பக்கங்கள்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

இந்தியா ? பாரத் ? ஒரு வரலாற்றுப் பார்வை- பேரா.இரவிசங்கர் கண்ணபிரான்

 


பரதநாடு என்பது வட இந்தியா மட்டுமா? தென்னிந்தியா அந்த நாட்டின் ஒரு பகுதி இல்லையா?

பரதநாடு என்பது மகாபாரதக் கதையின் படி பரத இனக்குழுவினர் ஆண்ட வட இந்தியாவை உள்ளடக்கிய ஒரு பகுதியே ஆகும். அதில் தென்னிந்திய நிலப்பரப்பு இணையவில்லை என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கங்கைச் சமவெளி முடிவுக்கு வரும் இடமே பரதநாட்டின் எல்லையாக மகாபாரதத்தில் காட்டப்பட்டுள்ளது.

விந்திய மலைக்குத் தெற்கே அமைந்த நிலப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களாகத் திராவிடர்களையும் கேரளர்களையும் கர்நாடகர்களையும் சோழர்களையும் மற்றும் பல மன்னர்களையும் மகாபாரதம் சுட்டிக்காட்டி அவர்களும் அந்தக் குருச்சேத்திரப் போரிலே பங்கேற்றதாகக் குறிக்கின்றது.
மனுஸ்மிருதியில் (Manu 2-6-23) தென்னிந்திய நிலப்பரப்பு ‘பரத வர்ஷா’ நாட்டின் பகுதியாகச் சுட்டிக் காட்டப்படவில்லை. அதற்கும் மேலாக இந்தத் தென்னிந்திய நாட்டினரை ‘மிலேச்ச தேசத்தினர்’ அதாவது காட்டுமிராண்டிகள், கீழ்நிலை ஜாதியினர், சமஸ்கிருதம் அறியாத அயலவர்கள் என்று குறிப்பிடுகின்றது.

மகாபாரதத்தின் அனுசாசன பருவா (Book13, Sec. 35) உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் வெறுப்பைச் சம்பாதித்த கீழ் ஜாதி சூத்திரர்களாகத் தென்னிந்திய மக்களையும் மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.

மேகலா, திராமிடா என்னும் சொற்கள் இந்தப் பகுதியிலே குறிப்பிடப்படுகின்றது.

புராணங்களில் பரதவர்ஷா

பாகவத புராணம், வாயுபுராணம், அக்னி புராணம், மார்க்கண்டேய புராணம், ஸ்கந்த புராணம் ஆகிய புராணங்களில் பரதவர்ஷத்தைப் பற்றிய கற்பனைக் கதைகள் அள்ளிவிடப்பட்டிருக்கின்றன.

வாயு புராணத்தில் பரத வருஷத்தில் ஒன்பது தீவுகள் இருந்தன என்றும், அவற்றிற்கு இடையே கடல் இருந்தது என்றும், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு யாரும் போக முடியாது என்றும் கதை சொல்லப்பட்டிருக்கின்றது.

பரதவர்ஷத்தைச் சுற்றி ஏழு கடல்கள் இருந்ததாக இந்தப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவை,

உப்புக்கடல்
கரும்புச்சாற்றுக் கடல்
மதுக் கடல்
வெண்ணை நெய்க் கடல்
தயிர்க் கடல்
பாற்கடல்
நன்னீர்க் கடல்

பரதவர்ஷத்தின் நிலப்பரப்பைக் குறிப்பிடும் மேற்கண்ட குறிப்புகள் எல்லாம் கற்பனையில் விளைந்த கதைகளே என்று சொல்லத் தேவையில்லை.

ஹத்திக்கும்பா கல்வெட்டு சொல்வதென்ன?

இன்றைய ஒரிசா மாநிலத்தின் உதயகிரி மலைப்பகுதியில் பிராக்ருதி மொழியில் பிராமி எழுத்துருவால் வெட்டப்பட்டுள்ள ஹத்திகும்பாக் கல்வெட்டு அந்தப் பகுதியைக் காரவேல மன்னன் கி.மு. முதலாம் நூற்றாண்டில் ஆண்ட வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்கின்றது.

17 அடிகள் கொண்ட அந்தக் கல்வெட்டிலே பத்தாவது அடியிலே ‘பாரத வாஸா’ என்ற சொற்றொடர் வருகின்றது. காரவேல மன்னன் பாரத வர்ஷா நாட்டின் மீது படை எடுத்துச் சென்ற செய்தியை இந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. காரவேல மன்னன் ‘கலிங்காதிபதி’ என்றும் ‘கலிங்க ராஜ வம்ச’ என்றும் ‘கலிங்க நகரி’ என்றும் காரவேல மன்னன் கலிங்க சாம்ராஜ்யத்தின் குடிமகனாகவே இந்தக் கல்வெட்டில் பதிவுசெய்யப் பட்டிருக்கின்றார் என்பதும் பாரதவர்ஷத்தில் கலிங்க நாடு சேர்ந்து இருக்கவில்லை என்பதும் இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் செய்திகளாகும்.

இந்தக் காரவேல மன்னனை, 113 ஆண்டு களாகக் கலிங்கப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த திராவிட மன்னர்களின் கூட்டமைப்பை முறியடித்தவனாகவும், பாண்டிய மன்னர்களிடம் இருந்து முத்துக்களைப் பரிசாகப் பெற்றவனாகவும் இந்தக் கல்வெட்டுக் காட்சிப்படுத்துகின்றது.
இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய செய்திகளாக இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் முக்கியமான மூன்று முடிவுகளாவன:

1. கி.மு. முதலாம் நூற்றாண்டி
லேயே பரதவர்ஷாநாடு அமைந்திருந்தது

2. பரதவர்ஷா நாடு என்பது வட இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே.

3. அந்தக் காலகட்டத்தில் கலிங்கப் பகுதியும் தென்னிந்தி யப் பகுதியும் பரதவர்ஷா நாட்டின் பகுதிகளாக இருக்க வில்லை. சமண மதத்தின் பரத மன்னன்
பரதவர்ஷா என்பது பார்ப்பனிய மதத்தின் சொல்லாடல் மட்டும் அன்று. அந்தச் சொல்லாடல் சமணத்திலும் பவுத்தத்திலும் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘பாரத்’ என்னும் சொல் மத ரீதியான சொல்லாடல் இல்லை. அது பல பண்பாடுகளைத் தன்னுள்ளே கொண்ட மானுடவியலின் ஒரு சொல்லாடலாகும்.
சமண மதக் குறிப்புகளின் படி முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் நூறு மகன்களில் ஒருவன்தான் பரதன். ரிஷப தேவரின் மகளின் பெயர் பிராமி என்றும், அது அன்றைக்கு வழக்கத்திலிருந்த எழுத்துருவுக்குப் பெயராகக் (பிராமி எழுத்து) கொள்ளப்பட்டது என்பதும் கூடுதல் செய்தி.

கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சமண இலக்கியமான ஆதி புராணத்தின் படி ரிஷப தேவர் தனது நாட்டை 100 மகன்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து ஆட்சி செய்ய வைத்துள்ளார். ஆனால், பரதன் மற்ற 98 சகோதரர்களையும் போரில் தோற்கடித்து அவர்களுடைய பகுதியையும் கைப்பற்றிக் கொள்கின்றான். இறுதியாக ஒரே ஒரு சகோதரன் பாகுபலி மட்டும் இன்னும் தனது நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றான். பாகுபலியுடன் பரதன் செய்த போரிலே பரதன் தோற்றுப் போய் விடுகின்றான். ஆனால், பாகுபலி சகோதர பாசத்தால் தனது நாட்டை பரதனுக்கு அளித்துவிட்டு, தான் ஒரு சமணத் துறவியாகப் போய் விடுகின்றான் என்று ஆதி புராணம் சொல்கின்றது.

இன்றைக்கும் கர்நாடகத்தின் சரவண பெலகுலா சமணக் கோயிலிலே மிக உயர்ந்த பாகுபலியின் சிலைக்கு அருகிலே பரத மன்னனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது இந்தக் கதையை உறுதி செய்வதாக உள்ளது.

மேலும் இந்த சமணமதக் கதையைப் பார்ப்பனிய விஷ்ணு புராணமும் ஸ்ரீமத் பாகவதமும் உறுதி செய்கின்றது. ரிஷப தேவரின் மூத்த மகனான பரதனின் பெயராலேயே இந்த நாடு பாரதவர்ஷா என்று அழைக்கப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் (5-4-9) அறுதியிட்டுச் சொல்கின்றது.

மேலே சுட்டப்பட்ட வேதிய இந்துமதப் புராணங்களின்படியும் சமண மத ஆதி புராணத்தின்படியும் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவனின் மகனான பரதனே இந்த நாட்டை பேரரசனாக ஆண்ட சக்கரவர்த்தி என அறிய முடிகின்றது.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்கள் பாரத் என்று அறியப்படும் இந்தியா அரசமைப்புச் சட்டத்தின் முதல் விதியில் நாட்டின் பெயர் அறிவிக்கப்படுகின்றது. அதில் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று வரையறுக்கப்பட்டது.

இந்த முதல் விதியின் மீது நடந்த விவாதத்தில் ஒரு சிலரின் கருத்துகளைக் கீழே பார்ப்போம்.

திரு. அனந்த சயனம் அய்யங்கார்:

இந்தியா என்ற சொல்லுக்குப் பதிலாக பாரத், பாரத் வர்ஷா அல்லது ஹிந்துஸ்தான் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்கிறார்.
திரு.லோக்நாத் மிஸ்ரா அவர்களும் பாரத் வர்ஷா என்ற பெயரை ஆதரிக்கிறார்.

திரு.சிபன்லால் சக்சேனா அவர்கள் இந்தியா என்ற வார்த்தையைக் கூடாது என்றும், பாரத் என்ற வார்த்தை மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், இந்திய நாட்டின் தேசிய மொழியாக இந்தி அறிவிக்கப்பட வேண்டும் என்றும், வந்தே மாதரம் நாட்டின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றார்.

திரு.எச்.வி. காமத் என்பவர் மாநிலங்கள் என்ற வார்த்தையை மாற்றிப் பிரதேசங்கள் என்னும் ஹிந்தி வார்த்தையைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றார்
இந்த வேளையில் குறுக்கிட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு, பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு. எனவே, ஒரு மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறுவது சரியான முடிவு அல்ல என்று தனது கருத்தை முன்வைத்து உறுப்பினர்கள் தங்களின் சக்தியை அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசமைப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளில் செலவழிக்க வேண்டுமென்றும் இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத பிரச்சனைகளில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பண்டித நேரு அவர்களின் கருத்துக்கு ஒத்திசைவு தந்து பிறர் கொண்டு வந்த திருத்தங்கள் அனைத்தையும் எதிர்க்கின்றார்.
பின்னர் ஒரு சமரசத் தீர்வாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாரத் என்று அறியப்படும் இந்தியா India that is Bharat என்னும் திருத்தத்தை முன் வைக்கிறார்.
திரு.எச் வி காமத் அவர்களும் திரு.சேத் கோவிந்த் தாஸ் அவர்களும் பாரத் அல்லது ஹிந்து என்னும் சொல் முதலில் வரவேண்டும் இந்தியா என்னும் சொல் பின்னால் வரவேண்டும் என்னும் திருத்தத்தை முன்வைக்கின்றார்கள்.

