பக்கங்கள்

திங்கள், 17 மார்ச், 2025

ஆரியர்கள் வந்தேறிகள் என்று முதலில் சொன்னது பெரியாரா?

 

அதை முதலில் சொன்னவர் அவர் அல்ல!

விடுதலை நாளேடு

“ஆரியர்கள் வந்தேறிகள் என்று இங்கே திணிக்க முயற்சி செய்தார் ஈ.வெ.ரா.” என்று அலறி இருக்கிறார் ஆளுநர் ரவி. ‘ஆரியர்கள் வந்தேறிகள்’என்று முதலில் சொன்னது பெரியார் அல்ல. அவர் மட்டுமே சொன்னதும் அல்ல!

பெரியாருக்கு முன்னே பலரும் இதனைச் சொல்லி இருக்கிறார்கள். பெரியாருக்குப் பிறகும் திராவிடர் இயக்கத்தவர் நீங்கலாக பலரும் இதனை ஒப்புக் கொண்டும் இருக்கிறார்கள். எனவே, இதனை பெரியாரின் கூற்றாக மட்டும் சொல்லி அரசியல் செய்தியாக மடைமாற்றம் செய்யப் பார்க்கிறார் ஆளுநர்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1925 ஆம் ஆண்டு தொடங்கியது. அதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே – 1905 ஆம் ஆண்டே இதனைப் பேசி இருப்பவர் தனித்தமிழ்த் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் ‘பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்’ என்ற தலைப்பில் அடிகள் உரையாற்றி இருக்கிறார். இந்த உரை யானது 1906 ஆம் ஆண்டு புத்தகமாக வெளியாகிவிட்டது.

*ஆரியர் வருவதற்கு முன்னரே தமிழர் மிக்க நாகரிகமுடையராயிருந்தனரென்பது இருக்கு வேதத்தினாலே இனிது அறியப்பட்ட தொன்றாம்.

*ஆரியர் சிந்து நதிக்கரையில் வந்து குடியேறிய காலத்தில், உள்நாட்டில் இருந்த தமிழர் ஏழுவகை அரண்மனைகளும், தொண்ணூறு கோட்டைகளும் உடையராய் வாழ்ந்தனரென இருக்குவேதம் உரை தருகின்றது.

*ஓரிடத்தும் நிலைபெறமாட்டாது திரிதரு வாழ்க்கை யுடையராய் இந்தியாவினுட் புகுந்த ஆரியர் கங்கையாற்றுக் கரைப் பக்கங்களில் நிலைபெற்ற வாழ்க்கை நடாத்திச் செங்கோல் ஓச்சிய தமிழ் மக்களால் நெறிப்படுத்தப்பட்ட இலக்கண முறைகண்டு தாமும் உயிர்மெய் எழுத்துகளை முறைப்படுத்தினா ரென்று துணிக.

* ஆரியர் வருஞான்று, தமிழர் அரசியல் முறைபிழையாது வாழ்ந்தனராகலின் அவரை ஆரியர் ‘அசுரர்’ என்று பெயரிட்டு வழங்கினார். இருக்கு வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்கள் முதுவதூஉம் ‘அசுர’ எனும் சொல் உள்ளது.

*ஆரியர் இந்தியாவிற் புகுந்தபின் தமக்கு முன்னே அங்கு வாழ்ந்து வருந் தமிழ் ஆசிரியர் கண்ட அவ்வெழுத்து முறையைப் பிரதி செய்து கொண்டார் என்க.

*ஆரியர் இந்தியாவிற் புகுந்தபின் தமிழருடைய நாகரிக முதிர்ச்சி யினையும், அவர் தாங்கருதிய பொருளை எழுத்திலிட்டுப் பொறித்தலுங்கண்டு தாமும் தம்முடைய பாட்டுக்களைப் பண்அடைவுபட வகுத்தஞான்று எழுதுமுறை கண்டறிந்தார்.

– இப்படிப் பேசி இருக்கிறார் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள். பெரியார் இப்படி எல்லாம் பேசத் தொடங்குவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர் அடிகள்.

இது ஏதோ தமிழ்நாட்டில் தமிழ் வெறியில் மறைமலையடிகளைப் போன்றவர்கள் சொன்னது மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு அறிஞர்களும் இப்படித் தான் எழுதி இருக்கிறார்கள்.

இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர்களில் ஒருவர் ராகுல சாங்கிருத்தியாயன்.‘ராகுல்ஜி’ என்று இவரை அழைப்பார்கள். ‘வால்காவில் இருந்து கங்கை வரை’ என்ற உலகப்புகழ் பெற்ற நூலை எழுதியவர் அவர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வைதிகத்தில் ஊறிய கோவர்த்தன் பாண்டே – குல வந்தி என்ற பிராமணக் குடும்பத்தில் 1893 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் இந்தியா முழுவதும் சுற்றியவர். 12 மொழிகளில் எழுத, பேச இவருக்குத் தெரியும். தமிழும் தெரியும். தமிழ்நாட்டுக்கும் வந்து சென்றுள்ளார். சென்னைக்கு அருகே திருமழிசையிலும் சில காலம் வாழ்ந்திருக்கிறார். அவர் எழுதிய வரலாற்று நூல்: ‘ரிக்வேத ஆரியர்கள்’ என்பது ஆகும்.

இந்தியாவின் மேற்கில் இருக்கும் மத்திய தரைக்கடற்கரை நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாகச் சிந்து நதி – சப்த சிந்து நதி தீரத்தில் வந்து (கி.மு.1500க்குப் பிறகு) குடியேறியவர்கள் ஆரியர்கள் என்றும், அவர்கள் வரும் போது வளமான நாகரிகத்துடன் வாழ்ந்துவந்த மக்களை வென்று வீழ்த்திக் கிழக்கே நோக்கி கங்கை நதி தீரம் வரை ஆரியர்கள் பரவினார்கள் என்றும் சொல்கிறார். ஆரியர்கள் வரும்போது வளமான நாகரிகத்துடன் வாழ்ந்தவர்களை ‘தஸ்யூக்கள், திராவிடர்கள்’ என்றும், அந்த இடம் தான் ‘சிந்துச் சமவெளி’ என்றும் சொல்கிறார். சொன்னவர் ராகுல்ஜி.

இந்தியாவுக்குள் நுழைந்ததுமே ஆரியர் முதலில் திராவிடர்களை எதிர்கொள்ள நேர்ந்தது, பின்னர் இமயப் பள்ளத்தாக்கில் பிரவேசித்ததும் ‘கிர்’ இனத்தாருடன் மோதவேண்டியதாக இருந்தது என்கிறார் ராகுல்ஜி. ‘அவன் பெரிய கிராதகன்’ என்று சிலர் சொல்வது இந்த ‘கிர்’ இனத்தார் மீதான பழிச்சொல் தான்.திராவிடர்கள் என்று சொன்னால், ஆரியர்களுக்குக் கோபம் வருவது இதனால்தான்!

மத்திய தரைக்கடல் நாடுகளிலும் அதனைச் சுற்றி ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்திருந்த ஆரிய இன மக்களின் ஒரு பிரிவினர் பேசிய மொழியே பிற்காலத்தில் செம்மைப்படுத்தப்பட்ட சமஸ்கிருதம் என்றும், ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னர் தான் ரிக் வேதம் எழுதப்பட்டது என்றும் ராகுல்ஜி சொல்கிறார். ரிக் வேதத்தை இயற்றிய ரிஷிகளான பரத்வாஜரும், வசிஸ்டரும், விசுவாமித்திரரும் ஆரியர் வருகைக்கு 300 ஆண்டுகளுக்குப் பிந்தியவர்கள் என்றும் இவர் சொல்கிறார்.

‘ஆரியர்களை ஈ.வெ.ரா. கொச்சைப்படுத்தினார்’ என்று ஆளுநர் ரவி சொல்கிறார். ஈ.வெ.ரா. கொச்சைப்படுத்தவில்லை. அவர்களின் ரிக்வேதத்திலே சொல்லப்பட்டிருப்பதைத் தான் பெரியார் சொன்னார் என்பதை ராகுல்ஜி புத்தகத்தின் (நான்காவது அத்தியாயம்) மூலமாக அறியலாம். ( நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், ராகுல்ஜி நூலை தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளது. ரிக் வேதத்தை ‘அலைகள் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது)

ராகுல்ஜியின் நூலை ஆர்.என்.ரவி, ஹிந்தியில் படிக்கலாம். ஏனென்றால் ராகுல்ஜி எழுதியது ஹிந்தியில்தான். ஆரியர்கள் வந்தேறிகள் என்று பெரியாருக்குமுன்னே பல வரலாற்றுப் பெரியார்கள் சொல்லி இருக்கிறார்கள் என்பதை ஆளுநர் அறியட்டும்.

பெரியார் தான் அறிவுக்கருவூலமாக இருந்த இந்தச் செய்திகளை எல்லாம் அரசியல் களத்தில் முதன்முதலாக இறக்கினார். ‘எனது புத்தகங்கள் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பிறகு அதிகம் விற்றது’ என்று மறைமலையடிகள் சொல்வது இதனை மனதில் வைத்துத் தான். ஆரிய ஆட்டங்களை அம்பலத்தில் ஏற்றினார் என்பதால் தான் இறந்து அரை நூற்றாண்டு ஆன பிறகும் பெரியார் பேரைச் சொன்னாலே நடுங்குகிறார்கள். ரவியை வைத்து ஆட்டம் காட்ட நினைக்கிறார்கள்.
ஆளுநர் பேசட்டும். முதலமைச்சர் சொன்னது போல, ‘அவர் தான் நமக்கான நல்ல பிரச்சாரகர்’.

நன்றி: ‘முரசொலி’ தலையங்கம், 8.3.2025

வெள்ளி, 29 நவம்பர், 2024

அண்ணாவின் கடவுள் மறுப்பு! கலைஞரின் ஆத்மா மறுப்பு

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!

விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை

அண்ணாவின் கடவுள் மறுப்பு

“மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு இன்று இவ்வுலகத்தை இயக்குகின்றதென்பது மத நூலார் கொள்கை. மத நூலார் இலக்கணப்படி கடவுள் உண்டு என்று கூறுவதே அவர்கள் கொள்கைக்குத் தவறு உண்டாக்குவதாகும். எப்படியென்றால், “ஓசை ஒலி எல்லாம் ஆனாய் நீ என்ற பின்னர் பேச இரண்டுண்டோ?” என்பது மத நூற்றுணிபாகும். எனவே, உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாயும் – தந்தையாயும் – எல்லாமாயும் – எங்குமாயும் உள்ள ஒரு பொருளை உண்டென்று கூறுவது போன்ற அறியாமையும் அதன் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும், அதற்குச் சட்டமியற்றவேண்டுமென்ற நெட்டுயிர்ப்பும் வேடிக்கையாகவே இருக்கிறது! கடற் சிப்பியில் முத்து இருக்கிறது என்று ஒருவன் கூறுவது இயற்கைக்கு மாறுபட்டதாகாது. என்றாலும், அது பலருக்கு வியப்பைத் தருகின்றது. காரணம்: கடற்சிப்பியில் முத்து என்ற ஒரு மதிப்புடைய பொருள் இருக்கிறதென்பதை அதனை அறிந்தான் கூறுவது வியத்தற்குரியதும் இயற்கைக்கு மாறு படாததுமாகும். ஆனால் “நமது” கடவுள் அப்படிப்பட்டவரன்று; கடற்சிப்பி முத்து போல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைந்து இருப்பவருமன்று.

ஒரு இடத்தில் இருப்பதும், மற்றைய இடங்களில் இல்லாதுமான ஒன்றைத்தான் அது இன்ன இடத்தில், என்ன தன்மையோடு இருக்கிறதென்று, அறிந்தான் ஒருவன் அதனை அறியார்க்கு அறிவிக்க வேண்டும். அங்ஙனமின்றி எல்லாமாய் – எங்குமாய் – அணுவுக்கணுவாய் – அகண்டமாய் – எதிலும் பிரிவற நிற்பதாகச் சொல்லப்படும் ஒன்றை, ஒருவன் உண்டென்று கூறும் அறியாமையை அளப்பதற்குக் கருவியே இல்லை. ஒருவனால் உண்டென்று கூறப்படும் ஒரு பொருள், யாதாமொரு கருவியாலோ – அறிவாலோ அளந்தறிந்து உணரக் கூடியதாயும் இருத்தல் வேண்டும். ஆனால், கடவுள், அளப்பரும் இயல்பினதாய்-மறை முதல் சொல் ஈறாக உள்ள எந்தக் குறைவிலா அளவினாலும் அளந்தறிய முடியாதென்று முழங்கிய பின், ஒருவன் அதனைக் கண்டறிந்து அளந்தவனாவானா? அதன் கவுரவத்தைக் காப்பாற்றத்தான் முயல்வானா? முடியுமா? அன்றி, அப்பொருள் ஒருவனால் அளந்தறியப்படுவதற்கு அது எங்காவது ஒரு இடத்தில் தனித்திருந்தாலன்றி முடியுமா?

 ஒருவன் ஒரு பொருளை உண்டென்று கூறுவானாயின், அவன் அப்பொருளைக் கண்டிருத்தல் வேண்டுமன்றோ! எனவே, ஒருவனால் காணப்பட்டு, மற்றவர்களால் காணப்படாத ஒன்றைக் ‘கடவுள், என்பது மத நூலார் கொள்கைக்கே மாறுபட்ட தாகும். எப்படியென்றால், காண முடியாதது எதுவோ அதுவே கடவுள் என்பது மத நூலார் கொள்கை. எனவே, காண முடியாதது எது என்று ஆராயுமிடத்து, எது இல்லாததோ அதுவே காண முடியாததுமாகும் என்ற உண்மை பெறப்படுகின்றது. அன்றியும், மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கடற்சிப்பி முத்து போலக் கடவுளும், எங்காவது ஒரு மறைவிடத்தில் தனியாக இருப்பதாகக் கொள்ளவும் மத நூற்கள் இடந்தருவதில்லையே! கடவுள் இல்லாத இடமே இல்லை என்பது தான் அந்த நூற்களின் முடிந்த முடிவாகும். எனவே கடவுளை அறிந்ததாகக் கூறுபவனும், கடவுளைக் காப்பாற்றாவிட்டால் அதன் கவுரவம் குறைந்து விடுமென்றும் கருதும் ‘நிறைமதியாளனும்’ மணற் சோற்றில் கல் ஆராய்பவனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களேயாவார்கள்.

இனி, மத நூல்கள் சிலவற்றில் கூறியுள்ளபடி, ‘தேடினால் கிடைப்பார்!’ என்ற முன்னுக்குப் பின் முரணான கொள்கை களை நம்பி, அவ்வழி சென்றோர் எல்லாம் அத்துறையைக் காணாது சலிப்படைந்து, தங்கள் ஏமாந்த இயல்பினை இனிதியம்பியுள்ளனர். பட்டினத்தார், நாவுக்கரசர், புத்தர் முதலாயினோர் அவ்வழிபோய் மீண்ட பலருட் சிலராவார். ஈனா வாழை மரத்தின் மட்டைகளை ஒவ்வொன் றாக உரித்துப் பார்த்தால், உரிக்கப்பட்ட அம்மட்டைகளைத் தவிர, அதனுள்ளே வேறொன்றும் இல்லாமை புலப்படுவது போல், மதநூல்கள் கூறிய வழிகளிலே சென்றவர்கள், தாங்கள் கருதிப்போன கடவுள்’ காணப்படாமையைக் கருத்தோடு திருத்தமாகக் கூறியுள்ளார்கள்! எனவே, இல்லாத ஒன்றை உண்டென்னும் கொள்கை என்றைக்குத் தோன்றியதோ, அன்றிருந்தே அக்கூற்று மறுக்கப்பட்டும் வந்திருககிறது- வருகிறது. ஆனால் உண்மைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு மதக்கொள்கைகளால் பிரித்துப் பிளவுபட்டிருப்பதால், பொய்யைப் பொய் எனக் கொள்ளும் பேதமையே பெருமை பெற்று வருகிறது.இதனால் உண்மைகளை உருவாக்குவதற்குப் பெருமுயற்சியும், பேருழைப்பும், பெருந்துணிவும, இடுக்கண் வந்தால் ஏற்கும் இயல்பும் இன்றியமை யாது வேண்டப் படுகின்றது. இஞ்ஞான்றை உலகம் ஓரளவு வெற்றிபெற்று வருவது கண்கூடு. காரணம்! மக்களிடையே மங்கிக் கிடந்த பகுத்தறி வென்னும் பகலவன் தன் ஒளி அலைகளால், விரிந்த உலகின் சரிந்த கொள்கைகளை வீழ்த்தும் ஆராய்ச்சித் துறையின் அணிகலமாக விளங்குகிறது என்க.

– ‘திராவிட நாடு’ 2-1-1949

————-

சிறப்புக் கட்டுரை

கலைஞரின் ஆத்மா மறுப்பு
உள்ளபடியே எனக்கு ஆவியில் நம்பிக்கை கிடையாது. அதில் நம்பிக்கைக் கொண்டவர்கள் கூட இன்று அதில் வேறுபடக் கூறுகிறார்கள்.
தந்தை இறந்துவிட்டால் ஆண்டுதோறும் தெவசம் கொடுக்கவேண்டுமென்று சொல்கிறார்கள். ஏனென்று கேட்டால் அவர்களுடைய ஆவி இருந்து, நாம் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளும் என்று சொல்கிறார்கள். அவர்களே உன்னுடைய தந்தை இன்ன பிறவியாக பிறந்திருக்கிறார் என்றும் சொல்லுகிறார்கள்.
ஒன்று மறுபிறவியை மறுக்க வேண்டும்; அல்லது ஆவியை மறுக்கவேண்டும்.
மறுபிறவி என்று சொன்ன பிறகு ஆவி என்று ஒன்று எப்படி இருக்கமுடியும்? ஆவிக்குக் கொடுப்பதற்காக தெவசம், திதி என்று நாம் கொடுப்பதெல்லாம் எங்கே போகிறது என்று எனக்குத் தெரியும்.
இன்னும் யாராவது இறந்துவிட்டால் இன்னார் சிவ லோகபதவி அடைந்துவிட்டார் என்று போடுகிறார்கள். மனிதனுக்கு இறந்தும் பதவி ஆசை விடவில்லை என்பதற்கு இது உதாரணம். வைகுண்டபதவி அடைந்து விட்டார் என்றும் போடுகிறார்கள். எல்லோரையுமே இப்படி போட்டுவிட்டால் யார் தான் நரகலோகத்திற்குப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
பொய் பேசுபவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்று சொன்னால், பத்திரிகை போடுகிறவர்கள் தவறாக- பொய்யாக – சிவலோகத்திற்குப் போவதாகப் போடுவதே பொய்; அதுவே ஒரு குற்றச்சாட்டு.

– முதலமைச்சர் கலைஞர்,
8-9-1972 சங்கரதாஸ் சுவாமிகள் விழாவில்


கதை கேளு… கதை கேளு… ராஜராஜ சோழன் கதை கேளு.. ஓய்!! பெரியார் குயில் தாராபுரம்

 ஞாயிறு மலர்

விடுதலை நாளேடு

1039ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடும் தமிழ் மன்னன் ராஜராஜ சோழன் (எ) அருள் மொழி வர்மன் அடிமையாக வாழ்ந்த வரலாற்றை நினைவுபடுத்துவது அவசியமாகும்.

இம்மன்னனின் ஆட்சி செய்த 30 ஆண்டு காலமும் பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட வசதிகளை எல்லாம் எய்தி தங்களை நிலைப்படுத்திக் கொண்டார்கள் என்பது வரலாறாக காட்சியளிக்கிறது.

தன் ஆட்சியில் நிகழ்ந்தவற்றை மெய் கீர்த்திகளாக கல்வெட்டுகளில் பொறித்த முதல் மன்னன் ராஜராஜ சோழனே ஆவார்.

இவ்விடத்தில் ராஜராஜ சோழன் செய்த நற்காரியம் தன் புகழை பரப்ப நினைத்து பார்ப்பன சதி வேலைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
நாம் பெருமையாக கருதும் தஞ்சை பெருவுடையார் கோயில் முக்கிய சாட்சியாக எழுந்து நிற்கிறது. அதில் குறிப்பாக ராஜ ராஜ சோழனுடைய வரலாற்றைக் கூறும் நூல் “சிறீ ராஜராஜ விஜயம் “என்ற நூலையும் ராஜராஜேஸ்வர நாடகம் என்ற நாடக நூல் ஒன்றையும் தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகள் நமக்கு புலப்படுத்துகின்றன. ஆனால் அவை இன்று இல்லை.

தானும், தன் மனைவியரும் தன் வாரிசுகளும் சுற்றத்தாரும் தஞ்சை பெரிய கோயிலுக்கு வழங்கி உள்ள பரிசுகள் பொற்கலங்கள் 41,559 கழஞ்சு எடை அணிகலன்கள் 10,200 காசு விலை மதிப்புடையவை வெள்ளிக்கலங்கள் 50,650 கழஞ்சு எடையுள்ளவை ஒரு லட்சத்து 16,000 கலம் நெல்லும் 1100 காசு வருவாய் உள்ள கிராமங்கள் இவை எல்லாம் தஞ்சை பெரிய கோவிலுக்கு வழங்கப்பட்டது.

அது மட்டுமல்ல சேரர்களை வென்ற சோழனின் படைத்தலைவன் கம்பன் மணியன் கொண்டு வந்த மரகத தேவர் படிமம் ராஜராஜ சோழன் உத்தரவுப்படி திருப்பழனத்தாள் சிவன் கோவிலில் வைக்கப்பட்டது. ஆனால் அப்படிமம் இப்போது காணாமல் போய்விட்டது.

ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழன் இம்மன்னன் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் கங்கை விநாயகர் என்ற சிலையை வடநாட்டில் இருந்து கொண்டு வந்து அமைத்தார்.

வங்காள வரலாற்று அறிஞர் ஆர்.டி.பானர்ஜி என்பவர் கங்கை கரையிலிருந்து ராஜேந்திர சோழன் பல பார்ப்பனர்களை சைவாச்சாரியர்கள் என்று அழைத்து வந்து காஞ்சி மாநகரிலும் சோழ நாட்டிலும் குடி ஏற்றினான் என்று பதிவு செய்துள்ளார்.

ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் சோழ வரலாற்றின் முக்கியமான பெரும் போர் வீரன். ஆனால் இவ்வீரனை நான்கு பார்ப்பன சகோதரர்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்தனர் என்று சிதம்பரம் தாலுகா, காட்டுமன்னார்கோவில், உடையார் குடியில் காணப்படும் கல்வெட்டு உறுதி செய்கிறது. இவர்கள் ராஜராஜ சோழன் தந்தையாகிய கண்டராதித்த சோழனுடைய அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகளும் ஆவர்.

ஆனால் இவ் வரலாறு திட்டமிட்டு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நூலில் மறைக்கப்பட்டுள்ளது.

ராஜராஜ சோழனின் முக்கிய போர்களில் ஒன்றான காந்தளூர் சாலை போரில் வென்று சாலா போகம் என்னும் கல்வி நிறுவனங்களை நிறுவினார். அப்பள்ளியில் வேதங்களும் வியாக்கரணங்களும் பயிற்சி அளிக்கப்பட்டன என்று பார்த்திவ சேகர புரத்து சாசனம் தெரிவிக்கிறது
இதில் சிதம்பரம் நடராஜர் கோவில் கதை சோழ ராஜ்ஜியத்தின் முக்கிய கதையாகும்.
நூல் உதவி : “பிற்கால சோழர் சரித்திரம் & தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்”.

சனி, 23 நவம்பர், 2024

அந்தணர் என்போர் பார்ப்பனரா? கவிஞர் கலி.பூங்குன்றன்

 அந்தணர் என்போர் பார்ப்பனரா?

கவிஞர் கலி.பூங்குன்றன்

‘பிராமணர்கள் மீதானால் வன்கொடுமையாகாதா?’ என்ற ‘தினமணி’ நடுப்பக்கக் கட்டுரைக்குப் (30.10.2024) பதிலடி 1.11.2024ஆம் தேதி ‘விடுதலை’யில் கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியே இந்தக் கட்டுரை.
“சங்க காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் சமுதாயத்தின் பாரதிய பண்பாட்டின் பிரிக்க முடியாத அங்கமாக அந்தணர்கள் வந்திருக்கின்றனர். திருக்குறளில் குறிப்பிட்டிருக்கும் ஒரே ஜாதிப்பிரிவு அந்தணர் மட்டுமே!”
– இது ‘தினமணி’யில் வெளிவந்துள்ள கட்டுரையின் நயவஞ்சக நஞ்சின் சாரம்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளில் ஒரே ஒரு ஜாதி இருக்கிறதாம் – அது அந்தணர் என்னும் ஜாதியாம்.
இதைப் புரட்டு என்ற அளவில் மட்டும் முடக்கிவிடக் கூடாது. திருக்குறள் ஒரு சமத்துவ நூல் – மனிதனை மனிதனாகப் பார்க்கும் – ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற தத்துவத்தைக் கருப்பொருளாகக் கொண்ட நூல் என்ற பெருமையைக் குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கம் இதில் உள்ளடக்கமாக ஒளிர்ந்திருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது. திருக்குறளைப் பற்றி இவாளின் பார்வை என்ன?
திருக்குறள் வெளி உலகத்துக்கு வந்த நிலையில், அதன் வெளிச்சத்தின் முன் பகவத் கீதை ‘‘பஷ்பம்” ஆகிவிட்டது. அந்த ஆத்திரத்தில் அவாளுக்கே உரித்தான விஷத்தைக் கக்குகின்றனர்.
இதோ சில எடுத்துக்காட்டுக்கள்:
2.4.1982 அன்று ஈரோட்டில் திருக்குறள் முனுசாமி தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
“திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை, அதிலும் முதல் பத்து குறட்பாக்களை மட்டும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டு, பொருட்பால், காமத்துப்பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காஞ்சி மடத் தவைரான தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி துறவியார் திருக்குறளைப் பற்றி திரிபான முறையில் தம் கருத்தைக் கூறியிருப்பது, அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து திருக்குறளைப் பற்றி புறங்கூறி வருவதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அக்கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள் பேரவை கேட்டுக் கொள்கிறது.”

* * * * *

மதுரைத் தொழில் அதிபர் சீதாராமன் என்பவருக்கு கைங்கரிய சிரோன்மணி என்ற விருதை வழங்கிய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி,
“நல்லவர்களை வாழ்த்தும் பழக்கம் வெகு காலமாக இருந்து வருகிறது. சீதாராமன் தமிழுக்கும், திருக்குறளுக்கும் சேவை செய்து வருகிறார். அவருக்கு இந்த விருது வழங்குவது பொருத்தமானது.
திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமே ஆகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். (‘தினத்தந்தி’, 15.4.2004)
ஏதோ சின்னஞ்சிறு சங்கராச்சாரியார் உளறிக் கொட்டி விட்டார் என்று கடந்து போக முடியாது.
பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடும் மகாமகா பெரியவாள் என்று விண்ணுக்குத் தூக்கிக் காட்டும் காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் திருவாளர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்து திருக்குறளைப் பற்றி என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் கடித்தவுடனேயே சாகடிக்கும் பாம்புக்கு ‘‘நல்ல பாம்பு” என்று பெயர் வைத்ததுதான் நினைவிற்கு வரும்.
ஆண்டாள் பாடிய திருப்பாவை எனும் நூலில் ‘தீக்குறளைச் சென்றோதோம்!’ என்ற வரிக்குத் “தீய திருக்குறளை ஓதமாட்டோம்” என்று பொருள் சொன்ன பேர்வழிதான் அவர். ‘குறளை’ என்றால் கோள் சொல்லுதல் என்ற பொருள் தெரியாதா? தெரியாது என்றால், அது அவரின் அறியாமையைக் காட்டும். தெரியும், ஆனால் இப்படியொரு பொருளைச் சொல்லுவது அவாளுக்கே உரித்தான துவேஷத்தைத்தான் வெளிப்படுத்தும்.
திருக்குறளில் அந்தணர் என்ற சொல் எந்தப் பொருளில் கூறப்பட்டது?
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வு யிர்க்கும் செந்தண்மை பூண்டொழு கலான்.

எவ்வகைப்பட்ட உயிருக்கும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அத்தகைய அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவார்.
என்பது இதன் பொருள். இது எப்படி ஒரு குறிப்பிட்ட ஜாதியை – பார்ப்பனரைக் குறிக்கும்? ‘தினமணி’ மூலம் பார்ப்பனர்கள் அம்பலப்பட்டு விட்டார்களே!
எல்லா உயிர்களையும் சமத்துவமாகக் கருதும் அருளான குணத்தைக் கொண்ட திருக்குறள் கூறும் அருளை (அன்பின் குழவியை) மூர்க்கக் குணம் கொண்ட – எதிலும் பிரித்தாளும் புத்தியைக் கொண்ட பிறப்பிலேயே உயர்வு தாழ்வு பார்க்கிற – கற்பிக்கிற வெறுக்கிற – குறிப்பிட்ட பார்ப்பன ‘உயர்ஜாதி’ டப்பாவுக்குள் அடைக்கும் பித்தலாட்டத்தை என்ன சொல்ல!
சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குண – கர்ம விபாசக
(கீதை அத்தியாயம் 4, சுலோகம் 13)
“நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப் பட்டவை, அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும் அதனை மாற்றி செயல்பட வைக்க, அந்த வர்ணதர்ம உற்பத்தி யாளனாகிய என்னால் கூட முடியாது” என்கிறார் கிருஷ்ணன் கீதையில்.
பிறப்பின் அடிப்படையில் வர்ணத்தை – அதன் அடிப்படையிலான ஜாதியைப் பகவானே படைத்தார் என்று சொல்லும் நிலை வந்தால், அந்தப் பகவானே கடும் விமர்சனத்துக்கு ஆளாகி, அவன் அருளியதாகச் சொல்லப்படும் கீதை கழிசடையாகக் குப்பைத் தொட்யில் தூக்கி எறியப்பட்டு விடும் என்பதால், சோ ராமசாமி அய்யர் போன்றவர்கள் குணத்தின் அடிப்படையில் தான் பகவான் கிருஷ்ணன் வர்ணங்களைப் படைத்தார் என்று குறுக்குச் சால் ஓட்டப் பார்த்தார்கள். (தினமணிக்கு இடிக்குமே!).

ஆனால் பார்ப்பனர்கள் தூக்கி சுமக்கும் லோகக் குருவான சிறீமான் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே இந்தக் கூட்டத்தின் வியாக்கியானப் புத்தியின் முதுகெலும்பையும், உள்ளி மூக்கையும் உடைத்தெறிகிறார்.
இதோ அந்த ஜகதாலக் குரு பேசுகிறார்.
“ஒருநாள் ஆதி சங்கரர் ஸ்நானத்திற்குப் போகிறார். ஒரு தாழ்த்தப்பட்டவர் எதிரே வருகிறார். சங்கராச்சாரியார் ‘எட்டிப்போ’ என்று சொல்லுகின்றார்.
அதற்கு அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர் ‘எட்டிப்போ’ என்றது ஆத்மாவையா? உடலையா?’ என்று எதிர் கேள்வி கேட்கிறார்.


ஆதிசங்கரர் அதிசயப்பட்டார் ‘நீ தாழ்த்தப்பட்டவன் அல்ல, என் ஞானாசிரியன்’ என்றார்.
“இந்த சுலோகத்தை வைத்துக் கொண்டு சிறீஆச்சாரியார்கள் (ஆதிசங்கரர்) தீண்டாமையை ஒழித்து விட்டதாகச் சிலர் அர்த்தம் சொல்லுகிறார்கள். (குறிப்பு: இந்த இடத்தில் ‘சோ’வின் மூடு திரை கிழிகிறதே!).
சுலோகம் தீண்டாமையை ஸ்தாபிப்பதாக நமக்குத் தோன்றுகிறது. எந்த சிந்தாந்தத்தில் ஒருவருக்கு முன்பாக ஆசை இருக்கிறதோ, அதற்குத் தகுந்தபடி அவர்கள் ஸ்லோகங்களுக்கு வேறு அர்த்தம் செய்து கொள்கிறார்கள். தீண்டாமை சேமகரமானது என்ற எண்ணம் தமக்கு இருப்பதால் அநாதியாக நாம் இப்படி அர்த்தம் கொள்கிறோம்.

ஒரு பார்ப்பனரே சொல்லுகிறார்
“தீண்டாமை என்பது சமயம் சம்பந்தப் பட்டு இருக்கிறது. அதைச் சமய சம்பந்தப்படுத் தினால்தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போதுதான் தீண்டாமை ஒழிந்ததாகக் கருத முடியும்”

– டாக்டர் கலேல்கர்

(‘‘பெரியார் படைக்க விரும்பிய மனிதன்” மயிலைநாதன், பக். 123)

* * * * *

இந்த நிலையில் உள்ள பார்ப்பனர்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன திருக்குறளில் கூறப்படும் அந்தணர் என்பது – ஜாதியைக் குறிக்கும் ஒரே சொல்லாம், அது பார்ப்பனர்களை மட்டுமே குறிக்கிறதாம்!
“சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான்!”

– டாக்டர் டி.எம். நாயர்

(சிறீஜெகத்குருவின் உபதேசங்கள் 2ஆம் பாகம்)
இவரால் பிறப்பின் அடிப்படையில் வர்ணம் என்பதை நியாயப்படுத்த முடியாத பலகீனத்துக்கு ஆளாகி, எனக்கு ‘அப்படி’ தோன்றுகிறது. அதனால் ‘இப்படி’ சொல்லுகிறேன் என்று வாய்ச் சாங்குளி அடிப்பதைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு என்ன சொல்ல!
அது கிடக்கட்டும் – “பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்” என்று பகவான் கிருஷ்ணன் கீதையில் குறிப்பிடுகிறாரே (அத்தியாயம் 9, சுலோகம் 32) இதற்கு எந்த வெண்டைக்காய் விளக்கெண்ணெய் விளக்கத்தை அவிழ்த்துக் கொட்டுவார்கள்?
அய்யோ பாவம்! குளிக்கப் போய் கும்பிச் சாக்கடையில் அல்லவா குப்புற வீழ்கிறார்கள்!
“மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்கள்” என்கிறது மனுதர்மம்.
(அத்தியாயம் 9, சுலோகம் 19)
இப்படிப்பட்ட கூட்டம் அந்தணர்களாம் – அதை திருவள்ளுவரே ஒப்புக் கொள்கிறாராம் – தந்தை பெரியார் பிறந்த மண்ணில், சுயமரியாதை இயக்கம் பிறந்த மண்ணில் நாம் விழித்திருக்கும் போதே விளையாடும் விஷ நாகங்களை அடையாளம் காண்போம்!
– வளரும்

சுடுகாட்டிலும் ஜாதி பார்க்கும் இவர்கள் அந்தணர்களாம்!

 


விடுதலை நாளேடு

9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்’ எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நூலை வெளியிட்டு ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாவது:
“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோதும் அந்தணர்தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது, கோவிந்த தீட்சதர் என்பவர் தான் குருவாக இருந்தார். அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான். அந்தணன்தான் முதலில் (‘நக்கீரன்’, 15.11.2002).

* * * * *

“மின்சார சுடுகாடு இந்து தர்மத்துக்கு எதிரானது. எல்லா வகுப்பினருக்கும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததால் ஒரே சுடுகாடு கூடாது” என்று சொன்னவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (‘விடுதலை’, 8.3.1982, பக்கம் 1).

* * * * *

பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டு அத்வானி வந்திருந்தார். அப்போது நான் தொலைக்காட்சியில் இருந்தேன். அவர் We Believe in One country and one culture (நாங்கள் ஒரே நாடு; ஒரே கலாச்சாரம்) என்பதையே நம்புகிறோம் என்றார். உடனே நான் “உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். இங்கும் சைவ வெள்ளாளர் இருக்கின்றனர். அவர்களுக்கும் சமஸ்கிருதம் தெரியும். அவர்களும் ஆகம விதிப்படி பூஜை செய்கிறார்கள்” என்றேன். அவர் பூரிப்புடன் ‘அதனால்தான் ஒரு நாடு ஒரே கலாச்சாரம் என்கிறோம்’ என்றார்.
உடனே அவரிடம் வைத்தேன் ஒரு கோரிக்கை.
அய்யா இந்த அளவுக்கு தகுதி பெற்றிருக்கும் ஒரு வெள்ளாளர் “காஞ்சி மடத்தின் சங்கராச்சாரி ஆக முடியுமா?” என்று நான் கேட்டவுடன், திணற ஆரம்பித்து விட்டார். இதைக் கண்ட ஒரு ஆங்கிலப் பத்திரிகை அம்பி by the way… என்று கேள்வியைத் திசை மாற்றி விட்டார். ‘முஸ்லிம் முரசு’ பொன்விழாவில் சு.சமுத்திரம் (ஆதாரம் ‘முஸ்லிம் முரசு’, ஆகஸ்டு 2000).

திங்கள், 21 அக்டோபர், 2024

’தீரத் தலைவர்’ சிவராஜ் விடுதலை தந்தபட்டம்! -எதிர்வினை 26

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 26

டிசம்பர் 16-31 2018

’தீரத் தலைவர்’ சிவராஜ் விடுதலை தந்தபட்டம்!

– நேயன்

என்.சிவராஜ் நியமனத்தைப் பாராட்டி ‘குடிஅரசு’ எழுதியிருக்கும் குறிப்பு, அவரை பெரியார் எப்படி மதிப்பிடுகிறார் என்பதற்கான சான்றாகும். (‘குடிஅரசு’ 23.5.1937)

“இந்திய சட்டசபையில் ராவ்பஹதூர் எம்.சி.ராஜா அவர்களின் இராஜிநாமாவால் காலியான பதவிக்கு ராவ்சாஹிப் என்.சிவராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை அறிய மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தோழர் சிவராஜ் அவர்கள் பல வருடங்களாக பொது வாழ்வில் அதிக பங்கு எடுத்துக்கொண்டு வருகிறார் என்பது சகலருக்கும் தெரிந்ததே. அவர் தன்னினத்தாருடைய நன்மதிப்பைப் பெற்று வந்திருக்கிறார் என்பதோடு மற்ற வகுப்பாருடைய ஆதரவையும் மதிப்பையும் தன்னுடைய உண்மையான உழைப்பாலும் கபடமற்ற செய்கைகளாலும் பெற்றிருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகம் நமது பொது வாழ்க்கையில் பாடுபடக்கூடிய பல தலைவர்-களைத் தந்திருக்கிறது. அவர்களில் தோழர் சிவராஜ் போன்ற நாவன்மையும், பிறர் உள்ளத்தைக் கவரக்கூடிய பேச்சும் பொருந்தியவர் இருப்பது மிக அரிது.

நம்மால் நினைப்பதற்குக்கூட முடியாத அவ்வளவு சீக்கிரத்தில் அவர் பொறுப்பு வாய்ந்த பதவியை வகிப்பார் என்பதில் சந்தேகமில்லை. கடைசியாக அவர், இந்திய சட்டசபைக்கு நியமனம் செய்யப்பட்டதை மனதார வாழ்த்துகிறோம்.

தீண்டாமைப் பிரச்சினையை தீர்த்துவைக்க இடமிருப்பாதாகவே தெரியவில்லை. தீண்டாமை-யின்று விலகவேண்டுமானால் தாழ்ந்த வகுப்பினர் ஹிந்து மதத்தைவிட்டு விலக வேண்டும். ஆனால், வேறு மதத்தில் சேர வேண்டியது இல்லை. அவர்கள் புதியதொரு மதத்தை உண்டு பண்ண வேண்டும்.’’ (1936 ஜனவரி ‘குடிஅரசு’) மகாராஷ்டிராவில் 11.1.1936இல் நடந்த ஆதி இந்து வாலிபர் மாநாட்டில் என்.சிவராஜ் பேச்சை ‘குடிஅரசு’ வெளியிட்டுள்ளது.

சிவராஜ் மறைந்தபோது, ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக உழைத்த தீரத் தலைவர்’ என்று பட்டம் சூட்டியது விடுதலை.

மேலும், 30.9.1964 தேதியிட்ட ‘விடுதலை’யில், “திரு.சிவராஜ் சென்னயில் வெஸ்லி கல்லூரி, மாநிலக் கல்லூரி, சட்டக்கல்லூரி இவைகளில் பயின்று பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். பல ஆண்டுகள் வழக்குரைஞராக இருந்தவர். சென்னை நகரத்தின் கவுன்சிலராக பல ஆண்டுகள் இருந்து 1945ஆம் ஆண்டில் மேயராகவும் பணிபுரிந்து கவுரவம் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் சேவை புரிந்தவர். நீதிக்கட்சியில் ஈடுபாடு கொண்டு மிகவும் பாடுபட்டவர். அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்தார். அவர் மறைவு பின்தங்கிய வகுப்புனர்க்கு பேரிழப்பாகும்’’ என்று செய்தியும் வெளியிட்டிருந்தது.

சிவராஜ் அவர்களைப் பற்றி கீழ்க்கண்ட செய்திகளும் ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியிடப்-பட்டு, இவை மட்டுமல்ல அவரின் பெருமைகள் மக்கள் மத்தியில் பெரியாரால் கொண்டு சேர்க்கப்-பட்டன.

“மத சம்பந்தமான நமது அபிப்பிராயம் ஒரு விதமாக இருந்தாலும்கூட தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மனிதத்தன்மை பெறவும் அரசியல் விகிதாச்சார உரிமை பெறவும் வாழ்க்கையில் சம உரிமை பெறவும் இந்து மதத்தை விட்டுவிட்டுக் கிறிஸ்தவர்களாகவோ முக்கியமாய் இஸ்லாமியர்களாகவோ ஆகிவிடுங்கள் என்று பல தடவை வற்புறுத்தி வந்ததை அச்சமூகம் இலட்சியம் செய்யவே இல்லை.

இதற்குக் காரணம் நம் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுடைய மதப்பற்றேதான் காரணம் என்பதாக நாம் சிறிதும் நினைக்கவில்லை. மற்றென்னவென்றால், சென்னை மாகாணத்தில் உள்ள வகுப்புவாரிப்-பிரதிநிதித்துவ முறையின் பயனாய் சில பெரிய பதவிகளும் உத்தியோகஸ்தர்களும் தாழ்த்தப்-பட்ட சமூகத் தலைவர்கள் என்பவர்களுக்குக் கிடைக்கக் கூடுமாதலால் அதில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆசையானது இந்துக்கள் என்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமூகத் துறையிலும் அரசியல் துறையிலும் செய்துவரும் எவ்வளவோ இழிவுகளையும் இன்னல்களையும் சகித்துக் கொண்டு சிறிதும் சுயமரியாதை இல்லாதவர்களாகித் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு உயிர்வாழ வேண்டி இருக்கின்றதே தவிர வேறு காரணம் இருக்க நியாயமில்லை என்றே படுகின்றது. என்றாலும் தேதி 29.1.1935 சென்னை சட்டசபை கூட்டத்தில் கூட்டுக் கமிட்டி அறிக்கையைப் பற்றிய விவாதத்தின்போது தோழர் என்.சிவராஜ் அவர்கள் தெரிவித்த அபிப்பிராயத்தில் பெரும் பாகத்தை நாம் மனப்பூர்வமாய் ஆதரிக்கிறோம். அதாவது,

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லாரும் நாங்கள் இந்து மதங்கள் அல்லவென்றும், நாங்கள் இந்துக்கள் அல்ல என்றும், தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலக வேண்டும் என்றும் 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள். இந்து மதத்தை விட்டுவிட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக்-கொள்வது என்று கேட்கலாம். உங்களுக்கு துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரைச் சொல்லிக்கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும் இழிவும் அணுகாதோ, அதைச் சொல்லுங்கள். (‘குடிஅரசு’ 13.01.1945)

“இந்தியாவுக்கு ஏற்படவிருக்கும் எந்த ஒரு அரசியல் திட்டத்திலும் ஷெட்யூல் வகுப்பாருக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கப்படாமல் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறான முடிவுகளே இருக்குமேயானால், கல்வித் திட்டத்தை முழுச் சக்தியுடன் எதிர்ப்போம்’’ என்று ராவ்பகதூர் என்.சிவராஜ் அவர்கள் லார்ட் லெவலுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில்  குறிப்பிட்டிருக்கிறார். திரு.சிவராஜ் அகில இந்திய ஷெட்யூல் வகுப்புப் பெடரேஷனின் தலைவர். தாழ்த்தப்பட்ட சமுதாயங்களின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர். டாக்டர் அம்பேத்கரைப் போலவே, ஷெட்யூல் வகுப்பினரின் முன்னேற்றத்தில் பல ஆண்டுகளாகத் தொண்டாற்றி வருபவர். எனவே, இவரது கருத்தை எந்த அரசியல்-வாதியும் அலட்சியப்படுத்த முடியாதென்றே கூறலாம்.’’ (‘விடுதலை’ 25.4.1945)

“…. என்று சொல்லிக்கொண்டே அம்பேத்கர் கண்ணீர் விட்டார். இதைக் கேட்ட சபையோர் அத்தனை பேரும் (1,000 பேர்) மனம் இளகி தாங்களும் கண்ணீர் விட்டார்கள். இந்தத் தீர்மானத்தை தோழர் சிவராஜ் அவர்கள் (பல இடங்களிலும்) மனப்பூர்வமாய் ஆதரித்திருக்கிறார். இந்தத் தீர்மானம் செய்த உடன் இராமாயணம், மநுதர்ம சாஸ்திரம், கீதை முதலிய சாஸ்திர புராண இதிகாசங்கள் அம்மாநாட்டிலேயே கொளுத்தப் பட்டிருக்கின்றன. (இவை 21.10.1935ஆம் தேதி ‘குடிஅரசு’ முதலிய பத்திரிகைகளில் இருக்கின்றன) நாசிக்கில்இவை நடந்தவுடன் நமது மாகாணத்தில் சுமார் 20, 30 இடங்களில் இத்தீர்மானத்தை ஆதரித்துப் பல மாநாடுகள் கூட்டி ஆமோதிக்கப்பட்டது. திருநெல்வேலியி-லேயே டாக்டர் ஆர்.வி.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் 10.11.1935ஆம்  தேதியிலும், திருச்செங்கோட்டில் 11.11.1935லும் தூத்துக்-குடியில் 7.11.1935லும், கோபியில் 27.10.1935லும், சென்னையில் 30.10.1935லும் மீனாம்பாள் அவர்கள் தலைமையில் 19.10.1935ஆம் தேதி திருச்சி மாநாட்டிலும் மற்-றும் சென்னையில் தோழர்கள் ஜகநாதம், சிவஷண்முகம், பாலகுரு சிவம் முதலானவர்கள் தனித்தனி மாநாடு-களிலும் வெகு ஆவேசமாய் ஆதரித்துப் பேசியும் தீர்மானங்கள் பல நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இதற்குப் பிறகும் பல இடஙகளில் ஆதி திராவிடர்கள் இஸ்லாமியர்-களாக ஆகி இருக்கிறார்கள். பல இடங்களில் தோழர்கள் மீனாம்பாள், சிவராஜ் முதலியவர்கள் தலைமையில் இராமாயணம், மனுதர்ம சாஸ்திரம் ஆகியவை கொளுத்தப் பட்டிருக்-கின்றன. இவை யாவும் பூனா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்தவை என்பதையும், பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்ட இரு தலைவர்களாகலேயே நடத்திச் செய்யப்பட்டவை என்பதையும் நினைவுறுத்திக் கொண்டு மேலால் சிந்திக்க வேண்டுகிறோம். (‘குடிஅரசு’ 4.8.1945)

(தொடரும்)

சனி, 19 அக்டோபர், 2024

இந்தியா” நாட்டின் பெயர் – ஒரு வரலாற்று விளக்கம்

 ஞாயிறு மலர்

Published April 20, 2024, விடுதலை நாளேடு

கட்டுரை ஆசிரியர்:

பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான்,
இணைப் பேராசிரியர்,
பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்
தமிழாக்கம்: செல்வ. மீனாட்சி சுந்தரம்
மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

திராவிடப் பொழில் அக்டோபர்-டிசம்பர் 2023 ஆய்விதழில்  “Names of the Nation – A Comparative Study” என்னும் தலைப்பில் வெளிவந்த பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வழிச்சுருக்கம்.
முன்னுரை:
“இந்தியக் குடியரசு” என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான அதிகாரப்பூர்வப் பெயரானாலும், உள் நாட்டிலும் உலகளவிலும் பொதுமக்களால் இந்தியா என்றே அழைக்கப்படுகிறது. இந்தியா விடுதலை பெறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா என்னும் பெயர் வரலாற்றின் பக்கங்களில் காணக் கிடைக்கிறது.
ஆனால், பல்லாண்டு காலமாகப் ‘பாரத்’ என்னும் பெயரும் – இந்திய நாட்டின் பெயராக அழைக்கும் வழக்கம் உலக அளவில் இல்லையென்றாலும் உள்ளூர் அளவில் அவ்வாறும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தியா என்னும் பெயர்ச்சொல் அயற்சொல் என்றும், அந்தப் பெயர் காலனியாதிக்கத்தால் நம்மீது திணிக்கப்பட்ட பெயர் என்றும் ஒரு புரிதலற்ற தவறான கருத்து சிலரின் சிந்தையிலே தேங்கியுள்ளது.
இந்தக் கட்டுரை ‘இந்தியா’ மற்றும் ‘பாரத்’ ஆகிய இரண்டு பெயர்களையும் ஆய்ந் திடும் நோக்கில் வரலாறு, மொழியியல், தொன்மவியல், நிலவியல், இலக்கியங்கள், கல்வெட்டுகள், மதப் புராணங்கள் போன்ற பலதரப்பட்ட மூலங்களிலிருந்து அறிவுப் பூர்வமாகத் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டு உண்மை நிலையை உணர்த்த முயல்கின்றது.

இந்தியா என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்
இந்திய அரசமைப்புச்சட்டம் நமது இந்திய ஒன்றியத்தின் உச்ச உயர்நிலைச் சட்டம் ஆகும். இந்த அரசமைப்புச் சட்டத்தின் விதி 1இன் படி இந்திய ஒன்றியத்தால் ஆளப்படுகின்ற நிலப் பரப்பின் பெயர் இந்தியா என்று அறிவிக்கப்படுகின்றது. அதன்படி நமது நாடு இறையாண்மை கொண்ட இந்தியக் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
India that is Bharat, பாரத் என்றும் அறியப்படும் இந்தியா என்று விதி ஒன்றில் (Clausel) நாட்டின் பெயர் சுட்டப்படுகின்றது. இந்த இடத்தைத் தவிர அரசமைப்புச் சட்டத்தின் மற்ற எல்லா இடங்களிலும் நாட்டின் பெயர் இந்தியா என்றே சுட்டப்படுகின்றது.

இவ்வாறு அரசமைப்புச் சட்டம் ஏற்பட்ட காலம் தொட்டு இந்தியா என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அறியப்பட்டிருந்தாலும் இந்த இந்தியா என்னும் சொல்லாடல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

அகவழக்கு – புறவழக்கு (Endonym & Exonym) மொழியியல் கோட்பாடுகள்:
அக வழக்கு (Endonym)
ஒரு சமூகம் தனது ஆளுகைக்கு உட்பட்ட கூறுகளை எந்தப் பெயரால் எப்படி சொல்லி அழைக்கும் என்பது அகவழக்காகும்.

புற வழக்கு (Exonym)
ஒரு சமூகம் பிற சமூகத்தின் ஆளு கைக்கு உட்பட்ட நிலப்பரப்பின் அக வழக்கின் படி அழைக்கப்படும் பெயரை எப்படி வேறுபட்ட உச்சரிப்பால் அழைப் பார்கள் என்பது புற வழக்கு ஆகும்.
உலகத்தில் பல மொழிகளும் தனக்கே உரித்தான சிறப்பு ஒலியியல் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. ஒரு இனக் குழுவினர் தங்கள் மொழியின் ஒரு சொல்லை உச்சரிக்கும் முறையே ஒலியியல் கொள்கை ஆகும். அதே சொல்லைப் பிற மொழி பேசுவோர் உச்சரிக்கும் போது அந்த உச்சரிப்பில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. தமிழர்கள் அன்றி வேறு எவரும் தமிழின் சிறப்பு ‘ழ’கரத்தை உச்சரிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
இந்த உச்சரிப்பு வேறுபாட்டின் காரணமாக அகவழக்கிலே அறியப்படுகின்ற ஒரு சொல் பிற இனக்குழுவினரால் சற்றொப்ப ஒத்து வருகின்ற வேறொரு உச்சரிப்பைக் கொண்ட சொல்லால் அறியப்படும். இந்த உச்சரிப்பு இடர்ப்பாடே அகவழக்கு புற வழக்கு (Endonym & Exonym) என்னும் மொழியியல் கொள்கையின் தோற்றுவாயாகும்.

சில எடுத்துக்காட்டுகளை இங்கு பார்க்கலாம்:
அகவழக்கு – புறவழக்கு
சூங்வா-சைனா
பார்சி – பெர்சியன்
அய்யோனியன் (கிரேக்கம்) – யவனம்
கேடா-கடாரம்
ஜாவ் (ஜாவா) -சாவகம்
நக்கவரம்-நிகோபார்
மாலத்தீவு – மால்தீவ்ஸ்
தமிழ் – திரமிடம், திராவிடம்
இப்படி உலகின் பல மொழிகளும் பிற மொழிச் சொற்களை தங்களின் உச்சரிப் புக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்கின்றன.

இந்தியா என்னும் சொல்லாடல் இந்திய மரபில் வந்ததா?
இந்தியா என்னும் பெயர்ச் சொல் பழைய கிரேக்கத்தின் இவ்டியா (Ivdia) என்ற சொல்லிலிருந்து வந்திருந்தாலும் அது ‘சிந்து’ என்னும் இந்திய மரபுச் சொல்லின் புறவழக்காகும். அதாவது இந்திய அகவழக்கிலே வழங்கப்பட்ட சிந்து என்னும் பெயர்ச் சொல்தான் புறவழக்கிலே இந்தியா என்று திரிந்து வந்துள்ளது.
சிந்து என்னும் இந்திய அக வழக்குச் சொல் கிரேக்கத்திற்குச் செல்வதற்கு முன்பாக அதன் பயணத்திலே இந்தோ ஆரியன், இந்தோ ஈரானியன் ஆகிய மொழிக் குடும்பங்களின் ஊடாகப் பரவிப் பின்னரே அந்தச் சொல் கிரேக்கத்தைச் சென்றடைகின்றது.
பழைய பாரசீக மொழியும் அவெஸ்டன் மொழியும் சொல்லாட லிலும் இலக்கணத்திலும் வேதகால சமஸ் கிருதத்தோடு பெரிதும் ஒத்திருக்கின்றன என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
சிந்து என்னும் சொல் பொதுவாக நீர் நிலைகளைக் குறித்தாலும் ஒரு நதியின் பெயராக பழைய வேத காலத்தில் ரிக் வேதத்தில் (மண்டலம் 10, சூக்தா 75, ரிக்ஸ் 1&2) குறிப்பிடப்படுகின்றது. பின்னர் அந்தச் சொல்லே சிந்து நதிக்கு அப்பால் உள்ள நிலப்பரப்பைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகவும் பிறப்பெடுக்கின்றது
சிந்து என்று பழைய வேதகால சமஸ் கிருதத்தில் உச்சரிக்கப்படும் சொல்லானது ஹிந்து என்று பழைய பாரசிக மொழியிலே உச்சரிக்கப்படுகின்றது. சமஸ்கிருதத்தின் ‘ச’கரம் பாரசீகத்தில் ‘ஹ’கரமாகத் திரிகிறது. இந்த உச்சரிப்பு மாறுபாடானது கி.மு. 850-600 காலத்தில் தோன்றியது என்பது தமிழ் சமஸ்கிருத அறிஞர் அஸ்கோபார்போலாவின் கருத்தாகும்.

கி.மு.ஆறாம் நூற்றாண்டில் வடிக்கப் பட்ட பாரசீக மன்னன் டாரியஸ் – 1 (DARIUS-1) அவர்களின் சிலைப் பீடத்திலே முதன்முதலாக ஹிந்து என்னும் சொல்கண்டறியப்படுகின்றது. இன்றும் இந்தச் சிலை ஈரானின் டெக்ரான் நகர அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப் பட்டுள்ளது.
இப்படியாகச் சிந்து நதி என்பது ஹிந்து நதி என்று இந்தோ ஈரானிய மொழியில் மாற்றம் பெறுகின்றது.
சிந்து நிலப்பகுதி என்பது வேதத்தில் ‘சப்த சிந்து’ என்று அறியப்படுகின்றது. அதுவே ‘ஹப்த ஹிந்து’ என்று ‘ஜெண்ட் அவஸ்தாவில்’ (Zend Avesta) அறியப் படுகிறது.

கிரேக்கக் கடலோடி சைலாக் (Scylax) என்பார் டேரியஸ் மன்னனின் ஆணைப்படி சிந்து நதியைக் கடந்து சென்றார் என்னும் செய்தியைக் கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹீரோடாட்டஸ் (Herodotus) பதிவு செய்துள் ளார். ஆக, சிந்து நிலப்பரப்பு என்பது கிரேக்கத்திலும் பாரசீகத்தின் வாயிலாக அறியப்பட்டுள்ளது.

சிந்து என்பது பாரசீகத்தில் ஹிந்துவாக மாறிப் பின்பு அது கிரேக்கத்தில் இண்டோஸ் ஆக மாறுகிறது. ஏனென்றால் கிரேக்கத்தில் H என்னும் ஒலியை கிரேக்கர்கள் ஒலிப்ப தில்லை. எனவே, ஹிந்து என்பதை இண்டோஸ் என மாற்றி கிரேக்கத்தில் ஒலித் திருக்கிறார்கள்.
(SINDU – HINDU – INDU – INDOS)

பின்னர் இந்தச் சொல் லத்தீனிலும் கொய்ன் கிரேக்கத்திலும் (Koine Greek) இந்தியா என்றும், பிரெஞ்சு மொழியில் இண்டே என்றும், ண்டி என்று பழைய ஆங்கிலத்திலும் தற்கால ஆங்கிலத்திலும் இந்தப் பெயர்ச் சொல் இந்தியா என்று மாறி ஒலிக்கின்றது.

இந்தச் சொற்களை ஒப்பு நோக்கி உணருங்கால் இவை அனைத்தும் வேதத்தில் குறிப்பிடப்பட்ட சிந்து நிலப் பகுதியையே குறிக்கின்றது என்பது புலனாகும். உச்சரிப்பு வேறுபாட்டால் பிற சொற்களால் வேற்று மொழியில் வழங்கப்படுகின்ற அந்தச் சொற்கள் அந்தச் சொல்லின் வேத மூலத்தை மாற்ற இயலாது அதே பொருளைக் குறிக்கவே பயன் பட்டது. எனவே ரிக் வேதத்தில் தனது வேர்ச்சொல்லைக் கொண்டுள்ள இந்தியா என்னும் சொல் இந்திய மரபின் சொல்லே! அது அயலவர் சொல் இல்லை என்பது திண்ணம்.

பாரதம் என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்:
பாரத் அல்லது பாரதம் என்னும் பெயர்ச் சொல்லின் சமஸ்கிருத வேர்ச்சொல் பர், பாரா (bhr,bhara) என்பதாகும். இந்த வேர்ச் சொல்லின் பொருள் சுமத்தல் அல்லது தாங்குதல் ( To carry or To Bear) என்பதாகும். தமிழில் கூடப் பாரம் என்னும் சொல் புழக் கத்தில் இருந்தாலும் அதன் தமிழ்ச் சொல் சுமை என்பதாகும்.
யாகத்தில் வார்க்கப்படுகின்ற பொருட்களை எல்லாம் யாகத் தீயானது வானுலகில் வாழும் தேவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஊடகமாகச் செயல் புரிவதால் நெருப்பிற்குப் ‘பரதா’ bharatah – bharata என்னும் பெயர் வழங்கப்படுகிறது.

அக்னி பகவானை ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயராலும் அழைக்கும் வழக்கம் உள்ளது. யாகத்தில் பெய்யப்படுகின்ற நெய்யை யாக நெருப்பானது தேவர்களிடம் கொண்டு சேர்ப்பதால் அது ‘ஹவ்ய வாகனா’ என்று அழைக்கப்பட்டது.
ஆதிசங்கரரும் தனது ‘சங்கர பிரக தாரன்யகா பாஷ்யா’ என்னும் நூலில் ‘அக்னி பரதா’ (agnir bharata) என்று நெருப்பினை அழைப்பார்.

ஆக, பரதா என்னும் சமஸ்கிருதச் சொல் சுமத்தலையும் தூக்கிச் செல்வதையும் குறிப்பிடும் சொல் என்பது தெளிவாகின்றது.
பாரதி என்பது பரதா என்னும் சொல்லின் பெண்பாற் பெயர் என்று தனது ரிக் வேத சம்ஹிதாவில் சயனாச்சாரியார் அவர்கள் குறிப்பிடுவார்கள். நெருப்பில் நெருப்பில் தோன்றும் ஒளியைச் சுமப்பவர் பாரதி என்று பின்னாளில் பாரதி என்ற சொல்லுக்கு ஒளி என்னும் பொருளும் வந்து சேர்ந்தது.

பாரத் என்னும் சொல் இந்திய மரபுச் சொல்லா?
பாரத் என்னும் சொல்லை ஒரு சமஸ்கிருத சொல்லாகக் குறிப்பிட்டாலும் அந்தச் சொல் பிராகிருத மொழியிலும் அதே பொருளை உணர்த்தும் சொல்லாக கையாளப்படுவது ஒப்பு நோக்கத்தக்கது.
மேலும் அய்ரோப்பிய ஈரானிய மொழிகளிலும் இதே பரா பரதா என்னும் சொல் சுமத்தலையும் தாங்குதலையும் குறிக்கின்ற ஒரு சொல்லாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் இந்தோ ஈரானியன் இந்தோ ஆரியன் குடும்பத்தின் பல மொழிகளும் தங்களுக்கு இடையே மொழிக் கட்டமைப்பில் ஒரு பொதுமையைக் கொண்டுள்ளன. இந்த மொழிகளின் அகர முதலியின்படி ‘பரதா’ என்னும் வார்த்தை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைக் கீழே பார்ப்போம்:
புரோட்டோ இந்தோ ஈரானியத்தில் பரதா என்பது பாரதி என்றும்
புரோட்டோ இண்டோ அய்ரோப் பியத்தில் அது பேரெதி என்றும்
வேதகால சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்புடைய பழைய ஈரானிய அவஸ்தன் மொழியில் பாரைதி என்றும்
பாரசீக மொழியில் பர்தன் என்றும்
அராபிய மொழியில் பரடா என்றும்
அழிந்து பட்ட ஜெர்மானிய கோத்திக் மொழியில் பாய்ரன் என்றும்
லத்தீன் மொழியில் பெரோ போர்ட்டோ என்றும்
ஜெர்மனிய மொழியில் ஜிபாரென் என்றும்
ஆங்கிலத்தில் பியர், பர்டன் என்றும் வழங்கப்படுகிறது.
எனவே, பாரத் என்னும் சமஸ்கிருதச் சொல்லானது அதேபொருள் படும்படி இந்தோ ஆரியன் இந்தோ ஈரானியன் இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பங்களில் பல மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே பாரத் என்னும் சொல் இந்திய மரபுக்கு அதாவது சமஸ்கிருத மரபுக்கு மட்டுமே சொந்தமான ஒரு சொல் என்று கூறுவது ஒரு தவறான புரிதலால் சொல்லப்படும் கூற்றே ஆகும்.

ஆனாலும், பாரத் என்னும் சொல் ஒரு அயற்சொல் என்று நாம் கூறி விடவும் இயலாது.
பாரத் என்னும் சொல் ஒரு வேர்ச்சொல். இந்த வேர்ச் சொல்லானது தொடர்புடைய அத்தனை மொழிக் குடும்பங்களிலும் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதே உண்மை. பிற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதால் இது இந்திய சமஸ்கிருத மரபுக்கு சொந்தமில்லாத சொல் என்றும் கூறி விட இயலாது.
அதேபோல் இந்தியா என்னும் சொல்லும் இந்திய சமஸ்கிருத மரபின் வழி வந்த சிந்து எனும் அகவழக்குச் சொல்லின் கிரேக்க மொழியில் வழங்கும் புறவழக்குச் சொல் ஆகும்.

பரதப் பழங்குடியினர்
முந்தைய வேத காலத்தில் பரதர் என்னும் பழங்குடியினர் சரஸ்வதி எனும் புராண நதிக்கரையில் வசித்து வந்துள்ளனர். அந்த இடம் தற்காலத்தில் ஹரக்ஸ்வதி நதி அல்லது ஹெல்மான்ட்-அர்கன்டாப் என்னும் ஆப்கானிஸ்தானத்தின் நதிப் பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
இந்தப் பழங்குடியினர் பற்றிய பல குறிப்புகள் ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் பல இடங்களில் காணப் படுகின்றன. இந்தப் பழங்குடியினர் ஹிந்து குஷ் மலையில் அமைந்துள்ள கைபர் கண வாயையும் அய்ந்து நதிகள் பாய்கின்ற பஞ்சாப் பகுதியையும் கடந்து வந்து இறுதி யாகக் கங்கைச்சமவெளிப் பகுதியில் குடியேறி யுள்ளார்கள்.
பரதா என்பது சுமந்து செல்லும் ஊடகம் என்பதை நாம் முன்னரே கண்டுள்ளபடி இந்த பரதப் பழங்குடியினர் இந்தோ ஆரியப் பண்பாட்டை மேற்கிலிருந்து கிழக்கிற்குச் சுமந்து வந்ததால் பரதப் பழங்குடியினர் எனப் பெயர் பெற்றனர்.
இந்த பழங்குடியினர் பற்றிய நுணுக்க மான பல குறிப்புகளும் இவர்களின் இடப்பெயர்வுகளும் இவர்கள் பங்கேற்ற பல போர்களைப் பற்றிய குறிப்புகளும் ரிக் வேதத்தின் மூன்று மற்றும் ஏழாவது மண்டலங்களில் குறிப்பிடப்படுகின்றது.
இந்தப் பழங்குடியின் தலைவர்களாக திவோதாசா மற்றும் சுதாஸ் ஆகியோரின் பெயர்களும் இவர்களுக்கு உதவி செய்தவர் களாக பரத்வாஜா, விசுவாமித்ரா, வசிஷ்டா ஆகியோரின் பெயர்களும் ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் வருகின்ற காயத்ரி மந்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. இடம்பெயர்ந்து யமுனை நதிக்கரைக்கு வந்து சேர்ந்த இந்த பரதப் பழங்குடியினர் அந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த பேடா மன்னனைத் தோற்கடித்துப் புரு இனத்தவரோடு சேர்ந்து குரு ராஜ்யத்தை நிறுவுகின்றனர்.

மகாபாரத் இதிகாசம் இந்தக் குரு வம்சாவளியினரைப் பற்றிக் குறிப்பிடுகையில் சகுந்தலை-துஷ்யந்தன் ஆகியோருக்குப் பிறந்த பரதன் என்பான் மன்னனாக நாடாண்டதைக் குறிப்பிடுகின்றது.
சந்திர வம்சத்தைச் சேர்ந்த இந்த பரத மன்னனின் பெயராலேயே இந்த நாடு பாரத நாடு என்று அழைக்கப்படுகின்றது என்றும் நம்பப்படுகிறது. ஆனால், இந்தப் பரத மன்னன் சந்திர வம்சத்தைத் தோற்று வித்தவன் அல்லன். சந்திர வம்சாவளியிலே இடையில் வந்த ஒரு மன்னன். அவன் பெயரால் நாடு அழைக்கப்படுவது என்பது ஏற்புடைத்தன்று.
இந்தப் பரத மன்னன் ஒரு வரலாற்று மாந்தர் அல்ல. அதற்கு மாறாக மகாபாரதம் என்னும் இதிகாசக் கதையின் பாத்திரம். அந்தக் கதையின்படி பரத மன்னன் 27,000 ஆண்டுகள் நாட்டை ஆண்டான் என்றும் இந்த பூமியில் அமைந்திருந்த எல்லா நாட் டையும் தோற்கடித்துக் கைப்பற்றினான் என்றும் அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் பொருந்தாத கட்டுக்கதைகளால் வடிவமைக் கப்பட்ட கதாபாத்திரமே பரத மன்னன் என்னும் மகாபாரதப் பாத்திரம் ஆகும்.
மகாபாரதத்தின் பீஷ்ம பார்வதத்தின் ஜம்பு கண்ட நிர்மாணப் பகுதி ஒன்பதில் பரதா என்னும் சொல் கையாளப்படுகின்றது. ஆனால், அது பரத மன்னனைக் குறிக்க வில்லை அது பரதப் பழங்குடியைக் குறித்தது.
திருதராஷ்டிரனை ‘ஓ பரதா’ என்று சஞ்சயன் அழைப்பதாக ஒரு இடம் வருகின்றது. இது பரதப் பழங்குடியினரைப் பரதா என்றழைக்கும் பழக்கம் இருந்துள்ளதைக் காட்டுகின்றது. எனவே, பரத கண்டம் பரத வர்ஷா என்பது பரதப் பழங்குடியினர் ஆண்டிருந்த நிலப்பகுதியைக் குறித்தது எனலாம்.

பரதநாடு என்பது வட இந்தியா மட்டுமா? தென்னிந்தியா அந்த நாட்டின் ஒரு பகுதி இல்லையா?
பரதநாடு என்பது மகாபாரதக் கதையின்படி பரத இனக் குழுவினர் ஆண்ட வட இந்தியாவை உள்ளடக்கிய ஒரு பகுதியே ஆகும். அதில் தென்னிந்திய நிலப்பரப்பு இணையவில்லை என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கங்கைச் சமவெளி முடிவுக்கு வரும் இடமே பரத நாட்டின் எல்லையாக மகாபாரதத்தில் காட்டப்பட்டுள்ளது.
விந்திய மலைக்குத் தெற்கே அமைந்த நிலப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களாகத் திராவிடர்களையும், கேரளர்களையும், கர்நாடகர்களையும், சோழர்களையும் மற்றும் பல மன்னர் களையும் மகாபாரதம் சுட்டிக்காட்டி அவர் களும் அந்தக் குருச்சேத்திரப் போரிலே பங்கேற்றதாகக் குறிக்கின்றது.

மனுஸ்மிருதியில் ((Manu 2-6-23) தென்னிந்திய நிலப்பரப்பு’பரத வர்ஷா நாட்டின் பகுதியாகச் சுட்டிக் காட்டப்படவில்லை. அதற்கும் மேலாக இந்தத் தென்னிந்திய நாட்டினரை ‘மிலேச்ச தேசத்தினர் அதாவது காட்டுமிராண்டிகள், கீழ்நிலை ஜாதியினர், சமஸ்கிருதம் அறியாத அயலவர்கள் என்று குறிப்பிடுகின்றது.
மகாபாரதத்தின் அனுசாசன பருவா (Book 13, Sec 35) உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் வெறுப்பைச் சம்பாதித்த கீழ் ஜாதி சூத்திரர் களாகத் தென்னிந்திய மக்களையும் மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.
மேகலா, திராமிடா என்னும் சொற்கள் இந்தப் பகுதியிலே குறிப்பிடப்படுகின்றது.

புராணங்களில் பரதவர்ஷா
பாகவத புராணம், வாயுபுராணம், அக்னி புராணம், மார்க்கண்டேய புராணம், ஸ்கந்த புராணம் ஆகிய புராணங்களில் பரதவர்ஷத்தைப் பற்றிய கற்பனைக் கதைகள் அள்ளிவிடப்பட்டிருக்கின்றன.
வாயு புராணத்தில் பாரத வருஷத்தில் ஒன்பது தீவுகள் இருந்தன என்றும், அவற்றிற்கு இடையே கடல் இருந்தது என்றும், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு யாரும் போக முடியாது என்றும் கதை சொல்லப்பட்டிருக்கின்றது.
பரதவர்ஷத்தைச் சுற்றி ஏழு கடல்கள் இருந்ததாக இந்த புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவை:
உப்புக்கடல்
கரும்புச் சாற்றுக் கடல்
மதுக்கடல்
வெண்ணை நெய்க் கடல்
தயிர்க்கடல்
பாற்கடல்
நன்னீர்க் கடல்
பரதவர்ஷத்தின் நிலப்பரப்பைக் குறிப்பிடும் மேற்கண்ட குறிப்புகள் எல்லாம் கற்பனையில் விளைந்த கதைகளே என் பதைச் சொல்லத் தேவையில்லை.

ஹத்திக்கும்பா கல்வெட்டு சொல்வதென்ன?
இன்றைய ஒடிசா மாநிலத்தின் உதயகிரி மலைப்பகுதியில் பிராக்ருதி மொழியில் பிராமி எழுத்துருவால் வெட்டப்பட்டுள்ள ஹத்திகும்பாக் கல்வெட்டு அந்தப் பகுதி யைக் காரவேல் மன்னன்
கி.மு. முதலாம் நூற்றாண்டில் ஆண்ட வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்கின்றது.

17 அடிகள் கொண்ட அந்தக் கல்வெட் டிலே பத்தாவது அடியிலே ‘பாரத வாஸா’ என்ற சொற்றொடர் வருகின்றது. காரவேல் மன்னன் பார்த் வர்ஷா நாட்டின் மீது படை எடுத்துச் சென்ற செய்தியை இந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. காரவேல் மன்னன் ‘கலிங்காதிபதி’ என்றும், ‘கலிங்க ராஜ வம்ச’ என்றும், ‘கலிங்க நகரி’ என்றும், காரவேல மன்னன் கலிங்க சாம்ராஜ்யத்தின் குடிமகனாகவே இந்தக் கல்வெட்டில் பதிவுசெய்யப் பட்டிருக்கின்றார் என்பதும் பாரதவர்ஷத்தில் கலிங்க நாடு சேர்ந்து இருக்கவில்லை என்பதும் இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் செய்திகளாகும்.
இந்த காரவேல் மன்னனை, 113 ஆண்டு களாகக் கலிங்கப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த திராவிட மன்னர்களின் கூட்டமைப்பை முறியடித்தவனாகவும், பாண்டிய மன்னர்களிடம் இருந்து முத்துக் களைப் பரிசாகப் பெற்றவனாகவும் இந்தக் கல்வெட்டுக் காட்சிப்படுத்துகின்றது.
இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய செய்திகளாக இந்த கல்வெட்டு அறிவிக்கும் முக்கியமான மூன்று முடிவுகளாவன:
1. கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா நாடு அமைந்திருந்தது.
2. பரதவர்ஷா நாடு என்பது வட இந்தி யாவின் கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே.
3. அந்தக் காலக்கட்டத்தில் கலிங்கப் பகுதியும் தென்னிந்தியப் பகுதியும் பரதவர்ஷா நாட்டின் பகுதிகளாக இருக்க வில்லை.

சமண மதத்தின் பரத மன்னன்
பரதவர்ஷா என்பது பார்ப்பனிய மதத்தின் சொல்லாடல் மட்டும் அன்று. அந்தச் சொல் லாடல் சமணத்திலும் பவுத்தத்திலும் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாரத் என்னும் சொல் மத ரீதியான சொல் லாடல் இல்லை. அது பல பண்பாடுகளை தன்னுள்ளே கொண்ட மானுடவியலின் ஒரு சொல்லாடலாகும்.
சமண மதக் குறிப்புகளின்படி முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் நூறு மகன் களில் ஒருவன்தான் பரதன் ரிஷப தேவரின் மகளின் பெயர் பிராமி என்றும், அது அன்றைக்கு வழக்கத்திலிருந்த எழுத் துருவுக்குப் பெயராகக் (பிராமி எழுத்து) கொள்ளப்பட்டது என்பதும் கூடுதல் செய்தி.
கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சமண இலக்கியமான ஆதி புராணத்தின்படி ரிஷப தேவர் தனது நாட்டை 100 மகன் களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து ஆட்சி செய்ய வைத்துள்ளார். ஆனால் பரதன் மற்ற 98 சகோதரர்களையும் போரில் தோற்கடித்து அவர்களுடைய பகுதியையும் கைப்பற்றிக் கொள்கின்றான்.

இறுதியாக ஒரே ஒரு சகோதரன் பாகுபலி மட்டும் இன்னும் தனது நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றான். பாகுபலியுடன் பரதன் செய்த போரிலே பரதன் தோற்றுப் போய் விடுகின்றான். ஆனால் பாகுபலி சகோதர பாசத்தால் தனது நாட்டை பரதனுக்கு அளித்துவிட்டுத் தான் ஒரு சமணத் துறவியாகப் போய் விடுகின்றான் என்று ஆதி புராணம் சொல்கின்றது.
இன்றைக்கும் கர்நாடகத்தின் சரவண பெலகுலா சமணக் கோயிலிலே மிக உயர்ந்த பாகுபலியின் சிலைக்கு அருகிலே பரத மன்னனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது இந்தக் கதையை உறுதி செய்வதாக உள்ளது.
மேலும் இந்த சமணமதக் கதையைப் பார்ப்பனிய விஷ்ணு புராணமும் சிறீமத் பாகவதமும் உறுதி செய்கின்றன. ரிஷப தேவரின் மூத்த மகனான பரதனின் பெயராலேயே இந்த நாடு பாரதவர்ஷா என்று அழைக்கப்படுவதாக சிறீமத் பாகவதம் (5-49) அறுதியிட்டுச் சொல்கின்றது.
மேலே சுட்டப்பட்ட வேதிய இந்து மதப் புராணங்களின்படியும் சமண மத ஆதி புராணத்தின்படியும் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவனின் மகனான பரதனே இந்த நாட்டை பேரரசனாக ஆண்ட சக்கரவர்த்தி என அறிய முடிகின்றது.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்கள்
பாரத் என்று அறியப்படும் இந்தியா
அரசமைப்புச் சட்டத்தின் முதல் விதியில் நாட்டின் பெயர்
அறிவிக்கப்படுகின்றது. அதில் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்
என்று வரையறுக்கப்பட்டது.
இந்த முதல் விதியின் மீது நடந்த விவாதத்தில் ஒரு சிலரின் கருத்துக்களை கீழே பார்ப்போம்.
திரு. அனந்த சயனம் அய்யங்கார்: இந்தியா என்ற சொல்லுக்கு பதிலாக பாரத், பாரத் வர்ஷா அல்லது ஹிந்துஸ்தான் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்கிறார்.
திரு. லோக்நாத் மிஸ்ரா அவர்களும் பாரத் வர்ஷா என்ற பெயரை ஆதரிக்கிறார்.
திரு.சிபன்லால் சக்சேனா அவர்கள் இந்தியா என்ற வார்த்தையைக் கூடாது என்றும், பாரத் என்ற வார்த்தை மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், இந்திய நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தி அறிவிக் கப்பட வேண்டும் என்றும் வந்தே மாதரம் நாட்டின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றார்.
திரு.எச்.வி.காமத் என்பவர் மாநிலங்கள் என்ற வார்த்தையை மாற்றிப் பிரதேசங்கள் என்னும் ஹிந்தி வார்த்தையை பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றார்.

இந்த வேளையில் குறுக்கிட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு,பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு. எனவே, ஒரு மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறுவது சரியான முடிவு அல்ல என்று தனது கருத்தை முன்வைத்து உறுப்பினர்கள் தங்களின் சக்தியை அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசமைப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளில் செலவழிக்க வேண்டுமென்றும் இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத பிரச்சினைகளில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பண்டித நேரு அவர்களின் கருத்துக்கு ஒத்திசைவு தந்து பிறர் கொண்டு வந்த திருத்தங்கள் அனைத்தையும் எதிர்க்கின்றார்.
பின்னர் ஒரு சமரசத் தீர்வாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாரத் என்று அறியப் படும் இந்தியா India that is Bharat என்னும் திருத்தத்தை முன் வைக்கிறார்.

திரு.எச்.வி.காமத் அவர்களும் திரு. சேத் கோவிந்த் தாஸ் அவர்களும், பாரத் அல்லது ஹிந்து என்னும் சொல் முதலில் வரவேண்டும் இந்தியா என்னும் சொல் பின்னால் வரவேண்டும் என்னும் திருத்தத்தை முன்வைக்கின்றார்கள்.
திரு. கலா வெங்கட் ராவ் அவர்கள், ஹிந்த் & இந்தியா என்ற சொற்கள் அயற் சொற்கள் என்னும் கருத்தியலால் இந்தி மொழியின் பெயரையே பாரதி என்று மாற்ற வேண்டும் என வேண்டினார்.
திரு.கமலபதி திரிபாதி அவர்கள் மேலுலகத்தில் வசிக்கின்ற கடவுள்கள் பாரத் என்றே இந்த நாட்டின் பெயரை நினைவில் வைத்துள்ளார்கள் என்று சொல்கின்றார்.

இந்த நிலையிலே அண்ணல் அம் பேத்கர் அவர்கள் குறுக்கிட்டு, “இந்த விவா தங்கள் எல்லாம் தேவையா இன்னும் முக்கியமான வேலை நிறைய இருக்கின்றது” என்று அவையின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
பின்னர் திருத்தங்கள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு அண்ணல் அம்பேத்கரின் திருத்தமே அரசமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது அதன்படி India that is Bharat  இந்தியா எனும் பாரத் என்னும் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

முடிவுரை:
இந்தக் கட்டுரையில் வரலாற்றின் அடிப் படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா மற்றும் பாரத் ஆகிய சொல்லாடல்களைப் பற்றி ஆராய்ந்தபின் இந்த நாட்டின் பெயராக அந்தச் சொற்கள் எப்படி நிறுவப்பட்டன என்பதை ஆய்ந்த பின்னே நாம் கீழ்க்கண்ட முடிவுகளை எளிதாக எட்டலாம்.
1. இந்தியா மற்றும் பாரத் ஆகிய இரண்டு பெயர்களுமே காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரில் மக்களுக்கு உந்துதல் தந்தது.
2. பல நூற்றாண்டுகளாக இந்த நிலப் பரப்பு இந்தியா என்னும் பெயராலும் அறியப்பட்டிருந்தது.
3. பாரத் என்னும் பெயரும் வெகு கால மாக இங்கு புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
4. இந்தியா என்னும் பெயர் காலனியாதிக்கம் நம் நாட்டின் மீது திணித்த பெயர் என்று கருதுவது தவறாகும். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிந்து என்னும் சொல்லாடலின் அகவழக்கின் புறவழக்கே (ணிஜ்ஷீஸீஹ்னீ ஷீயீ ணிஸீபீஷீஸீஹ்னீ) இந்தியா என்னும் சொல்லாடலாகும். இந்தியா என்பது அயற்சொல் இல்லை.
5. யாரேனும் இந்தியா என்னும் சொல்லை அயற்சொல்லாகக் கருதி அதன் மீது வெறுப்பை உமிழ்ந்தால், பாரத் என்னும் சொல்லும் ஈரானிய வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த சொல் என்பதால் அதையும் அயற் சொல்லாகக் கருதி அதன் மீதும் வெறுப்பை உமிழ வேண்டும்.
6. யாக வேள்வியில் வார்க்கப்படுகின்ற காணிக்கைகளை நெருப்பானது மேலுல கில் வாழ்கின்ற தேவர்களிடம் கொண்டு சேர்ப்பதாகக் கருதப்படுவதால் நெருப்புக்கு பரதா என்னும் பெயர் வந்தது. இதனாலேயே நெருப்புக்கு ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயரும் வந்தது.
7. பரதப் பழங்குடியினர்வடமேற்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கங்கைச் சமவெளியில் குடி அமர்ந்து குரு ராஜ்ஜியத்தை அமைத் தார்கள்.
8. மகாபாரதத்தில் வருகின்ற பரத என்னும் சொல்லாடல் சகுந்தலை துஷ்யந்தன் ஆகியோரின் மகனான பரதனைக் குறிக்கவில்லை. அது பரதப் பழங்குடியினரைக் குறிக்கவே பயன் படுத்தப்பட்டது.
9. சமண மதத்தின் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷபதேவரின் மகனான பரதச் சக்கரவர்த்தியின் பெயராலேயே இந்த நாடு பரதவர்ஷா என்று அழைக்கப்பட்டது என்பதை சமணத்தின் ஆதி புராணத்தின் வழியாகவும் அதே கருத்தை உறுதி செய்யும் வேதியத்தின் விஷ்ணு புராணம் சிறீமத் பாகவதத்தின் வழியாகவும் நாம் அறிந்தோம்
10. பரதவர்ஷத்தில் தென்னிந்தியப் பகுதிகள் அடங்கி இருக்கவில்லை. மநுவின் ஸ்ருதிகள் இந்தக் கூற்றை உறுதி செய்கின்றன. கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே பரதவர்ஷா நாட்டின் எல்லைப் பரப்பாக அமைந்திருந்தது.
11. மிகப் பழைமையான தொன்மவியல் ஆதாரமான ஹத்திகும்பா கல்வெட்டு கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா இருந்துள்ளதையும் கலிங்கமும் தென்னாடும் பரதவர்ஷத்தில் இணையாமல் தனித்து இருந்ததையும் காட்சிப்படுத்தியது.
12. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்களில் சில உறுப்பினர்கள் இந்தியா என்னும் சொல் அயற்சொல் என்று கருதி அதை நீக்க முற்பட்டதுடன் ஹிந்தி மொழியின் மேல் கொண்ட அபி மானத்தாலும் இந்து மதத்தின் பால் கொண்ட அபிமானத்தாலும் பாரத் என்ற சொல்லே நம் நாட்டின் பெயராக இருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
13. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ‘இந்தியா என்னும் பாரத்’ என்னும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா பாரத் ஆகிய இரண்டு பெயர்களையும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்தார்.
14. மானுடவியலின் அடிப்படையிலும் வரலாற்றின் அடிப்படையிலும் மேற்கொள் ளப்பட்ட இந்த ஆய்வு என்பது இந்த இரண்டு சொற்களின் உண்மைத் தன்மையை உணர வைக்கின்றது.