பக்கங்கள்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

பெண்ணுரிமையும் பாரதியும்!எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (92)

ஜனவரி 16-31,2022

பெண்ணுரிமையும் பாரதியும்!

“மண வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும். இன்று ஒரு மனைவி, நாளை வேறு மனைவி என்றால், குழந்தைகளின் நிலைமை என்ன ஆகும்? குழந்தைகளை எப்படி நாம் சம்ரக்ஷணை பண்ண முடியும்? ஆதலால் குழந்தைகளுடைய சம்ரக்ஷணையை நாடி ஏகபத்னிவிரதம் சரியான அனுஷ்டானம் என்று முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்டது” என்கிறார் பாரதி.

அதாவது குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒரு பெண் கடைசி வரை ஒருவனோடே வாழ்ந்தாக வேண்டும் என்கிறார்.

பிள்ளைகளுக்காக வேண்டி ஒத்து வராத ஒருவனோடு வாழ்ந்தாக வேண்டும் என்றால், பெண் விடுதலை எப்படி வரும்? பெண்ணுரிமை எப்படி பாதுகாக்கப்படும்?

பிள்ளைகள், கணவன்_மனைவி இருவருக்கும் உரியவர்கள். கட்டாயம் பிரிய நேரிடும்போது, பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொண்டு பிரிய வேண்டும் என்பதுதானே சரியாக இருக்கும்?

மாறாக, பிள்ளைகளுக்காக வாழ முடியாத கணவனோடு வாழ்ந்தே ஆக வேண்டும் என்பது, அந்தப் பெண்ணை வாழ்நாள் முழுக்க துன்பத்தில், இன்னலில், சிக்கலில், உளைச்சலில் தள்ளிவிடுமே! அப்படிப்பட்ட அக்குடும்பச் சூழலில் பிள்ளைகள் வளர்வதும் கேடல்லவா?

ஆனால், என்ன இருந்தாலும், எப்படி இன்னல், கேடு வந்தாலும் அந்த ஆணுடனே அவள் வாழ வேண்டும் என்கிறார் பாரதி.

கணவன்_மனைவி பிரிவை, மண முறிவை, தான் எழுதிய கதைகள் மூலமும் எதிர்க்கிறார் பாரதி.

வறுமையில் வாடும் ஏழைப் பெற்றோர், தங்கள் இளம் வயது மகளை ஒரு வயதான பிராமணனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். முதியவருடன் வாழப் பிடிக்காத அப்பெண், வேறு ஓர் ஆணைத் துணையாகத் தேடிப் போய்விடுகிறாள். இது இந்து கலாச்சாரத்திற்குக் கேவலம் என்று எண்ணிய பாரதி, அப்பெண் கிறித்துவ மதத்திற்கு மாறி விடுவதாகக் கதையைக் கொண்டு போகிறார்.

ஆக, கதையில்கூட, சனாதன தர்மம், இந்து கலாச்சாரம் கெடக் கூடாது, கெட்டுவிட்டதாகக் காட்டக் கூடாது; பெண்ணுரிமை, பெண் விடுதலை வந்துவிடக் கூடாது; அப்படி இந்து கலாச்சாரத்தில் நடப்பதாகக் காட்டிவிடக் கூடாது என்று உறுதியாய் இருந்தார் பாரதி.

தன் இறுதிக் காலத்தில் பாரதி எழுதிய இன்னொரு கதையில், ஓர் இளம் விதவைப் பெண், மறுமணம் செய்துகொள்ள முடிவு செய்து, விஸ்வநாத சர்மா என்பவரை மறுமணம் செய்து கொள்கிறார். ஒன்றரை வருடத்தில் அவருக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. அவன் குடும்ப வாழ்க்கைக்குத் தகுதியில்லா தவனாகிறான். ஆனாலும், அந்தப் பெண் வாழ்நாள் முழுக்க அவனுக்குப் பணிவிடை செய்தே காலம் கழிக்கிறாள். இது தெய்வீகக் காதல் என்கிறார்.

ஆக, ஒரு பெண் தன் வாழ்வைத் தொலைத்து ஒரு பைத்தியக்காரக் கணவனுக்கு பணிவிடை செய்தே வாழ்ந்துவிட வேண்டும் என்பதுதான் பெண்ணுரிமையா?

மனநலம் பாதிக்கப்பட்டவரை மற்றவர்கள்-தான் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த இளம் பெண் வேறு ஒரு துணையைத் தேடி, தேர்ந்து அவனுடன் வாழ வேண்டியதுதானே அப்பெண்ணின் உணர்வுக்கும், உரிமைக்கும் உகந்ததாக இருக்க முடியும்?

அப்படியில்லாமல், அவள் தன் உணர்வு-களை, விருப்பங்களை அடக்கி, ஒடுக்கி, வாழ்நாள் முழுக்க ஒரு மனநலம் பாதிக்கப்-பட்டவனோடே வேலைக்காரியாய் வாழ்ந்து-விட வேண்டும் என்பதுதான் முற்போக்குச் சிந்தனையா? பெண் விடுதலையா? மனைவிக்குப் பைத்தியம் பிடித்தால், எந்த இளம் வயது ஆணாவது மறுமணம் செய்யாது, அந்த மனநலம் பாதித்த பெண்ணுக்குப் பணிவிடை செய்து காலம் கழிப்பானா?

இவை மட்டுமல்ல, தன் குடும்பத்திலும் பாரதி பெண்ணுரிமைக்கு எதிராகவே நடந்துள்ளார்.

“ஒரு நாள் பாரதி 14 வயதான தமது மூத்த மகள் தங்கம்மாவைத் தம்முடன் கடயத்திலிருந்து அய்ந்து மைலில் உள்ள ஓர் அய்யனார் கோயிலுக்கு வருமாறு உத்தரவிட்டார். அக்கோவில் மலைச்சாரலில் காட்டு நடுவே உள்ளது… தங்கம்மா தயங்கி, வர மறுத்ததால் பாரதிக்குக் கோபம் வந்துவிட்டது. மகள் கன்னத்தில் விரல் பதிய அறைந்துவிட்டார். தடுக்க வந்த மைத்துனர் மீதும், இளைய மாமனார் மீதும் காறி உமிழ்ந்தார்’’ என்று பாரதியை ஆய்வு செய்த ரா.பத்மநாபன் எழுதியுள்ளார்.

பாரதியைக் கண்ணை மூடிக் கொண்டு முற்போக்குவாதியாகக் காட்டும் சிலர் 120 ஆண்டுகளுக்கு முன்பே பாரதி எவ்வளவு முற்போக்காகப் பேசியுள்ளார் என்று அவரது தொடக்க காலக் கருத்துகளை மட்டும் எடுத்துக் காட்டி இறுதிக் காலக் கருத்துகளை மறைத்து விடுகின்றனர்.

பாரதிக்கு முன்பே இந்த மண்ணில் பலர் பெண்ணுரிமை பற்றிப் பேசியுள்ளனர். செயலிலும் காட்டியுள்ளனர்.

1882இல் “இந்து சுயக்கியான சங்கம்’’ என்ற அமைப்பு, விதவைத் திருமணம், ஜாதி மறுப்பு மணம், பெண் கல்வி, பார்ப்பனப் புறக்கணிப்பு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளது.

