பக்கங்கள்

புதன், 22 ஆகஸ்ட், 2018

பாரதியார் எழுதியது என்ன?

பாரதியார் எழுதியது என்ன? என்ற கேள்விக்கு திருவாளர் குருமூர்த்தி அய்யர் என்ன சொல்ல வருகிறார்?


கேள்வி: ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறிய பாரதியின் வாக்கு, பொய்யாகி விட்டதே?

பதில்: எப்போதாவது இதைப் பற்றி எழுத வேண்டும் என்று இருந்தேன். உங்கள் கேள்வி இதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. உண்மையில் பாரதியார், சாதிகள் இல்லையடி பாப்பா' என்று எழுத வே இல்லை. 'சாதி பெருமை இல்லை பாப்பா, அதில் தாழ்ச்சியுயர்ச்சி செய்தல் பாவம்' என்றுதான் 1913இல் அவர் துவங்கிய 'ஞானபாநு' (1915- மார்ச், பக்கம்.287-88) இதழில் எழுதினார். அது நெல்லையப்பர் பதிப்பில் (1917இல்) சாதிகளில்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சியுயர்ச்சி சொல்லல் பாவம்' என்று மாறி விட்டது. இந்த விவரங்களை பாரதியாரைப் பற்றி ஆய்வு செய்து, தன் வாழ் நாளையே அர்ப்பணித்த சீனி. விஸ்வநாதனின் 'காலவரிசையில் பாரதி படைப்புகள்' - (அல்லயன்ஸ் பதிப்பகம்) என்கிற தலைப்பில், 16 - தொகுதிகளாக பல ஆயிரம் பக்கங்களில் வெளிவந்த பாரதியின் களஞ்சியத்தில், 9ஆவது தொகுதியில் 148- ஆம் பக்கத்தில் இந்த உண்மை விவரம் கூறப் பட்டிருக்கிறது. எனவே பாரதியார் ஜாதியில் பெருமை ஒன்றும் இல்லை. அதை வைத்து உயர்ச்சி தாழ்ச்சி செய்யக் கூடாது' என்றுதான் எழுதினார். ஜாதிகள் இல்லை என்று எழுதவில்லை என்பதே உண்மை.  (துக்ளக், 22.8.2018 - பக்கம் 15)

ஜாதி பெருமை இல்லை பாப்பா என்றுதான் பாரதியார் எழுதி னாரே தவிர, ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று எழுதவில்லை என்று குருமூர்த்தி அய்யர் எழுதியிருப்பது  இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.

ஜாதிகள் இருக்க வேண்டும். அவை ஒழிக்கப்பட கூடாது என்ற புள்ளியில் குருமூர்த்தி அய்யரும், சுப்பிரமணிய பாரதி அய்யரும் ஒன்றாக சங்கமமாகி இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

இதில் இன்னொன்றும் முக்கியமானது. குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லக் கூடாது என்று சொல்லவில்லை - பாவம் என்றுதான் சொல்லுகிறார். ஒரு பிரச்சினையை கருத்தியல் அடிப்படையில் அழுத்திச் சொல்ல வேண்டுமே தவிர, பாவ - புண்ணியம் என்ற அடிப்படையில் சொல்லுவது - அய்யோ பாவமாகும்.

ஜாதிப் பற்றிய பார்வையில் பாரதி எங்கே நிற்கிறார்?

வேதமறிந்தவன் பார்ப்பான் -பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதிநிலை தவறாமல் - தண்ட நேமங்கள்

செய்வான் நாய்க்கன், பண்டங்கள் விற்பவன்

செட்டி - பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி

தொண்டரென்றோர் வகுப்பில்லை - தொழில்

சோம்பலைப் போல் இழிவில்லை - இந்த

நாலு வகுப்பும் இங்கொன்றே - இந்த

நான்கினில் ஒன்று குறைந்ததால்

வேலைத் தவறி சிதைந்தே - செத்து

வீழ்ந்திடும் மானிட சாதி

சாதிப் பிளவுகள் சொல்லி - அதில்

தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்

நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு

நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு

தன்னில் செழித்திடும் வையம்.

(பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே- பக்கம் 5-6)

என்று பாடுகிறார்.

