பக்கங்கள்

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

பொதுவுடைமை இயக்கத்தினர் பாரதியை ஏற்கலாமா? - எதிர்வினை (96)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (96)

மார்ச் 16-31,2022

பொதுவுடைமை இயக்கத்தினர் பாரதியை ஏற்கலாமா?

நேயன்

இக்கடிதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது, பாரதி புதுவையில் இருந்தபோதே சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுதி, சென்னை அரசு டி.அய்.ஜி.யைப் புதுவைக்கு அனுப்பி பாரதியை விசாரித்து, அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இல்லை என்று தெரிந்து, அரசுக்குத் தெரிவித்த பிறகுதான் பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் பாரதி வந்ததாகக் கூறுகிறார் என்பதே. அரசியலை விட்டு அறவே ஒதுங்கி சட்டத்துக்குட்பட்டு அமைதியான பிரிட்டிஷ் குடிமகனாக வாழ ஒப்புக்கொள்கிறார். ஆங்கில ஆளுநர் நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறார்.

கடலூர் சிறைக்கு ரங்கசாமி அய்யங்கார் வந்து பாரதியைக் கண்டார். பின் ரங்கசாமியின் முன் முயற்சியால் அன்னிபெசன்ட், சி.பி.இராமசாமி அய்யர், நீதிபதி மணி அய்யர் ஆகியோர் பாரதியின் விடுதலை குறித்து ஆளுநரைச் சந்தித்து வேண்டினர். மாநில அரசு மீண்டும் டி.அய்.ஜி.யை அனுப்பியது. கீழ்க்கண்ட நிபந்தனைகளின் பேரில் பாரதி விடுதலை செய்யப்பட்டார். அவை,

நெல்லை மாவட்டத்தில் பாரதி விரும்பும் இரண்டு ஊர்களில் எதிலாவது ஒன்றில் மட்டுமே வாழ்க்கை நடத்த வேண்டும்.

பாரதியின் படைப்புகள், பேச்சுகள் ஆகியவற்றை முன்கூட்டியே குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பி அவற்றைத் தணிக்கை செய்த பின்னரே வெளியிட வேண்டும். அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் பாரதி நீங்கி விட வேண்டும். இந்த மூன்று நிபந்தனை-களையும் எழுத்துப் பூர்வமாகப் பாரதி ஒப்புக் கொண்ட பின்னர் மாவட்ட நீதிபதி 14.12.1918இல் பாரதியை விடுதலை செய்தார்.

பாரதியை ஆதரிப்போர் பார்வைக் கோளாறு

பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள், “ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி’’ என்ற பாரதி வரியால் பெரியார் ஈர்க்கப்பட்டு, ரஷ்யா சென்றார்’’ என்று தமது “சுயமரியாதை இயக்கம்’’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இது உண்மைக்கு மாறான பதிவு. பாரதியின் பாடலை “குடிஅரசு’’ மேலட்டையில் போட்ட பெரியார் 8.11.1925 முதல் நீக்கிவிட்டதோடு, அதன்பின் பாரதி பாடல்களைப் போடவில்லை. உண்மை இப்படியிருக்க 1931இல் பெரியார் ரஷ்யா சென்றது பாரதி பாடல் உந்துதலால் என்பது பிழை. பாரதி புரட்சியை ஆதரித்தவர் அல்ல என்பதையும் மேலே விளக்கிவிட்டேன். பெரியார் 1929 முதலே தமது சொந்த பொதுவுடைமைக் கருத்துகளை வெளியிடத் தொடங்கி, ரஷ்யா செல்கிறார்.

அடுத்து ஜீவா, “ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் விஞ்ஞானபூர்வமான நாஸ்திகனே’’ என்கிறார்.  இதைத்தான் மார்க்சியத்தின் அடிப்படைச் சித்தாந்தமும் கூறுகிறது. ஆனால், பாரதி போன்றவர்களுக்கு விதிவிலக்கு கொடுக்கிறார் ஜீவா.

