பக்கங்கள்

வியாழன், 17 ஏப்ரல், 2025

சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (1-3)

 

பதிலடிப் பக்கம் : சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (1)

விடுதலை நாளேடு
பதிலடிப் பக்கம்

கவிஞர் கலி.பூங்குன்றன்

தன்மான இயக்கம் – திராவிடர் கழகம் என்று வருகின்றபோது – அதன் கொள்கைகள் என்கிற வாட்படை சங்கராச்சாரியாரின்கொள்கைகள் என்கிற ஆணி வேரை வெட்டி அக்னிக்கு இரையாக்குபவையாகும்.
பிறப்பில் பேதம் என்பது சங்கராச்சாரியார்களின் இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். பிறவியில் பேதம் கூடாது என்பது தந்தை பெரியாரின் கோட்பாடாகும்.
இந்த வகையில் சங்கர மடமும் பெரியார் நிறுவனமும் எதிர் துருவங்களாகும்.
தந்தை பெரியாரின் தன்மான இயக்கம் சூறாவளியாகச் சுழன்று வீசிய அந்தக் கால கட்டத்தில் சங்கர மடங்களை நடு நடுங்கச் செய்தது என்பதுதான் உண்மை.

தந்தை பெரியாருக்கு சிருங்கேரியாரின் மடல்!

சிருங்கேரி சங்கராச்சாரியார் தந்தை பெரியாருக்கு ஸ்ரீமுகம் (கடிதம்) எழுதினார். (‘குடிஅரசு’ 2-3-1930)
தந்தை பெரியாரையும் அவர்தம் தொண்டு களையும் புகழ்ந்து எழுதி, தமது மடத்துக்குத் துணைவியாருடன் வரவேண்டும் என்று வேண்டு கோள் விடுத்திருந்தார்.
அதற்குத் தந்தை பெரியார் பதிலும் எழுதினார்.
“அந்த ஸ்ரீமுகத்திலே சனாதன தருமத்தைக் கெடுக்காமல், கரும காண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமையைச் செய்து ‘சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வரையில்’ என்கிற நிபந்தனைகள் கண்டு, அதற்கு விரோதம் இல்லாமல் சில சுவ தந்தரங்கள் அளிக்கப்படும் என்கின்ற வாசகங்கள் காணப்படுகின்றபடியால், நாம் அங்குச் செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கிற விஷயம் நமக்குச் சந்தேகமாக வேயிருக்கின்றது” என்று பதில் எழுதினார். அங்கே செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
சங்கராச்சாரியார்கள் பற்றி தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ ஏடு வரிந்து தள்ளி இருக்கிறது. அதுவும் கைவல்யம் கட்டுரைகள் தூள் பறக்கச் செய்யக் கூடியவை. ஒரு ஊருக்குக் கைவல்யம் வருகிறார் என்றால் சங்கராச்சாரியார்கள், சந்நியாசிகள், உபந்நியாசிகள் சிறுநீர் கழித்து விடுவார்களாம். அந்த அளவுக்கு சாஸ்திரங்களில் கற்றுத் துறை போனவர்; அவரின் விவாதங்கள் வேதியத்தின் வேரைத் துளைத்து வெற்றிக் கொடியை நாட்டுவதாக இருக்கும்.

தோலுரிக்கிறார் தந்தை பெரியார்

பதிலடிப் பக்கம்

லோகக் குரு என்று சங்கராச்சாரியார்களை அழைக்கிறார்களே அதுபற்றி தந்தை பெரியார் கூறுகிறார்:
சங்கராச்சாரியார்கள் இந்தியாவுக்குக் குரு அல்ல. இந்துக்களில் பார்ப்பனர்கள் எல்லோருக் கும் குரு அல்ல. பார்ப்பனர்களில் உள்ள பல பிரிவுகளில் ‘ஸ்மார்த் தர்கள்’ என்கிற ஒரு சிறு கூட்டத்தாருக்கு இவர் குரு என்ற பாத்திர முடையவர். அச்சிறு கூட்டத்தாருக்கும் இவரைப் போல் இன்னமும் நான்கு அய்ந்து சங்கராச் சாரியார்கள் என்போர்கள் உண்டு. ஆகவே ஒரு சிறு கூட்டத்தில் அதாவது நமது நாட்டிலுள்ள சில ஆயிரக்கணக்கான மக்களில் 5 அல்லது 6 இல் ஒரு பாகத்தாருக்குக் குரு என்று ஏற்பட்ட ஒருவர், அக்கூட்டத்தின் செல்வாக்காலும், தந்திரத்தாலும், ஏமாற்று தலாலும் – நம்மவர்களின் அறிவீனத்தாலும், ஏமாந்த தனத்தினாலும் லோகக் குரு என்பதாக அழைக் கப்பட்டு, இந்துக்கள் என்கிற எல்லா மக்களுக் கும் குருவாகி, கோடிக் கணக்கான ரூபாய்களை கொள்ளை அடித்து வெறும் பார்ப்பனர்களுக்கே பொங்கிப் போட்டு பார்ப்பனப் பிரச்சாரம் செய்து வருகிறார் (குடிஅரசு 25-9-1927).
இவ்வாறு தந்தை பெரியார் லோகக் குரு என்ற பந்தாவின் அந்தரங்கத்தை அலசியுள்ளார்.

தோலுரிக்கிறார் அண்ணா!

தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பேசினார் (11-4-1942)
“இவ்வருஷம் மிராசுதார்கள் தங்களுடைய நியாயமான வரவு செலவு போக எஞ்சியிருக்கும் பணத்தை ஏழைகளுக்கு அன்னமிடுவதில் செலவு செய்ய வேண்டுமென்றும், வீடு கட்டுவதோ, நிலம் வாங்குவதோ, ஆபரணங்கள் செய்வதோ, பாங்கியில் போடுவதோ கூடா தென்றும், வியாபாரிகள் இதரர்களும் அதே மாதிரி இவ்வருஷம் கிடைக்கும் லாபத்தை மேற்சொன்ன வழியில் விநியோகிக்க வேண்டு மென்றும், அந்தப் பணத்தைத் தன்னுடைய குடும்பச் செலவுக்கு உபயோகப்படுத்தாமல், அதை விஷமாகப் பாவிக்க வேண்டும்” என்றும் பேசினார்
இதனை எடுத்துக்காட்டி அறிஞர் அண்ணா விவேகமிக்க வார்த்தை சாட்டைகளால் வேண்டும் மட்டும் விளாசித் தள்ளியுள்ளார் (திராவிட நாடு’ 19-4-1942).
தலையங்கத்தின் தலைப்பே வேடிக்கையானது.

“சங்கராச்சாரி பதவி தற்கொலை!”

ஏப்ரல் 11ஆம் தேதி மன்னார் குடியில் ஜகத் குரு சங்கராச்சாரியார் பேசியுள் ளார். அவரது சொற்பொழிவிலே காணப்படும் சில கருத்துகள், பிறருக்கு உபதேசமாக இருத்தலுடன் அவருக்கே சட்ட திட்டமாகவும் அமைவதாயின், அவரது பதவியைத் துறந்து, பாதசாரியாகி, பாட்டாளி யாகி, பாராருக் குழைக்கும் பண்பின ராகி அவர் வெளிவந்து விடுதல் வேண்டும்.
முதலில்லா வியாபாரம்! சோக மில்லா வாழ்வு! உழைப்பு கிடையாது! உல்லாசத்திற்குக் குறைவு கிடையாது! இங்ஙனம் இவர் வாழ்ந்து கொண்டு, மிராசுதாரர், வியாபாரி, மற்றவர் ஆகியோருக்கும் இதோபதேசம் புரிவது ஏதேனும் பொருளுடைய தாகுமா? கன்னக் கோலன் கனவின் கேடு பற்றியும், காம உள்ளத் தான் ஒழுக்கப் போதனை யையும், கசடன் கற்றதனாலாய பயனையும் எடுத்துக் கூறுவது எள்ளி நகையாடக் கூடியதன்றோ.. என்று அடுக்கிக் கொண்டே போகின்றார் அறிஞர் அண்ணா.