எந்தெந்த ஜாதிக்காரன் என்னென்ன தொழிலை செய்ய வேண்டும் என்பது பார்ப்பனீய வேதத்தின் சாரமாகும். இன்னும் புரியும்படிச் சொன்னால் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தையொத்தது.  இந்த நாலு வருணத்தில் உள்ளவர்கள் அந்தந்த ஜாதிக்குரிய தொழிலை செய்யாவிட்டால் மானிட ஜாதி என்றோ ஒழிந்துவிடும் என்று பாரதி எழுதுகிறார் என்றால் இது பச்சைப் பார்ப்பனத் தனம் அல்லாமல் வேறு என்னவாம்? குருமூர்த்தி அய்யரும் பாரதியை சரியாகவே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லிப் பாராட்டலாம்!

- விடுதலை ஞாயிறு மலர், 18.8.18

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

அவாள் கூறும் ஆன்மிகம் பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர் என்பதை நிலை நிறுத்துவதே!

கலி. பூங்குன்றன்


 

ஆன்மிகம், ஆன்மிகம் என்றும் ஆன்மிக அரசியல் என்றும் சதா சாவி கொடுத்த பொம்மை போல ஆடிக் கொண்டு இருக்கிறார்களே. கீறல் விழுந்த கிராமபோன் தட்டுப் போல பாடிக் கொண்டிருக்கிறார்களே - அது என்ன அந்த ஆன்மிகம்!

இதுவரை அதனை விளக்கியதுண்டா?

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நடந்த தக்ஷிணகாளி ஹோமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யர்வாள் 'திருவாய்' மலர்ந்து சொன்ன 'வார்த்தை அமுதத்தை' திருவாளர் 'தினமணி'யார் தட்டில் வடித்துப் பிரசாத கமாக தந்துள்ளார் ('தினமணி' 8.6.2018 பக்கம்  5)

"தமிழகத்துக்கு தற்போதைய தேவை ஆன்மிக அரசியல்தான். ஆன்மிக அரசியல் யார் பேசினாலும் அவர்கள் தேவை" என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அந்த  ஆன்மிகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவம் உண்டா? ஜாதிக்கு அதில் இடம் உண்டா இல்லையா? பூணூல் போடும் ஜாதி, பூணூல் போடத் தகுதியில்லாத ஜாதி என்பதற்கெல்லாம் அந்த ஆன்மிகத்தில் இடமில்லை என்ற நிலைப்பாடு உண்டா?

ஆணும் - பெண்ணும் சமத்துவம் என்று சொல்லுமா அந்த ஆன்மிகம்?

அந்த ஆன்மிகமும் -ஆத்திகமும் ஒன்றா - வேறு வேறா? ஆன்மிகம் பற்றித் தண்டோரா போடும் இந்த அக்கிரகாரத் திருமேனிகள் இடைஇடையே ஆத்திகம், நாத்திகம் என்பதையும் இதற்குள் கொண்டு வந்து திணிக்கிறார்கள் - ஊடு இழையாகப் பின்னுகிறார்கள்.

வெறும் கடவுள் நம்பிக்கை - கடவுள் நம்பிக்கையின்மை என்பதோடு இது முடிந்து விடுகிறதா? வேதம் (சுருதி) ஸ்மிருதி, உபநிஷத்தின், இதிகாசங்கள், புராணங்களில் கூறப்படும் ஒரு குலத்துக்கொரு நீதி என்ற கசமாலங்கள் இந்த ஆன்மிகத்தில் உண்டா இல்லையா?

'அதெல்லாம் ஒன்றும் இல்லை - நாங்கள் கூறும் ஆன்மிகம் மனித சமத்துவ தர்மம் நிறைந்தது, ஏற்றத் தாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை இது சத்தியம் - இது சத்தியம்' என்று கூற முன் வருவார்களா? அப்படி வந்தால் அவற்றையெல்லாம் வெறுங் குப்பைகள் என்று கூறி அவற்றைக் கொளுத்தி சாம்பலாக்குவதற்கு ஒரு நாளைக் குறிப்பிட முன்வருவார்களா?

பிரம்மா என்ற கடவுள் தனது முகம், தோள், தொடை, பாதங்களிலிருந்து முறையே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவர்களைப் படைத்தான் - சூத்திரன் என்றால் ஏழு வகைப் படுவான்; அந்த எழில் ஒன்று விபச்சாரி மகன் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) என்னும் மனு தர்மத்துக்கு வக்காலத்து வாங்கி 'துக்ளக்'கில் எழுதிக் கொண்டே, ஆன்மிகம் பேசினால் ஆத்திகம் பேசினால் இது அப்பட்டமான பார்ப்பனத்தனம், பார்ப்பன ஆதிக்கத்தை மறுபடியும் புதுப்பிக்கும் பலப்படுத்தும் வஞ்சகம் - அயோக்கியத்தனம் என்று முடிவு செய்வது தானே அறிவுடைமை?

"பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று கீதை சொல்லுகிறதே' (அத்தியாயம்  9 சுலோகம் 32) இது குருமூர்த்தி கம்பெனி கூறும் ஆன்மிகத்தில், ஆத்திகத்தில் ஏற்கப்படுமா - எரிக்கப்படுமா?

ஒரு சூத்திரன் வேத மந்திரங்களை காதால் கேட்க நேர்ந்திடின், அவன் காதுகளில் உருக்கிய ஈயத்தை  ஊற்ற வேண்டும். அவன் வேத மந்திரங்களை ஓதினால், அவன் நாக்கை வெட்ட வேண்டும். அவன்  வேதங்களை மனப்பாடம் செய்திருந்தானேயானால் அவனைக் கோடரியால் வெட்ட வேண்டும் என்கிறதே அவாளின் கவுதம தர்ம சூத்திரம் (கவுதம சூத்திரம் 2-3-4) இவை எல்லாம் அவர்கள் கூறும் ஆன்மிகத்திற்குள் வருமா - வராதா? அறிவு நாணயத்தோடு பதில் சொல்லட்டும் (ராஜாஜி 1937இல் ஆட்சிக்கு வந்த போது 2500 பள்ளிகளையும், 1952-1954இல் 6000 பள்ளிகளையும் இழுத்து மூடி, அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்யும் குலக்கல்விக் கொண்டு வந்ததையும் இந்த இடத்தில் நினைவு கூர்க!)

தெய்வாதீனம் ஜகத்சர்வம்

மந்த்ரா தீனம் துதெய்வதம்

தன்மந்த்ரம் பிரம்மணா தீனம்

தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்

என்று கூறுகிறது ரிக் வேதம் (பிரிவு 62-  சுலோகம் 10)

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர், மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை - எனவே பிராமணர்களே நமது கடவுள். அவனை வழிபட வேண்டும் என்று கூறும் வேதங்கள் பார்ப்பனர்கள் கூறும் ஆன்மிகத்தில்,  ஆத்திகத்தில் இடம் பெறுமா அல்லது ஆழக் குழி தோண்டிப் புதைக்கப்படுமா?

இதெல்லாம் எந்தக் காலத்திலோ எழுதப்பட்டது - இப்பொழுது ஏன் புதைக்கப்பட்ட பிணத்தைக் குழி தோண்டி வெளியில் எடுக்கிறீர்கள் என்று கேட்டால் - அவர்களின் லோக குருவைக் கூண்டில் ஏற்ற வேண்டியிருக்குமே.

9.10.2002 அன்று சென்னை நாரதகான சபாவில் 'தாம்ப்ராஸ்' எனப்படும் பார்ப்பன சங்கத்தின் ஏற்பாட்டில் "அருந் தொண்டாற்றிய அந்தணர்கள்" நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்தாரே -

"எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான்  நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இராமன் ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோதும் கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன்கூட அப்புறம் தான். அந்தணன் தான் முதலில்" ('நக்கீரன் 15.11.2002)

அவாள் சொல்லும் ஆன்மிகத்தில் இந்த சங்கராச்சாரியாரை கை கழுவப் போகிறார்களா? அல்லது கரம் கூப்பி 'ஹர ஹர சங்கரா' கோஷம் போடப் போகிறார்களா? (ஒரு கொலை வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்ட போது, இந்த விஷயத்தில் அவருக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது என்று 'துக்ளக்' எழுதியதை நினை வூட்டுகிறோம்.) இரட்டை வேடம் போடாமல் இரட்டை நாக்கால் பேசாமல் பதில் சொல்லட்டும் - பார்ப்பன குருமூர்த்திகள்.

வேதம், புராணம், இதிகாசங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றுமே மனிதனைப் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தியோ கூறு போட்டோ, அவர்களை ஏறி மிதித்து நாட்டாண்மை செய்வதுதான் பார்ப்பன மேலாண்மை!

வேத, புராண, இதிகாசங்களைக் கிழித்தெறிந்து மனித தர்மம் பேசப் போகிறார்களா? இல்லை -இல்லை - வேதங்களையும், இதிகாச புராணங் களையும் எங்களால் கைவிட முடியாது என்று கறார் பேசப் போகிறார்களா?

சரி, நாத்திகம் நாத்திகம் என்று நாக்கைச் சுழற்றுகிறார்களே, இந்து மதத்தில் நாத்திகத்திற்கு இடம் உண்டா இல்லையா?  உண்டு என்று அவர்களே சொல்லுவதுண்டே! மேலும் நாத்திகம் என்றால் என்ன?

அதற்கு விளக்கம் சொல்லுவதைவிட அவாளின் ஜெகத்குருவை விட்டே அதுவும் 'மகா பெரியவாளை' விட்டே பதில் கூறச் செய்வோம்.

"நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்லுகிற நிதீச்வர வாதம் என்றுதானே இப்பொழுது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டேகூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்"

"அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படி யானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்பது அர்த்தம்"

"வைதிக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞானசம்பந்தரின் கொள்கை யாகவும் இருந்திருக்கிறது - ஈஸ்வர பக்தி இல்லா மலிருப்பதில்கூட அல்ல"  இப்படி சொல்லியிருப்பது சாட்சாத் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார்தான் (தெய்வத்தின் குரல் இரண்டாம்  தொகுதி பக்கம் 407-408).

கடவுள் மறுப்பு நாத்திகம் இல்லை - வேத மறுப்புதான் நாத்திகம் என்கிறாரே அவர்களின் மகா பெரியவாள்.

ஆத்திகம் - நாத்திகம் - பேசும் அன்பர்கள் இப்பொழுது எந்தப் பக்கத்தில் நிற்கப் போகிறார்கள்?

கடவுள் இல்லை என்ற சொல்லித் தொலை யட்டும், கடவுள்  ராமனை செருப்பால்கூட அடிக்கட்டும், பிள்ளையாரை நடு வீதியில் போட்டு உடைக்கட்டும் - அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை - அப்படி கடவுளை அவமதிக்கிற வர்களும் ஆத்திகர்கள்தான்! அதே நேரத்தில் வேதங்களில் கை வைக்கக் கூடாது - எதிர்க்கக் கூடாது. அப்படி எதிர்ப்பது நாத்திகம் என்றால் இதன் பொருள் என்ன? வேதங்கள்தான் பிறப்பின் அடிப்படையில் பிராமணன் பிரம்மாவின் நெற் றியில் பிறந்தவன் - பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 8 - சுலோகம் 413) இந்த சுகமான ஆதிக்கம் பார்ப்பனர்களுக்கு இருப்பதால் வேதங்களை யாரும் எதிர்க்கக் கூடாது என்று எண்ணுகிறார்கள் பார்ப்பனர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

காஞ்சி சங்கராச்சாரியார் சொல்கிறார் என்று நினைக்க வேண்டாம்; அவாளின் மனுதர்ம சாஸ் திரங்கள் சொல்லியிருப்பதைத்தான் அவர்கள் வழி மொழிகிறார்கள்.

வேதம், தரும சாஸ்திரம், இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகன் ஆகின் றான் (மனுதர்மம் அத்தியாயம் 2 - சுலோகம் 11).

பெரும்பாலான மக்களை விபச்சாரி மக்கள் என்று சொன்னாலும், அதற்குக் கட்டுப்பட்டு 'சரணம் சாமி' என்று சொன்னால் தான் நாம் ஆத்திகராக இருக்க முடியும் - அவர்கள் கூறும் ஆன்மிகப் பந்தியில் இடமும் கிடைக்கும் - அப்படித் தானே! அது எப்படி? என்ன நியாயம்? என்று தர்க்கம் செய்யக் கூடாது என்று இந்த 2018ஆம் ஆண்டிலும் கூறும் ஒரு கும்பல் இருக்கிறது என்றால், எவ்வளவு ஆணவக் கொழுப்பு அவர்களின் உள்ளங்கால் முதல் உச்சித்தலைவரை படம் எடுத்து ஆடும்!

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் அவர்கள் கூறும் ஆன்மிகம் - ஆத்திகம் என்ப தெல்லாம் பழைய வருண தருமமுறை பிராமணர் - சூத்திர பேதங்களை, சிந்தாமல், சிதறாமல் அப்படியே நிலைக்கச் செய்வதுதான்.

இன்று "ஆஸ்திகம்" என்பது உயர்ஜாதியினரின் நலம். இன்று நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம். உங்களுக்கு இதில் எது வேண்டும்?

- தவத்திரு குன்றக்குடி அடிகளார் விடுதலை 19.2.1971

"எங்கெங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கெல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கிறது"

- தந்தை பெரியார், (குடிஅரசு 7.9.1930

- விடுதலை நாளேடு, 13.8.18

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

அண்ணாமலைக்கு அரோகரா!

கலைஞர்

 

 


“ஓய்! நீல வர்ணம்! என்னிடம் காட்டாதே உன் பெருமையை! எங்கேயாவது ஆழ்வார் வர்க்கம் இருந்தால் அங்கே போய்க் காட்டும். சிருஷ்டி கர்த்தாவிடமா சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறாய். சபாஷ்!’’

“ஓய்! பல தலை! வீண்ஜம்பம் அடிக்காதீர். உமது பெருமையை மற்ற தலைகளிடம் சொல்லிக் களிப்படையும், வைகுண்ட வாசனிடமா வீராப்பு! வெகு நன்று!’’

“ஆத்திரப்பட்டு ஆடாதே தம்பீ! நீ மோகினி உருவம் எடுத்து சிவனோடு கலவி செய்த காரணத்திற்காக உனக்கு மதிப்பு தர முடியாது!’’

“மகளையே காதலித்து, கரடியைக் கூடிய மகானுபாவரே! மூடும் உமது நாலு வாய்களையும்! எனது சங்கின் முழக்கத்திலே_சக்கரத்தின் வீச்சிலே வீழ்ச்சி பெறுவாய், நினைவிருக்கட்டும்.’’

தேவலோகத்திலே _ ஆமாம் _ மனிதரினும் மேம்பட்ட முப்பத்துமுக்கோடி தேவர்கள் வாழும் புண்ய பூமியிலே ஒரு சச்சரவு! யாருக்கும் யாருக்கும்? சாட்சாத் பிர்மாவுக்கும் விஷ்ணுவுக்குந்தான்! சிருஷ்டி கர்த்தாவுக்கும் ஸ்ரீயப்பதிக்கும் ஏற்பட்ட சச்சரவில் நடந்த சம்பாஷனை இது. இதன் சாரம் என்ன? யார் பெரியவர் என்பது! படைப்புத் தொழில் புரியும் பிரமன் பெரியவனா? காத்தல் வேலை செய்யும் விஷ்ணு பெரியவனா என்ற தர்க்கம் முற்றுகிறது. இவர்களுடைய சண்டையில் இவர்களுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளின் சாயம் வெளுத்ததே தவிர, தீர்ப்புக் கிடைக்கவில்லை. தேவலோகத்திலா? அதுவும் தேவாதி தேவர்களுக்குள்ளா சண்டை என்று சந்தேகம் ஏற்படலாம். தேவர் உலகத்தில் சண்டை மட்டுமல்ல வழக்குகள் பல வண்டி வண்டியாக உண்டு! அங்கு மாத்திரம் கோர்ட்டுகள் ஏற்படுத்தி விசாரணை நடத்தியிருந்தால், பரமசிவன் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளைக் கற்பழித்த வழக்கு, பிருந்தையை விஷ்ணு பலாத்காரம் செய்த வழக்கு, அகல்யையை இந்திரன் கற்பழித்த வழக்கு, சப்தகன்னியரை அக்னி பகவான் சூறையாடிய வழக்கு, குரு பத்தினியை சந்திரன் கூடிய வழக்கு, எண்ணாயிரம் சமணர் வழக்கு, இன்னோரன்ன வழக்குகள், கருவழித்த குற்றங்கள், திருட்டுக்கேசுகள் முதலியன நடைபெற்று தீர்ப்புகள் வந்திருக்கும். பூலோகத்தில் இறந்து சொர்க்கத்திற்குச் செல்லும் வக்கீல்களுக்கும் அங்கு நல்ல சான்சு கிடைத்திருக்கும்.

மேற்கண்ட வழக்குகளில் ஒன்றாகத் தான் பிர்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவன் என்ற வழக்கு ஆரம்பமாயிற்று! இதைத் தீர்த்துவைக்க சிவனார் வந்து சேர்கிறார். வழக்கை விசாரிக்கிறார். தீர்ப்பு கூறுவது சங்கடமாகி விடுகிறது. உடனே ஆகாயமளாவ ஜோதியாகக் கிளம்புகிறார். அந்த ஜோதியின் முடியை ஒருவரும், அடியை ஒருவரும் கண்டு திரும்பவேண்டும். யார் முதலில் திரும்புகிறாரோ அவரே பெரியவர் என்று சிவனார் முடிவு கூறிவிடுகிறார். முடியை நோக்கி பிர்மா அன்னப்பறவை உருவில் பறந்தார், பன்றி உருவமெடுத்து அடியைக்காண பரந்தாமன் பாதாளத்தைக் குடைய ஆரம்பித்தார். இருவரும் வெற்றியை அணுக முடியவில்லை. மேலே பறந்துகொண்டிருக்கும் பிர்மாவுக்கு எதிரில் ஒரு தாழம்பூ மேலே இருந்து கீழேவந்து கொண்டு இருந்தது. “ஓ! தாழம்பூவே எங்கிருந்து வருகிறாய்?’’ என்றார் பிர்மா. “சிவபெருமானின் சடாமுடியிலிருந்து வருகிறேன்’’ என்றது தாழம்பூ!

“நான் சிவனின் முடியைத் தேடிப் போகிறேன். என்னால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் அவரது முடியைக் கண்டுவிட்டதாக ஒரு பொய்சாட்சி சொல்லுகிறாயா?’’ என்று கெஞ்சினார் பிர்மா?

பொய் சாட்சி சொல்லத் தாழம்பூ ஒத்துக் கொண்டது. அதன்படி சிவனிடம் சென்று நான் முடியைக் கண்டு விட்டேன் என்று பிர்மா கூறினார். அதற்கு தாழம்பூ, “ஆம்! நானும் பார்த்தேன்’’ என்று சாட்சியம் கூறிற்று. பாதாளத்தை நோக்கிப் பன்றி உருவிற் சென்ற விஷ்ணு, நாரத முனிவரை சந்தித்துத் தன் முயற்சியில் வெற்றியடைய முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு தோல்வியோடு திரும்பினார். பரமசிவன், பிர்மாவும் தாழம்பூவும் பொய் கூறியதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு சாபம் அளித்தார். இதிலிருந்து பிர்ம, விஷ்ணுக்களின் கர்வம் அடங்கியதோடு, சிவனே யாவரிலும் பெரியவர் என்ற தீர்ப்பும் கூறப்பட்டது. சண்டையிட்டவர் வெட்கித்  தலை குனிந்தனர்.

இது அருணாசல புராணம். தீப ஒளித் திருவிழா நடக்கப்போகிற திருவண்ணாமலை ஸ்தலத்தின் திருப்புராணத்தில் காணப்படும் ஆபாசங்களில் இதுவும் ஒன்று! அண்ணாமலையில் இதுவும் ஒன்று! அண்ணாமலையில் நாளை நடக்க இருக்கும் கார்த்திகை தீபத்திற்குப் பலப்பல அய்தீகங்கள் உண்டு! சிவன் சில அசுரர்களை நெற்றிக் கண்ணால் எரித்துவிட்டதாகவும் அதுவே சொக்கப்பானைத் திருநாள் என்றும் ஒரு புராணம் கூறுகிறது. மற்றொரு புராணத்தில், அக்கினிதேவன், சப்த கன்னியர்களைக் கண்டு காமுற்றதாகவும், அதனைக் கண்ட அவன் மனைவி சுவாகா தேவி, அருந்ததி கற்புடையவளானதால் அவள் உருவத்தை தவிர மற்ற ஆறு கன்னிகைகளின் உருவத்தை எடுத்து அக்கினி பகவானின் ஆசையைத் தீர்த்ததாகவும், அந்த ஆறு உருவங்களும் கார்த்திகைப் பெண்களாகி, அவர்கள் முருகனுக்குப் பாலூட்டியதால் முருகனுக்கு ‘கார்த்திகேயன்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும், பிறகு அந்தப்பெண்கள் கார்த்திகை நட்சத்திரங்களாக மாறியதாகவும், அதுவே கார்த்திகை விரதத்திற்குக் காரணமென்றும் மற்றொரு புராணம் சொல்லுகிறது. மாபலி சக்கரவர்த்தி பற்றி மற்றொரு புராணமும் உண்டு!

இம்மாதிரியே, இந்த நாட்டில் நடைபெறும் பண்டிகைகளுக்கும், உற்சவங்களுக்கும் ஆயிரக்கணக்கான_ ஒன்றுக்கொன்று முரண்பட்ட கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தக் கதைகளில் யாராவது ஒரு அசுரன் கொல்லப்பட்ட செய்தியும் அல்லது தேவர்களுக்குள் நடந்த அற்பத்தனமான, ஆபாசமான தகராறும் அதுவுமில்லையானால் ஒரு வஞ்சத்தையும், விபசாரத்தையும் வளர்க்கும் புராணமும் காணப்படுமேயல்லாது, சிறிதாவது அறிவுக்குப் பொருத்தமான, ஒழுக்கமான நிகழ்ச்சிகளைக் காண முடியாது. இவைகளை சிந்தித்துப் பார்க்க இந்நாட்டு மக்களுக்கு நேரமோ, நினைப்போ இருப்பதில்லை. எதையெடுத்தாலும் முன்னோர்கள் வார்த்தை என்ற முலாம் பூசப்பட்டு பழக்கவழக்கம் என்ற பசப்பு மொழி பேசப்படுகிறதே தவிர, மனிதராக வாழ முயற்சிப்பதே கிடையாது!

இம்மாதிரி ஆபாசக் கதைகளின் போல் மாதத்திற்கொரு பண்டிகை மாதத்திற்கொரு உற்சவ திருநாள் அதற்காக பல ஆபாச ஆட்டங்கள்! ஆடம்பரமான செலவுகள்! கண்டவர் சிரிக்கும் காட்டுமிராண்டி நடவடிக்கைகள்! இவைகள் தான், ஞானத்தில் சிறந்தது சுதந்திர தாகமெடுத்து சுயராஜ்யத்திற்கு ஏன்? பொது உடமைக்கும் தயாரான சூரர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் இந்த நாட்டிலே நடைபெறுகின்றன!

பாட்டாளி மக்களின் பச்சைக் குழந்தைகளின் வறண்ட தலைக்கு ஒரு துளி எண்ணெய் கிடையாது. திருவண்ணாமலைத் தீபத்திற்கு ஆயிரக்கணக்கான நெய் டின்கள் உடைக்கப்படுகின்றன. மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த நாட்டு மாதர்களுக்கு ஒரு முழத்துணி கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஆனால், அண்ணாமலை தீபத்திற்குப் பீஸ் பீஸாகத் துணிகள் கொளுத்தப்படுகின்றன. பசித்த மக்களுக்கு ஒரு பிடி சோறு கிடையாது. ஆனால், அந்தப் பரமபிதாவுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு வறுமையால் வாடும் மக்களுடைய வயிறு எரிகிறது. அங்கு, அண்ணாமலையில் ஆடம்பரத்தோடு அறியாமை நெருப்பு எரிகிறது. அதற்கு நெய் வார்க்கப்படுகிறது. அந்தோ! கொடுமை! கொடுமை!

திராவிட மக்களுடைய உணர்வுக் கழனியிலே அறியாமையை நீராகப் பாய்ச்சி, மூடப் புராணீகப் பழக்கவழக்கங்களை பயிராக வளர்த்து, அவ்வப்போது முளைக்கும் ஆராய்சிகளைக் களை என்று கழறி பயமெனும் அரிவாளால் களைந்து தங்கள் சுயநலத்துக்கேற்ற வசதிகளை விளைவாகப் பெற்று பிழைப்பை அறுவடை செய்து பார்ப்பனரும், பணக்காரரும், படித்தவரும் வாழ்கின்றனர். இவர்களுடைய ஒப்புதல் முறிந்து கூட்டுச்சுரண்டல் முறை ஒழிய வேண்டுமானால் திராவிடர் தன்மானம் பெற  வேண்டும். அதுவன்றி அண்ணாமலைக்கு அரோகரா! போட்டுக் கொண்டேயிருந்தால் பழைய கற்காலத்தை நோக்கிக் கட்டை வண்டிப் பிரயாணத்தை கட்டுசாத மூட்டையோடு ஆரம்பிக்க வேண்டியதுதான்! உணர்வார்களா திராவிடர்கள்? உணர்ந்து ஆவன செய்வார்களா?

- (‘குடிஅரசு’- 17.11.1945)

- உண்மை இதழ், 1-15.6.!8