பக்கங்கள்

புதன், 23 ஜூலை, 2025

பனகல் அரசர் பிறந்த நாள் இன்று [9.7.1866] வாலாசா வல்லவன்


 

பனகல் அரசரின் இயற்பெயர் இராமராயநிங்கார் என்பதாகும். பழைய சென்னை மாகாணத்தில் குண்டூர் மாவட்டத்தில் இருந்த பனகாலு என்ற ஜமீன் குடும்பத்தில் 9.7.1866-இல் இவர் பிறந்தார். இளமையில் தெலுங்கையும், சமற்(ஸ்)கிருதத்தையும் இவர் காளஹஸ்தியில் பயின்றார்.

ஆங்கிலக் கல்வி கற்பதற்காக இவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். முதலாம் படிவத்தில் (ஆறாம் வகுப்பு) திருவல்லிக்கேணி பெரியதெருவில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க முயன்றனர். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி தெலுங்கு மொழி பார்ப்பனர்களால் நடத்தப்பட்டு வந்தது. இவர் பார்ப்பனரல்லாதார். எனவே அங்கு இவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். பின்பு சர்.பிட்டி. தியாகராயர் நேரில் வந்து இவரை அப்பள்ளியில் சேர்த்துவிட்டுச் சென்றார். அப்பள்ளியில் இவர் சிறப்பாகப் படித்துப் பதினொன்றாம் வகுப்பில் அப்பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.

பனகல் அரசர் உயர்கல்வியை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். 1892இல் எம்.ஏ., சமற்(ஸ்)கிருதத்தில் தேர்ச்சி அடைந்து முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை மாகாணத்தில் இருந்த சிற்றரசர்கள் குடும்பங் களில் எம்.ஏ., படித்தவர் இவர் ஒருவர் மட்டுமே.

1912-இல் டில்லி சட்டசபைக்கு, உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1915-வரை அப்பொறுப்பில் அவர் இருந்தார்.

1912இல் சென்னையில் டாக்டர். நடேச முதலியார் தொடங்கிய முதல் பார்ப்பனரல்லாதார் அமைப் பான திராவிடர் சங்கத்தில் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.1916இல் பார்ப்பனரல் லாதார் நலனுக்காக சர்.பிட்டி, தியாகராயர். டாக்டர். டி.எம். நாயர், டாக்டர் நடேச முதலியார் ஆகியோரின் முயற்சி யால் தொடங்கப் பட்ட “South Indian Liberal Federation” (S.I.L.F.)  – தென் இந்தியர் முற்போக்குக் கூட்டமைப்பில் (நீதிக் கட்சி என்றும் அழைப்பர், பலர் இதை தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்று மொழி பெயர்க்கின்றனர்.) தீவிரமாகச் செயல் படத் தொடங்கினார்.

முதலமைச்சர் அகரம் சுப்பராயலு ரெட்டியார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 11.7.1921 இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.  இதனை அடுத்து பனகல் அரசர் முதலமைச்சரானார்

11.7.1921 முதல் பனகல் அரசர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டு பல அரிய சாதனைகளைப் புரிந்தார்.

பனகல் அரசர் ஆட்சியின் சிறப்புகள்

இந்தியாவிலேயே முதன்முதலாக 5ஆம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வியை (Free & Compulsory Education)1922 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தியவர் பனகல் அரசரே ஆவார்.

20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற கொள்கையும் 500 பேர்கள் உள்ள பகுதிக்கு (அ) கிராமத்திற்கு ஒரு பள்ளி என்ற கொள்கையும் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. தொடக்கக் கல்விக்கு, முன் எப்போதும் இல்லாத அளவிற்குப் பணம் செலவிடப்பட்டது.

அதிகப்பள்ளிகள் திறக்கப்பட்டன

பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் மட்டும் 1921-1926 வரை புதியதாக 12,384 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பனகல் ஆட்சி முடிவடையும் போது (1926) சென்னை மாகாணத்தில் அரசுக் கல்வி நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 50,941

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோருக்கு அதிக இடம் கிடைக்கும் வகையில் 1922 சூன் முதல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தேர்வுக் குழுக்கள் (Selection Committee) அமைக்கப்பட்டன.

உயர்கல்வியில் 50% இடங்கள் பார்ப்பனருக்கும், 50% இடங்கள் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் கிடைக்க வழி வகை செய்யப்பட்டது. இதற்கான அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக் குழுவில் சர்.ஏ. இலட்சுமணசாமி முதலியார் நியமிக்கப்பட்டு, பார்ப்பனரல் லாதாருக்கு இடம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

1923இல் சென்னைப்பல்கலைக் கழகச் சட்டம் கொண்டு வந்து அப்பல்கலைக் கழகத்தை மாகாண அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அங்கிருந்த பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்தார். சமற்கிருதம் தெரியாமல் தமிழ் எம்.ஏ. படிக்க முடியாத நிலையை, 1926இல் மாற்றினார். சமற்கிருதம் தெரியாமல் மருத்துவம் படிக்க முடியாது என்ற நிலையையும் 1924இல் மாற்றினார்.

பெண்களுக்கு வாக்குரிமை, கல்வி

பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை வழங்கியது சென்னை மாகாணத்தில்தான். 04.07.1921 இல் சென்னை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த உரிமை வழங்கப்பட்டது. பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. எல்லாப் பெண்களுக்கும் ஆறாம் வகுப்பிற்குப் பிறகு அரைக்கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. பெண்களுக்கு விடுதிகளும் திறக்கப் பட்டன.. கைம்பெண்கள் தங்கிப் படிக்கவும் தனி விடுதி திறக்கப்பட்டது. அதில் 42 பார்ப்பன கைம் பெண்களும், பார்ப்பனரல்லாத கைம்பெண்கள் 7 பேரும் கல்வி கற்றனர்.

இந்துமத பரிபாலன போர்டு

கோவில்களில் பார்ப்பனக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த இந்துமத பரிபாலனச் சட்ட மசோதாவை 18.12.1922-இல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.  இம்மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதபடி பார்ப்பனர்கள் தடுத் தனர்.  ஆளுநரை வலியுறுத்தி நடைமுறைப் படுத்துவதற்குள் 1923 நவம்பர் மாதத்தில் முதல் அமைச்சரவையின் பதவிக் காலம் முடிவுற்றது.

இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் 19.11.1923இல் பனகல் அரசரே முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்துமதபரிபாலனச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவண்ணம் பார்ப்பனர்கள் சதி செய்து, ஆளுநரும் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்.

பனகல் அரசர் சளைக்கவில்லை . எப்படியாவது இதை நிறைவேற்றியே தீருவது என்று முடிவுசெய்து, மீண்டும் ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இம் முறை சத்தியமூர்த்தி அய்யர் சென்னைப் பல்கலைக்கழக பட்டதாரித் தொகுதி மூலமாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் இதை எதிர்த்து ஓயாமல் சட்டமன்றத்தில் பேசினார்: திட்டினார். 475 திருத்தங்களை அவர் ஒருவர் மட்டுமே கொண்டு வந்தார். மொத்தம் 800 சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. திருப்பதி கோவிலுக்கு மட்டும் விலக்கு அளித்தால் ரூ.5 இலட்சம் கையூட்டு தருவதாக பனகலிடம் பேசிப் பார்த்தனர். எதற்கும் பனகல் மசியவில்லை. 1925 நவம்பரில் வெற்றிகரமாகச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினார்.

பனகல்  அரசுமீது மடாதிபதிகளும் கோவில் நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை உயர்நீதி மன்றத்தில் தொடுத்தனர். இதனால் காங்கிரசில் இருந்த பெரியாருக்கு, பனகல் அரசர் மீது நேசம் ஏற்பட்டது. காங்கிரசைவிட்டுப் பெரியார் வெளியேறிய காலகட்டமும் அதுதான்.

காவிரி நீர்பங்கீடு

பனகல் அரசர் காலத்தில்தான் 1924 இல் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும் இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பயனாக மேட்டூர் அணை கட்டத் திட்டம் உருவாக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்று 1924 முதல் 1933க்குள் 10 ஆண்டுகளில் 5,91,38,000 ரூ. செலவில் கட்டி முடிக்கத்திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப் பட்டு 3.10,000 ஏக்கர் பாசன வசதி பெற்றுத் தமிழ்நாடு பஞ்சமில்லாமல் இருக்க வழிவகை செய்தார்.

வகுப்புவாரி உரிமை

பனகல் அரசர் 1921 முதலே வேலை வாய்ப்பில் வகுப்புரிமை அளிக்க முயற்சி மேற்கொண்டார். முதல்முறை ஆட்சியில் அவர் அதை நடைமுறைப் படுத்த விடாமல் பார்ப்பனர்கள் தடுத்தனர். ஆனால் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் அவர் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட்டார். அரசுப்  பணியாளர் தேர்வுக் குழுவை (Staff Selection Board) 1924இல் ஏற்படுத்தினார். இதில் பார்ப்பனர்ரல்லாதவர்களைத் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நியமித்து அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாதார் இடம்பெற வழிவகை செய்தார்.

1.4.1924இல் முதன்முதலில் வகுப்புரிமை அடிப்படையில் அரசுத் தேர்வுக்குழு மூலமாக நிரந்தரப் பணி நியமனம் செய்தார். அரசு ஆணை து எண் 658 – நாள் 15.8.1922இன் படியும், அரசு து, ஆணை எண் 563 – நாள் 21.7.1923இன் படியும்  இப்பணி நியமனம் செய்யப்படுவதாக அரசிதழில்  அறிவிக்கப்பட்டது.

உயர் பதவிகளில் பார்ப்பனரல்லாதார் மற்றும் ஆதித் திராவிடர்களுக்கு அதிக இடம் கிடைக்காமல் போனதற்குக் காரணம். அப்போது படித்தவர்களில் நம்மவர் அதிகமில்லை என்பது தான். 1924 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி இதுபோன்ற அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். Madras Presidency Administrative Report Communal Representation இல், கடைசிப் பக்கம்  வகுரிமை அடிப்படையில் பணி நிரப்பட்ட விவரத்தை 1924-1925 முதல் தவறாமல் வெளியிட்டு வந்தார்கள்.

- விடுதலை நாளேடு, 9.7.25

திங்கள், 21 ஜூலை, 2025

அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி இன்று 125ஆவது பிறந்தநாள் (23.6.1900 – 23.6.2025)-தமிழ்க்கோ



சுயமரியாதை இயக்க தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரி ‘திராவிட இயக்கத்தின் போர்வாள்’ என கொண்டாடப்பட்டவர்.

அஞ்சாநெஞ்சன், தளபதி என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டவர். தந்தை பெரியாரின் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றி தன் வாழ்நாள் முழுவதும் ஒரே தலைவர், ஒரே கட்சி என்று கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர்.

தஞ்சை மாவட்டம் கருக்காகுறிச்சியில் 23.6.1900 அன்று பிறந்தார். பெற்றோர் வாசுதேவன் – கண்ணம்மை மதுரை பசுமலை அமெரிக்கன் உயர்நிலைப் பள்ளியில்  10ஆம் வகுப்பு வரை பயின்றார். பின் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்தார்.

முதலாம் உலகப் போர் காலத்தில் நம் நாட்டு ராணுவத்தில் சேர்ந்து மெசபடோமியாப் பகுதியில் பணியாற்றினார். படையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பட்டுக் கோட்டை திரும்பினார்.

பரத்வாஜ் ஆசிரமத்தில் நடந்த பார்ப்பனக் கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் போராடியபோது அவரது கருத்துகளை அழகிரி முழுமையாக ஏற்றார்.  நாட்டின் பட்டித் தொட்டியனைத்திலும் பயணம் செய்து படித்தவர்களின் பாமரத் தன்மையையும், படி யாத வரின் ஏமாளித் தன்மையையும், பார்ப்பனரின் புரட்டுத் தன்மை களையும் தோலுரித்து காட்டினார்.

அழகிரி மேடையேறி வெண்கல குரலில் பேசத் தொடங்கியவுடனே, இளைஞர்கள் கூட்டம் ஆர்ப் பரிக்கும். இரும்பு துண்டுகளை கவர்ந்திழுக்கும் காந்தமென உணர்ச்சி பெருக்குடன் ‘ரதகஜதுரகபதாதிகள், ஓட்டை, உடைசல், செம்பு, பித்தளை அண்டபிண்ட சாரசரம்’ போன்ற சொல்லாட்சி யுடன் அனைவருக்கும் புரியும் தமிழில் முழங்குவார். அவரது உரை 3 மணி நேரத்துக்கும்  மேலாக நீடிக்கும். அவரது எழுச்சி மிக்க உரை சுயமரியாதை இயக்கத் திற்குத் தோன்றிய எதிரிகளை தோற்கடித்தது. அழகிரியின் பேச்சு நடையை இளைஞர்கள் பின்பற்ற முனைந்தனர்.

அஞ்சா நெஞ்சனின் பேச்சால் கவரப்பட்டவர்களில் கலைஞர் முக்கியமானவர். அவரைப் போலவே பேச வேண்டும் என்று ஆசைப்பட்டார். அழகிரி பேச்சாற்றல் குறித்து அவர் கூறுகிறார்:

சிம்மம் கர்ச்சித்தது

‘சிம்மம் கர்ச்சித்தது; புலி உறுமியது; கோடையிடி குமுறியது; பெரியார் பேச்சில் காணப்பட்ட அழுத்தம் திருத்தமான வாதமும், அழகிரி பேச்சில் காணப்பட்ட வீரங்கொப்பளிக்கும் வரிகளும், அண்ணா பேச்சின் அழகு தமிழும் என்னை வெகுவாக கவர்ந்தன’ என புகழாரம் சூட்டினார்.

சுயமரியாதை இயக்கத்தின் வீரியமிக்க பேச்சாளரான பட்டுக்கோட்டை அழகிரிசாமி  சுயமரியாதை இயக்க மேடைகள் மட்டுமின்றி மாற்றுக் கட்சி பொதுக் கூட்டங்களுக்கும் செல்வார். அங்கு மேடையில் பேசி கொண்டு இருப்பவர்களிடம் துண்டு சீட்டு அனுப்பி கேள்வி கேட்பது வழக்கம். அப்போது அழகிரிக்கும் மாற்று கட்சியினருக்கும் வாத, பிரதிவாதம் நடைபெறும். சில சமயம் கைகலப்பும் ஏற்பட்டு இருக்கிறது.

சிறப்புக் கட்டுரை

மாற்றுக் கட்சியினர் முகாம்களுக்கு சென்று கேள்வி கேட்கும் துணிச்சல்காரரான அழகிரிசாமியை அஞ்சா நெஞ்சன் என்று அழைத்தார் பெரியார்.

1945ஆம் ஆண்டு புதுச்சேரியில் திராவிடர் கழகத்தின் மாநாடு நடைபெற்றது. அப்பொழுது எதிர்ப்பாளர்கள் குழப்பம் விளைவித்து மாநாட்டு பந்தலுக்கு தீ வைத்து கலவரத்தை ஏற்படுத்தினர். மாநாட்டுக்கு – வந்தவர்களில் பலர் தாக்கப்பட்டனர். கலைஞரும் தாக்கப்பட்டு சாலையோரம் கிடத்தப்பட்டார். அவரை பெரியார்தான் காப்பாற்றி மீட்டார்.

இப்படி ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் மாலையில் நடந்த மாநாட்டுக்கு துணிச்சலாக தலைமை தாங்கினார் அழகிரி.

செங்கல்பட்டு மாநாடு

1929இல் செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாம் சுயமரியாதை மாநாட்டின்போது இரவு 10 மணிக்கு தொடங்கி  பல மணி நேரம் சளைக்காமல் உரை நிகழ்த்தினார்.

1931இல் ஈரோட்டில் நடந்த இரண்டாம் மாகாண சுயமரியாதை மாநாட்டில் தொண்டர் படை தலைவராக இருந்து மிகச் சிறப்பாக செயலாற்றி மாநாட்டின் வெற்றிக்கு அடிப்படை காரணமானார்.

1.8.1938இல் தந்தை பெரியார் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை துவக்கியபோது தளபதி அழகிரி உறையூரிலிருந்து ‘தமிழர் பெரும்படை’ என்ற பெயரில் சென்னைக்கு 600 மைல்கள் நடைபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  புதிய வரலாறு படைத்தவர். நடை பயண கலாச்சார அரசியலை முதலில் அறிமுகப்படுத்தியவர் தளபதி அழகிரியே எனக் கூறலாம்.

உழைப்பின் சின்னமாய் உலவிய தளபதி அழகிரி உடல் நலனை  கவனிக்கத் தவறியதன் விளைவு காசநோயால் பாதிக்கப்பட்டார். நலம் குன்றியிருந்தும் கூட்டங்களுக்கு சென்று உரை நிகழ்த்துவதை நிறுத்தவில்லை.

அஞ்சா நெஞ்சன் அழகிரியின் பால்தான் கொண்ட அன்பால், ஈர்க்கப்பட்ட பேச்சால் தான் வளர்ந்து நிற்கிறேன் என்று பிற்காலத்தில் குறிப்பிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.

மறுபடியும் காண்பேனா?

1948இல் ஈரோட்டில் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றபோது உடல் நலிவோடு இருந்த தளபதி அழகிரி கலந்து கொண்டார். ‘அப்போது அவர் பேசும்போது உங்கள் அனைவரையும் மறுபடியும் காண்பேனா? என்று சொல்ல முடியாது. என் தலைவருக்கும், தோழர்களுக்கும் இறுதியாக என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளவே இப்போது வந்தேன்?’ என்று தழுதழுத்த குரலில்கூறி கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை கண் கலங்க வைத்தார். மேடை உணர்ச்சி பிளம்பாக காட்சியளித்தது.

அவர் சொல்லியபடியே நடந்தது.

28.3.1949 அன்று அந்த ஒய்வறியா உழைப்பாளியின் விழிகள் திறக்கவில்லை. வாழ்வியல் பாடத்தைப் போதித்த வணங்காமுடி மண்ணில் இருந்து மறைந்து வரலாறானார்.

அழகிரியின் முடிவு செய்தி கேட்டு தந்தை பெரியார் மிகுந்த வேதனையடைந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,

‘‘நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். அழகிரிசாமி எனக்கு 30 ஆண்டு நண்பரும், என்னை மனப்பூவர்மாய், நிபந்தனை இல்லாமல் பின்பற்றி வருகிற ஒரு கூட்டு பணியாளருமாவார்.

கொள்கை வேற்றுமை, திட்ட வேற்றுமை என்பது எனக்கும் அவருக்கும் ஒரு நாளும் காண முடிந்ததில்லை. அவருடைய முழு வாழ்க்கையிலும் அவர் இயக்கத் தொண்டைத் தவிர வேறு எவ்வித தொண்டிலும் ஈடுபட்டதில்லை.

போதிய பணம் இல்லை

விளையாட்டுக்குகூட கொள்கையை விலைபேசி இருக்க மாட்டார். அப்படிப்பட்ட ஒருவர் ‘‘உண்மையான வீரமும், தீரமும் உள்ளவர் இச்சமயத்தில் முடிவெய்தி விட்டது என்பது எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது என்பதோடு இயக்கத்துக்கும் பதில் காண முடியாத பெருங்குறை என்றே சொல்லுவேன்’’ என்று வீர வணக்கம் செலுத்தி இருந்தார்.

நாதஸ்வர வித்வான் தோளில் துண்டு போடுவதற்கு இருந்த தடையை உடைத்த தளபதி அழகிரி

செட்டி நாட்டில் கானாடுகாத்தான் என்ற ஊரில் முக்கிய பிரமுகர் இல்ல திருமண நிகழ்வு. திருமண ஊர்வலத்தில் பிரபல நாதஸ்வரக்  கலைஞரான மதுரை சிவக்கொழுந்து துண்டைத் தம் தோளின்மீது போட்டுக் கொண்டு நாதசுரம் வாசிக்கிறார்.  இதைக் கண்ட ஆதிக்க ஜாதி  வர்க்கத்தினர் அந்த துண்டு தங்களை அவமதிப்பாக கூறி அதை எடுக்கும்படி கூறினர். ‘‘இது துண்டு அல்ல; வியர்வையை துடைக்கும் கைக்குட்டை’’ என்று சிவக்கொழுந்து  கூறினார். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத ஆதிக்க வர்க்கத்தினர்  துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ளும்படி வற்புறுத்தினர். திடீரென கூட்டத்தில் இருந்து ஒரு குரல் சிவக்கொழுந்து துண்டை எடுக்காதீர்கள் என ஒலித்தது  அந்தக் குரலுக்குசொந்தக்காரர் பட்டுக்கோட்டை அழகிரி. ஊர்வலம் நடுத் தெருவில் நின்றது. அவ்வூரிலேயே அய்யா அவர்களும் தங்கியிருந்ததால் அவரிடம் விரைந்து சென்று தகவல் தெரிவித்து அடுத்த நடவடிக்கைக்கான இசைவு பெற்றுத் திரும்புகிறார் தளபதி அழகிரிசாமி.

‘என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நானிருக்கிறேன் தோள் துண்டை எடுக்கக் கூடாது’ என்று கர்ஜிக்கிறார் அழகிரி.

கழகத் தோழர்கள் திரண்டு வர சிவக்கொழுந்து தோளில் துண்டணிந்தவாறே பெருமிதத்துடன் நாதசுரம் வாசித்து வர அவருக்கு அழகிரி விசிறியால் வீசிக் கொண்டே  ஊர்வலத்தில் நடந்து வந்தார்.

- விடுதலை நாளேடு,23.6.2025

ஞாயிறு, 20 ஜூலை, 2025

பேசுவது பெரியாரல்ல; காமராசர்! கடவுள், மதம், திருவிழா, சடங்கு சம்பிரதாயம் பற்றி காமராசர்




இன்று ஜூலை 15 – கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசரின் 123ஆவது ஆண்டு பிறந்த நாள். இதையொட்டி “மாலைமலர்” நாளேடு பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் சிறப்பு மலர் என்று நேற்று (14.7.2025) வெளியிட்டுள்ள சிறப்பு மலரில் “காமராஜரும் ஆன்மீகமும்…” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு முக்கியப் பேட்டி அப்படியே எடுத்துக் கொடுக்கப்படுகிறது!
உண்மையான காமராசர் தொண்டர்கள் இதுபற்றி படிக்கவும் சிந்திக்கவும், பரப்பவும் முன் வரவேண்டும்.
– ஆசிரியர்

ஆன்மீகம் பற்றி ஒரு முறை காமராஜர் அளித்த பேட்டி வருமாறு:-

“கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா?”

“இருக்கு, இல்லைங்கிறதைப்பத்தி எனக்கு எந்தக்கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்கியனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப்போச்சா?”

“கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒன்னாயிருக்கும் போலிருக்கே”

நேரு ரெண்டப்பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனால் மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார். அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில் போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச்சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிறதத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறனும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான் இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா?”.

“அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக்கிறீங்களா?

இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதி ன்னு படைச்சிருக்க மாட்டாரே?”  “மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடு ன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன்? சூத்திரன்? ரொம்ப அயோக்கியத்தனம்!”.

“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ளவில்லை?”

சிறப்புக் கட்டுரை

“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்” னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே. அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது.

நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல் வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக்கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன்” பண்றவனோட வேலை.

“நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே! தனிப்பட்ட முறையில நான் கோவில், பூஜை. புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்”.

“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா?”

“அதெல்லாம் வேலை, வெட்டியில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத் ராடனம் போறான் எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலை’ன்னு இவன்கிட்டே கோவிச்சுகிட்டான்? அபிஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன். அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா?

“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க? பதினெட்டு வருஷமா கடன் காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக.ஒரு அனாதை இல்லத்துக்கோ. முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லியா.

ஊருக்கு நூறு சாமி வேளைக்கு நூறு பூஜைன்னா. மனுஷன் என்னிக்கு உருப்படறது? நாட்டுல வேலை யில்லாத் திண்டாட்டம். வறுமை, சுகாதாரக்கேடு. ஏற்றத்தாழ்வு இத்தனையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு. பூஜைன்னேன்..?

ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்?”

“அப்படியானா, நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா? இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?”

“லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டு தான் இருப்பாரா?”

அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு “டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான்.

மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பசுவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவராயன், கழு வடையான். முனியன், வீரன்னு கும்பிட்டான்.

எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்? அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்.

மதம் மனிதனுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களப் போக்குமா? இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?”

“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே! அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?”

“டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டான்னேன்!

இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா அது மாதிரி அக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான்.

அந்தப் புத்தகங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும். காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி.

“அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க.

புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.”

நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல புதுசு கட்டுனதுமில்ல பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம கலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்”.

“மதம் என்பதே மனிதனுக்கு அபின்!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத்தோணுதே?”.

“நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா?

ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான்.

கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க்கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா? அதையெல்லாம் செய்யமாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான்.

மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்.”

“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா? அதிலேருந்து எப்போ விலகுனீங்க?”

“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன்.

1930க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன்.

அப்புறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன்.

ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?”

“அப்படியானா மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே அதப்பத்தி?”.

“அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு, ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்மள வாழ்த்தும்னேன்!”

– நன்றி: ‘மாலை மலர்‘, பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் சிறப்பு மலர், 2025
(பக்கம் 36, 37) 14.7.2025

 - விடுதலை நாளேடு, 15.7.25