தோலுரிக்கிறார் தமிழர் தலைவர்

திராவிடர் இயக்க வரலாற்றில் இந்தத் திசையில் திராவிடர் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குன்றத்துப் பெரு விளக்காக ஒளி வீசுகிறார்!
சங்கராச்சாரியார் பற்றி 1983இல் அவர் ஆற்றிய அந்த பத்துச் சொற்பொழிவுகள் காலத்தை விஞ்சி நிற்கக் கூடியவை. கசடனும் கற்றுத் தெளியக் கூடியவையாகும் ‘சங்கராச் சாரி-யார்?” என்ற அந்த நூல் “நூல்களின் ஆதிக்கத்தை” கறாராக அறுத்தெறியக் கூடியதாகும்.
ஆங்கிலத்திலும் The Saint or Sectarian என்ற பெயரில் வெளிவந்து (1988) லோகக் குருவை லோகம் முழுவதும் முகத்திரையைக் கிழித்துக் காட்டிவிட்டது.
அதேபோல காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாகக் காஞ்சீபுரம் மடத்தை விட்டு வெளியேறினாரே (23–8–1987) அதன் பின்னணியை வெளிப்படுத்தி, அதனை ஆவணமாகத் தமிழ்நாட்டுக்குத் தந்த பெருமையும் அவருக்கே உரியது.

இப்பொழுது கொலைக் குற்றவாளியாகி, மக்கள் மன்றத்திலே மானம் மரியாதை இழந்து குமுறிக் கொண்டிருக்கும் ஜெயேந்திர சரஸ்வதி குறித்து மக்கள் மன்றத்திலே அவர் ஆற்றிய உரைகள் அலாதியானவை. அவ்வுரைகளும் “புதிய திருவிளையாடல் புராணம் – காஞ்சி சங்கராச்சாரியார்கள்மீது கொலை வழக்கு, ஏன்? எதற்கு? எப்படி?” (முழுத் தகவல்கள்) என்ற தலைப்பில் 254 பக்கங்களில் வெளிவந்து பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன. அந்தச் சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு பல்துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் கடல் அலைபோல்கூடி ஆர்ப்பரித் தார்கள். 25-11-2004 முதல் 16-4-2005 வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஏழு சொற்பொழிவுகளை ஆதாரப் பூர்வ ஆய்வுரை களாக நிகழ்த்தினார்.
இதில் இன்னொன்றையும் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும். பெரும் செல்வாக்கு உள்ளவர். குடியரசுத் தலைவர் பிரதமர்கள் எல்லாம் அவர் கால்களில் மண்டியிடுகின்றனர் என்பதை அறிந்திருந்தும், அந்தக் காஞ்சி சங்கராச்சாரியாரை ஜெயேந்திர சரஸ்வதியை தக்க ஆதாரங்களின் அடிப்ப டையில் கைது செய்தாரே (11-11-2004- ஒரு தீபாவளி நாளில்) தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா -அது சாதாரண மானதல்ல. மனந்திறந்து பாராட்ட வேண்டும்.

வேடத்தாலும், பிரச்சாரத் தந்திரங்களாலும் மக்கள் மன்றத்திலே ஊதி வானத்திலே பறக்க விடப்பட்ட அந்த லே(ம)ாகக் குரு என்கிற பலூனை சட்டத்தின் ஊசி முனையாலே வெடித்துச் சிதற அடித்துவிட்டார்.
சங்கராச்சாரியார்கள், சாமியார்கள், சந்நியாசிகள் என்றாலே கேவலமானவர்கள், வேடதாரிகள், காமக் கிறுக்கர்கள், கொலையும் செய்ய அஞ்சாதவர்கள் என்கிற உண்மை வெளிச்சத்துக்கு இதன் மூலம் வந்துவிட்டது. அவர்கள் குடலைக் கிழித்துக் காட்டினாலும் பக்தர்களேகூட நம்பத் தயாராக இல்லை என்பதுதான் எதார்த்தமாகும். இது திராவிடர் இயக்கத்துக்கு – தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியன்றோ!

இவர்தான் ஜெயேந்திரர்!
திருக்குறள்பற்றி ஜெயேந்திர சரஸ்வதி

பதிலடிப் பக்கம்

(2-4-1982 அன்று ஈரோட்டில் திருக்குறள் முனுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்)
“திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை, அதிலும் முதலில் பத்துக் குறட்பாக்களை மட்டும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு, பொருட்பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசி யமில்லை என்று காஞ்சி மடத் தலைவரான தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி துறவியார் திருக்குறளைப் பற்றித் திரிபான முறையில் தம் கருத்தைக் கூறியிருப்பது அதிர்ச் சியையும் வருத்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து திருக்குறளைப்பற்றி புறங்கூறி வருவதற்கு கண்டனம் தெரிவிப் பதுடன், அக்கருத் துக்களை திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள் பேரவை கேட்டுக் கொள்கிறது”.

• • •

விஜயேந்திரர் சொல்கிறார்:

“நமதுநாடு பல புராண, இதிகாச, சாஸ்திரங்களைக் கொண்டுள்ளது. அவைகளின் படி நடந்தால் மட்டுமே நமது நாடு சிறப்பான பாதையில் செல்ல முடியும். நமது சாஸ்திரங்கள் கூறுகிறபடி நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர் கள் நாத்திகராக இருக்கக்கூடாது, ஆத்திக ராகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை நல்ல முறையில் நிருவகிக்க முடியும். ஆட்சியாளர்கள் ஆன்மீக சிந்தனையோடு செயல்பட்டால் மட்டுமே நாடு சுபிட்சமாகத் திகழும். ஆன்மீக சிந்தனையைப் பாதுகாப் பதிலும், வளர்ப்பதிலும், ஆட்சியாளர்கள் ஈடுபட வேண்டும்”
(காஞ்சீபுரத்தில் 23-7-2000 அன்று நடைபெற்ற பசுவதைத் தடுப்பு மாநாட்டில் பேசியது)

• • •

திருப்பதியில் ஜெயேந்திரர் அத்துமீறல்:

3.11.2000 அன்று திருப்பதியில் தோமாலை சேவையின் போது குல சேகரன் படியில் அமர்ந்து அங்கு அர்ச்சகர்கள் ஆட்சேபித்தும், ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி) காஞ்சி ஜெயேந்திரர் அர்ச்சனை செய்தார். இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.
குறிப்பு: கருவறையில் அர்ச்சகர்கள் தவிர யாரும் அர்ச்சனை செய்ய எந்த ஆகமமும் உரிமை வழங்கவில்லை என்று அவர்களே கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஜெயேந்திரர் நுழைந்தது எப்படி?

• • •

சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் (ஜெயேந்திரர்) யார் பெரியவர் என்பதில் சண்டை:

14-2-2001 அன்று இராமேசுவரம் இராமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ் வதி ஆகியோரும் சிருங்கேரி சங்கராச் சாரி யாரும் கலந்துகொண்டனர், விழாக் குழுவினர் இந்தச் சங்கராச்சாரிகளுக்கு சிறப்புச் செய்யும் பொழுது யாருக்கு முதல் மரியாதை என்பதில் மோதல் ஏற்பட்டது, உடனே, மதுரை ஆதீனம் தலையிட்டு அன்று இரவு விடிய விடிய கட்டப் பஞ்சாயத்து நடத்தி இரண்டு மடாதிபதி களுக்கும் சமரசம் செய்து வைத்தார்.
(தினபூமி 15-2-2001)

• • •

திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் செய்து காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 5-4-2002 அன்று அணிவித்தார்.
(‘மாலை மலர்’ 16-3-2002)

• • •

“ஆண்டவனுக்கு மேல் அந்தணன்!”

9-10-2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்’ எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘அருந் தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நூலை வெளியிட்டு ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாவது:
“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்ட போதும்… அந்தணர்தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன்கூட அப்புறம்தான். அந்தணன்தான் முதலில்!
(நக்கீரன்: 15-11-2002)
(தொடரும்)

பதிலடிப் பக்கம் : சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (2)

பதிலடிப் பக்கம்

கவிஞர் கலி.பூங்குன்றன்

கோயிலில் தாழ்த்தப்பட்டோர்
நுழைவு பற்றி ஜெயேந்திரர்;
ஆதி – திராவிடர், அரிஜன் போன்றவர்கள் எல்லாம் கோயிலுக்குச் சென்றுவிட்டுத்தான் வருகிறார்கள். அதில் பிரச்சினை இல்லை, ‘தலித்’ என்ற பெயரில் வரும்போதுதான் குழப்பம். ஆரோக்யசாமி, யூசுப் போன்ற பெயர்களில் வருகிறார்கள். இதனால் கோயிலுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடும் என பயப்படுகிறார்கள். நான்கு பேர், அய்ந்துபேர் போனால் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை, கும்பல் கும்பலாகப் போனால் எப்படி? கோயிலில் பாதுகாப்புக் கருதியே அவ்வாறு தடை செய்யப்படலாம்.
(தினகரன் 16-11-2002)

• • •

தீண்டாமை ஒழிப்பு வீரரா இவர்?
10-11-2002 அன்று மதுரை மாவட்டம் தும்பைப் பட்டிக்குச் சென்றார் ஜெயந்திரர். அது முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த ஊர். அவ்வூர் வீரகாளியம்மன் கோயிலில் வந்து இறங்கினார், அக்கோயில் பூசாரி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர். அவர் தீப ஆராதனை காட்டினார். அதனைக் கும்பிட்ட ஜெயேந்திரர் அவர் கொடுத்த பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவரை யாரும் நெருங்கி விடாதபடி கவனித்துக் கொண்டனர் அவரின் பாதுகாவலர்கள். சுவாமிகளை யாரும் தொட்டு விடக் கூடாது என மைக்கில் திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டே இருந்தனர். ஜெயேந்தி ரரும் தன் தோளில் அணிந்திருந்த சால்வையை எடுத்து தலித்துகள் தன்னைத் தீண்டி விடாதபடி கால்களை மறைத்துக் கொண்டார்.
கோயில் நிகழ்ச்சிக்குப்பின் கக்கன் நினைவு மண்டபத்துக்கு வந்து ஜெயேந்திரர் மாலையிடுவார் எனத் திட்டமிடப்பட்டு இருந்தது. மக்களும் அங்கே காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் அங்குச் செல்லாமல் புறப்பட்டு விட்டார்.
(நக்கீரன் 10-11-2002)

• • •

ஜெயிலுக்குப் போவோர் யார்?
கேள்வி: சமீப காலமாக மக்களை ஏமாற்றும் போலிச்சாமியார்கள் நிறைய பிடிபடுகிறார்கள். யார்மீது தவறு?
ஜெயேந்திரர் பதில்: மஷனுக்குப் பேராசை இருக்கிற வரைக்கும் இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். என்னா சுருக்கு வழியில் சம்பாதிக்கனும்னு ஆசைப்படுகிற நிறைய பேர் போலிச் சாமியாராக எழுந்தருளி இருக்காங்க. ஜனங்களும் இவங்கள நம்பிப் போறாங்க. இதனால ஜனங்க, சாமியார்கள் இரண்டு பேருக்குமே ஆபத்து வருது, ஆனா, ஜனங்க தப்பிச்சு வேறொரு சாமியார்கிட்ட போயிடு றாங்க, இவங்கள நம்பி வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. அதனால் இந்த விஷயத்தில் சாமியார்கள்தான் பொது ஜனங்ககிட்ட இருந்து பயந்து ஒதுங்கியிருக்க வேண்டும். (சொல்லிவிட்டு வாய்விட்டு ரசித்துச் சிரிக்கிறார்)
(குங்குமம் – 27-8-1998)
குறிப்பு: அப்படி சொன்னவரே ஜெயிலுக்குப் போனார் என்பதுதான் சுவையான சங்கதி ஹ…ஹ…ஹ…

• • •

இமாம் பசந்த் இனி “இராம் பசந்த்” அண்மையில் மதுரைக்கு விசிட் அடித்தார் சங்கராச்சாரியார். அவரைச் சந்தித்து ஆசி வாங்கிய பக்தர்கள் கூட்டத்தில் ஒருவர் மாம்பழங் கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு, “இது உரம் போடாமல் இயற்கையாக காய்த்துப் பழுக்கவச்ச பழம்” என்று சொல்ல…
“அப்படியா? இந்த மாம்பழத்தின் பெயர் என்ன?” என்று ஆர்வமாகக் கேட்டிருக்கிறார் சங்கராச்சாரியார்.
உடனே அந்த பக்தர் ‘இமாம் பசந்த்’ என்று சொல்லியிருக்கிறார்.
” மாம்பழத்திற்கு இப்படி ஒரு பெயரா?” என்றபடி சிரித்த சங்கராச்சாரியார் “பரவா யில்லை சீக்கிரமே இதையும் இராம் பசந்த்துன்னு மாத்திட்டாப் போச்சு” என்றாராம்.
(ஜூனியர் விகடன்’ 1-6-20)
குறிப்பு: பழத்தின் பெயரைக் கேட்கும்போது கூட இப்படி ஒரு துவேஷம்!

• • •

சர்ச்சைக்குரிய இடத்தில்
இராமர் கோயில் கட்ட வேண்டும்
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி யொன்றில் காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அயோத்தியில் தற்போது சர்ச்சைக்கு உரிய இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் இராமர் கோயில் கட்டப்பட வேண்டும், இதற்கான சமரச முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன்”
(‘தினத்தந்தி’ 5-6-2008)
இவர்தான் இரு மதத்தவர்களுக்கிடையே சமரசம் செய்யச் சென்றார் என்பது சரியான தமாசுதான்.
காஞ்சி சங்கராச்சாரியார் குறித்த மேற் கண்ட தகவல்கள் மூலம் அவரின் பார்ப்பன வெறியும், இந்துமதக் குரூரமும் தான் என்கிற ஆணவமும் விளங்கவில்லையா?
இவர்கள்தான் ஆணவம், கன்மம், மாயைகளைத் துறந்தவர்களாம்! – வாயால் சிரிக்க முடியுமா?
3
இவர்களை அடையாளம் காண வேண்டாமா? “ஒரே சுடுகாடு கூடாது”
எல்லா ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு இருக்க வேண்டும் என்ற கருத்தை காஞ்சி சங்கராச்சாரியார் எதிர்த்துள்ளார். எல்லா வகுப்பினரும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததால் இது முடியாத ஒன்று என்றார் அவர்.
இது சாத்தியப்படாது என்று கூறிய சங்கராச்சாரி, ஒரே சுடுகாடு தேவை என்பதை வலியுறுத்தவில்லை.
மின்சார சுடுகாடு இந்து தர்மத்துக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டும் என்று கூறிய அவர், மதமும், அரசியலும் ஒன்றாக கலக்கக் கூடாது என்றார். நாகர்கோயிலில் நடைபெற்ற வகுப்புக் கலவரத் தில் சில அரசியல் கட்சிகளுக்குப் பங்கு உண்டு என்று அவர் குற்றம் சாட்டினார். மதுரையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்த போது இவ்வாறு கூறியிருக்கிறார்.
(‘விடுதலை’ 8.3.1982 திங்கள் பக்கம் 1)

• • •

பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது
Sankaracharya Against Quota for women in politics. Virtually rejected for the demand for Seperate reservation for women.
(‘The Pioneer’ 17-3-1997)

• • •

செருப்புக்குப் பூஜை!
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிருக்கை கிராமத்தில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெயரால் மணி மண்டபம் – ரூ.3 கோடி செலவில்; 151 தூண்கள்; முழுக்க கிரானைட் கற்கள்; அவரது செருப்பு வைத்துப் பூஜிக்கப்படும்.
(‘ஆனந்த விகடன்’, ஜூன் 1997)

• • •

பி.ஜே.பி.க்கு ஆதரவு
திருவானைக்காவில் கோயில் திருப்பணிகளைத் துவக்கி வைத்து பின் செய்தியாளர்களிடம் ஜெயேந்திரர் கூறியது.
பி.ஜே.பி. என்றால் வெறுக்காமல் ஸ்திரமான அரசு ஒன்றை அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்
(‘தினமலர்’, 19-3-1998)

• • •

அணுகுண்டுக்கு ஆதரவு
அணுகுண்டு சோதனை வெற்றிக்கு ஜெயேந்திரர் பாராட்டு!
(‘தினமணி’, 16-5-1998)

• • •

பாபர் மசூதி – ஒரு கட்டடம்!
அயோத்தியில் கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை.
(‘தினமணி’ 27.11.2000 பக்கம் 1)
குறிப்பு: பாபர் மசூதி சங்கராச்சாரியார் பார்வையில் ஒரு கட்டடம் – அவ்வளவுதான்: மற்றவர்களின் வழிபாட்டுத்தலம் என்றால் இவர்களுக்குக் கிள்ளுக்கீரை – அப்படித்தானே!
இந்துக் கோயில்கள் மட்டும் கட்டடம் அல்லாமல் வேறு என்னவாம்
விஜயகாந்துக்குத் தூபம்!
ரஜினியுடன் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம். விஜயகாந்த்துக்கு ஜெயேந்திரர் அட்வைஸ்.
(‘குமுதம்’, 18.1.2001)
குறிப்பு: ஒரு சங்கராச்சாரியாருக்கு இதுதானா வேலை? இன்றைக்கு விஜயகாந்த் என்கிற நடிகர் கட்சி ஆரம்பித்துள்ளதற்கு இவர்தான் காரணமோ!

காசைக் கரியாக்கு!
தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது மதம் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் அரசியலோ, நீதிமன்றமோ தலையீடு செய்வது சரியாக இருக்காது.
தீபாவளிப் பண்டிகைக்குக் காரணமான நரகாசுரன் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் கிருஷ்ண பரமாத்வால் வதம் செய்யப்பட்டான். எனவே அந்த நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பதில் இந்துக்கள் அதிக ஆர்வம் காட்டுவது எப்படி தவறாகும்?
(“தினமலர்”, 2.11.2001)
குறிப்பு: காசைக் கரியாக்காதே என்று அறிவுரை சொல்ல வேண்டியவர் இந்து மதம் என்கிற வெறியுடன் இப்படிச் சொல்லுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
தமிழ்மீது வெறுப்பு
கரூர் மாவட்டம் திருமலை முத்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு 9.9.2002 அன்று தமிழில் மந்திரம் சொல்லி நடைபெற்றது. இதனைக் கண்டித்து கோயில் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் எழுதிய ஜெயேந்திர சரஸ்வதி, கும்பாபிஷேகங்களில் சமஸ்கிருத மந்திரங்கள் தொன்று தொட்டு ஓதி வரும் வழக்கத்தை கைவிடுவது முறையல்ல என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
(‘இந்தியா டுடே’, 2.10.2002)
குறிப்பு: தமிழில் குடமுழுக்கு நடந்ததால் கோயில் குருக்கள் பார்ப்பனர்கள் கோயிலை இழுத்து மூடினார்கள். தீட்டுக் கழித்துத் தான் மீண்டும் கோயிலைத் திறந்தார்கள். பார்ப்பனர் களும் தமிழர்கள்தான் என்று சொல்லுபவர்கள் இந்த இடத்தைக் கவனிப்பார்களா?
பார்ப்பன மயமே!
காஞ்சீபுரத்தை அடுத்த கலவையில் சங்கர மடம் நடத்தும் முதியோர் இல்லத்தில் 160 பேர்; வேத பாட சாலையில் 21 சிறுவர்கள்; அனைவரும் பிராமணர்கள்.
(‘தினமணி’, 16.1.2005)
• சுடுகாட்டிலும் கூட பேதம் இருக்க வேண்டும்.
• பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது
• செருப்புக்குப் பூஜை
• பி.ஜே.பி.க்கு ஆதரவு
• தமிழில் குடமுழுக்குக் கூடாது
• பார்ப்பனர்களுக்கு மட்டுமே இடங்கள்.
இப்படிக் கூறுபவர்கள் நடந்து கொள்பவர்கள் தமிழின விரோதிகள் அல்லவா – சமத்துவத்துக்கு எதிரிகள் அல்லவா?
இவர்களை இன்னமும் லோகக் குரு என்று மதிப்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?
தமிழர்களே சிந்தியுங்கள்!
(தொடரும்)

 

குற்றப் பத்திரிகை

பதிலடிப் பக்கம்
‘காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் வியாழக்கிழமை இரவு (11.11.2004) கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் வெள்ளிக்கிழமை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சின்ன காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியைச் சேர்ந்த ஆனந்த சர்மா மகன் சங்கரராமன். இவர் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். 2004 செப்டம்பர் 3-ஆம் தேதி மாலை கோயில் அலுவலகத்தில் இருந்த சங்கரராமனை அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கோயில் வளாகத்திலேயே நடைபெற்ற இக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை செய்யப்படுவதற்கு 2 நாள்களுக்கு முன்னர் ஜெயேந்திரருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து சங்கரராமன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். உங்களைப் பற்றிய எல்லா விஷயத்தையும் வெளியில் சொல்லி விடுவேன் என்று அவர் அக்கடிதத்தில் ஜெயேந்திரரை மிரட்டியுள்ளார். அதன் பிறகே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
காலை 6.15 மணிக்கு போலீஸ் வாகனத்தில் காஞ்சீபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு (எண்1) ஜெயேந்திரர் அழைத்து வரப்பட்டு நீதிபதி ஜி. உத்தமராஜ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார் – அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் காலை 7.35 மணிக்கு வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குற்றப்பிரிவு 302,120-பி, 34,201 ஆகிய பிரிவுகள்
கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் போலீசார் ஜெயேந்திரர்மீது பதிவு செய்துள்ளனர்.

(‘தினமணி’ 13 நவம்பர், 2004,

சனிக்கிழமை, சென்னை)

பதிலடிப் பக்கம் : சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (3)

கவிஞர் கலி.பூங்குன்றன்

கழகமும் – சங்கராச்சாரியார் எதிர்ப்பும்
சங்கராச்சாரியார் பகிஷ்காரம்
பெரியார் அறிக்கை (25-5-1966)

நமது நாட்டில் சங்கராச்சாரியார் சுற்றுப் பயணம் என்னும் பேரால் வர்ணாசிரமப் பிரச் சாரம் நடை பெறுவதாலும் அந்த வர்ணாசிரமப் பிரச்சாரச் சலுகையை அடிப்படையாக வைத்துக் கொண்டு சமதர்மத்திற்கு விரோத மான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாலும் சங்கராச் சாரியார் தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்களுக்கு எப்படியாவது காங்கிரசை இப்போதைய தேர் தலில் வீழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்கிற பிரநாத (பேரொலி) பிரச்சாரம் செய்வதாலும், மக்களுக்கு விளக்கம் தெரிவிப்பதற் காகவும், தற்காலம் நடைபெறும் அரசாங்கத்திற்கு இதனால் கேடோ, எலக்ஷனில் தோல்வியோ ஏற்படாமல் இருக்கச் செய்வதற்காகவும் வர்ணாச்சிரம எதிர்ப்புப் பிரச்சாரமாக ‘சங்கராச்சாரி பகிஷ்காரப் பிரச்சாரம்” செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆதலால் அண் மையில் முதலாவதாக திருவண்ணா மலையில் சங்கராச்சாரி பகிஷ்காரப் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

