பக்கங்கள்

பொதுவுடைமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுவுடைமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

பொதுவுடைமை இயக்கத்தினர் பாரதியை ஏற்கலாமா? - எதிர்வினை (96)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (96)

மார்ச் 16-31,2022

பொதுவுடைமை இயக்கத்தினர் பாரதியை ஏற்கலாமா?

நேயன்

இக்கடிதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது, பாரதி புதுவையில் இருந்தபோதே சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுதி, சென்னை அரசு டி.அய்.ஜி.யைப் புதுவைக்கு அனுப்பி பாரதியை விசாரித்து, அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இல்லை என்று தெரிந்து, அரசுக்குத் தெரிவித்த பிறகுதான் பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் பாரதி வந்ததாகக் கூறுகிறார் என்பதே. அரசியலை விட்டு அறவே ஒதுங்கி சட்டத்துக்குட்பட்டு அமைதியான பிரிட்டிஷ் குடிமகனாக வாழ ஒப்புக்கொள்கிறார். ஆங்கில ஆளுநர் நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறார்.

கடலூர் சிறைக்கு ரங்கசாமி அய்யங்கார் வந்து பாரதியைக் கண்டார். பின் ரங்கசாமியின் முன் முயற்சியால் அன்னிபெசன்ட், சி.பி.இராமசாமி அய்யர், நீதிபதி மணி அய்யர் ஆகியோர் பாரதியின் விடுதலை குறித்து ஆளுநரைச் சந்தித்து வேண்டினர். மாநில அரசு மீண்டும் டி.அய்.ஜி.யை அனுப்பியது. கீழ்க்கண்ட நிபந்தனைகளின் பேரில் பாரதி விடுதலை செய்யப்பட்டார். அவை,

நெல்லை மாவட்டத்தில் பாரதி விரும்பும் இரண்டு ஊர்களில் எதிலாவது ஒன்றில் மட்டுமே வாழ்க்கை நடத்த வேண்டும்.

பாரதியின் படைப்புகள், பேச்சுகள் ஆகியவற்றை முன்கூட்டியே குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பி அவற்றைத் தணிக்கை செய்த பின்னரே வெளியிட வேண்டும். அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் பாரதி நீங்கி விட வேண்டும். இந்த மூன்று நிபந்தனை-களையும் எழுத்துப் பூர்வமாகப் பாரதி ஒப்புக் கொண்ட பின்னர் மாவட்ட நீதிபதி 14.12.1918இல் பாரதியை விடுதலை செய்தார்.

பாரதியை ஆதரிப்போர் பார்வைக் கோளாறு

பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள், “ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி’’ என்ற பாரதி வரியால் பெரியார் ஈர்க்கப்பட்டு, ரஷ்யா சென்றார்’’ என்று தமது “சுயமரியாதை இயக்கம்’’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இது உண்மைக்கு மாறான பதிவு. பாரதியின் பாடலை “குடிஅரசு’’ மேலட்டையில் போட்ட பெரியார் 8.11.1925 முதல் நீக்கிவிட்டதோடு, அதன்பின் பாரதி பாடல்களைப் போடவில்லை. உண்மை இப்படியிருக்க 1931இல் பெரியார் ரஷ்யா சென்றது பாரதி பாடல் உந்துதலால் என்பது பிழை. பாரதி புரட்சியை ஆதரித்தவர் அல்ல என்பதையும் மேலே விளக்கிவிட்டேன். பெரியார் 1929 முதலே தமது சொந்த பொதுவுடைமைக் கருத்துகளை வெளியிடத் தொடங்கி, ரஷ்யா செல்கிறார்.

அடுத்து ஜீவா, “ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் விஞ்ஞானபூர்வமான நாஸ்திகனே’’ என்கிறார்.  இதைத்தான் மார்க்சியத்தின் அடிப்படைச் சித்தாந்தமும் கூறுகிறது. ஆனால், பாரதி போன்றவர்களுக்கு விதிவிலக்கு கொடுக்கிறார் ஜீவா.

‘ஜனசக்தி’ பொன்விழா மலரில் “நான் ஒரு நாஸ்திகன்’’ என்ற தலைப்பில் ஜீவா கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் பாரதியைப் பற்றி எழுதும் போது,

“நான் ஒரு நாஸ்திகனான கம்யூனிஸ்ட். அப்படியானால் ஆஸ்திக உணர்ச்சியுள்ள கம்யூனிஸ்டு களும் இருக்கிறார்களா? இருக்கக் கூடாது என்றில்லை. ஒரு மதத்திலும் நம்பிக்கையில்லாத நாஸ்திகர்களுக்கு மட்டும்தான் தொழிலாளர்களின் அரசியல் கட்சியாகிய கம்யூனிஸ்ட் கட்சியில் இடமுண்டு என்று கட்சியின் திட்டமோ, கட்சியின் ஸ்தாபன விதிகளோ திட்டவட்ட மாகக் கூறவில்லை. நேர்மாறாக, தொழிலாளர் கட்சி, மத நம்பிக்கைகளைப் பலாத்காரமாக எதிர்ப்பது தவறு என்று மார்க்சிய அறிஞர்கள் கூறியுள்ளனர்’’ என ஜீவா கூறுகிறார். இது மார்க்சியத்திற்கு எதிரான கண்ணோட்டமாகும்.

அது மட்டுமல்ல, ஜாதிக்கு எதிராய் சில வரிகள் தொடக்க காலத்தில் எழுதிய பாரதியை ஜாதி ஒழிப்பு வீரராய்க் காட்டும் ஜீவா, பெரியாரை ஜாதி ஒழிப்புப் போராளி என்று ஏற்க மறுக்கிறார். மறுப்பதோடு நிறுத்தி-யிருந்தாலும் குற்றமில்லை. அதையும் தாண்டி பெரியாரை கேவலமாக, நக்கலாகவும் விமர்சித்து கருத்துகள் கூறியுள்ளனார்.

“நான் ஜாதியை ஒழித்து விடுவேனென்று ஈ.வெ.ரா. கத்தியைக் கையில் எடுக்கிறார். நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதியப் பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக் கட்டிவிடு-கிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி சில்லரை பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்து விட முடியுமென்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்” என்று கூறியுள்ளார்.

இப்படி ஜீவாவிடம் விருப்பு _ வெறுப்புப் பார்வைகள் பல உண்டு. ஒரு சிறந்த பேச்சாளரான பொதுவுடைமைவாதியான ஜீவாவிடம் காணப்பட்ட இந்த நேர்மையற்ற நிலைகள்தான் பின்னாளில் வந்த பொது-வுடைமைவாதிகளுக்கும் தவறான வழியைக் காட்டிற்று எனலாம்.

ஜாதி ஒழிப்புக்கு பெரியார் ஆற்றிய பணிகள் கொஞ்சமா? ஊர் ஊராய் பரப்புரைகள். ஏராளமான மாநாடுகள், தியாகத்தின் உச்சத்திற்கே சென்று போராட்டங்கள் நடத்தியவர் பெரியார். அதற்காக ஏராளமான இன்னல்களை ஏற்றவர்கள் பெரியாரும் அவருடைய தொண்டர்களும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் புரையோடிக் கிடக்கும் ஜாதி உணர்வை சில பத்தாண்டுகளில் ஒழிக்க முடியவில்லை என்று எண்ணுபவன்தான் பைத்தியக்காரன். 10 ஆண்டுகளில் ஜாதியை ஒழிப்பேன் என்று பெரியார் எப்போதும் சொன்னதில்லை. ஆழ வேரோடி நிற்கும் ஜாதியை தகர்க்க முயன்று அதில் அவர் காலத்திலே பெருமளவு வெற்றியும் பெற்றார். பெரியாரின் போராட்டங்களும், பரப்புரைகளும் ஜாதிப்பற்றை, வெறியை பெருமளவிற்குத் தகர்த்துள்ளன. ஜாதி மறுப்பு மணங்கள் அதிக அளவில் செய்யப்படுவதே அதற்குச் சான்று. தமிழ்நாட்டில் ஜாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் போடுவது பெரும்பாலும் ஒழிந்துவிட்டது. தாழ்த்தப்-பட்டவர்கள் மற்றவர்களோடு சரிசமமாக வாழும் நிலை வந்துள்ளது. தமிழ்நாட்டை மற்ற வடமாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை எளிதில் விளங்கும்.

அப்படியிருக்க பெரியாரின் ஜாதி ஒழிப்பு முயற்சிகளைக் கொச்சைப்படுத்தி, ஜாதிக்கு எதிராய் நாலு வரி பாட்டு எழுதிவிட்டு, வர்ணாஸ்ரமத்தை வரிந்துகட்டிக்கொண்டு ஆதரித்த பாரதியை ஜாதி ஒழிப்பு வீரர் என்று கூறுவது எப்படிச் சரியாகும்?

பெரியார் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் ஜீவாவுக்கு இருந்த வெறுப்பின் வெளிப்-பாட்டினைத்தான் இது காட்டுகிறதே யன்றி, உண்மையான மதிப்பீட்டை அல்ல.

ஜாலியன்வாலாபாக் படுகொலையை உண்மையில் வன்மையாகக் கண்டித்தவர் வ.உ.சி. படுகொலையை ஆதரித்தவர் அன்னிபெசன்ட் அம்மையார். அன்னிபெசன்டை ஆதரித்தவர் பாரதி.

அது மட்டுமல்ல, இப்படுகொலை நடந்த-போது பாரதி புதுவையிலிருந்து கொண்டு ஆங்கில அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு விடுதலை பெற்று கடயத்தில் வாழ்ந்தார். இப்படி மன்னிப்புக் கடிதம் எழுதுவதில் சாவர்க்கருக்கு முன்னோடியாய் இருந்த பாரதியைப் போராட்ட வீரராகக் காட்டி, வ.உ.சி. வீர, தீர, தியாக வரலாற்றை மறைப்பதுதான் நடுநிலையா?

பொதுவுடைமைக் கொள்கையில் சிறிதும் உடன்பாடில்லாத வர்ணாஸ்ரமம், ஜாதி, மதவெறி, சனாதனம், பெண்ணடிமை, உடன்கட்டை, சமஸ்கிருதத் திணிப்பு, ஆதிக்கக் கட்டமைப்பு, தனியுடைமை போன்றவற்றை ஆதரித்த, ஓர் இந்துத்துவாவாதியை புரட்சி-யாளராய், முற்போக்காளராய் பொதுவுடைமை-வாதிகள் காட்டுவது வரலாற்றுப் பிழையுமாகும்!

மேலும், இப்படிப்பட்ட ஒரு சனாதன-வாதியை உயர்த்திக் காட்டுவதால் பொது-வுடைமைக் கட்சிக்கு என்ன பயன்?

“லெனினைப் பற்றி கன்னாபின்னா என்று பாரதி விமர்சித்திருந்தாலும், அவரை ஒரு கம்யூனிஸ்ட்டாய் பார்ப்பது, வர்க்க விடுதலை, ஜாதி மறுப்பு, பெண் விடுதலை என எல்லாவற்றுக்கும் தீர்வு கண்டுபிடித்து அதற்கான மருந்துகளை டப்பாக்களில் போட்டு வைத்திருக்கும் டாக்டர் பாரதியாக அவரைப் பார்ப்பது என்பதெல்லாம் அறிவுடைமை-யாகாது’’ என்று எழுத்தாளர் பாமரன் கூறியுள்ளதை பொதுவுடைமைவாதிகள் பகுத்தாய்ந்து சிந்தித்து, தங்கள் பாதையைப் பழுது நீக்கிச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும் என்பதே நமது தோழமை எதிர்பார்ப்பு.

(தொடரும்…)

பாரதியும் பொதுவுடைமையும் - எதிர்வினை (94) :

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (94) : பாரதியும் பொதுவுடைமையும்

பிப்ரவரி 16-28,2022

நேயன்

“கடயத்தில் மொத்தம் 30 பெரிய மிராசுதார்களும் பல சில்லரை நிலஸ்வான்களும் உள்ளனர். அவர்களாகவே வந்து ஏழைகளிடம் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தம் என்னவென்றால், ‘அதாவது எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி ‘தொழில் நிருவாக சங்கம்’ என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த்-தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில் (மதப்பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியன சம்பந்தமாகிய நானா வகைப்பட்ட கைத்தொழில்கள். அவை இந்தக் கிராமத்திற்கு மொத்தம் இவ்வளவு நடைபெற வேண்டுமென்றும், அத்தொழில்-களின் இன்னின்ன தொழிலிற்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்றும் மேற்படி தொழில் நிருவாகச் சங்கத்தார் தீர்மானம் செய்வார்கள். அந்தப்படி கிராமத்திலுள்ள நாம் அத்தனை-பேரும் தொழில் செய்ய வேண்டும். அந்தத் தொழில்களுக்குத் தக்கபடியாக ஆண் பெண் குழந்தை முதலியோர் இளைஞர் அத்தனை பேரிலும் ஒருவர் தவறாமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பிள்ளை பிள்ளை தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்தப்படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகளின் மேல் ஆணையிட்டு ப்ரதிக்ஞை செய்து கொடுக்கி-றோம். இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஏற்பட்ட விஷயத்தை எங்களில் முக்கியஸ்தர் கையெழுத்திட்டு செப்புப் பட்டயம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம். இங்ஙனம் ப்ரதிக்ஞை செய்து, இதில் கண்ட கொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் கிராமத்தில் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும், பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். ஒரு கிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து பின்னர் அதனை உலகத்தாரெல்லாருங் கைக்கொண்டு நன்மையடைவார்கள்.’’

பாரதியின் மேற்கண்ட கருத்துகளைக் கூர்ந்து நோக்கினால் கீழ்க்கண்ட கருத்துகளை (கொள்கைகளை) அவர் கொண்டிருந்ததும், வலியுறுத்தியதும் புலப்படும்.

1.            இரஷ்ய புரட்சியாளர் லெனின் வழி சிறந்த வழியல்ல.

2.            இந்திய முதலாளிகள் அய்ரோப்பிய முதலாளிகளைப் போல மோசமானவர்-கள் இல்லை.

3.            இந்திய முதலாளிகளின் உடைமைகளைப் பிடுங்க வேண்டும் என்பது நியாயம் ஆகாது. இதை நம் நாட்டு ஏழைகளே விரும்ப மாட்டார்கள்.

4.            ஏழைகளின் பசியைத் தீர்ப்பதற்குத்தான் நாம் வழிகாண வேண்டும். முதலாளி-களின் செல்வக் குவிப்பைப் பற்றி கவலைப்படக் கூடாது.

5.            ஒரு கிராமத்தில் உள்ள ஏழைகளும் பணக்காரர்களும் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்படி முதலாளிகள் யார் யார் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்.

6.            அவ்வாறு ஒதுக்கப்பட்ட வேலையை தொழிலாளர்களின் பிள்ளைகளும் தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டும்.

7.            இந்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று சத்தியப் பத்திரம் எழுதி வைக்க வேண்டும்.

8.            இந்த ஏற்பாட்டின் மூலம் எல்லா ஏழைகளுக்கும் வயிறார சோறு கிடைத்துவிடும்.

9.            இந்தத் திட்டத்தை எல்லா இடங்-களுக்கும் பரப்ப வேண்டும்.

இப்படிப்பட்ட கருத்துகளைக் கூறிய பாரதிதான் புரட்சியாளராம், பொதுவுடைமைப் போராளியாம். அவரைப் பொதுவுடைமை வாதிகள் போற்றிப் பாராட்டுகிறார்கள். இதைவிட பிற்போக்கான, முதலாளித்துவ ஆதரவு நிலை, தொழிலாளர் எதிர்நிலை வேறு இருக்க முடியுமா?

இது அப்பட்டமான ஆவண அடிமை முறை (Bonded Labour) அல்லவா? ஒரு தொழிலாளி-யின் தலைமுறையையே ஒரு குறிப்பிட்ட வேலைக்கு அடிமைப்படுத்துவது அல்லவா? இது வருணாஸ்ரம தர்மத்தின் மறு வடிவம் அல்லவா?

ஏழை ஏழையாய் இருக்க வேண்டும்; முதலாளி முதலாளியாய் இருக்க வேண்டும்; தொழிலாளியின் பிள்ளை படித்து உயர் பதவிகளுக்கு வரக் கூடாது; அவன் அப்பன் தொழிலையே தலைமுறை தலைமுறையாய் செய்ய வேண்டும்.

உழைப்பதற்குப் பதிலாய் வயிறு நிறைய சோறு கிடைக்கும். சோத்துக்கு உத்தரவாதம் தந்து தொழிலாளிகளை முதலாளிகளுக்கு அடிமையாக்கும் இந்தப் பாரதிதான் புரட்சிக்காரராம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இன்றைக்கும் பாரதியை புரட்சியாளர் என்றும், பொதுவுடைமைவாதி என்றும் பொது வுடைமைக் கட்சியினர் பாராட்டிப் பேசி வருவதுதான்.

வேதத்தையே படிக்காமல் வேதம் உயர்ந்தது என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் போற்றி வருவதைப் போன்ற ஓர் அறியாமையே _ பாரதியை புரட்சியாளர் என்பதும். பாரதியை முழுமையாகப் படித்துவிட்டு, ஏன், இதுவரை நான் எழுதியவற்றை முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, பொதுவுடைமைவாதிகள் தங்கள் உள்ளத்தைத் தொட்டுச் சொல்லத் தயாரா? இப்படிப்பட்ட ஒரு பிற்போக்கு வாதியை முற்போக்காளராய் உயர்த்திப் பிடிப்பது பொதுவுடைமை சித்தாந்தத்திற்கே செய்திடும் துரோகம் ஆகும்! எந்த ஒன்றையும் சரியாக அறியாமல், ஆய்வு செய்யாமல் பாராட்டுவது, போற்றுவது பொதுவுடைமை இயக்கத்தவருக்கு அழகு அல்ல.

ஒரு சிந்தனையாளர் வாழ்வில் பரிணாம வளர்ச்சி இருக்க வேண்டும். காந்தியார் வாழ்வில்கூட, தான் தொடக்க காலத்தில் கொண்டிருந்த  பல கருத்துகளை, பின்னாளில் மாற்றிக்கொண்டார்.

சமூகநீதி, இடஒதுக்கீட்டை பின்னாளில் ஆதரித்தார். ஆரிய பார்ப்பனர்கள் வேதந்தானே ஓத வேண்டும். ஸ்டெதாஸ்கோப் ஏன் எடுக்க வேண்டும் என்று கேட்டார். இராமராஜ்ஜியம் பேசிய காந்தி பின்னாளில் மதம் அரசியலில் கலக்கக் கூடாது என்றார். இது பாராட்டப்பட வேண்டிய கொள்கை வளர்ச்சி.

இராமலிங்க வள்ளல், 5 திருமுறைகள் முடித்த பின் ஆறாம் திருமுறை எழுதிய காலத்தில் புரட்சிச் சிந்தனைகளை அதிகம் பேசினார். இது அவரது கொள்கை, சிந்தனையில் பரிணாம வளர்ச்சி. இப்படி உலகில் பலரைச் சொல்லலாம்.

ஆனால், பாரதி தொடக்க காலத்தில் புரட்சியாளராய் கருத்துகளைக் கூறிவிட்டு, இறுதிக் காலத்தில் சனாதனவாதியாய், பிற்போக்குவாதியாய், ஆதிக்கவாதியாய் மாறிப் போனார். இதுதான் கண்டிக்கப்பட வேண்டிய மாற்றம்.

ஆக, பாரதி வர்ணாஸ்ரமவாதி; சனாதனவாதி, பெண்ணடிமை, உடன்கட்டை ஏறுதலை ஆதரித்தவர்; முதலாளித்துவத்தை ஆதரித்து, கொத்தடிமை முறையை வலியுறுத்தியவர்; பிற மத வெறுப்பும், இந்து மத வெறியும் கொண்டவர்; சமஸ்கிருதப் பற்றும், ஆரிய மேலாண்மையில் நாட்டமும் கொண்டவர்.

உண்மை இப்படி இருக்க ஒரு சில வரிகளைப் பிடித்துக்கொண்டு உண்மைக்கு மாறாய் ஏற்றிப் போற்றுவது _ ஒன்று, அறியாமை அல்லது மோசடிச் செயலேயாகும்!

(தொடரும்…)

பாரதியும் பொதுவுடைமையும் - எதிர்வினை (93)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (93)

பிப்ரவரி 1-15,2022

பாரதியும் பொதுவுடைமையும்

நேயன்

 

 

பாரதி பொதுவுடைமைவாதி என்று, பொதுவுடைமைவாதிகளே தூக்கிப் பிடிப்பது-தான் வியப்புக்குரியது; நகைப்புக்குரியது.

நூறு மனிதர்களில் ஒரே ஒருவன்தான் பொதுநலத்தைப் பற்றிச் சிந்திக்கிறான். ஆயிரத்தில் ஒருவன்தான் தன்னைப்போலவே பிறருக்கும் உணர்வுண்டு என்று எண்ணுகிறான். பத்தாயிரத்தில் ஒருவன்தான் எல்லோரும் சமம்,  எல்லோரும் பொது என்கிற உணர்வு கொள்கிறான். அப்படி பத்தாயிரத்தில் ஒருவன்தான் பொதுவுடைமைவாதியாக உருவாகிறான். அப்படிப்பட்ட பொதுவுடை-மைவாதிகளே சிலவற்றில் தவறான புரிதல் கொண்டுள்ளதை வரலாறு நெடுகக் காண முடியும்.

குறிப்பாக இந்தியாவில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசியவர் பெரியார். ஆனால், பெரியார் ஒரு வறட்டுச் சித்தாந்தி என்றும். அவருக்குச் சரியான பொருளியல் பார்வை இல்லை என்றும். வருணபேதம் வர்க்கபேதம் ஒழிந்தால் சரியாகிவிடும் என்றும் பல்லாண்டு காலம் நம்பியும் பேசியும் வந்தனர். ஆனால், தந்தை பெரியார் சமதர்மமும், பொதுவுடை-மையுமே இந்த மண்ணுக்கு ஏற்றது என்பதை இப்போது புரிந்து கொண்டுவிட்டனர்.

அதேபோல், பாரதி பாடிய சில புரட்சி வரிகளைப் பிடித்துக் கொண்டு, அவரை புரட்சியாளர் போல், பொதுவுடைமைவாதி போல், சமதர்மவாதி போல் காட்டிப் பாராட்டி வருகின்றனர். உண்மையான புரட்சிவாதியான பாரதிதாசன் அவர்களைப் புறக்கணித்து வருகின்றனர்.

இவர்கள் பிடித்துக்கொண்டு நிற்கும் சில புரட்சி வரிகள் கூட சில காரணங்களுக்காக எழுதப்பட்டவை என்பதை இதற்கு முன் விளக்கிவிட்டேன். தமிழை உயர்த்திப் பாடியது, மீசை வைத்தது எல்லாம் தேவைக்கும், சூழலுக்கும், நிர்ப்பந்தத்திற்குமாகவே செய்யப்-பட்டவை என்பதை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு தெளிவுபடுத்தியுள்ளேன்.

மேலும், அவர் ஒவ்வொன்றிலும் தொடக்க காலத்தில் புரட்சியாளராகவும், முற்போக்கு-வாதியாகவும் இருப்பவரைப் போல் எழுதி-விட்டு, இறுதிக் காலத்தில் அதற்கு முற்றிலும் எதிராக, பிற்போக்கான நிலையில், ஆரிய இனவுணர்வுடனும், சமஸ்கிருத வெறியுடனும் பிற மத வெறுப்புடனும், வருணாஸ்ரமப் பற்றுடனும், பெண்ணடிமைச் சிந்தனையுடனும் எழுதினார் என்பதை ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் இதுவரை விளக்கி எழுதிவிட்டேன்.

உண்மை இப்படியிருக்க, அரைகுறையாக சில வரிகளை எடுத்துக்கொண்டு, ஆகா, ஓகோ என்ற பாரதியை யுகப்புரட்சிக் கவியாகக் காட்டுகிறார்கள். பொதுவுடைமைவாதிகள் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதியின் எழுத்துகளை முழுமையாகப் படித்துவிட்டு, சீர்தூக்கிப் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, பாரதி பொது-வுடைமைவாதியா? புரட்சியில் ஆர்வங் கொண்டவரா? என்பதை விளக்க விரும்புகிறேன்.

புரட்சிக்கு அஞ்சியவர் பாரதி

30.6.1906இல் ‘ருஷ்யாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சி’ என்று தலைப்பிட்டு,

“ருஷ்யாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சிச் சின்னங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜார் சக்கரவர்த்தியின் அநீதிச் சிங்காதனம் சிதைந்து கொடுங்கோன்மை துண்டு துண்டாகக் கழிவு பெற்று வரும் ருஷ்யாவில் அமைதி நிலைக்க இடமில்லை. சில இடங்களில் நிலச் சேனையுடன் சேனைக்காரர்களும், ராணுவமும் கலகம் தொடங்கி, தொழிலாளிகள் கூட்டமும் சேர்ந்து விடுகின்றனர்’’ என்று எழுதிய பாரதி, 7.7.1906ஆம் நாள்,

“சென்ற வாரம் ருஷ்யாவைப் பற்றி எழுதிய குறிப்பிலே அத்தேசமானது ஒரு பெரிய ராஜாங்கப் புரட்சியேற்படும் (நிலையிலுள்ளது) என்று தெரிவித்தோம். அதற்கப்பால் வந்து கொண்டிருக்கும் தந்திகள் நமது அச்சத்தை ஊர்ஜிதப்படுத்தி விட்டன. கைகலப்புகள் தொடங்கிவிட்டனவென்றால் ராஜாங்கம் எத்தனை தூரம் அமைதி கெட்ட நிலையிலிருக்க வேண்டுமென்பதை எளிதாய் ஊகித்து அறிந்து கொள்ளலாம்’’ என்று எழுதுகிறார்.

கொடுங்கோன்மைக்கு எதிராய் ரஷ்யாவில் நடத்தப்பட்ட புரட்சியை ‘கலகம்’ என்று எழுதியதோடு, அதைக் கண்டு அச்சப்படுவதாக எழுதியுள்ளார். உண்மையான ஒரு புரட்சியாளன் புரட்சியைக் கண்டு அச்சப்-படுவானா? அச்சப்படுகின்றவன் புரட்சி-யாளனாவானா?

‘அநீதி அழிந்து கொண்டிருப்பதற்கான அடையாளம் தெரிகிறது’ என்று கூறும் பாரதி அதற்கும் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? ஏன் அச்சப்படுகிறார்? அவர் புரட்சிவழியில், பல உயிர்களை இழந்து சமத்துவம் அடைவதை அறவே விரும்பவில்லை. பாரதியின் கொள்கையும், தீர்வும் வேறு. அதை கீழே படிக்கும்போது அறியலாம்.

1906இல் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் நடத்திய புரட்சியைப் பற்றி எழுதும்போது,

“இப்பொழுது மறுபடியும் பெரும் கலகம் தொடங்கி விட்டது. ருஷ்ய சக்ரவர்த்தியின் சிங்காதனம் இதுவரை எந்தக் காலத்திலும் ஆடாதவாறு அத்தனை பலமாக இருக்க, இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. பிரதம மந்திரியின் வீட்டை, வீட்டின் விருந்தின்போது வெடிகுண்டு எறியப்பட்டதும், சைன்யத் தலைவர்கள் கொலையுண்டதும், ராஜ  விரோதிகள் பகிரங்கமாக விளம்பரங்கள் பிரசுரிப்பதும், எங்கே பார்த்தாலும் தொழில்கள் நிறுத்தப்படுவதும், துருப்புகளிலே ராஜாங்கத்-தாருக்கு விரோதமாகக் கலகங்கள் எழுப்புவதும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்வதும் ஆகிய கொடூர விஷயங்களைப் பற்றித் தந்திகள் வந்த வண்ணமாக-வேயிருக்கின்றன’’ என்கிறார்.

அதேபோல், லெனின் செய்த புரட்சியையும் பாரதி கண்டிக்கிறார்.

“கொலையாலும் கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்’’ என்று கூறிவிட்டு, இதற்கடுத்த வரியிலேயே பாரதி கூறுகிறார்:

“இதற்கு நாம் என்ன செய்வோம்! கொலையாளிகளை அழிக்க, கொலையைத்-தானே கைக்கொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்கிறார். இது முற்றிலும் தவறான கொள்கை.

கொலை கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்லதாகாது. பாவத்தைப் புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும்… கொலையையும், கொள்ளையையும், அன்பினாலும், ஈகையாலும்தான் மாற்ற முடியும். இதுதான் கடைசி வரை கைகூடிவரக்கூடிய மருந்து. மற்றது போலி மருந்து.’’

“லெனின் வழி சரியான வழி இல்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோமாதலால் இந்தியாவின் ஸாத்தியா ஸாத்தியங்களைக் கருதியேதாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும், முதலாளிகளும் அய்ரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்-களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டு-மென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்ப மாட்டார்கள். எனவே, கொள்கைகளுடன் கொலைகளும், சண்டைகளும், பலாத்காரங்-களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயலவேண்டும்’’ என்கிறார்.

ஆக, புரட்சியின் மூலம் சமதர்மத்தை உருவாக்கக் கூடாது. மாறாக, பிரபுக்களிடம் பிச்சை பெற்று ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற தர்மகர்த்தா முறையை ஆதரிக்கிறார்.

அதற்கு கடயத்தில் நடந்த நிகழ்வை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.

(தொடரும்…)