பக்கங்கள்

காமராசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமராசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 மார்ச், 2021

சிந்தனைத்துளிகள் - காமராசர்

Home -> 2011 இதழ்கள் -> ஜூலை 01-15 -> சிந்தனைத்துளிகள் - காமராசர்

2011 இதழ்கள் -> ஜூலை 01-15 -> 

சனி, 27 பிப்ரவரி, 2021

கடவுளை பற்றி காமராசர்



“நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன்.
அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா?. அரேபியாவிலே இருக்கிறவன் “அல்லா” ன்னான், ஜெருசலத்தல இருக்கிறவன் “கர்த்தர்” ன்னான், அதிலேயும் சிலபேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்?. அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். காங்கிரஸ் – கம்யூ னிஸ்ட் – தி . மு . க . மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி.
யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான். மதம் மனிதனுக்குச் சோறு போடுமா?, அவன் கஷ்டங்களப் போக்குமா?. இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுசனுக்கு? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா – நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே!!! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!!!
இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?”
தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.
“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே, அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?” என்று வினாத் தொடுத்தேன்.
தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “ டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?. ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்!!!. இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும் ,
கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும், ஆசாமிய விட்டுபுடணும். காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க. புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம சனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை சனங்களையும், பாமர சனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல. பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்” என்று விளக்கினார்.
“மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன் .
தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா?, ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு , மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா?, அதையெல்லாம் செய்யமாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான்.மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்” என்றார்.
கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா?, இதிலேருந்து எப்போ விலகுனீங்க?” இது நான்.
“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு?, எல்லாம் பார்பர் ஷாப் (Barber Shop ) காரன் செட்-அப் அப்புடீன்னு சிந்திச்சேன், விட்டுட்டேன். ஆனா , சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?” என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
“அப்படியானா, மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே, அதப்பத்தி?” என்று கேட்டேன்.
“அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம
வாழ்த்தும்னேன்!!!”
காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார்.
சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து “ஏன் பள்ளிக்கூடம் போகலியா?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.
நன்றி : திரு. சீர்காழி பெ. எத்திராஜ் (முன்னாள் மேலவை உறுப்பினர்) தமிழ் ஓவியாவின் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது
- தமிழ் ராஜேந்திரன் முகநூல் பக்கம்

திங்கள், 23 டிசம்பர், 2019

இந்த ஏழை ஜனங்களுக்கு ஒதவுற மாதிரி....

தந்தை பெரியாருக்கு அன்று பிறந்தநாள். அய்யாவை வாழ்த்தவும், அவரிடம் வாழ்த்துப் பெறவும், தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவும் ஏராளமான தமிழர்கள் கூட்டம் அந்த நாளில் அலைமோதியது. அன்று காலையில் சேலம் திரு.வரதராஜுலுநாயுடு, அய்யா பெரியாரைப் பார்க்க வந்தார். இவர், சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து பெரியாரின் நெருங்கிய நண்பர். தலைவர் காமராசருக்கும் நெருக்கமானவர். வந்தவர், “முதலமைச்சர் காமராசர் அய்யாவைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல விரும்புகிறார். நான் போய் அழைத்துக் கொண்டு இருவருமாக வருகிறோம்!” என்று பெரியாரிடம் சொன்னார். பெரியார், “அய்யா காமராசர் முதல் மந்திரியா இருக்கிறவங்க... பல வேலைகள் இருக்கும். அவங்க இங்கே வந்து சிரமப்படக்கூடாது. நான் வந்து அவுங்களைப் பார்க்கறதுதான் மொற... மரியாதை” என்று மறுத்தார்.

வரதராஜுலு நாயுடு பிடிவாதமாய்ப் பேசினார், “பிறந்த நாளைக் கொண்டாடும் உங்களை, நல்ல நாளும் அதுவுமா வந்து வாழ்த்த நினைக்கிறார் ஒரு முதலமைச்சர். அது எப்படிய்யா நாம வேண்டாம்னு சொல்ல முடியும்?” என்று வற்புறுத்தி, மாலையில் காமராசரை அழைத்துக் கொண்டு வருவதற்கு சம்மதம் வாங்கிக் கொண்டு போனார். சொன்னதுபோலவே, மாலையில் காமராசரும், நாயுடுவும் ஒரே காரில் வந்து இறங்கினர். எந்தப் படாடோபமுமில்லை.

முதலமைச்சர் வருகிறார் என்னும் எந்த ஆடம்பரமும், ஆரவாரமுமில்லாமல் வந்தார் காமராசர். மிகுந்த மகிழ்ச்சியோடு பெரியார் அவரை எழுந்து வரவேற்றார். முக்கியமான ஒரு சிலர் மட்டுமே அங்கே நின்று கொண்டிருந்தனர். இரண்டு பெரியவர்களும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

வரதராஜுலு நாயுடு பெரியாரிடம் சொன்னார். “அய்யா என்னென்ன காரியம் ஆகணும்னு சொல்றீங்களோ, அதச் செய்து கொடுக்க காமராஜ் சித்தமாயிருக்கார். என்ன செய்யணும்னு சொல்லுங்கய்யா....” என்றார்.

இதைக் கேட்ட பெரியார், “நான் என்னய்யா கேக்கப் போறேன். தனிப்பட்ட மொறையில் எனக்கு என்ன தேவையிருக்கு..? இந்தத் தமிழ் ஜனங்களுக்கு ஒதவுற மாதிரி, அந்த நாலாஞ்ஜாதிய கைதூக்கிவிடற மாதிரி, அய்யா ஏதாவது செஞ்சாங்கன்னா அதுவே போதும்...” என்றார். பெரியார் தன் வார்த்தையை முடிப்பதற்குள், காமராசர் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று, “அய்யா, நானும் தமிழன்தான். நாலாஞ்ஜாதிதான்...!” என்றார்.

மெத்தப் பூரிப்போடு பெரியார் காமராசரின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, “அதுதாங்கய்யா வேணும்... அந்த ஞாபகம் தாங்கய்யா வேணும்!” என்றார்.

உடனே தன்கையுடன் கொண்டு வந்திருந்த ஒரு உறையைப் பிரித்து, அதிலிருந்த ஒரு பழைய புகைப்படத்தைப் பெரியாரிடம் கொடுத்தார் காமராசர். அதை அய்யா பெரியார் வாங்கிப் பார்த்தார். நெகிழ்ந்து போனார். அந்தப் படம் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்தபோது எடுத்தது. அதில், பெரியார் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்க அந்த நாள் காங்கிரஸ்காரர்கள் பலரும் அதில் இருக்கின்றனர். காலடியில் காமராசர் ஓர் இளைஞராக, மிகச் சாதாரணத் தொண்டராக அமர்ந்திருக்கிறார்.

சற்று நேரம் அங்கே கனத்த மவுனம். இரண்டு பெரியவர்களும் தங்கள் கடந்த கால நினைவுகளில் கரைந்து போயிருக்கலாம். தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்துவிட்ட முதலமைச்சர் காமராசர் இவ்வளவு ஞாபகமாக, அந்தப் பழைய படத்தை இப்போது அய்யாவிடம் கொண்டு வந்து ஏன் கொடுக்க வேண்டும்...? “அய்யா, அன்று உங்கள் காலடியில் உட்கார்ந்த அதே பழைய தொண்டன்தான் நான். கட்டளையிடுங்கள், காத்திருக்கிறேன்!” என்று சொல்லாமல் சொல்லியிருப்பாரோ கர்மவீரர்...?

- திரு. உ.நீலன்

(தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்)

(சன் தொலைக்காட்சி அரசியல் விமர்சகர் திரு.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய “ஆகட்டும் பார்க்கலாம்“ என்ற நூலிலிருந்து. பக்கம் 160-161).

-  விடுதலை ஞாயிறு மலர், 14.12.19