பக்கங்கள்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?-8



இந்து மதத்தில், கடவுள்கள் பல உள்ளன. ஏனைய மதங்களைப் போல ஒரு கடவுள் கிடையாது. “ஏகம் ஸத்; பகுதாவதந்தி’’ என்று சொல்லிக் கொண்டாலும் நிறைய கடவுள்கள். ஓரிடத்தில் 33 கோடி கடவுள்கள் உள்ளன என்றுள்ளது. முப்பத்து முக்கோடி தேவர்கள், 48 ஆயிரம் ரிஷிகள், அஷ்டதிக்குப் பாலகர்கள் என்றெல்லாம் இந்து மதத்தில் வணங்குவதற்கு உரிய தகுதி படைத்தோர் எனக் கூறப்படும் சொல்லடை உண்டு. “இந்து மதத்தின் புதிர்கள்’’ என்ற தலைப்பின் கீழ் எழுதும் டாக்டர் அம்பேத்கர், “ஒரு காலத்தில் பிரம்மாவே, சிவனையும் விஷ்ணுவையும் விட மிக உயர்ந்த கடவுளாக இருந்ததாகத் தோன்றுகிறது. பிரம்மாதான் பிரபஞ்சத்தைப் படைப்பவர் _ முதல் பிரஜாபதி ஆவார். அவர்தான் சிவனை உண்டாக்கினார் (விஷ்ணு புராணத்தில் உள்ளவாறு) அவர் விஷ்ணுவுக்கு எஜமானர். அவர் கட்டளைப்படியே விஷ்ணு உலகத்தைக் காக்கிறார்... ஒரு கட்டத்தில் பிரம்மாவுக்கு சிவனிடமும் விஷ்ணுவிடமும் மோதல் ஏற்பட்டு மிக உயர்ந்த கடவுள் என்ற நிலையை இழந்துவிட்டார்... வராகம், மச்சம் ஆகிய இரண்டு அவதாரங்களை பிரம்மா எடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால், விஷ்ணுவை வணங்கியவர்கள், ஏற்க மறுத்து விஷ்ணுவின் அவதாரம் என்றாக்கிவிட்டனர். பின்னர் விஷ்ணு 22 அவதாரங்கள் எடுத்தது என்று எழுதி விட்டனர். (தொகுப்பு நூல்: பாகம் 8, பக்கம் 96, 97) பக்கம் 98இல் சிவனின் அடியையும் முடியையும் தேடி விஷ்ணுவும் பிரம்மாவும் அலைந்த கதையில் பிரம்மா பொய் சொன்னதால் பிரம்மா தன் ஸ்தானத்தை இழந்ததுடன் வழிபாட்டு உரிமையையும் இழந்தார் என்ற நிலையைக் குறிப்பிடுகிறார். பக்கம் 99இல் விஷ்ணுவின் அவதாரங்களாகிய ராமனும் பரசுராமனும் மோதிக் கொண்ட கதையைக் குறிப்பிட்டுவிட்டு, விஷ்ணுவே பிரம்மாவைப் படைத்தவராகி விட்டதாக எழுதுகிறார். சிவனையும் சிவலிங்கத்தையும் வழிபடும் சாதாரண சிவபக்தனாகி விட்டதாகவும் எழுதுகிறார். சிவனின் வேலைக்காரனாகி சிவனின் தேர்ப்பாகனாகப் பணியாற்றினார் என்ற செய்தியையும் எழுதியுள்ளார். இறுதியாகத் தன் மகளான சரசுவதியை அடைய ஆசைப்பட்டு மனைவியாக்கிக் கொண்ட கதையைக் குறிப்பிட்டு பிரம்மா கேவலப்பட்டு முற்றிலுமாகப் பழிக்கப்பட்டவரானார் என்று எழுதியுள்ளார். (மேற்படி நூல்: பக்கம் 99_101) திரிமூர்த்தியில் பிரம்மா பெயரளவில் மட்டுமே வெறும் மூர்த்தியாக இருக்கிறார் என்று எள்ளி நகையாடுகிற டாக்டர் அம்பேத்கரா இந்துத்துவர்?

விஷ்ணுவுக்கு ஆயிரம் பெயர்களாம் (சஹஸ்ரநாமம்). அதுபோலவே சிவனுக்கு ஆயிரம் பெயர்களைக் கொடுத்தனராம். சிவன் தலையில் கங்கைநதி உற்பத்தியாகிப் பாய்வதாக ஒரு கதை. இதற்குப் போட்டியாக வைகுண்டத்தில் விஷ்ணுவின் பாதங்களில் பட்டு கங்கை சிவனின் தலையில் தேங்கியதாக மற்றொரு கதை. அதைப் போலவே, பால்கடலைத் தேவர்களும், அசரர்களும் சேர்ந்து கடைந்தபோது, பூமிக்குக் கீழ் ஆமை(அவதாரம் எடுத்து)யாகப் படுத்துப் பூமியைக் காத்தார் விஷ்ணு என்று ஒரு கதை. இதன்பின் இணைப்பாக சிவனின் ஆள்கள் எழுதிய கதைதான் கடலில் ஆலகால விஷம் வந்தது, அதை சிவன் உண்டார் என்றும் கூறப்படுவது! மற்றொரு கதை! தவம் இருந்து வரம் கேட்ட அக்ரூரன் என்பான் மூவுலகங்களில் உள்ள எந்தப் பிராணிக்கும் தன் உயிரைக் கொல்லும் சக்தி கூடாது என்றானாம். விஷ்ணு தந்துவிட்டதாம். பயந்துபோன தேவர்கள் ஓடிஒளிந்து பதுங்கி வாழ நேர்ந்ததால் வரம் கொடுத்த விஷ்ணு நொந்து கொதித்துப் போயிருந்த நேரத்தில் சகல வல்லமையுள்ள மகாதேவர் அவனது கண்களில் உற்பத்தியானதாம். இந்தக் கதைக்கு மாற்றாக, பஸ்மாசுரனுக்கு சிவன் வரம் கொடுத்த கதையில் சிவன் தலையில் கை வைத்துச் சோதனை செய்து பார்க்க பஸ்மாசுரன் முயன்ற கதையையும் விஷ்ணு பெண் (மோகினி) அவதாரம் எடுத்து சிவனைக் காப்பாற்றிய கதையையும் குறிப்பிடுகிறார் அம்பேத்கர்.

கிருஷ்ணன் எனும் கடவுள்தான் பூரியில் ஜகன்னாத் என்ற பெயரில் கோயில் கட்டிக் கும்பிடப்படுகிறது. சர்வம் ஜகன்னாதம் என்பார்கள். என்றால், எந்த வேற்றுமையும் அற்ற இடமாம். இங்குதான் அண்ணனான கிருஷ்ணன் தன் தங்கை சுபத்ராவுடன் உடல் உறவு கொண்ட ஊர்! இப்பேர்பட்ட பாதகம் செய்த பகவான் கிருஷ்ணன் நான்கு பேர்களில் புராணங்களில் உண்டு. ஒரு கிருஷ்ணன் சத்தியவதியின் மகன். திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் தந்தை. இரண்டாமவன் சுபத்ராவின் சகோதரன். அர்ஜுனின் நண்பன்/மைத்துனன். மூன்றாம் கிருஷ்ணன் என்பவன் வசுதேவ_தேவகி தம்பதியின் மகன். மதுராவில் வாழ்ந்தவன். நான்காம் கிருஷ்ணன் யசோதா _ நந்தகோபன் தம்பதியரால் வளர்க்கப்பட்டவன். சிசுபாலனைக் கொலை செய்தவன். இப்படிப்பட்டவன்தான் பகவத் கீதையின்படி மிகப் பெரிய கடவுள். அல்லா ஹூ அக்பர்! எல்லாக் கடவுளையும் விடப் பெரியவர்! என்று கிண்டல் தொனியில் அம்பேத்கர் எழுதுகிறார். அப்பேர்ப்பட்ட கிருஷ்ணன், மகாபாரதத்தின்-படி, சிவனை வழிபட்டு வரங்களைக் கேட்பவராக கீழிறக்கம் செய்யப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறார். இவர் எப்படி இந்துத்வா அம்பேத்கர் ஆவார்?

ஆரியர்களின் வாழ்க்கையில் ஆண்_பெண் உறவுகள் தளர்த்தியானதாகவே இருந்தன. சகோதரன் சகோதரியுடனும், தாய் மகனுடனும், தகப்பன் மகளுடனும் தாத்தா பேத்தியுடனும் உடலுறவு கொண்ட முறை வழக்கமாக இருந்துள்ளது. பழங்கால ஆரியர்கள் குடிகாரர்களாகவும் இருந்தார்கள். பெண்களும் குடித்தார்கள். திருமணத்திற்கு முதல் நாள் இரவில் நான்கு/எட்டு பெண்களுக்கு மதுவை ஊற்றிக் குடிக்கச் செய்து நடனமாடிக் களிக்க வேண்டும் என்று கவுஷிதாகி கிருஹ்ய சூத்திரம் 1.11.1942 கூறுகிறதை ஆதாரங்காட்டுகிறார். இராமாயணம் உத்தர காண்டம் ராமனும் சீதையும் மது அருந்துவதைக் கூறுவதைக் குறிப்பிட்டும் கிருஷ்ணனும் அர்ஜூனனும் மது குடிப்பதை பாரதக் கதை உத்யோக பர்வம் கூறுவதையும் ஆதாரங் காட்டுகிறார்.

ரிஷி, ராஜா, குரு ஆகியோர் வரும்போது மதுபர்க்கம் படைத்து விருந்தளிக்க வேண்டுமாம். இந்த மதுபர்க்கத்தில் மாமிசம் இல்லாமல் இருக்கக் கூடாது என்றே கூறுகிறது. மானவ கிருஹ்ய சூத்திரம் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். ரிக் வேதசூத்ரம் க்ஷிமிமிமி 101-5இன்படி மதுபர்க்கத்தில் இறைச்சி இருந்தே ஆக வேண்டுமாம்!

கள் உண்ணாமை என்று 10 பாடல்களை எழுதி வைத்து இருப்பவர்கள் திராவிடர்கள். சூதாடுவதைப் பற்றியும் 10 பாடல்கள். ஒழுக்கம், பிறன்மனை நோக்காமை போன்றவை பற்றியும் கண்டிப்பான பாடல்கள். புலால் உண்ணாதவர்-களை எல்லா உயிர்களும் தொழும் என்று பத்துப் பாடல்கள். எனவே, ஆரிய நாகரிகத்திற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள் திராவிடர்கள் (நாகர்கள்) என்பதை எண்பித்தவர் அம்பேத்கர். அவர் எப்படி இந்துத்வர்?

ஹிம்சை முறையில் பலி கேட்கும் கடவுள் காளி. சிவனின் மனைவி. சிவனுக்கு இம்முறையிலான பலி கிடையாது. கணவன் அஹிம்சா முறையில் வழிபடப்படுகிறான். மனைவி ஹிம்சை முறையில் வழிபடப் படுகிறாள். இதுவும் ஹிந்து மதத்தின் புதிர். இப்படிப்பட்ட வழிபாட்டு முறையைப் பார்ப்பனர்கள் ஏன் ஏற்படுத்தினார்கள் என்ற கேள்வியை எழுப்பிய அம்பேத்கர் எப்படி இந்துத்வர்?

இந்திரன், வருணன், அக்னி போன்றவை வேதகாலக் கடவுள்கள். அவை மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டு வேறு மூன்று கடவுள்கள் புகுத்தப்பட்டன. அவற்றிலும் ஒன்று பிரம்மா கழித்துக் கட்டப்பட்டு விஷ்ணுவும் சிவனும் மட்டுமே முகாமை! என்றாலும் திரிமூர்த்தி (ஜிக்ஷீவீஸீவீtஹ்) எனக் கூறிக் கொள்கிறார்கள். இப்படி சிவனும் விஷ்ணுவும் மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட்டு வணங்கப்படுவதற்கும் காரணியர்கள் பார்ப்பனர்களே! இவர்கள் ஏன் தங்கள் பக்தியை, விசுவாசத்தை மாற்றிக் கொண்டார்கள்? ஆன்மீக ரீதியான மாற்றமா? வர்த்தக ரீதியானதா? என்று கேட்டவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

ஆராய்ச்சியின்படி சிவன் வேதத்தில் இல்லை ஆரியரல்லாதாரின கடவுளே! எப்படி சிவனைப் பார்ப்பனர்கள் ஏற்றார்கள்? என்று கேட்டவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

ஆண்குறி வழிபாட்டில் ஏகபோகமாக இருந்த விஷ்ணு அகற்றப்பட்டது ஏன்? லிங்க வழிபாட்டில் சிவன் புகுத்தப்பட்டது எப்படி? இதுவும் பார்ப்பனர் விளையாட்டுகளில் ஒன்றுதானே! என்ற அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

இந்து மதத்தின் பொய்ம்மைகள், குழப்பங்கள், பழிவாங்கல்கள் போன்ற அனைத்துக்கும் பார்ப்பனர்களையே குற்றம் சாற்றுகிறார் டாக்டர் அம்பேத்கர். இதனால் தோலுரிக்கப்-பட்டுப் பங்கப்பட்ட பார்ப்பனர்கள் _ குறிப்பாக மராத்தி சித்பவன் பார்ப்பனர்கள் _ அம்பேத்கரைக் கொன்றுவிடத் திட்டம் போட்டார்கள் 1948இல் இந்திய சட்ட அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த “இந்து கோட் பில்’’ தொடர்பாக ஏற்பட்ட மத, ஜாதிவெறியின் காரணமாக 11.12.1949இல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் கண்டனக் கூட்டம் நடத்தினார்கள். அம்பேத்கர் உருவ பொம்மையை ஆர்எஸ்எஸ் ஆண்கள் கொளுத்தினர். புதுடில்லியில் பல பகுதிகளில் டாக்டர் அம்பேத்கரை எதிர்த்து 79 கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தினார்கள்.

இப்போது அம்பேத்கர் இந்துத்வவாதிகளுக்கு  இனிக்கிறார்? எப்படி? எவ்வளவோ இருக்கின்றன!

(கேள்விகள் தொடரும்...)

- சு.அறிவுக்கரசு
-உண்மை இதழ், 16-30.9. 17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக