொங்கல் விழாவும், உழவுக்கு உறுதுணையாய் இருக்கும் மழை, சூரியன், மாடு, பணியாளர்களுக்கு நன்றி சொல்வதே பொங்கல் விழா.

ஆண்-பெண் உறுப்பு இணையும் நிலையில்தான் இன்பமும் கிடைக்கும், இனமும் பெருகும். இந்த இரண்டு முதன்மைப் பயன்பாடு இதிலிருப்பதால் ஆண்-பெண் உறுப்புகளை இணைத்து வழிபட்டனர் தமிழர்கள். தமிழர்கள் உலகின் பல பகுதிகளிலும் பரவி வாழ்ந்தமையால், அவர்கள் வழிபட்ட இந்த ஆண்-பெண் உறுப்பு பொருந்திய நிலையில் உள்ள உருவங்கள், அப்பகுதிகளில் எல்லாம் கிடைத்துள்ளன.
இவ்வழிபாட்டிற்கும் ஆரியர்களின் வழிபாட்டிற்கும் எத்தொடர்பும் இல்லை. தமிழர்களுடைய தொன்மங்களைத் திரித்தும், மோசடி செய்தும், திருடியும் தங்களுடையதாக ஆக்கிக்கொண்டுள்ளவை பலப்பல.

போதி மரத்தடியில் வணங்கப்பட்ட (அரச மரத்தடியில்) புத்தர் சிலைகளை, தலையை மாற்றி, யானைத் தலையாக்கி வினாயகராக்கி, அரசமரத்தடி வினாயகர் ஆக்கியது போல, தமிழர்களுடைய பலவற்றையும் மாற்றி தங்களுடையதாக்கினர்.
அவர்கள் பிற்காலத்தில் உருவாக்கிய சமஸ்கிருதமே தமிழிலிருந்து உருவாக்கப்பட்ட
தேயாகும். ஆரியர்களுக்கென்று உரிமையானவை எதுவும் இல்லை  அவர்கள் வாழும் மண் உட்பட.

ஆண்-பெண் உறுப்புகள் வழிபாடு, உருவங்கள் தமிழர்
கள் வாழ்ந்த சிந்து சமவெளிப்-பகுதியிலும் கிடைத்துள்ளன.
ஆண்-பெண் உறுப்புகள் பொருத்தி வழிபடப்பட்ட இந்த உருவமே சிவலிங்கம் என்று பின்னாளில் ஆக்கப்பட்டது.
சிவணிய என்ற சொல்லே சிவன் என்று ஆனது. சிவணிய என்றால் பொருத்தப்பட்டது என்று பொருள். ஆண்_பெண் உறுப்பு பொருத்தப்பட்ட வடிவம். ஆகையால் அது சிவணிய வழிபாடு என்று அழைக்கப்பட்டு அதுவே சிவலிங்கம் ஆனது. லிங்கம் என்பது ஆண் உறுப்பு. பெண்ணுறுப்புக்கு முதன்மை அளிக்கப்படாமல், ஆண் உறுப்புக்கு முதன்மையளித்து லிங்கம் எனப்படுகிறது. தொல்காப்பியம் பொருளதிகாரம்,

‘‘தானே சேறலுந் தன்னொடு சிவணி
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே’’ என்கிறது.
இதில் ‘சிவணி’ என்றால் சேர்ந்து, கூடி, பொருந்தி என்று பொருள்.
அதேபோல் தொல்காப்பியம், பொருளதிகாரம்,

‘‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமை யானே’’ என்கிறது.
இங்கு சிவணிய என்ற சொல் பொருந்திய என்ற பொருளில் வருகிறது.
எனவே, சிவண் என்றால் பொருந்திய என்ற பொருள். அதன் அடிப்படையிலேதான் ஆண்-பெண் பொருத்தப்பட்ட உருவம் சிவண் எனப்பட்டது. அதுவே பின்னாளில் சிவன் ஆனது.

கன்னன் என்றால் கருப்பன் என்று பொருள். வடமொழியில் கிருஷ்ணன் என்று வரும். கன்னங்கரேல் என்ற சொல் வழக்கை இங்கு ஒப்பு நோக்கவேண்டும். கன்னன் என்பதே கண்ணன் என்று ஆனது போல, ‘சிவண்’ என்பது ‘சிவன்’ என்று ஆனது.
எனவே, இன்றைய சிவலிங்க வழிபாடு தொல் தமிழரின் உறுப்பு வழிபாடேயாகும். இது பயன்படுவனவற்றிற்கு நன்றி சொல்லும் வழிபாடேயன்றி கடவுள் வழிபாடல்ல.

தமிழர்களின் நன்றியின் பாற்பட்ட வழிபாடுகளையெல்லாம் கடவுள் வழிபாடாக்கி, அக்கடவுள்களுக்கு உற-வு கற்பித்து தொடர்புபடுத்தியவர்கள் ஆரிய பார்ப்பனர்கள்.
ஆரியர்களின் மேக வழிபாடு கரியமால் வழிபாடாகி, இராமன் அவதாரமாகியது _ ஆக்கப்பட்டது. தமிழர்களின் ஆண்_பெண் உறுப்பு வழிபாடு சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.

நிலத்தலைவர் முருகன் கடவுளாக்கப்பட்டார். அரச மரத்து அடியில் இருந்த புத்தர் வினாயகராக்கப்பட்டார். ஆக, எல்லாவற்றையும் கடவுளாக்கி, ஒன்று சேர்த்தபோது இந்துக் கடவுள்கள் என்று காட்டுகின்றனர். எல்லாமே மோசடி. இதில் சிவனை ருத்திரன் என்பது மாபெரும் மோசடி.

தொடரும்…