சனி, 28 மார்ச், 2020
கரோனாவும் திருப்பதி கோயிலும்
மோடியின் இந்தி உரை வெறும் விளம்பரமா?
அவர்கள் கட்சி சாமியார் முதல்வரே மதிக்கவில்லையே!
கரோனா வைரஸ் தொற்றும் உக்கிரம் குறித்து பிரதமர் மோடி, இந்தியில் அரைமணி நேரத்திற்கு உரையாற்றினார். ‘‘அனைவரிடம் காலில் விழாத குறையாக வேண்டுகிறேன். தயவு செய்து யாருமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்; வீட்டிற்கு வெளியே ‘லட்சுமண ரேகை போட்டுக்கொள்ளுங்கள்'' என்று என்ன என்னவோ கூறினார். கூடவே மூடநம்பிக்கை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கெஞ்சிக் கெட்டுக்கொண்டு இருந்தார். ஆனால், இன்று (25.3.2020) காலை உத்தரப்பிரதேச சாமியார் முதல்வர் புதிய ராமர் கோவில்கட்டுவதால், ராமர் சிலையை தற்காலிக கோவிலில் உள்ள வெள்ளி சிம்மாசனத்தில் வைக்கும் நிகழ்வில் பிசியாக இருக்கிறார். இவர் மட்டுமல்ல, இவருடன் அதிகாரிகள் 20 பேர், சாமியார்கள் 300 பேர்வரை பொதுமக்கள் என மொத்தம் 8000 ஆயிரம் பேர்வரை ஒன்று கூடியிருக்கிறார்கள்.
- விடுதலை நாளேடு 25 3 20
முதன்மை உரைகள் இணைய வழியாக
வியாழன், 26 மார்ச், 2020
ஆய்வுக் கட்டுரை: சமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்:இந்து உளவியலின் பொதுப்போக்கு - 2
புலவர் செ.ராசு
ஆழியாறு ஆதாளியம்மன்
ஆழியாறு அருகில் சமணர் கோயில் இருந்து அழிந்துவிட்டது. கோயிலில் இருந்த சமண தீர்த்தங்கரர் சிலை மட்டும் தனியாக இருந்தது. யாரோ அதன் முகத்தைச் சிதைத்தனர். பின்னர் மார்பு, வயிற்றுப் பகுதியைச் சிறிது உடைத்தனர். பின்னர் முகப் பகுதியைப் பெண்போல் ஆக்கி மார்பில் பெண் உறுப்புக்களையும் பெரிதாக அமைத்து வர்ணம் பூசிப் பெண் உருவாக மாற்றியதுடன் அதற்கு ஆதாளியம்மன் என்று பெயரும் வைத்துவிட்டனர். அருகில் உள்ள சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆதாளியம்மனுக்குத் தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றியும் வழிபடுகின்றனர். அருகில் விபூதித் தட்டும் வைத்துவிட்டனர்.
தீர்த்தங்கரர் தலைக்கு மேல் இருந்த சகல பாஷணம் சந்திர ஆதித்யம், நித்திய வினோதம் ஆகிய முக்குடைச் சின்னமும் இருபுறமும் இருக்கும் கவரி வீசும் சாமரேந்திர இயக்கர் உருவங்களும் அப்படியே உள்ளன.
பெயர் மாறிய /மாற்றிய தீர்த்தங்கரர்கள்
1. திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அய்யம்பாளையம் அருகில் ஐவர்மலை என்ற மலை உள்ளது. அது சங்க இலக்கியம் புகழும் அயிரைமலை. அங்கு வரகுணபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டின் (870) பார்கவ தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. மற்றும் 16 தீர்த்தங்கரர் சிற்பங்களும் உள்ளன. அவற்றின் கீழ் அந்த சிற்பம் யாரால் செய்விக்கப்பட்டது என்பது ஸ்ரீஅச்சணந்தி செயல், ஸ்ரீஇந்திரசேனன் செயல் என்று வட்டெழுத்தில் கல்வெட்டும் உள்ளது. அதை அறியாமலும் புரியாமலும் அவற்றின் கீழ் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், துரோணாச்சாரியார், சைந்த மகரிஷி, தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், சேரன், சோழன், பாண்டியன், கிருஷ்ணர், திருவள்ளுவர், திருதராட்டிரன் என்று மனம் போனபடி எழுதியுள்ளனர்.
2. கரூர் அருகில் உள்ள புலியூரில் சாலையோரம் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அதை அப்பகுதி மக்கள் முனி அப்புச்சி என்று கூறுகின்றனர்.
3. சேலம் மாவட்டம் மேச்சேரியிலிருந்து மேட்டூர் செல்லும் சாலையில் பொட்டனேரி என்ற ஊர் உள்ளது. பெருமாள் கோயிலுக்கு வடக்கே காட்டில் உள்ள தீர்த்தங்கரர் உருவத்தை உள்ளூர் மக்கள் சித்தர் சாமி என்று அழைக்கின்றனர்.
4. திருப்பூர் மாவட்டம் உடுமலை _ பல்லடம் வழியில் 15ஆம் கிலோ மீட்டரில் வேலாயுதன் புதூரிலிருந்து நெகமம் செல்லும் சாலையில் பெரியபட்டி உள்ளது. அங்கு சுப்பிரமணியர் கோயில் எதிரே சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. ஊர் மக்கள் அதை தருமராஜா என்று கூறுகின்றனர்.
5. ஈரோடு நகரில் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான வடகீழ் மூலையில் வேலி ஓரம் சமண தீர்த்தங்கரர் சிலை இருந்தது. மக்கள் அதை மொட்டைப் பிள்ளையார் என அழைத்தனர்.
6. நாமக்கல் மாவட்டத்தில் அர்த்தநாரி பாளையம், திருச்செங்கோடு, மோகனூர் போன்ற பல இடங்களில் சமணக் குகைகள் பல உள்ளன. இவற்றைப் பஞ்ச பாண்டவர் கோயில் என்றே மக்கள் அழைக்கின்றனர்.
தலைவெட்டி முனியப்பன்
சமண தீர்த்தங்கரர் சிலைகள் மட்டுமல்ல புத்தர் தலையும் வெட்டப்பட்டள்ளது. சேலம் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமர்ந்த நிலையில் ஒரு புத்தர் சிலை இருந்தது. யாரோ புத்தர் தலையை உடைத்துவிட்டனர். இதை அறிந்த சிலர் புத்தர் தலையை இரும்புத் தகட்டில் பொருத்தி வைத்து ஒரு சிறு கோயில் கட்டி உள்ளே புத்தர் சிலையை வைத்துவிட்டனர். புத்தருக்கு தலைவெட்டி முனியப்பன் என்ற பெயரும் வைத்துவிட்டனர். இன்று அந்தப் பெயராலேயே புத்தர் அழைக்கப்படுகிறார்.
ஏ.டி.ஹெச்.டி’ பிரச்னைக்குத் தீர்வு காணும் குங்குமப்பூ!
ஏ.டி.ஹெச்.டி (ADHD) எனப்படும் அட்டென்ஷன் டெஃபிசி ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder) குறைபாட்டை குணப்படுத்த குங்குமப்பூவைப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிற டெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.
குழந்தைகள் வளரிளம் பருவத்தினர் மத்தியில் பொதுவாகக் காணப்படும் ஏ.டி.ஹெச்.டி, ஒரு நரம்பியல் உளவியல் குறைபாடு. இதைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்துகளுக்கு இணையாகக் குங்குமப்பூவும் அதன் அறிகுறைகளைக் கட்டுப்படுத்துவதாக இந்தப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், குங்குமப்பூவில் மனச்சோர்வைக் கட்டுப்படுத்தும், நினைவாற்றலை மேம்படுத்தும் குணங்கள் இருக்கின்றனவாம்.
விபூதிப் பூச்சில் தீர்த்தங்கரர்கள்:
சில இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகட்கு உள்ளூர்ப் பூசாரிகள் விபூதிப் பூச்சுப் பூசியுள்ளதைக் காண்கிறோம்.
கோயம்புத்தூரில் வடக்கே கோயில்பாளையம் என்ற ஊர் உள்ளது. இலக்கியங்களில் கவசை என்றும் அரசு ஆவணங்களில் சர்க்கார் சாமக்குளம் என்றும் வழங்கப்படும் ஊர். அவ்வூரில் உள்ள ஒரு மேடையில் விநாயகருக்கு அருகில் சமண தீர்த்தங்கரர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விநாயகருக்குப் பூசை செய்யும் உள்ளுர் அர்ச்சகரான பண்பாரம் சமண தீர்த்தங்கரர் சிலைக்கும் விபூதி பூசிப் பூசை செய்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை _திங்களூர் சாலையில் மமுட்டித் தோப்பு என்ற இடத்தில் முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் (ஆதி நாதர்) கோயில் உள்ளது. அங்குள்ள ரிஷப தேவருக்கும் விபூதிப் பூச்சுப் பூசப்பட்டுள்ளது.
இருந்து மறைந்த சமணர் சிலைகள்
சில கொங்கு வரலாற்று நூல்களின் சமணச் சிலைகள் உள்ளதாகக் குறிப்பிடும் இடங்களில் இன்று சமணச் சிலைகள் காணப்படவில்லை.
1934இல் திருச்செங்கோடு அ.முத்துசாமி கோனார் எழுதிய கொங்குநாடு என்னும் நூலில்,
தாராபுரத்துக்கு வடக்கே ஒரு பர்லாங் தூரத்தில் வயலிடையே ஒரு திட்டில் யட்சி, சந்திர பிரப தீர்த்தங்கரர் திருஉருவம் 5 அடி உயரத்தில் நல்ல வேலைப்பாடாகவும், அருகே சிலைகள் உடைந்தும் அநேக சிலைகள் புதைந்தும் உள்ளன.
என்று எழுதியுள்ளார். ஆனால், அவ்விடத்தில் அந்தச் சிலைகள் எதுவும் இல்லை.
1950ஆம் ஆண்டு கோவைக்கிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய கொங்குநாடும் சமணமும் என்ற நூலில் காங்கேயம் சந்தை மேட்டிலும், பழங்கரை கிராமத்திலும் சமணச் சிலைகள் இருப்பதாக எழுதியுள்ளார். ஆனால், அங்கு இன்று சமண சிலைகள் எதுவும் இல்லை.
கொங்கு நாடெங்கும் பரவலாக வாழ்ந்த சமணர்கள் இன்று ஈரோடு மாவட்டம் பூந்துறை, விசயமங்கலம் ஆகிய இரண்டு ஊர்களில் மட்டும் வாழ்கிறார்கள். எந்த ஆதரவும் அற்ற நிலை. ஆதரிப்பார் இன்றி வெளியேறிய கொங்குச் சமணர்களின் அடையாளம் பாலக்காடு, வைநாடு, கருநாடக கெல்லிசூர், இராமநாதபுர அனுமந்தக்குடி, பரமக்குடி பகுதியில் காணப்படுகின்றன. பலர் சமணத்தை மறந்து மொட்டை வேளாளர் என்ற பெயரில் பிற சமுதாயத்தோடு இணைந்துவிட்டனர்.
- உண்மை இதழ், 1-15.7.19
வியாழன், 19 மார்ச், 2020
‘‘கடவுளை மற! மனிதனை நினை!'' என்றார் தந்தை பெரியார் அதற்கு ஏற்ற எடுத்துக்காட்டு இந்தப்படமே!
மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் முகத்தில் பக்தர்களிடமிருந்து நோய்த் தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிந்துகொண்டும், சில நிமிடங்கள் இடைவெளி விட்டு டி.எல்.எஃப். என்ற நிறுவனம் கொடையாக வழங்கிய கிருமிநாசினி தெளிப்பானை உடலில் தெளித்துக்கொண்டும் பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுக்கும் படம்.
- விடுதலை நாளேடு, 14.3.20
வெள்ளி, 13 மார்ச், 2020
தீண்டாதார் கல்வி
22.11.1931 - குடிஅரசிலிருந்து....
தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக் கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும் தேசியவாதிகளும் தேசியப் பத்திரிகைகளும் பிரசாரம் செய்துகொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் பொதுப் பள்ளிகூடங்களில் கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப்பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள் என்பது விளங்கும், சென்னை சர்க்கார் 1930-31 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப் பற்றி வெளியிட்டிருக்கும் அறிக்யில் தீண்டப் படாதார்களுக்காக 1784 தனிப்பள்ளிக் கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இவ்வாறு தீண்டப் படாதார்களுக்கெனத் தனிப்பள்ளிக்கூடங்கள் வைப்பதற்குக் காரணம் கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங்கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கமுடியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இதிலிருந்த நமது தேசநிலை எவ்வாறு இருக்கிறதென்பதை அறிந்துகொள்ளலாம். இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத்தொகுதியில் நின்று எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பரோடா அரசாங்கத் தார் தீண்டாதார்களும் சமூக சமத்துவம் பெறுவதற்குச் சாதகமாக அங்குள்ள பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களை தாராளமாகக் சேர்த்துப் படிப்பிக்க உத்திரவு பிறப்பித்திருக்கின்றனர். ஆனால், நமது நாட்டில்,. பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைச் சேர்க்க மறுக்கக்கூடாது என்ற உத்திரவு இருந்தும், அதைக் கவனிப்பாரும், அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் கவலையுள்ளவர்களும் இல்லை. ஏனெனில், கல்வியிலாகாவில் உள்ள அதிகாரிகளும், பள்ளிக்கூடத்தில் உள்ளவர்களும் பார்ப்பனர்களாக இருப்பதே காரணமாகும், கிராமாந்தரங்களிலும், நகரங்களிலும், பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைத் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால், 1784 பள்ளிக் கூடங்கள் தனியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே. அவைகளுக்காகும் செலவைச் கொண்டு இன்னும் கல்வியை அதிகமாக விருத்தி செய்யவும் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடங்கள் வைக்கவும் முடியுமல்லவா? இதற்காக யார் முயற்சியெடுத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.
- விடுதலை நாளேடு, 13.3.20
"சர்வம் பார்ப்பன மயம்" திருவாங்கூர்
22.11.1931 - குடி அரசிலிருந்து....
புதிய மகாராஜா பட்டத்திற்கு வந்தவுடன் திருவாங்கூர் சமஸ்தானக் குடிமக்களுக்கு இனியேனும் உண்மையான சுதந்திரம் உண்டாகும் என்று நம்பினோம். இதற்கு அறிகுறியாக கப்பற் பிரயாணம் செய்து அந்நியநாடு சென்று வந்தவர்கள் உள்ளே போகக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்த கோயில்களுக்குள் அவர்களும், போகலாம், என்று முன்னிருந்த தடை நீக்கப்பட்டது. இதைக்கொண்டு, இனி திருவாங்கூர் மக்கள் வைதிகக் கொடுமையிலிருந்தும் நீக்கப்படுவார்கள்போலும் என்றும் சந்தோஷப்பட்டோம். ஆனால், இப்பொழுது சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களை மேன்மை தங்கிய மகராஜாவுக்கு அரசியல் ஆலோசனை கூறும் உத்தியோகதராக நியமிக்கப்பட்ட திலிருந்து கப்பலேறி அந்நியநாடுகளுக்குச்சென்று வந்த சர்.சி.பி.ரா. அய்யர் அவர்கள் கோயிலுக்குள் போவதற்கு தடை இருக்கக் கூடாது என்பதற்காகவே முன் இருந்த தடை நீக்கப்பட்டது என்றே நினைக்க வேண்டியதிருக்கிறது. அன்றியும் இப்பொழுது இருக்கும் மகாராஜா அவர்கள் ஒரு சமயம் சர். சி.பி.ரா. அய்யர் அவர்களுடன் இங்கிலாந்து முதலிய தேசங்களுக்குப் பிரயாணம் செய்து வந்தால், அப்பொழுது மகாராஜா கோயிலுக்குள் போவதற்கு யாதொரு தடையுமில்லாமலி ருப்பதற்கு முன்னேற்பாடாக இக்காரியம் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றும் நினைக்கவேண்டியிருக்கிறது.
அன்றியும் இப்பொழுது பட்டத்திற்கு வந்திருக்கும் மகாராஜா அவர்கள் காலத்தில் முன்னிருந்ததைக் காட்டிலும் இன்னும் பார்ப்பன ஆதிக்கம் அதிகப்பட்டு உறுதிப்படும் என்றும் கருதி திருவாங்கூர் பிரஜைகளின் சார்பாக இரக்கப்படுகிறோம், இவ்வாறு நடக்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக மகாராஜா பட்டத்திற்குவந்தவுடன், முன்பே திரு. சுப்பிரமணிய அய்யர் என்னும் பார்ப்பனர் திவானாயிருக்க, சர்.சி.பி.ராமசாமி அய்யரும் அரசியல் ஆலோசனை கூறும் அதிகாரியானார். ஆகவே, இப்பொழுது திருவாங்கூர் ராஜ்யம் இரண்டு பார்ப்பன அதிகாரிகளின் வசம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது.
திருவாங்கூர் சமஸ்தானம் பார்ப்பனர்களின் அதிகாரத்தில் அகப்பட்டு, அச்சமஸ்தான மக்கள் பார்ப்பனியத்தால் நசுக்குண்டு கிடப்பது இன்று அல்லது நேற்று முதல் நடைபெறும் விஷயம் அல்ல; நூற்றுக்கணக்கான வருஷங்களாகவே இப்படி இருந்து வருகின்றது. இதைக் கீழ்வரும் விஷயத்தால் தெளிவாய்த் தெரிந்து கொள்ளலாம். 1817 ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டுவரையிலும் திருவாங்கூர் திவான் உத்தியோகத்தை 24 பேர் வகித்து வந்திருக்கின்றனர். இந்த 24 பேர்களில் திரு. நாணுப்பிள்ளை என்பவர் 1877 முதல் 1880 வரையில் 3 வருஷமும், இப்பொழுது சென்னை அரசாங்கத்தில் சட்ட மந்திரியாய் இருக்கும் திரு.கிருஷ்ணன் நாயர். 1914 முதல் 1920 வரை 6 வருஷமும், திரு வாட் என்னும் அய்ரோப்பியர் 1925 முதல் 1929 வரை 4 வருஷமும் திவானாக இருந்திருக்கின்றனர். இவர்கள் திவானாக இருந்த 13 வருஷங்கள் போகபாக்கி 101 வருஷங்களும் பார்ப்பனர்களே திவான்களாக இருந்து வந்திருக்கின்றனர். இந்தக் கணக்கைப் பார்த்தாலே திருவாங்கூர் ராஜ்யம் எப்பொழுதும் பார்ப்பனமயம் என்பதில் ஏதேனும் தவறு உண்டா?
சுதேச சமஸ்தானமாகவும், பார்ப்பன ஆதிக்க ராஜ்யமாகவும், பத்மநாபசுவாமி என்னும் கடவுளின் ராஜ்யமாகவும் இருக்கும் அந்தச் சமஸ்தானம் எந்த நிலையிலிருக் கிறது? 40 லட்சம் ஜனத்தொகையுள்ள அந்த சமஸ்தானத்தில் சுமார் 20 லட்சம் பேர் முகமதியர், கிறிஸ்தவர் முதலிய அந்நியமதத்தினராகவும், சுமார் 12.5 லட்சம் மக்கள் தீண்டக் கூடாதவர்களாயும், பார்க்கக் கூடாதவர்களாகவும், தெருவில் நடக்கக் கூடாதவர்களாகவும் இருக்கின்றார்கள் இவை போக சுமார் 7.5 லட்சம் இந்துக்கள் என்பவர்களே பத்மநாபக்கடவுளின் அரசாங்கமாகிய இந்து ராஜ்யத்தில் இருக்கிறார்களென்றால் இதை என்ன ராஜ்யம் என்று சொல்லுவது? பார்ப்பனர்களின் அதிகாரத்தின் காரணமாக - பார்ப்பனீயமாகிய இந்து மதக் கொடுமை காரணமாக. இந்துமதத்திலிருந்து விலகியவர்கள் தான் இப்பொழுது அச்சமஸ்தானத்தில் இருக்கும் 20 லட்சம் வேறு மதக்காரர்களும் என்பதை யார் இல்லை யென்று சொல்ல முடியும்? இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் தானே இன்று 12.5 லட்சம் பேர் தீண்டத்தகாதவர் களாகவும், பார்க்கக் கூடாதவர்களாகவும், தெருவில் நடக்கக் கூடாதவர்களாகவும், மிருகத்திலும் கேடாக மதிக்கப்பெற்று கொடுமை செய்யப் ட்டுக் கிடக்கிறார்கள்? இவர் களும் அந்நிய மதத்தினர்களாக ஆகி விட்டால் இவ்வளவு கொடுமைக்கு ஆளா வார்களா?
இந்த இழிவான நிலையில் உள்ள இச்சமஸ்தானம், எல்லா மக்களும் கண் விழித்துச் சுயமரியாதை உணர்ச்சி பெற்று வருகிற இந்நாளிலுமா பார்ப்பனர் வசமும் பார்ப்பனிய வசமும் சிக்கித் துன்பப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்? என்ற உணர்ச்சியுடன் திருவாங்கூர்ப் பிரஜைகள் அனைவரும், சர். சி.பி.ரா. அய்யரின் நியமனத்தைச் சரியான காரணங்களுடன் கண்டித்துத் தீர்மானங்கள் செய்வதை நாம் பாராட்டுகிறோம்.
இதோடு மற்றொரு வதந்தியும் உலாவுகிறதென்று அறிகிறோம். அதாவது, இப்பொழுதுள்ள திவான், திரு.சுப்பிரமணிய அய்யர் திவான் பதவியை விட்டு விலகியவுடன், அப்பதவிக்கு, சென்னையில் உள்ள திரு.டி.ஆர்.வெங்கட்டராம சாஸ்திரி அவர்களும், மற்றும், இரண்டு பெரிய இந்திய அரசாங்க உத்தியோகஸ்தர்களும் முயற்சி செய்கிறார்களாம். இவ்வாறு முயற்சி செய்து கொண்டிருக்கும், திரு.டி.ஆர்.வெங்கட்டராம சாஸ்திரியார் அவர்களோ, அல்லது வேறு ஒரு சாஸ்திரியார் அல்லது அய்யர் அல்லது அய்யங்கார் அல்லது ஆச்சாரியாரோ திவானாக வந்தால் திருவாங்கூர் ராஜ்யம் இன்னும் மோசமான பார்ப்பன ராஜ்யமாக ஆகவேண்டி யதைத் தவிர வேறு வழியில்லை என்பது உறுதியான விஷயமாகும். உதாரணமாக சர்.சி.பி.ராஅய்யர் அவர்களின் யோக்கியதையைச் பார்த்தாலே இது விளங்கும். முதலாவது, திரு. அய்யர், தன் அதிகாரத்தால் செய்யக்கூடிய எந்த உத்தியோகங்களையும், நன்மைகளையும், தன் இனத்தார்களாகிய பார்ப்பனர்களுக்கு மாத்திரம் செய்யக்கூடியவர் என்பது நாம் அறிந்த சங்கதி, இரண்டாவது, எல்லாமக்களும் சம சுதந்திரம் பெற்றுச் சகோதரர்களாய் வாழ வேண்டும் என்னும் சமதர்மக் கொள்கைக்கு எதிரான வருணாசிரம தரும வகுப்பினரைச் சேர்ந்தவர் என்பது யாவருக்கும் தெரிந்த செய்தி மூன்றாவது, அவர் எப்பொழுதும் பிரிட்டிஷ்காராருக்குச் செல்லப்பிள்ளையாக நடந்து தன் காரியங்களைச் சாதித்துக் கொள்ளக்கூடியவர், என்பது அவருடைய அரசியல் நாடகம் அறிந்தவர்களுக்கு நன்றாய்த் தெரியும். இதனால் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து சுதேச சமதானத்திற்குப் போகும் எந்த பார்ப்பனரும், பெரும்பாலும், இதே மாதிரியான யோக்கியதை உள்ளவராகத்தான் இருப்பார்கள். ஆகையால் திவாங்கூர் பிரஜைகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு இத்தகைய விஷயங்களை, இந்திய அரசாங்கத்தாருக்கும், மேன்மை தாங்கிய மகாராஜாவுக்கும் எடுத்துக்காட்டிப் பரிகாரம் தேடிக்கொள்ளும்படி அவர்களுக்கு நினைப்பூட்டி, நாமும் இந்தச் சமஸ்தானம் பார்ப் பனருக்கும், பார்ப்பனியத்திற்கும் அடிமைப்பட்டு வருவதைப் பலமாகக் கண்டிக்கிறோம்.
- விடுதலை நாளேடு 13 3 20
செவ்வாய், 10 மார்ச், 2020
இனமானப் பேராசிரியர் வரலாற்று நிகழ்வுகள்
இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்பெரியார் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, அவரது கொள்கைகளை தனது இறுதி மூச்சு உள்ளவரை பேசியும், எழுதியும் வந்தார்.
அவர் கடந்து வந்த பாதையும், வரலாற்றைப்பற்றி சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.
19.12.1922 - கல்யாணசுந்தரம் - சொர்ணம் இணை யரின் மூத்த மகனாக 'இராமையா' (அன்பழகன்) பிறந்தார்.
1932 வரை- தொடக்கக் கல்வி
1933 - "குடந்தை மாமாங்கம் எதிர்ப்பு" - சிங்கை கோவிந்தராசன் தலைமையில் "மடமையை வளர்க்காதீர். மாமாங்கம் போகாதீர்" என்று பரப்புரை.
1939 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், 'இன்டர்மிடியேட்' வகுப்பில், 'இயற்பியல், வேதியியல், பொருளாதாரம்' ஆகிய பாடங்களைப் பயிலுதல்.
1942 வரை- தென் இந்திய நல உரிமைச் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் நடைபெற்ற மாநாட்டில் சொற் பொழிவு, அண்ணாவின் பாராட்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஹானர்ஸ்) தேர்ச்சி. மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு இராமையா என்ற பெயரை அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார்.
1943 - திருவாரூர், விசயபுரத்தில் இஸ்லாமியர் சங் கத்தில், சிந்து மாநிலத்தின் முன்னாள் முதல்வர், மறைந்த சிக்கந்தர் ஹயத்கான் நினைவு நாள் கூட்டத் தில் அண்ணாவுடன் கலந்து கொண்டு சொற்பொழிவு.
1943 - சிதம்பரத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி, போர் ஆதரவு மாநாட்டில் பெரியாருடன் சொற்பொழிவு.
1944 - கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் (பிப்.19, 20) மாநாட்டில் ஆற்றிய உரை, பேரறிஞர் அண்ணாவின் பாராட்டுடன், திராவிட நாடு இதழில் தமிழா கேள் என்ற தலைப்பில் வெளியானது.
1944 - பி.ஏ.,ஆனர்ஸ் பட்டம் பெற்றார். திருவாரூரில் 'தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்' கலைஞர், பேராசிரியரை அழைத்துப் பேசச் செய்தார்.
தந்தை பெரியார் கொள்கை வழியில் 98 வயதுவரை வாழ்ந்த
இனமான பகுத்தறிவுப் பேராசிரியர் க.அன்பழகன்
1944 - சேலம், நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயர் திராவிடர் கழகமாக மாற்றம் பெற்றது - 'சண்டே அப்சர்வர்'
1944 - பி.பாலசுப்பிரமணியம் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையைத் தமிழில் மொழி பெயர்க்க பேரா சிரியரை அண்ணா பணித்து அதனை செவ்வனே செய்து முடித்தார்.
21.1.1945 - பெரியார் தலைமையில் பேராசிரியர் - வெற்றிச்செல்வி திருமணம்.
1945 - திராவிட இளைஞர் தூத்துக்குடி மாநாட்டில் தலைமை உரை, திருச்சி, திராவிடர் கழக மாநில மாநாடு பங்கேற்பு.
1946 - மதுரையில் கருப்புச் சட்டை மாநாட்டில் பேராசிரியர் பேச்சு. இம் மாநாட்டுப் பந்தல் எதிரிகளால் தீயிடப்பட்டது.
1947 - நெல்லையில் தி.க. மாநாட்டில் 'திராவிட நாடு' படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.
1947 - கடலூரில் திராவிட நாடு பிரிவினை மாநாட் டில் திரு.வி.க.வுடன் பங்கேற்பு. 29.10.1947 - முதல் மகள் செந்தாமரை பிறப்பு.
1948 - ஈரோடு திராவிடர் கழக மாநில சிறப்பு மாநாட்டில் பங்கேற்பு.
1948 - கோவை முத்தமிழ் மாநாட்டில் பங்கேற்பு.
1948 - புதுவாழ்வு இதழ் ஆசிரியர் 17.9.1949 - தி.மு.க. தொடங்கப் பெற்று, முக்கியப் பங்கேற்று சிறப்புரை. 26.9.1949 - இரண்டாவது மகள் மணமல்லி பிறப்பு
1951 - தி.மு.க. முதல் மாநில மாநாடு, சென்னை தீவுத்திடல் பிப்ரவரி - பேராசிரியர் முழக்கம்!
1956 - திருச்சி - தி.மு.க. மாநாடு, தமிழ் இலக்கியத்தில் அரசியல் கருத்துரை - பேராசிரியர் பேச்சு
1957 - நேருவிற்குக் கருப்புக்கொடி காட்டி கைதாகி ‘5 நாள்கள் சிறைவாசம்' சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெறல்.
1959 - தி.மு.க. தொழிற்சங்கச் செயலாளராகப் பொறுப்பெற்று 1961 வரை பணியாற்றினார்.
1962 - எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். சென்னை - செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1964 - இந்தி எதிர்ப்பு மறியலில் ஈடுபட்டு 6 திங்கள் சிறைத் தண்டனைப் பெற்றார்.
1967 - சனவரி 1, தி.மு.க. நான்காவது மாநில மாநாடு விருகம்பாக்கம், சென்னை
1967 - திருச்செங்கோடு நாடாளுமன்றத்திற்கு திரு. காளியண்ண கவுண்டரை எதிர்த்து வெற்றி பெற்றார்.
1968 - இலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டுக்கு தி.மு.க. சார்பாக, கலந்து கொள்ள மத்திய அரசு பேராசிரியரைத் தேர்ந்தெடுத்தது. செல்லும் வழியில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா முதலான நாடுகளையும், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த அண்ணாவையும் கண்டு திரும்பினார்.
1969 - அண்ணா மறைவுற்றார் (3, பிப்ரவரி).
1969 - திருமதி வெற்றிச் செல்வி மறைவு (12.11.1969)
1971 - சென்னை புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்வு. டாக்டர் செந்தாமரை- டாக்டர் சொக்கலிங்கம் (14.7.1971 ) மணவிழா.
1972 - மகள் டாக்டர் மணமல்லி -டாக்டர் சிவராமன் (8.9.1972) திருமணம்.
1975 - டிசம்பர் 29, தி.மு.க. அய்ந்தாவது மாநில மாநாடு, சேலம்.
1977 - புரசை சட்டமன்றத் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுதல் - மகன் அன்புச் செல்வன் - கல்யாணி திருமணம் (24.10.1977)
1978 - இந்திராகாந்திக்கு கருப்புக்கொடி காட்டி கைதாதல்.
1978 முதல் - தி.மு.க.வின் பொதுச் செயலாளர் (18.6.1978)
1980 - புரசை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980 டிசம்பர்- தி.மு.க. மாவட்ட மாநாடு, ஈரோடு.
1981 சனவரி - தி.மு.க. மாவட்ட மாநாடு, திருவண்ணாமலை
1983 - ஈழத் தமிழருக்காகக் கலைஞரும், பேரா சிரியரும் சட்டமன்றப் பதவியைத் துறந்தனர்.
1983 - மீண்டும் தி.மு.க. பொதுச் செயலாளர் (25.6.1983) ஆகுல்.
1984 - பூங்கா நகர் சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றி.
1984 - தி.மு.க. வட்ட மாநாடு, கரூர்.
1986 - அரசியல் சட்டப் பிரிவு எரித்தமைக்காக (இந்தி திணிப்பை எதிர்த்து) 10 சட்டமன்ற உறுப் பினர்களின் பதவி பறிக்கப்பட்டது.
1988 - மூன்றாவது முறையாகத் தி.மு.க. பொதுச் செயலாளர் (2.2.1988)
1989 - அண்ணாநகர் தொகுதியில்வெற்றி பெற்று கலைஞர் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
1990 - தி.மு.க. ஆறாவது மாநில மாநாடு. திருச்சி மாநாட்டுத் திறப்பாளர்.
1991 - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார்
1991 டிசம்பர்- திராவிட இயக்கப் பவள விழா மாநாடு, மதுரை - மாநாட்டுத் திறப்பாளர்
1992 - நான்காவது முறையாக கழகப் பொதுச் செயலாளர் (2.6.1992)
1996 - தி.மு.க. எட்டாவது மாநில மாநாடு, திருச்சி.
1996 - சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி யில் போட்டியிட்டு வென்று கலைஞர் அமைச்சர வையில் மீண்டும் கல்வி அமைச்சரானார்
1997 - அய்ந்தாம் முறையாகக் கழகப் பொதுச் செய லாளர் (27.7.1997)
1997 - தி.மு.க. சிறப்பு மாநாடு, சேலம் மாநாட்டுத் திறப்பாளர்.
2000 - ஆறாம் முறையாகப் பொதுச் செயலாளர் (8.4.2000)
2001 - துறைமுகம் தொகுதியில் வெற்றி -மீண்டும் கல்வி அமைச்சர் ஆனார்.
2003 - ஏழாம் முறையாகக் கழகப் பொதுச் செயலாளர் (2.4.2003)
2006 - துறைமுகத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்டு நிதி அமைச்சரானார்.
2008 - எட்டாம் முறையாகக் கழகப் பொதுச் செயலாளரானார் (27.12.2008)
2011 - வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப் பினை இழந்தார்
2014 - ஒன்பதாம் முறையாக கழகப் பொதுச் செயலாளர் (9.1.2014)
2017 - முத்தமிழறிஞர் கலைஞர் உடல் நலிவுற்று இருந்தபோது கழக பொதுக் குழுவில் மு.க.ஸ்டாலின் அவர்களை கழகச் செயல்தலைவராக முன் மொழிந்தார்.
2018 - முத்தமிழறிஞர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த போது ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக் குழுவில் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவித்தார்.
2020 - உடல் நலிவுற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் 7.3.2020இல் மறைவுற்றார்.
மறைவுற்ற பேராசிரியர் என்றும் நமக்கு மங்காத ஒளியாவார்! பாடம் எடுக்கும் பாசறையின் மங்காத முழக்கம்! அவர் வரலாறாகி வழிகாட்டுவார்!
- விடுதலை நாளேடு 7 3 20
வெள்ளி, 6 மார்ச், 2020
பகுத்தறிவு : வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா?
சில வேப்பமரங்களில் திடீரென்று பால் போன்ற நீர் சுரக்கும். இதை மாரியாத்தாள் மகிமை என்று கூறி சூடம் கொளுத்தி வழி படுகின்றனர். இது அறியாமையின் அடை யாளம். இதற்கு எந்தவித தெய்வீகக் காரண மும் இல்லை.
பொதுவாக (இயல்பாக) வேப்பமரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்பமரத் திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப்பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே (அதைப் பிளந்து கொண்டு) இனிப்புப் பால் போன்று வடியும். இதைத்தான் பால் வடிகிறது என்கின்றனர்.
மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறை யும் போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும்.
இப்படி பால்வடிகின்ற மரங்கள், நீர்நிலை களின் அருகில்தான் இருக்கும் என்பது இந்த உண்மையை அய்யத்திற்கு இடமின்றி உணர்த்துகிறது. எல்லா வேப்ப மரங்களிலும் பால் வடிவதேயில்லை என்பதும், வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவ தில்லை என்பதும் இவ்வுண்மையைத் தெளி வாய் உணர்த்தும்.
எனவே, காரணம் புரியாததற்கெல்லாம் கடவுள் மகத்துவம் என்று கண்மூடி வாழ்வதைத் தவிர்த்து, காரணம் அறிந்து, அறிவு வழியில் செயல்படுவதே மனிதர்க்கு அழ காகும்.
- விடுதலை ஞாயிறு மலர், 22.2.20