‘ஜனசக்தி’ பொன்விழா மலரில் “நான் ஒரு நாஸ்திகன்’’ என்ற தலைப்பில் ஜீவா கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் பாரதியைப் பற்றி எழுதும் போது,

“நான் ஒரு நாஸ்திகனான கம்யூனிஸ்ட். அப்படியானால் ஆஸ்திக உணர்ச்சியுள்ள கம்யூனிஸ்டு களும் இருக்கிறார்களா? இருக்கக் கூடாது என்றில்லை. ஒரு மதத்திலும் நம்பிக்கையில்லாத நாஸ்திகர்களுக்கு மட்டும்தான் தொழிலாளர்களின் அரசியல் கட்சியாகிய கம்யூனிஸ்ட் கட்சியில் இடமுண்டு என்று கட்சியின் திட்டமோ, கட்சியின் ஸ்தாபன விதிகளோ திட்டவட்ட மாகக் கூறவில்லை. நேர்மாறாக, தொழிலாளர் கட்சி, மத நம்பிக்கைகளைப் பலாத்காரமாக எதிர்ப்பது தவறு என்று மார்க்சிய அறிஞர்கள் கூறியுள்ளனர்’’ என ஜீவா கூறுகிறார். இது மார்க்சியத்திற்கு எதிரான கண்ணோட்டமாகும்.

அது மட்டுமல்ல, ஜாதிக்கு எதிராய் சில வரிகள் தொடக்க காலத்தில் எழுதிய பாரதியை ஜாதி ஒழிப்பு வீரராய்க் காட்டும் ஜீவா, பெரியாரை ஜாதி ஒழிப்புப் போராளி என்று ஏற்க மறுக்கிறார். மறுப்பதோடு நிறுத்தி-யிருந்தாலும் குற்றமில்லை. அதையும் தாண்டி பெரியாரை கேவலமாக, நக்கலாகவும் விமர்சித்து கருத்துகள் கூறியுள்ளனார்.

“நான் ஜாதியை ஒழித்து விடுவேனென்று ஈ.வெ.ரா. கத்தியைக் கையில் எடுக்கிறார். நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதியப் பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக் கட்டிவிடு-கிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி சில்லரை பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்து விட முடியுமென்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்” என்று கூறியுள்ளார்.

இப்படி ஜீவாவிடம் விருப்பு _ வெறுப்புப் பார்வைகள் பல உண்டு. ஒரு சிறந்த பேச்சாளரான பொதுவுடைமைவாதியான ஜீவாவிடம் காணப்பட்ட இந்த நேர்மையற்ற நிலைகள்தான் பின்னாளில் வந்த பொது-வுடைமைவாதிகளுக்கும் தவறான வழியைக் காட்டிற்று எனலாம்.

ஜாதி ஒழிப்புக்கு பெரியார் ஆற்றிய பணிகள் கொஞ்சமா? ஊர் ஊராய் பரப்புரைகள். ஏராளமான மாநாடுகள், தியாகத்தின் உச்சத்திற்கே சென்று போராட்டங்கள் நடத்தியவர் பெரியார். அதற்காக ஏராளமான இன்னல்களை ஏற்றவர்கள் பெரியாரும் அவருடைய தொண்டர்களும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் புரையோடிக் கிடக்கும் ஜாதி உணர்வை சில பத்தாண்டுகளில் ஒழிக்க முடியவில்லை என்று எண்ணுபவன்தான் பைத்தியக்காரன். 10 ஆண்டுகளில் ஜாதியை ஒழிப்பேன் என்று பெரியார் எப்போதும் சொன்னதில்லை. ஆழ வேரோடி நிற்கும் ஜாதியை தகர்க்க முயன்று அதில் அவர் காலத்திலே பெருமளவு வெற்றியும் பெற்றார். பெரியாரின் போராட்டங்களும், பரப்புரைகளும் ஜாதிப்பற்றை, வெறியை பெருமளவிற்குத் தகர்த்துள்ளன. ஜாதி மறுப்பு மணங்கள் அதிக அளவில் செய்யப்படுவதே அதற்குச் சான்று. தமிழ்நாட்டில் ஜாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் போடுவது பெரும்பாலும் ஒழிந்துவிட்டது. தாழ்த்தப்-பட்டவர்கள் மற்றவர்களோடு சரிசமமாக வாழும் நிலை வந்துள்ளது. தமிழ்நாட்டை மற்ற வடமாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை எளிதில் விளங்கும்.