“தத்துவ விசாரிணி, ‘தத்துவ விவேசினி’ ஆகிய ஏடுகளையும் இந்த அமைப்பு நடத்தியுள்ளது. தத்துவ விவேசினி 17.2.1881 இதழில், “பக்குவ காலத்தில் மணம் செய்யாமல் சிறு வயதிலேயே மணத்தை முடித்து யவ்வனப் பருவம் வருவதற்கு முன்னே பெண் காலம் சென்றால் பிள்ளைக்கு மறுவிவாகம் புரியலாமென்றும், பிள்ளை காலம் சென்றால் பெண் மறு விவாகம் புரியப்படாதென்றும் கருதி நமது தேசத்தில் சில வகுப்பார் மறுமணம் செய்யாது வருகின்றனர். இப்படிச் செய்யாதிருந்ததாலுண்டாகிய தீங்குகள் எண்ணிறந்தன…

யவ்வனப் பருவடைந்த பிறகுதான் பெண்களுக்கு விவாகம் செய்யலாமென்றும், கணவரையிழந்த சிறுமியர்களுக்குப் புனர்விவாகம் செய்யலாமென்றும், இடந்தராது போன காரணம் யாதோ! அறிவிற் சிறந்த மகான்களே! யோசியுங்கள்!’’ என்று எழுதியுள்ளது. பாரதிக்கு முன்பே, பு.முனுசாமி நாயகர், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர், அயோத்திதாச பண்டிதர் போன்றோர் முற்போக்குச் சிந்தனைகளைப் பரப்பி இந்து சனாதனத்தைச் சாடியுள்ளனர்.

தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர் வாழ்வில் கொள்கை பரிணாமம் பெற்றிருக்கும் இளம் பருவத்திலிருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை மெல்ல மெல்ல அகன்றிருக்கும். ஆண்டு செல்லச் செல்ல, அவர்கள் சிந்தனைத் தெளிவு பெற்று ஒரு கொள்கை முடிவு எடுத்த பின் அவர்களின் இறுதிக் காலம் வரை அதில் பிறழ்வோ, முரண்பாடோ வந்ததில்லை. மேலும் மேலும் அறிவு, சிந்தனை, இவற்றில் வளர்ச்சியும், முதிர்ச்சியும், செம்மையும் மேம்பாடும் காணப்படும்.

ஆனால், பாரதி தொடக்க காலத்தில் மிக முற்போக்காக முழங்கிவிட்டு பின்னாளில் அதற்கு முற்றிலும் முரணாக மூட, சனாதன, பிற்போக்குக் கருத்துகளை கூறத் தொடங்கினார்.

பாரதியை முற்போக்குவாதியாகக் காட்ட முயல்வோர், அவரது தொடக்க காலக் கருத்துகளைக் கூறிவிட்டு, பிற்காலக் கருத்துகளை மறைத்து விடுகின்றனர். சிலர் சில வரிகளை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு பாரதியைப் புகழ்கின்றனர். பாரதியார் எப்படிப்பட்டவர் என்பதை அறிய இறுதிக்கால சிந்தனைகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

(தொடரும்…)

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் பாரதி - எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (102)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (102)

2022 மற்றவர்கள் ஜூன் 16-30

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் பாரதி
நேயன்

பாட்டுத் துறையில் பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே எப்படி அளவிறந்து போற்றப் பெறுகிறார் என்பதை கொஞ்சம் சொல்லித்தான் ஆகல் வேண்டும். அவர் பாட்டுத் திறமை மிகவும் பொதுவானதே. அவருக்கிருந்த கற்பனையாற்றலை வேண்டு-மானால் ஒருவாறு சிறப்பாகச் சொல்லலாம். ஆனால், கற்பனையாற்றல் இருப்பவர்-களெல்லாரும் பாத்திறன் பெற்றிருப்பார்-களென்று சொல்ல முடியாது. பாவலன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய திறமையுள் கற்பனைத் திறனும் ஒன்று. ஆனால் பாத்திறன் என்பது ஒருவன் கற்றுள்ள இலக்கிய நூல்களையும் அவனுக்குள்ள மொழிப் பயிற்சியையும் சொல்லாற்றலையும், இயற்கை யீடுபாட்டையும் உலகியலறிவையும், மெய்யுணர்ச்சியையும் பொறுத்து அமைவது. கற்பனைத்திறன் பொதுவாக எல்லாரிடத்தும் இருக்கும். மொழிப் பயிற்சியோ, சொல்லாற்றலோ, உலகியலறிவோ, மெய்யுணர்ச்சியோ, இலக்கியப் பயிற்சியோ எல்லாரிடமும் இருக்கும் என்று சொல்ல முடியாது. அவை பயிற்சியினாலும் கல்வியினாலுமே கைவருவனவாகும். இயற்கை ஈடுபாடோ சூழலால் அமைவதாகும்.
பாரதியாரிடம் கற்பனையாற்றலும் அதை வெளிப்படுத்தும் உணர்ச்சியும் ஓரளவு இருந்தன என்று சொல்லலாமே தவிர, மொழிப் பயிற்சியும், சொல்லாற்றலும், இலக்கியப் பயிற்சியும் அவ்வளவு மிகுந்திருந்தனவாகச் சொல்ல முடியாது. உலகியலறிவும், மெய்யுணர்ச்சியும் அவ்வளவு சிறப்புற விளங்கியிருந்தன என்றும் பாராட்ட முடியாது. இயற்கை ஈடுபாடும் ஓரளவே இருந்தது, ஆனால் அவர் கம்பனுக்கும் மேல், இளங்கோவுக்கும் மேல் பாராட்டப் பெறுவதன் நோக்கமெல்லாம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதைத் தவிர வேறு இருக்க முடியாது. பாட்டுத்திறத்தில் பாரதிதாசன் அவரைப் பலவகையிலும் வென்றிருக்கின்றார். ஆனால் அவர் ஒரு தமிழர்; அதுவும் தன்மான எழுச்சியுள்ள தனித்தமிழர் என்பதற்காகவே ஆரியப் பார்ப்பனராலும் நம் வீடணத் தமிழர்களாலும் அழுத்தி வைக்கப் பெற்றுள்ளார்.
தமிழ் இலக்கிய வுலகில் கம்பனைப் போல் கற்பனை வளம் படைத்தவர்களைக் காணமுடியாது. இளங்கோ போல் மொழி வளம் மிக்கவர்களும் அருமையே. ஆனால், கம்பனுக்கு விழா எடுப்பது போல் பாரதியாருக்கும் விழா எடுப்பது, போட்டி போட்டுக் கொண்டு செய்யும் ஓர் இன எழுச்சி ஈடுபாடே யொழிய, இலக்கியச் சிறப்பான ஒரு செயலன்று. தேசியப் பாவலர் என்பதில் வேறு ஆரியச் சூழ்ச்சி புதைந்து கிடக்கிறது.

கம்பனுக்கு விழா எடுப்பதிலுங்கூட ஆரியப் பார்ப்பனர்க்கே மிகுந்த அக்கறையுண்டு என்பதும் இன்னொரு வேடிக்கை. அவன் இராமாயணத்தை எழுதினான் என்பதே அவன் பாராட்டப் பெறுவதற்குத் தலையாய ஒரு கரணியம். ஏனெனில், இராமாயணத்தில் தான் வேறு எந்த நூலையும் விடத் தமிழர் இழிவு செய்யப் பெற்றுள்ளனர். அதனால் பார்ப்பனர்க்கு அதில் ஈடுபாடு மிகுதி. இதற்காகவே கம்பனும், ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே பாரதியாரும் பாராட்டப் பெறுகின்றனர். பார்ப்பான் ஒரு துறையில் உள்ள ஒருவனைப் பாராட்ட வேண்டுமானால் முதலில் அவன் பார்ப்பானாக இருத்தல் வேண்டும்; அல்லது அவன் ஒரு பார்ப்பன அடிமையாகவேனும் இருத்தல் வேண்டும். இவ்விரண்டு தகுதியும் ஒருவனிடம் இல்லையானால் அவன் பனைமர உயரத்தவன் என்றால் குட்டையன் என்பான்; பரந்த முடித் தலையன் ஆனாலும் மொட்டையன் என்பான்.
பாரதியாரின் பாட்டு ஆராய்ச்சியைப் பிறிதொருகால் பார்ப்போம். இக்கால் அவர் தமிழைப் பற்றி மிகச் சிறப்பாகப் பாடியிருக்-கின்றார்; தமிழ்மொழிக்கு மிகப்பெருமை சேர்த்திருக்கின்றார் என்று தமிழர்களே பாராட்டுகின்றனரே, அந்தப் பாராட்டில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை மட்டும் பார்ப்போம். அவர் தமிழ் உரைநடை இது.
“ஸூர்யோதயத்திலேயும் ஸூர்யாஸ்தமனத்திலும் வானத்தில் நடக்கும் இந்திரஜாலக் கட்சியில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசேஷமுண்டு”
– பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகள்
இவ்வாறான ஒரு நடையைப் பாரதியார் எழுதினால் என்ன? யார் எழுதினால் என்ன? இதனால் தமிழ்மொழிக்கு ஆக்கம் ஏற்படும் என்று எவராவது சொல்லமுடியுமா? தம் வடமொழி கலந்த நடை, ‘நம்மவர்க்குப் பிரியந் தருவதாகும்” என்று வேறு பாரதியார் குறிப்பிடுகின்றார். அவர் கண்ணோட்டத்தில் இவ்விந்திய நாடும் இங்குள்ள மக்களும் எவ்வாறு கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பின்வரும் உரையால் அறியலாம்.
“பாரத தேசத்தில் முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொறுப்பாளி-யாகப் பிராமணர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்-களானால் மற்றக் குலத்தவரும் நெறி தவறியிருக்க மாட்டார்கள். ஒரு தேசத்திற்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத்தேசத்-திலுள்ள பிராமணர்களே பொறுப்பாளிகள்”
– பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகள்
மேலே காட்டப்பெற்ற இரு குறிப்புகளே பாரதியார் தமிழ் மொழியைப் பற்றியும் தமிழ் இனத்தைப் பற்றியும் என்ன கருத்துக் கொண்டிருந்திருக்கின்றார் என்பதைத் தெளிவாகக் காட்டப் போதுமான சான்று-களாகும். ‘ஒரு நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு உயர்வு தாழ்வுகளுக்கும் ஆரியப் பார்ப்பனர்கள் தாம் பொறுப்பாளிகள்’ என்றால் மானமுள்ள எந்தத் தமிழன் அவரை வெறும் பாட்டுத் திறனுக்காகவோ கற்பனைத் திறனுக்காகவோ பாராட்டுவான்? தன் மொழியைப் பற்றியும் இனத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும், அவை யழிக்கப் பெற்ற வரலாறு பற்றியும் அவை புதுப்பிக்கப் பெற வேண்டிய முயற்சி பற்றியும் சிறிதும் கவலை கொள்ளாத ஆரிய அடிமைகளே அவரை ஒரு பாவலர் என்பதற்காகப் பாராட்டுவார்கள். வெறும் பாவலர் என்பதற்காகப் பாராட்டுப் பெற வேண்டியவர்கள் நம் இனத்தில் ஏராளம்! தடுக்கி விழுந்ததற் கெல்லாம் பாட்டு உண்டு. இங்கே, தமிழ் இலக்கியங்களில் உள்ள பாட்டுச்செறிவு போல் வேறு இந்திய மொழிகள் எவற்றிலும் அன்றும் இல்லை; இன்றும் இல்லை. பாவலர்களுக்குப் பஞ்சம் என்றும் இருந்ததில்லை . எனவே, அதற்காகப் பாரதியாரைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டிய தேவையும் நமக்கு இல்லை.
பாவலன் ஒருவனால் எதிர்காலத்திற்குக் கிடைத்த கருத்துகள் எவை? அவற்றால் அந்த மொழிக்கும், மக்களுக்கும், அந்நாட்டுக்கும் வந்து சேரும் பயன்கள் எவை? – என்பன பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டுமே தவிர, ஒருவர் ஒரு பாவலர் என்பதால் மட்டுமே நமக்குப் பெருமை வந்து விடப் போவதில்லை.
பாரதியாரின் உள்ளம் ஆரியர்க்காக எண்ணிய உள்ளம்; அவர் இந்த நாட்டை ஆரிய நாடு என்பதனாலேயே பெருமை கொள்வதாக அவர் பாடல்கள் தெரிவிக்கின்றன. பின்வரும் பாடலடிகளைப் பாருங்கள்.
“பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரிய நாடு என்று அறி”
“முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்”
“சித்த மயம் இவ் வுலகம்; உறுதிநம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் – துன்பம்
அத்தனை யும் வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்”
-“எம்மை ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரிய தேவி”
-“வீரிய வடிவம் – என்ன
வீரிய வடிவம் – இந்த
ஆரியன் நெஞ்சம், அயர்ந்ததென் விந்தை!”
“எங்கள் ஆரிய பூமி”
“ஆரிய பூமியில் நாரிய ரும்நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம்”
“உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே”
“ஆதிமறை தோன்றியதால் ஆரியநா டெந்நாளும்
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு”
_ எப்படி? பாரதியாருக்கு இது தமிழ் நாடாகவோ இந்தியாவாகவோ படவில்லை. அப்படிப்பட்டாலும் அவருக்குச் சொல்ல விருப்பமில்லை.
(தொடரும்…

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் பாரதி - எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (103)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (103) :பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் பாரதி

Uncategorized

நேயன்

இந்திய நாடு அனைத்தையும் பாரத நாடு என்று சொல்வதைவிட ஆரிய நாடு என்று சொல்வதில் தான் அவர்க்குப் பெருமையிருந்-திருக்கின்றது. உண்மை அப்படியிருந்து அவ்வாறு அவர் சொல்லிப் பெருமைப்பட்டிருந்-தாலும் தாழ்வில்லை. ‘அவர் உண்மையைத்-தானே சொன்னார்; அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்’ என்று கேட்கலாம். அவர் உண்மையல்லாத ஒன்றை உண்மைபோல் பலமுறை பன்னிப் பன்னிப் பேசியிருக்கின்றார். இப்படிப் பாடல்களைப் பாடுவதாலும் பலமுறை சொல்வதாலும் வரலாற்று உண்மை-களையே மறைக்க முயற்சி செய்துள்ளார். நாடற்ற ஆரியர்களுக்கு இந்நாடு உரிமை-யுடையது என்றால், இந்நாட்டையே பிறந்தகமாகக் கொண்ட தமிழர்களுக்கு எந்த நாடு உரிமையுடையது? தமிழ்நாடு என்பதாகவே ஒரு நாடு இருப்பதாக அவர் நினைவு கொள்ளவில்லை. இந்திய நாட்டில் அடங்கிய பத்தொன்பது திரவிட நாட்டுப் பகுதிகளும் ஆரியர்களுடையனவே என்று வல்லடி வழக்கு நடத்தியிருக்கின்றார்.
‘ஆரியர்’ என்பது பெருமைக்காகச் சொல்லப் பெற்றதாகத் தெரியவில்லை. இந்திய நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரு பெயர் சொல்ல வேண்டுமே என்றுங் கூட அந்தப் பெயரைச் சொன்னதாகத் தெரியவில்லை. உண்மையிலேயே அவர்தம் இனப் பெருமையை நிலைநாட்டவே அவ்வாறு சொல்லியிருக்கின்றார். இன்னொருவர்க்குச் சொந்தமான ஒரு வீட்டை அல்லது பொதுவான ஒரு சாவடியை ஒருவன் தன் வீடு என்று சொன்னாலும் தாழ்வில்லை; தன் இனத்தாருடைய வீடு என்று சொல்வானானால், அவன் தன் இனத்தார்க்கு அதன் பெருமை அனைத்தும் வந்து சேர வேண்டும் என்று நினைக்கின்றவனா இல்லையா? இதை எவரேனும் மறுக்க முடியுமா? இந்நாட்டை ஆரிய நாடாகக் கருதியதை, அவர் பொது நோக்கங்கொண்டு சொன்னது என்பது, பித்தலாட்டமும் புரட்டுமாகும். வருங்காலத் தமிழ்க் குமுகாயத்தை இனி இவ்வாறெல்லாம் ஏமாற்ற முடியாது. மேலும் அவர் கூறியதைக் கவனியுங்கள்.
“ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!”
“வீரியம் ஒழிந்து மேன்மையும் ஒழிந்து, நம்
ஆரியர் புலையருக் கடிமைகள் ஆயினர்”
“பிச்சைவாழ் வுகந்து பிறருடைய ஆட்சியில்
அச்சமுற்றி ருப்போர் ஆரியர் அல்லர்’’
“மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்”
ஆரியரை இந்தியாவுக்கே உரிமையாக்கி, இந்தியாவை ஆரியர்க்கே உரிமையாக்கிப் பேசும் உணர்ச்சி பாரதியாரிடம் நிறைய இருந்திருக்-கின்றது. ஆரியர் என்றால் அவர்களிடம் ஒரு தனித்தன்மை, சிறப்பு, எல்லாருக்கும் உயர்வான ஒரு தேவப் பெருமை இவையெல்லாம் இருப்பனவாகக் கற்பனை செய்து கொள்ளும் மனநிலை அவர் பாடல்களில் ஒலிக்கின்றது. இந்தியப் பண்பாடு, நாகரிகம் , வீரம், சமயம் முதலிய அனைத்துப் பண்புகளையுமே அவர் ஆரியமாகப் பார்க்கின்றார். அப்பண்புகள் குறைந்தவரை அவர் ஆரியரினும் தாழ்ந்தவராகப் பேசுகின்றார்.
“ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
யாரிவண் உளர்? அவர் யாண்டேனும் ஒழிக!”
“ஆரியர் இருமின் ஆண்களிங் கிருமின்;
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!”
_ என்று பலவாறாக ஆரியர்களையே _ அல்லது அவரைச் சார்ந்தவர்களையே இந்நாட்டுக் குடிமக்களாக எண்ணிக் கொண்டு அவர் யாக்கும் வரிகள் இங்குள்ள எல்லாப் பிரிவினர்களையும் இழிவு செய்வனவாகும். வரலாற்றடிப்படையில் இந்நாட்டுக்கு உரிமை-யான ஓரினம் உண்டென்னும் ஒரு கருத்தை அவர் அடியோடு மறுப்பனவாகவே இவ்வரிகள் அமைகின்றன.
தமிழ்மொழியைப் பாராட்டுகையிலும், அஃது ஆரியச் சார்பு உடையதனால்தான் பெருமை கொண்டு விளங்குகின்றது என்னும் பொருள்படவே எழுதுகின்றாரே தவிர, அதன் தனித் தன்மை, பழைமைச் சிறப்பு, தாய்மை நிலை, வளமைக் கொழிப்பு முதலியன நிறைந்திருக்கும் தன்மையை அவர் ஒப்புக்-கொள்வ-தில்லை. ஆதிசிவன் பெற்ற தமிழை ஆரிய மைந்தன் அகத்தியன்தான் சிறப்புறச் செய்தான் என்பது பாரதியார் கருத்து. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தது கி.மு. 1500இலிருந்து 2000க்குள் எனக் கூறலாம். அவர் தென்னாடு வந்தது அதற்குப் பின்னர்தான். அக்காலத்திற்கு முன்பே தமிழ் மிகவும் சிறப்புற்று விளங்கியிருந்தது. அவர்கள் தென்னாடு வந்த பின் அஃதாவது கடைக் கழகக் காலத்திற்குப் பின்னர்தான் தமிழ் மொழி, தமிழ் நாகரிகம், தமிழர் பண்பாடு முதலிய யாவும் சிதையத் தொடங்கின. இவர்கள் கூறிப் பெருமைப்படும் சமசுக்கிருத மொழி அதன் பின்னர்தான் செயற்கையாக உருவாக்கப்-பெற்றது. இந்த வரலாற்று நிலைகளை யெல்லாம் உணராமல் அல்லது உணர்ந்தும் ஒப்புக்கொள்ளாமல் அல்லது ஒப்புக்கொண்டும் அவற்றை அடியோடு மறைக்கின்ற முயற்சியில் தமிழ்த்தாய் உரைப்பதாகப் பாரதியார் இப்படி எழுதுகிறார்.
“ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”
அகத்தியர் அகத்தியம் என்னும் இலக்கணத்-தையும் நாரதர் பஞ்ச பாரதீயம் என்னும் இசைத்தமிழ் இலக்கண நூலையும் இயற்றியது உண்மைதான். தமிழில் ஏற்கனவே இருந்த நூல்களை ஒட்டியும் தழுவியுமே அந்நூல்கள் எழுதப் பெற்றன. அவ்வாறு செய்தது தம் ஆரியக் கருத்துகளைத் தமிழ்மொழியின் மூல நூல்களான இலக்கண நூல்களிலேயே நுழைத்தற்கு வேண்டியே தவிர, தமிழை வளர்க்க வேண்டியன்று. இம்முயற்சி இக்காலத்தும் நடந்து வருகின்ற வெளிப்-படையான முயற்சியாகும். தஞ்சை ‘சரசுவதி மகாலில்’, பழைய ஓலைச் சுவடிகளைப் பெயர்த்தெழுதுகின்ற முயற்சியில், இவ்வாறு பழந்தமிழ்ச் சுவடிகளினின்று வடமொழியில் பெயர்க்கப் பெற்றபின், அச்சுவடிகளையே அழித்துவிடுகின்ற இரண்டகச் செயல் இன்றும் நடந்துவருவதாக அங்கிருந்து பணியாற்றிய புலவர்களே அறிவிக்கக் கேட்டிருக்கின்றோம். இந்தக் கொடுமை மாந்தன் நிலாக் கோளில் இறங்கிய காலத்தும் துணிவாகவும் சூழ்ச்சியாகவும் நடைபெறுகின்றதெனில் அக்காலத்தில் நடைபெற்றிருக்க முடியாதென்று ஒரு கருத்துக் குருடனும் ஒப்பமாட்டான். மேலும் உ.வே.சா. போலும், பாரதியார் போலும் தமிழ்த்திறமும் ஈடுபாடும் கொண்டவர்கள் வாயிலிருந்தே இத்தகைய கருத்து வருவதற்கு வேறு பக்க வலிவுகளே தேவையில்லை.
அவ்வாறு அகத்தியர் போன்ற ஆரிய முனிவர்கள் தமிழ் இலக்கணம் செய்த பின் தான் தமிழ்மொழி ஏற்கனவே உயர்ந்து விளங்கிய ஆரிய மொழியான சமசுக்கிருதத்-திற்கு நிகராக விளங்கியதாம். பாரதியார் கருத்திது. நம்புபவர்கள் எத்தனையோ பேர் இருப்பர்.
“ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்”
_ என்பது அவர் கூற்று. இப்படி எழுதப் பாரதியார் வரலாறு தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
பாரதியாருக்கு ஆரியவுணர்ச்சி அளவிறந்து இருந்ததுடன் வேதங்களே இந்திய நாட்டின் உயர்வுக்கு அடிப்படையானவை என்னும் மூடக் கொள்கையும் மிகுதியாகவிருந்தது.
“தெள்ளிய அந்தணர் வேதம்” – என்றும்,
“ஓதுமினோ வேதங்கள்
ஓங்குமினோ! ஓங்குமினோ!” – என்றும்,
“பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல் இது போலே?” – என்றும்,
“நாவினில் வேத முடையாள் – கையில்
நலந்திகழ் வாளுடை யாள்” – என்றும்,
“அவள்; வேதங்கள் பாடுவாள் காணீர் – உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்’ – என்றும்,
“வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே!” – என்றும்,
“மீட்டு முனக் குரைத்திடுவேன் ஆதிசக்தி
வேதத்தின் முடியினிலோ விளங்கும் சக்தி!” – என்றும்,
“வேதமுடைய திந்த நாடு – நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாத ஹிந்துஸ் தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!” – என்றும்,
அவர் வேதப் பெருமைகளாகக் கூறுபவை யெல்லாம் ஆரியத்தின் பெருமைகளைப் பறை சாற்றவே கூறியவையாகும். வேதங்களை மட்டுமின்றி ஆரிய நூல்கள் அனைத்தையும் பாராட்டும் வகையில்,
“அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்
ஆணிமுத்துப் போன்ற மணி மொழிகளாலே
பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்,
பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்
இன்னும்பல் நூல்களிலே இசைத்தஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?”
_- என்று பலவாறாக உண்மைக்கு மாறாகக் கட்டி உரைப்பது அவர் ஆரிய மதி மயக்கத்தினின்று விடுபடவில்லை என்பதையே காட்டுவதாகும்.
(தொடரும்…)

பாரதி – யார்? எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (104)

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (104)

2022 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ஜுலை 16-31

பாரதி – யார்?
நேயன்


“சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாரதி பாடியதை எடுத்துக்காட்டி போற்று-வோர் உண்டு.
பாரதிக்கு முன், காலத்தால் முந்தியும் கருத்தால் ஓங்கி வளர்ந்த வள்ளலார் பாடியதை யார் புகழ்ந்துரைக்கிறார்கள்? வள்ளலார் 1865ஆம் ஆண்டிலேயே ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ நிறுவியவர், அவர் பாடுகிறார்.
“சாதியு மதமுஞ் சமயமுந் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையுந் தணந்தேன்’’ என்றும்,

“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலா மண்மூடிப் போக” என்றும்,

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமுமக் கூட்டத்தே கூவுகின்ற கணியுங்
கள்ளமுறு மாக்கலைகள் காட்டியபல் கதியுங்
காட்சிகளுங் காட்சிதரு கதியுங் கடவுளுரு யெல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
பிள்ளையெனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
என்றும்,
நால்வருண மாச்சிரம மாச்சார முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணந் தோல்வருணங் கண்டறிவாரிலை நீ
விழித்திதுபா ரென்றெனுக்கு விளம்பியசற் குருவே
என்றும் சாடிய வள்ளலாரைப் பற்றிப் புகழ்வதற்கு யாரும் முன் வருவதில்லை. பதினெண் சித்தர்கள் பாடிய பாடல்க-ளெல்லாம் மூடநம்பிக்கைகளையும், முடைநாற்றம் வீசும் கடவுள் கதைகளையும் வெறுத்து ஒதுக்குவதை யாரும் நினைவூட்டுவதில்லை. “சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாடிய பாரதி,. அவர்களுக்கு மூலமாக விளங்கும் நால் வருணத்தைப் போற்றுகிறான்.
“நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி’’
என்று பாடுகிறான். நான்கினில் ஒன்று குறைந்தால் மானிடச் சாதியே செத்து மடியும் என்கிறான் பாரதி.
அய்யா அவர்கள்தான் கூறுவார், “ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி’’ என்று பாடுகிறானே, ஆயிரம் சாதிகள் இருந்தால் ஆயிரம் பிளவுகள் இருக்கின்றன என்று பொருள்.
அப்போது அந்நியன் புகாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பானா?’’ என்று.
எனவே, நான்கு வகுப்பும் இருக்க வேண்டும். நான்கு வகைத் தொழிலையும் பரம்பரையாய் செய்ய வேண்டுமென்றால் அந்தப் பாரதியை சாதி ஒழிப்புக்குப் பாடியவன் என்று எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?
“பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்
பார முனக் காண்டே’’ – என்றும்
தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லி
சோதனை போடாண்டே
காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லென்னைக்
கட்டியடி யாண்டே
ஆண்டே – கட்டியடி யாண்டே’’
எனப் பாடுகிற பாரதி ஆச்சாரியாருக்கு முன் குலத் தொழில் பற்றிப் பாடியவன் என்றுதான் கூறவேண்டும். விதிக்கு விளக்கமளிப்பதைப் போல வேறொரு பாட்டில் குறிப்பிடுகிறான்.
“மரத்தினை நட்டவன் தண்ணீர் – நன்கு
வார்த்தே ஓங்கிடச் செய்வான்’’
என்று இது மட்டுமா?
பக்தியினாலே-இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ”
என்றும் பாடுகிறான்.
“ஆயிரம் தெய்வத்தைத் தேடும் அறிவிலிகாள்” என்றவன்,
காட்டு வழிதனிலே – அண்ணே
கள்ளர் பயமிருந்தால் – எங்கள்
வீட்டுக் குடிதெய்வம் – தம்பி
வீரம்மை காக்குமடா!’’ என்றும்,
“வெள்ளைக் கமலத்திலே-அவள்
வீற்றிருப்பாள்-புகழேற்றிருப்பாள்” என்றும்,
மாகாளி, மகாசக்தி இன்னபிற தெய்வங்களையும்
பாடி மகிழ்கிறான். காடனை, மாடனை
வெறுத்த பாரதி அக்கார அடிசிலுக்குரிய தெய்வங்களைப்
புகழ்ந்து ஏற்றுகிறான்.
வேள்விகள் கோடி செய்தால்-சதுர்
வேதங்க ளாயிரமுறை படித்தால்
மூளு நற்புண்ணியார் தான்-வந்து
மொய்த்திடும் சிவணியில் விளங்கி நிற்கும் என்றும்,
“ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்’’ என்றும்,