திரு.காலா வெங்கட் ராவ் அவர்கள், ஹிந்த் & இந்தியா என்ற சொற்கள் அயற்சொற்கள் என்னும் கருத்தியலால் இந்தி மொழியின் பெயரையே பாரதி என்று மாற்ற வேண்டும் என வேண்டினார்.

திரு.கமலபதி திருபாதி அவர்கள் மேலுலகத்தில் வசிக்கின்ற கடவுள்கள் பாரத் என்றே இந்த நாட்டின் பெயரை நினைவில் வைத்துள்ளார்கள் என்று சொல்கின்றார்.

இந்த நிலையிலே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறுக்கிட்டு இந்த விவாதங்கள் எல்லாம் தேவையா இன்னும் முக்கியமான வேலை நிறைய இருக்கின்றது என்று அவையின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

பின்னர் திருத்தங்கள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு அண்ணல் அம்பேத்கரின் திருத்தமே அரசமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதன்படி India that is Bharat இந்தியா எனும் பாரத் என்னும் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

முடிவுரை :

இந்தக் கட்டுரையில் வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா மற்றும் பாரத் ஆகிய சொல்லாடல்களைப் பற்றி ஆராய்ந்தபின் இந்த நாட்டின் பெயராக அந்தச் சொற்கள் எப்படி நிறுவப்பட்டன என்பதை ஆய்ந்த பின்னே நாம் கீழ்க்கண்ட முடிவுகளை எளிதாக எட்டலாம்.

01. இந்தியா மற்றும் பாரத் ஆகிய இரண்டு பெயர்களுமே காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரில் மக்களுக்கு உந்துதல் தந்தது.
02. பல நூற்றாண்டுகளாக இந்த நிலப்பரப்பு இந்தியா என்னும் பெயராலும் அறியப்பட்டிருந்தது.
03. பாரத் என்னும் பெயரும் வெகு காலமாக இங்கு புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
04. இந்தியா என்னும் பெயர் காலனியாதிக்கம்

நம் நாட்டின் மீது திணித்த பெயர் என்று கருதுவது தவறாகும். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிந்து என்னும் சொல்லாடலின் அகவழக்கின் புறவழக்கே (Exonym of Endonym) இந்தியா என்னும் சொல்லாடலாகும். இந்தியா என்பது அயற்சொல் இல்லை.

05. யாரேனும் இந்தியா என்னும் சொல்லை அயற்சொல்லாகக் கருதி அதன் மீது வெறுப்பை உமிழ்ந்தால், பாரத் என்னும் சொல்லும் ஈரானிய வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த சொல் என்பதால் அதையும் அயற்சொல்லாகக் கருதி அதன் மீதும் வெறுப்பை உமிழ வேண்டும்.

06. யாக வேள்வியில் வார்க்கப்படுகின்ற காணிக்கைகளை நெருப்பானது மேலுலகில்வாழ்கின்ற தேவர்களிடம் கொண்டு சேர்ப்பதால் நெருப்புக்குப் பரதா என்னும் பெயர் வந்தது. இதனாலேயே நெருப்புக்கு ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயரும் வந்தது.

07. பரதப் பழங்குடியினர் வடமேற்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கங்கைச்சமவெளியில் குடி அமர்ந்து குரு ராஜ்ஜியத்தை அமைத்தார்கள்.

08. மகாபாரதத்தில் வருகின்ற பரத என்னும் சொல்லாடல் சகுந்தலை துஷ்யந்தன் ஆகியோரின் மகனான பரதனைக் குறிக்கவில்லை. அது பரதப் பழங்குடியினரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது.

09. சமண மதத்தின் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் மகனான பரதச் சக்கரவர்த்தியின் பெயராலேயே இந்த நாடு பரதவர்ஷா என்று அழைக்கப்பட்டது என்பதை சமணத்தின் ஆதி புராணத்தின் வழியாகவும் அதே கருத்தை உறுதி செய்யும் வேதியத்தின் விஷ்ணு புராணம் ஸ்ரீமத் பாகவதத்தின் வழியாகவும் நாம் அறிந்தோம்.

10. பரதவர்ஷத்தில் தென்னிந்தியப் பகுதிகள் அடங்கி இருக்கவில்லை. மனுவின் ஸ்ருதிகள் இந்தக் கூற்றை உறுதி செய்கின்றன. கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே பரதவர்ஷா நாட்டின் எல்லைப் பரப்பாக அமைந்திருந்தது.

11. மிகப் பழமையான தொன்மவியல் ஆதாரமான ஹத்திகும்பாக் கல்வெட்டு கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா இருந்துள்ளதையும் கலிங்கமும் தென்னாடும் பரதவர்ஷத்தில் இணையாமல் தனித்து இருந்ததையும் காட்சிப்படுத்தியது.

12. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்களில் சில உறுப்பினர்கள் இந்தியா என்னும் சொல் அயற்சொல் என்று கருதி அதை நீக்க முற்பட்டதுடன் இந்தி மொழியின் மேல் கொண்ட அபிமானத்தாலும் இந்து மதத்தின் பால் கொண்ட அபிமானத்தாலும் பாரத் என்ற சொல்லே நம் நாட்டின் பெயராக இருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

13. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தியா என்னும் பாரத் என்னும் ஒரு திருத்தத்தை கொண்டு வந்து வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா, பாரத் ஆகிய இரண்டு பெயர்களையும் அரசியல் சட்டத்தில் இடம் பெறச் செய்தார்.

14. மானுடவியலின் அடிப்படையிலும் வரலாற்றின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்
பட்ட இந்த ஆய்வு என்பது இந்த இரண்டு சொற்களின் உண்மைத் தன்மையை உணர வைக்கின்றது.

- உண்மை இதழ், 1-15.2.25

புதன், 23 ஜூலை, 2025

பனகல் அரசர் பிறந்த நாள் இன்று [9.7.1866] வாலாசா வல்லவன்


 

பனகல் அரசரின் இயற்பெயர் இராமராயநிங்கார் என்பதாகும். பழைய சென்னை மாகாணத்தில் குண்டூர் மாவட்டத்தில் இருந்த பனகாலு என்ற ஜமீன் குடும்பத்தில் 9.7.1866-இல் இவர் பிறந்தார். இளமையில் தெலுங்கையும், சமற்(ஸ்)கிருதத்தையும் இவர் காளஹஸ்தியில் பயின்றார்.

ஆங்கிலக் கல்வி கற்பதற்காக இவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். முதலாம் படிவத்தில் (ஆறாம் வகுப்பு) திருவல்லிக்கேணி பெரியதெருவில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க முயன்றனர். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி தெலுங்கு மொழி பார்ப்பனர்களால் நடத்தப்பட்டு வந்தது. இவர் பார்ப்பனரல்லாதார். எனவே அங்கு இவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். பின்பு சர்.பிட்டி. தியாகராயர் நேரில் வந்து இவரை அப்பள்ளியில் சேர்த்துவிட்டுச் சென்றார். அப்பள்ளியில் இவர் சிறப்பாகப் படித்துப் பதினொன்றாம் வகுப்பில் அப்பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.

பனகல் அரசர் உயர்கல்வியை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். 1892இல் எம்.ஏ., சமற்(ஸ்)கிருதத்தில் தேர்ச்சி அடைந்து முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை மாகாணத்தில் இருந்த சிற்றரசர்கள் குடும்பங் களில் எம்.ஏ., படித்தவர் இவர் ஒருவர் மட்டுமே.

1912-இல் டில்லி சட்டசபைக்கு, உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1915-வரை அப்பொறுப்பில் அவர் இருந்தார்.

1912இல் சென்னையில் டாக்டர். நடேச முதலியார் தொடங்கிய முதல் பார்ப்பனரல்லாதார் அமைப் பான திராவிடர் சங்கத்தில் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.1916இல் பார்ப்பனரல் லாதார் நலனுக்காக சர்.பிட்டி, தியாகராயர். டாக்டர். டி.எம். நாயர், டாக்டர் நடேச முதலியார் ஆகியோரின் முயற்சி யால் தொடங்கப் பட்ட “South Indian Liberal Federation” (S.I.L.F.)  – தென் இந்தியர் முற்போக்குக் கூட்டமைப்பில் (நீதிக் கட்சி என்றும் அழைப்பர், பலர் இதை தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்று மொழி பெயர்க்கின்றனர்.) தீவிரமாகச் செயல் படத் தொடங்கினார்.

முதலமைச்சர் அகரம் சுப்பராயலு ரெட்டியார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 11.7.1921 இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.  இதனை அடுத்து பனகல் அரசர் முதலமைச்சரானார்

11.7.1921 முதல் பனகல் அரசர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டு பல அரிய சாதனைகளைப் புரிந்தார்.

பனகல் அரசர் ஆட்சியின் சிறப்புகள்

இந்தியாவிலேயே முதன்முதலாக 5ஆம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வியை (Free & Compulsory Education)1922 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தியவர் பனகல் அரசரே ஆவார்.

20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற கொள்கையும் 500 பேர்கள் உள்ள பகுதிக்கு (அ) கிராமத்திற்கு ஒரு பள்ளி என்ற கொள்கையும் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. தொடக்கக் கல்விக்கு, முன் எப்போதும் இல்லாத அளவிற்குப் பணம் செலவிடப்பட்டது.

அதிகப்பள்ளிகள் திறக்கப்பட்டன

பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் மட்டும் 1921-1926 வரை புதியதாக 12,384 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பனகல் ஆட்சி முடிவடையும் போது (1926) சென்னை மாகாணத்தில் அரசுக் கல்வி நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 50,941

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோருக்கு அதிக இடம் கிடைக்கும் வகையில் 1922 சூன் முதல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தேர்வுக் குழுக்கள் (Selection Committee) அமைக்கப்பட்டன.

உயர்கல்வியில் 50% இடங்கள் பார்ப்பனருக்கும், 50% இடங்கள் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் கிடைக்க வழி வகை செய்யப்பட்டது. இதற்கான அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக் குழுவில் சர்.ஏ. இலட்சுமணசாமி முதலியார் நியமிக்கப்பட்டு, பார்ப்பனரல் லாதாருக்கு இடம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

1923இல் சென்னைப்பல்கலைக் கழகச் சட்டம் கொண்டு வந்து அப்பல்கலைக் கழகத்தை மாகாண அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அங்கிருந்த பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்தார். சமற்கிருதம் தெரியாமல் தமிழ் எம்.ஏ. படிக்க முடியாத நிலையை, 1926இல் மாற்றினார். சமற்கிருதம் தெரியாமல் மருத்துவம் படிக்க முடியாது என்ற நிலையையும் 1924இல் மாற்றினார்.

பெண்களுக்கு வாக்குரிமை, கல்வி

பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை வழங்கியது சென்னை மாகாணத்தில்தான். 04.07.1921 இல் சென்னை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த உரிமை வழங்கப்பட்டது. பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. எல்லாப் பெண்களுக்கும் ஆறாம் வகுப்பிற்குப் பிறகு அரைக்கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. பெண்களுக்கு விடுதிகளும் திறக்கப் பட்டன.. கைம்பெண்கள் தங்கிப் படிக்கவும் தனி விடுதி திறக்கப்பட்டது. அதில் 42 பார்ப்பன கைம் பெண்களும், பார்ப்பனரல்லாத கைம்பெண்கள் 7 பேரும் கல்வி கற்றனர்.

இந்துமத பரிபாலன போர்டு

கோவில்களில் பார்ப்பனக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த இந்துமத பரிபாலனச் சட்ட மசோதாவை 18.12.1922-இல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.  இம்மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதபடி பார்ப்பனர்கள் தடுத் தனர்.  ஆளுநரை வலியுறுத்தி நடைமுறைப் படுத்துவதற்குள் 1923 நவம்பர் மாதத்தில் முதல் அமைச்சரவையின் பதவிக் காலம் முடிவுற்றது.

இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் 19.11.1923இல் பனகல் அரசரே முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்துமதபரிபாலனச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவண்ணம் பார்ப்பனர்கள் சதி செய்து, ஆளுநரும் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்.

பனகல் அரசர் சளைக்கவில்லை . எப்படியாவது இதை நிறைவேற்றியே தீருவது என்று முடிவுசெய்து, மீண்டும் ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இம் முறை சத்தியமூர்த்தி அய்யர் சென்னைப் பல்கலைக்கழக பட்டதாரித் தொகுதி மூலமாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் இதை எதிர்த்து ஓயாமல் சட்டமன்றத்தில் பேசினார்: திட்டினார். 475 திருத்தங்களை அவர் ஒருவர் மட்டுமே கொண்டு வந்தார். மொத்தம் 800 சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. திருப்பதி கோவிலுக்கு மட்டும் விலக்கு அளித்தால் ரூ.5 இலட்சம் கையூட்டு தருவதாக பனகலிடம் பேசிப் பார்த்தனர். எதற்கும் பனகல் மசியவில்லை. 1925 நவம்பரில் வெற்றிகரமாகச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினார்.

பனகல்  அரசுமீது மடாதிபதிகளும் கோவில் நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை உயர்நீதி மன்றத்தில் தொடுத்தனர். இதனால் காங்கிரசில் இருந்த பெரியாருக்கு, பனகல் அரசர் மீது நேசம் ஏற்பட்டது. காங்கிரசைவிட்டுப் பெரியார் வெளியேறிய காலகட்டமும் அதுதான்.

காவிரி நீர்பங்கீடு

பனகல் அரசர் காலத்தில்தான் 1924 இல் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும் இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பயனாக மேட்டூர் அணை கட்டத் திட்டம் உருவாக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்று 1924 முதல் 1933க்குள் 10 ஆண்டுகளில் 5,91,38,000 ரூ. செலவில் கட்டி முடிக்கத்திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப் பட்டு 3.10,000 ஏக்கர் பாசன வசதி பெற்றுத் தமிழ்நாடு பஞ்சமில்லாமல் இருக்க வழிவகை செய்தார்.

வகுப்புவாரி உரிமை

பனகல் அரசர் 1921 முதலே வேலை வாய்ப்பில் வகுப்புரிமை அளிக்க முயற்சி மேற்கொண்டார். முதல்முறை ஆட்சியில் அவர் அதை நடைமுறைப் படுத்த விடாமல் பார்ப்பனர்கள் தடுத்தனர். ஆனால் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் அவர் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட்டார். அரசுப்  பணியாளர் தேர்வுக் குழுவை (Staff Selection Board) 1924இல் ஏற்படுத்தினார். இதில் பார்ப்பனர்ரல்லாதவர்களைத் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நியமித்து அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாதார் இடம்பெற வழிவகை செய்தார்.

1.4.1924இல் முதன்முதலில் வகுப்புரிமை அடிப்படையில் அரசுத் தேர்வுக்குழு மூலமாக நிரந்தரப் பணி நியமனம் செய்தார். அரசு ஆணை து எண் 658 – நாள் 15.8.1922இன் படியும், அரசு து, ஆணை எண் 563 – நாள் 21.7.1923இன் படியும்  இப்பணி நியமனம் செய்யப்படுவதாக அரசிதழில்  அறிவிக்கப்பட்டது.

உயர் பதவிகளில் பார்ப்பனரல்லாதார் மற்றும் ஆதித் திராவிடர்களுக்கு அதிக இடம் கிடைக்காமல் போனதற்குக் காரணம். அப்போது படித்தவர்களில் நம்மவர் அதிகமில்லை என்பது தான். 1924 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி இதுபோன்ற அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். Madras Presidency Administrative Report Communal Representation இல், கடைசிப் பக்கம்  வகுரிமை அடிப்படையில் பணி நிரப்பட்ட விவரத்தை 1924-1925 முதல் தவறாமல் வெளியிட்டு வந்தார்கள்.

- விடுதலை நாளேடு, 9.7.25

திங்கள், 21 ஜூலை, 2025

அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி இன்று 125ஆவது பிறந்தநாள் (23.6.1900 – 23.6.2025)-தமிழ்க்கோ



சுயமரியாதை இயக்க தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரி ‘திராவிட இயக்கத்தின் போர்வாள்’ என கொண்டாடப்பட்டவர்.

அஞ்சாநெஞ்சன், தளபதி என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டவர். தந்தை பெரியாரின் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றி தன் வாழ்நாள் முழுவதும் ஒரே தலைவர், ஒரே கட்சி என்று கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர்.

தஞ்சை மாவட்டம் கருக்காகுறிச்சியில் 23.6.1900 அன்று பிறந்தார். பெற்றோர் வாசுதேவன் – கண்ணம்மை மதுரை பசுமலை அமெரிக்கன் உயர்நிலைப் பள்ளியில்  10ஆம் வகுப்பு வரை பயின்றார். பின் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்தார்.

முதலாம் உலகப் போர் காலத்தில் நம் நாட்டு ராணுவத்தில் சேர்ந்து மெசபடோமியாப் பகுதியில் பணியாற்றினார். படையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பட்டுக் கோட்டை திரும்பினார்.

பரத்வாஜ் ஆசிரமத்தில் நடந்த பார்ப்பனக் கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் போராடியபோது அவரது கருத்துகளை அழகிரி முழுமையாக ஏற்றார்.  நாட்டின் பட்டித் தொட்டியனைத்திலும் பயணம் செய்து படித்தவர்களின் பாமரத் தன்மையையும், படி யாத வரின் ஏமாளித் தன்மையையும், பார்ப்பனரின் புரட்டுத் தன்மை களையும் தோலுரித்து காட்டினார்.

அழகிரி மேடையேறி வெண்கல குரலில் பேசத் தொடங்கியவுடனே, இளைஞர்கள் கூட்டம் ஆர்ப் பரிக்கும். இரும்பு துண்டுகளை கவர்ந்திழுக்கும் காந்தமென உணர்ச்சி பெருக்குடன் ‘ரதகஜதுரகபதாதிகள், ஓட்டை, உடைசல், செம்பு, பித்தளை அண்டபிண்ட சாரசரம்’ போன்ற சொல்லாட்சி யுடன் அனைவருக்கும் புரியும் தமிழில் முழங்குவார். அவரது உரை 3 மணி நேரத்துக்கும்  மேலாக நீடிக்கும். அவரது எழுச்சி மிக்க உரை சுயமரியாதை இயக்கத் திற்குத் தோன்றிய எதிரிகளை தோற்கடித்தது. அழகிரியின் பேச்சு நடையை இளைஞர்கள் பின்பற்ற முனைந்தனர்.

அஞ்சா நெஞ்சனின் பேச்சால் கவரப்பட்டவர்களில் கலைஞர் முக்கியமானவர். அவரைப் போலவே பேச வேண்டும் என்று ஆசைப்பட்டார். அழகிரி பேச்சாற்றல் குறித்து அவர் கூறுகிறார்:

சிம்மம் கர்ச்சித்தது

‘சிம்மம் கர்ச்சித்தது; புலி உறுமியது; கோடையிடி குமுறியது; பெரியார் பேச்சில் காணப்பட்ட அழுத்தம் திருத்தமான வாதமும், அழகிரி பேச்சில் காணப்பட்ட வீரங்கொப்பளிக்கும் வரிகளும், அண்ணா பேச்சின் அழகு தமிழும் என்னை வெகுவாக கவர்ந்தன’ என புகழாரம் சூட்டினார்.

சுயமரியாதை இயக்கத்தின் வீரியமிக்க பேச்சாளரான பட்டுக்கோட்டை அழகிரிசாமி  சுயமரியாதை இயக்க மேடைகள் மட்டுமின்றி மாற்றுக் கட்சி பொதுக் கூட்டங்களுக்கும் செல்வார். அங்கு மேடையில் பேசி கொண்டு இருப்பவர்களிடம் துண்டு சீட்டு அனுப்பி கேள்வி கேட்பது வழக்கம். அப்போது அழகிரிக்கும் மாற்று கட்சியினருக்கும் வாத, பிரதிவாதம் நடைபெறும். சில சமயம் கைகலப்பும் ஏற்பட்டு இருக்கிறது.

சிறப்புக் கட்டுரை

மாற்றுக் கட்சியினர் முகாம்களுக்கு சென்று கேள்வி கேட்கும் துணிச்சல்காரரான அழகிரிசாமியை அஞ்சா நெஞ்சன் என்று அழைத்தார் பெரியார்.

1945ஆம் ஆண்டு புதுச்சேரியில் திராவிடர் கழகத்தின் மாநாடு நடைபெற்றது. அப்பொழுது எதிர்ப்பாளர்கள் குழப்பம் விளைவித்து மாநாட்டு பந்தலுக்கு தீ வைத்து கலவரத்தை ஏற்படுத்தினர். மாநாட்டுக்கு – வந்தவர்களில் பலர் தாக்கப்பட்டனர். கலைஞரும் தாக்கப்பட்டு சாலையோரம் கிடத்தப்பட்டார். அவரை பெரியார்தான் காப்பாற்றி மீட்டார்.

இப்படி ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் மாலையில் நடந்த மாநாட்டுக்கு துணிச்சலாக தலைமை தாங்கினார் அழகிரி.

செங்கல்பட்டு மாநாடு

1929இல் செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாம் சுயமரியாதை மாநாட்டின்போது இரவு 10 மணிக்கு தொடங்கி  பல மணி நேரம் சளைக்காமல் உரை நிகழ்த்தினார்.

1931இல் ஈரோட்டில் நடந்த இரண்டாம் மாகாண சுயமரியாதை மாநாட்டில் தொண்டர் படை தலைவராக இருந்து மிகச் சிறப்பாக செயலாற்றி மாநாட்டின் வெற்றிக்கு அடிப்படை காரணமானார்.

1.8.1938இல் தந்தை பெரியார் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை துவக்கியபோது தளபதி அழகிரி உறையூரிலிருந்து ‘தமிழர் பெரும்படை’ என்ற பெயரில் சென்னைக்கு 600 மைல்கள் நடைபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  புதிய வரலாறு படைத்தவர். நடை பயண கலாச்சார அரசியலை முதலில் அறிமுகப்படுத்தியவர் தளபதி அழகிரியே எனக் கூறலாம்.

உழைப்பின் சின்னமாய் உலவிய தளபதி அழகிரி உடல் நலனை  கவனிக்கத் தவறியதன் விளைவு காசநோயால் பாதிக்கப்பட்டார். நலம் குன்றியிருந்தும் கூட்டங்களுக்கு சென்று உரை நிகழ்த்துவதை நிறுத்தவில்லை.

அஞ்சா நெஞ்சன் அழகிரியின் பால்தான் கொண்ட அன்பால், ஈர்க்கப்பட்ட பேச்சால் தான் வளர்ந்து நிற்கிறேன் என்று பிற்காலத்தில் குறிப்பிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.

மறுபடியும் காண்பேனா?

1948இல் ஈரோட்டில் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றபோது உடல் நலிவோடு இருந்த தளபதி அழகிரி கலந்து கொண்டார். ‘அப்போது அவர் பேசும்போது உங்கள் அனைவரையும் மறுபடியும் காண்பேனா? என்று சொல்ல முடியாது. என் தலைவருக்கும், தோழர்களுக்கும் இறுதியாக என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளவே இப்போது வந்தேன்?’ என்று தழுதழுத்த குரலில்கூறி கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை கண் கலங்க வைத்தார். மேடை உணர்ச்சி பிளம்பாக காட்சியளித்தது.

அவர் சொல்லியபடியே நடந்தது.

28.3.1949 அன்று அந்த ஒய்வறியா உழைப்பாளியின் விழிகள் திறக்கவில்லை. வாழ்வியல் பாடத்தைப் போதித்த வணங்காமுடி மண்ணில் இருந்து மறைந்து வரலாறானார்.

அழகிரியின் முடிவு செய்தி கேட்டு தந்தை பெரியார் மிகுந்த வேதனையடைந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,

‘‘நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். அழகிரிசாமி எனக்கு 30 ஆண்டு நண்பரும், என்னை மனப்பூவர்மாய், நிபந்தனை இல்லாமல் பின்பற்றி வருகிற ஒரு கூட்டு பணியாளருமாவார்.

கொள்கை வேற்றுமை, திட்ட வேற்றுமை என்பது எனக்கும் அவருக்கும் ஒரு நாளும் காண முடிந்ததில்லை. அவருடைய முழு வாழ்க்கையிலும் அவர் இயக்கத் தொண்டைத் தவிர வேறு எவ்வித தொண்டிலும் ஈடுபட்டதில்லை.

போதிய பணம் இல்லை

விளையாட்டுக்குகூட கொள்கையை விலைபேசி இருக்க மாட்டார். அப்படிப்பட்ட ஒருவர் ‘‘உண்மையான வீரமும், தீரமும் உள்ளவர் இச்சமயத்தில் முடிவெய்தி விட்டது என்பது எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது என்பதோடு இயக்கத்துக்கும் பதில் காண முடியாத பெருங்குறை என்றே சொல்லுவேன்’’ என்று வீர வணக்கம் செலுத்தி இருந்தார்.

நாதஸ்வர வித்வான் தோளில் துண்டு போடுவதற்கு இருந்த தடையை உடைத்த தளபதி அழகிரி

செட்டி நாட்டில் கானாடுகாத்தான் என்ற ஊரில் முக்கிய பிரமுகர் இல்ல திருமண நிகழ்வு. திருமண ஊர்வலத்தில் பிரபல நாதஸ்வரக்  கலைஞரான மதுரை சிவக்கொழுந்து துண்டைத் தம் தோளின்மீது போட்டுக் கொண்டு நாதசுரம் வாசிக்கிறார்.  இதைக் கண்ட ஆதிக்க ஜாதி  வர்க்கத்தினர் அந்த துண்டு தங்களை அவமதிப்பாக கூறி அதை எடுக்கும்படி கூறினர். ‘‘இது துண்டு அல்ல; வியர்வையை துடைக்கும் கைக்குட்டை’’ என்று சிவக்கொழுந்து  கூறினார். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத ஆதிக்க வர்க்கத்தினர்  துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ளும்படி வற்புறுத்தினர். திடீரென கூட்டத்தில் இருந்து ஒரு குரல் சிவக்கொழுந்து துண்டை எடுக்காதீர்கள் என ஒலித்தது  அந்தக் குரலுக்குசொந்தக்காரர் பட்டுக்கோட்டை அழகிரி. ஊர்வலம் நடுத் தெருவில் நின்றது. அவ்வூரிலேயே அய்யா அவர்களும் தங்கியிருந்ததால் அவரிடம் விரைந்து சென்று தகவல் தெரிவித்து அடுத்த நடவடிக்கைக்கான இசைவு பெற்றுத் திரும்புகிறார் தளபதி அழகிரிசாமி.

‘என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நானிருக்கிறேன் தோள் துண்டை எடுக்கக் கூடாது’ என்று கர்ஜிக்கிறார் அழகிரி.

கழகத் தோழர்கள் திரண்டு வர சிவக்கொழுந்து தோளில் துண்டணிந்தவாறே பெருமிதத்துடன் நாதசுரம் வாசித்து வர அவருக்கு அழகிரி விசிறியால் வீசிக் கொண்டே  ஊர்வலத்தில் நடந்து வந்தார்.

- விடுதலை நாளேடு,23.6.2025

ஞாயிறு, 20 ஜூலை, 2025

பேசுவது பெரியாரல்ல; காமராசர்! கடவுள், மதம், திருவிழா, சடங்கு சம்பிரதாயம் பற்றி காமராசர்




இன்று ஜூலை 15 – கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசரின் 123ஆவது ஆண்டு பிறந்த நாள். இதையொட்டி “மாலைமலர்” நாளேடு பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் சிறப்பு மலர் என்று நேற்று (14.7.2025) வெளியிட்டுள்ள சிறப்பு மலரில் “காமராஜரும் ஆன்மீகமும்…” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு முக்கியப் பேட்டி அப்படியே எடுத்துக் கொடுக்கப்படுகிறது!
உண்மையான காமராசர் தொண்டர்கள் இதுபற்றி படிக்கவும் சிந்திக்கவும், பரப்பவும் முன் வரவேண்டும்.
– ஆசிரியர்

ஆன்மீகம் பற்றி ஒரு முறை காமராஜர் அளித்த பேட்டி வருமாறு:-

“கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா?”

“இருக்கு, இல்லைங்கிறதைப்பத்தி எனக்கு எந்தக்கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்கியனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப்போச்சா?”

“கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒன்னாயிருக்கும் போலிருக்கே”

நேரு ரெண்டப்பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனால் மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார். அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில் போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச்சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிறதத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறனும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான் இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா?”.

“அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக்கிறீங்களா?

இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதி ன்னு படைச்சிருக்க மாட்டாரே?”  “மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடு ன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன்? சூத்திரன்? ரொம்ப அயோக்கியத்தனம்!”.

“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ளவில்லை?”

சிறப்புக் கட்டுரை

“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்” னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே. அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது.

நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல் வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக்கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன்” பண்றவனோட வேலை.

“நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே! தனிப்பட்ட முறையில நான் கோவில், பூஜை. புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்”.

“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா?”

“அதெல்லாம் வேலை, வெட்டியில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத் ராடனம் போறான் எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலை’ன்னு இவன்கிட்டே கோவிச்சுகிட்டான்? அபிஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன். அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா?

“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க? பதினெட்டு வருஷமா கடன் காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக.ஒரு அனாதை இல்லத்துக்கோ. முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லியா.

ஊருக்கு நூறு சாமி வேளைக்கு நூறு பூஜைன்னா. மனுஷன் என்னிக்கு உருப்படறது? நாட்டுல வேலை யில்லாத் திண்டாட்டம். வறுமை, சுகாதாரக்கேடு. ஏற்றத்தாழ்வு இத்தனையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு. பூஜைன்னேன்..?

ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்?”

“அப்படியானா, நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா? இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?”

“லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டு தான் இருப்பாரா?”

அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு “டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான்.

மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பசுவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவராயன், கழு வடையான். முனியன், வீரன்னு கும்பிட்டான்.

எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்? அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்.

மதம் மனிதனுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களப் போக்குமா? இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?”

“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே! அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?”

“டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டான்னேன்!

இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா அது மாதிரி அக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான்.

அந்தப் புத்தகங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும். காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி.

“அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க.

புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.”

நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல புதுசு கட்டுனதுமில்ல பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம கலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்”.

“மதம் என்பதே மனிதனுக்கு அபின்!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத்தோணுதே?”.

“நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா?

ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான்.

கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க்கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா? அதையெல்லாம் செய்யமாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான்.

மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்.”

“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா? அதிலேருந்து எப்போ விலகுனீங்க?”

“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன்.

1930க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன்.

அப்புறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன்.

ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?”

“அப்படியானா மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே அதப்பத்தி?”.

“அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு, ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்மள வாழ்த்தும்னேன்!”

– நன்றி: ‘மாலை மலர்‘, பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் சிறப்பு மலர், 2025
(பக்கம் 36, 37) 14.7.2025

 - விடுதலை நாளேடு, 15.7.25

வியாழன், 17 ஏப்ரல், 2025

சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (1-3)

 

பதிலடிப் பக்கம் : சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (1)

விடுதலை நாளேடு
பதிலடிப் பக்கம்

கவிஞர் கலி.பூங்குன்றன்

தன்மான இயக்கம் – திராவிடர் கழகம் என்று வருகின்றபோது – அதன் கொள்கைகள் என்கிற வாட்படை சங்கராச்சாரியாரின்கொள்கைகள் என்கிற ஆணி வேரை வெட்டி அக்னிக்கு இரையாக்குபவையாகும்.
பிறப்பில் பேதம் என்பது சங்கராச்சாரியார்களின் இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். பிறவியில் பேதம் கூடாது என்பது தந்தை பெரியாரின் கோட்பாடாகும்.
இந்த வகையில் சங்கர மடமும் பெரியார் நிறுவனமும் எதிர் துருவங்களாகும்.
தந்தை பெரியாரின் தன்மான இயக்கம் சூறாவளியாகச் சுழன்று வீசிய அந்தக் கால கட்டத்தில் சங்கர மடங்களை நடு நடுங்கச் செய்தது என்பதுதான் உண்மை.

தந்தை பெரியாருக்கு சிருங்கேரியாரின் மடல்!

சிருங்கேரி சங்கராச்சாரியார் தந்தை பெரியாருக்கு ஸ்ரீமுகம் (கடிதம்) எழுதினார். (‘குடிஅரசு’ 2-3-1930)
தந்தை பெரியாரையும் அவர்தம் தொண்டு களையும் புகழ்ந்து எழுதி, தமது மடத்துக்குத் துணைவியாருடன் வரவேண்டும் என்று வேண்டு கோள் விடுத்திருந்தார்.
அதற்குத் தந்தை பெரியார் பதிலும் எழுதினார்.
“அந்த ஸ்ரீமுகத்திலே சனாதன தருமத்தைக் கெடுக்காமல், கரும காண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமையைச் செய்து ‘சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வரையில்’ என்கிற நிபந்தனைகள் கண்டு, அதற்கு விரோதம் இல்லாமல் சில சுவ தந்தரங்கள் அளிக்கப்படும் என்கின்ற வாசகங்கள் காணப்படுகின்றபடியால், நாம் அங்குச் செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கிற விஷயம் நமக்குச் சந்தேகமாக வேயிருக்கின்றது” என்று பதில் எழுதினார். அங்கே செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
சங்கராச்சாரியார்கள் பற்றி தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ ஏடு வரிந்து தள்ளி இருக்கிறது. அதுவும் கைவல்யம் கட்டுரைகள் தூள் பறக்கச் செய்யக் கூடியவை. ஒரு ஊருக்குக் கைவல்யம் வருகிறார் என்றால் சங்கராச்சாரியார்கள், சந்நியாசிகள், உபந்நியாசிகள் சிறுநீர் கழித்து விடுவார்களாம். அந்த அளவுக்கு சாஸ்திரங்களில் கற்றுத் துறை போனவர்; அவரின் விவாதங்கள் வேதியத்தின் வேரைத் துளைத்து வெற்றிக் கொடியை நாட்டுவதாக இருக்கும்.

தோலுரிக்கிறார் தந்தை பெரியார்

பதிலடிப் பக்கம்

லோகக் குரு என்று சங்கராச்சாரியார்களை அழைக்கிறார்களே அதுபற்றி தந்தை பெரியார் கூறுகிறார்:
சங்கராச்சாரியார்கள் இந்தியாவுக்குக் குரு அல்ல. இந்துக்களில் பார்ப்பனர்கள் எல்லோருக் கும் குரு அல்ல. பார்ப்பனர்களில் உள்ள பல பிரிவுகளில் ‘ஸ்மார்த் தர்கள்’ என்கிற ஒரு சிறு கூட்டத்தாருக்கு இவர் குரு என்ற பாத்திர முடையவர். அச்சிறு கூட்டத்தாருக்கும் இவரைப் போல் இன்னமும் நான்கு அய்ந்து சங்கராச் சாரியார்கள் என்போர்கள் உண்டு. ஆகவே ஒரு சிறு கூட்டத்தில் அதாவது நமது நாட்டிலுள்ள சில ஆயிரக்கணக்கான மக்களில் 5 அல்லது 6 இல் ஒரு பாகத்தாருக்குக் குரு என்று ஏற்பட்ட ஒருவர், அக்கூட்டத்தின் செல்வாக்காலும், தந்திரத்தாலும், ஏமாற்று தலாலும் – நம்மவர்களின் அறிவீனத்தாலும், ஏமாந்த தனத்தினாலும் லோகக் குரு என்பதாக அழைக் கப்பட்டு, இந்துக்கள் என்கிற எல்லா மக்களுக் கும் குருவாகி, கோடிக் கணக்கான ரூபாய்களை கொள்ளை அடித்து வெறும் பார்ப்பனர்களுக்கே பொங்கிப் போட்டு பார்ப்பனப் பிரச்சாரம் செய்து வருகிறார் (குடிஅரசு 25-9-1927).
இவ்வாறு தந்தை பெரியார் லோகக் குரு என்ற பந்தாவின் அந்தரங்கத்தை அலசியுள்ளார்.

தோலுரிக்கிறார் அண்ணா!

தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பேசினார் (11-4-1942)
“இவ்வருஷம் மிராசுதார்கள் தங்களுடைய நியாயமான வரவு செலவு போக எஞ்சியிருக்கும் பணத்தை ஏழைகளுக்கு அன்னமிடுவதில் செலவு செய்ய வேண்டுமென்றும், வீடு கட்டுவதோ, நிலம் வாங்குவதோ, ஆபரணங்கள் செய்வதோ, பாங்கியில் போடுவதோ கூடா தென்றும், வியாபாரிகள் இதரர்களும் அதே மாதிரி இவ்வருஷம் கிடைக்கும் லாபத்தை மேற்சொன்ன வழியில் விநியோகிக்க வேண்டு மென்றும், அந்தப் பணத்தைத் தன்னுடைய குடும்பச் செலவுக்கு உபயோகப்படுத்தாமல், அதை விஷமாகப் பாவிக்க வேண்டும்” என்றும் பேசினார்
இதனை எடுத்துக்காட்டி அறிஞர் அண்ணா விவேகமிக்க வார்த்தை சாட்டைகளால் வேண்டும் மட்டும் விளாசித் தள்ளியுள்ளார் (திராவிட நாடு’ 19-4-1942).
தலையங்கத்தின் தலைப்பே வேடிக்கையானது.

“சங்கராச்சாரி பதவி தற்கொலை!”

ஏப்ரல் 11ஆம் தேதி மன்னார் குடியில் ஜகத் குரு சங்கராச்சாரியார் பேசியுள் ளார். அவரது சொற்பொழிவிலே காணப்படும் சில கருத்துகள், பிறருக்கு உபதேசமாக இருத்தலுடன் அவருக்கே சட்ட திட்டமாகவும் அமைவதாயின், அவரது பதவியைத் துறந்து, பாதசாரியாகி, பாட்டாளி யாகி, பாராருக் குழைக்கும் பண்பின ராகி அவர் வெளிவந்து விடுதல் வேண்டும்.
முதலில்லா வியாபாரம்! சோக மில்லா வாழ்வு! உழைப்பு கிடையாது! உல்லாசத்திற்குக் குறைவு கிடையாது! இங்ஙனம் இவர் வாழ்ந்து கொண்டு, மிராசுதாரர், வியாபாரி, மற்றவர் ஆகியோருக்கும் இதோபதேசம் புரிவது ஏதேனும் பொருளுடைய தாகுமா? கன்னக் கோலன் கனவின் கேடு பற்றியும், காம உள்ளத் தான் ஒழுக்கப் போதனை யையும், கசடன் கற்றதனாலாய பயனையும் எடுத்துக் கூறுவது எள்ளி நகையாடக் கூடியதன்றோ.. என்று அடுக்கிக் கொண்டே போகின்றார் அறிஞர் அண்ணா.

தோலுரிக்கிறார் தமிழர் தலைவர்

திராவிடர் இயக்க வரலாற்றில் இந்தத் திசையில் திராவிடர் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குன்றத்துப் பெரு விளக்காக ஒளி வீசுகிறார்!
சங்கராச்சாரியார் பற்றி 1983இல் அவர் ஆற்றிய அந்த பத்துச் சொற்பொழிவுகள் காலத்தை விஞ்சி நிற்கக் கூடியவை. கசடனும் கற்றுத் தெளியக் கூடியவையாகும் ‘சங்கராச் சாரி-யார்?” என்ற அந்த நூல் “நூல்களின் ஆதிக்கத்தை” கறாராக அறுத்தெறியக் கூடியதாகும்.
ஆங்கிலத்திலும் The Saint or Sectarian என்ற பெயரில் வெளிவந்து (1988) லோகக் குருவை லோகம் முழுவதும் முகத்திரையைக் கிழித்துக் காட்டிவிட்டது.
அதேபோல காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாகக் காஞ்சீபுரம் மடத்தை விட்டு வெளியேறினாரே (23–8–1987) அதன் பின்னணியை வெளிப்படுத்தி, அதனை ஆவணமாகத் தமிழ்நாட்டுக்குத் தந்த பெருமையும் அவருக்கே உரியது.

இப்பொழுது கொலைக் குற்றவாளியாகி, மக்கள் மன்றத்திலே மானம் மரியாதை இழந்து குமுறிக் கொண்டிருக்கும் ஜெயேந்திர சரஸ்வதி குறித்து மக்கள் மன்றத்திலே அவர் ஆற்றிய உரைகள் அலாதியானவை. அவ்வுரைகளும் “புதிய திருவிளையாடல் புராணம் – காஞ்சி சங்கராச்சாரியார்கள்மீது கொலை வழக்கு, ஏன்? எதற்கு? எப்படி?” (முழுத் தகவல்கள்) என்ற தலைப்பில் 254 பக்கங்களில் வெளிவந்து பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன. அந்தச் சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு பல்துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் கடல் அலைபோல்கூடி ஆர்ப்பரித் தார்கள். 25-11-2004 முதல் 16-4-2005 வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஏழு சொற்பொழிவுகளை ஆதாரப் பூர்வ ஆய்வுரை களாக நிகழ்த்தினார்.
இதில் இன்னொன்றையும் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும். பெரும் செல்வாக்கு உள்ளவர். குடியரசுத் தலைவர் பிரதமர்கள் எல்லாம் அவர் கால்களில் மண்டியிடுகின்றனர் என்பதை அறிந்திருந்தும், அந்தக் காஞ்சி சங்கராச்சாரியாரை ஜெயேந்திர சரஸ்வதியை தக்க ஆதாரங்களின் அடிப்ப டையில் கைது செய்தாரே (11-11-2004- ஒரு தீபாவளி நாளில்) தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா -அது சாதாரண மானதல்ல. மனந்திறந்து பாராட்ட வேண்டும்.

வேடத்தாலும், பிரச்சாரத் தந்திரங்களாலும் மக்கள் மன்றத்திலே ஊதி வானத்திலே பறக்க விடப்பட்ட அந்த லே(ம)ாகக் குரு என்கிற பலூனை சட்டத்தின் ஊசி முனையாலே வெடித்துச் சிதற அடித்துவிட்டார்.
சங்கராச்சாரியார்கள், சாமியார்கள், சந்நியாசிகள் என்றாலே கேவலமானவர்கள், வேடதாரிகள், காமக் கிறுக்கர்கள், கொலையும் செய்ய அஞ்சாதவர்கள் என்கிற உண்மை வெளிச்சத்துக்கு இதன் மூலம் வந்துவிட்டது. அவர்கள் குடலைக் கிழித்துக் காட்டினாலும் பக்தர்களேகூட நம்பத் தயாராக இல்லை என்பதுதான் எதார்த்தமாகும். இது திராவிடர் இயக்கத்துக்கு – தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியன்றோ!

இவர்தான் ஜெயேந்திரர்!
திருக்குறள்பற்றி ஜெயேந்திர சரஸ்வதி

பதிலடிப் பக்கம்

(2-4-1982 அன்று ஈரோட்டில் திருக்குறள் முனுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்)
“திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை, அதிலும் முதலில் பத்துக் குறட்பாக்களை மட்டும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு, பொருட்பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசி யமில்லை என்று காஞ்சி மடத் தலைவரான தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி துறவியார் திருக்குறளைப் பற்றித் திரிபான முறையில் தம் கருத்தைக் கூறியிருப்பது அதிர்ச் சியையும் வருத்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து திருக்குறளைப்பற்றி புறங்கூறி வருவதற்கு கண்டனம் தெரிவிப் பதுடன், அக்கருத் துக்களை திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள் பேரவை கேட்டுக் கொள்கிறது”.

• • •

விஜயேந்திரர் சொல்கிறார்:

“நமதுநாடு பல புராண, இதிகாச, சாஸ்திரங்களைக் கொண்டுள்ளது. அவைகளின் படி நடந்தால் மட்டுமே நமது நாடு சிறப்பான பாதையில் செல்ல முடியும். நமது சாஸ்திரங்கள் கூறுகிறபடி நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர் கள் நாத்திகராக இருக்கக்கூடாது, ஆத்திக ராகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை நல்ல முறையில் நிருவகிக்க முடியும். ஆட்சியாளர்கள் ஆன்மீக சிந்தனையோடு செயல்பட்டால் மட்டுமே நாடு சுபிட்சமாகத் திகழும். ஆன்மீக சிந்தனையைப் பாதுகாப் பதிலும், வளர்ப்பதிலும், ஆட்சியாளர்கள் ஈடுபட வேண்டும்”
(காஞ்சீபுரத்தில் 23-7-2000 அன்று நடைபெற்ற பசுவதைத் தடுப்பு மாநாட்டில் பேசியது)

• • •

திருப்பதியில் ஜெயேந்திரர் அத்துமீறல்:

3.11.2000 அன்று திருப்பதியில் தோமாலை சேவையின் போது குல சேகரன் படியில் அமர்ந்து அங்கு அர்ச்சகர்கள் ஆட்சேபித்தும், ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி) காஞ்சி ஜெயேந்திரர் அர்ச்சனை செய்தார். இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.
குறிப்பு: கருவறையில் அர்ச்சகர்கள் தவிர யாரும் அர்ச்சனை செய்ய எந்த ஆகமமும் உரிமை வழங்கவில்லை என்று அவர்களே கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஜெயேந்திரர் நுழைந்தது எப்படி?

• • •

சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் (ஜெயேந்திரர்) யார் பெரியவர் என்பதில் சண்டை:

14-2-2001 அன்று இராமேசுவரம் இராமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ் வதி ஆகியோரும் சிருங்கேரி சங்கராச் சாரி யாரும் கலந்துகொண்டனர், விழாக் குழுவினர் இந்தச் சங்கராச்சாரிகளுக்கு சிறப்புச் செய்யும் பொழுது யாருக்கு முதல் மரியாதை என்பதில் மோதல் ஏற்பட்டது, உடனே, மதுரை ஆதீனம் தலையிட்டு அன்று இரவு விடிய விடிய கட்டப் பஞ்சாயத்து நடத்தி இரண்டு மடாதிபதி களுக்கும் சமரசம் செய்து வைத்தார்.
(தினபூமி 15-2-2001)

• • •

திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் செய்து காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 5-4-2002 அன்று அணிவித்தார்.
(‘மாலை மலர்’ 16-3-2002)

• • •

“ஆண்டவனுக்கு மேல் அந்தணன்!”

9-10-2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்’ எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘அருந் தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நூலை வெளியிட்டு ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாவது:
“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்ட போதும்… அந்தணர்தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன்கூட அப்புறம்தான். அந்தணன்தான் முதலில்!
(நக்கீரன்: 15-11-2002)
(தொடரும்)

பதிலடிப் பக்கம் : சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (2)

பதிலடிப் பக்கம்

கவிஞர் கலி.பூங்குன்றன்

கோயிலில் தாழ்த்தப்பட்டோர்
நுழைவு பற்றி ஜெயேந்திரர்;
ஆதி – திராவிடர், அரிஜன் போன்றவர்கள் எல்லாம் கோயிலுக்குச் சென்றுவிட்டுத்தான் வருகிறார்கள். அதில் பிரச்சினை இல்லை, ‘தலித்’ என்ற பெயரில் வரும்போதுதான் குழப்பம். ஆரோக்யசாமி, யூசுப் போன்ற பெயர்களில் வருகிறார்கள். இதனால் கோயிலுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடும் என பயப்படுகிறார்கள். நான்கு பேர், அய்ந்துபேர் போனால் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை, கும்பல் கும்பலாகப் போனால் எப்படி? கோயிலில் பாதுகாப்புக் கருதியே அவ்வாறு தடை செய்யப்படலாம்.
(தினகரன் 16-11-2002)

• • •

தீண்டாமை ஒழிப்பு வீரரா இவர்?
10-11-2002 அன்று மதுரை மாவட்டம் தும்பைப் பட்டிக்குச் சென்றார் ஜெயந்திரர். அது முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த ஊர். அவ்வூர் வீரகாளியம்மன் கோயிலில் வந்து இறங்கினார், அக்கோயில் பூசாரி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர். அவர் தீப ஆராதனை காட்டினார். அதனைக் கும்பிட்ட ஜெயேந்திரர் அவர் கொடுத்த பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவரை யாரும் நெருங்கி விடாதபடி கவனித்துக் கொண்டனர் அவரின் பாதுகாவலர்கள். சுவாமிகளை யாரும் தொட்டு விடக் கூடாது என மைக்கில் திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டே இருந்தனர். ஜெயேந்தி ரரும் தன் தோளில் அணிந்திருந்த சால்வையை எடுத்து தலித்துகள் தன்னைத் தீண்டி விடாதபடி கால்களை மறைத்துக் கொண்டார்.
கோயில் நிகழ்ச்சிக்குப்பின் கக்கன் நினைவு மண்டபத்துக்கு வந்து ஜெயேந்திரர் மாலையிடுவார் எனத் திட்டமிடப்பட்டு இருந்தது. மக்களும் அங்கே காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் அங்குச் செல்லாமல் புறப்பட்டு விட்டார்.
(நக்கீரன் 10-11-2002)

• • •

ஜெயிலுக்குப் போவோர் யார்?
கேள்வி: சமீப காலமாக மக்களை ஏமாற்றும் போலிச்சாமியார்கள் நிறைய பிடிபடுகிறார்கள். யார்மீது தவறு?
ஜெயேந்திரர் பதில்: மஷனுக்குப் பேராசை இருக்கிற வரைக்கும் இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். என்னா சுருக்கு வழியில் சம்பாதிக்கனும்னு ஆசைப்படுகிற நிறைய பேர் போலிச் சாமியாராக எழுந்தருளி இருக்காங்க. ஜனங்களும் இவங்கள நம்பிப் போறாங்க. இதனால ஜனங்க, சாமியார்கள் இரண்டு பேருக்குமே ஆபத்து வருது, ஆனா, ஜனங்க தப்பிச்சு வேறொரு சாமியார்கிட்ட போயிடு றாங்க, இவங்கள நம்பி வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. அதனால் இந்த விஷயத்தில் சாமியார்கள்தான் பொது ஜனங்ககிட்ட இருந்து பயந்து ஒதுங்கியிருக்க வேண்டும். (சொல்லிவிட்டு வாய்விட்டு ரசித்துச் சிரிக்கிறார்)
(குங்குமம் – 27-8-1998)
குறிப்பு: அப்படி சொன்னவரே ஜெயிலுக்குப் போனார் என்பதுதான் சுவையான சங்கதி ஹ…ஹ…ஹ…

• • •

இமாம் பசந்த் இனி “இராம் பசந்த்” அண்மையில் மதுரைக்கு விசிட் அடித்தார் சங்கராச்சாரியார். அவரைச் சந்தித்து ஆசி வாங்கிய பக்தர்கள் கூட்டத்தில் ஒருவர் மாம்பழங் கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு, “இது உரம் போடாமல் இயற்கையாக காய்த்துப் பழுக்கவச்ச பழம்” என்று சொல்ல…
“அப்படியா? இந்த மாம்பழத்தின் பெயர் என்ன?” என்று ஆர்வமாகக் கேட்டிருக்கிறார் சங்கராச்சாரியார்.
உடனே அந்த பக்தர் ‘இமாம் பசந்த்’ என்று சொல்லியிருக்கிறார்.
” மாம்பழத்திற்கு இப்படி ஒரு பெயரா?” என்றபடி சிரித்த சங்கராச்சாரியார் “பரவா யில்லை சீக்கிரமே இதையும் இராம் பசந்த்துன்னு மாத்திட்டாப் போச்சு” என்றாராம்.
(ஜூனியர் விகடன்’ 1-6-20)
குறிப்பு: பழத்தின் பெயரைக் கேட்கும்போது கூட இப்படி ஒரு துவேஷம்!

• • •

சர்ச்சைக்குரிய இடத்தில்
இராமர் கோயில் கட்ட வேண்டும்
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி யொன்றில் காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அயோத்தியில் தற்போது சர்ச்சைக்கு உரிய இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் இராமர் கோயில் கட்டப்பட வேண்டும், இதற்கான சமரச முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன்”
(‘தினத்தந்தி’ 5-6-2008)
இவர்தான் இரு மதத்தவர்களுக்கிடையே சமரசம் செய்யச் சென்றார் என்பது சரியான தமாசுதான்.
காஞ்சி சங்கராச்சாரியார் குறித்த மேற் கண்ட தகவல்கள் மூலம் அவரின் பார்ப்பன வெறியும், இந்துமதக் குரூரமும் தான் என்கிற ஆணவமும் விளங்கவில்லையா?
இவர்கள்தான் ஆணவம், கன்மம், மாயைகளைத் துறந்தவர்களாம்! – வாயால் சிரிக்க முடியுமா?
3
இவர்களை அடையாளம் காண வேண்டாமா? “ஒரே சுடுகாடு கூடாது”
எல்லா ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு இருக்க வேண்டும் என்ற கருத்தை காஞ்சி சங்கராச்சாரியார் எதிர்த்துள்ளார். எல்லா வகுப்பினரும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததால் இது முடியாத ஒன்று என்றார் அவர்.
இது சாத்தியப்படாது என்று கூறிய சங்கராச்சாரி, ஒரே சுடுகாடு தேவை என்பதை வலியுறுத்தவில்லை.
மின்சார சுடுகாடு இந்து தர்மத்துக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டும் என்று கூறிய அவர், மதமும், அரசியலும் ஒன்றாக கலக்கக் கூடாது என்றார். நாகர்கோயிலில் நடைபெற்ற வகுப்புக் கலவரத் தில் சில அரசியல் கட்சிகளுக்குப் பங்கு உண்டு என்று அவர் குற்றம் சாட்டினார். மதுரையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்த போது இவ்வாறு கூறியிருக்கிறார்.
(‘விடுதலை’ 8.3.1982 திங்கள் பக்கம் 1)

• • •

பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது
Sankaracharya Against Quota for women in politics. Virtually rejected for the demand for Seperate reservation for women.
(‘The Pioneer’ 17-3-1997)

• • •

செருப்புக்குப் பூஜை!
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிருக்கை கிராமத்தில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெயரால் மணி மண்டபம் – ரூ.3 கோடி செலவில்; 151 தூண்கள்; முழுக்க கிரானைட் கற்கள்; அவரது செருப்பு வைத்துப் பூஜிக்கப்படும்.
(‘ஆனந்த விகடன்’, ஜூன் 1997)

• • •

பி.ஜே.பி.க்கு ஆதரவு
திருவானைக்காவில் கோயில் திருப்பணிகளைத் துவக்கி வைத்து பின் செய்தியாளர்களிடம் ஜெயேந்திரர் கூறியது.
பி.ஜே.பி. என்றால் வெறுக்காமல் ஸ்திரமான அரசு ஒன்றை அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்
(‘தினமலர்’, 19-3-1998)

• • •

அணுகுண்டுக்கு ஆதரவு
அணுகுண்டு சோதனை வெற்றிக்கு ஜெயேந்திரர் பாராட்டு!
(‘தினமணி’, 16-5-1998)

• • •

பாபர் மசூதி – ஒரு கட்டடம்!
அயோத்தியில் கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை.
(‘தினமணி’ 27.11.2000 பக்கம் 1)
குறிப்பு: பாபர் மசூதி சங்கராச்சாரியார் பார்வையில் ஒரு கட்டடம் – அவ்வளவுதான்: மற்றவர்களின் வழிபாட்டுத்தலம் என்றால் இவர்களுக்குக் கிள்ளுக்கீரை – அப்படித்தானே!
இந்துக் கோயில்கள் மட்டும் கட்டடம் அல்லாமல் வேறு என்னவாம்
விஜயகாந்துக்குத் தூபம்!
ரஜினியுடன் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம். விஜயகாந்த்துக்கு ஜெயேந்திரர் அட்வைஸ்.
(‘குமுதம்’, 18.1.2001)
குறிப்பு: ஒரு சங்கராச்சாரியாருக்கு இதுதானா வேலை? இன்றைக்கு விஜயகாந்த் என்கிற நடிகர் கட்சி ஆரம்பித்துள்ளதற்கு இவர்தான் காரணமோ!

காசைக் கரியாக்கு!
தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது மதம் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் அரசியலோ, நீதிமன்றமோ தலையீடு செய்வது சரியாக இருக்காது.
தீபாவளிப் பண்டிகைக்குக் காரணமான நரகாசுரன் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் கிருஷ்ண பரமாத்வால் வதம் செய்யப்பட்டான். எனவே அந்த நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பதில் இந்துக்கள் அதிக ஆர்வம் காட்டுவது எப்படி தவறாகும்?
(“தினமலர்”, 2.11.2001)
குறிப்பு: காசைக் கரியாக்காதே என்று அறிவுரை சொல்ல வேண்டியவர் இந்து மதம் என்கிற வெறியுடன் இப்படிச் சொல்லுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
தமிழ்மீது வெறுப்பு
கரூர் மாவட்டம் திருமலை முத்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு 9.9.2002 அன்று தமிழில் மந்திரம் சொல்லி நடைபெற்றது. இதனைக் கண்டித்து கோயில் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் எழுதிய ஜெயேந்திர சரஸ்வதி, கும்பாபிஷேகங்களில் சமஸ்கிருத மந்திரங்கள் தொன்று தொட்டு ஓதி வரும் வழக்கத்தை கைவிடுவது முறையல்ல என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
(‘இந்தியா டுடே’, 2.10.2002)
குறிப்பு: தமிழில் குடமுழுக்கு நடந்ததால் கோயில் குருக்கள் பார்ப்பனர்கள் கோயிலை இழுத்து மூடினார்கள். தீட்டுக் கழித்துத் தான் மீண்டும் கோயிலைத் திறந்தார்கள். பார்ப்பனர் களும் தமிழர்கள்தான் என்று சொல்லுபவர்கள் இந்த இடத்தைக் கவனிப்பார்களா?
பார்ப்பன மயமே!
காஞ்சீபுரத்தை அடுத்த கலவையில் சங்கர மடம் நடத்தும் முதியோர் இல்லத்தில் 160 பேர்; வேத பாட சாலையில் 21 சிறுவர்கள்; அனைவரும் பிராமணர்கள்.
(‘தினமணி’, 16.1.2005)
• சுடுகாட்டிலும் கூட பேதம் இருக்க வேண்டும்.
• பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது
• செருப்புக்குப் பூஜை
• பி.ஜே.பி.க்கு ஆதரவு
• தமிழில் குடமுழுக்குக் கூடாது
• பார்ப்பனர்களுக்கு மட்டுமே இடங்கள்.
இப்படிக் கூறுபவர்கள் நடந்து கொள்பவர்கள் தமிழின விரோதிகள் அல்லவா – சமத்துவத்துக்கு எதிரிகள் அல்லவா?
இவர்களை இன்னமும் லோகக் குரு என்று மதிப்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?
தமிழர்களே சிந்தியுங்கள்!
(தொடரும்)

 

குற்றப் பத்திரிகை

பதிலடிப் பக்கம்
‘காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் வியாழக்கிழமை இரவு (11.11.2004) கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் வெள்ளிக்கிழமை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சின்ன காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியைச் சேர்ந்த ஆனந்த சர்மா மகன் சங்கரராமன். இவர் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். 2004 செப்டம்பர் 3-ஆம் தேதி மாலை கோயில் அலுவலகத்தில் இருந்த சங்கரராமனை அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கோயில் வளாகத்திலேயே நடைபெற்ற இக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை செய்யப்படுவதற்கு 2 நாள்களுக்கு முன்னர் ஜெயேந்திரருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து சங்கரராமன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். உங்களைப் பற்றிய எல்லா விஷயத்தையும் வெளியில் சொல்லி விடுவேன் என்று அவர் அக்கடிதத்தில் ஜெயேந்திரரை மிரட்டியுள்ளார். அதன் பிறகே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
காலை 6.15 மணிக்கு போலீஸ் வாகனத்தில் காஞ்சீபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு (எண்1) ஜெயேந்திரர் அழைத்து வரப்பட்டு நீதிபதி ஜி. உத்தமராஜ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார் – அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் காலை 7.35 மணிக்கு வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குற்றப்பிரிவு 302,120-பி, 34,201 ஆகிய பிரிவுகள்
கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் போலீசார் ஜெயேந்திரர்மீது பதிவு செய்துள்ளனர்.

(‘தினமணி’ 13 நவம்பர், 2004,

சனிக்கிழமை, சென்னை)

பதிலடிப் பக்கம் : சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (3)

கவிஞர் கலி.பூங்குன்றன்

கழகமும் – சங்கராச்சாரியார் எதிர்ப்பும்
சங்கராச்சாரியார் பகிஷ்காரம்
பெரியார் அறிக்கை (25-5-1966)

நமது நாட்டில் சங்கராச்சாரியார் சுற்றுப் பயணம் என்னும் பேரால் வர்ணாசிரமப் பிரச் சாரம் நடை பெறுவதாலும் அந்த வர்ணாசிரமப் பிரச்சாரச் சலுகையை அடிப்படையாக வைத்துக் கொண்டு சமதர்மத்திற்கு விரோத மான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாலும் சங்கராச் சாரியார் தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்களுக்கு எப்படியாவது காங்கிரசை இப்போதைய தேர் தலில் வீழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்கிற பிரநாத (பேரொலி) பிரச்சாரம் செய்வதாலும், மக்களுக்கு விளக்கம் தெரிவிப்பதற் காகவும், தற்காலம் நடைபெறும் அரசாங்கத்திற்கு இதனால் கேடோ, எலக்ஷனில் தோல்வியோ ஏற்படாமல் இருக்கச் செய்வதற்காகவும் வர்ணாச்சிரம எதிர்ப்புப் பிரச்சாரமாக ‘சங்கராச்சாரி பகிஷ்காரப் பிரச்சாரம்” செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆதலால் அண் மையில் முதலாவதாக திருவண்ணா மலையில் சங்கராச்சாரி பகிஷ்காரப் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

வேலூரில்

30-5-1966 வேலூரில் சங்கராச்சாரி பகிஷ்காரக் கிளர்ச்சி! வேலூர் நகர சபை சங்கராச்சாரியை வரவேற்பதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய சத்துவாச்சாரி தோழர்கள் பிச்சாண்டி, தியாகராசன், நகரத் தலைவர் தாமோதரம், செயலாளர் கழிஞ்சூர் செல்வராசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சங்கராச்சாரியாருக்கு வரவேற்பு முடிந்தபின் இரவு 9.30 மணிக்கு விடுவிக் கப்பட்டனர். சாமி. சம்மாரம் மற்றும் தோழர்கள் விடுதலையான தோழர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.
வடஆர்க்காட்டில் சுவரொட்டிகள் ஒட்டி, சங்கராச்சாரியாருக்குக் கண்டனக் கிளர்ச்சி
3.6.1966 அன்று ராணிப்பேட்டையிலிருந்து முத்துக்கடை வரை சங்கராச்சாரியார் பகிஷ்கார சுவரொட்டிகளை செயலாளர் கழிஞ்சூர் செல்வராசன், ஆர்க்காடு இளங்குப்பன், வேணு கோபால் ஆகியோர் ஒட்டினர். அவற்றைக் கவால்துறையினர் கிழித்துவிட்டனர். அதற்கு முன்னர் நல்ல விளம்பரம் ஆகிவிட்டது. பிறகு வாலாஜாபேட்டையிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சங்கராச்சாரி பகிஷ்காரக் கிளர்ச்சி

(சுவரொட்டி வாசகம் வர்ணாசிரம சங்கராச் சாரி ஒழிக! ஒழிந்து போ!!)
13.6.1966 மாலை சென்னை மயிலாப்பூரில் நடைபெறவிருக்கும் மடாதிபதிகள் மாநாட்டுக்கு வருகை தந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஜெயேந்திர சரஸ்வதி ஆகியோருக்கு மயிலாப்பூர் குளக்கரை அருகில் வெங்கடேச அக்ரகாரம் தெரு முனையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட தி.க. தலைவர் டி.எம். சண்முகம், செயலாளர் டி.வி. தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது. நகரெங்கும் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதே பகிஷ்காரக் கிளர்ச்சியை தந்தை பெரியார் அவர்களும், கைவல்யம் சாமியாரும் 60 ஆண்டுகளுக்கு முன்னமே செய்துள்ளார்கள் என்பதை அறிக்கை மூலம் பெரியார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கலந்துகொண்டோர்:
டி.எம். சண்முகம், பி.ஈ. பக்தவச்சலம், டி.வி, தட்சிணாமூர்த்தி, அ.குணசீலன், மு.போ, வீரன், கே. நடராசன், என். தேவராசன், கே. கல்யாணி, எம். வேணுகோபால், டி.கே. கோபால், புண்ணியகோட்டி, டி, குப்புசாமி, செங்கண்ணன், ஆர். வெங்கடாசலம், கே. ஆறுமுகம், எம். கணேசன், பி. ஏழுமலை, என். பாலகிருஷ்ணன், த. கன்னியப்பன், மயிலை சம்பந்தம், ஏ.கே. சேகர், எம். வாசு, ராமன், டி. மதுரை, தட்சிணாமூர்த்தி, திருமதி ராஜம்மாள், சே. ஏழுமலை, வேதகிரி, ஏ. லோகநாதன், எஸ். சீனுவாசன், கே. தாமோ தரன், சிங்காரம், கோவிந்தசாமி, சக்கரபாணி, பி. சின்னையா, கே. மோகன், எம். ரங்கநாதன், ஆர். கணேசன், என். தணிகாசலம், சந்திரன், கே.பி. சந்திரன், கே.வி.ஆர்.எஸ். நாகய்யா, பி. ஜானகிராமன்.
பார்ப்பனர் காலித்தனத்துக்குக் கண்டன நாள்!
20.11.1966 ஞாயிறு அன்று தமிழ்நாடெங்கும் நடைபெற வேண்டும்!

தந்தை பெரியார் அறிக்கை

(முகாம் – குடந்தை – 123.11.1966)
சங்கராச்சாரியார்கள், சாமியார்கள், பார்ப்பனக் குண்டர்கள் டில்லியில் காமராசரைக் கொல்ல (7.11.1966) அவர் தங்கியிருந்த வீட்டிற்கு நெருப்பு வைக்க முயற்சித்த அடாத செயலைக் கண்டிப்பதன் அறிகுறியாக 1966 நவம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையை பார்ப்பனரின் கொலை பாதகக் கண்டன நாளாக தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
அன்று கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தி, கூட்டம் போட்டு, சங்கராச்சாரியார்கள் சாமியார்கள் குண்டர்கள் ஆகியவர்களைக் கண்டித்துப் பேசி, “யாவரும் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.
– ஈ.வெ.ராமசாமி

நெல்லையில் தீர்மானம்

நெல்லையில் (13-7-1980) பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடு தீர்மானம் 14 கூறுவதாவது: வர்ணாசிரம தர்மம் – ஜாதி முறை காப்பாற்றப்பட வேண்டும் என்பதை சங்கராச்சாரியார் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து வருவதும், சிருங்கேரி சங்கராச்சாரியார் குலதர்மத்தைப் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து வருவதும் கண்டு இக்கூட்டம் (மாநாடு) வன்மையாகக் கண்டிப்பதுடன் ஜாதி, தீண்டாமை, பாதுகாப்புப் பிரச்சாரம் செய்யும் சங்கராச்சாரிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்கு மாறு மத்திய – மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
சென்னையில்
28-12-1982 அன்று சென்னை சைதை திருவொற்றியூர், கலைஞர் நகர் பகுதியில் சங்கராச்சாரி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
தாழ்த்தப்பட்டவரும் இந்து என்றால் சங்கராச் சாரியாக நியமிக்கத் தயாரா? என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
தீர்மானம் 6:
13.6.1982 நீண்டகாலமாக வடநாட்டின் பல மாநிலங்களில் வேரூன்றி வன்முறைக் கலவரங்களைத் தூண்டுதல் மூலம் ஆரிய தர்மத்தைப் பரப்பும் பார்ப்பன மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் குறிப்பாக அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பகிரங்கமாக அதன் அணி வகுப்புகளை நடத்தி வருவதையும் நெல்லை – குமரி போன்ற மாவட் டங்களில் கலவரங்களைத் திட்டமிட்டு நடத்திடு வதையும் இந்த அரசு கண்டும் காணாமல் இருப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
காஞ்சி சங்கராச்சாரியார் என்பவர் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் அணி வகுப்புகளில் கலந்து ஆசியுரை கூறியும் ஆர்.எஸ்.எஸ்.,சுகுப் பகிரங் கமாக ஆள் சேர்க்கும் பணியை மேற்கொண்டும் வருகிறார். சங்கராச்சாரியார் களின் இந்தச் செயல் தமிழர்களுக்கு விடப்படும் சவால் என்பதால் இந்நிலையை மேலும் அவர் தொடர ஆரம்பித்தால் அவர் போகும் இடங்களில் எல்லாம் அவருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டுவதுபற்றி யோசிக்கப்படும் என்றும், இதன் இறுதி முடிவை கழகப் பொதுச் செயலாளர் மேற்கொண்டு அறிவிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு (திருச்சி) பொதுச் செயலாளர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

சங்கராச்சாரி – யார்?

தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மணி விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் ‘காமகோடி’ என்ற சொற்களைக் கொஞ்சம் பிரித்துச் சொன்னார்.
அவ்வளவுதான், மூக்கின்மேல் கோபம் பொத்துக் கொண்டு பீறிட்டது காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு.
எழுத்தாளர் சின்னக்குத்தூசி, ஞானி ஆகியோர் ஜெயேந்திரரின் அழைப்பின் பேரில் காஞ்சிமடம் சென்று அவரைச் சந்தித்தபோது கலைஞர் பேச்சைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
“கருணாநிதியை எடுத்துக் கொள்ளுங்கள். என்னைப்பற்றி எது வேண்டுமானாலும் சொல் லட்டும்; நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் எனது பீடத்தை எதற்காக அவர் இழிவுபடுத்திப் பேச வேண்டும்? எனக்கு ரொம்ப வருத்தம். நான் என்ன செய்ய முடியும்? நான் வழிபடும் ஆண்டவனிடத்திலே தான் அவருக்குத் தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண் டேன். அதன்படியே கருணாநிதி படுத்துண்டார்” என்று சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் குறிப் பிட்டுள்ளார்.
(ஆதாரம்: மானமிகு கி. வீரமணி அவர்களின் சங்கராச்சாரி-யார்?’ நூல் பக்கம் 3)
இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் “சங்கராச்சாரி-யார்?” என்ற தலைப்பில் பத்து சொற் பொழிவுகள் பேசினார். அதன் விவரம் வருமாறு:

சிறப்புக் கூட்டங்கள்
நாள்கள் தலைமை

6.4.1983 கீ. இராமலிங்கனார்
28.5.1983 தெள்ளூர் தருமராசன்
5.6.1983 கா. அப்பாத்துரையார்
14.6.1983 சுரதா
18.6.1983 மா. நன்னன்
27.6.1983 ந.இராமநாதன்
7.7.1983 பொன்னிவளவன்
18.7.1983 கே.எல். பழனிசாமி
23.7.1983 இறையன்
18.1983 பெருஞ்சித்திரனார்
(முதல் கூட்டம்: சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில்; மற்றவை சென்னை – பெரியார் திடலில் நடந்தன)
இந்தப் பத்து உரைகளும் ‘சங்கராச்சாரி- ‘யார்?’ என்ற தலைப்பில் தமிழில் நூலாக வெளிவந்தது. (முதல் பதிப்பு 1986)
பின்னர் இங்கிலீஷில் The Saint or Sectarian? என்ற பெயரில் வெளி வந்துள்ளது (1988),
மோசடியில் பிறந்த சங்கரமடம் என்பதில் தொடங்கி ‘நாத்திகனுக்கு வைத்தியம் பார்க் காதே!’ என்று கூறும் அளவுக்கு சங்கராச்சாரி யார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மனிதாபிமான மற்றவர்; சங்கர மடத்தில் உண்டாக்கப்பட்ட அறக்கட்டளைகள் அனைத்து மூலமும் பயன் பெறுவோர் அனைவரும் பார்ப்பனர்களே;
ஆதிசங்கரர் நடத்திய ஆபாச சோதனைகள் வரை அங்குலம் அங்குலமாக அலசி எடுக்கப்பட்டுள்ளது அந்நூலில். அத்தளைக்கும் ஆதாரங்கள் அடுக்கடுக்காகக் கொடுக்கப்பட்டன. அந்த நூலை எதிர்த்து ஒரே ஒரு வரிகூட இதுவரை சங்கர மடக்காரர்களாலோ பார்ப்பனர் களாலோ எழுதப்படவில்லை என்பது அடி கோடிட்டுக் காட்டத்தக்கதாகும்.

கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் (6.2.1984)

வர்ணாசிரம வெறியர் காஞ்சி சங்கராச்சாரி யாருக்கு எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழ்நாடு அரசே வரவேற்புத் தரும் போக்கைக் கண்டித்து வேலூர் – காட்பாடி இரயில் நிலையம் அருகில் கறுப்புக் கொடி காட்டத் திரண்டார்கள் திராவிடர் கழகத் தோழர்கள். அதிமுக அமைச்சர்கள் ஆர்.எம். வீரப்பன், சவுந்தரராஜன் மற்றும் அரசு அதிகாரி களுக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.
கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி தலைமை வகித்தார். க. பார்வதி (மாநில மகளிரணி செயலாளர்) துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, இவர்களுடன் 2000 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மண்டல் குழுவுக்கு எதிர்ப்புக் கூறிய காஞ்சி சங்கராச்சாரிக்குத் தஞ்சாவூரில் கறுப்புக் கொடி (9.4.1990)
தஞ்சையில் காலை 8.30 மணியளவில் இராயபுரம் கோபால் தலைமையில் மண்டல் குழு பரிந்துரைகளை எதிர்த்துப் பேட்டியளித்த காஞ்சி ஜூனியர் சங்கராச்சாரிக்குக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி மற்றும் ஏராளமான கழகத் தோழர் களை காவல்துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்தின் எதிரொலியாக தஞ்சை ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ கொடுக் கவிருந்த வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்தது.
(தொடரும்)

 

தமிழ்மீது சங்கராச்சாரியாரின் துவேஷம்

அக்காலத்தில் சங்கராச்சாரியாராயிருந்த பெரியவாள் (சந்திர சேகரேந்திர சரஸ்வதி) காரைக்குடிக்கு வந்தார். பள்ளிக்கூடத்திற்கு வந்துகூட மாணவர்களிடையே பேசினார்.அவரிடம் சென்று தீர்த்தம் வாங்கிக் கொள்ள ஊரிலிருந்து பெரும்பான்மையோர் ஆர்வத்தோடிருந்தனர். பள்ளி ஆசிரியர்கள் பலரும், தலைமை ஆசிரியர் உள்பட அவரைக்கண்டு தரிசித்தனர். ஆனால், என் தந்தையார் மட்டும் போகவில்லை. பிறகு, சில நாள்கள் கழித்துத் தலைமையாசிரியரின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆச்சாரியாரைக் கண்டு தரிசித்து வந்தார். தொடக்கத்தில் மடத்திற்குச் செல்ல அய்யரவர்கள் ஏன் தயங்கினார்கள் என்பதை அறிய விரும்பிய மாசிலாமணி தேசிகருக்கு அய்யரவர்கள் கீழ்க்காணுமாறு கூறினார்:
“தமிழ்நாட்டிலேயே தமிழ் மக்களால் பாராட்டப்படும் பீடத்தினர். அப்படியிருந்தும் பூஜைக்குச் செல்ல நீராடிய பிறகு வடமொழியிலேதான் பேசுவார்களாம். தமிழில் பேசினால் ஆசாரக் குறைவு என்று கருதினார்கள். பூஜை முடிந்து போஜனம் ஆனபின்தான் தமிழில் பேசுவார்களாம். ஆதலால், அரிய தமிழை அநாதரவு செய்கிறவர்களை நான் ஏன் பார்த்தல் வேண்டும்?” என்றார்.
(‘நான்’ எனும் நூலில் வரலாற்றுப் பேராசிரியர். ந.சுப்பிரமணியன் பக். 65-66)

 

குற்றவாளிகள்

உலகத்தில் உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும் பஞ்சமர் களின் தீட்டைப் போக்க முடியாது.
சிருங்சேரி சங்கராச்சாரியார் (The Hindu Ideal)
தீண்டாமை க்ஷேமகரமானது
(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி)
(ஸ்ரீஜெகத் குருவின் உபதேசங்கள் 2-ஆம் பாகம்)
தாழ்த்தப்பட்டவர்களுக்கு அர்ச்சகர்கள் ஆகத் தகுதியில்லை அவ்வளவுதான்! மேலே இதைப்பற்றிய விவாதத்துக்கே இடமில்லை.
– பூரிசங்கராச்சாரியார்
(ஆனந்தவிகடன் 16.6.1974)
பூணூல் போட்டதனால் மட்டுமே ஒருவன் பிராமணனாக மாட்டான். அவனவன் பிறப்பால் எதுவோ அதுதான் சாஸ்வதம் (கல்கி’ 11.4.1982)
குறிப்பு: தீண்டாமையை அனுசரித்தால் சட்டப்படி குற்றம் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 17-ஆவது பிரிவு கூறுகிறது. பிணையில் வெளிவர முடியாத குற்றமாகும் இது. ஆனாலும் வெளிப் படையாகத் தீண்டாமையை வலியுறுத்தும் இந்தச் சங்கராச்சாரியார்கள் தைரியமாக உலா வருகிறார்களே!