பக்கங்கள்

ஆங்கிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆங்கிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 அக்டோபர், 2022

ஆங்கில ஆட்சியை ஆதரித்த பாரதி! (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (85)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (85)

அக்டோபர் 1-15,2021

ஆங்கில ஆட்சியை ஆதரித்த பாரதி!

நேயன்

1920டிசம்பர் 1 ஆம் தேதியன்று பாரதியார் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ‘திராவிடக் கக்ஷி’ என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆரியர் _ திராவிடர் என்பதெல்லாம் பொய் என்றும், கிறித்துவப் பாதிரிகள் இந்து மதத்தை அழிக்க இக்கதைகளைக் கட்டி விட்டதாகவும் கூறுகிறார்.

அன்று பாரதி கூறிய இந்தக் கருத்தைத்தான் இன்றைய ஆர். எஸ். எஸ். காரர்களும் வேதவாக்காகக் கொண்டுள்ளனர். பாரதி தன் ஜாதிக்கு உயர்வு வேண்டும் என்கிற போது மூச்சுக்கு முந்நூறு தரம் ஆரியர் வீரத்தைப் பற்றிப் பேசுகிறார். அதற்கு எதிர்ப்பாகத் திராவிடர்கள் கட்சியைத் தொடங்கியவுடன் ஆரியர் _ திராவிடர் போராட்டம் பொய்க்கதை என்றும் கிறித்துவப் பாதிரிகளின் தூண்டுதல் என்றும் கதை அளக்கிறார்.

பாரதிக்குத் திராவிடர் இயக்கத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருந்தது என்பதை, அவர் நண்பர் ஆர்.சீனிவாசவரதன் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது. அவர் 1920இல் திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரசு மாநாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்புகையில் கடயத்தில் பாரதியைச் சந்தித்த போது நடந்த சம்பவம் இது.

“பாரதியிடம் அவ்வூர் அன்பர்கள் சிலர் வந்தனர். நடந்த சம்பாஷணையிலிருந்து அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போலத் தோன்றிற்று.

அன்பர்களே! ஆரியர்களுக்கு முன்னால் திராவிடர்கள்; அவர்களுக்கு முன்னால் ஆதித் திராவிடர்கள்; அதற்கு முன் இருந்தது மிருகங்கள்; ஜீவராசிகள். அவை வாழ்ந்த இடத்தை வெட்டித் திருத்தி வீடு கட்டிப் பயிர் செய்து நாம் வாழ்கின்றோம். அவை உரிமை கொண்டாடினால் அனைவரும் அவைகளிடம் விட்டு விட்டுப் போக வேண்டியதுதான்’’ என்று பாரதி கூறினார் என்கிறார்.

தமிழர்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள்; ஆரியர்கள் வந்தேறிகள் என்ற அப்பட்டமான உண்மையை ஏற்க மனமின்றி, இப்படிப்பட்ட பித்தலாட்ட வாதம் செய்கிறார் பாரதி.

டாக்டர் டி. எம். நாயர் ‘ஜஸ்டிஸ்’ இதழில் திராவிடருக்குத் தனிநாடு கொடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைக் கிண்டலடித்துப் பாரதி கூறியது இது. இப்படிப்பட்ட பாரதியைத்தான் நம்மில் பலர் போற்றுகிறார்கள் என்பது வேதனையாக உள்ளது.

திராவிட இயக்கத்தின் தலைவர்களைத் தேச விரோதிகள் என்கிறார் பாரதியார். “டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப்பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்ய பாஷா விரதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது’’ என்று கூறுகிறார் பாரதியார். டாக்டர் நாயர், தியாகராய செட்டியார் போன்றவர்களெல்லாம் 1916 வரையில் காங்கிரசில் இருந்தவர்கள்தான். அதில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் கண்டு சகிக்க முடியாமல் தான் 1916இல் திராவிடர் இயக்கத்தைத் தொடங்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். டாக்டர் நாயர் சுயநலமே இல்லாதவர் என்பதைப் பாரதியே 1906இல் எழுதியுள்ளார்.

1906ஆம் ஆண்டு சென்னை நகராட்சி உறுப்பினர்களில் இருந்து ஒருவரைச் சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். அன்று 32 உறுப்பினர்கள் வந்திருந்தனர். அவர்களில் நால்வர் போட்டியிட்டனர். முதல் முறை ஓட்டு வாங்கிய விவரம்:

டாக்டர் டி.எம்.நாயர் -_ 10

பி.எம்.சிவஞான முதலியார் _ 10

ஸர் வி.ஸி. தேஸிகாச்சாரி _ 6

சர்.பிட்டி தியாகராய செட்டியார் _ 5

கூடுதல் _ 31

16 ஓட்டுக்குமேல் வாங்கினால்தான் ஒருவராவது சட்டமன்றத்திற்குச் செல்ல முடியும். எனவே தியாகராய செட்டியார் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இரண்டாம் முறை ஓட்டுகள் பெற்ற விவரம்:

டாக்டர் டி எம். நாயர் _ 14

பி.எம். சிவஞான முதலியார் _ 11

ஸர். வி.ஸி. தேஸிகாச்சாரி _ 7

கூடுதல் _ 32

சபைத் தலைவர், குறைவாக ஓட்டு வாங்கிய தேசிகாச்சாரியாரை விலகிக் கொள்கிறாரா என்றார். அவர் விலக மறுத்துவிட்டார். இதேநிலை நீடித்தால் மாநகராட்சியின் சார்பாக ஒருவரும் சட்டமன்றம் செல்ல முடியாது. எனவே, டாக்டர் டி. எம். நாயர் அதிக வாக்குகள் பெற்றும், தான் போட்டியிலிருந்து விலகிவிட்டார். அந்த நேரத்தில் பாரதி எழுதியதாவது:

“தக்க சமயத்தில் டாக்டர் நாயர் விலகிக் கொள்ளாவிட்டால் சரியான மெஜாரிட்டி (16 வோட்டு) எவருக்கும் கிடைக்காமல் கார்ப்பரேஷன் மெம்பர் சட்டசபையில் இருப்பதற்கே இடமில்லாமல் போயிருக்கும். அதனால் கார்ப்பரேஷனுக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டிருக்கும். அந்த அவமானம் ஏற்படாமல் தடுத்த பெருமை டாக்டர் நாயருக்கே உரித்தாகும். என்ற போதிலும் மிகவும் தகுதி பெற்றவரும் அதிக வோட்டுகள் பெற்றவருமாகிய டாக்டர் நாயர் விலகிக் கொண்டமை மிகுந்த வருத்த முண்டாக்குகிறது.’’

இப்படி 1906இல் டாக்டர் நாயரைப் பற்றிப் பெருமையாக எழுதிய பாரதி 1917இல் டாக்டர் நாயரைத் தேசவிரோதி என்று எழுதுகிறார் என்றால் என்ன காரணம்? திராவிடர்கள் தனி இயக்கம் தொடங்கி விட்டார்களே என்ற ஆத்திரம்தானே! வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 1916 காலக் கட்டத்தில் பாரதி பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரரா என்ன? இல்லையே! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் 1916 டிசம்பர் 26இல் பாரதி, ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ஆங்கிலேயர் வெளியேற வேண்டாம் என்றுதானே எழுதியுள்ளார்!

“எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு- _ செலவு உள்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான், மற்றபடி, ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை’’ என்கிறார் பாரதி. 1916ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்ன பாரதி நீதிக்கட்சித் தலைவர்களைத் தேசவிரோதிகள் என்று கூறுவது பார்ப்பனச் ஜாதிவெறி ஒன்றைத் தவிர வேறென்ன?

நீதிக்கட்சி அமைச்சரவை அமைந்த போது அதையும் கிண்டலாகவும், குத்தலாகவும் எழுதுகிறார் பாரதி.

“புதிய யுகம் வரப்போகிறது; மாண்டேகு ஸ்வராஜ்யக் குட்டி போடப் போகிறார் என்று சத்தம் போட்டதெல்லாம் கடைசியாக வெங்கட்ட ரெட்டி, ஸுப்பராயலு ரெட்டி, ராமராயனிங்கார் என்ற மூவரும் நம்முடைய மாகாணத்துக்கு மந்திரிகளாக வந்திருக்கிறார்கள் இஃதென்ன விநோதம்’’ என்கிறார் பாரதியார்.

பாரதியார் டிராம் வண்டியில் செல்வது போலவும் எதிரிலே இரண்டு பேர் உரையாடுவது போலவும் ஒரு கற்பனைச் சித்திரம் வரைந்துள்ளார். அதிலே ஒரு முதலியார் கூறுவதாகப் பாரதி எழுதுகிறார்: “பிராமணர்கள் வந்தால் அதிகமாக ஆங்கிலேய உத்தியோகஸ்தருக்கு அடிமைப்பட மாட்டார்கள். எனவே, ஜனங்களுக்குக் கொஞ்சம் நியாயம் கிடைக்கும். மற்றக் கூட்டத்தார் இன்னும் சரியாகப் படிக்கவில்லை.’’

கலாசாலை மாணாக்கராகிய ஒரு அய்யர் கூறுவதாகப் பாரதி எழுதுவதாவது:

“பிராமணரைத் தவிர வேறு ஜாதியாரை நியமிப்பதில் பிராமண துவேஷம் ஒன்றையே பெருங்கடமையாகவும் பரம தர்மமாகவும், ஜன்ம லக்ஷ்யமாகவும் நினைக்கிறவர்களை விட்டு, இதர ஜாதியாரிலும் பிராமண துவேஷ மில்லாதவர்களையே லார்ட் வில்லிங்டன் நியமித்திருக்க வேண்டும்’’ என்றார்.

(தொடரும்…)

வியாழன், 19 மே, 2022

இணைப்பு மொழியாக இருப்பதற்கு பயன் நிறைந்ததாக இருப்பது 'ஹிந்தி'யா அல்லது 'ஆங்கில'மா?

 

  • சீனிவாசன் ரமணி, விக்னேஷ் ராதா கிருஷ்ணன் மற்றும் ஜாஸ்மின் நிஹலானி
  • பிரபல ஆய்வு எழுத்தாளர்களால்  'இந்து' ஏட்டில் (15.4.2022 பக்கம் 9) எழுதப்பட்டுள்ள ஆய்வுப் பூர்வமான தரவுகள் நிறைந்த கட்டுரை இது.
  • போஜ்புரி, ராஜஸ்தானி உள்ளிட்ட 56 பிரிவுகளை உள்ளடக்கியதுதான் ஹிந்தி.
  • இந்தியாவின் தகவல் நுட்ப தலைநகரமாக பெங்களூரு திகழ்வதற்குக் காரணமே ஆங்கிலம்தான்.
  • பயன் நிறைந்ததாக இருப்பது ஆங்கிலமா? ஹிந்தியா? என்பதுதான் முக்கிய கேள்வி - பயன்பாடுதான் முக்கியம்.
  • ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் மாநிலங்கள்தான் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளைக் காட்டுகின்றன (படம் 1)
  • ஹிந்தி பேசும் மாநிலங்களிலிருந்து தான் ஏராளமான மக்கள் ஹிந்தி  பேசாத மாநிலங்களுக்குக் குடியேறுகின்றனர்.
  • இதுபோன்ற அரிய தகவல்கள் இக்கட்டுரையில் குவிந்து கிடக்கின்றன.

(இணைப்பு மொழியாக ஹிந்தியைவிட ஆங்கிலம் இருப்பதே பயன் நிறைந்தது என்று குடியேற்றம் மற்றும் முன்னேற்ற சூழ்நிலை மாற் றத்தைக் கணிக்கும் புள்ளி விவரங்கள் ஒரு உறுதியான வழக்கைக் காட்டுகின்றன).

2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது தங்களது  கடிதப் போக்குவரத்துக்கு ஹிந்தி மொழிதான் முதல் தேர்வு என்று 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 15 மாநில யூனியன் பிரதேச மக்கள்தான் தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் ஒரு நிபந்தனை உள்ளது. போஜ்புரி, ராஜ்ஸ்தானி, ஹிந்தி, சத்தீஷ்கர் உள்ளிட்ட 56 மொழிகள் (தாய் மொழிகள்) உள்ளடங்கிய மொழி யாக ஹிந்தி (ஒரு குடை) மொழி இருக்கிறது.

43% இந்தியர்கள் ஹிந்தி பேசுவதாகக் கூறப்பட்டாலும் 8.26% மக்கள் மட்டுமே குறிப்பாக தங்கள் தாய்மொழியாக ஹிந்தி பேசுகிறார்கள். ஹிந்தி இணைப்பு மொழியாக செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. இதைக் குறிப்பிட்டுதான், மாநில மக்கள் ஒருவருடன் ஒருவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளும் போது ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியாவின் ஹிந்தி மொழியில் செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

அவ்வாறு அவர் கூறியது எதிர்க்கட்சிகளிடமிருந்து கண்டனங் களையும் விமர்சனங்களையும் எழுப்பியது. பெங்களூரு இந்தியா வின் தகவல் தொழில் நுட்ப தலைநகரமாக ஆனதற்கு ஆங்கில மொழியே காரணம் என்று கருநாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலை வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஆங்கில மொழிக்கு மாற்றாக, ஹிந்தியைத் திணிப்பதற்கான வாதமே அது பெரும்பான்மையான இந்திய மக்களால் பேசப்படுகிறது என்பதுதான். ஆனால் ஹிந்தி மொழி பெரும்பான்மையான இந்தியர் களால் பேசப்படும் மொழி என்றுகூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு பதில், ஒரு பயன்பாட்டு கேள்விக்கு பதில் கூற வேண்டும். இந்திய குடிமக்கள் மேன்மையான வாழ்க்கை ஒன்றைத் தேடும்போது, ஹிந்தி - ஆங்கிலம் இரண்டு மொழிகளில் எந்த மொழி பயன் நிறைந்ததாக இருக்கும் என்பதுதான் அந்தக் கேள்வி. வேறு சொற்களில் கூறுவதானால், ஹிந்தி பேசும் உள்ளூர் மக்கள் ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதால் அதிக பயன் அடைவார்களா அல்லது ஹிந்தி மொழி பேசாத மக்கள் மீது அவர்கள் பயன் பெறுவதற்கு ஹிந்தி மொழி திணிக்கப்பட வேண்டுமா?

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மனிதவள மேம்பாட்டு அட்டவணையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதிக மக்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் பகுதிகள் மேலான மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளைக் காட்டுகின்றன. (படம் 1) ஹிந்தி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ள பகுதிகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், அதை விடக் குறைவான மனிதவள மேம்பாட்டு குறியீடுகளைக் காட்டுகின்றன. (படம் 2) இதன் பொருள் என்ன வென்றால், உயர்ந்த வாழ்க்கைத் தரத்துக்கும் அதிக அளவில் ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதற்கும் இடையே ஒரு ஆக்க பூர்வமான தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.

இதுவும்கூட குடி பெயர்பவர்களுடன் தொடர் புள்ள எண்ணிக்கையில் இருந்து பெறப்பட்டதாகும். மேலான வாழ்வாதாரங்களைத் தேடி ஹிந்தி பேசும் மக்கள் கொண்ட மாநிலங்களில் இருந்து கூடுதலான மக்கள் ஹிந்தி பேசாத மாநிலங்களுக்குக் குடிபெயர் கின்றனர். 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பொருளாதார ஆய்வில் பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் விவரங் களைப் பகுத்தாய்வு செய்வதன் மூலம் வேலையுடன் தொடர்புடைய குடியேற்ற விவரங்களை அளவிடு வதற்கு பயன்படுத்தப்பட்டது. இத்தகைய கீழ் வகுப்பு ஒன்றில் பயணம் செய்யும் அதிக அளவு பொருளாதார வசதியற்ற மக்கள் பெரும்பாலும் வேலை தொடர்பான காரணங்களுக்காகவே பயணம் செய்கிறார்கள் என்று அந்த ஆய்வறிக்கை வாதாடுகிறது. 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் அது போன்ற 90 லட்சம் பயணிகள் மேற்கொண்ட பயணங்களில் 200 கி.மீ. தொலைவுக்கும் குறைவான தூரம் பயணித்த பயணிகள் சேர்க்கப்படவில்லை.

2015-2016 ஆம் நிதியாண்டில் மாநில அளவில் பயணம் செய்த இறுதியான பயணிகளின் எண்ணிக்கை பற்றிய வரை படத்தை (படம் 4) காட்டுகிறது. தமிழ்நாடு, மகாராட்டிரா, குஜராத், மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், கருநாடகா, பஞ்சாப் மற்றும் டில்லி போன்ற மாநிலங்களில் அதிக அளவிலான மக்கள் மற்ற மாநி லங்களில் இருந்து குடிபெயர்ந்து உள்ளனர். உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், அரியானா, இமாசல பிரதேசம், சத்திஷ்கர் மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான மக்கள் மற்ற மாநிலங்களக்குக் குடி பெயர்ந்துள்ளனர்.

அதிக அளவில் மக்கள் குடிபெயர்ந்த மாநிலங் களைக் காட்டும் 3ஆவது வரைபடத்துடன் இதனைப் பொருத்திப் பார்க்கும்போது, அதிக அளவில் மக்கள் ஹிந்தி பேசும் மாநிலங்களுடன் இந்த புள்ளி விவரங்கள் பொருந்துகின்றன. அதற்கு மாறாக அதிக அளவில் ஹிந்தி பேசும் மக்கள் குடியேறிய ஹிந்தி பேசாத மக்கள் வாழும் பகுதிகளில் இந்தி பேசும் மக்கள் வெகு சிலரே இருக்கின்றனர். இதற்கு விதி விலக்காக இருப்பவை கேரள, ஒடிசா மாநிலங்களும், மகாராட்டிரா மாநிலத் தின் சில பகுதிகளும்தான்.

இந்தியை தாய் மொழியாக பேசுபவர்களை மட் டுமே படம் 3 காட்டவில்லை; தங்களது இரண்டாவது மொழி அல்லது மூன்றாவது மொழி என்று ஹிந்தியைத் தேர்ந்து எடுத்திருக்கும் மக்களையும் இந்த படம் காட்டுகிறது. ஹிந்தி பேசும் மக்கள் 50% சதவிகிதம் அளவில் வாழும் ஹிந்தி மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்குக் குடியேறிய மக்கள் பற்றி 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் பகுத்தாய்வு ஒன்று (படம் 3) எதிர்மறைப் போக்கைக் காட்டுகிறது. இந்த மாநிலங்களில் இருந்து இதர மாநிலங் களுக்குக் குடியேறிச் செல்லும் மக்கள் மற்ற மாநிலங் களில் இருந்து ஹிந்தி பேசப்படும் மாநிலங்களுக்குக் குடிபெயரும் மக்களின் எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கை கொண்டதாக இருப்பதாகும் என்பதையே இந்த புள்ளி விவரங்களை காட்டுகின்றன. வேலை மற்றும் கல்வி ஆகிய காரணங்களுக்காக குடிபெயர்தல் உள்ளிட்ட அனைத்து வகையிலான குடிபெயர்தல்களும் இந்த பாணியில் தான் இருக் கின்றன என்பது தெரிய வருகிறது.

சுருங்கக் கூறினால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கை கொண்ட மக்கள் ஹிந்தி பேசப்படாத மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்து செல்கின்றனர் என்றும் ஒரு பகுதியின் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டுக்கும் அதிக அளவிலான மக்கள் ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி மொழி இருப்பதைவிட ஆங்கில மொழி இருப்பதையே இவை வலியுறுத்திக் கூறுகின்றன. இந்திய ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு இது.

நன்றி: 'தி இந்து' 15.4.2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்