பார்ப்ப னக்குலங் கெட்டழி வெய்திய
பாழ டைந்த கலியுக மாதலால்
வேர்ப்ப வேர்ப்பப் பொருள் செய்வ தெண்ணியே
மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டன’’
என்றும் தம் சுயசரிதையில் பாடியவன் “பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’’ என்று பாடியிருப்பது மனநோய்ப் புலவன் என்பதை நிரூபித்துக் காட்டுகிறது.
உண்ணச் சாதிக் குறக்கமும் சாவுமே
நண்ணு றாவணம் நன்கு புரிந்திடும்
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே’’
என்று கண்ணன் பாட்டில் கீதையின் அருள்மழையைப் பாடுவதால் “சதுர்வருணம்’’ (நால் வகைச் சாதி) போற்றும் கீதையை ஏற்றுக் கொள்ளுகிறேன் என்பதை பாரதி ஒப்புக்-கொள்ளுகிறான்.
எந்த நாடு (தேசம்) விடுதலை பெற விழைகிறான் பாரதி தெரியுமா?
“எங்கள் ஆரிய பூமியெனும் பயிர்
மங்களம் பெற நித்தலும் வாழ்விக்கும்’’ என்றும்,
“பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
அய்யுற வின்றிக் களித்திருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்” என்றும்,
“வேதம் முடையதிந்த நாடு-நல்ல வீரர்
பிறந்த திந்த நாடு” என்றும்,
“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்’’
என்றும் பாடிய பாரதி இந்துமதம் பற்றியும் பாடுகிறான்.
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமை தனைப்
பாரறியப் புகட்டும் வண்ணம்
தந்து புகழ் வளப்பாண்டி நாட்டினிற்
காவைக் குடியூர் தனிலே சால”
என்று சனாதன மதத்தையே போற்றுகிறான். எனவே, பாரதி யார்? என்று வினவினால் பாரதி சாதியைச் சாடுவது போல் நான்கு வருணம் போற்றியவன்.
அவன் ஆயிரம் தெய்வங்களை வெறுத்தது போல் பாடி ஆரியக் கடவுள்களைப் புகழ்ந்து பாடியவன்.
உயர்வு தாழ்வு கூடாது என்று பாடியவன் சாதிக்கு வித்திடும் கீதையைப் போற்றுகிறான். வேதத்தையும், வேள்விகளையும் போற்றுகிறான். இவைதாம் தமிழர்கள் ‘தன்மானம்’ இழக்கக் காரணமாக இருந்தவை. இவற்றைப் போற்றுகின்ற பாரதி என்ற பார்ப்பான் எப்படி ‘தன்மானம்’ பற்றி தமிழர்களுக்குப் பாடினான் என்று கூறமுடியும்?
எனவே, பாரதி ஓர் இந்துமதப் பற்றாளன். அவன் பாடிய பாடல்கள் ஆரிய பூமியையும், கீதை உபதேசத்தையும் கொண்டிருப்பது வெள்ளிடைமலை.
பாரதி சாடியதாக எவரேனும் எண்ணினால் ‘வஞ்சப் புகழ்ச்சி’ அணிகொண்டு பாடியிருக்கிறான் எனக் கொள்ள வேண்டும்.
ஆரியத்தின் அடிவருடிகள் விழா எடுக்கலாம். அதற்காகப் பகுத்தறிவுவாதிகளைச் சாடுவது இருக்கும் இடத்திற்கு அழகல்ல.
இவை பற்றித்தான் இராவண காவியம் பாடிய பெரும் புலவர் குழந்தை அவர்கள் காவியத்தின் ஓரிடத்தில் பாடுகிறார்.
“நீறு பூத்த நெருப்பன தீயரை
வேறு பார்த்து விலக்கிவை யாதுநற்
சோறு பார்த்துச் சுவைத்துண வைத்ததாற்
கூறு பார்த்துத் தமிழரைக் கொன்றனர்”
என்று தெளிந்து பாடியதை வள்ளுவனும் “செப்பின் புணர்ச்சி போல்’’ எனும் உவமையால் சுட்டுகிறான்.
செப்பின் புணர்ச்சிபோல் உள்ள அயலரின் செப்பிடு வித்தையை உணரும் நாள் எந்நாளோ அந்நாளே பாரதி_யார்? என உணரும் நாளாகும். பாரதி மட்டுமன்றி இன்றைய ஆட்சிச் சாரதியும் உள்ளடக்கம்.
– தஞ்சை ஆடலரசன்

பெண்ணுரிமையும் பாரதியும்! (91)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (91)

ஜனவரி 1-15,2022

பெண்ணுரிமையும் பாரதியும்!

நேயன்

பாரதி முரண்பாடுகளின் மொத்தம் என்பதை முன்னமே சொல்லியுள்ளோம். அதிலும் பெண்ணுரிமை குறித்து பாரதி இரண்டு உச்சத்திற்கு சென்றுள்ளார். ஒன்று முற்போக்கின் உச்சம். மற்றது பிற்போக்கின் உச்சம்.

முரண்பாடு என்பது பரிணாமம் பெற்றிருப்பின் அது ஏற்கப்படக்கூடியது. ஆனால், பாரதி தொடக்க காலத்தில் அதி தீவிரமாகப் பெண்ணுரிமை பேசிவிட்டு, பின் தலைகீழாக மாறி எழுதுகிறார். அதுதான் சந்தர்ப்பவாதம்; அறிவு வயப்படாமல், உணர்ச்சி வசப்பட்டு கருத்துகளைக் கூறும் பக்குவமின்மை.

பெரியார், பாரதிதாசன் இவர்களின் தொடக்க காலத்திற்கும், அதன்பின் இறுதிக் காலம் வரை அவர்கள் பெற்றிருந்த புரட்சிப் பரிணாமத்திற்கும் ஓர் ஏற்றமான வளர்ச்சி நிலை இருந்தது.

ஆனால், பாரதி தொடக்கக் காலத்தில் முற்போக்கும் எழுச்சியும் கொண்டு எழுதிவிட்டு, பிற்காலத்தில் முரண்பாடுகளும், பிற்போக்குச் சிந்தனைகளையும் கொண்டு எழுதினார்.

“1904 முதல் 1906 வரை “சக்கரவர்த்தினி’’ என்ற பெண்களுக்கான இதழுக்கு பாரதி ஆசிரியராக இருந்தார். அக்காலத்தில் அவர்,

“பரிபூரண ஸமத்துவம் இல்லாத இடத்தில், நாம் ஆண் மக்களுடன் வாழ மாட்டோம்! என்று சொல்லுவதானால் நமக்கு நம்முடைய புருஷராலும், புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மை உடையன வாயினும் நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; தர்மத்திற்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். பிறரும் இறக்கத்தான் செய்கிறார்கள், ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள்! நாம் வெற்றி பெறுவோம்’’ எனப் பாரதி பெண் விடுதலைக்காகப் பாடுபட பெண்களை அழைக்கிறார்.

மேலும் பாரதி,  “நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மத முண்டானால் உன்னுடன் வாழ்வேன் இல்லாவிட்டால், இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன்; எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன்; நீ அடித்து வெளியே தள்ளினால் ரெஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவும் வேண்டும்.”

பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஆண்கள்தான் ஒழுங்காக இருக்க வேண்டும்.

“அடப் பரம மூடர்களே! ஆண்பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் பதிவிரதைகளாக எப்படி இருக்க முடியும்? பதிவிரதயத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகிறது.’’

“எண்ணிறந்த ஸ்திரீஹத்தி புரிந்து, இத்தேசத்துக்கெல்லாம் அழிக்க முடியாத பெரும் பழி கொடுத்த ஸதி தஹனமென்னும் அரக்கனை மிதித்துக் கொல்லும்படியாக முதலிலே துக்கப்பட்ட ராம் மோஹனரின் திருவடியை நாம் மறந்துவிட்டால் நமக்கு உய்வுண்டாமா? எனப் பெண்களிடம் கேட்கிறார் பாரதியார்.

அது மட்டுமல்ல, ஸதியில் எரிக்கத் தயார் நிலையில் சுடுகாட்டில் இருந்த ஒரு இராசபுத்திரப் பெண்ணை (அக்பர் ஆட்சியில் சதிக்குத் தடை இருந்தது எனப் பாரதி குறிப்பிட்டுள்ளார்), ஒரு முகமதிய வாலிபன் அந்த இராச புத்திரர்களைக் கொன்று அந்தப் பெண்ணை மீட்டுச் செல்கிறான்; அந்த முசுலிம் வாலிபனுக்கும், அந்த இராசபுத்திரப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்து, திருமணம் நடப்பதாகத் துளஸிபாயி என்னும் கதையின் வாயிலாகவும் உடன்கட்டை ஏறுதலை பாரதி எதிர்த்தார்.

1906 மேற்கண்டவாறு உடன்கட்டை ஏறுதலைக் கண்டித்து எழுதிய பாரதி, பின்னாளில் உடன்கட்டை ஏறுதலை ஆதரிப்பவராக மாறி விடுகிறார்.

1910 பிப்ரவரியில் ‘கர்மயோகி’ இதழில் பாரதி எழுதியதாவது:

“நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரீகளே மஹா ஸ்திரீகளாவார்கள்” என்று உடன்கட்டை ஏறுதலை ஆதரிப்பவராக மாறிவிடுகிறார்.

தொடக்கக் காலத்தில் பாரதியார் குழந்தை மணத்தை எதிர்த்தார். கலப்புத் திருமணங்களை ஆதரித்தார். பெண்கள் விவாகரத்து செய்து கொள்வதையும் ஆதரித்துள்ளார். ஏன், பெண்கள் திருமணத்தை விரும்பவில்லை என்றால் திருமணமே செய்து கொள்ளாமல் கூட விட்டு விடலாம் என்று கூறியவர், பிற்காலத்தில் தன் கருத்துகளைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொள்கிறார்.

கற்பு நிலை யென்று சொல்ல வந்தால் – இரு

கக்ஷிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் (கும்மி)

இவ்வாறு பெண் விடுதலைக் கும்மிப் பாடலை இயற்றிய பாரதிதான் பின்னாளில்,

“ஸாவித்திரி, ஸீதை, சகுந்தலை முதலிய பெண்களின் சரிதைகளைக் கேட்கும் போது, இத்தகையோர்களுக்கு இம்மாதிரி மனப்போக்கு எவ்விதம் ஏற்பட்டதென்று நினைத்து நினைத்து மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. இம்மாதிரியான கற்புடைமை. இத்தேசத்துப் பெண்களுக்கு என்றும் ஒரு சிறந்த புவனமாக விளங்கி நின்றமை நமது நாட்டிற்கே ஒரு பெருமை ஆகும்’’ என பழைய சனாதன பெண்ணடிமை முறைகளை ஆதரிக்கிறார்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் பெண்ணடிமை நிலையை கற்பின் அடையாளமாகப் பிழைபடக் காட்டுகிறார் பாரதி.

1909 ‘ஆகஸ்ட் இந்தியா’ இதழில், ஒழுக்கம் உள்ள பெண்களைப் பற்றிப் பாரதி கூறும் போது, “ஓ இந்தியனே! சீதை, சாவித்திரி, தமயந்தி இவர்களும், இன்னும் இவர்களைப் போன்ற ஸ்திரீ ரத்தினங்களும் உன் பெண்மணிகளாவர். ஒழுக்கத்திற்கு அவர்களை நமக்கு முன்மாதிரியாக வைத்துக் கொள்ளலாம்’’ என்கிறார்.

இன்னும் பிற்காலத்தில் 1920 மே மாதத்தில் தேசியக் கல்வி’ என்ற தலைப்பில் பாரதி எழுதும் போது பெண்கள் விவாகரத்து செய்து கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அதுகுறித்து அவர், “காதல்  விடுதலை வேண்டுமென்று கூறும் கக்ஷியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித் பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது. அக்னி சாக்ஷி வைத்து உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை என்று சத்யம் பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் சஹிக்கத்தக்க அல்லது சஹிக்கத் தகாத பந்தங்களாகவே முடிகின்றன வென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்ளுதலே நியாயமென்றும், இல்லாவிட்டால் மனுஷ்ய ஸ்வதந்திரமாகிய மூலாதாரக் கொள்கைக்கே ஹானி உண்டாகின்ற தென்றும், ஆதலால் விவாகம் சாச்வபந்தம் என்று வைத்தல் பிழையென்றும் மேற்படி கக்ஷியார் சொல்லுகிறார்கள்.

ஆனால் தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம், மேற்படி விடுதலைக் காதற் கொள்கையை அங்கீகாரம் செய்தல் சாத்தியமில்லை…. விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மண வாழ்க்கைக்கும் பொருந்தாது’’ என்கிறார் பாரதி.

(தொடரும்…)

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (105) யார் புரட்சிக்கவி?பாரதியா? பாரதிதாசனா?

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (105)

2022 ஆகஸ்ட் 01-15 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை

யார் புரட்சிக்கவி?
பாரதியா? பாரதிதாசனா?
என்ற தலைப்பில் ஜெ.இராமதாஸ் எம்.ஏ.பி.எல்., அவர்கள் விடுதலையில் எழுதியவை:
நேயன்


தந்தை பெரியாரின் படையில்…
பெரியாரின் பெரும் படையில் பல திறத்தினர் பங்கு கொண்டனர். ஆண், பெண், முதியோர், இளைஞர், பாமரர், பணக்காரர், படித்தோர், படியாதோர் அனைவரையும் அவ்வியக்கம் தன்பால் ஈர்த்தது. கல்லூரி கண்ட பலபேர்களைத் தன்வயப்படுத்தியது. கவிஞர் பலரை உருவாக்கியது. அந்தப் படை வரிசையில் முன்னணியிலிருந்தவர்கள், தளபதியாகத் திகழ்ந்தவர்கள் அறிஞர் அண்ணாவும், பாவேந்தர் பாரதிதாசனும் இவர்கள் ‘உலா’வை ‘மூவர் உலா’ எனக் குறிப்பிட்டது அன்றைய தமிழ்நாடு; சாக்ரட்டீஸ், பெர்னாட்ஷா, ஷெல்லி எனக் கூறி மகிழ்ந்தனர், மக்கள்.
பெரியாரின் புரட்சிக் கருத்துகளை இயற்றமிழ், நாடகத் தமிழில் ஏற்ற மிகச் செய்தவர் அறிஞர் அண்ணா. ‘பா’ அமைத்து பண்ணிசைத்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இன்று பெரியாரின் வழியிலே பல பேராசிரியர்கள், பட்டதாரிகள், ஆற்றல் படைத்த இளைஞர்கள் பணிபுரியக் காண்கிறோம். நாட்டிற்கு நல்வாய்ப்பு ரூசோ, வால்டேர், கார்க்கி எழுத்துகள் பயன்பட்டது போன்று.

மதவாதிகள் நடுங்கினர்
பெரியாரின் தொண்டு மதவாதிகளைக் கலக்கியது. கலக்கியது, மட்டுமல்லாமல் உள்துறை சீர்திருத்தமும், செய்யத் தூண்டியது. (Interior Reformation) அதன் பலன் தான் தெய்வீகப் பேரவை. காவி கட்டிய குன்றக்குடி அடிகளாரின் சீர்திருத்தப் பேச்சுகள். “திருப்பாவை _ திருவெம்பாவை கூட்டு, ஜாதியில்லை, தீண்டாமை இல்லை என்ற பேச்சு அரசியல் சட்டங்கள், பட்டை, கொட்டை, பூச்சு மறைந்தது. ‘கண்டு முட்டு’ ‘கேட்டு முட்டு’ பறந்தது.

புரட்சிக்கவிஞர்
பாவேந்தர் காலத்திற்கு முற்பகுதியில் தோன்றிய மற்றொரு தமிழ்க்கவி பாரதியார் _ சுப்பிரமணிய பாரதி இவர் காலத்தில் தான் சூழ்நிலைக் குழந்தை பிறந்த இடம், வாழ்ந்த காலம் இவற்றின் பயனாய் உருவானவர். காந்தியத்தில் தோய்ந்த தேசியக் கவி, தமிழ்நாட்டின் முந்தைய கவிஞர்களிலிருந்து மாறுபட்டவர் இலகு தமிழில் பண்ணிசைத்தவர். பாமரருக்குப் புரியும்படி பாடினார். கவிதை புனைந்தார். ஆனால், இவரைப் புதுமைக் கவி என்றோ, புரட்சிக்கவி என்றோ கூறவியலாது. மேலே கூறிய புரட்சி விளக்க அளவுகோலைக் கொண்டு நோக்கினால் பாரதி, தேசியக் கவி. பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றியவர் _ சனாதனி _ ஆரிய மதக் காவலர் _ பழமை விரும்பி. பல கடவுள் மதம், சாஸ்திரம், புராணம், மூடபழக்க வழக்கங்கள் மாறக் கூடாது. ‘சதுர்வர்ணம் _ மாயாவாதம்’ நீடிக்க வேண்டுமென்ற எண்ணம் படைத்த மிகப் பிற்போக்குவாதி.

பச்சைப் பார்ப்பனர்
புதுமைக் கருத்துகளுகெல்லாம் புரட்சி எண்ணங்களுக்கெல்லாம் பழைய முலாம்பூசி பாடி மகிழ்ந்த கவி _ வேதத்தில் _ ஆரிய மதத்தில் அசையாத நம்பிக்கையுடையவர். எனவேதான் பெரியார் அவர்கள் ‘பார்ப்பான் புத்தி போகாது’ என்பார்கள். ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைத்த பச்சைப் பார்ப்பனர், புதுமை புரட்சி எண்ணங்கள் மிளிர்வதை இலகு தமிழில் கவிதை பாடி அணை போட்டுத் தடுக்க முயன்றவர்.

முற்போக்கு பேசும் பார்ப்பனர்கள்!
இதைப் படித்தவுடன் பலருக்கு அய்யமேற்படலாம். ஏதோ கதைப்பதைப் போல் தோன்றலாம்! ஆனால், அத்துணையும் உண்மை!! அவரது பாடலிலிருந்து அசைக்க முடியாத ஆதாரத்துடன் எடுத்தியம்பலாம். அவருடைய வாதம் எதிர்மறை வாதம் (Negative approach) சட்டத்தில் ஆண் யாரென்றால் பெண் அல்லாதவர்கள் என்றும், பெண் யாரென்றால் ஆண் அல்லாதவர்கள் என்றும் கூறுவது போலிருக்கும். யாருக்கும் புரியாது! படிக்கப் படிக்கக் குழம்பும்! வழவழா கொழ கொழ வெண்டைக்காய் அத்தனையும் எப்படியும் பொருள் கொள்ளலாம். ஆனால், மிகப் பரவலான கருத்துகள் பழமை விரும்பியாக இருக்கும். காலநிலைக்கேற்ப பூதக்கண்ணாடி வைத்துத் தேட வேண்டிய அளவில் புதுமைக் கருத்து தூவப்பட்டிருக்கும். அறிஞர் அண்ணா கூறியதுபோல் முற்போக்கு பேசும் பார்ப்பனர் மிக ஆபத்தானவர்கள். காலத்திற்கேற்ப முறையை மாற்றிக்கொண்டவர்கள்.
பாரதியாரின் நூல் தலைப்பில் எல்லாம் பழமைப் புழு நெளியும். மூடநம்பிக்கை முடைநாற்றம் வீசும், புரையோடிய சமுதாயத்துக்கு புனுகு பூசப்பட்டிருக்கும். பாரதி பிரசுராலயத்தார் தோத்திரப் பாடல்கள் ஏழாம் பதிப்புக்கு எழுதிய முன்னுரை ஒன்றே போதும் பாரதியாரை யார் என்று புரிந்துகொள்ள. “பக்தி மலர்ந்த நம் பரத கண்டத்தில் தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு பாமாலை சூட்டுவது புலவர்களின் இயற்கைக் குணமாகும். பாரதியாரும் இந்துக்கள் சாதாரணமாக வணங்கும் எல்லாத் தெய்வங்களைப் பற்றியும் பாடல்கள் இசைத்துள்ளார்.’’

பாரதி எழுதிய நூலின் தலைப்புகள்: தேசியகீதம், பாஞ்சாலி சபதம், சுயசரிதை, தோத்திரப் பாடல்கள், விநாயகர் நான்மணிமாலை (அதுவும் புதுவை மனக்குளப் பிள்ளையார்) கண்ணன் பாட்டு. பிற பாடல்கள் தலைப்பு: ஸ்ரீநிவேதிதா தேவியின் துதி, கவிதாதேவி அருள் வேண்டல், ராதைப்பாட்டு, வள்ளிப்பாட்டு, அக்னிக்குஞ்சு சாதாரண வருஷத்து தூமகேது, ஸ்ரீசுப்பராம தீக்ஷிதர் இரங்கற்பா, குரு கோவிந்த ஸம்ஹ விஜயம், சக்தி, கிருஷ்ண தோத்திரம் ஜெகத்சித்திரம் புரிகிறதா இப்போது பாரதி-யார் என்று? இங்கிலாந்து நாட்டு மன்னரை வரவேற்ற பாடலுமுண்டு என்று கூறுவர்! நான் கண்ட அளவிலே எந்தக் கருத்தைச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களோ, அந்தக் கருத்துகளுக்கு ‘பா’ அமைத்தார். விலை போகும் சரக்காகத் தயாரித்தார். எதிர்நீச்சல் போட்டவர் அல்லர். ஒரு குறுகிய இந்து மதக் கண்ணோட்டத்தில் கவிதை புனைந்தவர். புதுமைக் கருத்துகளுக்கு பழமைத் தத்துவம் புகட்டும் ‘மோசடி’ என்ற மன்னிக்க முடியாத குற்றத்துக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டவர்.

அவரது பாட்டுகளில் சில…
அவரது பாக்களில் சிலவற்றைக் கூறி அவரது உள்ளக்கிடக்கையை வெளிக்கொணர முயல்கிறேன். சிந்தியுங்கள். சிந்தை தெளிவு பெறுங்கள். ‘இலக்கிய ஆசிரியன் படிப்பவன் உள்ளத்தில் என்ன சிந்தனையைக் கிளறுகின்றானோ அதனைக் கொண்டே அவன் மதிப்பிடப் பெறுகின்றான்’’ என்கிறார் மாத்யூ அர்னால்டு.“Poets are judged by the frame of mind they induce”- Mathew Arnold.
சில பாடல் வரிகள்:
“விதியேவாழி _ விநாயகா வாழி
பிறைமதிசூடிய பெருமான் வாழி
சக்தி தேவி _ சரணம் வாழி’’
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதநாடு..
யாகத்திலே தவவேகத்திலே _ தனி யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்தி கொண்டார் தம்
அருளினிலே யுயர் நாடு’
‘உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவுமிஃகை யெமக்கிலை யீடே
“நாவினில் வேத முடையவள் _ கையில்
நலத்திகழ்வாறுடையாள்தனை’’
“வேதங்கள் பாடுவள் காணீர் –
உண்மை வேல் கையிற்பற்றிக் குதிப்பாள்’’
ஓதருஞ் சாத்திரங் கோடி -_
உணர்த் தோதி யுலகெங்கும் விதைப்பாள்’’
(தொடரும்…)