அப்படியிருக்க பெரியாரின் ஜாதி ஒழிப்பு முயற்சிகளைக் கொச்சைப்படுத்தி, ஜாதிக்கு எதிராய் நாலு வரி பாட்டு எழுதிவிட்டு, வர்ணாஸ்ரமத்தை வரிந்துகட்டிக்கொண்டு ஆதரித்த பாரதியை ஜாதி ஒழிப்பு வீரர் என்று கூறுவது எப்படிச் சரியாகும்?

பெரியார் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் ஜீவாவுக்கு இருந்த வெறுப்பின் வெளிப்-பாட்டினைத்தான் இது காட்டுகிறதே யன்றி, உண்மையான மதிப்பீட்டை அல்ல.

ஜாலியன்வாலாபாக் படுகொலையை உண்மையில் வன்மையாகக் கண்டித்தவர் வ.உ.சி. படுகொலையை ஆதரித்தவர் அன்னிபெசன்ட் அம்மையார். அன்னிபெசன்டை ஆதரித்தவர் பாரதி.

அது மட்டுமல்ல, இப்படுகொலை நடந்த-போது பாரதி புதுவையிலிருந்து கொண்டு ஆங்கில அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு விடுதலை பெற்று கடயத்தில் வாழ்ந்தார். இப்படி மன்னிப்புக் கடிதம் எழுதுவதில் சாவர்க்கருக்கு முன்னோடியாய் இருந்த பாரதியைப் போராட்ட வீரராகக் காட்டி, வ.உ.சி. வீர, தீர, தியாக வரலாற்றை மறைப்பதுதான் நடுநிலையா?

பொதுவுடைமைக் கொள்கையில் சிறிதும் உடன்பாடில்லாத வர்ணாஸ்ரமம், ஜாதி, மதவெறி, சனாதனம், பெண்ணடிமை, உடன்கட்டை, சமஸ்கிருதத் திணிப்பு, ஆதிக்கக் கட்டமைப்பு, தனியுடைமை போன்றவற்றை ஆதரித்த, ஓர் இந்துத்துவாவாதியை புரட்சி-யாளராய், முற்போக்காளராய் பொதுவுடைமை-வாதிகள் காட்டுவது வரலாற்றுப் பிழையுமாகும்!

மேலும், இப்படிப்பட்ட ஒரு சனாதன-வாதியை உயர்த்திக் காட்டுவதால் பொது-வுடைமைக் கட்சிக்கு என்ன பயன்?

“லெனினைப் பற்றி கன்னாபின்னா என்று பாரதி விமர்சித்திருந்தாலும், அவரை ஒரு கம்யூனிஸ்ட்டாய் பார்ப்பது, வர்க்க விடுதலை, ஜாதி மறுப்பு, பெண் விடுதலை என எல்லாவற்றுக்கும் தீர்வு கண்டுபிடித்து அதற்கான மருந்துகளை டப்பாக்களில் போட்டு வைத்திருக்கும் டாக்டர் பாரதியாக அவரைப் பார்ப்பது என்பதெல்லாம் அறிவுடைமை-யாகாது’’ என்று எழுத்தாளர் பாமரன் கூறியுள்ளதை பொதுவுடைமைவாதிகள் பகுத்தாய்ந்து சிந்தித்து, தங்கள் பாதையைப் பழுது நீக்கிச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும் என்பதே நமது தோழமை எதிர்பார்ப்பு.

(தொடரும்…)

மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட மாபெரும் கோழை பாரதி - எதிர்வினை (95)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (95)

மார்ச் 1-15 2022

மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட மாபெரும் கோழை பாரதி

நேயன்

இந்து தர்மத்தை ஆங்கிலேயர்கள் அழிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டி ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றான் வாஞ்சிநாதன். இக்கொலையில் பாரதிக்கும் தொடர்பு உண்டு என்று ஆங்கிலேயர்கள் அய்யப்படவே, தனக்கும் இக்கொலைக்கும் தொடர்பு இல்லையென்று 8.4.1914இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மெக்டொனால்டுக்கு பாரதி கடிதம் எழுதுகிறார்.

ஆஷ் வழக்கு விசாரணையில் வெளியான மற்றொரு விஷயம், கொலைக்குப் பல மாதங்களுக்கு முன்பு அவர் புதுச்சேரி வந்தார் என்பதாகும். ஆனால், அவரைப் புதுவையில் பார்த்ததாகச் சாட்சியம் அளித்த தபால் ஆபீஸ் குமாஸ்தாகூட வாஞ்சி அய்யர் என் வீட்டுக்கு வந்தார் என்றோ என்னைச் சந்தித்து என்னுடன் காணப்பட்டார் என்றோ சொல்லத் துணியவில்லை. இக்கடிதத்தில் மேலும் பாரதி எழுதியிருப்பது என்னவென்றால், 1912இலேயே தன் நிலையை விளக்கி, சென்னை கவர்னராக இருந்த லார்டு கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னை கவர்னராக லார்டு பென்ட்லாண்டு வந்ததும் பாரதி தன் நிலையை விளக்கி அவருக்கும் ஒரு நீண்ட கடிதம் அனுப்பியுள்ள-தாகக் குறிப்பிட்டுள்ளார்.

“நான் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி மூன்று வருஷங்களுக்குப் பிறகு தொலை தூரத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் ஒரு சிற்றூரில் யாரோ ஒருவர், கொடுங்-கோன்மைக்குப் பெயர் வாங்கிவிட்ட ஒரு கலெக்டரைச் சுட்டுக் கொன்றாரென்பதால், போலீஸ் கீழ் மட்ட ஆட்களது யோசனையின் பேரில் பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை அந்தக் கொலைச் சதிக்கு உடந்தையாக்கி என் மீது வாரண்டு பிறப்பித்தது… ஆனால் மேன்மை தங்கிய கவர்னரின் விருப்பம்கூட, அவருடைய பிற்போக்கான சகாக்களால் தடுக்கப்-படுகிறதென நான் கருத வேண்டியிருக்கிறது ஆகையால், பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவராகிய உங்களுக்கு நான் இந்த வேண்டுகோளை அனுப்புகிறேன். நீங்கள் எனக்கு லார்டு பென்ட்லாண்டு நீதி வழங்க அவருக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்.

பாரதியின் இக்கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்ன? பாரதி ஆங்கிலேயரின் தயவின் மூலம் வழக்கு எதுவும் இல்லாமல் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார். இப்போது அவரிடமிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு என்பதே போய் விட்டது.

மேலே கண்ட கடிதத்தை எழுதிய அதே 1914 ஆம் ஆண்டில் தான், பாரதி அச்சமில்லை என்ற பாடலை இயற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும் ……

…… உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பாரதி ஆங்கில ஆட்சியின் தயவை நாடி 1912, 1913, 1914 என்று தொடர்ந்து அவர்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த போதுதான் இப்பாடலை அவர் இயற்றியுள்ளார். பெரும்பாலான தமிழறிஞர்களும், பாரதி ஆய்வாளர்களும், இப்பாடலை மேற்கோள் காட்டிப் பாரதியின் வீரத்தைப் புகழ்கின்றனர். ஆனால், உண்மையில் பாரதி வீரமுடன் வாழ்ந்தாரா என்றால் இல்லை என்பதுதான் இதன் மூலம் நமக்கு விடையாகக் கிடைக்கிறது.

1916 மே 25இல் ‘சுதேசமித்திரனில்’ சுய ஆட்சியைப் பற்றி ஒரு யோசனை என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கருத்து வருமாறு:

பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்-தோறும் லட்சக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த க்ஷணமே பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

பாரதிக்கு ஆங்கிலேயரைத் துரத்த வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மாறிவிட்டது. 1916இல் ஆங்கிலேயர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே அவர் கருத்து கொண்டிருக்கிறார்.

1916 டிசம்பர் 26ஆம் தேதி ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் அவர் எழுதுகிறார்: எல்லா ஜாதி-யாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு _- செலவு உள்பட எல்லா விவகாரங்களுக்கும், மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் சேர்ந்து விண்ணப்பம் செய்கிறோம். பாரதிக்குப் புதுவை வாழ்க்கை கசந்தது. முதல் உலகப் போரின் முடிவினால் பிரிட்டிஷ் அரசின் அணுகு முறையில் மாற்றம் இருக்கும் எனக் கருதி பாரதி தமிழகம் வர சென்னை அரசுக்கு எழுதிக் கேட்டுக் கொண்டு, 20.11.1918 அதிகாலை தன் மனைவி, மைத்துனர் ஆகியோருடன் புதுவை எல்லையைக் கடந்து விடுகிறார். சென்னை மாகாணப் போலீஸ் திருப்பாதிரிப்புலியூரில் பாரதியை மட்டும் கைது செய்து, கடலூர் துணை நீதிபதி முன் கொணர்ந்தனர். 1914ஆம் ஆண்டு இந்திய நுழைவுத் தடைச் சட்டத்தின் கீழ் பாரதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கறிஞர்கள் சடகோபாச்சாரியும், நடராஜ அய்யரும் பாரதியை ஜாமீனில் விடுவிக்க முயன்று தோற்றனர். பாரதிக்குக் கடலூர் சப்_-ஜெயில் வசதியற்றது என்று பாரதி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கேப்பர் குவாரியிலுள்ள கடலூர் ஜில்லா மத்திய சிறைக்கு மாற்றினார்கள். பின்னர் பாரதி கடலூர் சிறையில் இருந்தபடியே சென்னை மாநில ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:

Om Sakthi
District Jail, Cuddalore,
28 November – 1918.

His Excellency Lord Pentland,
Governor,
Fort St. George, Madras.

The Humble petition of
C.Subramania Barathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy. I.G (C.I.D) was send by your Excellency’s Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.
I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain.
                   Your Excellency’s
               most obedient Servant
          C.Subramania Bharathi.
(G.O. No.1331 dt. 18.12.1918 Public)

பாரதியும் பொதுவுடைமையும் - எதிர்வினை (94) :

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (94) : பாரதியும் பொதுவுடைமையும்

பிப்ரவரி 16-28,2022

நேயன்

“கடயத்தில் மொத்தம் 30 பெரிய மிராசுதார்களும் பல சில்லரை நிலஸ்வான்களும் உள்ளனர். அவர்களாகவே வந்து ஏழைகளிடம் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தம் என்னவென்றால், ‘அதாவது எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி ‘தொழில் நிருவாக சங்கம்’ என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த்-தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில் (மதப்பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியன சம்பந்தமாகிய நானா வகைப்பட்ட கைத்தொழில்கள். அவை இந்தக் கிராமத்திற்கு மொத்தம் இவ்வளவு நடைபெற வேண்டுமென்றும், அத்தொழில்-களின் இன்னின்ன தொழிலிற்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்றும் மேற்படி தொழில் நிருவாகச் சங்கத்தார் தீர்மானம் செய்வார்கள். அந்தப்படி கிராமத்திலுள்ள நாம் அத்தனை-பேரும் தொழில் செய்ய வேண்டும். அந்தத் தொழில்களுக்குத் தக்கபடியாக ஆண் பெண் குழந்தை முதலியோர் இளைஞர் அத்தனை பேரிலும் ஒருவர் தவறாமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பிள்ளை பிள்ளை தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்தப்படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகளின் மேல் ஆணையிட்டு ப்ரதிக்ஞை செய்து கொடுக்கி-றோம். இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஏற்பட்ட விஷயத்தை எங்களில் முக்கியஸ்தர் கையெழுத்திட்டு செப்புப் பட்டயம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம். இங்ஙனம் ப்ரதிக்ஞை செய்து, இதில் கண்ட கொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் கிராமத்தில் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும், பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். ஒரு கிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து பின்னர் அதனை உலகத்தாரெல்லாருங் கைக்கொண்டு நன்மையடைவார்கள்.’’

பாரதியின் மேற்கண்ட கருத்துகளைக் கூர்ந்து நோக்கினால் கீழ்க்கண்ட கருத்துகளை (கொள்கைகளை) அவர் கொண்டிருந்ததும், வலியுறுத்தியதும் புலப்படும்.

1.            இரஷ்ய புரட்சியாளர் லெனின் வழி சிறந்த வழியல்ல.

2.            இந்திய முதலாளிகள் அய்ரோப்பிய முதலாளிகளைப் போல மோசமானவர்-கள் இல்லை.

3.            இந்திய முதலாளிகளின் உடைமைகளைப் பிடுங்க வேண்டும் என்பது நியாயம் ஆகாது. இதை நம் நாட்டு ஏழைகளே விரும்ப மாட்டார்கள்.

4.            ஏழைகளின் பசியைத் தீர்ப்பதற்குத்தான் நாம் வழிகாண வேண்டும். முதலாளி-களின் செல்வக் குவிப்பைப் பற்றி கவலைப்படக் கூடாது.

5.            ஒரு கிராமத்தில் உள்ள ஏழைகளும் பணக்காரர்களும் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்படி முதலாளிகள் யார் யார் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்.

6.            அவ்வாறு ஒதுக்கப்பட்ட வேலையை தொழிலாளர்களின் பிள்ளைகளும் தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டும்.

7.            இந்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று சத்தியப் பத்திரம் எழுதி வைக்க வேண்டும்.

8.            இந்த ஏற்பாட்டின் மூலம் எல்லா ஏழைகளுக்கும் வயிறார சோறு கிடைத்துவிடும்.

9.            இந்தத் திட்டத்தை எல்லா இடங்-களுக்கும் பரப்ப வேண்டும்.

இப்படிப்பட்ட கருத்துகளைக் கூறிய பாரதிதான் புரட்சியாளராம், பொதுவுடைமைப் போராளியாம். அவரைப் பொதுவுடைமை வாதிகள் போற்றிப் பாராட்டுகிறார்கள். இதைவிட பிற்போக்கான, முதலாளித்துவ ஆதரவு நிலை, தொழிலாளர் எதிர்நிலை வேறு இருக்க முடியுமா?

இது அப்பட்டமான ஆவண அடிமை முறை (Bonded Labour) அல்லவா? ஒரு தொழிலாளி-யின் தலைமுறையையே ஒரு குறிப்பிட்ட வேலைக்கு அடிமைப்படுத்துவது அல்லவா? இது வருணாஸ்ரம தர்மத்தின் மறு வடிவம் அல்லவா?

ஏழை ஏழையாய் இருக்க வேண்டும்; முதலாளி முதலாளியாய் இருக்க வேண்டும்; தொழிலாளியின் பிள்ளை படித்து உயர் பதவிகளுக்கு வரக் கூடாது; அவன் அப்பன் தொழிலையே தலைமுறை தலைமுறையாய் செய்ய வேண்டும்.

உழைப்பதற்குப் பதிலாய் வயிறு நிறைய சோறு கிடைக்கும். சோத்துக்கு உத்தரவாதம் தந்து தொழிலாளிகளை முதலாளிகளுக்கு அடிமையாக்கும் இந்தப் பாரதிதான் புரட்சிக்காரராம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இன்றைக்கும் பாரதியை புரட்சியாளர் என்றும், பொதுவுடைமைவாதி என்றும் பொது வுடைமைக் கட்சியினர் பாராட்டிப் பேசி வருவதுதான்.

வேதத்தையே படிக்காமல் வேதம் உயர்ந்தது என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் போற்றி வருவதைப் போன்ற ஓர் அறியாமையே _ பாரதியை புரட்சியாளர் என்பதும். பாரதியை முழுமையாகப் படித்துவிட்டு, ஏன், இதுவரை நான் எழுதியவற்றை முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, பொதுவுடைமைவாதிகள் தங்கள் உள்ளத்தைத் தொட்டுச் சொல்லத் தயாரா? இப்படிப்பட்ட ஒரு பிற்போக்கு வாதியை முற்போக்காளராய் உயர்த்திப் பிடிப்பது பொதுவுடைமை சித்தாந்தத்திற்கே செய்திடும் துரோகம் ஆகும்! எந்த ஒன்றையும் சரியாக அறியாமல், ஆய்வு செய்யாமல் பாராட்டுவது, போற்றுவது பொதுவுடைமை இயக்கத்தவருக்கு அழகு அல்ல.

ஒரு சிந்தனையாளர் வாழ்வில் பரிணாம வளர்ச்சி இருக்க வேண்டும். காந்தியார் வாழ்வில்கூட, தான் தொடக்க காலத்தில் கொண்டிருந்த  பல கருத்துகளை, பின்னாளில் மாற்றிக்கொண்டார்.

சமூகநீதி, இடஒதுக்கீட்டை பின்னாளில் ஆதரித்தார். ஆரிய பார்ப்பனர்கள் வேதந்தானே ஓத வேண்டும். ஸ்டெதாஸ்கோப் ஏன் எடுக்க வேண்டும் என்று கேட்டார். இராமராஜ்ஜியம் பேசிய காந்தி பின்னாளில் மதம் அரசியலில் கலக்கக் கூடாது என்றார். இது பாராட்டப்பட வேண்டிய கொள்கை வளர்ச்சி.

இராமலிங்க வள்ளல், 5 திருமுறைகள் முடித்த பின் ஆறாம் திருமுறை எழுதிய காலத்தில் புரட்சிச் சிந்தனைகளை அதிகம் பேசினார். இது அவரது கொள்கை, சிந்தனையில் பரிணாம வளர்ச்சி. இப்படி உலகில் பலரைச் சொல்லலாம்.

ஆனால், பாரதி தொடக்க காலத்தில் புரட்சியாளராய் கருத்துகளைக் கூறிவிட்டு, இறுதிக் காலத்தில் சனாதனவாதியாய், பிற்போக்குவாதியாய், ஆதிக்கவாதியாய் மாறிப் போனார். இதுதான் கண்டிக்கப்பட வேண்டிய மாற்றம்.

ஆக, பாரதி வர்ணாஸ்ரமவாதி; சனாதனவாதி, பெண்ணடிமை, உடன்கட்டை ஏறுதலை ஆதரித்தவர்; முதலாளித்துவத்தை ஆதரித்து, கொத்தடிமை முறையை வலியுறுத்தியவர்; பிற மத வெறுப்பும், இந்து மத வெறியும் கொண்டவர்; சமஸ்கிருதப் பற்றும், ஆரிய மேலாண்மையில் நாட்டமும் கொண்டவர்.

உண்மை இப்படி இருக்க ஒரு சில வரிகளைப் பிடித்துக்கொண்டு உண்மைக்கு மாறாய் ஏற்றிப் போற்றுவது _ ஒன்று, அறியாமை அல்லது மோசடிச் செயலேயாகும்!

(தொடரும்…)

பாரதியும் பொதுவுடைமையும் - எதிர்வினை (93)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (93)

பிப்ரவரி 1-15,2022

பாரதியும் பொதுவுடைமையும்

நேயன்

 

 

பாரதி பொதுவுடைமைவாதி என்று, பொதுவுடைமைவாதிகளே தூக்கிப் பிடிப்பது-தான் வியப்புக்குரியது; நகைப்புக்குரியது.

நூறு மனிதர்களில் ஒரே ஒருவன்தான் பொதுநலத்தைப் பற்றிச் சிந்திக்கிறான். ஆயிரத்தில் ஒருவன்தான் தன்னைப்போலவே பிறருக்கும் உணர்வுண்டு என்று எண்ணுகிறான். பத்தாயிரத்தில் ஒருவன்தான் எல்லோரும் சமம்,  எல்லோரும் பொது என்கிற உணர்வு கொள்கிறான். அப்படி பத்தாயிரத்தில் ஒருவன்தான் பொதுவுடைமைவாதியாக உருவாகிறான். அப்படிப்பட்ட பொதுவுடை-மைவாதிகளே சிலவற்றில் தவறான புரிதல் கொண்டுள்ளதை வரலாறு நெடுகக் காண முடியும்.

குறிப்பாக இந்தியாவில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசியவர் பெரியார். ஆனால், பெரியார் ஒரு வறட்டுச் சித்தாந்தி என்றும். அவருக்குச் சரியான பொருளியல் பார்வை இல்லை என்றும். வருணபேதம் வர்க்கபேதம் ஒழிந்தால் சரியாகிவிடும் என்றும் பல்லாண்டு காலம் நம்பியும் பேசியும் வந்தனர். ஆனால், தந்தை பெரியார் சமதர்மமும், பொதுவுடை-மையுமே இந்த மண்ணுக்கு ஏற்றது என்பதை இப்போது புரிந்து கொண்டுவிட்டனர்.

அதேபோல், பாரதி பாடிய சில புரட்சி வரிகளைப் பிடித்துக் கொண்டு, அவரை புரட்சியாளர் போல், பொதுவுடைமைவாதி போல், சமதர்மவாதி போல் காட்டிப் பாராட்டி வருகின்றனர். உண்மையான புரட்சிவாதியான பாரதிதாசன் அவர்களைப் புறக்கணித்து வருகின்றனர்.

