பக்கங்கள்

ஞாயிறு, 30 ஜூன், 2024

இந்தியாவா ? பாரதமா ?-3

 

இந்தியாவா ? பாரதமா ? – ஓர் ஆய்வு – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்.

மே 1-15, 2024

(‘திராவிடப் பொழில்’ அக்டோபர்  – டிசம்பர் 2023 ஆய்விதழில் “Names of the Nation
– A Comparative Study’ என்னும் தலைப்பில் வெளிவந்த பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ்ப் பெயர்ப்பின் சுருக்கம்.
-தமிழ்ப் பெயர்ப்பு : பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம்.)

சென்ற இதழ் தொடர்ச்சி…

ஹத்திக்கும்பா கல்வெட்டு சொல்வதென்ன?
இன்றைய ஒரிசா மாநிலத்தின் உதயகிரி மலைப்பகுதியில் பிராக்ருதி மொழியில் பிராமி எழுத்துருவால் வெட்டப்பட்டுள்ள ஹத்திக்கும்பா கல்வெட்டு, அந்தப் பகுதியைக் காரவேல மன்னன் கி.மு. முதலாம் நூற்றாண்டில் ஆண்ட வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்கின்றது.

17 அடிகள் கொண்ட அந்த கல்வெட்டிலே பத்தாம் அடியிலே ‘பாரத வாஸா’ என்ற சொற்றொடர் வருகின்றது. காரவேல மன்னன் பாரத வர்ஷா நாட்டின் மீது படை எடுத்துச் சென்ற செய்தியை இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. காரவேல மன்னன் ‘கலிங்காதிபதி’ என்றும் ‘கலிங்க ராஜ வம்ச’ என்றும் ‘கலிங்க நகரி’ என்றும் காரவேல மன்னன் கலிங்க சாம்ராஜ்யத்தின் குடிமகனாகவே இந்தக் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றான் என்பதும் பாரதவர்ஷத்தில் கலிங்க நாடு சேர்ந்து இருக்கவில்லை என்பதும் இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் செய்திகளாகும்.

இந்தக் காரவேல மன்னனை, 113 ஆண்டுகளாகக் கலிங்கப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த திராவிட மன்னர்களின் கூட்டமைப்பை முறியடித்தவனாகவும், பாண்டிய மன்னர்களிடம் இருந்து முத்துக்களைப் பரிசாகப் பெற்றவனாகவும் இந்தக் கல்வெட்டு காட்சிப்படுத்துகின்றது.
இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய செய்திகளாக இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் முக்கியமான மூன்று முடிவுகளாவன:

1. கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா நாடு அமைந்திருந்தது.
2. பரதவர்ஷா நாடு என்பது வட இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே !
3. அந்தக் காலகட்டத்தில் கலிங்கப் பகுதியும் தென்னிந்தியப் பகுதியும் பரதவர்ஷா நாட்டின் பகுதிகளாக இருக்கவில்லை.

சமண மதத்தின் பரத மன்னன்

பரதவர்ஷா என்பது பார்ப்பனிய மதத்தின் சொல்லாடல் மட்டும் அன்று. அந்தச் சொல்லாடல் சமணத்திலும் பவுத்தத்திலும்கூட பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாரத் என்னும் சொல் மத ரீதியான சொல்லாடல் இல்லை. அது பல பண்பாடுகளைத் தன்னுள்ளே கொண்ட மானுடவியலின் ஒரு சொல்லாடலாகும்.
சமண மதக் குறிப்புகளின்படி முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் நூறு மகன்களில் ஒருவன்தான் பரதன். ரிஷப தேவரின் மகளின் பெயர் பிராமி என்றும், அது

அன்றைக்கு வழக்கத்திலிருந்த எழுத்துருவுக்குப் பெயராகக் (பிராமி எழுத்து) கொள்ளப்பட்டது என்பதும் கூடுதல் செய்தி.
கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சமண இலக்கியமான ஆதி புராணத்தின்படி, ரிஷப தேவர் தனது நாட்டை 100 மகன்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து ஆட்சி செய்ய வைத்துள்ளார். ஆனால், பரதன் மற்ற 98 சகோதரர்களையும் போரில் தோற்கடித்து, அவர்களுடைய பகுதியையும் கைப்பற்றிக் கொள்கின்றான். இறுதியாக ஒரே ஒரு சகோதரன் பாகுபலி மட்டும் தனது நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றான். பாகுபலியுடன் பரதன் செய்த போரிலே பரதன் தோற்றுப் போய் விடுகின்றான். ஆனால், பாகுபலி சகோதர பாசத்தால் தனது நாட்டை பரதனுக்கு அளித்துவிட்டுத் தான் ஒரு சமணத் துறவியாகப் போய் விடுகின்றான் என்று ஆதி புராணம் சொல்கின்றது.

இன்றைக்கும் கர்நாடகத்தின் சரவணபெலகுலா சமணக் கோயிலிலே மிக உயர்ந்த பாகுபலியின் சிலைக்கு அருகிலே பரத மன்னனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது இந்தக் கதையை உறுதி செய்வதாக உள்ளது.

மேலும் இந்த சமணமதக் கதையைப் பார்ப்பனிய விஷ்ணு புராணமும் ஸ்ரீமத் பாகவதமும் உறுதி செய்கின்றது. ரிஷப தேவரின் மூத்த மகனான பரதனின் பெயராலேயே இந்த நாடு பாரதவர்ஷா என்று அழைக்கப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் (5-4-9) அறுதியிட்டுச் சொல்கின்றது.
மேலே சுட்டப்பட்ட வேதிய இந்துமதப் புராணங்களின் படியும் சமண மத ஆதி புராணத்தின் படியும் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் மகனான பரதனே இந்த நாட்டை பேரரசனாக ஆண்ட சக்கரவர்த்தி என அறிய முடிகின்றது.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்கள்

பாரத் என்று அறியப்படும் இந்தியா அரசமைப்புச் சட்டத்தின் முதல் விதியில் நாட்டின் பெயர் அறிவிக்கப்படுகின்றது. அதில் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று வரையறுக்கப்பட்டது. இந்த முதல் விதியின் மீது நடந்த விவாதத்தில் ஒரு சிலரின் கருத்துகளைக் கீழே பார்ப்போம்.
திரு. அனந்த சயனம் அய்யங்கார்
இந்தியா என்ற சொல்லுக்குப் பதிலாக பாரத், பாரத் வர்ஷா அல்லது ஹிந்துஸ்தான் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்கிறார்.
திரு.லோக்நாத் மிஸ்ரா அவர்களும் பாரத் வர்ஷா என்ற பெயரை ஆதரிக்கிறார்.
திரு.சிபன் லால் சக்சேனா அவர்கள் இந்தியா என்ற வார்த்தையைக் கூடாது என்றும், பாரத் என்ற வார்த்தை மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், இந்திய நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட வேண்டும் என்றும், வந்தே மாதரம் நாட்டின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றார்.
திரு.எச் வி காமத் என்பவர் மாநிலங்கள் என்ற வார்த்தையை மாற்றி, பிரதேசங்கள் என்னும் ஹிந்தி வார்த்தையைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றார்
இந்த வேளையில் குறுக்கிட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு, பல மொழி
களைக் கொண்ட ஒரு நாடு. எனவே, ஒரு மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும்
என்று கூறுவது சரியான முடிவு அல்ல என்று தனது
கருத்தை முன்வைத்து, உறுப்பினர்கள் தங்களின் சக்தியை அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசமைப்புச்
சட்டத்தின் பிற பிரிவுகளில் செலவழிக்க வேண்டுமென்றும், இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத பிரச்சனைகளில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பண்டித நேரு அவர்களின் கருத்துக்கு ஒத்திசைவு தந்து பிறர் கொண்டு வந்த திருத்தங்கள் அனைத்தையும் எதிர்க்கின்றார்.
பின்னர் ஒரு சமரசத் தீர்வாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாரத் என்று அறியப்படும் இந்தியா India that is Bharat என்னும் திருத்தத்தை முன் வைக்கிறார்.
திரு. எச் வி காமத் அவர்களும் திரு.சேத் கோவிந்த் தாஸ் அவர்களும்
பாரத் அல்லது ஹிந்து என்னும் சொல் முதலில் வரவேண்டும் இந்தியா என்னும் சொல் பின்னால் வரவேண்டும் என்னும் திருத்தத்தை முன்வைக்கின்றார்கள்.
திரு. காலா வெங்கட் ராவ் அவர்கள்,
ஹிந்த் & இந்தியா என்ற சொற்கள் அயற்சொற்கள்
என்னும் கருத்தியலால் ஹிந்தி மொழியின் பெயரையே பாரதி என்று மாற்ற வேண்டும் என வேண்டினார்.
திரு.கமலபதி திரிபாதி அவர்கள் மேலுலகத்தில் வசிக்கின்ற கடவுள்கள் பாரத் என்றே இந்த நாட்டின் பெயரை நினைவில் வைத்துள்ளார்கள் என்று சொல்கின்றார்.
இந்த நிலையிலே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறுக்கிட்டு, இந்த விவாதங்கள் எல்லாம் தேவையா இன்னும் முக்கியமான வேலை நிறைய இருக்கின்றது என்று அவையின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகின்றார். பின்னர் திருத்தங்கள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு
அண்ணல் அம்பேத்கரின் திருத்தமே அரசமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதன்படி ‘India that is Bharat’ – ‘இந்தியா எனும் பாரத்’ என்னும் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
முடிவுரை :
இந்தக் கட்டுரையில் வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா மற்றும் பாரத் ஆகிய சொல்லாடல்களைப் பற்றி ஆராய்ந்தபின் இந்த நாட்டின் பெயராக அந்தச் சொற்கள் எப்படி நிறுவப்பட்டன என்பதை ஆய்ந்த பின்னே நாம் கீழ்க்கண்ட முடிவுகளை எளிதாக எட்டலாம்.
1. இந்தியா மற்றும் பாரத் ஆகிய இரண்டு பெயர்
களுமே காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப்
போரில் மக்களுக்கு உந்துதல் தந்தது.
2. பல நூற்றாண்டுகளாக இந்த நிலப்பரப்பு இந்தியா என்னும் பெயராலும் அறியப்பட்டிருந்தது.
3. பாரத் என்னும் பெயரும் வெகு காலமாக இங்கு புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
4. இந்தியா என்னும் பெயர் காலனியாதிக்கம் நம் நாட்டின் மீது திணித்த பெயர் என்று கருதுவது தவறாகும். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிந்து என்னும் சொல்லாடலின் அகவழக்கின் புறவழக்கே (Exonym of Endonym) இந்தியா என்னும் சொல்லாடலாகும். இந்தியா என்பது அயற்சொல் இல்லை.
5. யாரேனும் இந்தியா என்னும் சொல்லை அயற்சொல்லாகக் கருதி அதன் மீது வெறுப்பை உமிழ்ந்தால், பாரத் என்னும் சொல்லும் ஈரானிய வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த சொல் என்பதால் அதையும் அயற்சொல்லாகக் கருதி அதன் மீதும் வெறுப்பை உமிழ வேண்டும்.
6. யாக வேள்வியில் வார்க்கப்படுகின்ற காணிக்கைகளை நெருப்பானது மேலுலகில்(?) வாழ்கின்ற தேவர்களிடம் கொண்டு சேர்க்கிறதாம். அதனால் நெருப்புக்கு பரதா என்னும் பெயர் வந்ததாம்! இதனாலேயே நெருப்புக்கு ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயரும் வந்தது.
7. பரதப் பழங்குடியினர் வடமேற்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கங்கைச் சமவெளியில் குடி அமர்ந்து குரு ராஜ்ஜியத்தை அமைத்தார்கள்.
8. மகாபாரதத்தில் வருகின்ற பரத என்னும் சொல்லாடல் சகுந்தலை, துஷ்யந்தன் ஆகியோரின் மகனான பரதனைக் குறிக்கவில்லை. அது பரதப் பழங்குடியினரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது.
9. சமண மதத்தின் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் மகனான பரதச் சக்கரவர்த்தியின் பெயராலேயே இந்த நாடு பரதவர்ஷா என்று அழைக்கப்பட்டது என்பதை சமணத்தின் ஆதி புராணத்தின் வழியாகவும் அதே கருத்தை உறுதி செய்யும் வேதியத்தின் விஷ்ணு புராணம் ஸ்ரீமத் பாகவதத்தின் வழியாகவும் நாம் அறிந்தோம்.
10. பரதவர்ஷத்தில் தென்னிந்தியப் பகுதிகள் அடங்கி இருக்கவில்லை. மநுவின் ஸ்ருமிதிகள் இந்தக் கூற்றை உறுதி செய்கின்றன. கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே பரதவர்ஷா நாட்டின் எல்லைப் பரப்பாக அமைந்திருந்தது.
11. மிகப் பழமையான தொன்மவியல் ஆதாரமான ஹத்திக்கும்பா கல்வெட்டு கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா இருந்துள்ளதையும் கலிங்கமும் தென்னாடும் பரதவர்ஷத்தில் இணை
யாமல் தனித்து இருந்ததையும் காட்சிப்படுத்தியது.
12. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்களில் சில உறுப்பினர்கள் இந்தியா என்னும் சொல் அயற்சொல் என்று கருதி அதை நீக்க முற்பட்டதுடன் ஹிந்தி மொழியின் மேல் கொண்ட அபிமானத்தாலும் இந்து மதத்தின்பால் கொண்ட அபிமானத்தாலும் பாரத் என்ற சொல்லே நம் நாட்டின் பெயராக இருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
13. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தியா என்னும் பாரத் என்னும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா, பாரத் ஆகிய இரண்டு பெயர்களையும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்தார்.
14. மானுடவியலின் அடிப்படையிலும் வரலாற்றின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு என்பது இந்த இரண்டு சொற்களின் உண்மைத் தன்மையை உணர வைக்கின்றது.
(முடிவுற்றது)

இந்தியாவா? பாரதமா? – ஓர் ஆய்வு – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்.-2

 


2024 ஏப்ரல் 16-30, 2024 

பாரதம் என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்:
பாரத் அல்லது பாரதம் என்னும் பெயர்ச் சொல்லின் சமஸ்கிருத வேர்ச்சொல் பர், பாரா
(bhr, bhara) என்பதாகும். இந்த வேர்ச்சொல்லின் பொருள் சுமத்தல் அல்லது தாங்குதல் (To carry or To Bear) என்பதாகும். தமிழில் கூடப் பாரம் என்னும் சொல் புழக்கத்தில் இருந்தாலும் அதன் தமிழ்ச் சொல் சுமை என்பதாகும்.

யாகத்தில் வார்க்கப்படுகின்ற பொருட்களை எல்லாம் யாகத் தீயானது வானுலகில் வாழும் தேவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஊடகமாகச் செயல் புரிவதால் நெருப்பிற்குப் ‘பரதா’ (bharatah – bharata) என்னும் பெயர் வழங்கப்படுகிறது.

அக்னி பகவானை ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயராலும் அழைக்கும் வழக்கம் உள்ளது. யாகத்தில் பெய்யப்படுகின்ற நெய்யை யாக நெருப்பானது தேவர்களிடம் கொண்டு சேர்ப்பதால் அது ‘ஹவ்ய வாகனா’ என்று அழைக்கப்பட்டது.

ஆதிசங்கரரும் தனது ‘சங்கர பிரகதாரன்யகா பாஷ்யா’ என்னும் நூலில் ‘அக்னி பரதா’
(agnir bharata) என்று நெருப்பினை அழைப்பார்.

ஆக பரதா என்னும் சமஸ்கிருதச் சொல் சுமத்தலையும் தூக்கிச் செல்வதையும் குறிப்பிடும் சொல் என்பது தெளிவாகின்றது.
பாரதி என்பது பரதா என்னும் சொல்லின் பெண்பாற் பெயர் என்று தனது ரிக் வேத சம்ஹிதாவில் சயனாச்சாரியார் அவர்கள் குறிப்பிடுவார்கள். நெருப்பில் தோன்றும் ஒளியைச் சுமப்பவர் பாரதி என்று பின்னாளில் பாரதி என்ற சொல்லுக்கு ஒளி என்னும் பொருளும் வந்து சேர்ந்தது.

பாரத் என்னும் சொல் இந்திய மரபுச் சொல்லா?

பாரத் என்னும் சொல்லை ஒரு சமஸ்கிருத சொல்லாகக் குறிப்பிட்டாலும் அந்தச் சொல் பிராகிருத மொழியிலும் அதே பொருளை உணர்த்தும் சொல்லாகக் கையாளப்படுவது ஒப்பு நோக்கத்தக்கது.
மேலும் அய்ரோப்பிய ஈரானிய மொழிகளிலும் இதே பரா – பரதா என்னும் சொல் சுமத்தலையும் தாங்குதலையும் குறிக்கின்ற ஒரு சொல்லாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் இந்தோ ஈரானியன், இந்தோ ஆரியன் குடும்பத்தின் பலமொழிகளும் தங்களுக்கு இடையே மொழிக் கட்டமைப்பில் ஒரு பொதுமையைக் கொண்டுள்ளன. இந்த மொழிகளின் அகர முதலியின்படி ‘பரதா’ என்னும் வார்த்தை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைக் கீழே பார்ப்போம்:
புரோட்டோ இந்தோ ஈரானியத்தில் பரதா என்பது பாரதி என்றும்,
புரோட்டோ இண்டோ அய்ரோப்பியத்தில் அது பேரெதி என்றும்,
வேதகால சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்புடைய பழைய ஈரானிய அவஸ்தன் மொழியில் பாரைதி என்றும்,

பாரசீக மொழியில் பர்தன் என்றும்,
அராபிய மொழியில் பரடா என்றும்,
அழிந்து பட்ட ஜெர்மானிய கோத்திக் மொழியில் பாய்ரன் என்றும்,
லத்தீன் மொழியில் பெரோ போர்ட்டோ என்றும்,
ஜெர்மனிய மொழியில் ஜிபாரென் என்றும்,
ஆங்கிலத்தில் பியர், பர்டன் என்றும் வழங்கப்படுகிறது.

எனவே, பாரத் என்னும் சமஸ்கிருதச் சொல்லானது அதேபொருள் படும்படி இந்தோ ஆரியன், இந்தோ ஈரானியன், இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பங்களில் பல மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, பாரத் என்னும் சொல் இந்திய மரபுக்கு அதாவது சமஸ்கிருத மரபுக்கு மட்டுமே சொந்தமான ஒரு சொல் என்று கூறுவது ஒரு தவறான புரிதலால் சொல்லப்படும் கூற்றே ஆகும்.

ஆனாலும் பாரத் என்னும் சொல் ஓர் அயற்சொல் என்று நாம் கூறி விடவும் இயலாது.
பாரத் என்னும் சொல் ஒரு வேர்ச்சொல். இந்த வேர்ச் சொல்லானது தொடர்புடைய அத்தனை மொழிக் குடும்பங்களிலும் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதே உண்மை. பிற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதால் இது இந்திய சமஸ்கிருத மரபுக்குச் சொந்தமில்லாத சொல் என்றும் கூறி விட இயலாது.
அதேபோல் இந்தியா என்னும் சொல்லும் இந்திய சமஸ்கிருத மரபின் வழி வந்த சிந்து எனும் அகவழக்குச் சொல்லின் கிரேக்க மொழியில் வழங்கும் புறவழக்குச் சொல் ஆகும்.

பரதப் பழங்குடியினர்

முந்தைய வேத காலத்தில் பரதர் என்னும் பழங்குடியினர் சரஸ்வதி எனும் புராண நதிக்கரையில் வசித்து வந்துள்ளனர். அந்த இடம் தற்காலத்தில் ஹரக்ஸ்வதி நதி அல்லது ஹெல்மான்ட்-அர்கன்டாப் என்னும் ஆப்கானிஸ்தானத்தின் நதிப் பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
இந்தப் பழங்குடியினர் பற்றிய பல குறிப்புகள் ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்தப் பழங்குடியினர் ஹிந்துகுஷ் மலையில் அமைந்துள்ள கைபர் கணவாயையும் அய்ந்து நதிகள் பாய்கின்ற பஞ்சாப் பகுதியையும் கடந்து வந்து இறுதியாகக் கங்கைச் சமவெளிப் பகுதியில் குடியேறியுள்ளார்கள்.
பரதா என்பது சுமந்து செல்லும் ஊடகம் என்பதை நாம் முன்னரே கண்டுள்ளபடி இந்த பரதப் பழங்குடியினர் இந்தோ ஆரியப் பண்பாட்டை மேற்கிலிருந்து கிழக்கிற்குச் சுமந்து வந்ததால் பரதப் பழங்குடியினர் எனப் பெயர் பெற்றனர்.

இந்தப் பழங்குடியினர் பற்றிய நுணுக்கமான பல குறிப்புகளும் இவர்களின் இடப்பெயர்வுகளும் இவர்கள் பங்கேற்ற பல போர்களைப் பற்றிய குறிப்புகளும் ரிக் வேதத்தின் மூன்று மற்றும் ஏழாவது மண்டலங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தப் பழங்குடியின் தலைவர்களாக திவோதாசா மற்றும் சுதாஸ் ஆகியோரின் பெயர்களும் இவர்களுக்கு உதவி செய்தவர்களாக பரத்வாஜா, விசுவாமித்ரா, வசிஷ்டா ஆகியோரின் பெயர்களும் ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் வருகின்ற காயத்ரி மந்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. இடம்பெயர்ந்து யமுனை நதிக்கரைக்கு வந்து சேர்ந்த இந்த பரதப் பழங்குடியினர் அந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த பேடா மன்னனைத் தோற்கடித்து, குரு இனத்தவரோடு சேர்ந்து குரு ராஜ்யத்தை நிறுவுகின்றனர்.
மகாபாரத இதிகாசம் இந்தக் குரு வம்சாவளியினரைப் பற்றிக் குறிப்பிடுகையில் சகுந்தலை-துஷ்யந்தன் ஆகியோருக்குப் பிறந்த பரதன் என்பான்
மன்னனாக நாடாண்டதைக் குறிப்பிடுகின்றது.

சந்திர வம்சத்தைச் சேர்ந்த இந்தப் பரத மன்னனின் பெயராலேயே இந்த நாடு பாரத நாடு என்று அழைக்கப்படுகின்றது என்றும் நம்பப்படுகிறது. ஆனால், இந்தப் பரத மன்னன் சந்திர வம்சத்தைத் தோற்றுவித்தவன் அல்லன். சந்திர வம்சாவளியிலே இடையில் வந்த ஒரு மன்னன். அவன் பெயரால் நாடு அழைக்கப்படுவது என்பது ஏற்புடைத்தன்று.
இந்தப் பரத மன்னன் ஒரு வரலாற்று மாந்தன் அல்லன். அதற்கு மாறாக மகாபாரதம் என்னும் இதிகாசக் கதையின் ஒரு பாத்திரம். அந்தக் கதையின்படி பரத மன்னன் 27000 ஆண்டுகள் நாட்டை ஆண்டான் என்றும், இந்த பூமியில் அமைந்திருந்த எல்லா நாட்டையும் தோற்கடித்துக் கைப்பற்றினான் என்றும், அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் பொருந்தாத கட்டுக்கதைகளால் வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரமே பரத மன்னன் என்னும் மகாபாரதப் பாத்திரம் ஆகும்.

மகாபாரதத்தின் பீஷ்ம பார்வதத்தின் ஜம்பு கண்ட நிர்மாணப் பகுதி ஒன்பதில் பரதா என்னும் சொல் கையாளப்படுகின்றது. ஆனால், அது பரத மன்னனைக் குறிக்கவில்லை அது பரதப் பழங்குடியைக் குறித்தது.

திருதுராஷ்டிரனை ‘ஓ பரதா’ என்று சஞ்சயன் அழைப்பதாக ஓர் இடத்தில் வருகின்றது. இது பரதப் பழங்குடியினரைப் பரதா என்றழைக்கும் வழக்கம் இருந்துள்ளதைக் காட்டுகின்றது. எனவே, பரத கண்டம் பரதவர்ஷா என்பது பரதப் பழங்குடியினர் ஆண்டிருந்த நிலப்பகுதியைக் குறித்தது எனலாம்.

பரதநாடு என்பது வட இந்தியா மட்டுமா? தென்னிந்தியா அந்த நாட்டின் ஒரு பகுதி இல்லையா?

பரதநாடு என்பது மகாபாரதக் கதையின்படி, பரத இனக்குழுவினர் ஆண்ட வட இந்தியாவை உள்ளடக்கிய ஒரு பகுதியே ஆகும். அதில் தென்னிந்திய நிலப்பரப்பு இணையவில்லை என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கங்கைச் சமவெளி முடிவுக்கு வரும் இடமே பரதநாட்டின் எல்லையாக மகாபாரதத்தில் காட்டப்பட்டுள்ளது.
விந்திய மலைக்குத் தெற்கே அமைந்த நிலப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களாகத் திராவிடர்களையும் கேரளர்களையும் கர்நாடகர்களையும் சோழர்களையும் மற்றும் பல மன்னர்களையும் மகாபாரதம் சுட்டிக்காட்டி அவர்களும் அந்தக் குருச்சேத்திரப் போரிலே பங்கேற்றதாகக் குறிக்கின்றது.
மனுஸ்மிருதியில் (Manu 2-6-23) தென்னிந்திய நிலப்பரப்பு ‘பரத வர்ஷா’ நாட்டின் பகுதியாகச் சுட்டிக் காட்டப்படவில்லை. அதற்கும் மேலாக இந்தத் தென்னிந்திய நாட்டினரை ‘மிலேச்ச தேசத்தினர்’ அதாவது காட்டுமிராண்டிகள், கீழ்நிலை ஜாதியினர், சமஸ்கிருதம் அறியாத அயலவர்கள் என்று குறிப்பிடுகின்றது.
மகாபாரதத்தின் அனுசாசன பருவா (Book 13, Sec 35) உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் வெறுப்பைச் சம்பாதித்த கீழ் ஜாதி சூத்திரர்களாகத் தென்னிந்திய மக்களையும் மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.
மேகலா, திராமிடா என்னும் சொற்கள் இந்தப் பகுதியிலே குறிப்பிடப்படுகின்றது.

புராணங்களில் பரதவர்ஷா

பாகவத புராணம், வாயுபுராணம், அக்னி புராணம், மார்க்கண்டேய புராணம், ஸ்கந்த புராணம் ஆகிய புராணங்களில் பரதவர்ஷத்தைப் பற்றிய கற்பனைக் கதைகள் அள்ளிவிடப்பட்டிருக்கின்றன.
வாயு புராணத்தில் பரத வர்ஷத்தில் ஒன்பது தீவுகள் இருந்தன என்றும், அவற்றிற்கு இடையே கடல் இருந்தது என்றும், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு யாரும் போக முடியாது என்றும் கதை சொல்லப்பட்டிருக்கின்றது.
பரதவர்ஷத்தைச் சுற்றி ஏழு கடல்கள் இருந்ததாக
இந்தப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவை,

உப்புக்கடல்
கரும்புச்சாற்றுக் கடல்
மதுக் கடல்
வெண்ணெய்க் கடல்
தயிர்க் கடல்
பாற்கடல்
நன்னீர்க் கடல்

பரதவர்ஷத்தின் நிலப்பரப்பைக் குறிப்பிடும் மேற்கண்ட குறிப்புகள் எல்லாம் கற்பனையில் விளைந்த கதைகளே என்று சொல்லத் தேவையில்லை.

இந்தியாவா ? பாரதமா ? – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்.-1

 


2024 ஏப்ரல் 1-15, 2024 

(‘திராவிடப் பொழில்’ அக்டோபர்- – டிசம்பர் 2023 ஆய்விதழில் “Names of the Nation – A Comparative Study’ என்னும் தலைப்பில்
வெளிவந்த பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ்ப் பெயர்ப்பின் சுருக்கம்.
-தமிழ்ப் பெயர்ப்பு : பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம்.)

‘இந்தியக் குடியரசு’ என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான அதிகாரப்பூர்வப் பெயரானாலும், உள்நாட்டிலும் உலகளவிலும் பொதுமக்களால் இந்தியா என்றே அழைக்கப்படுகிறது. இந்தியா விடுதலை பெறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா என்னும் பெயர் வரலாற்றின் பக்கங்களில் காணக்கிடக்கின்றது.
ஆனால், பல்லாண்டு காலமாகப் ‘பாரத்’ என்னும் பெயரும் இந்திய நாட்டின் பெயராக அழைக்கும் வழக்கம் உலக அளவில் இல்லையென்றாலும் உள்ளூர் அளவில் அவ்வாறும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இந்தியா என்னும் பெயர்ச்சொல் அயற்சொல் என்றும் அந்தப் பெயர் காலனியாதிக்கத்தால் நம்மீது திணிக்கப்பட்ட பெயர் என்றும் ஒரு புரிதலற்ற தவறான கருத்து சிலரின் சிந்தையிலே தேங்கியுள்ளது.

இந்தக் கட்டுரை ‘இந்தியா’ மற்றும் ‘பாரத்’ ஆகிய இரண்டு பெயர்களையும் ஆய்ந்திடும் நோக்கில் வரலாறு, மொழியியல், தொன்மவியல், நிலவியல், இலக்கியங்கள், கல்வெட்டுகள், மதப் புராணங்கள் போன்ற பலதரப்பட்ட மூலங்களிலிருந்து அறிவுபூர்வமாகத் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டு உண்மை நிலையை உணர்த்த முயல்கின்றது.

இந்தியா என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்

இந்திய அரசமைப்புச் சட்டம் நமது இந்திய ஒன்றியத்தின் உச்ச உயர்நிலைச் சட்டம் ஆகும். இந்த அரசமைப்புச் சட்டத்தின் விதி 1இன்படி இந்திய ஒன்றியத்தால் ஆளப்படுகின்ற நிலப்பரப்பின் பெயர் இந்தியா என்று அறிவிக்கப்படுகின்றது. அதன்படி நமது நாடு இறையாண்மை கொண்ட இந்தியக் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
India that is Bharat, பாரத் என்றும் அறியப்படும் இந்தியா என்று விதி ஒன்றில் (Clause1) நாட்டின் பெயர் சுட்டப்படுகின்றது. இந்த இடத்தைத் தவிர அரசமைப்புச் சட்டத்தின் மற்ற எல்லா இடங்களிலும் நாட்டின் பெயர் இந்தியா என்றே சுட்டப்படுகின்றது.
இவ்வாறு அரசமைப்புச் சட்டம் ஏற்பட்ட காலம் தொட்டு இந்தியா என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அறியப்பட்டிருந்தாலும் இந்த இந்தியா என்னும் சொல்லாடல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

அகவழக்கு – புறவழக்கு (Endonym & Exonym)
மொழியியல் கோட்பாடுகள் :
அக வழக்கு (Endonym)

ஒரு சமூகம் தனது ஆளுகைக்கு உட்பட்ட கூறுகளை எந்தப் பெயரால் எப்படி சொல்லி அழைக்கும் என்பது அகவழக்காகும்.
புற வழக்கு (Exonym)
ஒரு சமூகம் பிற சமூகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பின் அக வழக்கின்படி அழைக்கப்படும் பெயரை எப்படி வேறுபட்ட உச்சரிப்பால் அழைப்பார்கள் என்பது புற வழக்கு ஆகும்.

உலகத்தில் பல மொழிகளும் தனக்கே உரித்தான சிறப்பு ஒலியியல் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. ஓர் இனக்குழுவினர் தங்கள் மொழியின் ஒரு சொல்லை உச்சரிக்கும் முறையே ஒலியியல் கொள்கை ஆகும். அதே சொல்லைப் பிற மொழி பேசுவோர் உச்சரிக்கும் போது அந்த உச்சரிப்பில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. தமிழர்கள் அன்றி வேறு எவரும் தமிழின் சிறப்பு ‘ழ’கரத்தை உச்சரிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.

இந்த உச்சரிப்பு வேறுபாட்டின் காரணமாக அகவழக்கிலே அறியப்படுகின்ற ஒரு சொல் பிற இனக்குழுவினரால் சற்றொப்ப ஒத்து வருகின்ற வேறொரு உச்சரிப்பைக் கொண்ட சொல்லால் அறியப்படும். இந்த உச்சரிப்பு இடர்ப்பாடே அகவழக்கு புற வழக்கு (Endonym & Exonym) என்னும் மொழியியல் கொள்கையின் தோற்றுவாயாகும்.

சில எடுத்துக்காட்டுகளை இங்கு பார்க்கலாம் :
அகவழக்கு புறவழக்கு
சூங்வா சைனா
பார்சி பெர்சியன்
ஐயோனியன்
(கிரேக்கம்) யவனம்
கேடா கடாரம்
ஜாவ் (ஜாவா) சாவகம்
நக்கவரம் நிகோபார்
மாலத்தீவு மால்தீவ்ஸ்
தமிழ் திரமிடம், திராவிடம்

இப்படி உலகின் பல மொழிகளும் பிற மொழிச் சொற்களை தங்களின் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்கின்றன.
இந்தியா என்னும் சொல்லாடல் இந்திய மரபில் வந்ததா?

இந்தியா என்னும் பெயர்ச்சொல் பழைய கிரேக்கத்தின் இவ்டியா (Ivdia) என்ற சொல்லிலிருந்து வந்திருந்தாலும் அது ‘சிந்து’ என்னும் இந்திய மரபுச் சொல்லின் புறவழக்காகும். அதாவது இந்திய அகவழக்கிலே வழங்கப்பட்ட சிந்து என்னும் பெயர்ச் சொல்தான் புறவழக்கிலே இந்தியா என்று திரிந்து வந்துள்ளது.
சிந்து என்னும் இந்திய அக வழக்குச் சொல் கிரேக்கத்திற்குச் செல்வதற்கு முன்பாக அதன் பயணத்திலே இந்தோ ஆரியன், இந்தோ ஈரானியன் ஆகிய மொழிக் குடும்பங்களின் ஊடாகப் பரவிய பின்னரே அந்தச் சொல் கிரேக்கத்தைச் சென்றடைகின்றது.

பழைய பாரசீக மொழியும் அவெஸ்டன் மொழியும் சொல்லாடலிலும் இலக்கணத்திலும் வேதகால சமஸ்கிருதத்தோடு பெரிதும் ஒத்திருக்கிறது என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

சிந்து என்னும் சொல் பொதுவாக நீர் நிலைகளைக் குறித்தாலும் ஒரு நதியின் பெயராக பழைய வேத காலத்தில் ரிக் வேதத்தில் ( மண்டலம் 10, சூக்தா 75, ரிக்ஸ் 1&2) குறிப்பிடப்படுகின்றது. பின்னர் அந்தச் சொல்லே சிந்து நதிக்கு அப்பால் உள்ள நிலப்பரப்பைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகவும் பிறப்பெடுக்கின்றது
சிந்து என்று பழைய வேதகால சமஸ்கிருதத்தில் உச்சரிக்கப்படும் சொல்லானது ஹிந்து என்று பழைய பாரசிக மொழியிலே உச்சரிக்கப்படுகின்றது. சமஸ்கிருதத்தின் ‘ச’கரம் பாரசீகத்தில் ‘ஹ’கரமாகத் திரிகிறது. இந்த உச்சரிப்பு மாறுபாடானது கிமு 850-600 காலத்தில் தோன்றியது என்பது தமிழ் சமஸ்கிருத அறிஞர் அஸ்கோ பார்போலாவின் கருத்தாகும்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட பாரசீக மன்னன் டாரியஸ்-1 (DARIUS-1) அவர்களின் சிலைப் பீடத்திலே முதன்முதலாக ஹிந்து என்னும் சொல் கண்டறியப்படுகின்றது. இன்றும் இந்தச் சிலை ஈரானின் டெக்ரான் நகர அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இப்படியாகச் சிந்து நதி என்பது ஹிந்து நதி என்று இந்தோ ஈரானிய மொழியில் மாற்றம் பெறுகின்றது.

சிந்து நிலப்பகுதி என்பது வேதத்தில் ‘சப்த சிந்து’ என்று அறியப்படுகின்றது. அதுவே ‘ஹப்த ஹிந்து’ என்று ‘ஜெண்ட் அவஸ்தாவில்’ (Zend Avesta) அறியப்படுகிறது.
கிரேக்கக் கடலோடி சைலாக் (Shylock) என்பார் டேரியஸ் மன்னனின் ஆணைப்படி சிந்து நதியைக் கடந்து சென்றார் என்னும் செய்தியைக் கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹீரோடாட்டஸ் (Herodotus) பதிவு செய்துள்ளார். இவற்றிலிருந்து சிந்து நிலப்பரப்பு என்பது கிரேக்கத்திலும் பாரசீகத்தின் வாயிலாக அறியப்பட்டுள்ளது.
சிந்து என்பது பாரசீகத்தில் ஹிந்துவாக மாறிப் பின்பு அது கிரேக்கத்தில் இண்டோஸ் ஆக மாறுகிறது. ஏனென்றால் கிரேக்கத்தில் ‘H’ என்னும் ஒலியை கிரேக்கர்கள் ஒலிப்பதில்லை. எனவே. ஹிந்து என்பதை இண்டோஸ் என மாற்றி கிரேக்கத்தில் ஒலித்திருக்கிறார்கள்.

(SINDU – HINDU – INDU – INDOS)

பின்னர் இந்தச் சொல் லத்தீனிலும் கொய்ன் கிரேக்கத்திலும் (Koine Greek) இந்தியா என்றும் பிரெஞ்சு மொழியில் இண்டே என்றும் இண்டி என்று பழைய ஆங்கிலத்திலும் தற்கால ஆங்கிலத்திலும் இந்த பெயர்ச் சொல் இந்தியா என்று மாறி ஒலிக்கின்றது.

இந்தச் சொற்களை ஒப்பு நோக்கி உணருங்கால் இவை அனைத்தும் வேதத்தில் குறிப்பிடப்பட்ட சிந்து நிலப் பகுதியையே குறிக்கின்றது என்பது புலனாகும். உச்சரிப்பு வேறுபாட்டால் பிற சொற்களால் வேற்று மொழியில் வழங்கப்படுகின்ற அந்தச் சொற்கள் அந்தச் சொல்லின் வேத மூலத்தை மாற்ற இயலாது அதே பொருளைக் குறிக்கவே பயன்பட்டது. எனவே, ரிக் வேதத்தில் தனது வேர்ச்சொல்லைக் கொண்டுள்ள இந்தியா என்னும் சொல் இந்திய மரபின் சொல்லே! அது அயலவர் சொல் இல்லை என்பது திண்ணம்.

(தொடரும்…)

சனி, 29 ஜூன், 2024

பாரதி ஜாதி ஒழிப்புப் போராளியா ? (நூல் பெயர் : ஆர்.எஸ்.எஸ்.முன்னோடி பாரதி ஆசிரியர் : மஞ்சை வசந்தன் )

 


2024 சிறந்த நூல்களிலிருந்து சில பக்கங்கள் பிப்ரவரி 01-15, 2024


நூல்  பெயர் : ஆர்.எஸ்.எஸ்.முன்னோடி பாரதி 
ஆசிரியர் : மஞ்சை வசந்தன் 
வெளியீடு : திராவிடர் கழக(இயக்க) 
வெளியீடு 
– முதல் பதிப்பு 2022
விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு : ஜனவரி 2024 
பக்கங்கள் : 120; விலை : ரூ.120/-
பாரதி கடயத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, பாரதி, நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால்தான் என்ன? என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே, “கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்விக்க வேண்டியது. அதன் பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்’’ என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப் பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச் சேர்ந்தார். அப்போது காலை 11:00 மணி இருக்கும்.
நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கவும் ஊரார் பயப்படுவார்கள். மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தம் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.
வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம் சென்று உன் போன்ற மானங் கெட்டவர்களின் செய்கையால்தானே நாராயணப்பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று என்று சொல்லி, அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டார்.
அர்ச்சகர் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப் பிள்ளைக்குக் கட்டுக் கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி பாரதியின் மைத்துனர் அப்பாதுரையை வரச் சொன்னார். பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியைக் கடயத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக்கட்டிவிடப் போவதாக எச்சரித்தார். பாரதி வீட்டில் ஒரே குழப்பம்; கலக்கம். முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2:30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள்.
பாரதி புறப்பட்டு வரும் செய்தி ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காருக்கும், நண்பர் வக்கீல் எஸ்.துரைசாமி அய்யருக்கும் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது என, பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள ரா.அ.பத்மநாபன் கூறியுள்ளார். (சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.164)
மேலும், 1919ஆம் ஆண்டு சூன் மாதம் பாரதி கடயத்தில் இருந்தபோது அவர் மகள் தங்கம்மாவிற்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்தினம் வரை பாரதிக்கு இச்செய்தி தெரியாது. மறுநாள் காலை திருமணம் நடக்க வேண்டும். பாரதியின் மைத்துனர் அப்பாதுரைக்குத் தூக்கமே வரவில்லை.
விடியற்காலை 4:00 மணிக்குத் தங்கை செல்லம்மாவை அழைத்துக் கொண்டு பாரதியிடம் சென்று, இன்று உன் மகள் திருமணம். நீ வந்து தாரை வார்த்து உன் பெண்ணைக் கன்னிகாதானம் தர வேண்டும் என்றனர். பாரதி மகிழ்ச்சியுடன் சரி என்றார்.
அங்கேயே அவசர அவசரமாக வெந்நீர் தயாராயிற்று. பாரதி ஸ்நானம் செய்து, அழகாகப் புத்தாடை அணிந்து கிரமமான முறையில் மணப்பந்தலுக்கு வந்தார். வழக்கமான தலைப்பாகை, கோட்டு இன்றி, நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்து, பளிச்சென்று பூணூலுடன், பஞ்ச கச்சக் கோலத்தில் அவரைக் கண்டோர் வியந்து மகிழ்ந்தனர். அதைவிட ஆச்சரியம் தந்தது அவர் ஸம்ஸ்க்ருத மந்திரங்களை அழுத்தந் திருத்தமாக அர்த்தபுஷ்டியுடன் உச்சரித்துப் பக்திச் சிரத்தையுடன் கிரியைகளை நடத்தியதாகும் என்கிறார் ரா.அ.பத்மநாபன் அவர்கள்.
(சித்ரபாரதி, ரா.அ.பத்மநாபன்)
இப்படிப்பட்ட ஜாதிவெறி பிடித்த, வர்ணாசிரம ஆதரவாளரான பாரதி,
பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்றும், ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றும் எப்படிப் பாடினார்? என்றும் நீங்கள் குழப்பமடைவீர்கள்.
இந்தப் பாடல்களைப் பாரதி எழுதினாலும், அவர் எதற்காக எழுதினார், எந்த நோக்கில் எழுதினார் என்ற உண்மை தெரிந்தால் பாரதியார் உண்மை உள்ளம் வெளிப்படும்; குழப்பமும் தீரும்.
இந்தியா ஏட்டின் உரிமையாளர்களில் ஒருவரான மண்டபம் சீனிவாசன் அவர்கள் இதுபற்றிக் கூறியுள்ளதைப் படியுங்கள். அப்போது உண்மை புரியும்.
“எம்மிடம் பாரதியார் அடிக்கடி வருவதுண்டு. எது பாடினாலும், தான் விசேஷமாக எது எழுதினாலும், என்னிடத்தில் அதை முதலில் வந்து காட்டாமல் இருக்க மாட்டார். நான் என்ன வேலையா யிருந்தாலும் அதைச் சட்டை செய்யாது, தனியிடத்திற்கு அழைத்துப் போய் அதைப் படித்துக் காட்டுவார். அவருடைய பூபேந்திர விஜயம், சுதந்திரப் பள்ளு, ஞானரதம் முதல் பகுதி இவைகளை அவர் ஆவேசத்தோடு படித்துக் காட்டியது எனக்கு இப்பொழுதும் ஞாபகமிருக்கிறது. பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே என்ற பாட்டில் தாழ்ந்த நிலைமையில் கிடக்கும் பார்ப்பானை ஏன் பழிக்கிறீர் என்று நான் கேட்டதற்கு, நான் பழிக்கவில்லையே, அவன் அந்த உயர்ந்த நிலைக்கு அருகனல்ல, தாழ்ந்து கிடக்கிறான் என்று தானே நானும் சொல்கிறேன் என்றார்.” என்று பாரதியின் பார்ப்பன நண்பரே கூறியுள்ளார்.
அதைப் போல “பேராசைக்காரனடா பார்ப்பான்” என்ற பாடல். இந்தப் பாடலைப் படித்தவுடன் பாரதி பார்ப்பனர்களை எவ்வளவு கடுமையாகச் சாடுகிறார் என்று எண்ணத் தோன்றும். இந்தப் பாடலை முழுமையாகப் படித்துப் பார்த்தால்தான் இதன் பொருள் நன்கு விளங்கும். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வாளராக இருந்தபோது எழுதப்பட்டது இப்பாடல். அப்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டும்தான் காவல்துறையில் பணியாற்றினார்கள். நம்மவர்களால் சாதாரணக் காவலர் வேலையில் கூடச் சேர முடியாத காலம் அது. காவல் துறையில் பணியாற்றிய பார்ப்பனர்கள் பாரதிக்குச் சில துன்பங்களை விளைவித்து வந்தனர். (ஆதாரம்: பாரதி – காலமும் கருத்தும்; ஆசிரியர்: தொ.மு.சி.இரகுநாதன்) எனவேதான் பாரதி இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.
“நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு – ஐயோ
நாளெல்லாம் சுற்றுதலே உழைப்பு
பாயும் கடிநாய்ப் போலிசுக் – காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே – பிழைப்பு
பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் – துரை
இம்மென்றால் நாய்போல உழைப்பான்
முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் சொல்வார்
மூன்றுமழை பெய்யுமடா மாதம்
இந்நாளில் பொய்மைப் பார்ப்பார் – இவர்
ஏதும் செய்தும் காசுபெறப் பார்ப்பார்”
என்பதே பாரதியின் பாடல்.
இப்பாடல் மூலம் பாரதி உணர்த்துவது என்ன? வேதம் ஓதும் பார்ப்பானை உயர்த்திப் போற்றும் பாரதி வெள்ளையனிடம் போலீசாக இருக்கும் பார்ப்பனர்களை மட்டுமே கண்டிக்கிறார். பார்ப்பான் குலத்தொழிலை விட்டு வேறு வேலை பார்க்கும் செயலைக் கண்டித்தே இதைப் பாடுகிறார். அத்தோடு இவ்வுலகை செழிக்கச் செய்வதே வேதம் தான் என்பதையும் இங்கு பதிவு செய்கிறார். பார்ப்பான் மற்றவர்களால் அய்யர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதே பாரதியின் உட்கிடக்கை என்பது இதன் மூலம் புலனாகிறது.
கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவருக்கு பாரதி, பூணூல் அணிவித்ததைப் பலரும் புரட்சி என்று கருதுகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா?
பாரதி புதுவையில் இருந்தபோது, கனகலிங்கம் என்ற ஆதிதிராவிடருக்குப் பூணூல் மாட்டி விட்டு, உன்னை இன்று முதல் பார்ப்பான் ஆக்கி விட்டேன் என்று கூறினார். இதனால் பாரதி ஒரு ஜாதி ஒழிப்பு வீரர் என்று பலர் கருதுகின்றனர்.
கனகலிங்கம் என்பவர் வள்ளுவர் ஜாதியைச் சேர்ந்தவர். வள்ளுவர்கள்தான் ஆதி திராவிடர்களின் வீடுகளுக்குப் புரோகிதம் செய்யச் செல்வார்கள். பறைச்சேரிக்குப் பார்ப்பனர்கள் செல்வதில்லை. பார்ப்பனர்கள் மேல்ஜாதியினர் வீடுகளில் செய்யும் சடங்குகளைப் பறைச்சேரியில் வள்ளுவர்கள்தான் செய்வார்கள்.
எனவேதான் பாரதி, கனகலிங்கம் என்ற வள்ளுவனுக்குப் பூணூல் மாட்டி விட்டு, உன்னைப் பார்ப்பான் ஆக்கிவிட்டேன் என்று கூறியுள்ளார். கனகலிங்கம் வள்ளுவன்தான் என்பதை பாரதியே உறுதிப்படுத்தியுள்ளார். எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன் மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன். அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு என்று பாரதியே கூறியுள்ளார்.
இந்து மதத்தைக் காப்பதற்காகப் பார்ப்பனர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி. இதையேதான் பாரதி செய்துள்ளார். ஆரிய சமாஜம் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. மூன்று பேரின் பூணூலைக் கழற்றுவது புரட்சியா? 97 பேருக்கு பூணூல் மாட்டுவது புரட்சியா? பூணூல் போட்டால் கீழ்ஜாதி மேல் ஜாதி ஆகிவிடுமா? இதுவெல்லாம் ஏமாற்று வேலைகள்!
பாரதி மீசை வைத்தது ஜாதியை மறுக்கவா?
பாரதி மீசை வைத்து பிராமண கலாச்சாரத்தைத் தகர்த்து, ஜாதியை ஒழிக்க எண்ணினார் என்று பலரும் நினைக்கலாம். ஆனால், அவர் மீசை வைத்தது ஏன்? தனது குலாச்சாரத்தை மறுக்கவா? இல்லவே இல்லை. அவர் என்றும் பிராமணக் கலாச்சாரத்தை விடவில்லை. பின் ஏன் மீசை வைத்தார்?
வேத பூமியாகிய ஆரிய வர்த்தத்தில் பிராமணர்களில் மீசை இல்லாமலிருப்பது சாஸ்திர விரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போனதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு நான் ஸ்ரீகாசியில் ஜய நாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து வாசிக்கப்போனேன். நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ்நாட்டுப் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகச் சவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சரியப்பட்டனர்.
எப்போது பார்த்தாலும் நான் எனது மீசையைச் சிரைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளேயே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத் தீர்த்தான். உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரம் தவறாமல் செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்களா? என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதன் காரணத்தை அறிந்து கொண்டு, அப்படி யில்லையப்பா! தமிழ்நாட்டில் பிராமணர் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிவித்தேன் என்று பாரதி கூறியுள்ளார். பாரதி காசியில் படித்ததால் வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்பற்றி மீசையை வைத்துக் கொண்டார் என்பதே உண்மை.
சென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க் சாலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசும்போது, பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
இதை அறிந்த பாரதி, “சென்னைப் பட்டினத்தில் நாயர், கக்ஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.
என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும் வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத்தான் நடத்துகின்றார்கள். எல்லோரை
யும் அடிக்க பறையரால் முடியுமா? என்று எழுதினார்.
டாக்டர் நாயரின் ஸ்பர்டேங்க் உரையைப் படித்துப் பார்த்தால் அதில் அவர் பார்ப்பனர்களை அடியுங்கள் உதையுங்கள் எனக் கூறியதாகப் பதிவு இல்லை. அவருடைய கூட்டம் கேட்டுவிட்டு வந்த சிலர் ஆத்திரமுற்று ஒரு சில பார்ப்பனர்களை அடித்ததாகவே வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். சென்னையில் உள்ள பார்ப்பனரை அடித்தால் புதுவையில் உள்ள பாரதிக்குக் கோபம் வருகிறது? பார்ப்பானைப் பறையன் அடித்து விட்டானே, மற்ற ஜாதிக்காரர்களை அடிப்பானா? என்று ஜாதி வெறியுடன் ஆத்திரப்படுகிறார். மேலும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், எதிராய் ஜாதி இந்துக்களைத் தூண்டிவிடுகின்றார். இது எப்படிப்பட்ட ஜாதி வன்மம்? பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களை மோதவிட்டு தங்களுக்குப் பாதுகாப்பு தேடிக்கொள்ளும் பார்ப்பனர்களின் பரம்பரைத் தந்திரத்தை பாரதியும் கையாளுகிறார்.
“பாரத தேசத்தில் முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொறுப்பாளியாகப் பிராமணர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்களானால் மற்றக் குலத்தவரும் நெறி தவறியிருக்க மாட்டார்கள். ஒரு தேசத்திற்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத் தேசத்திலுள்ள பிராமணர்களே பொறுப்பாளிகள்” என்று தான் எழுதிய பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதி தர்மங்களை மீறியதாலும், வர்ண தர்மங்களைக் கடைப் பிடிக்காததாலுமே சமுதாயம் கெட்டது என்கிறார். ஆக, ஜாதியும், வர்ணஸ்ரம தருமமும் பின்பற்றப்பட வேண்டும். அவை அழியக் கூடாது. அழிந்தால் சமுதாயம் அழியும் என்கிறார். இப்படிப்பட்ட பாரதி எப்படி ஜாதி எதிர்ப்பாளராய், வர்ணாஸ்ரம எதிர்ப்பாளராய் இருக்க முடியும்? அவர் பச்சை இந்து சனாதனியாகத்தானே இருக்க முடியும்? 

திராவிடர் இயக்க இதழாளர் டி.ஏ.வி.நாதன் நினைவுநாள் ஜனவரி – 17(1962)

 



 ஜனவரி 16-31, 2024

டி.ஏ.வி.நாதன் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆங்கில நாளிதழான ‘ஷஸ்டிஸ்’ ஏட்டின் ஆசிரியராக இருந்தவர். நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். ‘விடுதலை’ நாளிதழின் முதல் ஆசிரியராகவும் பணியாற்றினார். தந்தை பெரியார் 1940-1941 இல் இந்தியாவின் வடமாநிலங்களுக்குச் சென்ற போது உடன் சென்றவர்.

திங்கள், 24 ஜூன், 2024

நாஸ்திகம் - கடவுள் கற்பனையே என்ற நூலில் இருந்து


டிசம்பர் 1-15, 2023

நூல் குறிப்பு :
நூல் பெயர்: ‘கடவுள் கற்பனையே’
ஆசிரியர்: ஏ.எஸ்.கே
வெளியீடு: எதிர் வெளியீடு
பக்கங்கள்: 138
விலை: ரூ.90/-

கம்யூனிஸ்ட்கள் நாஸ்திகர்களா? ஆம்! கம்யூனிஸ்ட்கள் நாஸ்திகர்-கள்தாம்! ஆனால், நாஸ்திகம் என்பது ‘அ’ னா ‘ஆ’ வன்னாதான். கம்யூனிஸ்ட்கள் மேலும் பல படிகள் சென்று தர்க்க இயல் பொருள் முதல்வாதிகள் (Dialectical Materialists)ஆவார்கள்.

‘பொருள் முதல் வாதம்’ என்றால் என்ன என்பதை முதலில் பார்த்துவிட்டு பிறகு ‘தர்க்க இயல் பொருள் முதல்வாதம்’ என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
ஆரம்ப நாளிலிருந்து தத்துவ ஞானிகள் இரு முகமாகப் பிரிந்து நின்றனர். ஒரு சாரார் எண்ணம் முதல் வாதிகள் (Idealist) என்றும் மற்றொரு சாரார் பொருள் முதல்வாதிகள் என்றும் இரு முகாம்களாக இருந்தனர்.

எண்ணம் முதல்வாதிகள் கூறுவதாவது:

ஆத்மார்த்த, அதாவது பொருள் அல்லாத எண்ணந்தான் ஆதி முதல் என்றும், பொருள் என்பது இரண்டாம் பட்சமென்றும், எனவே பல மதங்கள் நம்புவது போல் இவ்வுலகத்தையும், பிரபஞ்சத்தையும் கடவுள் சிருஷ்டித்தார் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். உண்மையில் இந்த வாதம் எண்ணத்தைப் பொருளிலிருந்து பிரித்து, அதை மேன்மைப் படுத்துவதேயாகும். சுருங்கக் கூறின், புராணக் கதைகளையும், மதத்தையும் இது மெருகுபடுத்துவதே ஆகும். எதார்த்த பிரத்தியட்ச உலகத்தைப் பார்க்க மறுப்பதும், எனவே, சமுதாயத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும், உற்பத்தி உறவுகளையும் பார்க்க மறுப்பதுடன் சமுதாயத்தில் உள்ள சுரண்டலை ஒழிக்க வழி தேடுவதற்குப் பதிலாக, மனிதன் மனிதனைச் சுரண்டும் அநீதியை நியாயப்படுத்துவதும், மண்ணுலகில் மனிதன் படும் கஷ்டங்களுக்கும் துன்ப துயரங்களுக்கும் விடுதலை விண்ணுலகில் உண்டு என்று கூறுவதுமேயாகும். இதைத்தான் எல்லா மதங்களும் கூறி வருகின்றன. ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம். ஆனால், பணக்காரன் சுவர்க்க லோகத்தில் நுழையவே முடியாது என்பது இவ்வுலகில் ஏழை ஏழையாகவே இருக்கவேண்டும் என்று நியாயப்படுத்த ஒரு கருவியாக உள்ளது.

வேதாந்தமும், கன்பூசியானிசமும் (சீன தத்துவ ஞானம்) கிழக்கிலும், பிளாட்டோ, காண்ட் முதலிய தத்துவ ஞானம் மேற்கத்திய நாடுகளிலும், சமுதாய அமைப்பை அப்படியே பேணிக் காக்க பேருதவி அளித்தன. நாம் காணும் உலகம் உண்மையல்ல, அது பொய், அது ஒரு மாயை என்றுதான் எண்ணம் முதல்வாதிகள் அன்று முதல் இன்றுவரை கூறி வந்துள்ளனர். ஆகவே, உண்மையை அறிய வேண்டுமென்றால், அழியாப் பொருளாகிய கடவுளை அடைய வேண்டும்_ இதுதான் எண்ணம் முதல்வாதிகளின் பிரதான கருத்தாகும்.

நாஸ்திகம் இவை அனைத்தையும் மறுக்கிறது. இயற்கைக்கு அப்பாற்பட்ட பூதங்களுமில்லை, பேய் பிசாசும் இல்லை. கடவுளும் இல்லை. இறந்த பிறகு வேறு உலகமும் இல்லை; வாழ்வும் இல்லை என்று நாஸ்திகம் ஆணித்தரமாகக் கூறுகிறது.

மதம் எவ்வாறு எச்சூழ்நிலையில் தோன்றுகிறது என்றும், ஏன் தோன்றியது என்றும் கூறுவதுடன், விஞ்ஞான ரீதியாக பிரபஞ்சத்தைப் படித்து, அந்நிலையிலிருந்து மதக் கோட்பாடுகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் ஈவிரக்கமின்றி நாஸ்திகம் அம்பலப்படுத்துகிறது. மதம் சமுதாயத்தில் ஆற்றும் பணியை அறவே வெறுத்து, மதத் தீமைகளையும், மதத்தையும் ஒழிக்க நாஸ்திகம் அயராது பாடுபடுகிறது.

விஞ்ஞானம் வளர வளர, நாஸ்திகம் தோன்றி, பரிணாம வளர்ச்சி பெற்றுத் தழைத்தோங்கி வளர்கிறது.
மனித சரித்திரத்தின் ஒவ்வொரு கால கட்டத்திலும் எந்த அளவு மனிதன் அறிவு வளர்ந்துள்ளது என்பதை நாஸ்திக வளர்ச்சியே எடுத்துக் காண்பிக்கிறது. இத்துடன், அவ்வப்போது எந்தெந்த வர்க்கங்கள் தங்களுடைய நலன்களுக்காக நாஸ்திகத்தை ஒரு தத்துவார்த்த ஆயுதமாக உபயோகப்படுத்தி வந்தது என்பதையும் எடுத்துக் காண்பிக்கிறது.

நாஸ்திகத்தின் உண்மையான உள்ளடக்-கமும் அதன் ஒவ்வொரு வடிவத்தின் குறைபாடுகளும் எதார்த்த சமுதாய பொருளாதார நிலைகளாலும், விஞ்ஞான வளர்ச்சி மட்டத்தாலும் பொருள் முதல்வாத தத்துவத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது.
மதத்தை எதிர்த்து நாஸ்திகம் போராடுவது வர்க்கப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.
அடிமைச் சமுதாயத்திலேயே நாஸ்திகம் தத்துவார்த்தக் கொள்கையாகத் தோன்றியது. ஹராக்கிளிடஸ், டெமாக்கிரடஸ், எபிகுரஸ், செனோபேன்ஸ் போன்றவர்களுடைய நூல்களில் பல நாஸ்திகக் கருத்துகளைக் காணலாம்.
உலகில் ஏற்படும் பல நிகழ்ச்சிகளும் இயற்கைக் காரணங்களால் ஏற்படுகின்றன என்று கூறி மத நம்பிக்கையை இவர்கள் எதிர்த்த போதிலுங்கூட, கடவுள் நம்பிக்கையைப் பூரணமாகக் கொண்டவர்களே இவர்கள்.

மத்திய காலத்தில் தேவாலயமும் மதமும் (Church and Religion) மிகப் பெரிய சக்தியாக இருந்தபோது நாஸ்திகம் பெரிய அளவு மதத்தின் செல்வாக்கை உடைத்தெறிந்தது. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தைத் தகர்த்தெறிந்தது, பிரெஞ்சுப் புரட்சி வெற்றி பெற நாஸ்திகமும் பகுத்தறிவும் பெருந்துணையாக இருந்தன. ரஷ்ய புரட்சிக்காரர்களின் நாஸ்திகம் மிக சக்தி வாய்ந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணற்றதாகவும் இருந்தது. நாஸ்திகம், மார்க்சிசம் -_ லெனினிசத்தில் தான் பூரண வடிவத்துடன் உள்ளது.

மார்க்சிஸ்ட் நாஸ்திகத்தின் தத்துவார்த்த அடிப்படைதான் தர்க்க இயல் பொருள் முதல்வாதமும், சரித்திர இயல்பொருள் முதல் வாதமும் ஆகும்.
மார்க்சிஸ்ட் நாஸ்திகம், தீவிரமானது _ புரட்சிகரமானது. சரித்திரத்திலேயே முதல் தடவையாக எல்லாக் கோணங்களிலிருந்தும் மதத்தைத் தாக்குவதுடன் அதனை அடியோடு ஒழிப்பதற்கான வழி வகைகளை மார்க்சிஸ்ட் நாஸ்திகம் வகுத்துக் கொடுக்கிறது.

மதத்தை அடியோடு பிடுங்கி எறிய, அதன் சமுதாய வேர்களை வெட்டி எறிய கம்யூனிஸ்ட் சமுதாயத்தைக் கட்டி வளர்க்கும் தறுவாயில் முடியும்.
பொருள் முதல்வாதம், எண்ணம் முதல்வாதத்திற்கு நேர்முரணானது. சாதாரண மனிதர் தெளிவாகப் பார்க்கக் கூடிய விஷயத்தை அடிப்படையாகக் கொண்டது பொருள் முதல்வாதம். இவ்வுலகம் எண்ணத்தால் ஏற்பட்டதல்ல. உண்மையில் உலகம் உண்டு. அது புற நிலைப்பட்டது. தத்துவார்த்த உலகக் கண்ணோட்டம் இந்தத் தன்னிச்சைப் பொருள் முதல்வாதத்தை விஞ்ஞான ரீதியாகக் காரணம் கூறிப் பலப்படுத்துகிறது.
தத்துவார்த்தப் பொருள் முதல்வாதம் பொருள் ஆதி முதல் என்றும், எண்ணம் – கருத்து இரண்டாம் பட்சமென்றும் கூறுகிறது. இதன் அர்த்தமென்ன? உலகம் சாசுவதமானது, அது கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதல்ல. அது காலத்திலும், வெட்ட வெளியிலும் எல்லையற்றது, முடிவற்றது என்பதே.

உணர்வும், எண்ணமும் பொருளின் இன்றியமையாத குணமாகும்; எனவே, எதார்த்த உலகத்தின் பிரதி பிம்பமாகும். ஆகவே, உலகத்தை உணர முடியும்.
தத்துவ ஞானத்தின் சரித்திரத்தில் பொருள் முதல்வாதம், சமுதாயத்தில் உள்ள முற்போக்கு வர்க்கங்களின் உலகைச் சரியாகப் புரிந்துகொண்டு இயற்கையை மேலும் மேலும் மனித சக்திக்குள் கொண்டு வர வேண்டும் என்ற அவாதான். விஞ்ஞான வளர்ச்சியை மதிப்பீடு செய்வதன் மூலம் பொருள் முதல்வாதமும், விஞ்ஞான அறிவை மேலும் வளர்த்தது; விஞ்ஞான முறைகளைப் பலப்படுத்தியது. இவை அனைத்தும் மனிதனுடைய நல உரிமைகளை மேலும் வளர்த்தது. உற்பத்தி சக்திகளை மேலும் அபிவிருத்தி செய்ய உதவியது. பொருள் முதல்வாதத்திற்கும்,விஞ்ஞானத்திற்கும் இடையே உள்ள உறவு இவ்விரண்டின் வளர்ச்சிக்கும் சாதகமாக இருந்தது. இந்தியா, சீனா, கிரீஸ் போன்ற நாடுகளில் அடிமைச் சமுதாயத்திலேயே வான சாஸ்திரம், கணித சாஸ்திரம் போன்ற பல துறைகளில் மெய்ஞ்ஞான அறிவு வளர அங்கு பொருள் முதல்வாதக் கருத்துகள் தோன்றத் தொடங்கின.

புராதனப் பொருள் முதல்வாதத்தின் பொதுவான தன்மை கபடமற்றதேயாகும். இதை சார்வாகர் தத்துவ ஞானத்திலும், ஹெராகுடஸ், எபிகுரஸ் தத்துவ நூல்களிலும் பார்க்கலாம். உலகம் மனித எண்ணத்தால் ஏற்பட்டதல்ல; அது மனிதன் தோன்றுவதற்கு முன்னரே இருந்தது என்று மேற்கூறிய தத்துவ ஞானிகள் கூறி உள்ளனர். இயற்கைத் தோற்றம் பலதிறப்பட்டதில் பொதுவான தொன்று இருக்க வேண்டும் என்றனர் புராதனப் பொருள் முதல்வாதிகள். அந்தக் காலத்திலேயே ஓர் உண்மையைக் கூறிய பெருமை அவர்களைச் சாரும் _ அதாவது ஒரு பொருளின் மிகச்
சிறு துகளை அணு என்று கூறினர். புராதனப் பொருள் முதல்வாதிகள் பலர் அவர்கள் அறியாமலேயே தர்க்க இயல்வாதிகளாக இருந்து வந்தனர். ஆனால், பொருள் முதல்வாத வளர்ச்சியில், தர்க்க இயல் அடிப்படைகளிலும் புராதனப் பொருள் முதல்வாதிகள் இயற்கையே கடவுளென்று சரளமாக உபயோகப்படுத்தி இருப்பதைக் காணலாம்.

அய்ரோப்பாவில் 17_18ஆம் நூற்றாண்டுகளில் பொருள் முதல்வாதம் தழைத்தோங்கி வளரத் தொடங்கியது. பேக்கன், கலிலியோ, ஹாப்ஸ், பினோசா லாக் முதலியோர் பிரசித்தி பெற்ற பொருள் முதல்வாதிகளாக விளங்கினர். அப்போதுதான் இளம்பருவத்தில் இருந்த முதலாளித்துவத்தின் அஸ்திவாரத்தின் மீது பொருள் முதல்வாதம் வளரத் தொடங்கியது. உற்பத்தி, இயந்திர வளர்ச்சி வளரத் தொடங்கியது. உற்பத்தி, இயந்திர வளர்ச்சி விஞ்ஞானத்தின் மீது பொருள் முதல்வாதம் ஆதாரப்பட்டு நின்றது. வளர்ந்துவரும் முற்போக்கு பூர்ஷ்வா  வர்க்கத்தின் நல உரிமைகளைப் பேணிக்காக்கும் முறையில், பொருள் முதல்வாதம் பழைய மூடப்பழக்க வழக்கங்களையும், மடாதிபதிகளின் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடியது.
மிக விரைவாக வளர்ந்துவரும் பொறி நுட்பவியலுடன் (Mechanism) கணித சாஸ்திரத்துடனும் சேர்ந்து வளர்ந்த 17_18ஆம் நூற்றாண்டின் பொருள் முதல்வாதம் இயல்பாகவே யாந்திரீகமாக இருந்தது.

அது இயற்கையைப் பல்வேறு பாகங்களாக்கிப் பிரிவு ஆராய்ச்சி செய்ததே தவிர, இவற்றை இவ்வாராய்ச்சிக்குப் பின் ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்தமான நிகழ்ச்சியாகப் பார்க்கவில்லை. 18ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு பொருள் முதல்வாதிகளான ஹால்பாக், ஹெல்வீடியஸ் ஆகியோர் பொருளின் இன்றியமையாத குணம் அசைவு என்றனர். இவ்வாறு கூறியதன் மூலம் 17ஆம் நூற்றாண்டின் பொருள் முதல்வாதிகளின் பல முரண்பாடுகளையும் தகர்த்தெறிந்தனர். எல்லாவித பொருள்முதல் வாதத்திற்கும், நாஸ்திகத்திற்கும் உள்ள ஜீவ(உயிர்ப்) பிணைப்பை 18ஆம் நூற்றாண்டின் பொருள் முதல்வாதிகளிடம் காணலாம்.
புவர்பாக் (Feurebach) பொருள் முதல்வாதியாக இருந்தும் தியான சிந்தனையில் மூழ்கிப் பிரிந்து கிடந்தார்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரஷ்ய நாட்டுப் பொருள்முதல்வாதிகள் புரட்சிகர ஜனநாயகவாதிகளாகக் காட்சி அளிக்கின்றனர் _ பெலின்ஸ்கி, ஹெர்சான், செர்னிசாவஸ்கி முதலியோர். இவ்வாறிருந்த பொருள்முதல்வாதம் பரிணாம வளர்ச்சியில் தர்க்க இயல் பொருள்முதல்வாதமாகக் காட்சியளிக்கிறது.
எனவே, நாஸ்திகம் பொருள்முதல்வாதத்திற்கு இன்றியமையாததாகும்.

இன்று முதலாளித்துவ சமுதாயத்தைக் கடுமையாக எதிர்த்து நிற்கும் தத்துவம் தர்க்க இயல் பொருள் முதல்வாதமாகும். இதைக் கண்டு பூர்ஷ்வா அடிவருடிகள் (முதலாளி தாசர்கள்) பொருள்முதல் வாதத்தையும், நாஸ்திகத்தையும் அவதூறு செய்ய முன் வந்துள்ளனர். தர்க்க இயல் பொருள்முதல்வாதிகள் அறுசுவையோடு அன்னம் உண்டு, மடவாரோடு மந்தனம் கொள்வதுதான் அவர்கள் குறிக்கோள் என்று தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இது உண்மைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். தர்க்க இயல் பொருள் முதல்வாதிகள் அனைவரும் லட்சியவாதிகள். சுரண்டலற்ற, வர்க்க பேதமற்ற, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் உடை, எல்லோருக்கும் எல்லாம் என்றிருப்பதான உன்னத சமுதாயத்தைப் படைக்க வேண்டு-மென்பதே அவர்கள் லட்சியம். தர்க்க இயல் பொருள் முதல்வாதிகள் மனிதப் பண்பாட்டில், மனிதாபிமானத்தில் மிகச் சிறந்தவர்கள். அறத்திலும், ஒழுக்கத்திலும், இன்றுள்ள பூர்ஷ்வா_ சமுதாயத்தில் உள்ள ஆஸ்திகர்களுக்குத் தர்க்க இயல் பொருள் முதல்வாதிகள் இளைத்தவர்களல்ல, சளைத்தவர்களல்ல.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள்-37) ♦


ஞாயிறு, 23 ஜூன், 2024

பவுத்தத்தின் வீழ்ச்சியை வரவேற்கும் பாரதியார்


2023 அக்டோபர் 16-31, 2023 உண்மை Unmai

– தஞ்சை பெ. மருதவாணன்

சனாதன தர்மத்தை நிலைநாட்ட கொலை பாதகம் உட்பட எந்த அதர்மத்தையும் செய்யலாம் என்பது ஆரிய தர்மத்தின் கொள்கை. கொலை நூலாகிய பகவத்கீதையின் கருத்தும் இதுவே. இக்கொலை பாதகத்தை ஆதரித்துக் காஞ்சிப் பெரியவாள் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய இருளுரை வருமாறு:-

“தர்மத்துக்காகச் செய்ய வேண்டியது எப்படி இருந்தாலும் பண்ணவேண்டும். இம்சை என்று பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம்
பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக்கொள்ளவில்லையா? அப்படிப் பசு ஹோமம் பண்ணுவதிலே தப்பே இல்லை. பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான
23 பசுக்களே கொல்லப்படுகின்றன. சக்கரவர்த்திகளே செய்கிற மிகப்பெரிய அசுவமேதத்துக்குக் கூட 100 குதிரைகள் தான் சொல்லியிருக்கிறது”. (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி ‘யக்ஞம்’ என்னும் தலைப்பில் இதுபற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது).

(விடுதலை 20.5.2023 பக்கம் 2 தலையங்கம்)

இந்த ஆரிய தர்மத்துக்கு ஏற்பவே பவுத்த எதிர்ப்பும் படுகொலைகளும் புஷ்யமித்திரனால் மூர்க்கமாக அரங்கேற்றப்பட்டன. அவை ஒரு தேசியக் கடமையாக சாவர்க்கரின் பார்வையில் எதிரொலித்ததும் அதன் அடிப்படையிலேயே என்பது குறிப்பிடத்தக்கது.

பவுத்தத்தின் வீழ்ச்சியை வரவேற்கும் பாரதியார்

மகாகவி என்றும், தேசியக்கவி என்றும் புகழப்படும் சுப்பிரமணிய பாரதியார் எந்த அளவுக்குப் பவுத்தத்தின் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவர் தமிழாக்கம் செய்துள்ள பகவத்கீதை உரைநூலின் முன்னுரையில் காணமுடிகிறது.

(வெளியீடு சென்னை பூம்புகார் பதிப்பகம், நான்காம் பதிப்பு – 1994)

1. தன்னுடைய முன்னுரையில் பாரதியார் “மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்கு உண்டு. அதை நல்ல வேளையாக இந்தியா உதறித் தள்ளி விட்டது” என்று கூறி மகிழ்ச்சி அடைகிறார்.

2. “(யாகத்தில்) கொலைகளைச் செய்தல் மோட்சத்துக்கு வழியென்ற போலி வைதீகரைப் பழி சூட்டி அந்தக் கொலைச் சடங்குகளால் மனிதன் நரகத்துக்குத்தான் போவான் என்பதை நிலைநாட்டிய புத்த பகவானும் அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும் இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்திவிட்டார்கள்” என்று கவலைப்படும் பாரதியார் யாகத்தில் உயிர்ப்பலி என்பது சாஸ்திர சம்மதத்தை உடையது என்பதை வசதியாக மறைத்துவிட்டார்.

3. “புத்த மதத்தை வென்று இந்து தர்மத்தை நிலைநாட்ட சங்கராச்சாரியார் அவதரித்தார்” என்று கூறி புத்தமத வீழ்ச்சியை வரவேற்கும் பாரதியார் அதை நிறைவேற்ற அவதரித்த ஆதிசங்கரரைப் புகழ்ந்து தனது பவுத்த வெறுப்பை வெளிப்படுத்துகிறார்.

4. “தம்மாலே (அதாவது ஆதிசங்கரரால்) வெட்டுண்ட புத்தமதம் என்ற விருட்சத்தின் கிளைகள் பலவற்றை இந்து தர்மமாகிய மரத்துக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்படி எருவாகச் செய்து போட்டார்” என்று புத்த மதக் கொள்கைகளைக் களவாடிக் கொண்டதை வெட்கமில்லாமல் ஒப்புக்கொள்ளும் பாரதியார் அதற்காகப் புத்தமதத்துக்கு நன்றி பாராட்டு
வதற்கு மாறாகப் புத்தமத ஒழிப்புக்கு ஆதிசங்கரர் ஆற்றிய துரோகச் செயலைப் பாராட்டி மகிழ்கிறார்.

5. “பத்தினியைத் துறந்தவர்கள் மேலோர் என்று வைத்து அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை வைத்து உலகமெல்லாம் பொய்மயம் என்றும், துக்கமயம் என்றும் பிதற்றிக்கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞானநெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசம் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்தமதத்துக்கு உண்டு. அதை நல்லவேளையாக இந்தியா உதறித்தள்ளி விட்டது” என்று கூறுகிறார். இல்லறத்தைத் துறந்த துறவிகளே மேலோர் என்றும், ஏனையோர் கீழோர் என்றும் புத்தர் கூறாததை மனச்சான்றுக்குப் புறம்பாகவோ அல்லது அறியாமையாலோ கூறும் இவர், உலகமே போற்றும் மனித நேயமிக்க அறநெறியான புத்தநெறியை மனித நாகரிகத்துக்கு எதிரானது என்று கூறித் தனது ஆரிய விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறார். பாரதியாருக்குப் பவுத்தம் கசக்கிறது. வருணபேதம் காட்டும் அநாகரிக ஆரிய வேதங்கள் இனிக்கின்றன. ஆதிசங்கரரைப் போற்றும் இவர் புத்தரைக் குற்றம் சொல்கிறார்.

6. “புத்தமதம் இழைத்த பெருந்தீங்கு யாதெனிலோ இடைக்காலத்து மாயாவாதத்தை நம்முள்ளே எழுப்பி விட்டது” என்று புத்தர் கருத்துக்கு மாறான ஒரு கொள்கையை அவர் பின்பற்றியதாகப் பாரதியார் கூறுவது அவரது புரிதலின்மையையே புலப்படுத்துகிறது.

புத்தரின் மீதும் பவுத்தத்தின் மீதும் இந்த அளவுக்கு வெறுப்பை உமிழும் பாரதியார்

‘‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரதநாடு பழம்பெரும் நாடே’’
என்று எப்படி எழுதினார் என்ற அய்யம் எழக் கூடும். “பார்ப்பனியம் பலநிறம் காட்டும்” என்பதைப் புரிந்து கொண்டால் இந்த அய்யம் எழாது. அறிஞர் அண்ணாவின் “ஆரிய மாயை” எனும் நூலில் காணும், பார்ப்பனியத்தின் இரண்டகத் தன்மையைப் பற்றிக் குறிப்பிடும் பாடலில் வரும் “பேசநா இரண்டுடையாய் போற்றி” எனும் வரிகளை நினைத்துக்கொண்டால் இந்த அய்யம் எழாது.

பலநிறம் காட்டும் பார்ப்பனியம்

1. பலநிறம் காட்டும் பார்ப்பனியத்தின் தந்திர வித்தைகளையும் வஞ்சக சூழ்ச்சிகளையும் கீழறுக்கும் செயல்பாடுகளையும் கண்டறிய வேண்டுமானால் பெரியாரியம் என்னும் கண்ணாடியை அணிந்து கொண்டால் அவை பளிச்சென்று தெரியும்; விளக்கமாகப் புரியும்.

2. பவுத்தத்தின் வீழ்ச்சியைப் பாடமாகக் கொண்டு முன் எச்சரிக்கையுடன், பாழ் செய்யும் உட்பகையான பார்ப்பனியத்தின் ஊடுருவலை முற்றிலுமாகத் தவிர்த்து விலக்கி முன்னறிவுடன் செயல்படும் ஒரே அமைப்பு பெரியாரியக்கமே என்பது மறுக்க முடியாத உண்மையிலும் உண்மை.

3. எடுத்துக்காட்டாக, பார்ப்பனியத்தைப் புரிந்து கொள்ள, பெரியார் நமக்குக் கற்பித்த பாடங்களுள், ஒன்றை அறிந்து கொள்வோம்.
அ. நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு தேர்தலில் இரு வேறு பார்ப்பனர்கள் வேட்பாளர்களாகக் களத்தில் நின்றனர். ஒருவர் லவுகீகப் பார்ப்பனர். அவர் எல்லாரோடும் வேறுபாடு காட்டாமல் நெருங்கிப் பழகக்கூடியவர். நம் தோளின் மேல் கை போட்டுக்கொண்டு உறவாடுபவர். கறிவிருந்துகளில் கலந்துகொண்டு உண்ணும் மாமிசப் பிரியர். முற்போக்குக் கொள்கையாளராகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்பவர். மற்றொருவரோ வைதீகப் பார்ப்பனர். ஆச்சார அனுஷ்டானங்களோடு நாமம் போட்டுக்கொண்டு பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு அய்தீகவாதியாக வலம் வருபவர். இவர்கள் இருவரில் யாருக்கு வாக்களிப்பது என்று தந்தை பெரியாரை அணுகிக் கேட்டபோது அவர் பளிச்சென்று இப்படிக் கூறினார். “நாமம் போட்ட அந்த வைதீகப் பார்ப்பனருக்கே வாக்களியுங்கள்!’’ திடுக்கிட்ட தோழர்கள் பெரியாரைப் பார்த்து “என்ன அய்யா இப்படிக் கூறுகிறீர்கள்? எங்களுக்கு வியப்பாக இருக்கிறது. தங்கள் முடிவுக்கான காரணத்தை எங்களுக்கு விளக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” என்று கேட்டார்கள்.

பெரியார் அத்தோழர்களைப் பார்த்து இவ்வாறு விடையளித்தார்: “வைதீகப் பார்ப்பான் கையில் இருப்பது என்ன ஆயுதம் என்பது பளிச்சென்று தெரிகிறது. அந்த ஆபத்தைச் சமாளிக்க முடியும். ஆனால் லவுகீகப் பார்ப்பான் கைகளில் (அதாவது முற்போக்கு முகமூடி அணிந்த பார்ப்பான் கைகளில்) இருப்பது என்ன ஆயுதம் என்று நமக்குத் தெரியாது. இவனைச் சமாளிப்பது அவ்வளவு சுலபமல்ல. (அதாவது இவன் தக்க சமயம் பார்த்து எந்த நேரத்திலும் கீழறுக்கும் வேலையைச் செய்வான் என்பது கருத்து)”

ஆ) தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதற்கிணங்க பார்ப்பனியத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது பெரியார் அவர்களை வழிமொழிவதுபோல அதே கருத்தை அண்ணல் அம்பேத்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“I will believe on orthodox Brahmin
But not heterodox Brahmin”

(சென்னையில் நடந்த ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் கருத்து. விடுதலை 7.12.2018, பக்கம் 4)
தந்தை பெரியார் அறிவுறுத்திய இந்த வழிகாட்டு நெறியின் உட்பொருள் என்ன?

முற்போக்கு அமைப்புகளுக்கு விடுக்கும் முன்னறிவிப்பு என்ன? என்பதைப் பார்ப்போம்:-

தமிழ்நாடு உட்பட இந்திய அளவில் இயங்கும் முற்போக்குக் கொள்கை உடைய கட்சிகள் இயக்கங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவை பார்ப்பனியத்தை அடையாளம் புரிந்துகொண்டு அதன் ஊடுருவலுக்கும் ஆதிக்கத்துக்கும் இடம் கொடாமல் இருக்கும் வரையில் அவை கீழறுக்கும் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள இயலும். இன்றேல் அதன் கீழறுக்கும் தந்திர வலையில் சிக்கிச் சிதறுண்டு போவதைத் தவிர்ப்பது என்பது முயற்கொம்பே.

(நிறைவு)