வேலூரில்

30-5-1966 வேலூரில் சங்கராச்சாரி பகிஷ்காரக் கிளர்ச்சி! வேலூர் நகர சபை சங்கராச்சாரியை வரவேற்பதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய சத்துவாச்சாரி தோழர்கள் பிச்சாண்டி, தியாகராசன், நகரத் தலைவர் தாமோதரம், செயலாளர் கழிஞ்சூர் செல்வராசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சங்கராச்சாரியாருக்கு வரவேற்பு முடிந்தபின் இரவு 9.30 மணிக்கு விடுவிக் கப்பட்டனர். சாமி. சம்மாரம் மற்றும் தோழர்கள் விடுதலையான தோழர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.
வடஆர்க்காட்டில் சுவரொட்டிகள் ஒட்டி, சங்கராச்சாரியாருக்குக் கண்டனக் கிளர்ச்சி
3.6.1966 அன்று ராணிப்பேட்டையிலிருந்து முத்துக்கடை வரை சங்கராச்சாரியார் பகிஷ்கார சுவரொட்டிகளை செயலாளர் கழிஞ்சூர் செல்வராசன், ஆர்க்காடு இளங்குப்பன், வேணு கோபால் ஆகியோர் ஒட்டினர். அவற்றைக் கவால்துறையினர் கிழித்துவிட்டனர். அதற்கு முன்னர் நல்ல விளம்பரம் ஆகிவிட்டது. பிறகு வாலாஜாபேட்டையிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சங்கராச்சாரி பகிஷ்காரக் கிளர்ச்சி

(சுவரொட்டி வாசகம் வர்ணாசிரம சங்கராச் சாரி ஒழிக! ஒழிந்து போ!!)
13.6.1966 மாலை சென்னை மயிலாப்பூரில் நடைபெறவிருக்கும் மடாதிபதிகள் மாநாட்டுக்கு வருகை தந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஜெயேந்திர சரஸ்வதி ஆகியோருக்கு மயிலாப்பூர் குளக்கரை அருகில் வெங்கடேச அக்ரகாரம் தெரு முனையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட தி.க. தலைவர் டி.எம். சண்முகம், செயலாளர் டி.வி. தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது. நகரெங்கும் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதே பகிஷ்காரக் கிளர்ச்சியை தந்தை பெரியார் அவர்களும், கைவல்யம் சாமியாரும் 60 ஆண்டுகளுக்கு முன்னமே செய்துள்ளார்கள் என்பதை அறிக்கை மூலம் பெரியார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கலந்துகொண்டோர்:
டி.எம். சண்முகம், பி.ஈ. பக்தவச்சலம், டி.வி, தட்சிணாமூர்த்தி, அ.குணசீலன், மு.போ, வீரன், கே. நடராசன், என். தேவராசன், கே. கல்யாணி, எம். வேணுகோபால், டி.கே. கோபால், புண்ணியகோட்டி, டி, குப்புசாமி, செங்கண்ணன், ஆர். வெங்கடாசலம், கே. ஆறுமுகம், எம். கணேசன், பி. ஏழுமலை, என். பாலகிருஷ்ணன், த. கன்னியப்பன், மயிலை சம்பந்தம், ஏ.கே. சேகர், எம். வாசு, ராமன், டி. மதுரை, தட்சிணாமூர்த்தி, திருமதி ராஜம்மாள், சே. ஏழுமலை, வேதகிரி, ஏ. லோகநாதன், எஸ். சீனுவாசன், கே. தாமோ தரன், சிங்காரம், கோவிந்தசாமி, சக்கரபாணி, பி. சின்னையா, கே. மோகன், எம். ரங்கநாதன், ஆர். கணேசன், என். தணிகாசலம், சந்திரன், கே.பி. சந்திரன், கே.வி.ஆர்.எஸ். நாகய்யா, பி. ஜானகிராமன்.
பார்ப்பனர் காலித்தனத்துக்குக் கண்டன நாள்!
20.11.1966 ஞாயிறு அன்று தமிழ்நாடெங்கும் நடைபெற வேண்டும்!

தந்தை பெரியார் அறிக்கை

(முகாம் – குடந்தை – 123.11.1966)
சங்கராச்சாரியார்கள், சாமியார்கள், பார்ப்பனக் குண்டர்கள் டில்லியில் காமராசரைக் கொல்ல (7.11.1966) அவர் தங்கியிருந்த வீட்டிற்கு நெருப்பு வைக்க முயற்சித்த அடாத செயலைக் கண்டிப்பதன் அறிகுறியாக 1966 நவம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையை பார்ப்பனரின் கொலை பாதகக் கண்டன நாளாக தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
அன்று கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தி, கூட்டம் போட்டு, சங்கராச்சாரியார்கள் சாமியார்கள் குண்டர்கள் ஆகியவர்களைக் கண்டித்துப் பேசி, “யாவரும் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.
– ஈ.வெ.ராமசாமி

நெல்லையில் தீர்மானம்

நெல்லையில் (13-7-1980) பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடு தீர்மானம் 14 கூறுவதாவது: வர்ணாசிரம தர்மம் – ஜாதி முறை காப்பாற்றப்பட வேண்டும் என்பதை சங்கராச்சாரியார் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து வருவதும், சிருங்கேரி சங்கராச்சாரியார் குலதர்மத்தைப் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து வருவதும் கண்டு இக்கூட்டம் (மாநாடு) வன்மையாகக் கண்டிப்பதுடன் ஜாதி, தீண்டாமை, பாதுகாப்புப் பிரச்சாரம் செய்யும் சங்கராச்சாரிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்கு மாறு மத்திய – மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
சென்னையில்
28-12-1982 அன்று சென்னை சைதை திருவொற்றியூர், கலைஞர் நகர் பகுதியில் சங்கராச்சாரி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
தாழ்த்தப்பட்டவரும் இந்து என்றால் சங்கராச் சாரியாக நியமிக்கத் தயாரா? என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
தீர்மானம் 6:
13.6.1982 நீண்டகாலமாக வடநாட்டின் பல மாநிலங்களில் வேரூன்றி வன்முறைக் கலவரங்களைத் தூண்டுதல் மூலம் ஆரிய தர்மத்தைப் பரப்பும் பார்ப்பன மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் குறிப்பாக அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பகிரங்கமாக அதன் அணி வகுப்புகளை நடத்தி வருவதையும் நெல்லை – குமரி போன்ற மாவட் டங்களில் கலவரங்களைத் திட்டமிட்டு நடத்திடு வதையும் இந்த அரசு கண்டும் காணாமல் இருப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
காஞ்சி சங்கராச்சாரியார் என்பவர் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் அணி வகுப்புகளில் கலந்து ஆசியுரை கூறியும் ஆர்.எஸ்.எஸ்.,சுகுப் பகிரங் கமாக ஆள் சேர்க்கும் பணியை மேற்கொண்டும் வருகிறார். சங்கராச்சாரியார் களின் இந்தச் செயல் தமிழர்களுக்கு விடப்படும் சவால் என்பதால் இந்நிலையை மேலும் அவர் தொடர ஆரம்பித்தால் அவர் போகும் இடங்களில் எல்லாம் அவருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டுவதுபற்றி யோசிக்கப்படும் என்றும், இதன் இறுதி முடிவை கழகப் பொதுச் செயலாளர் மேற்கொண்டு அறிவிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு (திருச்சி) பொதுச் செயலாளர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

சங்கராச்சாரி – யார்?

தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மணி விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் ‘காமகோடி’ என்ற சொற்களைக் கொஞ்சம் பிரித்துச் சொன்னார்.
அவ்வளவுதான், மூக்கின்மேல் கோபம் பொத்துக் கொண்டு பீறிட்டது காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு.
எழுத்தாளர் சின்னக்குத்தூசி, ஞானி ஆகியோர் ஜெயேந்திரரின் அழைப்பின் பேரில் காஞ்சிமடம் சென்று அவரைச் சந்தித்தபோது கலைஞர் பேச்சைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
“கருணாநிதியை எடுத்துக் கொள்ளுங்கள். என்னைப்பற்றி எது வேண்டுமானாலும் சொல் லட்டும்; நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் எனது பீடத்தை எதற்காக அவர் இழிவுபடுத்திப் பேச வேண்டும்? எனக்கு ரொம்ப வருத்தம். நான் என்ன செய்ய முடியும்? நான் வழிபடும் ஆண்டவனிடத்திலே தான் அவருக்குத் தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண் டேன். அதன்படியே கருணாநிதி படுத்துண்டார்” என்று சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் குறிப் பிட்டுள்ளார்.
(ஆதாரம்: மானமிகு கி. வீரமணி அவர்களின் சங்கராச்சாரி-யார்?’ நூல் பக்கம் 3)
இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் “சங்கராச்சாரி-யார்?” என்ற தலைப்பில் பத்து சொற் பொழிவுகள் பேசினார். அதன் விவரம் வருமாறு:

சிறப்புக் கூட்டங்கள்
நாள்கள் தலைமை

6.4.1983 கீ. இராமலிங்கனார்
28.5.1983 தெள்ளூர் தருமராசன்
5.6.1983 கா. அப்பாத்துரையார்
14.6.1983 சுரதா
18.6.1983 மா. நன்னன்
27.6.1983 ந.இராமநாதன்
7.7.1983 பொன்னிவளவன்
18.7.1983 கே.எல். பழனிசாமி
23.7.1983 இறையன்
18.1983 பெருஞ்சித்திரனார்
(முதல் கூட்டம்: சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில்; மற்றவை சென்னை – பெரியார் திடலில் நடந்தன)
இந்தப் பத்து உரைகளும் ‘சங்கராச்சாரி- ‘யார்?’ என்ற தலைப்பில் தமிழில் நூலாக வெளிவந்தது. (முதல் பதிப்பு 1986)
பின்னர் இங்கிலீஷில் The Saint or Sectarian? என்ற பெயரில் வெளி வந்துள்ளது (1988),
மோசடியில் பிறந்த சங்கரமடம் என்பதில் தொடங்கி ‘நாத்திகனுக்கு வைத்தியம் பார்க் காதே!’ என்று கூறும் அளவுக்கு சங்கராச்சாரி யார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மனிதாபிமான மற்றவர்; சங்கர மடத்தில் உண்டாக்கப்பட்ட அறக்கட்டளைகள் அனைத்து மூலமும் பயன் பெறுவோர் அனைவரும் பார்ப்பனர்களே;
ஆதிசங்கரர் நடத்திய ஆபாச சோதனைகள் வரை அங்குலம் அங்குலமாக அலசி எடுக்கப்பட்டுள்ளது அந்நூலில். அத்தளைக்கும் ஆதாரங்கள் அடுக்கடுக்காகக் கொடுக்கப்பட்டன. அந்த நூலை எதிர்த்து ஒரே ஒரு வரிகூட இதுவரை சங்கர மடக்காரர்களாலோ பார்ப்பனர் களாலோ எழுதப்படவில்லை என்பது அடி கோடிட்டுக் காட்டத்தக்கதாகும்.

கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் (6.2.1984)

வர்ணாசிரம வெறியர் காஞ்சி சங்கராச்சாரி யாருக்கு எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழ்நாடு அரசே வரவேற்புத் தரும் போக்கைக் கண்டித்து வேலூர் – காட்பாடி இரயில் நிலையம் அருகில் கறுப்புக் கொடி காட்டத் திரண்டார்கள் திராவிடர் கழகத் தோழர்கள். அதிமுக அமைச்சர்கள் ஆர்.எம். வீரப்பன், சவுந்தரராஜன் மற்றும் அரசு அதிகாரி களுக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.
கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி தலைமை வகித்தார். க. பார்வதி (மாநில மகளிரணி செயலாளர்) துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, இவர்களுடன் 2000 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மண்டல் குழுவுக்கு எதிர்ப்புக் கூறிய காஞ்சி சங்கராச்சாரிக்குத் தஞ்சாவூரில் கறுப்புக் கொடி (9.4.1990)
தஞ்சையில் காலை 8.30 மணியளவில் இராயபுரம் கோபால் தலைமையில் மண்டல் குழு பரிந்துரைகளை எதிர்த்துப் பேட்டியளித்த காஞ்சி ஜூனியர் சங்கராச்சாரிக்குக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி மற்றும் ஏராளமான கழகத் தோழர் களை காவல்துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்தின் எதிரொலியாக தஞ்சை ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ கொடுக் கவிருந்த வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்தது.
(தொடரும்)

 

தமிழ்மீது சங்கராச்சாரியாரின் துவேஷம்

அக்காலத்தில் சங்கராச்சாரியாராயிருந்த பெரியவாள் (சந்திர சேகரேந்திர சரஸ்வதி) காரைக்குடிக்கு வந்தார். பள்ளிக்கூடத்திற்கு வந்துகூட மாணவர்களிடையே பேசினார்.அவரிடம் சென்று தீர்த்தம் வாங்கிக் கொள்ள ஊரிலிருந்து பெரும்பான்மையோர் ஆர்வத்தோடிருந்தனர். பள்ளி ஆசிரியர்கள் பலரும், தலைமை ஆசிரியர் உள்பட அவரைக்கண்டு தரிசித்தனர். ஆனால், என் தந்தையார் மட்டும் போகவில்லை. பிறகு, சில நாள்கள் கழித்துத் தலைமையாசிரியரின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆச்சாரியாரைக் கண்டு தரிசித்து வந்தார். தொடக்கத்தில் மடத்திற்குச் செல்ல அய்யரவர்கள் ஏன் தயங்கினார்கள் என்பதை அறிய விரும்பிய மாசிலாமணி தேசிகருக்கு அய்யரவர்கள் கீழ்க்காணுமாறு கூறினார்:
“தமிழ்நாட்டிலேயே தமிழ் மக்களால் பாராட்டப்படும் பீடத்தினர். அப்படியிருந்தும் பூஜைக்குச் செல்ல நீராடிய பிறகு வடமொழியிலேதான் பேசுவார்களாம். தமிழில் பேசினால் ஆசாரக் குறைவு என்று கருதினார்கள். பூஜை முடிந்து போஜனம் ஆனபின்தான் தமிழில் பேசுவார்களாம். ஆதலால், அரிய தமிழை அநாதரவு செய்கிறவர்களை நான் ஏன் பார்த்தல் வேண்டும்?” என்றார்.
(‘நான்’ எனும் நூலில் வரலாற்றுப் பேராசிரியர். ந.சுப்பிரமணியன் பக். 65-66)

 

குற்றவாளிகள்

உலகத்தில் உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும் பஞ்சமர் களின் தீட்டைப் போக்க முடியாது.
சிருங்சேரி சங்கராச்சாரியார் (The Hindu Ideal)
தீண்டாமை க்ஷேமகரமானது
(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி)
(ஸ்ரீஜெகத் குருவின் உபதேசங்கள் 2-ஆம் பாகம்)
தாழ்த்தப்பட்டவர்களுக்கு அர்ச்சகர்கள் ஆகத் தகுதியில்லை அவ்வளவுதான்! மேலே இதைப்பற்றிய விவாதத்துக்கே இடமில்லை.
– பூரிசங்கராச்சாரியார்
(ஆனந்தவிகடன் 16.6.1974)
பூணூல் போட்டதனால் மட்டுமே ஒருவன் பிராமணனாக மாட்டான். அவனவன் பிறப்பால் எதுவோ அதுதான் சாஸ்வதம் (கல்கி’ 11.4.1982)
குறிப்பு: தீண்டாமையை அனுசரித்தால் சட்டப்படி குற்றம் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 17-ஆவது பிரிவு கூறுகிறது. பிணையில் வெளிவர முடியாத குற்றமாகும் இது. ஆனாலும் வெளிப் படையாகத் தீண்டாமையை வலியுறுத்தும் இந்தச் சங்கராச்சாரியார்கள் தைரியமாக உலா வருகிறார்களே!

அது என்ன ‘பிரம்மஹத்தி தோஷம்?’

 

விடுதலை நாளேடு

-கருஞ்சட்டை

பிரம்மஹத்தி தோஷம்பற்றி ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்’ (11.4.2025) என்ன கூறுகிறது?

‘‘எவ்வளவு பெரிய பிரம்மஹத்தி தோஷம் இருந்தாலும் பசுவைத் தானமாகக் கொடுத்து விட்டால், அந்த தோஷம் எல்லாம் விலகும் என்று அதர்வணவேதம் சொல்லியிருக்கிறது.

ராஜராஜ சோழன் சில பிராமணர்கள் உளவாளி களாக இருந்த காரணத்தால் அவர்களைத் தண்டித்தான். அதனால் ராஜராஜ சோழனை பிரம்மஹத்திதோஷம் பிடித்தது. அதற்குப் பரிகாரமாக பொன்னால் பசு செய்து, அதற்குள் நுழைந்து வெளியே வந்து, அந்தப் பொன் பசுவை தானமாகக் கொடுத்ததால் ராஜராஜ சோழனுக்கு ஏற்பட்ட தோஷம் விலகியது. அதன் பிறகுதான் அவன் பெரிய கொடிய நோயில் இருந்து விடுபட்டதாக கூறும் சான்றுகள் உள்ளன.

ராஜராஜசோழன் எல்லாக் கலைகளிலும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டான். அதுபோலத்தான் பரிகார பூஜைகள் எல்லாம் ராஜசோழன் மூலமாகத் தான் உயிர்த்தெழுந்தது’’

(ஆர்.எஸ்.எஸ்.வார இதழான
‘விஜயபாரதம்’ 11.4.2025 பக்கம் 28,29)

இந்த 2025ஆம் ஆண்டிலும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் பார்ப்பனர்களின் ‘பெருமையைத் தூக்கிப் பிடிப்பதைப் பார்க்கத் தவறக் கூடாது.

உளவாளிகளாக அதாவது காட்டிக் கொடுப்பவர் களாக  இருப்பவர்கள் பார்ப்பனராக இருந்தால் என்ன, மற்றவர்கள் யாராக இருந்தால்தான் என்ன?

அவன் மகாமகா குற்றவாளிதானே. தண்டிக்கப்பட வேண்டியவன்தானே!

அந்த வகையில் நாட்டைக் காட்டிக் கொடுத்த உள வாளியாக செயல்பட்ட பார்ப்பனர்களை அரசனாகிய ராஜராஜசோழன் தண்டித்ததில் என்ன குற்றம்?

பார்ப்பான் காட்டிக் கொடுத்தது குற்றமில்லையாம். காட்டிக் கொடுத்த அந்தப் பார்ப்பனக் குற்றவாளிகளை தண்டித்த அரசன்தான் குற்றவாளியாம்.

எப்படி இருக்கிறது? குற்றவாளியாக இருந்தாலும் பார்ப்பானைத் தண்டித்ததால் ராஜராஜ சோழனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விட்டதாம் – அதனால் அரசன் பெரிய நோய்க்கு ஆளானானாம்!

அதற்குப் பரிகாரம் என்ன தெரியுமா? தங்கத் தினால் பசு செய்து, அதற்குள் அரசன் நுழைந்து வெளியே வந்து அந்தப் பொன்னாலான பசுவை காட்டிக் கொடுத்த குற்றவாளியான பார்ப்பானுக்கு தானமாகக் கொடுத்தானாம்!

எப்படிப்பட்ட ராஜராஜசோழன் இவன்? அருள் மொழித் தேவன் என்ற தனது தமிழ்ப் பெயரை ராஜ ராஜன் என்று சமஸ்கிருதத்தில் மாற்றிக் கொண்டவன்.

நான்கு வேதம் படித்த பார்ப்பனர்களுக்கு சதுர்வேதி மங்கலம் என்ற பெயராலும் மூன்று வேதங்களைப் படித்தறிந்த  பார்ப்பனர்களுக்குத் திரிவேதி மங்கலம் என்ற பெயராலும் கிராமங்களைத் தானமாகக் கொடுத் தவன் ஆயிற்றே!

தஞ்சையில் பெரு உடையார் கோயிலை (பிறகு பிரகதீஸ்வரர் கோயிலாயிற்று) பார்ப்பனரல் லாதார் உழைப்பைச் சுரண்டிக் கட்டி முடித்த இந்த ராஜ ராஜன்தான் வடக்கே இருந்து பார்ப்பனர்களை அழைத்து வந்து கோயில்்களில் அர்ச்சகர்களாக் கியவன், சமஸ்கிருதத்தைக் கோயிலுக்குள் நுழைய விட்டவன் – பார்ப்பனர்கள் பாராட்டாமல் என்ன செய்வார்கள்?

பார்ப்பனர்கள் ஒருவரைப் பாராட்டுகிறார்கள் என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற தந்தைபெரியார்தம் கூற்றின் அருமையை இந்த இடத்தில் கண்டிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?

‘‘பிராமணனுக்கு தலையை முண்டிதம் செய்வது (தலை மயிரை நீக்குவது) கொலைத் தண்டனையாகும் என்பதாகும். மற்ற வருணத்தார்க்கு கொலை தண்டனை உண்டு.

(மனு தர்ம சாஸ்திரம் அத்தியாயம் –8 சுலோகம் 379)

புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பான் மயிரும் மற்றவர்கள் உயிரும் சமமாகும்.

உடையார்குடி கல்வெட்டில் ஒரு தகவல் உண்டு.

முதலாம் ராஜராஜனின் தமையன் சுந்தரசோழன் மகன் ஆதித்த கரிகாலனை பார்ப்பனர்கள் ரவிதாசன், பரமேசுவரன், சோமன், தேவதாசன் ஆகியோர் கொலை செய்தனர். அவர்களைத் தண்டிக்க பார்ப்பனர்கள் மட்டும் அடங்கிய குழு உடையார்குடி சிவன் கோயிலில் கூடியது. என்ன ‘தண்டனை’ தெரியுமா? 32 பசுக்கள் 12 குடம் பொன் மற்றும் பணியாட்கள், ஆடைகள் கொடுக்கப்பட்டு, எல்லை வரையில் பல்லக்கில் வைத்து அழைத்துச் சென்று விடப்பட்டான். (தஞ்சைக் கல்வெட்டுகள் சென்னை அருங்காட்சியகத்தில்) பல நூற்றாண்டுகளுக்கு முன் போவானேன்? நமது காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு விஸ்கி பாட்டிலுக்காக பாகிஸ்தானுக்கு இரகசி யத்தைக் காட்டிக் கொடுத்த பாலக்காட்டுப் பார்ப்பான் கூமர் நாராயணனுக்கு கிடைத்த தண்டனை என்ன?

டில்லியில் தோட்டப் பங்களாவில் சாய்வு நாற்காலி யில் காலாட்டிக் கொண்டு வசந்தமாக வாழ்ந்தது தான் அவனுக்குரிய தண்டனை!

ஆர்.எஸ்.எஸ். வார இதழ் இந்த 2025லும் பார்ப் பானுக்குத் தண்டனை கொடுத்தால் ‘பிரம்மஹத்தி தோஷம்’’ என்று எச்சரிக்கிறது!

அவர்கள் விரும்பும் ஹிந்து ராஷ்டிரம் அதுதானே!

திங்கள், 17 மார்ச், 2025

ஆரியர்கள் வந்தேறிகள் என்று முதலில் சொன்னது பெரியாரா?

 

அதை முதலில் சொன்னவர் அவர் அல்ல!

விடுதலை நாளேடு

“ஆரியர்கள் வந்தேறிகள் என்று இங்கே திணிக்க முயற்சி செய்தார் ஈ.வெ.ரா.” என்று அலறி இருக்கிறார் ஆளுநர் ரவி. ‘ஆரியர்கள் வந்தேறிகள்’என்று முதலில் சொன்னது பெரியார் அல்ல. அவர் மட்டுமே சொன்னதும் அல்ல!

பெரியாருக்கு முன்னே பலரும் இதனைச் சொல்லி இருக்கிறார்கள். பெரியாருக்குப் பிறகும் திராவிடர் இயக்கத்தவர் நீங்கலாக பலரும் இதனை ஒப்புக் கொண்டும் இருக்கிறார்கள். எனவே, இதனை பெரியாரின் கூற்றாக மட்டும் சொல்லி அரசியல் செய்தியாக மடைமாற்றம் செய்யப் பார்க்கிறார் ஆளுநர்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1925 ஆம் ஆண்டு தொடங்கியது. அதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே – 1905 ஆம் ஆண்டே இதனைப் பேசி இருப்பவர் தனித்தமிழ்த் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் ‘பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்’ என்ற தலைப்பில் அடிகள் உரையாற்றி இருக்கிறார். இந்த உரை யானது 1906 ஆம் ஆண்டு புத்தகமாக வெளியாகிவிட்டது.

*ஆரியர் வருவதற்கு முன்னரே தமிழர் மிக்க நாகரிகமுடையராயிருந்தனரென்பது இருக்கு வேதத்தினாலே இனிது அறியப்பட்ட தொன்றாம்.

*ஆரியர் சிந்து நதிக்கரையில் வந்து குடியேறிய காலத்தில், உள்நாட்டில் இருந்த தமிழர் ஏழுவகை அரண்மனைகளும், தொண்ணூறு கோட்டைகளும் உடையராய் வாழ்ந்தனரென இருக்குவேதம் உரை தருகின்றது.

*ஓரிடத்தும் நிலைபெறமாட்டாது திரிதரு வாழ்க்கை யுடையராய் இந்தியாவினுட் புகுந்த ஆரியர் கங்கையாற்றுக் கரைப் பக்கங்களில் நிலைபெற்ற வாழ்க்கை நடாத்திச் செங்கோல் ஓச்சிய தமிழ் மக்களால் நெறிப்படுத்தப்பட்ட இலக்கண முறைகண்டு தாமும் உயிர்மெய் எழுத்துகளை முறைப்படுத்தினா ரென்று துணிக.

* ஆரியர் வருஞான்று, தமிழர் அரசியல் முறைபிழையாது வாழ்ந்தனராகலின் அவரை ஆரியர் ‘அசுரர்’ என்று பெயரிட்டு வழங்கினார். இருக்கு வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்கள் முதுவதூஉம் ‘அசுர’ எனும் சொல் உள்ளது.

*ஆரியர் இந்தியாவிற் புகுந்தபின் தமக்கு முன்னே அங்கு வாழ்ந்து வருந் தமிழ் ஆசிரியர் கண்ட அவ்வெழுத்து முறையைப் பிரதி செய்து கொண்டார் என்க.

*ஆரியர் இந்தியாவிற் புகுந்தபின் தமிழருடைய நாகரிக முதிர்ச்சி யினையும், அவர் தாங்கருதிய பொருளை எழுத்திலிட்டுப் பொறித்தலுங்கண்டு தாமும் தம்முடைய பாட்டுக்களைப் பண்அடைவுபட வகுத்தஞான்று எழுதுமுறை கண்டறிந்தார்.

– இப்படிப் பேசி இருக்கிறார் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள். பெரியார் இப்படி எல்லாம் பேசத் தொடங்குவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர் அடிகள்.

இது ஏதோ தமிழ்நாட்டில் தமிழ் வெறியில் மறைமலையடிகளைப் போன்றவர்கள் சொன்னது மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு அறிஞர்களும் இப்படித் தான் எழுதி இருக்கிறார்கள்.

இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர்களில் ஒருவர் ராகுல சாங்கிருத்தியாயன்.‘ராகுல்ஜி’ என்று இவரை அழைப்பார்கள். ‘வால்காவில் இருந்து கங்கை வரை’ என்ற உலகப்புகழ் பெற்ற நூலை எழுதியவர் அவர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வைதிகத்தில் ஊறிய கோவர்த்தன் பாண்டே – குல வந்தி என்ற பிராமணக் குடும்பத்தில் 1893 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் இந்தியா முழுவதும் சுற்றியவர். 12 மொழிகளில் எழுத, பேச இவருக்குத் தெரியும். தமிழும் தெரியும். தமிழ்நாட்டுக்கும் வந்து சென்றுள்ளார். சென்னைக்கு அருகே திருமழிசையிலும் சில காலம் வாழ்ந்திருக்கிறார். அவர் எழுதிய வரலாற்று நூல்: ‘ரிக்வேத ஆரியர்கள்’ என்பது ஆகும்.

இந்தியாவின் மேற்கில் இருக்கும் மத்திய தரைக்கடற்கரை நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாகச் சிந்து நதி – சப்த சிந்து நதி தீரத்தில் வந்து (கி.மு.1500க்குப் பிறகு) குடியேறியவர்கள் ஆரியர்கள் என்றும், அவர்கள் வரும் போது வளமான நாகரிகத்துடன் வாழ்ந்துவந்த மக்களை வென்று வீழ்த்திக் கிழக்கே நோக்கி கங்கை நதி தீரம் வரை ஆரியர்கள் பரவினார்கள் என்றும் சொல்கிறார். ஆரியர்கள் வரும்போது வளமான நாகரிகத்துடன் வாழ்ந்தவர்களை ‘தஸ்யூக்கள், திராவிடர்கள்’ என்றும், அந்த இடம் தான் ‘சிந்துச் சமவெளி’ என்றும் சொல்கிறார். சொன்னவர் ராகுல்ஜி.

இந்தியாவுக்குள் நுழைந்ததுமே ஆரியர் முதலில் திராவிடர்களை எதிர்கொள்ள நேர்ந்தது, பின்னர் இமயப் பள்ளத்தாக்கில் பிரவேசித்ததும் ‘கிர்’ இனத்தாருடன் மோதவேண்டியதாக இருந்தது என்கிறார் ராகுல்ஜி. ‘அவன் பெரிய கிராதகன்’ என்று சிலர் சொல்வது இந்த ‘கிர்’ இனத்தார் மீதான பழிச்சொல் தான்.திராவிடர்கள் என்று சொன்னால், ஆரியர்களுக்குக் கோபம் வருவது இதனால்தான்!

மத்திய தரைக்கடல் நாடுகளிலும் அதனைச் சுற்றி ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்திருந்த ஆரிய இன மக்களின் ஒரு பிரிவினர் பேசிய மொழியே பிற்காலத்தில் செம்மைப்படுத்தப்பட்ட சமஸ்கிருதம் என்றும், ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னர் தான் ரிக் வேதம் எழுதப்பட்டது என்றும் ராகுல்ஜி சொல்கிறார். ரிக் வேதத்தை இயற்றிய ரிஷிகளான பரத்வாஜரும், வசிஸ்டரும், விசுவாமித்திரரும் ஆரியர் வருகைக்கு 300 ஆண்டுகளுக்குப் பிந்தியவர்கள் என்றும் இவர் சொல்கிறார்.

‘ஆரியர்களை ஈ.வெ.ரா. கொச்சைப்படுத்தினார்’ என்று ஆளுநர் ரவி சொல்கிறார். ஈ.வெ.ரா. கொச்சைப்படுத்தவில்லை. அவர்களின் ரிக்வேதத்திலே சொல்லப்பட்டிருப்பதைத் தான் பெரியார் சொன்னார் என்பதை ராகுல்ஜி புத்தகத்தின் (நான்காவது அத்தியாயம்) மூலமாக அறியலாம். ( நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், ராகுல்ஜி நூலை தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளது. ரிக் வேதத்தை ‘அலைகள் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது)

ராகுல்ஜியின் நூலை ஆர்.என்.ரவி, ஹிந்தியில் படிக்கலாம். ஏனென்றால் ராகுல்ஜி எழுதியது ஹிந்தியில்தான். ஆரியர்கள் வந்தேறிகள் என்று பெரியாருக்குமுன்னே பல வரலாற்றுப் பெரியார்கள் சொல்லி இருக்கிறார்கள் என்பதை ஆளுநர் அறியட்டும்.

பெரியார் தான் அறிவுக்கருவூலமாக இருந்த இந்தச் செய்திகளை எல்லாம் அரசியல் களத்தில் முதன்முதலாக இறக்கினார். ‘எனது புத்தகங்கள் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பிறகு அதிகம் விற்றது’ என்று மறைமலையடிகள் சொல்வது இதனை மனதில் வைத்துத் தான். ஆரிய ஆட்டங்களை அம்பலத்தில் ஏற்றினார் என்பதால் தான் இறந்து அரை நூற்றாண்டு ஆன பிறகும் பெரியார் பேரைச் சொன்னாலே நடுங்குகிறார்கள். ரவியை வைத்து ஆட்டம் காட்ட நினைக்கிறார்கள்.
ஆளுநர் பேசட்டும். முதலமைச்சர் சொன்னது போல, ‘அவர் தான் நமக்கான நல்ல பிரச்சாரகர்’.

நன்றி: ‘முரசொலி’ தலையங்கம், 8.3.2025