திருவனந்தபுரம், டிச. 22- சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடு ஆகியவை திருடப்பட்டிருந்தன.இதுதொடர்பாக எஸ்அய்டி விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மேனாள் தலைவர் பத்ம குமார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணையின்போது சபரிமலை அய்யப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி நேற்று முன்தினம் (20.12.2025) கைது செய்யப்பட்டார். துவார பாலகர் சிலைகளில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை கருநாடகாவின் பெல்லாரியை சேர்ந்த ஜூவல்லரி உரிமையாளர் கோவர்தன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருவரையும் அதிகாரிகள் திருவனந்தபுரத்துக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்அய்டி) சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம்.
இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்அய்ஆர்) உட்பட அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத் துறைக்கு எஸ்அய்டி அதிகாரிகள் வழங்க வேண்டும்” என்று உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டது.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு, சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் பல்வேறு உண்மைகளை மறைத்து வருவதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத் துறை களமிறங்கி யிருப்பதால் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னாட்டு கடத்தல் காரர்களுக்கு தொடர்பு மிகவும் உயர்ரக தங்கத்தகடுகள் பன்னாட்டுச் சந்தையில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படும் இதனால் பழைய தங்கத்தை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் அதனை எடுத்து அங்கு தரம் குறைந்த தங்கத்தை வைத்துவிட்டு ஒரிஜினல் தங்கத்தை துபாய் வழியாக பன்னாட்டு கொள்ளை கும்பலுக்கு விற்பனை செய்துள்ளனர்.
- விடுதலை நாளேடு,22.12.25
பன்னாட்டு கடத்தல் காரர்களுக்கு தொடர்புள்ளதால் இந்த கொள்ளை விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக