சனி, 27 பிப்ரவரி, 2021
கடவுளை பற்றி காமராசர்
வியாழன், 25 பிப்ரவரி, 2021
ஜோதிராவ் பூலே : இந்தியாவின் முதல் மகாத்மா
ஜோதிராவ் பூலே : இந்தியாவின் முதல் மகாத்மா
வரலாறு என்பது எல்லைகளோ, முடிவுகளோ இல்லாத நிகழ்வுகளின் பதிவேடு. சில சமயங்களில் வரலாற்றின் கண்கள் குருடாவ-துண்டு, பல சமயங்களில் குருடாக்கப்-படுவதுண்டு. குறிப்பாக, நமது இந்திய வரலாறானது தன் பக்கங்களிலே பல உன்னதங்களைப் பதிவு செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் சமூகநீதிக் களங்களில் ஜாதி ஒழிப்பு, வருண ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற சமூகக் களையெடுப்புப் பணி-களில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டோரின் கொள்கைகளை, வாழ்வியலை (அல்லது, குறைந்தபட்சம் அவர்களின் பெயரைக்கூட) பதிவு செய்யத் தவறிவிட்டது. அல்லது திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒருமுறை, தந்தை பெரியார் அவர்கள், புத்தரைத் தவிர, வள்ளுவரைத் தவிர ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னவனையே காணவில்லையே? இல்லாமலா இருந்திருப்-பான்? எனக்கும் சந்தேகம்தான். இருந்திருப்-பான்; அவன் பெயர் வெளிவராதபடி ஒழித்துக் கட்டிவிட்டான்! ஜாதி இருக்க வேண்டும் என்று சொன்னவனைப் பெரிய ஆளாக்கி வைத்திருக்கிறான் என்று சமூகநீதிக் களங்களில் தம்மை அர்ப்பணித்தோரை வரலாற்றில் எங்ஙனம் சிலர் திட்டமிட்டுப் புறக்கணித்திருக்-கிறார்கள் என்பதைப் பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்துகிறார்.
குறிப்பாக, நம் இந்திய சமூகத்தில் புரையோடிக்கிடந்த (இன்றும் கிடக்கிற) ஜாதிய வேறுபாடுகளை, தீண்டாமையை ஒழித்து சமத்துவ சமுதாயம் மலரப் பாடுபட்டோர் எண்ணற்-றோர். அவர்களில் பலரின் வரலாறுகள், இன்று நமக்குத் தெரியாது; அவர்களின் பெயர்கள் வரலாற்றிலிருந்தே திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. கடவுளை மறுத்த மகாவீரரையும், புத்தரையும் இன்று கடவுள்களாக்கி வரலாற்றில் திரிபுவாதம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அந்தவகையில் சமூகநீதிப் போராட்டங்களில் தம்மை அர்ப்-பணித்துக் கொண்டோர் எண்ணற்றோர்; எனினும், அதில் கணிசமான வெற்றிகளை ஈட்டியோர் தென்னகத்தில் தந்தை பெரியாரும், வடபுலத்தில் அண்ணல் அம்பேத்கருமே ஆவர். அந்தவகையில், அம்பேத்கர் தோன்றிய அதே மகாராட்டிரத்தில் அம்பேத்கர், பெரியார் போன்ற 20ஆம் நூற்றாண்டு சமூகப் புரட்சியாளர்-களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே.
ஜோதிராவ் பூலே அவர்கள் 1827 ஆம் ஆண்டில் மகாராட்டிரத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் உள்ள லால்கன் என்னும் கிராமத்தில் பிறந்தவர். மகாராட்டிரத்தின் ஒடுக்கப்பட்ட ஜாதிப் பிரிவுகளில் ஒன்றான மாலி என்ற பிரிவைச் சேர்ந்தவர். இளமைப் பருவம்தொட்டே சீர்திருத்த எண்ணங்கள் முளைவிடத் தொடங்கியது; அதற்குக் காரணம், சிறுபிராயமாக அவர் இருந்தபோது ஆதிக்க ஜாதியினரின் ஒடுக்குமுறைகளால் அவர் குடும்பமும், அவரும்பட்ட இன்னல்கள் பின்னாளில் அவரை ஓர் சமூகப் புரட்சியாளராக மாற்றியது.
பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் எனப்பட்டோர் கல்வி பெறுவதன் மூலமே சமூகத்தில் உயர்நிலை எய்த முடியும் என உறுதியாக நம்பினார். எனவே, மிகவும் தாழ்த்தப்-பட்ட ஜாதியினரின் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை 1848 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலாகத் தொடங்கினார். அப்பள்ளியில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மகார், மாங் போன்ற பிரிவுப் பெண்களுக்கு முன்னுரிமை தந்தார். எனினும், உயர்ஜாதியினரின் மிரட்டல்களால் அப்பள்ளிக்கு ஆசிரியர்கள் கிடைக்-காதநிலை ஏற்பட்டபோது தன் மனைவி சாவித்திரிக்குக் கல்வி புகட்டி அவரை அப்பள்ளி-யின் ஆசிரியராக்கினார். அதுமட்டுமின்றி, தன்வீட்டுக் குடிநீர்க் கிணற்றை, தாழ்த்தப்-பட்ட மக்களுக்காகத் திறந்துவிட்டார். இன்றும்-கூட இச்செயல் அசாதாரணமான, தீரமான ஒன்றாகும்.
பெண் கல்வியை ஆதரித்த பூலே அவர்கள் 1851ஆம் ஆண்டில் அனைத்து ஜாதிப் பெண்களுக்கு-மான பள்ளியைத் தொடங்கினார்; 1855 இல் மாலை நேரப் பள்ளி ஒன்றையும் தொடங்கினார். பெண் விடுதலை என்று குறிப்பிடாத பூலே ஆண் - பெண் இருவருக்குமான சமமான மனித உரிமைகள் வேண்டுமென்று வலியுறுத்தினார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்த பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்க்கவும் தயங்கவில்லை. பூலேவின் செயல்பாடுகளும், புரட்சிகர நடவடிக்கைகளும் உயர்ஜாதியினர் எனப்பட்டோருக்கு ஆத்திரத்தைக் கிளப்பவே, பூலேயின் தலைக்கு விலை பேசப்பட்டது; 1856இல் அவரைக் கொலை செய்ய நடந்த முயற்சி மத வெறியின் உச்சம் என்பதைத் தவிர வேறென்ன?....
ஒருவகையில், பூலே அவர்கள் தந்தை பெரியாருக்கும் முன்னோடியாகவும் திகழ்ந்தார் எனக் கூறமுடியும். ஏனெனில், பெரியார் அவர்-களின் கண்ணோட்டத்தில் திருமணம் என்பது புனிதத் தன்மை வாய்ந்த சடங்கு அல்ல; மனம் ஒத்த ஆண், பெண் இருவரிடையேயான ஓர் ஒப்பந்தம் மட்டுமே. பூலே இளம் பெண்கள், திருமணம் செய்து போகும் குடும்பத்தின் ஒப்பந்த ஊழியராகச் செல்கின்றனர் என்ற கருத்தினை நோக்கி தனது வாதத்தைக் கொண்டு சென்றார். (தமிழாலயம், நவம்பர் - டிசம்பர், ப13.) அதேபோன்று, திருமணச் சடங்கு முறைகளை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பூலேயைப் பின்பற்றி பல சமூகச் சீர்திருத்தவாதிகளும் திருமணச் சடங்குகளைப்பற்றியே சிந்தித்துச் செயல்பட்டனர் என்று கெய்ல் ஓம்வெல்ட் என்ற அறிஞர் கூறுகிறார்.
பெண்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் நலன் காக்கவும், அவர்களின் நிலை உயரவும் பள்ளிகளைத் தொடங்கி அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பூலே 1873ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதியன்று சத்ய சோதக் சமாஜ் (உண்மை தேடுவோர் சங்கம்) என்னும் சங்கத்தைத் தொடங்கினார். இச்சங்கம் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, கல்வியைப் பரப்பல், விதவைத் திருமணத்தை ஊக்குவித்தல், புரோகித ஒழிப்புத் திருமணங்களை நடத்தல், சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கல், உழவுத் தொழிலை மேம்படுத்தல் ஆகிய சமூகப் பொருளியல் காரணங்களுக்காகப் பாடுபட்ட இவ்வமைப்பே இந்திய மண்ணில் சமூக நீதிக்கான போராட்டத்தைத் தொடங்கி முன்னெடுத்துச் சென்றது. (க. நெடுஞ்செழியன், சமூகநீதி, ப.154-155).
அதோடன்றி, 1888ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் நாளில் பூனேயில் நடந்த பொதுக்கூட்டத்தில், பூலேயின் கொள்கைச் செயல்-பாட்டையும், சீர்திருத்த நடவடிக்கை-களையும் பாராட்டி அவருக்கு, மகாத்மா என்ற பட்டம் சூட்டப்பட்டது. அன்றுமுதல் மகாத்மா ஜோதிராவ் பூலே என்றே மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். அண்ணல் காந்தியடி-கள் மகாத்மா என்று அழைக்கப்பட்டது, பின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டிய மண்ணில் கொள்கை முழக்கம் செய்தும், அறிவுபுகட்டியும் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட மகாத்மா பூலே 1890ஆம் ஆண்டு மறைந்தார். அதற்கு அடுத்த ஆண்டான 1891இல் அண்ணல் அம்பேத்கர் பிறந்தார். பூலேயை வழிகாட்டியாய்க் கொண்டு கொள்கை முழக்கம் செய்த கோமேதகம்தான் அம்பேத்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறு பல சமயங்களில் உன்னதப் பதிவுகளைத் தவறவிட்டிருப்பதற்கு மகாத்மா ஜோதிராவ் பூலே ஒரு சிறந்த உதாரணம். பூலே அவர்களின் பெயர்கூட இன்று நம்மில் பலருக்குத் தெரியாது என்பதை வேதனையுடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் பூலே போன்ற சமூக நீதிப் போராளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பூலே போன்ற சமூக நீதிப் போராளிகளையும், அவர்தம் கொள்கைகளையும், வளரும் இளைய சமூகத்திற்குத் தெரியப்படுத்தாமல் சமூக நீதியை வென்றெடுக்க முடியாது. சமூக ஏற்றத் தாழ்வுகளற்ற சமுதாயம் அமைய, அந்த ஏற்றத் தாழ்வுகள் நீங்கப் போராடியவர்களின் வரலாற்றை நாம் முதலில் அறிந்திருக்க வேண்டும். அல்லாமல், சமூக ஒருமைப்பாடு, சமத்துவ சமுதாயம் என்பவைகளெல்லாம் வெறும் பகற்கனவாகவே!
- க. சக்திவேல் எம்.ஏ.பி.எட்
செவ்வாய், 23 பிப்ரவரி, 2021
இந்து மதம் ஒழிவதே நல்லது!-டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்கிற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்க தலைவர்கள், இந்தியாவின் மக்கள் என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! இந்திய தேசம் என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.
பல ஆயிரம் ஜாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத்தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக் கெவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள் ஆழ வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டிய அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கினை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப் போகிறது. அதுவும் அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில், அமெரிக்க அய்க்கிய நாட்டில் ஜாதிகள் இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், ஜாதிகளை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.
(-1949 நவம்பர் 11ஆம் நாளன்று இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து...)
இந்துக்களைப் போல, சீக்கியர்களைப்போல, பார்சிகளைப்போல தீண்டத்தகாத மக்களும் தனித்த வகுப்பினர்; அவர்கள் இந்துக்கள் அல்லர். அம்மக்களை இந்துக்களாகக் கருதுவது பெரும் பிழையாகும். இந்திய வரலாற்று நோக்கில் தனித்த பண்பாடோடும், மத நம்பிக்கைகளோடும் வாழ்ந்த அம்மக்கள் தனித்த வகுப்பினராகக் கருதப்பட வேண்டும்.
(1929இல் சைமன் ஆணையத்திடம் அண்ணல் அம்பேத்கர் அளித்த அறிக்கையில்...)
இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான் நான் இந்து மதத்திலிருந்து வெளியேற எண்ணுவதற்கான அடிப்படைக் காரணமாகும். “நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன், அது என் தவறன்று; ஆனால், நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன்.’’ -1935இல் பம்பாய் இயோலா மாநாட்டில்,
இந்து மதத்தை இந்திய மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதற்கு கிறித்துவமோ இசுலாமோ பயன்படாது. அந்த மதங்களின் கடவுள் கோட்பாடுகளும், ஜாதிப் பழக்க வழக்கங்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பவுத்தத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். இந்து சமூகக் கட்டமைப்பில்தான் இந்தியாவின் பலவீனம் தங்கியிருக்கிறது. எனவே, இந்து மதம் எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நமது சமூக நெறிகளும், இந்து மத மரபுகளும் நமது ஒற்றுமையைச் சீர்குலைப்பவையாக உள்ளன. எதிர்கால இந்தியாவில் இந்து மதத்தின் பங்கு எந்த அளவில் இருக்கப்போகிறது என்பதைப் பொருத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்.
- டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
நினைவு நாள்: 6 டிசம்பர், 1956.
- உண்மை இதழ் 1- 15.12. 20
திங்கள், 22 பிப்ரவரி, 2021
’இந்துவாக நான் இருக்க முடியாது’
நூல்: ‘இந்துவாக நான் இருக்க முடியாது’
- ஆர்எஸ்எஸ்-ஸில் ஒரு தலித்தின் கதை
ஆசிரியர்: பன்வர் மெக்வன்ஷி
தமிழில்: செ.நடேசன்
முகவரி: எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி - 642 002
தொலைபேசி: 04259 226012, 99425 11302
விலை: ரூ.299/-
உணவைப் பொட்டலம் கட்டும் நண்பர்
அயோத்தி செல்லும் வழியில் இறந்தவர்கள் மற்றும் பில்வாராவில் இறந்த இருவர் ஆகியோர் தியாகிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்டார்கள். அவர்களது அஸ்தியைக் கொண்ட கலசங்கள் கிராமம் விட்டு கிராமமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த அஸ்திக் கலச ஊர்வலத்தில் சாதுக்களும் துறவிகளும், சங் மற்றும் வி.ஹெச்.பி. செயல்பாட்டாளர்களும் அலுவலகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். அந்த அஸ்திக் கலச யாத்திரை சிர்தியாஸையும்கூட இரவு 9 மணியளவில் அடைந்தது. நாங்கள் அதை உரிய மரியாதையுடன் வரவேற்றோம்.
அன்று நடைபெற்ற கூட்டத்தில், ‘எல்லா இந்துக்களும் சகோதரர்கள்’ என்ற கோஷங்கள்! இந்து சமுதாயத்தில், சமமற்றவர்கள் மீது கொடூரத் தாக்கதல்கள், மற்றும் ஊழல்கள்! அந்தக் கூட்டம் இந்துக்கள் ஒன்று பட்டவர்களாக, அமைப்பாக திரட்டப் பட்டவர்களாக, இந்துக்களில் ஒதுக்கப்பட்டப் பிரிவினரை அரவணைத்துக் கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்ற அறிவுரைகளோடு நிறைவு பெற்றது. எங்களது தலித் பகுதியில் சங் அமைப்பின் முதலாவது வெற்றிகரமான கூட்டம் இதுதான்.
இது முடிந்த பிறகு, எங்கள் வீட்டில் ஒவ்வொருவரும் உணவு உண்ண நான் ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். ஒவ்வொருவருக்கும் நாங்கள் பூரி மற்றும் கிழங்கு தயாரித்திருந்தோம்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை உணவுக்காக வீட்டுக்கு வருமாறு நான் அழைத்த அந்தத் தருணத்தில் அங்கே திடீரென ஒரு தயக்கம் தென்பட்டது. சேவா பாரதியின் மாவட்ட செயல் தலைவரும், சங் அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளருமானவர் என்னை ஒரு பக்கமாக அழைத்துச் சென்றார். அவர் பெயர் நந்த்லால் காஸ்ட், 50 வயதுடைய ஒரு பணியா. சங் அமைப்பில் இருபது ஆண்டுகள் அலுவலகப் பொறுப்பாளராக இருந்தவர். ஒரு சங்கி பள்ளியையும் நடத்திவருபவர். எனது தோளில் உள்ளன்புடன் அவரது கையைப் போட்டவர், அந்த நாளின் நிகழ்ச்சிகளை நான் ஒருங்கமைத்தது பற்றி பாராட்டுகளைப் பொழிந்தார். அது சிறிது நேரம் நடந்தது. படிப்படியாக சங் அமைப்புக்கும் தேசத்துக்குமான எனது வேலைகளுக்காக பெரிய அளவில் பாராட்டுகளைப் பதிவு செய்வதிலிருந்து மாற்றி, இறுதியில் தணிந்த குரலில் அவர் கூறினார், “நண்பரே, நமது சமுதாயத்திலுள்ள சமத்துவமின்மை பற்றி முன்னுணர்வுடன் அறிந்து வைத்திருக்கிறீர்கள். சங் அமைப்பின் எல்லா முயற்சிகளுக்குப் பிறகும், இந்து சமுதாயம் ஒன்றாக ஆகவில்லை. எவ்வளவுக்கெவ்வளவும் நம்மைப் பொருத்தவரை, எந்த நாளிலும் உங்களுடன் ஒன்றாக அமர்வோம், ஒரே தட்டில் உணவு உண்போம். ஆனால், இன்று சாதுக்களும், துறவிகளும் மற்றவர்களும்கூட இங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் தாழ்ந்த ஜாதி வீட்டிலிருந்து உணவு கொடுப்பது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். அவர்கள் மிகவும் கோபம் கொள்வார்கள். அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள்.’’
அவரது வார்த்தைகள் என்னைக் கல்லாக மாற்றின. நீங்கள் என்னை வெட்டினால், நான் இரத்தம் சிந்த மாட்டேன். எனது மனம் சிந்தனைப் புயலால் அமிலச் செறிவு கொண்டதாக ஆனது. எனது நாவிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. அவர் என்ன சொல்கிறார் என்பதை ஒருமுறை புரிந்து கொண்டதும் அவர் மேலும் மேலும் கூறிக்கொண்டே இருந்ததை என்னால் கவனிக்க முடியவில்லை. ஆனால், அவர் கடைசியாகக் கூறிய ஒரு விஷயத்தை இன்று, இந்த நாளில் நினைத்துப் பார்க்கிறேன். “நீங்கள் ஏன் உணவைப் பொட்டலமாக்கி காரில் வைக்கக் கூடாது? நாங்கள் அடுத்த கிராமத்தில் அவர்கள் அனைவருக்கும் உணவிடுவோம்.’’
உண்மையில் அவரது வார்த்தைகளின் பொருள் தெள்ளத்தெளிவாக இருந்தது. அந்த உணவு ஒரு தலித் சுயம்சேவக் வீட்டிலிருந்து வந்தது என்பதை இரகசியமாக வைத்து, ஒவ்வொருவருக்கும் உணவை அமைதியாக உண்ணக் கொடுப்பது.
எனது சொந்த வீட்டில் நான் தோற்கடிக்கப்பட்டதாக உணர்ந்தேன். ஆனால், யாரால் என்பது எனக்குத் தெரியவில்லை. எனது தந்தை வென்றுள்ளார். ஆனால் இந்த அடியைக் கொடுத்தது சங். எனது தந்தைக்கு என்ன பதில் சொல்வேன். அவர், ‘ஏன் அவர்கள் நமது வீட்டில் சாப்பிடவில்லை?’ என்று கேட்டார். இன்னும்கூட எனது மனதைக் கடினமாக்கிக் கொண்டு, உணவை பொட்டலமாக்குவதைச் செய்தேன். எனது குடும்பம் ஏன் என்று கேட்டபோது, “அவர்கள் ஏற்கெனவே பகவன்பூரா கிராமத்தில் அடுத்த நிகழ்ச்சிக்கு காலதாமதமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்; எனவே, அவர்கள் அங்கே சாப்பிடுவார்கள்.’’
அவர்களை எனக்குப் பின்னாலிருந்து வெளியேற்றுவதை செய்து முடித்தேன். ஆனால், எனது மகிழ்ச்சி பறந்துபோய் விட்டது. தாழ்ந்த ஜாதியினராக இருப்பதின் பொருள் என்ன என்பதை நான் முழுமையாக உணர்ந்து கொண்டேன். மீண்டும் மீண்டும் என்னை அந்த சிந்தனை தொந்தரவு செய்தது. இது எப்படி நடக்க முடியும்? சங் அமைப்பால் இதை எனக்கு எப்படிச் செய்ய முடிந்தது? அவர்கள் தீண்டாமமையை நம்பவில்லை, அவர்கள் ஜாதிப் பாகுபாட்டை நம்பவில்லை. அவர்கள் எல்லா இந்துக்களும் ஒன்று என்பதை நம்புகிறார்கள். அவர்கள் ஒன்றுபட்ட இந்து சமுதாயம் என்று பேசுகிறார்கள். பின் ஏன் இந்த வகையான பாசாங்கு; போலி நடிப்பு?
நான் நினைத்துப் பார்த்தேன். இங்கே நான் ஒரு கட்டுப்பாடுமிக்க சுயம்சேவக். ஒரு உணர்வுப்பூர்வமான சுயம்சேவக், ஒரு மாவட்ட அலுவலக தலைவர். இது எனக்கு நடக்கும் என்றால், இன்னும் என்ன வகையான, சகித்துக் கொள்ள முடியாத நடத்தைக் கோலத்தை எஞ்சியுள்ள எனது சமுதாயம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது? அந்த நாளில் எனது வாழ்க்கையில் முதல்முறையாக எனது இந்து அடையாளத்திலிருந்து நான் விலகி நின்றேன். இந்த உலகத்தை தாழ்ந்த ஜாதியிலிருந்து வந்த ஒரு நபராக பார்க்கத் துவங்கினேன். தொந்தரவு தரும் எனது சிந்தனைகள் இரவெல்லாம் என்னை விழித்திருக்கச் செய்தன. அந்த இரவை முடிவில்லாததாக உணர்ந்தேன். நான் உறுதியாக அறிந்திருந்த ஒரு சிறிய ஒன்று, ‘காலைச் சூரியன் இன்னும் தெளிவான நாளில் மேலே எழும்.’
அடுத்த நாள் கடவுள் அருள் வெளிப்பாட்டு நாள் போல இருந்தது. கத்திகளைப் போன்ற இரவு, கண்கள் கூசும் ஒளி முகத்தோடு சூரியன் தோன்றியபோது, வெறுமனே கடந்து சென்றது போல இருந்தது. அஸ்தி கலச யாத்திரையோடு சென்ற எனது பிராமண நண்பர் புருஷோத்தம் ஷ்ட்ரோட்ரியா சிர்தியாஸ்க்கு திரும்பினார். அவரை எனக்கு அம்பேத்கர் விடுதி நாள்களிலிருந்து தெரியும். கவிதைகளில் உள்ள ஆர்வத்தால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நாங்கள் ஆஸாத் நகர் ஷாகாவுக்கு ஒன்றாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். நாங்கள் ஒவ்வொன்றையும் பகிர்ந்து கொண்டோம். எங்கள் நட்பு ஆழமானது.
காலையில் அவர் திரும்பி வந்தபோது, அவர் கைப்பிடி வைத்த ஒரு பாத்திரத்தைச் சுமந்து வந்தார். அதில்தான் பூரிக்கிழங்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர் சொன்ன கதை ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ முடியாததாக இருந்தது. அது எனது மண்டையோட்டில் சுத்தியல் கொண்டு அடிப்பதுபோல இருந்தது. நான் அனுப்பிய உணவு பகவன்பூராவுக்கு சற்று முன்னால் சாலையில் வீசப்பட்டது என்றும், இரவு உணவு மிகவும் பின்னிரவில் ராம்ஸ்வரூப் என்ற பிராமணரின் வீட்டிலிருந்து தரப்பட்டது என்றும் புருஷோத்தம் கூறினார். இதை என்னிடம் சொல்லக்கூடாது என்று புருஷோத்தமிடம் கூறப்பட்டது. ஆனால், அவர் பொய்யை அவருடன் கொண்டுவர விரும்பவில்லை. ‘நீ கொடுத்த உணவு சாப்பிடப்படவில்லை; அது வெளியே வீசப்பட்டது’ என்றார் அவர். அதை உடனே என்னால் நம்பமுடியவில்லை. நான் அவரிடம் கூறினேன், “நீங்கள் விளையாட்டுக்குக் கூறுகிறீர்கள். சங் அமைப்பில் உள்ள நமது மக்கள் மிகவும் ஜாதி வெறியர்களாகவும், கொடூரமானவர்களாகவும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை’’. அவர் கூறினார், “நீ என்னை நம்பவில்லை என்றால், நீயே வந்து உன் சொந்தக் கண்களால் பார். அதில் கொஞ்சம் விழுந்துகிடக்கும்’’. பகவன்பூராவை நோக்கி நடை துவங்கியது, போர் இனிமேல் அறிவிக்கப்பட உள்ளது.
எங்கும், எவரும் கவனிக்கத் தயாரில்லை
நான் மாலையில் பிராமண கிராமமான சரேரியை சீறிப் பொங்கும் சினத்துடன் அடைந்தேன். யாத்திரையில் பங்கேற்றவர்களின் அவமானம் நிறைந்த நடத்தைகளைப் பற்றிய ஒரு விளக்கத்தை நான் கோரினேன். ஆனால், அவர்கள் உணவை வெளியே தூக்கியெறிந்ததை திட்டவட்டமாக மறுத்தார்கள். நான் அவர்களிடம் இந்தத் தகவலை நேரடியாக புருஷோத்தம்ஜியிடமிருந்து பெற்றதாகக் கூறியபோது அவர்கள் தொனியை மாற்றிக் கொண்டு, “ஓ! ஆம். பகவன்புரா நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒரு வளைவில் திரும்பியபோது, உணவுப் பொட்டலங்கள் அவற்றைப் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் கைகளிலிருந்து வெளியே பறந்து விட்டன.’’ அவர்களது வார்த்தைகளுக்கும் அவர்களது பார்வைகளுக்குமிடையே உண்மை எனக்குத் தெளிவாகியது. இருந்திருந்தும் எவ்வளவு எளிதாக இந்த மிகவும் மதிக்கப்படும் பாய்சாஹேப்கள் பொய் கூறுகிறார்கள் என்று நான் சிந்தித்தேன். அவர்கள் தங்கள் பற்களின் வழியாக பொய் பேசுகிறார்கள் என நான் ஏற்றுக் கொண்டேன். யாராவது ஒருவரின் கைகளிலிருந்து உணவு பறந்திருக்குமானால், அது சாலையின் நடுவில் விழுந்திருக்கும்; அது எப்படி சாலையின் ஓரத்தை அடைந்தது? மேலும், இரண்டாவதாக, பூரிகள் சேற்றில் விழுந்திருக்கக் கூடும். ஆனால், குறைந்தபட்சமாக, கைப்பிடி கொண்ட பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பூரிக்கிழங்கு பத்திரமாக இருந்திருக்குமே. எந்த வகையிலும், அந்தப் பாத்திரம்கூட விழுந்திருக்குமானால், அது சிராய்ப்புகளுக்கு உள்ளாகி வளைந்திருக்கும். அது நடக்கவில்லை.
அங்கே எந்த சந்தேகமும் இல்லை. ஒரு தலித் சுயம்சேவக் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை அவர்கள் வேண்டுமென்றே வெளியே வீசியிருக்கிறார்கள். ஆனால், அதை எதிர் கொண்டபோது, அவர்களது தவறை ஒப்புக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் வினோதமான மற்றும் நம்பமுடியாத விளக்கங்களுடன் வருகிறார்கள். அவர்களது பொய்களும், அவர்களுடைய பொய்களை உண்மையைப்போல முன்வைத்த முயற்சிகளும் எனது இதயத்தை முறித்தன. நான் மிகவும் ஆழத்துக்கு தாழ்த்தப்பட்டதையும் அவமானப்படுத்தப் பட்டதையும் உணர்ந்தேன். எனது வீட்டிலிருந்து வந்த உணவை சங் நிராகரித்தது மட்டுமல்ல, அவர்கள் என்னை மேலே கொண்டுவந்து வெகுதூரத்தில் வீசியெறிந்ததைப் போல இருந்தது. நான் அவர்களிடமிருந்து முற்றிலும் தொலைவில் இருப்பதாக உணர்ந்தேன். அவர்கள் பொய்யர்கள்; கபட வேடதாரிகள்.
எவ்வாறு நான் எனது வலிமை முழுவதையும் அதன் இலக்குகளை நிறைவேற்றுவதை நோக்கிச் செலுத்தினேன்? எவ்வாறு நான் ஸ்ரீராமனுக்கு ஒரு தியாகியாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தேன்? என சங் அமைப்பில் எனது பல ஆண்டுகளின் வேலைகள் ஒரு திரைப்படம்போல என்முன் ஓடியது. நான் அயோத்தியை அடைந்ததும், சரயூ நதியின்மேல் அமைந்துள்ள பாலத்தின் மேலே காவலர்களின் குண்டுகளால் இறந்திருப்பேனானால், இந்த மனிதர்கள் உயிரற்ற எனது பிணத்தைத் தொட்டாவது பார்த்திருப்பார்களா? அது எனது வீட்டுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்குமா? அல்லது விருப்பமில்லாத தேவையற்ற உணவைப்போல எனது பிணம் சரயூவில் வீசியெறியப் பட்டிருக்குமா? எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்: இந்த இந்து ராஷ்ட்ராவுக் காகத்தான் நான் கடுமையாக வேலை செய்தேனா? கொல்லவும், கொல்லப்படவும் தயாராக இருந்தேனா? இங்கே எனக்கு எந்த ஓர் இடமும் இல்லை. நான் யாராக இருக்கிறேன்? எனது சொந்த அடையாளம்தான் என்ன? எல்லாவற்றுக்கும் பிறகு நான் என்னவாக இருக்கின்றேன்? ராமனின் ஒரு பக்தன், ஒரு இந்து கரசேவகன் அல்லது ஒரு சூத்திரன், ஒரு தீண்டத்தகாதவன், மிகவும் தூய்மையற்ற ஒருவன். அதனால் எனது வீட்டிலிருந்து வந்த உணவு இந்து ராஷ்ட்ராவின் இந்தக் கொடி தாங்கிகளால் தொடப்பட மாட்டாது! எனது அடையாளம்தான் என்னவாக இருந்தது?
பின்னர் நான் உணர்ந்துகொண்டேன்: இந்து ஜாதி அமைப்பில் நான் சூத்திரர்களைவிட கீழானவன். நான் ஒரு தீண்டத்தகாதவன். நான்கு வர்ணங்களில் ஒன்றில் உள்ளவன் அல்ல. ஆனால், ஜாதி நீக்கம் செய்யப்பட்ட இழிசனன். அய்ந்தாவது ஜாதியான அவர்ணன். நான் ஒரு சுயம்சேவக்காக நன்றாக இருக்கலாம்; ஆனால், அந்த வழியெங்கும் நான் ஓர் இந்து அல்ல! நான் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை? கட்டாயம் இதனால்தான். நான் ஏன் விஸ்டாரக் வரை மட்டும் உயர அனுமதிக்கப்பட்டேன்? பிரச்சாரக்காக வருவதிலிருந்து நான் ஏன் தன்னம்பிக்கை இழக்க வைக்கப்பட்டேன்? எனக்கு நானே கூறினேன், “போதும். இப்போது என்னை நானே அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. எனக்கு நேர்ந்த இந்த விஷயங்களுக்கான காரணங்கள் பற்றி நான் தேட வேண்டியுள்ளது. அவற்றின் வேர்களைக் களைய வேண்டியுள்ளது.’’
இந்தப் பாகுபாட்டுக்கும், அநீதிக்கும் எதிரான எனது கொள்கைப் பூர்வமான ஆட்சேபணைகளை சங் தலைமையகமான நாக்பூர்வரை வழியெங்கும் கொண்டுசெல்ல நான் முடிவு செய்துவிட்டேன். அஸ்தி கலச யாத்திரையில் பல்வேறு நிலைகளில் இருந்த பிரச்சாரக்குகள் முதல் செல்வாக்கு மிக்க மக்கள் எவ்வளவு பேரிடம் பேச முடியுமோ அவ்வளவு பேரிடமும் நான் பேசினேன். எனது வலிகளைப் பகிர்ந்துகொள்ள அங்கு யாருமே இல்லை. நான் அணுகாத எந்த நிலையும் இல்லை. கேட்பதற்குக்கூட எந்த இடத்திலும், எவரும் இல்லை என்பதை நான் பார்த்தபோது, நான் எனது அழுகையை உதவிக்காக சர்சங்சாலக், பாலாசாஹேப் தேவ்ரஸ் வரை கொண்டு சென்றேன். உள்ளூர் தலைவர்கள் நான் ஓர் இந்துவாக இருப்பதையும், மேலும் ஒரு நாள் கூட சங் அமைப்புடன் எனது வேலைகளைக் கொண்டு செல்வதையும் விரும்பவில்லை என்ற முழுக் கதையையும் அவருக்கு நான் எழுதினேன்; அவரிடம் கூறினேன்.
ஆனால், நான் யார்? எந்த முக்கியத்துவமும் இல்லாத அற்பமான ஒருவன். அதிகாரத்தின் தாழ்வாரங்களில் கேட்கப்பட வேண்டுமா? எவரிடமிருந்தும் எந்த மறுமொழியும் இல்லை. உண்மையில் இது ஆச்சரியப்படக்கூடிய ஒன்று அல்ல. நான் பேசிய ஒவ்வொரு நபரும் எனது புகார்களை ஒரு சிறிய விஷயம் என்று தள்ளுபடி செய்தார்கள். ஆனால், நடந்தது என்னவென்றால், ‘இந்த எதிர்மறை எல்லாவற்றையும் விட்டுவிடு; உடன்பாடான வேலைகளை தொடர்ந்து செய்’ என அறிவுரை தரப்பட்டது எனக்குத்தான். ஆனால், இது ஒரு சிறிய விஷயம் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்போது அல்ல; இன்று மட்டும் அல்ல; தீண்டாமையும், ஜாதியப் பாகுபாடும் எவர் ஒருவர் வாழ்விலும் சிறிய விஷயம் அல்ல. யாராவது ஒருவரை பிறப்பால் தீண்டத்தகாதவர் என்று அறிவிப்பதும், அதன் பிறகு அவர்களது விருந்தோம்பலை ஏற்க மறுப்பதும் _ இது வேண்டுமானால் இந்து ராஷ்ட்ராவின் கட்டட சிற்பிகளுக்கு சிறிய விஷயமாக இருக்கலாம். என் வாழ்வில் இது மிகவும் பெரியது.
எனது வாழ்வை முடித்துக்கொள்ளும் சிந்தனை
நான் சர்சங் சாலக்குக்கு எழுதிய கடிதத்துக்கு எந்தப் பதிலையும் பெறவில்லை. எனது கேள்வி கேட்டலை நான் மேலே தொடர்ந்தேன். ஒவ்வொரு நிலையிலும் விவாதிப்பதை நான் மேலே தொடர்ந்தேன். ஆனால், ஒவ்வொரு நிலையிலும் அங்கே ஒரு வினோதமான மவுனம் நிலவியது. ஒவ்வொரு இடத்திலும் நான் ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஓர் ஒற்றை நபர்கூட இந்த நிகழ்ச்சியின் தீவிரத் தன்மையைப் பார்க்க விரும்பவில்லை. அவர்களுக்கு இது மிகச் சிறிதான நிகழ்வாகத் தோன்றியது. எல்லாவற்றுக்கும் பிறகு இந்த விஷயங்கள் நமது சமுதாயத்தில் நடக்கின்றன. பெரிய பங்கு என்ன? அதைப்பற்றி நான் ஏன் மிகவும் அதிகமாக வேலை செய்கிறேன்? இதற்கிடையே, நான் முழுமையான வலிகளை அனுபவித்தவாறே போய்க் கொண்டிருந்தேன். அது போன்றவைகளை முன்பு ஒருபோதும் அனுபவித்ததில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் முற்றிலும் குழப்பமடைந்தேன். சிந்திக்க முடியவில்லை. செயல்பட முடியவில்லை. நம்பிக்கை இழந்து மூழ்கிக் கொண்டிருந்தேன். என்னைத் தின்றுகொண்டிருந்த மரண வலிக்கு எவரும் ஆலோசனை தரவில்லை.
இந்த உலகம் எதையும் கவனிக்காமல் அதன் வழியில் சென்ற கொண்டிருக்கிறது. நான் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அதை பல வழிகளில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். நானாகவே தூக்கில் தொங்குவது, கிணற்றில் குதிப்பது, விஷத்தை எடுத்துக்கொள்வது என என்னை நானே எப்போதைக்கும் விடுவித்துக்கொள்ள முடியும். நான் ஒரு முடிவுக்கு வந்தேன். விஷம்தான் மிக நல்லவழி. வீட்டில் அங்கே எலி விஷம் இருந்தது.
ஒரு நாள் இரவில் என்னுடைய உணவோடு விஷத்தையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டேன். படுக்கைக்கு, எனது வாழ்வில் இன்னொரு காலை இனி இல்லை என்று நினைத்துக்கொண்டே சென்றேன். நான் விரைவில் தூங்கிவிட்டதாக நினைத்தேன். ஆனால், அரைவிழிப்புடன் கூடிய தூக்கம். நான் உயிருடன் இருந்தேன். ஆனால், இறந்துகொண்டும் இருந்தேன். என் வயிற்றில் சக்திமிக்க ஒரு வலியின் அலை எழுந்தது. ஓய்மை உணர்வு எனக்குள் மேலோங்கியிருந்தது. வலி தாங்க முடியாததாக இருந்தது. வாந்தி எடுக்க நான் வெளிப்புறமாக ஓடினேன். நான் வலிய வாந்தி எடுத்தபோது எனது ஈரல் வாய்க்குள் வந்தது போலிருந்தது. எனது குடல் வெளியே வந்து விழுந்தது. எனது தலை சுற்றியது. எனது மனதின் விழிப்புநிலை மங்கத் துவங்கியது.
- உண்மை இதழ், நவம்பர், 16 -30. 20
மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் திராவிடர் கழக பிரச்சாரகர்கள்
கே.ஆர்.குமார்
பக்தியின் பேரால் சாமியார்கள் நடத்தும் மாய மந்திர செய்கைகளை, மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் விதமாக பல்வேறு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை திராவிடர் கழகத் தோழர்கள் செய்து காட்டி வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் சுயமரியாதைச் சுடரொளி புரபசர் கே.ஆர்.குமார் ஆவார். நீலகிரி மாவட்டம் குன்னூரை பூர்வீகமாக கொண்ட இவர். அங்குள்ள சாமியார் செய்யும் மோசடியாக மந்திரம் என்ற பெயரால் செய்யும் தந்திரங்களைக் கற்று அவர்களுக்குப் பெரும் சவாலாக விளங்கியவர். தந்தை பெரியாரிடம் அத்தகைய தந்திர செயல்பாடுகளைச் செய்துக் காட்டிப் பாராட்டப்பட்டவர்.
தொடர்ந்து, கழக நிகழ்ச்சிகளிலும் மாநாடுகளிலும் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளைச் செய்து காட்டி மேஜிக் புரபசர் என்று பாராட்டப் பெற்றவர். கழகம் நடத்தும் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணிகளில் கண்களைக் கட்டிக்கொண்டு பைக் ஓட்டுதல், பெட்டியில் வைத்து ஒருவரை மறைத்து இன்னொருவரை வரச்செய்தல், ஒருதூணில் ஒருவரின் கைகளைக் கட்டி வைத்து பின்னர் அந்தத் தூணிலிருந்து வேறு ஒரு தூணுக்கு இடமாறச் செய்தல், கொதிக்கும் எண்ணெய்யில் அப்பளம் பொரித்து கையால் எடுத்து உண்ணுதல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைச் செய்து காட்டி மூடநம்பிக்கைகளின் முதுகெலும்பை உடைத்தவர். இவரது வாழ்விணையர் ஜெயமணி குமார் தொடர்ந்து மந்திரமா - தந்திரமா? நிகழ்ச்சியைச் செய்து வருகிறார்.
மேலும் ஈரோடு தியாகு, இனமான நடிகர் எம். ஏ.கிரிதரன்ஆகியோர் தொடர்ந்து செய்து வந்தனர். தற்பொழுது ஈட்டி கணேசன் பட்டுக்கோட்டை எஸ்.வி. செல்வம், ஊற்றங்கரை பழ.வெங்கடாசலம், தஞ்சை சுடர் வேந்தன், சில்லத்தூர் சிற்றரசு, காஞ்சி கதிரவன், புதுவை குமார், திருத்துறைப்பூண்டி பி.குணசேகரன், சோம.நீலகண்டன், வல்லவாடி இரணியன், அஜ்மல் கான், மதுரை வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான மந்திரமா? தந்திரமா? பிரச்சாரக் கலைஞர்களை உருவாக்கி அனைத்து பிரச்சாரக் கூட்டங்களிலும் செய்து பகுத்தறிவு அறிவியல் பூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது திராவிடர் கழகம்.
ஈட்டி கணேசன்
மேலும் தமிழ்நாட்டு வழிபாட்டு முறைகளில் பிரபலமாக இருக்கும் அலகு குத்தி காவடி எடுத்தல், தீச்சட்டி தூக்குதல், பறவைக் காவடி, செடல் காவடி, தீ மிதித்தல், நாக்கில் சூடம் ஏற்றுதல், அரிவாள் மீது ஏறி நிற்றல், தலையில் தேங்காய் உடைத்தல் போன்ற கடவுள் சக்தியால் மட்டுமே செய்ய முடியும் என்று நம்பப்பட்ட அனைத்தையும், "கடவுள் சக்தி அல்ல; மனித சக்தி தான்" என்ற முழக்கத்தோடு செய்து காட்டி, தமிழ்நாடெங்கும் பேரணிகளிலும் செய்து காட்டுவதுடன், கிராமப்புற பிரச்சாரங்களில் ஈடுபட்டு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செய்து வருகிறது திராவிடர் கழகம். இந்த நிகழ்ச்சிகளில் கரம்பக்குடி முத்து, அத்திவெட்டி பெ.வீரைய்யன், ஜெயங்கொண்டம் கே.பி. கலியமூர்த்தி, உடுக்கடி அட்ட லிங்கம் உள்ளிட்ட தோழர்களும் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னிமலையில் கடவுள் சக்தியால் தான் மாட்டு வண்டி தானே செல்கிறது என்னும் மோசடிப் பிரச்சாரத்தை முறியடித்து இல்லை என்பதை நிரூபிக்க அதே போல் மாட்டுவண்டியை படிக்கட்டுகளில் ஏற்றிக்காட்டியது திராவிடர் கழகம்.
1994 இல் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று பரப்பப்பட்ட மோசடியை முறியடிக்கும் விதமாக சென்னை அண்ணாசாலையில் தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்தார் பொதுச் செயலாளராக இருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள்.
கிராமப்புறங்களில் கிளப்பப்படும்போது பேய் புரளிகள், ஆவி மோசடிகள், திடீர் சாமியார்கள், கொள்ளிவாய் பிசாசுகள் உள்ளிட்ட அனைத்து வகை மூடநம்பிக்கைகளையும் கிளம்பும் போது அவற்றை முறியடிக்க தனி பிரச்சாரப் படை அமைத்து அறிவியல் பூர்வமாகப் பிரச்சாரம் செய்வதுடன், உளவியல் நிபுணர்களின் கருத்துகளையும் விளக்கங்களையும் பெற்று பிரச்சாரம் செய்து வருவது ,இந்தியாவிலேயே திராவிடர் கழகம் மட்டும்தான்.
- உண்மை இதழ், நவம்பர் 16 -30 .20
தமிழறிஞர் கா.சு. பிள்ளை
கா.சு. பிள்ளை என்று அழைக்கப்படும்
கா. சுப்பிரமணியபிள்ளையின் பிறந்த நாள் 5.11.1888).
சைவத்தில் தோய்ந்தவர் என்றாலும், தந்தை பெரியார் அவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பு என்னும் கொள்கையில் தம்மை முற்றாக ஒப்படைத்துக் கொண்டவர்.
சுயமரியாதை இயக்கத்தோடு பின்னிப் பிணைந்து கிடப்பதால் நாயக்கரால் சைவம் அழிந்துவிடும்போல் தெரிகிறதே என்று சைவ மெய்யன்பர்கள் சிலர்
கா.சு.பிள்ளை அவர்களிடம் முறையிட்டபோது, “சைவம் அழிந்தாலும் பரவாயில்லை; புதுப்பித்துக் கொள்ளலாம்; ஆனால் பாழும் பார்ப்பனியத்தை அழிக்க இராமசாமி நாயக்கரை விட்டால் வேறு நாதி கிடையாது. அவருடன் மோத வேண்டாம்“ என்று பளிச்சென்று கருத்துக் கூறியவர்.
தாகூர் சட்ட விரிவுரையாளர் என்ற பட்டமும், அதற்காக பதினாயிரம் ரூபாய் பரிசும் பெற்றவர். தென்கிழக்கு ஆசிய நாட்டிலே குற்றவியல் சட்டப் புத்தகத்தை எழுதி, முதல் பரிசும் பெற்றவர்.
தமிழில் 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் என்றால், அவரின் பெருமையைச் சாற்றவும் வேண்டுமோ!
இவ்வளவு பெருமைக்கும், ஆற்றலுக்கும் சொந்தக்காரரான கா.சு. பிள்ளை அவர்கள் கடைசிக் காலத்தில் ஆதரிப்பாரின்றி வறுமையின் கொடிய பிடியில் சிக்குண்டார்.
சைவக் குழாமைச் சேர்ந்த மறை. திருநாவுக்கரசுமூலம் இதனை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், மாதந்தோறும் கா.சு. பிள்ளைக்கு 50 ரூபாய் அனுப்பி உதவினார். (50 ரூபாய் என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகையாகும்).
இதுபற்றி மறை. திருநாவுக்கரசு (மறைமலை அடிகளாரின் மகன்) கூறுகிறார்: எவ்வளவோ சைவ மடாதிபதிகள் எவ்வளவு சைவச் செல்வர்களாக இருக்கிறார்களே! அவர்களுக்கெல்லாம் இந்த அன்பில்லையே. இவர் (பெரியார்) இறை மறுப்புக் கொள்கையுடையவராயிருந்தும், தமிழர் என்ற ஓர் உணர்ச்சிக்காக இப்படி பெருங்கொடை வழங்குகின்றாரே என்றும் எண்ணினேன் என்கிறார். (ஆதாரம்: இளந்தமிழன், மே 2009).
- நவம்பர் 1 -15 .20
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021
பாரதி பாடல் புரட்டு – பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம்
அதாவது பாரதிபாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான மன்னும் இமயமலை எங்கள் மலையே என்னும் பாட்டின் அடிகளில் உன்னத பாரத நாடெங்கள் நாடே என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது. இது யாவருக்கும் தெரிந்ததேயாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்று திருத்திப் பதிக்கப்பட்டிருக்கின்றதாம். இம்மாதிரியாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டியதாகவே இருக்கின்றன.பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு.சுப்பிரமணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிரஸ் பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண் ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து, அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி, ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவுக்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புத்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்கள் பணத்தாசைக்குத் தக்கபடியும் நம்மவர்கள் மூடத்தனத்திற்குத் தக்கபடியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. இவ்வளவு கொள்ளையையும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அதுதன் ஜாதிப் புத்தியைக் காட்டியேவிட்டது. எப்படியென்றால். சாதாரணமாக அப்புத்தகத்தின்பேரால் சில பார்ப்பனக் குடும்பம் கொள்ளை அடித்ததை, சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்குக் காரணமே அப்புத்தகத்தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக சில இடத்தில் சொல்லியிருந்தாலும். சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமேயாகும். ஆனால், இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்து விட்டார்கள் எனத் தெரிய வருகின்றது.
இரண்டரையணா புத்தகத்திற்கு ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் படிப்பதின் மூலம் நமது பொருள் வீணாகுமன்றி, அது நம்மை ஏய்த்துத் தாழ்த்திவைத்திருக்கும் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தையும் கொடுக்க உபயோகப்படுகின்றது. நிற்க.
இந்தப் புத்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட யோக்கியர்களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக்கியத்தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரியமல்ல என்றாலும், நாட்டின் தேச பக்தர்கள் யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர்களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும், முழு மூடர்களுக்கும்கூட உதாரணம் வேண்டுமானால் இந்த பாரதிப் பாடல் புரட்டே போதுமென்று நினைக்கின்றோம்.
- தந்தை பெரியார்- “ குடிஅரசு”, கட்டுரை, 10.02.1929 –
நூல்: “பெரியார் களஞ்சியம் குடிஅரசு” தொகுதி – 8 பக்கம் 38-39
பாரதி ஆராய்ச்சி அறிவாளியா? இயற்கைவாத கவியா? அவர் ஒரு புராண பண்டிதரே
நம் தமிழ் நாட்டில் சமீபத்தில் பாரதியின் தினத்தைப் பல இடங்களில் கொண்டாடினார்கள். அப்பொழுது அவரை ஒரு தெய்வமாகப் பாவித்து அவருடைய படத்துக்கு மாலை போட்டுத் தூபதீப நைவேத்தியங் கூடச் சிலர் செய்தார்கள். இப்படியெல்லாம் செய்வதற்குப் பார்ப்பனரின் சூழ்ச்சி பிரசாரமும் பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிக்கையுமே காரணமென்றும் மற்றபடி இவர்கள் பாரதியைப் பற்றியோ அல்லது அவருடைய பாடல்களைப் பற்றியோ அறிந்து கொண்டாடப்பட்டதல்லவென்றும் எடுத்துக் காட்டவே இக்கட்டுரையை எழுதத் துணிந்தோம். ஆகையால் வாசகர்கள் இதைப் படித்த பின்பாவது தாங்கள் அக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதின் அறியாமையை உணர்ந்து அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளுவார்களாக.
பாரதிக்குக் கவி இயற்றவல்ல அறிவு சிறிது உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும்படியான மேதாவித்தன்மை எதுவும் அவரிடம் இருந்ததென்றோ, அவர் உயர்ந்த ஞானமும் ஒழுக்கமு முள்ளவரென்றோ, இன்னும் சிலர் விளம்பரஞ் செய்கிறபடி எந்த விதத்திலும், சமீப காலத்தில் தோன்றி மறைந்து போன தமிழ்ப் புலவர்களைப் போல ஆற்றல் படைத்தவரென்றோ யாரும் சொல்ல முடியாது. அப்படியிருந்தும் ஏன் அவரைப்பற்றி இவ்வளவு கூச்சல் போட வேண்டும் என்றும் கேட்கலாம். அதைத்தான் இங்கு ஆராய விரும்புகிறோம்.
முக்கிய காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதேயாகும். எப்படியென்றால் ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், ஒழுக்கங் கெட்டவனாயிருந்தாலும், துர்ப் பழக்கமுடையவனாயிருந்தாலும், பேடியாயிருந்தாலும், பித்துக்கொள்ளியாயிருந்தாலும் அவனைப்பற்றி அவனுடைய குற்றங்களையெல்லாம் மறைத்து “இந்திரன்” என்றும் “சந்திரன்” என்றும் உயர்த்திப் பேசி, எழுதி, அதன் மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழி தேடிக்கொள்கிறார்கள். இந்த அடாத காரியத்துக்குத் தகுந்த வசதிகள் அவர்களுக்கு தாராளமாய் இருக்கின்றன.
பாரதி, ஏதாவது அறிவுக்குப் பொருந்திய பாடல் எழுதியிருக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லையென்று நன்கு விளங்கும். “எல்லோரும் ஓர் இனம்” என்றும் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றும் என்னவோ வாய்க்கு வந்ததை அளந்து தள்ளியிருக்கிறார்; நடை முறைக்கும், அனுபவத்துக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லாத விஷயங்களையே சொல்லியிருக்கிறார். அவரைப் பாமரமக்கள் புகழ்வதற்குக் காரணம் அவர்களுடைய மூடப்பழக்க வழக்கங்களை வளர்க்கத் தக்கதாகவும் மனு நீதியை உயிர்ப்பித்து நிலைநாட்டக்கூடியதாகவும் அவருடைய பாடல் இருப்பதே ஆகும். எப்படி யென்றால் இதிகாசம், புராணம், வேதம், சாஸ்திரம் முதலியவைகளை அப்படியே தழுவி அவைகளில் அடங்கியிருக்கும் விஷயங்களை, இக்காலத்து தேவைகளை அதில் கலக்கி அதற்குத் தகுந்தாற்போல வேஷம் மாற்றிக்காட்டி அவர் பாடல் செய்திருப்பதேயாகும். மனு ஆட்சி எப்படியாவது ஏற்பட வேண்டும் என்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கண்டுகொண்டிருக்கும் பொழுது அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களைப் பார்ப்பனர்கள் கைநழுவ விடுவார்களா?
பாரதி அநேக பாடல்களைக் குடி வெறியில் பாடியிருக்கிறாரே தவிர நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம். பெண்களைப்பற்றி வானமளாவப் புகழ்ந்து பல பாடல்கள் செய்திருக்கிறார். ஆனால் பெண்களைப் பற்றி அவருடைய அந்தரங்க சுத்தியான அபிப்பிராயம் மிகக் கேவலமானது என்பது அவரது கிளிக்கண்ணியில் “பெண்களின் கூட்டமடி” என்று தன்னை மறந்து உண்மையைக் கக்கியிருப்பதிலிருந்து தெரிகிறது.
பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால் பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும் இந்தியா அவர்களுக்குச் சொந்த சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான். பார்ப்பனரின் நிலைமை உயர வேண்டுமென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது. இதற்கு மாறாக யாராவது அவரைப் பற்றி நினைத்துக்கொள்ள “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே,” “தமிழ் மொழி போல் எங்கும் காணோம்” என்று சொல்லப்படுமானால், இப்பாட்டுகள் போல் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றும் எடுத்துக் காட்ட முடியுமே தவிர, அதிகமில்லை யென்றும், அப்படி இரண்டொன்று பாடியிருப்பதும் கூடக் குடிவெறி யென்றும்தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் அவர் அபின், கஞ்சா, சாராயம் முதலியவைகளைச் சர்வ சாதாரணமாகவே உபயோகப்படுத்தி வந்திருக்கிறார். அவருக்குப் பார்ப்பானுடைய சுகமே லவயமென்பதாகத் தெரிகிறது என்பதற்கு ஆதாரமான சொற்களை அவர் தேசீயப் பாடல்களிலிருந்து மட்டும் இச்சந்தர்ப்பத்தில் எடுத்துக் காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றோம்.
பாட்டின் தலைப்பும் அதில் வரும் அடியும் கீழே தருகின்றோம்.
வந்தேமாதரம் – ஆரிய பூமியில்.
பாரத நாடு – யாகத்திலே தவ வேகத்திலே.
நாட்டு வணக்கம் – துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்தது மிந்நாடே.
பாரததேசம் – மந்திரங் கற்போம், வினைத் தந்திரங் கற்போம் (குட்டிக் காந்தியின் வினைத் தந்திரம். வி.க.)
தொழில் – பிரம்மதேவன் கலையிங்கு நீரே விண்ணினின்று எமை வானவர் காப்பார்.
எங்கள் நாடு – என்னரு முபநிட நூல்கள் எங்கள் நூலே உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
வந்தேமாதர மொழிபெயர்ப்பு – காலமெல்லிதழ்களிற் களித்திடுங் காலை நீ.
எங்கள் தாய் – நாவினில் வேதமுடையவள், வெண்மை வளரிமையாசலந் தந்த விறன் மகளாமெங்கள் தாய்.
பாரதமாதா – முன்னையிலங்கை அரக்கர் அழிய, ஆரிய ராணியின் சொல், ஆரிய தேவியின் தோள், போர்க்களத்தே பரஞானமெய்க் கீதை.
திருப்பள்ளியெழுச்சி – தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன.
தசாங்கம் – ஆரிய நாடென்றே யறி.
நவரத்தினமாலை – ஆணிமுத்துப் போன்ற மணி மொழிகளாலே (சமஸ்கிருதம்)
மகாத்மாவின் துவஜம்:- ஆரியக் காட்சி ஓர் ஆனந்தமன்றோ, செந்தமிழ் நாட்டுப் பொருநர் – கொடுந்தீக்கண், மறவர்கள், சேரன்றன் வீரர், சிந்தை துணிந்த தெலுங்கர் – தாயின் சேவடிக்கேயணி செய்திடு துளுவர். (ஆரியருக்கு அடிமைகள்)
லஜபதிராய் – ஆதிமறை தோன்றிய நல்லாரிய நாடெந்நாளும் நீதி மறைவின்றி நிலைத்த திருநாடு, ஆரியர் தம் தர்மநிலை ஆதரிப்பான், ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த.
திலகர்:- அன்போடோதும் பெயருடை யாரியன்.
கிருஷ்ணன் துதி:- எண்ணரும் புகழ்க் கீதையெனச் சொலும், எங்களாரிய பூமியெனும்,
கிருஷ்ணன் ஸ்தோத்திரம்:- ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே, ஆரிய நீயுநின் துறமறந்தாயோ, வெஞ்செய லரக்கரை வீட்டிடுவோனே வீரசிகாமணி, ஆரியர்கோனே.
ஆங்கிலப் பயிற்சி:- அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கிங் கருவருப்பாவதை, இயல்புணர்த்திய சங்கரனேற்றமும், பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள், நாட்டுக்கல்வி – மந்திர வேதத்தின் பேரொலி,
தமிழ்த்தாய்:- உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் (சமஸ்கிருதமே உலகில் சிறந்த பாஷை என்பது கருத்து)
புதுவருஷம்:- ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்.
என்று இவ்வாறாக ஆரிய மேன்மையையே – பார்ப்பனீயத்தின் மேன்மையையே அவரது நோக்கமாக எழுதியிருக்கிறார்.
ஆகவே பாரதிக்கும் கனம் ஆச்சாரியாருக்கும் தோழர் சத்தியமூர்த்தியாருக்கும் பார்ப்பன சூழ்ச்சி, பார்ப்பன ஆதிக்கப் புத்தி ஆகியவைகளில் எவ்வித வித்தியாசமும் காண முடியவில்லை. மற்றபடி தனிப்பட்ட முறையில் அவரது குணங்களைப் பற்றியும் மற்றும் அவரது சரித்திரத்தைப் பற்றியும் கவிபாடுவதில் அவருக்குள்ள கற்பனை அலங்காரம், பகுத்தறிவுக்கு ஏற்ற இயற்கை வருணணை அற்றதன்மை ஆகியவைகளைப் பற்றியும் பிறிதொரு சமயம் விவரிப்பேன். அவசரப்படுபவர்கள் “நவமணி” வருஷ மலரில் கண்டு கொள்ளலாம்..
- தந்தைபெரியார் – “குடி அரசு” – 17.10.1937
வெள்ளி, 19 பிப்ரவரி, 2021
கு.வெ.கி.ஆசான்
கோவையைச் சேர்ந்த கு.வெ.கிருஷ்ணசாமி அவர்கள்தான் நமது ஆசான்! மலையாளப் பெருங்கவிஞர் குமரன் ஆசான் அவர்களின் படைப்புகள்மீது தீராக் காதல் கொண்டு, தம் பெயரையே ஆசான் என்று மாற்றிக் கொண்டவர்.
அவர் எழுதிய நூல்கள் மொழி உரிமை, ஜாதி உருவாக்கம், பாவேந்தர், பெரியார், குமரன் ஆசான், ஈழத் தமிழர் உரிமைப் போர்; சாகுமகராஜ், மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம், Gora’s Positive Etheism and firewill, Thiruvalluvar on Learning and Wisdom உள்ளிட்ட நூல்களை உருவாக்கிய சிற்பி!
உலகப் புகழ் பெற்ற அறிவியல் - நாத்திக சிந்தனையாளரான ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்களால் எழுதப்பட்டு உலகையே உலுக்கி எடுத்த நூலான “The God Delusion” என்னும் ஆங்கில நூலை “கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’’ எனும் தலைப்பில் மிக அரும்பாடுபட்டு, அழகுத் தமிழில் அவர் மொழியாக்கம் செய்தது _- அவருக்குள் அடங்கிக் கிடந்த பேராற்றல் செல்வத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது. காலம் சொல்லிக் கொண்டேயிருக்கும்; நாத்திக உலகம் இந்த மானுட அருந்தொண்டுக்காக ஒரு முக்கியமான இடத்தை அளித்துக்கொண்டும் இருக்கும்.
அருப்புக்கோட்டை டி.கே. கைலாசம் அறக்கட்டளை சார்பில் அவர் ஆற்றிய உரை ‘மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம்!’ எனும் ஆய்வு நூலாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உரைக்காக “பெரியார் பேருரையாளர்’’ எனும் பட்டம் வழங்கப்பட்டது. நமது Think-Tank ஆசான் என்று நமது ஆசிரியர் குறிப்பிடுவார்கள்.
பத்து ஆண்டு காலமாக பெரியார் திடலிலேயே தங்கி, இயக்க ஏடுகளுக்குக் கட்டுரைகளை வழங்கி, தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு மாணிக்கத் தூணாக ஒளி வீசினார்.
‘விடுதலை’ குழுமத்தின் மூத்த சகோதரராக விளங்கி வழிகாட்டிய அந்த நந்தா விளக்கு, சற்றும் எதிர்பாராத விதமாக திடீர் என்று தன் மூச்சைத் துறந்துவிட்டது இதே நாளில் (22.10.2010) அதுவும் பெரியார் திடலிலேயே!
வாழ்ந்தால் அவர் போல் வாழவேண்டும் என்று ஆசைப் படுவோம்!
- உண்மை இதழ், 16-31.10.20
வியாழன், 18 பிப்ரவரி, 2021
பாரதி தமிழ் இலக்கணம் கற்றவரா?
நேயன்
கால்டுவெல் அவர்களின் ஆய்வு நூலான ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் முதல் பதிப்பு 1856ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பும் பாரதியின் காலத்திலேயே 1915ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்படி இருந்தும், பாரதி கால்டுவெல் அவர்களின் நூலைப் பற்றி எங்குமே குறிப்பிடாதது மோசடியாகும்.
பாரதி போன்ற சமஸ்கிருதப் பற்றுக் கொண்ட பார்ப்பனப் பண்டிதர்களைக் பற்றி கால்டுவெல் கூறியதாவது.
“திராவிட மொழிகள் வடஇந்திய மொழிகளி-லிருந்து பற்பல இயல்புகளில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும் அத்திராவிட மொழிகள், வடஇந்திய மொழிகளைப் போலவே, சமசுகிருதத்திலிருந்து பிறந்தவையாகச் சமசுகிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன. தாங்கள் அறிந்த எப்பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண்டிதர்கள்.’’ (ஆதாரம்: கால்டுவெல், திராவிடம், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்)
1915இல் சூலைத் திங்களில் ‘ஞானபானு’ என்னும் இதழில் பாரதியார் தமிழில் எழுத்துக் குறை என்னும் தலைப்பில் “சமஸ்கிருதத்தில் க, ச, ட, த, ப, ற போன்ற வல்லின எழுத்துகளுக்கு வர்க்க - எழுத்துகள் இருப்பதுபோல், தமிழில் வர்க்க எழுத்துகள் இல்லாததால், தமிழில் எழுத்துக் குறையுள்ளது’’ என்கிறார். (ஆதாரம்: வ.உ.சியும் பாரதியும், ஆ.இரா. வேங்கடாசலபதி)
ஒரு மொழியிலுள்ள ஒலிகள், அதற்குண்டான குறியீடுகள் மற்ற மொழியில் இல்லாதிருந்தால், அது அம்மொழியின் குறைபாடு ஆகாது. ஏனெனில், ஒலிப்பு, ஒலிக்குறியீடு என்பவை அம்மொழிக்கே உரிய இயற்கையான இயல்புகள் ஆகும். ஆகவே சமசுகிருத வர்க்க எழுத்துகள் தமிழில் இல்லை என்று பாரதியார் குறைபட்டுக் கொள்வது ஏற்புடையது ஆகாது.
பாரதியின் இக்கூற்றை அறிஞர் வ.உ.சி. அவர்கள் 1915 செப்டம்பர்த் திங்களில் அதே ‘ஞானபானு’ ஏட்டில் கடுமையாக மறுத்துக் கூறியுள்ளார். “தமிழில் எழுத்துக் குறை என்று சொல்லுபவர்கள் பெரும்பாலும் சமசுகிருதச் சார்புடையவராகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படிக்காதவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தமிழுக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் என்னும் உன்னத நூலையும், அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருக்குறள் முதலிய இலக்கிய நூல்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்’’ என்கிறார். (ஆதாரம்: வ.உ.சியும் பாரதியும், ஆ.இரா. வேங்கடாசலபதி)
தமிழில் எழுத்துப் பற்றாக்குறை என்பதைக் காரணம் காட்டி, அதையே வாய்ப்பாகக் கருதி, வேண்டுமென்றே தமிழில் வடமொழிச் சொற்களை அளவுக்கு அதிகமாகக் கலந்து எழுத ஆரம்பித்தார் பாரதியார். இதை அவருடைய பிற்கால எழுத்துகளில் காணலாம்.
“மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பங்களூர், திருச்சினாப்பள்ளி, தஞ்சாவூர், புதுச்சேரி, கும்பகோணம் இத்யாதி ஷேத்ரங்களில் வஸிக்கும் இங்கிலிஷ் பிராமணர்களுக்குள்ளே ஸந்தியா வந்தனம் எவ்வளவு சொற்பம்? தீர்த்தபானம் கூட நடக்கத்தான் செய்கிறது. ராமராமா, இந்த ரிஷிகளெல்லாரும் என்ன பிராயச்சித்தம் பண்ணுகிறார்கள்? என் மாப்பிள்ளை ரங்கூனில் நித்ய கர்மானுஷ்டங்கள் தவறாமல் நடத்தி வருகிறானென்று கேள்வி. அவன் வந்தால் ஜாதிப்ரஷ்டன் தானே? ப்ராயச்சித்தம் பண்ணினால் கூட நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.’’ (ஆதாரம்: பாரதி தமிழ், புதூரன்)
இது 1917 சூன் 21இல் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ‘ப்ராயச் சித்தம்’ என்னும் தலைப்பில் பாரதியார் எழுதிய கதையின் ஒரு பகுதி. (பாரதியார் தன் பெயரைக் கூட ஸி. ஸுப்பிரமணிய பாரதி என்றே எழுதி உள்ளார்.)
பாரதியாருக்குத் தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடு இல்லை என்பதைப் பற்றி அவருடைய நண்பர் வ.ரா. குறிப்பிடுவதாவது.
“தமிழ்ப் பண்டிதர் பதவிக்குப் பாரதியாரிடமிருந்த இலட்சணங்கள் விநோதமானவை. எட்டயபுர சமஸ்தான வித்வான்கள் அளித்த பாரதி என்ற பட்டமொன்றே முதல்தரமான இலட்சணம் என்றே எண்ணுகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் நன்னூல் (இலக்கண) சூத்திரங்களைத் தலைகீழாய்ச் சொல்ல முடியுமே, அந்தச் சாமர்த்தியம் பாரதியாருக்குக் கொஞ்சங்கூடக் கிடையாது. நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அதைப் படித்து நெட்டுருப் பண்ணியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.
தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம்
மூன்றும் மொழி மூவிடத்து மாகும்
இந்தச் சூத்திரத்தைப் பாரதியார் எப்படி-யெல்லாமோ கேலி செய்வார். நன்னூல் தற்போது இருக்கிற நிலையில் பாரதியாருக்குத் துளிக்கூடப் பிடித்தம் இருந்ததில்லை. நன்னூலிலே இவ்வளவு வெறுப்புக் கொண்ட பாரதியார் எவ்வாறு தமிழ்ப் பண்டிதர் உத்யோகம் பார்த்தார் என்பது குறித்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.’’ (ஆதாரம்: வ.ரா. _ மகாகவி பாரதியார்)
ஒருமுறை எட்டயபுரம் பள்ளியில் மாலை நேரத்தில் திருக்குறளைப் பற்றிப் பேச பாரதியாரை அழைத்திருந்தனர். பாரதியாரும் ஒப்புக் கொண்டு பேசவந்தார். அங்கு ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி’ என்று மாரியைப் பற்றியே இருபது நிமிடங்கள் கையைக் காலை ஆட்டிப் பாடிக்கொண்டு இருந்தார். தலைமை வகித்தவர் திருக்குறளைக் குறித்துப் பேசும்படி கூறினார். “நான் குறள் படித்து வெகு காலம் ஆகிவிட்டது. அது வெகு நல்ல நூல். இரண்டொரு அடி நினைப்பிருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாம். ஆகா, எவ்வளவு உண்மை! (ஆதாரம்: கவிக்குயில் பாரதியார் _ சுத்தானந்த பாரதி) என்று கூறி விட்டு கூட்டம் முடிந்து விட்டதாகப் பாரதியே அறிவித்து விட்டு வெளியேறி விட்டார் என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளார்.
இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் வரவேண்டும் என்று முதன் முதலில் சொன்னவர் பாரதியே! 1906இலேயே இக்கருத்தை இவர் வலியுறுத்தியுள்ளார். 15.12.1906 “இந்தியா’’ வார ஏட்டில் ‘இந்தி பாஷைப் பக்கம்’ என்னும் தலைப்பில் இவர் கூறுவதாவது: “தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். தமிழ்ப் பாஷையே நமக்குப் பிரதானமாய் இருக்க ஹிந்திப் பாஷையை அப்பியஸிக்க என்ன அவசியம் இருக்கிறது என்று (என்பதை?) சொல்லுகின்றோம். இந்தியா பலவித பிரிவுகளுடையதாய் இருந்த போதிலும் உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கிணங்க அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும், ஹிந்தியும், தெலுங்கர் தெலுங்கும் ஹிந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்-பார்களானால் நமக்குப் பொதுப்பாஷை ஒன்றிருக்கும். தமிழர், தெலுங்கர் முதலானவர்கள் கூடச் சிறிது பிரயாசையின் பேரில் ஹிந்தியைக் கற்றுக் கொள்ளலாம்.’’ (ஆதாரம்: பாரதி தரிசனம், சி.எஸ்.சுப்பிரமணியம்)
(தொடரும்...)
- உண்மை இதழ், செப்டம்பர் 16 - 30 .2020
பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா?
நேயன்
பரிதிமாற் கலைஞர் என்கிற சூரிய நாராயண சாஸ்திரியார் தான் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனால் 99.9 சதவீதம் ஆரியப் பார்ப்பனர்கள் அதை ஏற்கவில்லையே இன்றளவும் ஏற்கவில்லையே. செம்மொழி என்ற வார்த்தை எங்கிருந்தாலும் அதைச் செதுக்கி எடுக்கிறார்கள்; மறைத்துப் பதுக்குகிறார்கள். இதுதானே நடைமுறை. ஒரு சூரிய நாராயண சாஸ்திரியாருக்காக ஆரியப் பார்ப்பனர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ள முடியுமா?
உ.வே.சா.தமிழ்ப் பணியாற்றினார் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அவர் ஆரியப் பற்று அதிகம் பெற்று விளங்கினார் என்பதும் உண்மை.
தமிழர் மரபு என்னும் தலைப்பில் 1941ஆம் ஆண்டு வானொலியில் பேசிய உ.வே.சா. “ஓர் ஏழை வேலைக்காரனைப் பார்த்துச் சோறு தின்றாயா? என்று கேட்கலாம். ஆனால் ஒரு கனவானைப் பார்த்து அவ்வாறு கேட்டுவிடக்கூடாது. “போஜனம் ஆயிற்றா?’’ என்றே வினவிடல் வேண்டும். அதுதான் தமிழ் மரபு’’ என்றும்,
அந்தணர்களைப் பார்க்கும்போது, “நிவேதினம் ஆயிற்றா?’’ என்றும், துறவிகளிடம், “பிட்சை ஆயிற்றா?’’ என்று வினவ வேண்டும் என்கிறார்.
(ஆதாரம் : உ.வே.சா. தமிழர் மரபு, செந்தமிழ்ச்செல்வி, 1941, சிலம்பு. க. பரல் உ.)
இதுதான் தமிழ்ப் பற்றா? தமிழை உயர்த்துவது இதுதானா?
தமிழ் என்பது வேலைக்காரனிடம் பேசப்பட வேண்டும். உயர்நிலையில் உள்ளவர்களிடமும், ஆரியப் பார்ப்பனர்களிடமும் சமஸ்கிருதத்தில் பேச வேண்டும் என்கிறார்.
அவர்தான் பேசினார் என்றால் அதை அப்படியே தணிக்கை செய்யாது வானொலி ஒலி பரப்பியது. காரணம் இவரும் அவாள், அவர்களும் அவாள்கள். இதைத் தவிர வேறு என்ன?
உ.வே. சாமிநாத அய்யரின் இந்த உரையைக் கண்டித்து, கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்கள் “எது தமிழ் மரபு’’? என்னும் தலைப்பில் செந்தமிழ்ச் செல்வியிலே கட்டுரை எழுதினார்.
பாரதியாரின் தமிழ் பற்றை பார்ப்போம். பாரதியார் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும் தன்னுடைய மூதாதையர்களின் மொழியாகிய ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழி என்பதோடு அதைத் தெய்வ மொழியாகவும் கூறுகிறார்.
“நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது.அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்,’’
இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது:
“தமிழ் பாஷைக்கோ , இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே’’ என்கிறார் பாரதியார்.
இந்தியாவிலுள்ள அனைத்துச் செல்வங்களையும் ‘ஆரிய ஸம்பத்து’ என்கிறார் பாரதியார். “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலேயே துளஸிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி - இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ் மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் - இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆர்ய ஸம்பத்து.’’
இதில் திருக்குறள், சிலப்பதிகாரம், ஆண்டாள் திருமொழி, முதலிய தமிழ் இலக்கியங்களை ஆரியச் செல்வம் என்கிறார் பாரதி. மேலும் பௌத்தர்களின் எல்லோரா ஓவியங்கள், தஞ்சை மராட்டியர்களின் தஞ்சை மகால், சாஜகானின் தாஜ்மகால் முதலியவற்றையும் ‘ஆரியச் செல்வம்’ என்கிறார். மற்றவர்களின் உழைப்பில் விளைந்த கலை, இலக்கியம் முதலியவற்றை ஆரியச் செல்வமாகப் பாரதி உரிமை கொண்டாடுவது அவரின் அளவு கடந்த ஆரிய வெறியைக் காட்டுவதாகவே அமைகின்றது.
‘உலகில் உள்ள எல்லா நாகரிகங்களுக்கும் மூலமாக இருப்பது ஆரிய நாகரிகமே’ என்கிறார் பாரதியார்.
“அய்ரோப்பாவிலும், ஆசியாவிலும், பிற இடங்களிலும் காணப்படும் நாகரிகங்களுக்கெல்லாம் முந்தியதும் பெரும்பான்மை மூலாதாரமுமாக நிற்பது ஆரிய நாகரிகம். அதாவது பழைய சமஸ்கிருத நூல்களிலே சித்தரிக்கப்பட்டு விளங்குவது. இந்த ஆரிய நாகரிகத்துக்குச் சமமான பழமை கொண்டது தமிழருடைய நாகரிகம் என்று கருதுவதற்குப் பல விதமான சாஷ்யங்களிருக்கின்றன’’ என்கிறார் பாரதியார். ஆகவே தமிழர் நாகரிகம் ஆரியத்தை விட உயர்ந்த நாகரிகம் என்று கூறுவதற்கு இவருக்கு மனம் வரவில்லை. தமிழர் நாகரிகம், ஆரிய நாகரிகத்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும்.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே’’
என்ற பாடல்
நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும்தான், “செந்தமிழ் நாடெனும் போதினிலே’’என்ற பாடலையும், ‘யாமறிந்த மொழிகளிலே’’ என்ற பாடலையும் எழுதினார், இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம் பரிசாக ரூ.100 அளித்தது.
பாரதியார் பரிசுப் போட்டிக்காகவே மேலே கண்ட பாடலை எழுதினார். போட்டியில் பரிசுப் பெறுவதற்காக தான் தமிழைச் சிறப்பித்து எழுதினரே தவிர, தமிழின் மீது உள்ள பற்றால் அல்ல. தமிழையும் தமிழ்நாட்டையும் மிகவும் உயர்வாக எழுதுகிறார். ஆனால் அதே ஆண்டில் தனிப்பட்ட முறையில் ‘சுதேச கீதங்கள்’’ என்னும் தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக
“ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வதியன் கண்டு மகிழ்ந்து - நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல்அன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.’’
என்று பாரதி கூறுகிறார். இங்குத் தமிழுக்கு இலக்கணம் இல்லாதிருந்தது போலவும், ஆரியப் பார்ப்பனர்கள்தான் இலக்கணம் வகுத்துக் கொடுத்தது போலவும் பாரதி கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் அவர் ஆரியம்தான் உயர்ந்த மொழி என்றும் கூறுகின்றார்.
(தொடரும்)
-, உண்மை இதழ் ,ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15.2020
சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்
சுவடுகள் :
பிறப்பு: 5.9.1893
தந்தை பெரியார் அவர்கள் தாம் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு தாம் துணைத் தலைவராக இருந்துகொண்டு, வேறு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார் என்றால், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் சமூகத்தின் பால் கொண்ட பற்று வியக்கத்தக்கதாக போற்றத்தக்கதாக இருக்க வேண்டும் அல்லவா?
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார். தென்மாவட்டங்களில் சுயமரியாதை இயக்கத்தின் தூணாக விளங்கியவர்.
1893ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் மதுரை மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்த இவர் நீதிக் கட்சியுடன் தொடர்பில் இருந்தார். 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதலாவது மாகாண மாநாட்டிற்கு தலைமை வகிக்க சவுந்தரபாண்டியன் நாடாராக வந்தவர், அம்மாநாட்டு தீர்மானத்தின்படி சவுந்தரபாண்டியனாக திரும்பினார். சுயமரியாதை இயக்க கொள்கைகளை தொடர்ந்து மாநாடுகளிலும் கூட்டங்களிலும் தாம் பங்கேற்ற பிற நிகழ்வுகளிலும் முழங்கினார்.
முழங்கியது மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறைபடுத்தும் செயல்களிலும் வெற்றிகண்டார். தென்மாவட்ட பிற்படுத்தப்பட்ட மக்களிடையே விதவை திருமணங்களையும் ஜாதி மறுப்புத் திருமணங்களையும் ஏராளம் நடத்தி சுயமரியாதைப் புரட்சியில் நல்ல பங்கு எடுத்துக் கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு பெற்ற நிலையில், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி செய்த செயல்கள் செயற்கரியனவாகும்.
அந்த காலக் கட்டத்தில் பேருந்து வண்டிகளின் உரிமையாளர்களிடம் ஜாதி வெறி தாண்டவமாடியது. பேருந்துகளில் “பஞ்சமர்க்கு இடமில்லை’’ என்று எழுதப்பட்டிருந்ததுடன் டிக்கட்களிலேயும் அவ்வாறு எழுதப்பட்டு தீண்டாமை கோலோச்சியது.
மாவட்ட ஆட்சி கழக தலைவராக சவுந்தரபாண்டியனார் கீழ்க்கண்ட ஆணையை துணிவாக போட்டார்.
“இந்த ஜில்லாவில் உள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதிதிராவிடரை பஸ்களில் ஏற்றுவதில்லை என்றும், டிக்கட்களில், “ஆதிதிராவிடர்களுக்கு டிக்கட் கொடுக்கப்பட மாட்டாது என்றும் நிபந்தனை ஏற்படுத்தியுள்ளதாக அறிகிறோம்.
இவ்வழக்கம் பயணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத்தக்கதாகவும், மிக அக்கிரமமானதாகவும் இருக்கிறது. ஆகவே, மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ, டிக்கட்களில் மறுப்பு விதிகளை அச்சிடவோ செய்தால் அவர்களது லைசென்கள் முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்கிறோம்’’ இந்த சுற்றுக் கடிதம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் அந்த தடை விதி நீக்கப்பட்டதா? இல்லையா என்று சாம்பிள் டிக்கட்டுகளுடன் ரிப்போர்ட் செய்துகொள்ள வேண்டும் என்று துணிச்சலாக ஆணையிட்டு ஜாதி வெறியை அடக்கினார்.
முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது சூறாவளி சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து மொழி உணர்வை எழுப்பி போராட்டத்தில் பங்கேற்க செய்தார்.
சென்னை சட்டமன்ற மேலவைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1953 பிப்ரவரி 22ஆம் நாள் மறைவுற்றார்.
- உண்மை இதழ், ஆகஸ்ட்16- செப்டம்பர் 15.20
செவ்வாய், 16 பிப்ரவரி, 2021
திராவிடர் என்றால் ‘தீ’யாய் சுடுவது ஏன்?
எதிர்வினை:
(போலித் தமிழ் தேசியர்களுக்கு பதிலடு)
கி.தளபதிராஜ்
விடுதலை’ ஞாயிறு மலர் 21.6.2020 இதழில் பேராசிரியர் அருணன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்திருந்தார். “பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி’’ என்பது தான் தோழர் அருணன் அவர்களுடைய வினா.
“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்!’’ என்று ஆசிரியர் அந்த வினாவிற்கு விடையளித்திருந்தார். ‘சில’ தமிழ்த் தேசியர்கள் பெரியாரை எதிர்ப்பது, அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக என்று தான் அதில் குறிப்பிட்டிருந்தார்.
ஏனோ, தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் தோழர் மணியரசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அவர் தனது இயக்க முகநூல் பக்கத்தில் “வீரமணி அவர்கள், அகவைக்கும் அனுபவங்களுக்கும், தலைமைக்கும் உரிய பண்புடன் விடை கூறவில்லை!’’ என்று தொடங்கி ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார். மேற்படி பதிலில் என்ன பண்பு குறைந்து விட்டது என்று தெரியவில்லை.
மனியரசன் தனது கட்டுரையில், “தமிழர்’’ என்று தனித்தன்மையுள்ள இனப்பெயர் இருக்கக்கூடாது; அதைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் கலந்த கலப்பினமாகச் சித்தரிக்க வேண்டும் என்பது பெரியாரின் திட்டம்! பெரியார் தமிழினத்தில் பிறக்கவில்லை என்பதற்காக இந்த வேலையைச் செய்தார் என்று நான் கருதுகிறேன் என்கிறார்.
தமிழினத்திற்காக தன் வாழ்நாளையே அற்பணித்த பெரியாரை பழித்து, அந்த மகத்தான தலைவரின் அருந்தொண்டுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் இவர்களின் மலிவான அரசியலுக்கு, தமிழர் தலைவரின் பதில் எந்தளவிற்கு பண்பு கெட்டு விட்டது என்று புரியவில்லை.
மணியரசன் என்ன சொல்ல வருகிறார்?
‘திராவிடர்கள்’ என்ற பெயர் அசலாக யாருக்கு வந்தது? “தென்னாட்டுப் பிராமணர்களுக்கு! இதைத் தென்னாட்டுக் குலங்களும் குடிகளும்’’ என்ற தலைப்பில் களஆய்வு நூல் எழுதிய தர்ஸ்ட்டன், ‘திராவிடர்’ என்பது தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே அசலாகக் குறித்த சொல் என்று குறிப்பிடுகிறார். பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தில் ‘திராவிடியன்’ என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும்போது, தர்ஸ்ட்டனின் மேற்கோளை அப்படியே அது காட்டுகிறது (Encyclopaedia Britannica, Vol. 15 - 1947). என்று சொல்கிறார்.
‘திராவிடியன்’ என்ற சொல்லுக்கு விளக்கமளிக்க, 1947இல் வெளிவந்த என்சைக்ளோபீடியாவை காட்டுகிறார் மணியரசன். 2007இல் பிரசுரிக்கப்பட்ட அதே என்சைளோபீடியாவில் சர்ச்சைக்குரிய இந்த கருத்தை தவிர்க்கும் பொருட்டு திராவிடியன் என்ற சொல்லையே நீக்கி வெளியிட்டிருக்கிறது ஆனந்த விகடன்.
“தமிழர் என்பது மொழிப் பெயர். திராவிடர் என்பது இனப் பெயர்’’ என்று சொன்னால் மணியரசன் குதர்க்கம் செய்கிறார். இதற்கான விளக்கத்தை இதோ பெரியாரே கூறுகிறார்:
தமிழர் என்பது மொழிப்பெயர். திராவிடர் என்பது இனப் பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் ‘தமிழர்’ என்ற தலைப்பில் கூற முடியும். ஆனால் தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது.
இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும் அவன் ‘திராவிடன்’ என்ற தலைப்பில்தான் சேருவான். ஆகையால் திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் மொழி காரணமாக மட்டுமே தன்னை திராவிடனென்று கூறிக்கொள்ள முடியாது.
தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழனென்று கூறிக்கொண்டு நம்முடன் கலந்து கொண்டு மேலும் நம்மைக் கெடுக்கப்பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னை திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்படமாட்டான். அப்படி முன்வந்தாலும் அவனுடைய ஆசார அனுஷ்டானங்களையும், பேத உணர்ச்சியையும் விட்டு திராவிடர் பண்பை ஒப்புக்கொண்டு அதன்படி நடந்தாலொழிய நாம் அவனைத் திராவிடன் என்று ஒப்புக்கொள்ள மாட்டோம்.
-பெரியார், நூல்:மொழியாராய்ச்சி
மணியரசனோ, திராவிடர் என்ற சொல் பார்ப்பனர்களைக் குறிக்கிறது என்பதற்கு ஆதாரமாக, சென்னையில் “தென் கனரா திராவிட பிராமணர் சங்கம்’’ ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள புதூரில் அவ்வட்டார பிராமணர்களுக்கு மட்டுமே உரிய “புதூரு திராவிட பிராமண சங்கம்’’ அய்தராபாத்திலிருந்து செயல்பட்டு வரும் தெலுங்கு பிராமணர் அமைப்பான “சிறீ கோனசீமா திராவிட சங்கம்’’ “தும்மங்கட்டா திராவிட பிராமணர் சங்கம்’’ “உடுப்பி ஸ்தனிகா திராவிட பிராமண சங்கா’’ “உடுப்பி தென்கனரா காசர்கோடு திராவிட பிராமணர் சங்கம்’’ எனப் பல திராவிட பிராமண சங்கங்கள் இப்போதும் செயல்பட்டு வருவதாகவும், ‘சென்னை மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிராமணப் பேராசிரியர் ஒருவரின் பெயர் மணி திராவிட் சாஸ்த்திரி! மட்டைப் பந்து வீரர் பெங்களூர் பிராமணரின் பெயர் இராகுல் திராவிட்!’ என்றும் ஒரு நீண்ட பட்டியலையே ஆதாரத் தகவலாக கொடுத்திருக்கிறார்.
அவர் இப்படி எவ்வளவு சாட்சிகளை இழுத்து வந்தாலும் அதில் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று தான்.
திராவிடர் கழகத்திற்கும், திராவிட அரசியல் கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? திராவிடர் கழகத்தில் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாது. ஏன் எனில் திராவிடர் என்பது ஓர் இனத்தைக் குறிக்கும் சொல். திராவிட கட்சிகளில் பார்ப்பனர்கள் உறுப்பினராகலாம். இதில் உள்ள ‘திராவிட’ என்பது இடத்தைக் குறிக்கிறது.திராவிடர் என்பதோ இனத்தைக் குறிக்கிறது.
மணியரசனார் குறிப்பிடும் பெயர்கள் அனைத்தும் ‘திராவிட’ என்றே குறிப்பிடப் பட்டிருப்பதை கவனிக்க வேண்டும். திராவிடப் பகுதியில் வாழும் பார்ப்பனர்கள் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், கேரள பார்ப்பனர்கள், ஆந்திரப் பார்ப்பனர்கள் என்பது போல் திராவிடப் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். எந்தப் பார்ப்பனராவது திராவிடன் என்றோ, திராவிடர் என்றோ பெயர் வைத்திருக்கிறார்களா? அதே போல் திராவிட் என்பதும் இடத்தைத்தான் குறிக்கும். அதற்கு சைதாப்பேட், குரோம்பேட், தேனாம்பேட் என ஆயிரம் உதாரணங்களை நாமும் காட்ட முடியும்.
‘பாப்பாத்தி’ என்று பெண்குழந்தைகளுக்கும், ‘அய்யர்’ என்று ஆண்களுக்கும் நம்மவர்களிடையே பெயர்கள் புழக்கத்தில் இருப்பதையும் பார்க்கிறோம். அதற்காக அந்த பெயருடையவர்களையெல்லாம் பார்ப்பனர்கள் என நினைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருக்கும் என்று நினைத்தால் மணியரசனின் வாதங்களை கை கொட்டி சிரிக்கத்தான் வேண்டும்.
தமிழகத்திலிருந்து வடநாட்டிற்கு பிழைக்கச்சென்ற பார்ப்பனர்கள் தாங்கள் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் என்பதைக் குறிக்க திராவிட் என்ற சொல்லை தங்கள் பெயரோடு இணைத்துக் கொண்டனர். கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரைச் சேர்ந்த வேதவிற்பன்னரான லட்சுமணசாஸ்திரி என்ற பார்ப்பனர் காசிக்குச் சென்று வசித்தபோது தன் பெயரில் திராவிட் என இணைத்துக் கொண்டார். இவர் சாரதா சட்டத்தை எதிர்த்துப் போராடியவர் என்று மறைந்த சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரர் தனது தெய்வத்தின் குரல் புத்தகத்தில் ‘பால்ய விவாகம்’ பற்றி எழுதியபோது குறிப்பிட்டிருக்கிறாரே.
“திராவிடர் என்ற சொல்லுக்கு தமிழ்ச் சான்றுகள் கொடுங்கள்’’ என்று இக்காலத் திராவிடவாதிகளிடம் நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இதுவரை யாரும் அவ்வாறான அகச்சான்று கொடுக்கவில்லை என்கிறார் மணியரசன்.
மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களைப் பார்த்து விவேகானந்தர் “நீங்கள் என்ன கோத்திரம்?’’ என்று கேட்டபோது “நான் தன்மானம் மிக்க தென்னாட்டு திராவிடன்’’ என்று சொன்னதாக அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் பதிவாகியிருக்கிறதே அதற்கு என்ன அர்த்தம்?
தமிழர் - திரமிளர் - திராவிடர் என பாவாணர் எடுத்து இயம்பவில்லையா?
ஆரிய திராவிட போர் எந்த இலக்கியத்தில் இருக்கிறது என்கிறாரே? ஆரிய திராவிடப் போராட்டம் என்பது என்ன மல்யுத்தமா? ஆயுதப் போரா? சிப்பாய்களைக் கொண்டு படையெடுப்பதா? மாறாக அது பண்பாட்டு படையெடுப்பு அல்லவா? பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் மூலைக்கு பார்ப்பனர்களால் இடப்பட்ட கண்ணுக்குத் தெரியாத விலங்கை உடைக்கும் போராட்டமல்லவா? பெரியார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே தோன்றியிருந்தால், பார்ப்பன சூழ்ச்சியை இந்த சமூகம் அக்குவேறு ஆணிவேறாக புரிந்து கொண்டிருந்தால் மணியரசனார் சொல்வது போல சங்க இலக்கியங்களில் இவையெல்லாம் இடம் பெற்றிருக்கும். என்ன செய்வது பெரியார் 19ஆம் நூற்றாண்டில்தானே பிறந்தார்?
தமிழர் விழாவான பொங்கலை திராவிடர் திருநாள் என்று ஏன் சொல்ல வேண்டும் எனக் கேட்கிறார் மணியரசன். தமிழர்களுக்கான ஒரே விழாவாக இருந்த பொங்கலையும் “ஸ்வாகா’’ பண்ணப் பார்த்தது தான் பார்ப்பனீயம். அந்த சூட்சமத்தை மக்களிடம் போட்டுடைத்தார் பெரியார். “பொங்கல் பண்டிகையைக் கூட பார்ப்பனர்கள் தம் வழியில் திருப்பிக் கொண்டனர். ‘சங்கராந்தி’ ‘போகி’ பொங்கல் என்று சொல்லி இந்த மூன்றும் அவனது புராணத்தில் உள்ளதை அனுசரித்து அக் கருத்துப்படி இந்திரனுக்கு, கிரகங்களுகென்று அமைக்கப்பட்டிருக்கிறதென்று ஆக்கிக் கொண்டனர்’’ என்றார். இந்த பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கத்தான் தமிழர் விழா என்பதோடு நிறுத்தாமல் திராவிடர் திருநாள் என்கிறோம்.
இலக்கியங்களில் ஆரியர் - திராவிடர் போராட்டத்திற்கான சான்றுகள் இல்லை என்று சொல்லும் மணியரசன், ஆரியர் திராவிடர் இனக்குழுக்களுக்கான அறிவுப்பூர்வமான ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றி என்ன சொல்கிறார்?
2009இ-ல் ரெய்க்கின் தலைமையிலான ஒரு குழு, ‘நேச்சர்’ இதழில் ‘இந்திய மக்கள்தொகை வரலாற்றின் மறு கட்டுமானம்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இந்திய மக்கள்தொகையின் மரபணுக் கட்டுமானத்தை ஆய்வுசெய்த இந்தக் கட்டுரை, வட இந்திய மூதாதையர், தென்னிந்திய மூதாதையர் என்கிற கருத்தாக்கங்களைப் பயன்படுத்திக்கொண்டது. வட இந்திய மூதாதையர் மரபணுரீதியாக மத்தியக் கிழக்கு ஆசிய, மத்திய ஆசிய, அய்ரோப்பியர்களுக்கு நெருக்கமானவர்கள் என்றும், தென்னிந்திய மூதாதையர் பிரத்யேகமாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அது கூறியது.
தற்போது இந்தியாவில் இருக்கும் மக்கள் குழுவினர் பலரும் ஏறக்குறைய இந்த இரண்டு வகை மூதாதையர்களின் கலப்பானவர்கள் என்றும், தொன்றுதொட்டு உயர் ஜாதியைச் சேர்ந்த இந்தோ- - அய்ரோப்பிய மொழி பேசுபவர்களிடையே வட இந்திய மூதாதையர் பாரம்பரியம் அதிகமாக இருக்கிறது என்றும் நிறுவியது அக்கட்டுரை.
‘எட்ஜ்’என்கிற இதழுக்கு ரெய்க் அளித்த ஒரு நேர்காணலில், இந்தோ- அய்ரோப்பிய மொழிகள் ஸ்டெப்பி புல்வெளிகளில் தோன்றி பிறகு அய்ரோப்பாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் பரவின என்கிற கருத்தாக்கம் குறித்து,
“மரபணு ஆராய்ச்சி முடிவுகள் ஸ்டெப்பி புல்வெளி தொடர்பான இந்தக் கருத்தாக்கத்துக்கு ஆதரவாக அமைந்துள்ளது. ஏனெனில், ஆதிகால வடக்கு யுரேஷிய மூதாதையர் அய்ரோப்பாவுக்கு வந்ததற்கான வலுவான தடங்களைக் கடந்த ஆண்டு கண்ட நமக்கு, அவர்கள் எந்த காலகட்டத்தில் அய்ரோப்பாவுக்கு வந்தனர் என்று இப்போது தெரியவந்துள்ளது’’ என்றும் குறிப்பிட்டார். “அந்த மூதாதையர் 4,500 ஆண்டுகளுக்கு முன் கிழக்கில் இருக்கும் ஸ்டெப்பியிலிருந்து வந்தனர். மேலும், இந்தியாவில் 2,000 மற்றும் 4,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் குழுக்களின் மிகத் தீவிரமான கலப்பு ஏற்பட்டது. மிகப் புராதனமானதும், உலகத்திலேயே மிகவும் பழமையான இலக்கியங்களில் ஒன்றானதும், கலப்புச் சமுதாயத்தை விவரிப்பதுமான ரிக் வேதம் இயற்றப்பட்ட காலகட்டத்தோடு இயைந்துசெல்கிறது இந்தக் காலம்’’ என்றும் அவர் கூறினார்.
“ரெய்க்கின் பார்வையில், இந்தோ--அய்ரோப்பிய மொழி பேசும் மக்கள் அய்ரோப்பாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் பரவிச் சென்று, மிகப் பெரும் மக்கள்தொகை மாற்றங்களை ஏற்படுத்திய காலகட்டம் இது “என்பதே இந்தக் கருத்தின் சாரம் என ஃபிரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
அதைப்போலவே ஜெர்மனியைச் சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிளாங்க் நிலையம் மற்றும் இந்தியாவின் டேராடூன் நகரில் உள்ள ஆய்வு நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்ற சர்வதேச குழு ஒன்று மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தக் குழு தங்கள் ஆய்வு முடிவுகளை “ராயல் சொசைட்டி ஓப்பன் சயின்ஸ்’’ என்ற இதழில் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் தமிழ் உள்ளிட்ட 80 மொழி வகைகள் அடங்கிய திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகிறது. இப்படி பல்வேறு சான்றுகள் தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த ஆராய்ச்சிகளெல்லாம் ஒரு புறம் இருக்க திராவிடர் என்ற சொல் குறித்து பெரியார் என்ன சொல்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்.
“பார்ப்பனர்களிடமிருந்து விடுதலை பெற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு குறி சொல்லாகவே திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்துகிறேனே ஒழிய இதில் இரத்த பரிசோதனை ஒன்றும் நடத்தப்பட வில்லை!’’ என்கிறார் பெரியார்.
“பிராமணர், பிராமண மகா சபை வைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பெருமையும், உரிமையும் கிடைக்கின்றது. நாம் நம்மை சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர் ஜாதியினருக்கு அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும். பார்ப்பனரின் தாசி மகன் என்ற பட்டம் தான் கிடைக்கும். அந்தச் சூத்திரத் தன்மையை ஒழிப்பதையே நமது முக்கிய வேலையாகக் கொண்டிருப்பதால் தான், அப்பெயரால் எவ்வித சலுகையோ, உரிமையோ கிடைக்காததால் தான், அப்பெயரில் உள்ள இழிவு காரணமாகத்தான், அத் தலைப்பில் அதே இழி தன்மையுள்ள திராவிடராகிய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் ஆகியவர்கள் எல்லாம் ஒன்று சேர மறுத்து வருகிறார்கள். அதனால் தான் நம்மை சூத்திரன் என்று கூறிகொள்ளாமல் திராவிடர் என்று கூறிக் கொள்கிறோம்.
சூத்திரன் என்பவர்களுக்கு திராவிடர் என்பது தவிர்த்து வேறு பொறுத்தமான பெயரை வேறு யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.
நீங்கள் கொடுக்கும் பெயரில் நான் மேலே கூறிய அத்தனைப்பேரும் ஒன்றுசேர வசதியிருக்க வேண்டும். அதில் சூத்திரனல்லாத ஒரு தூசி கூடப் புகுந்துகொள்ள வசதியிருக்கக் கூடாது.’’ என்கிறார் பெரியார்.
- பெரியார், நூல்: மொழியாராய்ச்சி
திராவிடர் என்ற சொல்லுக்கு பெரியார் இவ்வளவு தெளிவாக விளக்கமளித்து விட்ட பிறகும், பெரியாரை சிறுமைப்படுத்த நினைப்பது, அவரது தொண்டிற்கு உள்நோக்கம் கற்பிப்பது எவ்வளவு அறிவு நாணயமற்ற செயல்?
‘திராவிடர்’ கழகத் தலைவர் வீரமணிக்குத் ‘தமிழர்’ தலைவர் பட்டம் ஏன் என்கிறார் மணியரசன். திராவிடர் கழகம் என்பது ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. பெரியார் குறிப்பிட்டதைப்போல் பார்ப்பனர்களை தவிர்த்து திராவிடராகிய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் என யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். அது ஆரியர் அல்லாத திராவிடர்களுக்கான இயக்கம்தான். அதே நேரத்தில், அந்த இயக்கத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பார்ப்பனரல்லாத தமிழர்கள் தங்கள் தலைவரை ‘தமிழர் தலைவர்’ என்று அழைத்து மகிழ்கிறார்கள் என்று சொன்னால் இதில் மணியரசன்களுக்கு வயிற்றெறிச்சல் ஏன் வருகிறது?
நாலுபேரை வைத்துக்கொண்டு “பேரியக்கம்’’ என இவர் நாமகரணம் சூட்டிக் கொண்டதைப்போல் அல்லவே அது. “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்!’’ என்று தமிழர் தலைவர் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு சரியான பதிலல்லவா?
- உண்மை இதழ், 16-31.7.20
புத்தமதமும் இந்திய சமுதாயமும்(1)&(2)
ந.ஆனந்தம்
புத்தமதம் பிற மதங்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. அம்மதம், தம் உபதேசங்களை ‘கடவுள் இட்ட கட்டளை’ என்று சொல்வதில்லை. எந்தச் சடங்குகளையும் செய்யும்படி கூறவில்லை. புத்தமதம் ஒழுக்கத்தை மட்டுமே வலியுறுத்துகிறது. ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தால் மக்கள் அமைதியாகவும், விவேகமாகவும் வாழ முடியும் என்கிறது. ஆழ்ந்த சிந்தனையாலும், தொலைநோக்குப் பார்வையாலும், ஞானத்தினாலும், செயல்பாடுகளின் மூலமாகவும் நாம் மனக்கவலைகளையும், துன்பத்தையும் வெற்றி கொள்ளலாம் என்று போதிக்கிறது.
புத்தமதத்தின் பிரதான அறிவுரை என்னவென்றால், ஒவ்வொரு மனிதனும் மெய் காண்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். மூன்று விதமான ஆசைகளை வெற்றி கொள்ள வேண்டும். உடல் உணர்வுகளுக்கு இன்பம் அளிக்க விரும்புவது முதலாவது ஆசை. தான் இறந்த பின்னரும் இவ்வுலகில் வாழ விரும்புவது இரண்டாவது ஆசை. சொத்து சேர்க்க விரும்புவது மூன்றாவது ஆசை. இம் மூன்று ஆசைகளையும். கட்டுப்படுத்துவதில் வெற்றி கொண்டால் இவ்வுலகில் மகிழ்வாக வாழலாம். ஏனெனில், அதன் மூலம் மனிதன் மேலான ஞானம் பெறுகிறான்; மன அமைதி பெறுகிறான்;
சித்தார்த்த கவுதம புத்தர் (கி.மு 560-480) மனிதன் இவ்வுலகில் நல்வாழ்வு வாழ எண்வழிப் பாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். அவர் வலியுறுத்திய எண் வழிப்பாதை எம்மாதிரியான வாழ்க்கை வழிமுறையைப் போதிக்கிறது என்பதனை பார்ப்போம்.
சிறப்பான எண் வழிப்பாதை
1. சரியான பார்வை - மரபுவழி நம்பிக்கைகளையும், மூடநம்பிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு மெய் காணுதல்
2. சரியான நோக்கம்- - சுயநலத்தைத் தவிர்த்து பிறருக்கு உதவுதல், நியாயத்தை நிலை நாட்டல் போன்றவைகளை நோக்கமாகக் கொள்ளல்.
3. சரியான பேச்சு.
4. சரியான நடத்தை.
5. சரியான வாழ்க்கை - பிற மனிதர்களுடன் சுமூகமான வாழ்வு நடத்துதல்.
6. சரியான முயற்சி - பல கஷ்டங்களுக்கிடையே தன்னலமற்ற வாழ்வு வாழ தொடர்ந்து முயற்சித்தல்.
7. சரியான மனப்பான்மை - தன்னுடைய சிந்தனைகளில் தன்னலச் சிந்தனைகள் எழாவண்ணம் கவனமாக இருத்தல்.
8. சரியான மகிழ்ச்சி - மக்களுக்குத் தீமை பயக்காமல் மகிழ்ச்சியை உண்டாக்கும் யாவற்றிலும் மகிழ்ச்சி காணுதல்.
எண்வழிப்பாதை கடவுள் பற்றி எதையும் கூறவில்லை. கடவுளைத் திருப்திப்படுத்த பிரார்த்தனை செய்யவோ, சடங்குகளைச் செய்யவோ, மிருகங்களைப் பலியிடச் சொல்லவோ புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றோ சொல்லவில்லை. சுய சிந்தனைக்கும் ஒழுக்கத்திற்கும், நடத்தைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. அவற்றையே வலியுறுத்துகிறது.
புத்தர் மறு உலகம், கடவுள், மறுபிறவி பற்றி எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். அவைகள் பற்றிச் சொல்லப்படுபவை யாவும் மனிதனின் கற்பனைதான் அவைகளில் கவனம் செலுத்துவது மனிதனுக்கு நன்மையைத் தராது. தீமையே பயக்கும் என்றார். ஏனெனில் அவை பற்றிய கற்பனைக் கருத்துகள் ‘இவ்வுலக வாழ்வைச் செம்மையாக வாழ வேண்டும்’ என்ற அடிப்படை இலக்கையே புறக்கணிக்கச் செய்துவிடும் என்றார்.
தம்மபதம் புத்தமதக் கோட்பாடுகளை விளக்கும் புத்தகம். இது 26 அத்தியாயத்தையும், 423 செய்யுள்வரிகளையும் கொண்டது. தம்மபதம் ஒழுக்கம் பற்றி நேரடியாகப் பேசுகிறது. எச்செயல் சரியானது, எது தவறானது என்று பிரித்து உணரச் செய்கிறது. எது உயர்வான வாழ்வு என்று போதிக்கிறது.
தம்மபதம் அன்பையும், அறிவையும், ஒழுக்கமான வாழ்வையும் வலியுறுத்துகிறது சுயநலத்தைக் கட்டுப்படுத்தும்படி கூறுகிறது. ஒரு சில அத்தியாயங்களின் கருத்துகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எடுத்துக்காட்டாக, முதல் அத்தியாயம் வெறுப்பு பற்றியும், அன்பு பற்றியும் விவாதிக்கிறது. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது. வெறுப்பை அன்பால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும். அதுவே, என்றும் நிலையான சாசுவதமான விதி என்கிறது. மேலும், நாம் சக மனிதர்களுடன் இணக்கமாக வாழப் பிறந்தோம். இணக்கமாக வாழ மனிதனுக்கு அன்பு, சகிப்புத் தன்மை போன்ற பண்புகள் அவசியம் என்கிறது.
மூன்றாவது அத்தியாயம் மனம் பற்றி விமர்சனம் செய்கிறது. மனம் எப்பொழுதும் ஊசலாடிக் கொண்டே இருக்கும். அதைக் கட்டுப்படுத்துவது கஷ்டமானது. ஞானமுள்ள மனிதன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். கட்டுப்படுத்தாதவன் உண்மையை உணரமாட்டான். ஞானத்தைப் பெறமாட்டான். தவறாக வழிகாட்டப்பட்ட மனம் அவனுக்கே பெறும் தீமை பயக்கும்.
எட்டாவது அத்தியாயம் பண்பான வாழ்வு பற்றி விவாதிக்கிறது. நேர்மையான மனிதனின் மதிப்பு, வணங்குபவனை விடவும், அன்பளிப்பு கொடுப்பவனைவிட மிக உயர்ந்தது. மேலும் அறியாமையைக் கண்டிக்கிறது. ஆழ்ந்த சிந்தனை செய்யாது அறியாமையில் உழன்று நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, ஒரு நாளேனும் ஆழ்ந்த சிந்தனை செய்து ஞானத்துடன் வாழ்வது மேலானது என்கிறது.
பத்தாவது அத்தியாயத்தில் நம்பிக்கை, நற்பண்பு, ஊக்கம், ஆழ்ந்த சிந்தனை தொலைநோக்குப் பார்வை, ஞானம், செயல்பாடுகள் முதலியவைகளால் துன்பங்களை வெற்றி கொள்ளலாம் என்கிறது.
தம்மபதம் சோம்பேறியாக வாழ்வதிலிருந்தும், கவனமின்றியும், முன்யோசனை இன்றியும் வாழ்வதிலிருந்து விடுபடுமாறு வேண்டுகோள் விடுகிறது. சிற்றின்ப ஆசை பெருவெறுப்பு, கோபம் போன்ற தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்கிறது. சுயநலத்தைக் கட்டுப்படுத்துவது மேலான வெற்றி என்கிறது.
இவ்வாறு, தம்மபதம் எச்செயல்கள் சரியானவை, எவை தவறானவை, தீயவை என்பதைப் பிரித்துணர உதவுகிறது. இவ்வுலகில் பண்பான, அறிவான வாழ்வை வாழக் கடை ப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கூறுகிறது.
மேலும், புத்தர் காசியில் ஆற்றிய நெறிமுறை விளக்கப் பேருரை, சிறப்பான உரையாகும். இறைச்சி, மீன் உண்பதை விலக்குவதும், நிர்வாணமாகத் திரிவதும், தலைமுடியால் சடைபோட்டுக் கொள்வதும், தலையை மொட்டை போடுவதும், முரட்டுத் துணிகளை அணிவதும், தீயில் உயிர்பலி கொடுப்பதும் மனிதனைத் தூய்மையாக்காது.
வேதங்களைப் படிப்பதும், புரோகிதர்களுக்கு பணம் அளிப்பதும், உயிர்ப்பலி கொடுப்பதும், பல்வேறு வகையில் உடலை வருத்திக் கொள்வதும் மனிதனைத் தூய்மையாக்காது.
கோபம், மது அருந்துவது, முரட்டுப் பிடிவாதம் மதவெறி, இனவெறி, வஞ்சகம், பொறாமை, தற்புகழ்ச்சி, பிறரை இகழ்வது, கர்வம், தீயநோக்கம் முதலியவை தூய்மையற்றவை.
புத்தர் தன்னுடைய சீடர்களுக்கு அறிவுரை கூறும் போது, இன்பம் காணும் விசயத்திலும், தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் விசயத்திலும் உச்ச எல்லைக்கும் செல்லாமல், மத்திய பாதையைக் கடைப் பிடிக்குமாறு சொன்னார்.
புத்தருடைய போதனைகள் இந்தியத்துணைக் கண்டத்தில் கி.மு.அய்ந்தாம் நூற்றாண்டு முதல் மெதுவாகப் பரவியது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டு அசோகச் சக்ரவர்த்தி புத்தருடைய போதனைகளைப் பெரிய அளவில் பரப்பினார். அசோகருடைய ஈடுபாடான முயற்சியால் புத்தருடைய போதனைகள் இந்தியாவெங்கும் பரவின. அண்டைய நாடுகள் பரவின. புத்தருடைய போதனைகள் எல்லோராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு சில புத்தமதத் தொண்டர்கள் எடுத்த தவறான நடவடிக்கைகள் புத்தமதத்திற்கு கேடானதாக அமைந்துவிட்டன. அக்காலகட்டத்தில் சில புத்தமதத் துறவிகள் புத்தமதக் கோட்பாடுகளை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்ல விரும்பினார்கள். அந்த இலக்கை எட்ட, புத்தர் சிலைகளை பல இடங்களில் நிறுவினார்கள். புத்தரைக் கடவுளின் அவதாரம் என்று சொன்னார்கள். இத்தவறான தகவல் மக்கள் புத்தரைக் கடவுளாகவும், மீட்பாளராகவும் பார்க்கும்படி செய்து விட்டது. இவ்வாறு, சில தவறான செயல்பாடுகள் புத்தருடைய அடிப்படைக் கோட்பாடுகளை சிதைத்துவிட்டன. படிப்படியாக, புத்தரின் சிலை வழிபாடும், பிரார்த்தனைகளும் சடங்குகளும் புத்த மதத்தின் அங்கமாக ஆகிவிட்டன. இவை யாவும் புத்தரின் போதனைகளுக்கு முற்றிலும் எதிரானவை.
புத்தர் தன்னை தெய்வீக சக்தி கொண்டவர் என்றோ, தெய்வீக அருள் பெற்றவன் என்றோ சொல்லவேயில்லை. தான் ஒரு சாதாரணமான மனிதன் என்று அடிக்கடி சொன்னார். ஆனால், அறிவான மனிதன் என்றார். உண்மை இவ்வாறு இருக்க புத்தரை கடவுளின் அவதாரம் என்று சொல்வதை அவரின் போதனைகளைப் பின்பற்றுவோர்களில் பலர் எதிர்த்தார்கள். அவ்வாறு சொல்வதே தவறு என்றார்கள். புத்த மதம் மஹாயானா, ஹீனயானா என்று இரண்டாகப் பிரிவுற்றதற்கு இக்கருத்து வேறுபாடும் ஒரு காரணமாகும். மஹாயானா பிரிவு புத்தருக்கு தெய்வாம்சம் கற்பிக்கிறது. ஹீனயானா பிரிவு அவ்வாறு கற்பிப்பதில்லை. அவரை அறிவான, ஞானமான மனிதர் என்று மட்டுமே கூறுகிறது.
(தொடரும்)
- உண்மை இதழ் ஜூலை 16-ஆகஸ்ட் 15.20
ந.ஆனந்தம்
கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல் புத்தமதம் மெதுவாக சீர்கேடடையத் தொடங்கியது. இதற்கு, மக்கள் சுய சிந்தனையை உதாசீனப்படுத்தியது தான் முக்கிய காரணம் இக்காலகட்டத்தில் ஒரு சாரார் புத்தமதக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதையே கஷ்டமாகக் கருதினர். அறிவு பூர்வமாகச் சிந்தித்து, அதன் முடிவிற்கேற்ப செயல்படுவது மனிதனது கடமை என்பதையே மறந்தனர். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். அதுபோல, பிரார்த்தனைகளுக்கும், சடங்குகளுக்கும் ஆர்வம் காட்டினர். ஏனெனில் அவற்றைச் செய்வது எளிதாக இருந்தது. இதன் விளைவாக, புத்தமதம் பிரார்த்தனைகளும், சடங்குகளும் நிறைந்த மதமாக மாறியது. புத்தரின் போதனைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாக மாறியது.
புத்தமதம் இந்தியாவில் மாறுபட்ட பிரச்சினையை எதிர் கொண்டது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டு, இந்தோ ஆரியர்களும், புரோகிதர்களும் புத்தமதத்தின் தாக்கத்தால் தங்களுடைய செல்வாக்கு பாதிக்கப்படுதைக் கண்டனர். புத்தமதம் மனித சமத்துவத்தை வலியுறுத்தியது. பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்ல; தாழ்ந்தவரும் அல்ல என்றது. இச்சமத்துவக் கருத்து தங்களுடைய செல்வாக்கை அழிக்கும் என்று உணர்ந்தனர். ஆகவே, இந்தோ ஆரியர்களும், புரோகிதர்களும் தங்களது ஆதிக்கத்தையும், உயர்ஜாதித் தன்மையையும் நிலை நாட்ட புத்தமதத்தை அழிக்கத் திட்டமிட்டனர். மிகத்தந்திரமாக செயல்பட்டனர். தாங்கள் அனைவரும் புத்தமத தத்துவத்தையும், கோட்பாடுகளையும் ஏற்பதுபோல் நடித்தனர். அதை நிரூபிப்பதற்கு புத்தரை இந்து மதத்தின் ஒரு கடவுளாக ஏற்றுக்கொண்டனர். புத்தர் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் என்றனர். புத்தமதத்தின் அஹிம்சை, புலால் புறக்கணிப்பு போன்ற சில கோட்பாடுகளை ஏற்றனர். புத்தமதத்திற்கும் தங்களது வேத மதத்திற்குமுள்ள வித்தியாசத்தை தெளிவற்றதாக்கிவிட்டனர்.
புத்தமதத்தைப் பின்பற்றுபவர்களை வேத, பார்ப்பன மதத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பார்ப்பனர்கள் தங்கள் கோவில்களில் ஆடம்பரமாக விழாக்கள் நடத்தினார்கள். நிறைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். இவைகள் இந்திய மக்களை ஈர்த்தன. வேத, பார்ப்பன மதத்தில் சேர ஆரம்பித்தார்கள். எனினும் இந்தோ ஆரியர்களும், புரோகிதர்களும் தங்களுடைய தலைமைப் பொறுப்பையும், சிறப்புரிமைகள் காப்பாற்றுவதில் முனைப்பாக இருந்தனர். அதற்காக தந்திரமாக பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தினர்.
பிறப்பின், தொழிலின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பித்து, மக்களை வருணங்களாகப் பிரித்தனர். இந்தோ ஆரியர்களும், புரோகிதர்களும் தாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றும், தங்களை பிராமண வருணம் என்று சொல்லிக் கொண்டார்கள் படைப் பணி செய்வோர்கள் சத்திரிய வருணம் என்றனர். விவசாயம், தொழில், வியாபாரம் செய்தோர் வைசியர் வருணம் என்றனர். பிற வேலைகள் செய்தோரை சூத்திர வருணம் என்றனர். உரிமைகளை இறங்கு வரிசையில் அளித்தனர். சூத்திரர்களுக்கு மிக குறைந்த உரிமைகளே அளித்தனர். இந்த அநீநிதியை வைசியர்களும், சூத்திரர்களும் ஏற்கச் செய்வதற்காக, ஜாதீய சமூக அமைப்பு கடவுளின் ஏற்பாடு என்றனர். பிறப்பில் பேதம் கற்பிப்பதே தவறு என்று அறிந்திருந்தும், பகட்டுக்கும், பசப்பு வார்த்தைகளுக்கும் மதிமயங்கி வேத பார்ப்பன மதத்தில் ஏராளமான மக்கள் சேர்ந்தனர். இதனால், புத்தமதம் வலுவிழந்தது. பார்ப்பனர்கள் மனித சமத்துவத்தைப் போதித்த சமண, புத்த மதங்களை எதிரிகளாகக் கருதினர். அம்மதங்களை அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டனர். தங்களது அரசியல் அதிகாரத்தாலும், வஞ்சகத்தாலும், வன்முறைகளாலும் அம்மதங்களுக்கு பொதுமக்களிடம் இருந்த மதிப்பைக் குறைத்தனர். இறுதியாக, முஸ்லீம்களின் வெற்றி புத்தமதத்திற்கு மரண அடி கொடுத்தது. இவ்வாறு புத்தமதம் இந்தியாவில் மறைந்தது.
இந்திய மக்கள் புத்தரின் போதனைகளைப் புறக்கணித்தது ஒரு மாபெரும் தவறாகும். வரலாற்றுப் பிழையாகும். ஏனெனில், அதிலிருந்து படிப்படியாக இந்திய சமூகத்தில் அதிகமான சதவீத மக்கள் தொகை கொண்ட வைசிய, சூத்திர வருணத்தார் தங்களுடைய சுதந்திரத்தை இழந்தனர். தங்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை இழந்தனர். அனைத்து அதிகாரங்களும் மிகக் குறைந்த மக்கள் தொகையுடைய ஆரியப்பார்ப்பனர்களிடமும், க்ஷத்திரியர்களிடமும் சேர்ந்தது. அவர்கள் பொது நலம் பாராது, சுய நலத்துடன் செயல்பட்டனர். அரசின், மதத்தின் செயல்பாடுகளை தங்களுடைய உயர்ந்த அந்தஸ்தையும், நலனையும் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தினர். பார்ப்பனர்கள் பூஜை, சடங்குகள், புரோகிதம் செய்யும் வேலையைத் தங்களது பிரத்தியேக உரிமையாக்கிக் கொண்டார்கள். இவ்வுரிமையைப் பயன்படுத்தி பார்ப்பனர் அல்லாதரை பல்வேறு சடங்குகளையும், பூஜைகளையும் செய்யுமாறு செய்து அவர்களது செல்வத்தை அபகரித்துக் கொண்டார்கள். பார்ப்பனர்கள் பயனுள்ள காரியம் எதுவும் செய்யாமல் செல்வாக்கோடும் வளமோடும் வாழ்ந்தார்கள். பெரும்பான்மை மக்கள் (வைசிய, சூத்திர வருணத்தார்) அறியாமையிலும், வறுமையிலும் உழன்றனர். இவ்வாறு நாட்டின் பூர்வகுடி மக்கள் அடிப்படை உரிமைகள் அற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இதுதான் புத்தரின் போதனைகளைப் புறக்கணித்ததன் பலனாகும்.
ஜாதியின் தாக்கத்தால், பிறப்பின் அடிப்படையில் சகமனிதர்களை உயர்வென்றும், தாழ்வென்றும் நினைக்கும் மனநிலை பரவியது. கி.பி.பத்தாம் நூற்றாண்டில் ஜாதியம் வேரூன்றியது. நூற்றுக்கணக்கான உப ஜாதிகள் உருவாகின. ஜாதிக் கொடுமைகள் எங்கும் பரவின. இதன் உளவியல் தாக்கம் மிக மோசமானது. மனிதநேய சிந்தனை எழாமல் செய்தது. மக்களை விதியை நம்பச் செய்தது. தன்னம்பிக்கையை இழக்கச் செய்தது. முயற்சியின்மையைப் புகுத்தியது. மக்களை மனிதநேயமற்றவர்களாக, இரக்கமற்றவர்களாக ஆக்கியது. பொதுநலச் சிந்தனை எழாமல் செய்தது. சமூக ஒற்றுமையை அழித்தது. இக்காரணங்களால், இந்திய சமுதாயம் செயலற்றதாக மலட்டுத்தன்மையானதாக மாறியது. இதுதான், இந்திய மக்கள் ஆரிய, வேத மதத்தில் சேர்ந்ததற்கான பரிசாகும்!
இத்தேக்க நிலை கி.பி. பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் தான் மாற்றம் கண்டது. அந்த இருநூறு ஆண்டுகளில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார் ஜாதிக் கொடுமைகளைக் கண்டனர். பார்ப்பனர்கள் முன் நிறுத்திய மனு நீதிச்சட்டம் ஜாதியின் அடிப்படையில் உரிமைகளையும், தண்டனையையும் வழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அநீதியான அச்சட்டத்தைத் தூக்கி எறிந்தார்கள். மனித சமத்துவக் கோட்பாட்டை செயல்படுத்தினார்கள். சமத்துவத்தின் அடிப்படையில் பொதுச்சட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தினார்கள். அனைத்து ஜாதியினர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி அளித்தார்கள். மதம், ஜாதியின் பெயரால் நடைமுறையில் இருந்த பல மூடப் பழக்க வழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் சட்டத்தின் மூலம் ஒழித்தார்கள். இச் செயல்பாடுகளால் இந்திய சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. மக்கள் சுதந்திர உணர்வு பெற்றனர். கல்வி பரவலாக்கப்பட்டதால் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டது.
எனினும், இன்றும் ஜாதியத்தின் தாக்கமும், பார்ப்பன இந்து மதத்தின் தாக்கமும் தொடர்கிறது. இன்றும், இந்திய சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்கள் சிலை வழிபாடு, ஜாதியம், பார்ப்பனீய சடங்குகள் போன்றவைகளில் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். இந்து மதத்தின் பெயரால் பசு வழிபாடு, ஜோதிடம், வாஸ்து போன்ற பல மூடநம்பிக்கைகளுக்கு மக்கள் அடிமைகளாக இருக்கின்றனர். இவர்களின் மனநிலையை எப்படி மாற்றுவது என்பதே இந்திய சமுதாயத்தின் இன்றைய முக்கிய பிரச்சினையாகும்.
மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட மக்களை அறிவு பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் சிந்திக்கத் தூண்டுவது தான் சரியான தீர்வாகும். முதலாவதாக, மக்கள் தங்களது அனைத்து நம்பிக்கைகளையும், மத நம்பிக்கைகள் உள்பட யாவற்றையும் கேள்விக்குட்படுத்தும்படி ஊக்குவிக்க வேண்டும். எதையும் ஆய்வு செய்யத் தூண்ட வேண்டும். ஆய்வின் மூலம் மக்கள் ‘மெய்மை’ உணர்வார்கள். அவர்களுடைய மனநிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்படும். இக்கருத்தைத் தான் சிந்தனையாளர்களும், தத்துவவாதிகளும் கூறுகிறார்கள். மொத்தத்தில் மக்கள் மனதில் அறிவியல் மனப்பான்மையை உண்டாக்க வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் புத்தரும் சொன்னார். அவரின் போதனைகளும், புத்தமதக் கோட்பாடுகளும் எச்சமுதாயமும் விழிப்புணர்வு பெறவும், உயிர்ப்போடு செயல்படவும் நல் வழிகாட்டிகளாகும். இதுவே, புத்தரின், புத்த மதத்தின் சிறப்பாகும்.
- உண்மை இதழ், ஆகஸ்ட் 16 -செப்டம்பர் 15 .2020