• Viduthalai
ஜோதிபா பூலேயும் சாவித்திரி பூலேயும் 1848இல் இந்தியாவில் முதன்முதலாக பெண்களுக்கு பள்ளிக் கூடத்தை மகாராட்டிரா மாநிலத்தில் புதவார் பேத்தில் பேடேவாடா எனுமிடத்தில் ஆரம்பித்தார்கள். அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கும் கல்வி கொடுக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் போது புரட்சிகரமான மாணவர்களையும் சேர்த்தே உருவாக்கினார்கள்.
1852இல் வெட்டல்பேத் எனும் ஊரில் மூன்றாவது பெண்களுக்கான பள்ளியை துவக்கினார்கள். முக்தா சால்வே 14 வயது சிறுமி. அந்தப் பள்ளியில் படித்தவர், புரட்சிகரமான எண்ணங்களையும் பெற்றார். இதுவே நவீன இந்தியாவில் பெண் விடுதலையின் ஆரம்பம் எனலாம்.
இப்போது முக்தா சால்வே எழுதிய ஒரு கட்டுரை கிடைத்திருக்கிறது. அப்பெண்ணின் பிற படைப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு கட்டுரையே அப்பெண்ணின் புரட்சிகரமான சிந்தனையை அறிந்து கொள்ளப் போதுமானது.
இந்தக் கட்டுரை இந்தியாவின் ஜாதி-ஆணாதிக்கப் பிரச்சினையை முதன் முதலாக வெளிக்காட்டுகிறது. பெண் விடுதலையோடும், ஜாதியோடும் மிகவும் அக்கறை கொள்கிறது.
அந்த வகையில் அவரின் இக்கட்டுரை நவீன இந்திய வரலாற்றில் முதல் தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணிய படைப்பிலக்கியம் என மதிக்கப் படுகிறது.
ஜோதிராவ் பூலேயும் சாவித்திரிபூலேயும் கல்விப் பணியோடு மட்டும் தங்களை சுருக்கிக் கொள்ளவில்லை. மனித நேய சமூகம் படைக்கவும் போராடினார்கள். ஜாதியம் மற்றும் பாலினப் பாகுபாட்டுக்கு எதிராக போராடிய அதே வேளையில் விவசாயிகள், கலைஞர்கள், சூத்திரர்கள், தாழ்ந்த ஜாதிகள் தீண்டத்தகாதார்கள் (ஆதி சூத்திரர்கள்) இவர்களின் அறிவொளிக்காகவும் அதிகார மய்யப்படுத்துதலுக்கும் பாடுபட்டார்கள். இந்த செயல்தன்மைகள் ஜோதிராவ் பூலேயின் பேச்சுகள், எழுத்துகள் , நடவடிக்கைகள் ஆகியவை மூலம் வெளிப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.
மாங்கு இனத்தின் மாணவர்களுக்குக் கற்பித்துக் கொடுத்ததன் பலனாக, மாங்கு மகர் பற்றிய கட்டுரையை ஒரு 14 வயது மாணவி எழுதியது குறிப்படத்தகுந்தது ஆகும்.
இக்கட்டுரையின் முதல்பாகம் 15-2-1855ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் மார்ச் 1955இல் "ஞானோதயம்” எனும் சஞ்சிகையிலும் வெளிப்பட்டன. பின்னர் வெளிவந்த இதழ்களில் அந்த கட்டுரையின் மீது விமர்சனமாக இரண்டு கடிதங்கள் வெளியிடப்பட்டன. கட்டுரையின் சில பகுதிகள் என்.வி.ஜோஷியின் “புனே நகரத்தின் விளக்கம்” எனும் புத்தகத்தில் வெளியிடப்பட்டது.;; "ஞானோதயம்” இதழின் ஆசிரியர் குழு அதனை அச்சிடும்போது, அக்கட்டுரையில் ஜோதிராவ் பூலேயின் பள்ளியில் மூன்று ஆண்டுகள் மட்டும் பயின்ற 14 வயது மாணவியான முக்தா சால்வே பற்றி குறிப்பிட்டிருந்தது.
அவரின் பெற்றோரின் துயரம் நிறைந்த வாழ்க்கையைக் கூர்மையாகக் கவனித்த பிறகு எந்தவிதமான அச்சமுமின்றி அக்கட்டுரையை எழுதினார். முக்தா சால்வேயின் தந்தையார் தீண்டத்தகாதோரின் துயரங்களை விரிவாகக் கூறினார். "ஞானோதயம்” இதழ் அவரின் கட்டுரையை வெளியிட்டது.
ஜோதிபா பூலேயின் எழுத்துகளுக்கு முன் வெளியிடப்பட்டதுதான் இக்கட்டுரையின் முக்கியத்துவம் ஆகும். ஜோதிபா பூலேயின் உற்சாகமிக்க தூண்டுதலால்தான், அப்பெண்ணின் முதிர்ச்சியை அக்கட்டுரை வெளிப்படுத்தியது. ஜோதிராவ் பூலேயின் பணி சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வை நோக்கி இருந்ததால் அப்பெண்ணுக்கு கிடைத்த பயிற்சியால் புரட்சிகரமான தாக்கத்தை அக்கட்டுரை வெளிக்காட்டுகிறது. மூன்று ஆண்டுகள் மட்டும் படித்த அப்பெண்ணின் கல்வி வளர்ச்சி அதிசயிக்கத்தக்கது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வியும் அறிவும் மறுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான ஆண்டு களாக பிராமணிய சமூகத்தால் சுரண்டப்பட்டும் இருந்த சமூகத்திலிருந்து அப்பெண் வந்தார். ஆனால் அவர் தனித்துவமான சிந்தனை ஆற்றலோடு மிக வேகமாகத் தனது கற்கும் திறனை வளர்த்துக் கொள்கிறார். அவள் சிறு வயதிலேயே கிடைத்த குறைந்த கல்வியில் சமூகத்தைப் பற்றியும், சுய மனசாட்சி அறிவையும் பெறுகிறார். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக இது அழைக்கப்படுகிறது. ஆனால் பிராமணிய கலாச்சாரத்தின் செல்வாக்கால் ஆய்வாளர்கள் முக்தா சால்வேயின் பங்களிப்பை புறந்தள்ளி விட்டனர்.
கிராம வாழ்க்கை முறையின் கொடுந்துயரமான வாழ்க்கையை மேற்கொண்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும், அச்சமூகத்தின் அடித்தட்டு பெண்கள் புறக்கணிக்கப்பட்டதையும் அப்பெண் உற்று நோக்கினார்.
முக்தா சால்வே மகாராட்டிராவில் அடித்தட்டு தீண்டத்தகாதோர் ஜாதியைச் சேர்ந்தவராக இருந்ததால் ஊருக்கு வெளியே வாழ வேண்டி இருந்தது. நாங்கள் இந்து பிராமணிய மதத்திற்கு வெளியே ஒதுக்கி வைக்கபட்டவர்கள் என்று குறிப்பிடுகிறார்.
இந்து பிராமணிய மதமானது தீண்டத்தகா தோரின் மதம் அல்ல என்பதையும் நிறுவ விரும் பினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்ணின் துயரமான வாழ்க்கை, உயர்ஜாதிப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து வித்தியாசமானது மட்டு மல்ல, அச்சுறுத்துவதாகவும் இருந்தது. ஜாதி ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் சுரண்டலுக்கு ஆட்படுகிறார்கள் என்பதை அவரின் கட்டுரை காட்டுகிறது. துயரங் களும் சுரண்டலும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரி இல்லை என்பதையும் சொல்ல விரும்புகிறார்.
முக்தா சால்வேயின் பங்களிப்பு நவீன இந்தியாவில் முதல் தாழ்த்தப்பட்ட சமூக பெண் களின் குரலாக விளங்குகிறது. பிரதிபலிப்புத் தன்மை வாய்ந்ததாகவும், சிந்தனையைத் தூண்டிவிடுவதுமான எழுத்தை தாராபாய் ஷிண்டே, பண்டிட் ரமாபாய் ஆகியோரின் பங்களிப்புக்கு முன்பாகவே முக்தா சால்வே தனது ஆற்றல் நிறைந்த அறிவு பூர்வமான எழுத்தை தொடங்கி விட்டார். தாழ்த்தப்பட்ட சமூக இலக்கியம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணியம் ஆகியவை சார்ந்த எழுச்சிமிக்க சிந்தனை ஒரு பள்ளி மாணவியான முக்தா சால்வே போன்றோரால் தூண்டிவிடப் பட்டிருக்கிறது.
ஆனால் பிற்காலத்தில் முக்தா சால்வேக்கு என்ன நிகழ்ந்தது? என்ற கேள்வி மனதில் எழுகிறது. அவர் எங்கு சென்றார்? மேலும் அவர் இலக்கியப் படைப்புகளை வெளியிட்டாரா? அப்படிப் படைத்திருந்தால் எங்கே அவரின் இலக்கியம்? அவர் படைப்புகளை வெளியிடாமல் போயிருந்தால் அதற்கான காரணங்கள் எவை? இன்று அவரின் ஒரேயொரு கட்டுரைக்காக மட்டும் நினைக்கப்படுகிறார். ஜாதிய ஆணாதிக்கத்தின் சோகமான நிலை இதுதான்.
ஆங்கிலத்தில்: பேரா.சச்சின் கருட்,
வரலாற்றுத் துறை, கே.பி.ப்பி.கல்லூரி இஸ்லாம்பூர் மகாராட்டிரா
தமிழில்: பேரா.க கணேசன் குமரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக