பக்கங்கள்

திங்கள், 21 அக்டோபர், 2024

’தீரத் தலைவர்’ சிவராஜ் விடுதலை தந்தபட்டம்! -எதிர்வினை 26

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 26

டிசம்பர் 16-31 2018

’தீரத் தலைவர்’ சிவராஜ் விடுதலை தந்தபட்டம்!

– நேயன்

என்.சிவராஜ் நியமனத்தைப் பாராட்டி ‘குடிஅரசு’ எழுதியிருக்கும் குறிப்பு, அவரை பெரியார் எப்படி மதிப்பிடுகிறார் என்பதற்கான சான்றாகும். (‘குடிஅரசு’ 23.5.1937)

“இந்திய சட்டசபையில் ராவ்பஹதூர் எம்.சி.ராஜா அவர்களின் இராஜிநாமாவால் காலியான பதவிக்கு ராவ்சாஹிப் என்.சிவராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை அறிய மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தோழர் சிவராஜ் அவர்கள் பல வருடங்களாக பொது வாழ்வில் அதிக பங்கு எடுத்துக்கொண்டு வருகிறார் என்பது சகலருக்கும் தெரிந்ததே. அவர் தன்னினத்தாருடைய நன்மதிப்பைப் பெற்று வந்திருக்கிறார் என்பதோடு மற்ற வகுப்பாருடைய ஆதரவையும் மதிப்பையும் தன்னுடைய உண்மையான உழைப்பாலும் கபடமற்ற செய்கைகளாலும் பெற்றிருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகம் நமது பொது வாழ்க்கையில் பாடுபடக்கூடிய பல தலைவர்-களைத் தந்திருக்கிறது. அவர்களில் தோழர் சிவராஜ் போன்ற நாவன்மையும், பிறர் உள்ளத்தைக் கவரக்கூடிய பேச்சும் பொருந்தியவர் இருப்பது மிக அரிது.

நம்மால் நினைப்பதற்குக்கூட முடியாத அவ்வளவு சீக்கிரத்தில் அவர் பொறுப்பு வாய்ந்த பதவியை வகிப்பார் என்பதில் சந்தேகமில்லை. கடைசியாக அவர், இந்திய சட்டசபைக்கு நியமனம் செய்யப்பட்டதை மனதார வாழ்த்துகிறோம்.

தீண்டாமைப் பிரச்சினையை தீர்த்துவைக்க இடமிருப்பாதாகவே தெரியவில்லை. தீண்டாமை-யின்று விலகவேண்டுமானால் தாழ்ந்த வகுப்பினர் ஹிந்து மதத்தைவிட்டு விலக வேண்டும். ஆனால், வேறு மதத்தில் சேர வேண்டியது இல்லை. அவர்கள் புதியதொரு மதத்தை உண்டு பண்ண வேண்டும்.’’ (1936 ஜனவரி ‘குடிஅரசு’) மகாராஷ்டிராவில் 11.1.1936இல் நடந்த ஆதி இந்து வாலிபர் மாநாட்டில் என்.சிவராஜ் பேச்சை ‘குடிஅரசு’ வெளியிட்டுள்ளது.

சிவராஜ் மறைந்தபோது, ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக உழைத்த தீரத் தலைவர்’ என்று பட்டம் சூட்டியது விடுதலை.

மேலும், 30.9.1964 தேதியிட்ட ‘விடுதலை’யில், “திரு.சிவராஜ் சென்னயில் வெஸ்லி கல்லூரி, மாநிலக் கல்லூரி, சட்டக்கல்லூரி இவைகளில் பயின்று பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். பல ஆண்டுகள் வழக்குரைஞராக இருந்தவர். சென்னை நகரத்தின் கவுன்சிலராக பல ஆண்டுகள் இருந்து 1945ஆம் ஆண்டில் மேயராகவும் பணிபுரிந்து கவுரவம் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் சேவை புரிந்தவர். நீதிக்கட்சியில் ஈடுபாடு கொண்டு மிகவும் பாடுபட்டவர். அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்தார். அவர் மறைவு பின்தங்கிய வகுப்புனர்க்கு பேரிழப்பாகும்’’ என்று செய்தியும் வெளியிட்டிருந்தது.

சிவராஜ் அவர்களைப் பற்றி கீழ்க்கண்ட செய்திகளும் ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியிடப்-பட்டு, இவை மட்டுமல்ல அவரின் பெருமைகள் மக்கள் மத்தியில் பெரியாரால் கொண்டு சேர்க்கப்-பட்டன.

“மத சம்பந்தமான நமது அபிப்பிராயம் ஒரு விதமாக இருந்தாலும்கூட தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மனிதத்தன்மை பெறவும் அரசியல் விகிதாச்சார உரிமை பெறவும் வாழ்க்கையில் சம உரிமை பெறவும் இந்து மதத்தை விட்டுவிட்டுக் கிறிஸ்தவர்களாகவோ முக்கியமாய் இஸ்லாமியர்களாகவோ ஆகிவிடுங்கள் என்று பல தடவை வற்புறுத்தி வந்ததை அச்சமூகம் இலட்சியம் செய்யவே இல்லை.

இதற்குக் காரணம் நம் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுடைய மதப்பற்றேதான் காரணம் என்பதாக நாம் சிறிதும் நினைக்கவில்லை. மற்றென்னவென்றால், சென்னை மாகாணத்தில் உள்ள வகுப்புவாரிப்-பிரதிநிதித்துவ முறையின் பயனாய் சில பெரிய பதவிகளும் உத்தியோகஸ்தர்களும் தாழ்த்தப்-பட்ட சமூகத் தலைவர்கள் என்பவர்களுக்குக் கிடைக்கக் கூடுமாதலால் அதில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆசையானது இந்துக்கள் என்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமூகத் துறையிலும் அரசியல் துறையிலும் செய்துவரும் எவ்வளவோ இழிவுகளையும் இன்னல்களையும் சகித்துக் கொண்டு சிறிதும் சுயமரியாதை இல்லாதவர்களாகித் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு உயிர்வாழ வேண்டி இருக்கின்றதே தவிர வேறு காரணம் இருக்க நியாயமில்லை என்றே படுகின்றது. என்றாலும் தேதி 29.1.1935 சென்னை சட்டசபை கூட்டத்தில் கூட்டுக் கமிட்டி அறிக்கையைப் பற்றிய விவாதத்தின்போது தோழர் என்.சிவராஜ் அவர்கள் தெரிவித்த அபிப்பிராயத்தில் பெரும் பாகத்தை நாம் மனப்பூர்வமாய் ஆதரிக்கிறோம். அதாவது,

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லாரும் நாங்கள் இந்து மதங்கள் அல்லவென்றும், நாங்கள் இந்துக்கள் அல்ல என்றும், தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலக வேண்டும் என்றும் 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள். இந்து மதத்தை விட்டுவிட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக்-கொள்வது என்று கேட்கலாம். உங்களுக்கு துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரைச் சொல்லிக்கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும் இழிவும் அணுகாதோ, அதைச் சொல்லுங்கள். (‘குடிஅரசு’ 13.01.1945)

“இந்தியாவுக்கு ஏற்படவிருக்கும் எந்த ஒரு அரசியல் திட்டத்திலும் ஷெட்யூல் வகுப்பாருக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கப்படாமல் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறான முடிவுகளே இருக்குமேயானால், கல்வித் திட்டத்தை முழுச் சக்தியுடன் எதிர்ப்போம்’’ என்று ராவ்பகதூர் என்.சிவராஜ் அவர்கள் லார்ட் லெவலுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில்  குறிப்பிட்டிருக்கிறார். திரு.சிவராஜ் அகில இந்திய ஷெட்யூல் வகுப்புப் பெடரேஷனின் தலைவர். தாழ்த்தப்பட்ட சமுதாயங்களின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர். டாக்டர் அம்பேத்கரைப் போலவே, ஷெட்யூல் வகுப்பினரின் முன்னேற்றத்தில் பல ஆண்டுகளாகத் தொண்டாற்றி வருபவர். எனவே, இவரது கருத்தை எந்த அரசியல்-வாதியும் அலட்சியப்படுத்த முடியாதென்றே கூறலாம்.’’ (‘விடுதலை’ 25.4.1945)

“…. என்று சொல்லிக்கொண்டே அம்பேத்கர் கண்ணீர் விட்டார். இதைக் கேட்ட சபையோர் அத்தனை பேரும் (1,000 பேர்) மனம் இளகி தாங்களும் கண்ணீர் விட்டார்கள். இந்தத் தீர்மானத்தை தோழர் சிவராஜ் அவர்கள் (பல இடங்களிலும்) மனப்பூர்வமாய் ஆதரித்திருக்கிறார். இந்தத் தீர்மானம் செய்த உடன் இராமாயணம், மநுதர்ம சாஸ்திரம், கீதை முதலிய சாஸ்திர புராண இதிகாசங்கள் அம்மாநாட்டிலேயே கொளுத்தப் பட்டிருக்கின்றன. (இவை 21.10.1935ஆம் தேதி ‘குடிஅரசு’ முதலிய பத்திரிகைகளில் இருக்கின்றன) நாசிக்கில்இவை நடந்தவுடன் நமது மாகாணத்தில் சுமார் 20, 30 இடங்களில் இத்தீர்மானத்தை ஆதரித்துப் பல மாநாடுகள் கூட்டி ஆமோதிக்கப்பட்டது. திருநெல்வேலியி-லேயே டாக்டர் ஆர்.வி.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் 10.11.1935ஆம்  தேதியிலும், திருச்செங்கோட்டில் 11.11.1935லும் தூத்துக்-குடியில் 7.11.1935லும், கோபியில் 27.10.1935லும், சென்னையில் 30.10.1935லும் மீனாம்பாள் அவர்கள் தலைமையில் 19.10.1935ஆம் தேதி திருச்சி மாநாட்டிலும் மற்-றும் சென்னையில் தோழர்கள் ஜகநாதம், சிவஷண்முகம், பாலகுரு சிவம் முதலானவர்கள் தனித்தனி மாநாடு-களிலும் வெகு ஆவேசமாய் ஆதரித்துப் பேசியும் தீர்மானங்கள் பல நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இதற்குப் பிறகும் பல இடஙகளில் ஆதி திராவிடர்கள் இஸ்லாமியர்-களாக ஆகி இருக்கிறார்கள். பல இடங்களில் தோழர்கள் மீனாம்பாள், சிவராஜ் முதலியவர்கள் தலைமையில் இராமாயணம், மனுதர்ம சாஸ்திரம் ஆகியவை கொளுத்தப் பட்டிருக்-கின்றன. இவை யாவும் பூனா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்தவை என்பதையும், பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்ட இரு தலைவர்களாகலேயே நடத்திச் செய்யப்பட்டவை என்பதையும் நினைவுறுத்திக் கொண்டு மேலால் சிந்திக்க வேண்டுகிறோம். (‘குடிஅரசு’ 4.8.1945)

(தொடரும்)

சனி, 19 அக்டோபர், 2024

இந்தியா” நாட்டின் பெயர் – ஒரு வரலாற்று விளக்கம்

 ஞாயிறு மலர்

Published April 20, 2024, விடுதலை நாளேடு

கட்டுரை ஆசிரியர்:

பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான்,
இணைப் பேராசிரியர்,
பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்
தமிழாக்கம்: செல்வ. மீனாட்சி சுந்தரம்
மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

திராவிடப் பொழில் அக்டோபர்-டிசம்பர் 2023 ஆய்விதழில்  “Names of the Nation – A Comparative Study” என்னும் தலைப்பில் வெளிவந்த பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வழிச்சுருக்கம்.
முன்னுரை:
“இந்தியக் குடியரசு” என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான அதிகாரப்பூர்வப் பெயரானாலும், உள் நாட்டிலும் உலகளவிலும் பொதுமக்களால் இந்தியா என்றே அழைக்கப்படுகிறது. இந்தியா விடுதலை பெறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா என்னும் பெயர் வரலாற்றின் பக்கங்களில் காணக் கிடைக்கிறது.
ஆனால், பல்லாண்டு காலமாகப் ‘பாரத்’ என்னும் பெயரும் – இந்திய நாட்டின் பெயராக அழைக்கும் வழக்கம் உலக அளவில் இல்லையென்றாலும் உள்ளூர் அளவில் அவ்வாறும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தியா என்னும் பெயர்ச்சொல் அயற்சொல் என்றும், அந்தப் பெயர் காலனியாதிக்கத்தால் நம்மீது திணிக்கப்பட்ட பெயர் என்றும் ஒரு புரிதலற்ற தவறான கருத்து சிலரின் சிந்தையிலே தேங்கியுள்ளது.
இந்தக் கட்டுரை ‘இந்தியா’ மற்றும் ‘பாரத்’ ஆகிய இரண்டு பெயர்களையும் ஆய்ந் திடும் நோக்கில் வரலாறு, மொழியியல், தொன்மவியல், நிலவியல், இலக்கியங்கள், கல்வெட்டுகள், மதப் புராணங்கள் போன்ற பலதரப்பட்ட மூலங்களிலிருந்து அறிவுப் பூர்வமாகத் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டு உண்மை நிலையை உணர்த்த முயல்கின்றது.

இந்தியா என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்
இந்திய அரசமைப்புச்சட்டம் நமது இந்திய ஒன்றியத்தின் உச்ச உயர்நிலைச் சட்டம் ஆகும். இந்த அரசமைப்புச் சட்டத்தின் விதி 1இன் படி இந்திய ஒன்றியத்தால் ஆளப்படுகின்ற நிலப் பரப்பின் பெயர் இந்தியா என்று அறிவிக்கப்படுகின்றது. அதன்படி நமது நாடு இறையாண்மை கொண்ட இந்தியக் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
India that is Bharat, பாரத் என்றும் அறியப்படும் இந்தியா என்று விதி ஒன்றில் (Clausel) நாட்டின் பெயர் சுட்டப்படுகின்றது. இந்த இடத்தைத் தவிர அரசமைப்புச் சட்டத்தின் மற்ற எல்லா இடங்களிலும் நாட்டின் பெயர் இந்தியா என்றே சுட்டப்படுகின்றது.

இவ்வாறு அரசமைப்புச் சட்டம் ஏற்பட்ட காலம் தொட்டு இந்தியா என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அறியப்பட்டிருந்தாலும் இந்த இந்தியா என்னும் சொல்லாடல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

அகவழக்கு – புறவழக்கு (Endonym & Exonym) மொழியியல் கோட்பாடுகள்:
அக வழக்கு (Endonym)
ஒரு சமூகம் தனது ஆளுகைக்கு உட்பட்ட கூறுகளை எந்தப் பெயரால் எப்படி சொல்லி அழைக்கும் என்பது அகவழக்காகும்.

புற வழக்கு (Exonym)
ஒரு சமூகம் பிற சமூகத்தின் ஆளு கைக்கு உட்பட்ட நிலப்பரப்பின் அக வழக்கின் படி அழைக்கப்படும் பெயரை எப்படி வேறுபட்ட உச்சரிப்பால் அழைப் பார்கள் என்பது புற வழக்கு ஆகும்.
உலகத்தில் பல மொழிகளும் தனக்கே உரித்தான சிறப்பு ஒலியியல் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. ஒரு இனக் குழுவினர் தங்கள் மொழியின் ஒரு சொல்லை உச்சரிக்கும் முறையே ஒலியியல் கொள்கை ஆகும். அதே சொல்லைப் பிற மொழி பேசுவோர் உச்சரிக்கும் போது அந்த உச்சரிப்பில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. தமிழர்கள் அன்றி வேறு எவரும் தமிழின் சிறப்பு ‘ழ’கரத்தை உச்சரிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
இந்த உச்சரிப்பு வேறுபாட்டின் காரணமாக அகவழக்கிலே அறியப்படுகின்ற ஒரு சொல் பிற இனக்குழுவினரால் சற்றொப்ப ஒத்து வருகின்ற வேறொரு உச்சரிப்பைக் கொண்ட சொல்லால் அறியப்படும். இந்த உச்சரிப்பு இடர்ப்பாடே அகவழக்கு புற வழக்கு (Endonym & Exonym) என்னும் மொழியியல் கொள்கையின் தோற்றுவாயாகும்.

சில எடுத்துக்காட்டுகளை இங்கு பார்க்கலாம்:
அகவழக்கு – புறவழக்கு
சூங்வா-சைனா
பார்சி – பெர்சியன்
அய்யோனியன் (கிரேக்கம்) – யவனம்
கேடா-கடாரம்
ஜாவ் (ஜாவா) -சாவகம்
நக்கவரம்-நிகோபார்
மாலத்தீவு – மால்தீவ்ஸ்
தமிழ் – திரமிடம், திராவிடம்
இப்படி உலகின் பல மொழிகளும் பிற மொழிச் சொற்களை தங்களின் உச்சரிப் புக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்கின்றன.

இந்தியா என்னும் சொல்லாடல் இந்திய மரபில் வந்ததா?
இந்தியா என்னும் பெயர்ச் சொல் பழைய கிரேக்கத்தின் இவ்டியா (Ivdia) என்ற சொல்லிலிருந்து வந்திருந்தாலும் அது ‘சிந்து’ என்னும் இந்திய மரபுச் சொல்லின் புறவழக்காகும். அதாவது இந்திய அகவழக்கிலே வழங்கப்பட்ட சிந்து என்னும் பெயர்ச் சொல்தான் புறவழக்கிலே இந்தியா என்று திரிந்து வந்துள்ளது.
சிந்து என்னும் இந்திய அக வழக்குச் சொல் கிரேக்கத்திற்குச் செல்வதற்கு முன்பாக அதன் பயணத்திலே இந்தோ ஆரியன், இந்தோ ஈரானியன் ஆகிய மொழிக் குடும்பங்களின் ஊடாகப் பரவிப் பின்னரே அந்தச் சொல் கிரேக்கத்தைச் சென்றடைகின்றது.
பழைய பாரசீக மொழியும் அவெஸ்டன் மொழியும் சொல்லாட லிலும் இலக்கணத்திலும் வேதகால சமஸ் கிருதத்தோடு பெரிதும் ஒத்திருக்கின்றன என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
சிந்து என்னும் சொல் பொதுவாக நீர் நிலைகளைக் குறித்தாலும் ஒரு நதியின் பெயராக பழைய வேத காலத்தில் ரிக் வேதத்தில் (மண்டலம் 10, சூக்தா 75, ரிக்ஸ் 1&2) குறிப்பிடப்படுகின்றது. பின்னர் அந்தச் சொல்லே சிந்து நதிக்கு அப்பால் உள்ள நிலப்பரப்பைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகவும் பிறப்பெடுக்கின்றது
சிந்து என்று பழைய வேதகால சமஸ் கிருதத்தில் உச்சரிக்கப்படும் சொல்லானது ஹிந்து என்று பழைய பாரசிக மொழியிலே உச்சரிக்கப்படுகின்றது. சமஸ்கிருதத்தின் ‘ச’கரம் பாரசீகத்தில் ‘ஹ’கரமாகத் திரிகிறது. இந்த உச்சரிப்பு மாறுபாடானது கி.மு. 850-600 காலத்தில் தோன்றியது என்பது தமிழ் சமஸ்கிருத அறிஞர் அஸ்கோபார்போலாவின் கருத்தாகும்.

கி.மு.ஆறாம் நூற்றாண்டில் வடிக்கப் பட்ட பாரசீக மன்னன் டாரியஸ் – 1 (DARIUS-1) அவர்களின் சிலைப் பீடத்திலே முதன்முதலாக ஹிந்து என்னும் சொல்கண்டறியப்படுகின்றது. இன்றும் இந்தச் சிலை ஈரானின் டெக்ரான் நகர அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப் பட்டுள்ளது.
இப்படியாகச் சிந்து நதி என்பது ஹிந்து நதி என்று இந்தோ ஈரானிய மொழியில் மாற்றம் பெறுகின்றது.
சிந்து நிலப்பகுதி என்பது வேதத்தில் ‘சப்த சிந்து’ என்று அறியப்படுகின்றது. அதுவே ‘ஹப்த ஹிந்து’ என்று ‘ஜெண்ட் அவஸ்தாவில்’ (Zend Avesta) அறியப் படுகிறது.

கிரேக்கக் கடலோடி சைலாக் (Scylax) என்பார் டேரியஸ் மன்னனின் ஆணைப்படி சிந்து நதியைக் கடந்து சென்றார் என்னும் செய்தியைக் கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹீரோடாட்டஸ் (Herodotus) பதிவு செய்துள் ளார். ஆக, சிந்து நிலப்பரப்பு என்பது கிரேக்கத்திலும் பாரசீகத்தின் வாயிலாக அறியப்பட்டுள்ளது.

சிந்து என்பது பாரசீகத்தில் ஹிந்துவாக மாறிப் பின்பு அது கிரேக்கத்தில் இண்டோஸ் ஆக மாறுகிறது. ஏனென்றால் கிரேக்கத்தில் H என்னும் ஒலியை கிரேக்கர்கள் ஒலிப்ப தில்லை. எனவே, ஹிந்து என்பதை இண்டோஸ் என மாற்றி கிரேக்கத்தில் ஒலித் திருக்கிறார்கள்.
(SINDU – HINDU – INDU – INDOS)

பின்னர் இந்தச் சொல் லத்தீனிலும் கொய்ன் கிரேக்கத்திலும் (Koine Greek) இந்தியா என்றும், பிரெஞ்சு மொழியில் இண்டே என்றும், ண்டி என்று பழைய ஆங்கிலத்திலும் தற்கால ஆங்கிலத்திலும் இந்தப் பெயர்ச் சொல் இந்தியா என்று மாறி ஒலிக்கின்றது.

இந்தச் சொற்களை ஒப்பு நோக்கி உணருங்கால் இவை அனைத்தும் வேதத்தில் குறிப்பிடப்பட்ட சிந்து நிலப் பகுதியையே குறிக்கின்றது என்பது புலனாகும். உச்சரிப்பு வேறுபாட்டால் பிற சொற்களால் வேற்று மொழியில் வழங்கப்படுகின்ற அந்தச் சொற்கள் அந்தச் சொல்லின் வேத மூலத்தை மாற்ற இயலாது அதே பொருளைக் குறிக்கவே பயன் பட்டது. எனவே ரிக் வேதத்தில் தனது வேர்ச்சொல்லைக் கொண்டுள்ள இந்தியா என்னும் சொல் இந்திய மரபின் சொல்லே! அது அயலவர் சொல் இல்லை என்பது திண்ணம்.

பாரதம் என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்:
பாரத் அல்லது பாரதம் என்னும் பெயர்ச் சொல்லின் சமஸ்கிருத வேர்ச்சொல் பர், பாரா (bhr,bhara) என்பதாகும். இந்த வேர்ச் சொல்லின் பொருள் சுமத்தல் அல்லது தாங்குதல் ( To carry or To Bear) என்பதாகும். தமிழில் கூடப் பாரம் என்னும் சொல் புழக் கத்தில் இருந்தாலும் அதன் தமிழ்ச் சொல் சுமை என்பதாகும்.
யாகத்தில் வார்க்கப்படுகின்ற பொருட்களை எல்லாம் யாகத் தீயானது வானுலகில் வாழும் தேவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஊடகமாகச் செயல் புரிவதால் நெருப்பிற்குப் ‘பரதா’ bharatah – bharata என்னும் பெயர் வழங்கப்படுகிறது.

அக்னி பகவானை ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயராலும் அழைக்கும் வழக்கம் உள்ளது. யாகத்தில் பெய்யப்படுகின்ற நெய்யை யாக நெருப்பானது தேவர்களிடம் கொண்டு சேர்ப்பதால் அது ‘ஹவ்ய வாகனா’ என்று அழைக்கப்பட்டது.
ஆதிசங்கரரும் தனது ‘சங்கர பிரக தாரன்யகா பாஷ்யா’ என்னும் நூலில் ‘அக்னி பரதா’ (agnir bharata) என்று நெருப்பினை அழைப்பார்.

ஆக, பரதா என்னும் சமஸ்கிருதச் சொல் சுமத்தலையும் தூக்கிச் செல்வதையும் குறிப்பிடும் சொல் என்பது தெளிவாகின்றது.
பாரதி என்பது பரதா என்னும் சொல்லின் பெண்பாற் பெயர் என்று தனது ரிக் வேத சம்ஹிதாவில் சயனாச்சாரியார் அவர்கள் குறிப்பிடுவார்கள். நெருப்பில் நெருப்பில் தோன்றும் ஒளியைச் சுமப்பவர் பாரதி என்று பின்னாளில் பாரதி என்ற சொல்லுக்கு ஒளி என்னும் பொருளும் வந்து சேர்ந்தது.

பாரத் என்னும் சொல் இந்திய மரபுச் சொல்லா?
பாரத் என்னும் சொல்லை ஒரு சமஸ்கிருத சொல்லாகக் குறிப்பிட்டாலும் அந்தச் சொல் பிராகிருத மொழியிலும் அதே பொருளை உணர்த்தும் சொல்லாக கையாளப்படுவது ஒப்பு நோக்கத்தக்கது.
மேலும் அய்ரோப்பிய ஈரானிய மொழிகளிலும் இதே பரா பரதா என்னும் சொல் சுமத்தலையும் தாங்குதலையும் குறிக்கின்ற ஒரு சொல்லாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் இந்தோ ஈரானியன் இந்தோ ஆரியன் குடும்பத்தின் பல மொழிகளும் தங்களுக்கு இடையே மொழிக் கட்டமைப்பில் ஒரு பொதுமையைக் கொண்டுள்ளன. இந்த மொழிகளின் அகர முதலியின்படி ‘பரதா’ என்னும் வார்த்தை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைக் கீழே பார்ப்போம்:
புரோட்டோ இந்தோ ஈரானியத்தில் பரதா என்பது பாரதி என்றும்
புரோட்டோ இண்டோ அய்ரோப் பியத்தில் அது பேரெதி என்றும்
வேதகால சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்புடைய பழைய ஈரானிய அவஸ்தன் மொழியில் பாரைதி என்றும்
பாரசீக மொழியில் பர்தன் என்றும்
அராபிய மொழியில் பரடா என்றும்
அழிந்து பட்ட ஜெர்மானிய கோத்திக் மொழியில் பாய்ரன் என்றும்
லத்தீன் மொழியில் பெரோ போர்ட்டோ என்றும்
ஜெர்மனிய மொழியில் ஜிபாரென் என்றும்
ஆங்கிலத்தில் பியர், பர்டன் என்றும் வழங்கப்படுகிறது.
எனவே, பாரத் என்னும் சமஸ்கிருதச் சொல்லானது அதேபொருள் படும்படி இந்தோ ஆரியன் இந்தோ ஈரானியன் இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பங்களில் பல மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே பாரத் என்னும் சொல் இந்திய மரபுக்கு அதாவது சமஸ்கிருத மரபுக்கு மட்டுமே சொந்தமான ஒரு சொல் என்று கூறுவது ஒரு தவறான புரிதலால் சொல்லப்படும் கூற்றே ஆகும்.

ஆனாலும், பாரத் என்னும் சொல் ஒரு அயற்சொல் என்று நாம் கூறி விடவும் இயலாது.
பாரத் என்னும் சொல் ஒரு வேர்ச்சொல். இந்த வேர்ச் சொல்லானது தொடர்புடைய அத்தனை மொழிக் குடும்பங்களிலும் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதே உண்மை. பிற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதால் இது இந்திய சமஸ்கிருத மரபுக்கு சொந்தமில்லாத சொல் என்றும் கூறி விட இயலாது.
அதேபோல் இந்தியா என்னும் சொல்லும் இந்திய சமஸ்கிருத மரபின் வழி வந்த சிந்து எனும் அகவழக்குச் சொல்லின் கிரேக்க மொழியில் வழங்கும் புறவழக்குச் சொல் ஆகும்.

பரதப் பழங்குடியினர்
முந்தைய வேத காலத்தில் பரதர் என்னும் பழங்குடியினர் சரஸ்வதி எனும் புராண நதிக்கரையில் வசித்து வந்துள்ளனர். அந்த இடம் தற்காலத்தில் ஹரக்ஸ்வதி நதி அல்லது ஹெல்மான்ட்-அர்கன்டாப் என்னும் ஆப்கானிஸ்தானத்தின் நதிப் பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
இந்தப் பழங்குடியினர் பற்றிய பல குறிப்புகள் ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் பல இடங்களில் காணப் படுகின்றன. இந்தப் பழங்குடியினர் ஹிந்து குஷ் மலையில் அமைந்துள்ள கைபர் கண வாயையும் அய்ந்து நதிகள் பாய்கின்ற பஞ்சாப் பகுதியையும் கடந்து வந்து இறுதி யாகக் கங்கைச்சமவெளிப் பகுதியில் குடியேறி யுள்ளார்கள்.
பரதா என்பது சுமந்து செல்லும் ஊடகம் என்பதை நாம் முன்னரே கண்டுள்ளபடி இந்த பரதப் பழங்குடியினர் இந்தோ ஆரியப் பண்பாட்டை மேற்கிலிருந்து கிழக்கிற்குச் சுமந்து வந்ததால் பரதப் பழங்குடியினர் எனப் பெயர் பெற்றனர்.
இந்த பழங்குடியினர் பற்றிய நுணுக்க மான பல குறிப்புகளும் இவர்களின் இடப்பெயர்வுகளும் இவர்கள் பங்கேற்ற பல போர்களைப் பற்றிய குறிப்புகளும் ரிக் வேதத்தின் மூன்று மற்றும் ஏழாவது மண்டலங்களில் குறிப்பிடப்படுகின்றது.
இந்தப் பழங்குடியின் தலைவர்களாக திவோதாசா மற்றும் சுதாஸ் ஆகியோரின் பெயர்களும் இவர்களுக்கு உதவி செய்தவர் களாக பரத்வாஜா, விசுவாமித்ரா, வசிஷ்டா ஆகியோரின் பெயர்களும் ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் வருகின்ற காயத்ரி மந்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. இடம்பெயர்ந்து யமுனை நதிக்கரைக்கு வந்து சேர்ந்த இந்த பரதப் பழங்குடியினர் அந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த பேடா மன்னனைத் தோற்கடித்துப் புரு இனத்தவரோடு சேர்ந்து குரு ராஜ்யத்தை நிறுவுகின்றனர்.

மகாபாரத் இதிகாசம் இந்தக் குரு வம்சாவளியினரைப் பற்றிக் குறிப்பிடுகையில் சகுந்தலை-துஷ்யந்தன் ஆகியோருக்குப் பிறந்த பரதன் என்பான் மன்னனாக நாடாண்டதைக் குறிப்பிடுகின்றது.
சந்திர வம்சத்தைச் சேர்ந்த இந்த பரத மன்னனின் பெயராலேயே இந்த நாடு பாரத நாடு என்று அழைக்கப்படுகின்றது என்றும் நம்பப்படுகிறது. ஆனால், இந்தப் பரத மன்னன் சந்திர வம்சத்தைத் தோற்று வித்தவன் அல்லன். சந்திர வம்சாவளியிலே இடையில் வந்த ஒரு மன்னன். அவன் பெயரால் நாடு அழைக்கப்படுவது என்பது ஏற்புடைத்தன்று.
இந்தப் பரத மன்னன் ஒரு வரலாற்று மாந்தர் அல்ல. அதற்கு மாறாக மகாபாரதம் என்னும் இதிகாசக் கதையின் பாத்திரம். அந்தக் கதையின்படி பரத மன்னன் 27,000 ஆண்டுகள் நாட்டை ஆண்டான் என்றும் இந்த பூமியில் அமைந்திருந்த எல்லா நாட் டையும் தோற்கடித்துக் கைப்பற்றினான் என்றும் அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் பொருந்தாத கட்டுக்கதைகளால் வடிவமைக் கப்பட்ட கதாபாத்திரமே பரத மன்னன் என்னும் மகாபாரதப் பாத்திரம் ஆகும்.
மகாபாரதத்தின் பீஷ்ம பார்வதத்தின் ஜம்பு கண்ட நிர்மாணப் பகுதி ஒன்பதில் பரதா என்னும் சொல் கையாளப்படுகின்றது. ஆனால், அது பரத மன்னனைக் குறிக்க வில்லை அது பரதப் பழங்குடியைக் குறித்தது.
திருதராஷ்டிரனை ‘ஓ பரதா’ என்று சஞ்சயன் அழைப்பதாக ஒரு இடம் வருகின்றது. இது பரதப் பழங்குடியினரைப் பரதா என்றழைக்கும் பழக்கம் இருந்துள்ளதைக் காட்டுகின்றது. எனவே, பரத கண்டம் பரத வர்ஷா என்பது பரதப் பழங்குடியினர் ஆண்டிருந்த நிலப்பகுதியைக் குறித்தது எனலாம்.

பரதநாடு என்பது வட இந்தியா மட்டுமா? தென்னிந்தியா அந்த நாட்டின் ஒரு பகுதி இல்லையா?
பரதநாடு என்பது மகாபாரதக் கதையின்படி பரத இனக் குழுவினர் ஆண்ட வட இந்தியாவை உள்ளடக்கிய ஒரு பகுதியே ஆகும். அதில் தென்னிந்திய நிலப்பரப்பு இணையவில்லை என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கங்கைச் சமவெளி முடிவுக்கு வரும் இடமே பரத நாட்டின் எல்லையாக மகாபாரதத்தில் காட்டப்பட்டுள்ளது.
விந்திய மலைக்குத் தெற்கே அமைந்த நிலப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களாகத் திராவிடர்களையும், கேரளர்களையும், கர்நாடகர்களையும், சோழர்களையும் மற்றும் பல மன்னர் களையும் மகாபாரதம் சுட்டிக்காட்டி அவர் களும் அந்தக் குருச்சேத்திரப் போரிலே பங்கேற்றதாகக் குறிக்கின்றது.

மனுஸ்மிருதியில் ((Manu 2-6-23) தென்னிந்திய நிலப்பரப்பு’பரத வர்ஷா நாட்டின் பகுதியாகச் சுட்டிக் காட்டப்படவில்லை. அதற்கும் மேலாக இந்தத் தென்னிந்திய நாட்டினரை ‘மிலேச்ச தேசத்தினர் அதாவது காட்டுமிராண்டிகள், கீழ்நிலை ஜாதியினர், சமஸ்கிருதம் அறியாத அயலவர்கள் என்று குறிப்பிடுகின்றது.
மகாபாரதத்தின் அனுசாசன பருவா (Book 13, Sec 35) உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் வெறுப்பைச் சம்பாதித்த கீழ் ஜாதி சூத்திரர் களாகத் தென்னிந்திய மக்களையும் மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.
மேகலா, திராமிடா என்னும் சொற்கள் இந்தப் பகுதியிலே குறிப்பிடப்படுகின்றது.

புராணங்களில் பரதவர்ஷா
பாகவத புராணம், வாயுபுராணம், அக்னி புராணம், மார்க்கண்டேய புராணம், ஸ்கந்த புராணம் ஆகிய புராணங்களில் பரதவர்ஷத்தைப் பற்றிய கற்பனைக் கதைகள் அள்ளிவிடப்பட்டிருக்கின்றன.
வாயு புராணத்தில் பாரத வருஷத்தில் ஒன்பது தீவுகள் இருந்தன என்றும், அவற்றிற்கு இடையே கடல் இருந்தது என்றும், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு யாரும் போக முடியாது என்றும் கதை சொல்லப்பட்டிருக்கின்றது.
பரதவர்ஷத்தைச் சுற்றி ஏழு கடல்கள் இருந்ததாக இந்த புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவை:
உப்புக்கடல்
கரும்புச் சாற்றுக் கடல்
மதுக்கடல்
வெண்ணை நெய்க் கடல்
தயிர்க்கடல்
பாற்கடல்
நன்னீர்க் கடல்
பரதவர்ஷத்தின் நிலப்பரப்பைக் குறிப்பிடும் மேற்கண்ட குறிப்புகள் எல்லாம் கற்பனையில் விளைந்த கதைகளே என் பதைச் சொல்லத் தேவையில்லை.

ஹத்திக்கும்பா கல்வெட்டு சொல்வதென்ன?
இன்றைய ஒடிசா மாநிலத்தின் உதயகிரி மலைப்பகுதியில் பிராக்ருதி மொழியில் பிராமி எழுத்துருவால் வெட்டப்பட்டுள்ள ஹத்திகும்பாக் கல்வெட்டு அந்தப் பகுதி யைக் காரவேல் மன்னன்
கி.மு. முதலாம் நூற்றாண்டில் ஆண்ட வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்கின்றது.

17 அடிகள் கொண்ட அந்தக் கல்வெட் டிலே பத்தாவது அடியிலே ‘பாரத வாஸா’ என்ற சொற்றொடர் வருகின்றது. காரவேல் மன்னன் பார்த் வர்ஷா நாட்டின் மீது படை எடுத்துச் சென்ற செய்தியை இந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. காரவேல் மன்னன் ‘கலிங்காதிபதி’ என்றும், ‘கலிங்க ராஜ வம்ச’ என்றும், ‘கலிங்க நகரி’ என்றும், காரவேல மன்னன் கலிங்க சாம்ராஜ்யத்தின் குடிமகனாகவே இந்தக் கல்வெட்டில் பதிவுசெய்யப் பட்டிருக்கின்றார் என்பதும் பாரதவர்ஷத்தில் கலிங்க நாடு சேர்ந்து இருக்கவில்லை என்பதும் இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் செய்திகளாகும்.
இந்த காரவேல் மன்னனை, 113 ஆண்டு களாகக் கலிங்கப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த திராவிட மன்னர்களின் கூட்டமைப்பை முறியடித்தவனாகவும், பாண்டிய மன்னர்களிடம் இருந்து முத்துக் களைப் பரிசாகப் பெற்றவனாகவும் இந்தக் கல்வெட்டுக் காட்சிப்படுத்துகின்றது.
இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய செய்திகளாக இந்த கல்வெட்டு அறிவிக்கும் முக்கியமான மூன்று முடிவுகளாவன:
1. கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா நாடு அமைந்திருந்தது.
2. பரதவர்ஷா நாடு என்பது வட இந்தி யாவின் கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே.
3. அந்தக் காலக்கட்டத்தில் கலிங்கப் பகுதியும் தென்னிந்தியப் பகுதியும் பரதவர்ஷா நாட்டின் பகுதிகளாக இருக்க வில்லை.

சமண மதத்தின் பரத மன்னன்
பரதவர்ஷா என்பது பார்ப்பனிய மதத்தின் சொல்லாடல் மட்டும் அன்று. அந்தச் சொல் லாடல் சமணத்திலும் பவுத்தத்திலும் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாரத் என்னும் சொல் மத ரீதியான சொல் லாடல் இல்லை. அது பல பண்பாடுகளை தன்னுள்ளே கொண்ட மானுடவியலின் ஒரு சொல்லாடலாகும்.
சமண மதக் குறிப்புகளின்படி முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் நூறு மகன் களில் ஒருவன்தான் பரதன் ரிஷப தேவரின் மகளின் பெயர் பிராமி என்றும், அது அன்றைக்கு வழக்கத்திலிருந்த எழுத் துருவுக்குப் பெயராகக் (பிராமி எழுத்து) கொள்ளப்பட்டது என்பதும் கூடுதல் செய்தி.
கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சமண இலக்கியமான ஆதி புராணத்தின்படி ரிஷப தேவர் தனது நாட்டை 100 மகன் களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து ஆட்சி செய்ய வைத்துள்ளார். ஆனால் பரதன் மற்ற 98 சகோதரர்களையும் போரில் தோற்கடித்து அவர்களுடைய பகுதியையும் கைப்பற்றிக் கொள்கின்றான்.

இறுதியாக ஒரே ஒரு சகோதரன் பாகுபலி மட்டும் இன்னும் தனது நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றான். பாகுபலியுடன் பரதன் செய்த போரிலே பரதன் தோற்றுப் போய் விடுகின்றான். ஆனால் பாகுபலி சகோதர பாசத்தால் தனது நாட்டை பரதனுக்கு அளித்துவிட்டுத் தான் ஒரு சமணத் துறவியாகப் போய் விடுகின்றான் என்று ஆதி புராணம் சொல்கின்றது.
இன்றைக்கும் கர்நாடகத்தின் சரவண பெலகுலா சமணக் கோயிலிலே மிக உயர்ந்த பாகுபலியின் சிலைக்கு அருகிலே பரத மன்னனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது இந்தக் கதையை உறுதி செய்வதாக உள்ளது.
மேலும் இந்த சமணமதக் கதையைப் பார்ப்பனிய விஷ்ணு புராணமும் சிறீமத் பாகவதமும் உறுதி செய்கின்றன. ரிஷப தேவரின் மூத்த மகனான பரதனின் பெயராலேயே இந்த நாடு பாரதவர்ஷா என்று அழைக்கப்படுவதாக சிறீமத் பாகவதம் (5-49) அறுதியிட்டுச் சொல்கின்றது.
மேலே சுட்டப்பட்ட வேதிய இந்து மதப் புராணங்களின்படியும் சமண மத ஆதி புராணத்தின்படியும் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவனின் மகனான பரதனே இந்த நாட்டை பேரரசனாக ஆண்ட சக்கரவர்த்தி என அறிய முடிகின்றது.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்கள்
பாரத் என்று அறியப்படும் இந்தியா
அரசமைப்புச் சட்டத்தின் முதல் விதியில் நாட்டின் பெயர்
அறிவிக்கப்படுகின்றது. அதில் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்
என்று வரையறுக்கப்பட்டது.
இந்த முதல் விதியின் மீது நடந்த விவாதத்தில் ஒரு சிலரின் கருத்துக்களை கீழே பார்ப்போம்.
திரு. அனந்த சயனம் அய்யங்கார்: இந்தியா என்ற சொல்லுக்கு பதிலாக பாரத், பாரத் வர்ஷா அல்லது ஹிந்துஸ்தான் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்கிறார்.
திரு. லோக்நாத் மிஸ்ரா அவர்களும் பாரத் வர்ஷா என்ற பெயரை ஆதரிக்கிறார்.
திரு.சிபன்லால் சக்சேனா அவர்கள் இந்தியா என்ற வார்த்தையைக் கூடாது என்றும், பாரத் என்ற வார்த்தை மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், இந்திய நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தி அறிவிக் கப்பட வேண்டும் என்றும் வந்தே மாதரம் நாட்டின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றார்.
திரு.எச்.வி.காமத் என்பவர் மாநிலங்கள் என்ற வார்த்தையை மாற்றிப் பிரதேசங்கள் என்னும் ஹிந்தி வார்த்தையை பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றார்.

இந்த வேளையில் குறுக்கிட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு,பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு. எனவே, ஒரு மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறுவது சரியான முடிவு அல்ல என்று தனது கருத்தை முன்வைத்து உறுப்பினர்கள் தங்களின் சக்தியை அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசமைப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளில் செலவழிக்க வேண்டுமென்றும் இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத பிரச்சினைகளில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பண்டித நேரு அவர்களின் கருத்துக்கு ஒத்திசைவு தந்து பிறர் கொண்டு வந்த திருத்தங்கள் அனைத்தையும் எதிர்க்கின்றார்.
பின்னர் ஒரு சமரசத் தீர்வாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாரத் என்று அறியப் படும் இந்தியா India that is Bharat என்னும் திருத்தத்தை முன் வைக்கிறார்.

திரு.எச்.வி.காமத் அவர்களும் திரு. சேத் கோவிந்த் தாஸ் அவர்களும், பாரத் அல்லது ஹிந்து என்னும் சொல் முதலில் வரவேண்டும் இந்தியா என்னும் சொல் பின்னால் வரவேண்டும் என்னும் திருத்தத்தை முன்வைக்கின்றார்கள்.
திரு. கலா வெங்கட் ராவ் அவர்கள், ஹிந்த் & இந்தியா என்ற சொற்கள் அயற் சொற்கள் என்னும் கருத்தியலால் இந்தி மொழியின் பெயரையே பாரதி என்று மாற்ற வேண்டும் என வேண்டினார்.
திரு.கமலபதி திரிபாதி அவர்கள் மேலுலகத்தில் வசிக்கின்ற கடவுள்கள் பாரத் என்றே இந்த நாட்டின் பெயரை நினைவில் வைத்துள்ளார்கள் என்று சொல்கின்றார்.

இந்த நிலையிலே அண்ணல் அம் பேத்கர் அவர்கள் குறுக்கிட்டு, “இந்த விவா தங்கள் எல்லாம் தேவையா இன்னும் முக்கியமான வேலை நிறைய இருக்கின்றது” என்று அவையின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
பின்னர் திருத்தங்கள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு அண்ணல் அம்பேத்கரின் திருத்தமே அரசமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது அதன்படி India that is Bharat  இந்தியா எனும் பாரத் என்னும் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

முடிவுரை:
இந்தக் கட்டுரையில் வரலாற்றின் அடிப் படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா மற்றும் பாரத் ஆகிய சொல்லாடல்களைப் பற்றி ஆராய்ந்தபின் இந்த நாட்டின் பெயராக அந்தச் சொற்கள் எப்படி நிறுவப்பட்டன என்பதை ஆய்ந்த பின்னே நாம் கீழ்க்கண்ட முடிவுகளை எளிதாக எட்டலாம்.
1. இந்தியா மற்றும் பாரத் ஆகிய இரண்டு பெயர்களுமே காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரில் மக்களுக்கு உந்துதல் தந்தது.
2. பல நூற்றாண்டுகளாக இந்த நிலப் பரப்பு இந்தியா என்னும் பெயராலும் அறியப்பட்டிருந்தது.
3. பாரத் என்னும் பெயரும் வெகு கால மாக இங்கு புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
4. இந்தியா என்னும் பெயர் காலனியாதிக்கம் நம் நாட்டின் மீது திணித்த பெயர் என்று கருதுவது தவறாகும். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிந்து என்னும் சொல்லாடலின் அகவழக்கின் புறவழக்கே (ணிஜ்ஷீஸீஹ்னீ ஷீயீ ணிஸீபீஷீஸீஹ்னீ) இந்தியா என்னும் சொல்லாடலாகும். இந்தியா என்பது அயற்சொல் இல்லை.
5. யாரேனும் இந்தியா என்னும் சொல்லை அயற்சொல்லாகக் கருதி அதன் மீது வெறுப்பை உமிழ்ந்தால், பாரத் என்னும் சொல்லும் ஈரானிய வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த சொல் என்பதால் அதையும் அயற் சொல்லாகக் கருதி அதன் மீதும் வெறுப்பை உமிழ வேண்டும்.
6. யாக வேள்வியில் வார்க்கப்படுகின்ற காணிக்கைகளை நெருப்பானது மேலுல கில் வாழ்கின்ற தேவர்களிடம் கொண்டு சேர்ப்பதாகக் கருதப்படுவதால் நெருப்புக்கு பரதா என்னும் பெயர் வந்தது. இதனாலேயே நெருப்புக்கு ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயரும் வந்தது.
7. பரதப் பழங்குடியினர்வடமேற்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கங்கைச் சமவெளியில் குடி அமர்ந்து குரு ராஜ்ஜியத்தை அமைத் தார்கள்.
8. மகாபாரதத்தில் வருகின்ற பரத என்னும் சொல்லாடல் சகுந்தலை துஷ்யந்தன் ஆகியோரின் மகனான பரதனைக் குறிக்கவில்லை. அது பரதப் பழங்குடியினரைக் குறிக்கவே பயன் படுத்தப்பட்டது.
9. சமண மதத்தின் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷபதேவரின் மகனான பரதச் சக்கரவர்த்தியின் பெயராலேயே இந்த நாடு பரதவர்ஷா என்று அழைக்கப்பட்டது என்பதை சமணத்தின் ஆதி புராணத்தின் வழியாகவும் அதே கருத்தை உறுதி செய்யும் வேதியத்தின் விஷ்ணு புராணம் சிறீமத் பாகவதத்தின் வழியாகவும் நாம் அறிந்தோம்
10. பரதவர்ஷத்தில் தென்னிந்தியப் பகுதிகள் அடங்கி இருக்கவில்லை. மநுவின் ஸ்ருதிகள் இந்தக் கூற்றை உறுதி செய்கின்றன. கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே பரதவர்ஷா நாட்டின் எல்லைப் பரப்பாக அமைந்திருந்தது.
11. மிகப் பழைமையான தொன்மவியல் ஆதாரமான ஹத்திகும்பா கல்வெட்டு கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா இருந்துள்ளதையும் கலிங்கமும் தென்னாடும் பரதவர்ஷத்தில் இணையாமல் தனித்து இருந்ததையும் காட்சிப்படுத்தியது.
12. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்களில் சில உறுப்பினர்கள் இந்தியா என்னும் சொல் அயற்சொல் என்று கருதி அதை நீக்க முற்பட்டதுடன் ஹிந்தி மொழியின் மேல் கொண்ட அபி மானத்தாலும் இந்து மதத்தின் பால் கொண்ட அபிமானத்தாலும் பாரத் என்ற சொல்லே நம் நாட்டின் பெயராக இருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
13. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ‘இந்தியா என்னும் பாரத்’ என்னும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா பாரத் ஆகிய இரண்டு பெயர்களையும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்தார்.
14. மானுடவியலின் அடிப்படையிலும் வரலாற்றின் அடிப்படையிலும் மேற்கொள் ளப்பட்ட இந்த ஆய்வு என்பது இந்த இரண்டு சொற்களின் உண்மைத் தன்மையை உணர வைக்கின்றது.


வியாழன், 17 அக்டோபர், 2024

ஆர்.எஸ்.எஸ்க்கு முன்னோடி ஆரிய பார்ப்பன பாரதி? - எதிர்வினை (78)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (78)

ஜுன் 16-30 ,2021

ஆர்.எஸ்.எஸ்க்கு முன்னோடி ஆரிய பார்ப்பன பாரதி?

நேயன்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 125ஆம் ஆண்டில் அய்ந்து பேரால் உருவாக்கப்பட்டது.  ஆனால், பாரதியார் 11.9.1921லே இறந்துவிட்டார். அப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பாரதியின் பங்கு எப்படியிருக்க முடியும் என்று எவரும் எளிதில் எண்ணுவர்!

பாரதி இறந்த பின் 4 ஆண்டுகள் கழித்து ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டாலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படைச் சித்தாந்தங்கள் அனைத்தையும் பாரதி தன் கொள்கையாக முன்னமே அறிவித்துவிட்டார்.

பாரதி ஜாதி ஒழிப்புப் பேசியவர்; பார்ப்பனர்களைச் சாடியவர்; பெண்ணுரிமை பற்றி பாடியவர்; தாழ்த்தப்பட்டவருக்குப் பூணூல் மாட்டிப் புரட்சி செய்தவர். அப்படியிருக்க அவர் எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அடித்தளம் இட்டிருக்க முடியும்? ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு பாரதி எதிரானவர் அல்லவா? என்றே எல்லோரும் கேட்பர்!

இப்படி இவர்கள் கேட்பதற்குக் காரணம், பாரதியைப் பற்றி முழுமையாக அவர்கள் அறியாததே காரணம்.

இந்துத்துவத்தின் முதன்மைக் கொள்கைகள் எவை என்பதை நான் முன்னுரையில் கூறியதை மீண்டும் ஒருமுறை படியுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு, அவை பற்றி பாரதியின் கொள்கைகள் என்ன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை ஒளிரும்!

முதலில் இந்துத்துவாவின் அடிப்படைக் கொள்கையான வர்ணாஸ்ரம தர்மம் பற்றியும், வேத, சாஸ்திரங்களைப் பற்றியும் பாரதியின் கொள்கை என்ன என்பதைப் பார்ப்போம்.

பாரதியும் வர்ணாஸ்ரம தர்மமும்:

“ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாடிய பாரதி எப்படி வர்ணாஸ்ரம ஆதரவாளராய் இருக்க முடியும்? என்றே எல்லோரும் எண்ணுவர். பாரதியின் சந்தர்ப்பவாதக் கருத்துகள் சிலவற்றை எடுத்து வைத்துக் கொண்டே சிலர் பாரதியாரை ஒரு சமதர்மக் கவிஞராக, புரட்சிக் கவிஞராகக் காட்டுகின்றனர்.

பாரதியின் கருத்துகள் இருவகைப்படும்.

1. பாரதியின் உள்ளக் கருத்துகள். 2. பாரதியின் கள்ளக் கருத்துகள்.

பாரதி ஓர் கபடவேடதாரி. கபடவேடதாரிகளிடம் எப்போதும் இரட்டை வேடம் இருக்கும். அது பாரதியிடம் அதிகம் இருந்தது. அதை நீங்கள் இந்நூலைப் படிக்கப் படிக்க அறிவீர்கள். பாரதி வர்ணாஸ்ரம தர்மத்தில் தீவிர பற்றும் வெறியுங் கொண்டிருந்தார். சமூகச் சீர்கேடுகளுக்கெல்லாம் காரணம் வர்ணாஸ்ரமம் அழிந்ததுதான் என்கிறார்.

1910இல் பாரதி தனது சுயசரிதைக் “கனவு’’ என்ற தலைப்பில் வெளியிட்டார். அதில் அவருடைய தந்தை வறுமையுற்று வருந்தியதற்குக் காரணம் வர்ணாஸ்ரமம் கெட்டொழிந்ததே யாகும் என்கிறார்.

“பார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்தியதை

பாழடைந்த கலியுகம். ஆதலால்

வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே

மேன்மை கொண்ட தொழில் எனக் கொண்டான்’’ என்று கூறுகிறார். (பாரதியார் கவிதைகள்)

பார்ப்பான் உடல் வியர்க்க உழைக்கக் கூடாது என்ற வர்ணாஸ்ரம மற்றும் மனுதர்ம விதியை ஏற்று இக்கருத்தைக் கூறுகிறார்.

மேலும், “சமூகம்’’ என்ற தலைப்பில் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்திப் பாடுகிறார்.

“வேதம் அறிந்தவன் பார்ப்பான் (பிராமணன்)

நீதிநிலை தவறாமல் _ தண்ட

நேமங்கள் செய்பவன் நாயக்கன் (க்ஷத்ரியன்)

பண்டங்கள் அறிபவன் செட்டி(வைசியன்)

பிறர்பட்டினி தீர்ப்பவன் செட்டி (சூத்திரன்)

நாலு வகுப்புமிங்கு ஒன்றே _ இந்த

நான்கினில் ஒன்றுகுலைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே _ செத்து

வீழ்ந்திடும் மானிடச்சாதி (பாரதியார் கவிதைகள்)

கண்ணன் (கிருஷ்ணன்) என் தந்தை என்ற பாடலில்,

“நாலு குலங்கள் அமைத்தான் _ அதை

நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதர்’’ என்கிறார். (பாரதியார் கவிதைகள்)

ஆரியர்களின் சாஸ்திரங்களை பாரதி மிகவும் உயர்வாக மதித்தார். அவற்றைப் பின்பற்றினால்தான் நன்மை கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார்.

“வேள்விகள் கோடி செய்தால் _ சதுர்

வேதங்கள் ஆயிரம் முறைபடித்தால்

மூளும் நற்புண்ணியங்கள்தான்’’

(பாரதியார் கவிதைகள்)

“முன்னாளில் அய்யரெல்லாம் வேதம் சொல்வார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்

இந்நாளில் பொய்மைப் பார்ப்பனர் _ இவர்

ஏதும் செய்தும் காசு பெறப்பார்ப்பார்’’ என்கிறார் பாரதி. (பாரதி புதையல் பெருந்திரட்டு)

பாரதியின் இப்பாடலின் உட்பொருளை மிக நுட்பமாகக் கூர்ந்து பொருள் கொள்ள வேண்டும். இப்பாடலின் மூலம்,

1.            வேதம் உயர்ந்தது

2.            வேதம் சக்தியுடையது

3.            வேதம் உலகை உய்விக்கக் கூடியது

4.            வேதம் பிராமணன் மட்டுமே ஓதவேண்டும்

5.            வேதம் ஓதுவது வர்ணாஸ்ரம தர்மப்படி பிராமணனுக்குரியது.

6.            வர்ணாஸ்ரம தர்மப்படி பிராமணன் வேதம் ஓதும் தொழிலை விட்டுவிட்டு, காசு, பதவி என்று மற்ற தொழில்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டான். இது கண்டிக்கத்தக்கது.

7.            வர்ணாஸ்ரம தர்மப்படி அவனவன் தொழிலை அவனவன் செய்தால்தான் சமூகம் வாழும் செய்பவனுக்கும் சிறப்பு.

                இதுவே பாரதியின் இப்பாடலின் உட்பொருள்; உண்மையான பொருள். இப்போது சொல்லுங்கள் – பாரதி வர்ணாஸ்ரமத்தை எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டார், மற்றவரும் ஏற்க வலியுறுத்தினார் என்று.

(தொடரும்)

புதன், 16 அக்டோபர், 2024

வேலியா தாலி?

 


ஏப்ரல் 16-30

முகப்புக் கட்டுரை : வேலியா தாலி?

- கவிஞர் கலி.பூங்குன்றன்


ஒரு தனியார் தொலைக்காட்சியில் தாலி பற்றிய ஒரு விவாதம் நடந்தது. அது ஒளிபரப்பப் படவும் இருந்தது. அந்தக் காலகட் டத்தில் அதனை ஒளிபரப்பக் கூடாது.

இந்து மதத்தை அவமதிக்கிறது. தாலி இந்துப் பெண்களின் புனிதச் சின்னம் என்று இந்துமத அடிப்படைவாதிகள் எகிறிக் குதித்தனர். அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தை மிரட்டினர். தொலைப்பேசிகள் மூலம் ஆபாசச் சேற்றை அள்ளி வீசினர்.

அடுத்த கட்டமாக அந்த நிறுவனத்தின் உள்ளே புகுந்து பணியாளர்களைத் தாக்கினர். பெண் ஒருவரும் தாக்கப்பட்டார். ஒளிப்பதிவுக் கருவி உடைக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டார். அதற்கு மேலும் ஒருபடி மேலே சென்று, டிபன் பாக்ஸ் குண்டுகளை அந்த நிறுவனத்துக்குள் வீசி அச்சுறுத்தினர்.

 

இந்த இடத்தில் திராவிடர் கழகம் நுழையாமல் என்ன செய்யும்? பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிர்க் கேள்வி என்ற நிலை உடைப்பெடுத்துத் தன் கம்பீரமான வருகையை திராவிடர் கழகம் பதிவு செய்தது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் போர்க்குரல் கொடுத்தார்  கொடுக்காமல் இருந்தால்தானே ஆச்சரியம். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில் (14.4.2015)

சென்னை பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை அறிவித்தார். இது ஒன்றும் கழகத்திற்குப் புதிதும் அல்ல. திருமணத்தின் போதே தாலியின்றி திருமணம் செய்து கொள்வதும், தாலி கட்டித் திருமணம் செய்தோராயிருந்தால், திருமணத்திற்குப் பிறகு தாலி என்பதன் உண்மைப் பொருளறிந்தபின் கழக நிகழ்ச்சிகளில் வாழ்க்கை இணையர்கள் இருவரின் ஒப்புதலுடன் தாலி அகற்றல் நடைபெறுவதும் சர்வசாதாரணம்! மத்தியில் மதவெறி ஆட்சி மகுடம் தரித்தது என்றவுடன் இந்த அடிப்படைவாதிகள் கொஞ்சம் ஆட்டம் காட்டுகின்றனர்.

தாலியை அகற்றிக்கொள்ளும் நிகழ்வைத் தாலி அறுக்கும் போராட்டம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம் பித்தார்கள். திராவிடர் கழகத்தின் தலைமை நிலையம் உண்மையை வெளிப்படுத்திய நிலையில், இப்பொழுதுதான் தாலி அகற்றும் போராட்டம் என்று எழுதிட, சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அதுகூடப் போராட்டம் அல்ல _ ஒரு சாதாரண நிகழ்வுதான். தாலி நமது பாரம்பரிய கலாச்சாரச் சின்னம், புனிதச் சின்னம் என்று சொல்லிப் பார்த்தனர். பரம்பரைச் சின்னம் என்பதற்கு ஆதாரங்கள் காட்டுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டோம். சங்க இலக்கியத்தில் உண்டா என்று வினா எழுப்பினோம். அகநானூற்றில் இடம் பெறும் 86 மற்றும் 136ஆம் பாடலில் திருமணம் குறித்துக் கூறப்பட்டுள்ளதே _ அதில் தாலி குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு மூச்சுப் பேச்சு இல்லை.

தமிழர் திருமணத் தில் தாலி உண்டா? என்று டாக்டர் இராச மாணிக்கனார் தனி நூலே எழுதி இருக்கிறாரே  அதற்கு இதுவரை மறுப்பு எழுதிய கொம்பர் யார் என்று கேட்டோம்  கேள்வி செங்குத்தாக நிற்கிறதே தவிர, பதில் சொல்லுவாரைத்தான் காணோம். அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் வேதத்தில்கூட தாலி என்பதற்கு ஆதாரம் கிடையாது என்று கடைந்தெடுத்துச் சொன்ன பிறகு வாயடைத்துப் போன நிலைதான்!

பதில் சொல்ல வக்கு இல்லை என்றாலும் சந்து முனைகளில் சிந்துகளைப் பாடிக்கொண்டு திரிகிறார்கள். பெரியார் திடலை முற்றுகை யிடுவோம் என்றெல்லாம் கருத்தில் சரக்கு இல்லை என்ற நிலையில் கைவரிசையைக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள். சுயமரியாதைத் திருமணச் சட்டத்தில் தாலி கட்டாயம் இல்லை என்ற விவரமாவது இவர்களுக்குத் தெரியுமா? எதையும் அறியாத தனத்தால் ஆவேசச் கூச்சல் போடுகிறார்கள்.

கடைசியாக எங்கே வந்து நிற்கிறார்கள்? தாலி பெண்களுக்கு வேலி என்கிறார்கள்.

அதாவது உண்மையா? நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் இந்தத் தாலிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை விதிவிலக்கு இல்லாமல் மனித மிருகங்கள் வேட்டையாடுகின்றனவே _ அவை யெல்லாம் இவர்களின் கருத்துக்குப் புலப்படவே புலப்படாதா? பெற்ற மகள்களையே பெண்டாண்டான் என்று கேடுகெட்ட வெட்கத்தில் தலைகுனிய வேண்டிய செயல்களுக்கு என்ன சமாதானம்?

மும்பையில் உள்ள பெண்கள் உரிமைகளுக்கான வழக்குரைஞர் ஃபிளாவியா ஆக்னஸ் கூறும்போது, குடும்ப உறுப்பினர்களின் பொருந்தாத பாலியல் வன்முறைகள் ஏராளமாகப் பதிவாகியுள்ளன. ஆனால் புகார்கள் அவர்களின் குடும்பத் தார்களின் அழுத்தங்களால் திரும்பப் பெறப்படுகின்றன.

மும்பையில் 18 வயதுப் பெண் ஒருவர் தமக்கை மற்றும் தன்னிடமும் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்ட தன் தந்தையின் மீது புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அந்தத் தந்தை தண்டிக்கப்படவில்லை.

அவர்மீது போச்சோ (Pocso Act) சட்டத்தின்படி அந்தப் பாலியல் உறவின்போது அப்பெண் மைனர் அல்ல என்று கூறப்பட்டது. தாலிக்கும் பாலுறவு வன்முறைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அதுபற்றிய புள்ளி விவரங்கள் உண்டா? நாள்தோறும் ஒரு செய்தி மட்டும் தவறாமல் வெளிவருகிறது. அதுதான் பெண்களின் சங்கிலிகளை அறுத்துச் செல்லும் செய்தி.

தாலி என்பதால் திருடர்கள் தவிர்த்து விடுகிறார்களா? இதில் இன்னொரு முக்கியக் கருத்தும் உண்டு. மங்களகரம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டு மஞ்சள் கயிற்றில் இப்பொழுது தாலி அணிபவர்கள் எத்தனை பேர்? தங்கச் சங்கிலியில் அல்லவா தாலி தொங்குகிறது? அந்த மங்களகரம் _ புனிதம் எல்லாம் பறந்துபோனது குறித்து யாராவது புலம்புகிறார்களா?

தாலி _ பெண்களுக்குத் திருமணம் ஆனதற் கான அடையாளம் என்றால் அதே கேள்வி ஆண்கள் பக்கம் திரும்பாதா? அதிகம் வெளியில் சுற்றுபவன், பெண்களை விட ஆண்களாகத்தானே இருக்கிறார்கள். அவர்களுக்குத் திருமணம் ஆனதற்கான அடை யாளம் இல்லையே  ஏன் என்ற கேள்விக்கு எந்த இந்து முன்னணிகள் பதில் சொல்லி யுள்ளன? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தாலி அணிவிப்பது என்பது _ கணவன் மரணம் அடைந்தால் அந்தப் பெண்களை அவமானப் படுத்தும் சடங்குக்காகத் தானே இந்தத் தாலி அணிவிப்பு.

முதலில் அணிவிப்பு _ அடுத்து அறுப்பு. கணவன் இறந்த துயரம் ஒரு பக்கம் என்றால் அதனைவிடப் பெரும் கொடுமை _ அவமானம் அந்தப் பெண்ணை அமங்கலி, முண்டச்சி என்ற முத்திரை குத்தி மூலையில் ஒதுக்குவ தற்குத்தானே இந்தத் தாலி சமாச்சாரம்?

ஆனால் சுயமரியாதைத் திருமணம் என்ன சொல்லுகிறது? ஆண்_பெண் என்பவர்கள் இணையர்கள் _- வாழ்வின் இன்ப துன்பங்களில், ஏற்றத் தாழ்வுகளில் சமபங்கு ஏற்கும் உற்ற நண்பர்கள் என்ற உறுதிமொழி ஏற்று வாழ்க்கைப் பயணத்தைத் துவக்குபவர்கள். இதில் இழிவு இல்லை _ ஆணின் உரிமை பெண் என்ற நிலைப்பாடு இல்லை. தாலி என்பது பெண் என்பவள் ஆணின் அடிமை _ சொத்து என்பதற்கான தளை _ அடையாளம் என்பதுதான்.

இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளப் பக்குவம் இல்லாதவர்கள் விட்டேனா பார்! என்று பேசுவது அறிவுடைமைதானா? ஒன்றை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

பெண்களுக்கு கல்வி உரிமை, வேலைவாய்ப் புரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, விதவைப் பெண்களுக்கு மறுமண உரிமை, பால்ய திருமண தடுப்பு என்ற உரிமை வரிசை நீண்டதற்கு, சட்ட வடிவம் பெற்றதற்குக் குரல் கொடுத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்? தாலி பெண்களுக்கான அடிமைச் சின்னம் என்று கூறுவது இதே இயக்கத்தவர்கள் தானே? தந்தை பெரியார் அவர்கள்தானே? _ மறுக்க முடியுமா?

அதே நேரத்தில் பெண்களுக்காக வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு வரிந்து கட்டுவோர் எந்தப் பக்கத்தில் நிற்கக் கூடிய வர்கள்? படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 17) பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. (மனுதர்மம் அத்தியாயம் 11 சுலோகம் 66) பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)

இப்படிச் சொல்லுகின்ற இந்துத்துவா பக்கம் நிற்கிறவர்களா பெண்களுக்கான பெருமையை உயர்த்திப் பிடிப்பவர்கள்?

பெண்கள் மீது அக்கறை கொண்டவர்கள்?

பார்ப்பனரை அழைத்து விவாஹ சுப முகூர்த்தம் நடத்துகிறார்களே  அந்தக் கல்யாணத்தில் பார்ப்பானர்கள் சொல்லும் மந்திரம் என்ன? ஸோம ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர த்ருத்யோ அக்நிஷ்டே பதி துரியஸ்தே மனுஷ்ய ஜா கல்யாணத்தில் மணமகளைப் பார்த்து புரோகிதப் பார்ப்பான் சொல்லும் மந்திரம் இது. முதலில் சோமன் என்ற கடவுள் கணவனாக இருந்தான், பிறகு கந்தர்வனுக்கு மனைவியாக இருந்தாள், இந்தப் பெண்ணின் மூன்றாவது கணவன் அக்னி, நான்காவதுதான் மனித ஜாதியாகப் பிறந்த இந்த மாப்பிள்ளை.

இப்படி பெண்களைத் திரும ணத்தின்போதே நான்கு பேர் களுக்கு மனைவி என்று மந்திரம் சொல்லுவதுதான் பெண்களுக்கான பெருமையா?

இப்படியெல்லாம் பெண்களை இழிவுபடுத்தாதே என்று போர்க் குரல் கொடுத்து, ஆண்களும் பெண்களும் சமம் _ சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்ற தத்துவத்தின் அடிப்படையில் சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி, இன்று சட் டப்படியாகவும் ஆக்கிய நாங் கள்தானே பெண்களின் பெரு மையைப் போற்றும் பெருமக்கள் _ மறுக்க முடியுமா? பெண்களுக்குத் திருமணம் உபநயனம், கணவனுக்குக் கடமை யாற்றுவது குருகுலவாசம்.

இல்லறம் காத்தலே வேள்வி என்பதை இன்றைய படித்த பெண்ணுலகம் ஏற்றுக்கொள் ளுமா?

Only when fire will cool, the moon burn, or the ocean fill with tasty water will a woman pure.

ஒரு வடமொழி சுலோகத்தை இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு (24.12.1990) எடுத்துக்காட்டியது. இதன் பொருள் எப்போது தீ தென்றலாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல் லது கடல் சுவை நீரால் நிரப் பப்படுகிறதோ அப்போதுதான் ஒரு பெண்ணும் தூய்மையான வளாக இருப்பாள் என்று கல்லூரி வாசல்களுக்குச் சென்று பெண்களிடம் சொல்லிப் பார்க்கட்டுமே _ என்ன பரிசு கிடைக்கும் _ தெரிந்ததுதான்.

விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்களே – ஒன்றுக்கும் உதவாதவர்கள். – ஜெயேந்திர சரஸ்வதி, (1997) (தினமணி – தீபாவளி மலர்)

வேலைக்குச் செல்லும் பெண்களில் பத்து சதவீதம்பேர்தான் ஒழுக்கமாக இருக்கிறார்கள். – காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி. இவற்றை எதிர்த்து காஞ்சிக்கே சென்று போராட்டம் நடத்தியவர்கள் (9.3.1998) யார்? திராவிடர் கழக மகளிர் அணியினர்தானே?

பெண்களின் புனித தாலியைக் கொச்சைப் படுத்துவதா என்று கூக்குரலிடும் கூட்டம் அன்று விதவைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டுப் பேசிய சங்கராச்சாரியாரை எதிர்த்து ஒரே ஒரு சொல் கூறியதுண்டா?

தாங்களாகவே உணர்ந்து தமது துணைவனின் கருத்து ஒற்றுமையோடு அடிமைத் தளையாம் தாலியை அகற்றிக் கொள்ளுதல் குற்றமா? சமதர்மப்படிதான் குற்றமா?

சட்டப்படிதான் குற்றமா? மனித உரிமைப்படிதான் குற்றமா? கணவன் அடித்தாலும் உதைத்தாலும் _ இந்த ஜான் கயிறுக்காகப் பார்க்கிறேன் என்று அந்தத் தாலிச் செயினைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அந்தக் கொடுமை நீடிக்க வேண் டுமா?

அதற்காகத்தான் தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை எதிர்க்கிறார்களா? வெறுக்கிறார்களா? கடைசியாக ஒரே ஒரு கேள்வி. தாலி கட்டித் திருமணம் செய்து கொண்டவர்கள் விவா கரத்துக் கோரி குடும்ப நீதிமன்றத்தின் வாயிலில் நிற்பது ஏன்? அந்தப் புனிதத் தாலி எந்த வகை யில் அவர்களுக்கு உதவியாகத்தான் இருக்கிறது? எதிர்ப்பாளர்களின் வரிசையில் ஆண்களைப் பார்க்க முடிகிறதே தவிர, பாதிப்புக்குச் கார ணமான பெண்களை அதிகம் காண முடியவில்டிலயே _ ஏன்? ஏன்? ஆத்திரப்பட்டால் அறிவு வேலை செய்யாது. அமைதியாக ஆழமாகச் சிந்தியுங்கள் _ 14ஆம் தேதி நிகழ்ச்சியின் அருமை பெருமை நன்றாகவே புரியும்.

——————

இந்து மதத்தில் பெண்கள் நிலை

 

பெண்களின் அந்தஸ்து பற்றி

1.    நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக்காரனாகவாவது ஒரு ஸ்திரியாகவாவது, ஒரு நாலுகால் மிருகமாகவாவது பிறப்பான்.

2.    மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன்முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும் அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.

3.    போதாயனர் கூறுவது _: எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமைகட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக்கூடாது.

4.    மத விதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்.  _ (சுந்தர காண்டம் 5)

5.    மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும்படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன்மாரும், வாலிப காலத்தில் புருஷன்மாரும், வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் _ ஒரு பெண் ஆனவள் ஒருபோதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடையவளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ, அலட்சியக் காரர்களாகவோ இருக்கும்படியான மற்றவர்களுடைய இரக்கத்தினால் வாழ்பவளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ்வளவு அற்ப ஜீவர்களாகவே இருக்கிறார்கள்.

6.    உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம்சமென்னவெனில், அவளுடைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவனையே அவள் மரியாதை செய்யட்டும்… ஒரு புருஷன் துர்நடத்தையுடையவனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம்போலவே கருதுகிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள். (அத். 5, 154)

7.    மனு, ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளா கத்தான் இருப்பாள். மேலும் அவர் சொல்லுவது: ஒரு மங்கையானவள் தான் மணம் செய்துகொண்ட ஒரு புருஷன் என்ன குணங்களையுடை யவனாயிருக்கின்றானோ அதே குணங்களையே அவளும் அடை வாள் _ எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப்போல்.
(அத்தியாயம் 9, 22)

8. போதாயனர் உரைப்பது: மாதர்கள் அறிவே இல்லாதவர்கள்: அவர்கள் சொத்துரிமை கொள்ளும் யோக்கியதையற்றவர்கள்.

திராவிடர் கழகத்தை எதிர்ப்போரே – இவற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா?

 

———–

 

தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன

சொல்லுகிறார்?


அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா என்று சிலர் கேட்பது புரிகிறது. ஒரு புரட்சியாளரின் பிறந்த நாளைப் புரட்சிகரமாகக் கொண்டாடுவதுதான் _ அந்தப் புரட்சியாளருக்குக் கொள்கைரீதியாக நாம் காட்டும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.
இதோ பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார் :

மலபார் மற்றும் அஞ்செங்ரோ கெஜட் டீரின் ஆசிரியரான திரு.சி.ஏ.இன்னஸ் சென்னை அரசாங்கத்தின் அனுமதியோடு பின்வருமாறு கூறுகிறார்: மருமக்கள்தாயம் என்னும் முறையைப் பின்பற்றும் எல்லா வகுப்பினரிடையேயும் அதேபோன்று மக்கள்தாயத்தைக் கடைப்பிடிப்போரில் பலரிடையேயும் தாலிகட்டும் திருமணம் என்னும் மற்றொரு ஏற்பாடு நடை முறையில் இருந்து வருகிறது. மலையாளி களின் திருமணப் பழக்க வழக்கங்க ளிலேயே இது நூதனமானது, தனித்தன்மை வாய்ந்தது என வருணிக்கப்படுகிறது. இதன் படி, ஒரு யுவதி பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்னர் அவள் கழுத்தில் தாலி (தங்கத்தாலோ அல்லது வேறு ஏதேனும் உலோகத்தாலோ செய்யப்பட்ட பதக்கம் போன்ற ஒரு சிறு ஆபரணம் நூல்கயிற்றில் கட்டப்படுவது) கட்டப்படுகிறது. அதே ஜாதியை அல்லது உயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவனால் இவ்வாறு தாலி கட்டப்படு கிறது.

இவ்வாறு செய்த பிறகுதான் அந்த இளம் பெண் சம்பந்தம் செய்துகொள்ள முடியும். தாலி கட்டுபவனுக்கு அல்லது மணவாளனுக்கு (மணமகன்) அந்தப் பெண் ணுடன் கூடி வாழும் உரிமை அளிப்பதற் காகவே இந்தச் சடங்கு செய்யப்படுவதாக பொதுவாகக் கருதப்படுகிறது.

கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்கு பூதேவர்களும் (அதாவது பிராமணர்களும்), சத்திரியர்களும் உரிமை கொண்டாடி வந்ததிலிருந்தும் இந்த வழக்கம் தோன்றியிருக்கக் கூடும். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 16, பக்கம் 333.)