இவர்கள் பிடித்துக்கொண்டு நிற்கும் சில புரட்சி வரிகள் கூட சில காரணங்களுக்காக எழுதப்பட்டவை என்பதை இதற்கு முன் விளக்கிவிட்டேன். தமிழை உயர்த்திப் பாடியது, மீசை வைத்தது எல்லாம் தேவைக்கும், சூழலுக்கும், நிர்ப்பந்தத்திற்குமாகவே செய்யப்-பட்டவை என்பதை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு தெளிவுபடுத்தியுள்ளேன்.

மேலும், அவர் ஒவ்வொன்றிலும் தொடக்க காலத்தில் புரட்சியாளராகவும், முற்போக்கு-வாதியாகவும் இருப்பவரைப் போல் எழுதி-விட்டு, இறுதிக் காலத்தில் அதற்கு முற்றிலும் எதிராக, பிற்போக்கான நிலையில், ஆரிய இனவுணர்வுடனும், சமஸ்கிருத வெறியுடனும் பிற மத வெறுப்புடனும், வருணாஸ்ரமப் பற்றுடனும், பெண்ணடிமைச் சிந்தனையுடனும் எழுதினார் என்பதை ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் இதுவரை விளக்கி எழுதிவிட்டேன்.

உண்மை இப்படியிருக்க, அரைகுறையாக சில வரிகளை எடுத்துக்கொண்டு, ஆகா, ஓகோ என்ற பாரதியை யுகப்புரட்சிக் கவியாகக் காட்டுகிறார்கள். பொதுவுடைமைவாதிகள் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதியின் எழுத்துகளை முழுமையாகப் படித்துவிட்டு, சீர்தூக்கிப் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, பாரதி பொது-வுடைமைவாதியா? புரட்சியில் ஆர்வங் கொண்டவரா? என்பதை விளக்க விரும்புகிறேன்.

புரட்சிக்கு அஞ்சியவர் பாரதி

30.6.1906இல் ‘ருஷ்யாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சி’ என்று தலைப்பிட்டு,

“ருஷ்யாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சிச் சின்னங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜார் சக்கரவர்த்தியின் அநீதிச் சிங்காதனம் சிதைந்து கொடுங்கோன்மை துண்டு துண்டாகக் கழிவு பெற்று வரும் ருஷ்யாவில் அமைதி நிலைக்க இடமில்லை. சில இடங்களில் நிலச் சேனையுடன் சேனைக்காரர்களும், ராணுவமும் கலகம் தொடங்கி, தொழிலாளிகள் கூட்டமும் சேர்ந்து விடுகின்றனர்’’ என்று எழுதிய பாரதி, 7.7.1906ஆம் நாள்,

“சென்ற வாரம் ருஷ்யாவைப் பற்றி எழுதிய குறிப்பிலே அத்தேசமானது ஒரு பெரிய ராஜாங்கப் புரட்சியேற்படும் (நிலையிலுள்ளது) என்று தெரிவித்தோம். அதற்கப்பால் வந்து கொண்டிருக்கும் தந்திகள் நமது அச்சத்தை ஊர்ஜிதப்படுத்தி விட்டன. கைகலப்புகள் தொடங்கிவிட்டனவென்றால் ராஜாங்கம் எத்தனை தூரம் அமைதி கெட்ட நிலையிலிருக்க வேண்டுமென்பதை எளிதாய் ஊகித்து அறிந்து கொள்ளலாம்’’ என்று எழுதுகிறார்.

கொடுங்கோன்மைக்கு எதிராய் ரஷ்யாவில் நடத்தப்பட்ட புரட்சியை ‘கலகம்’ என்று எழுதியதோடு, அதைக் கண்டு அச்சப்படுவதாக எழுதியுள்ளார். உண்மையான ஒரு புரட்சியாளன் புரட்சியைக் கண்டு அச்சப்-படுவானா? அச்சப்படுகின்றவன் புரட்சி-யாளனாவானா?

‘அநீதி அழிந்து கொண்டிருப்பதற்கான அடையாளம் தெரிகிறது’ என்று கூறும் பாரதி அதற்கும் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? ஏன் அச்சப்படுகிறார்? அவர் புரட்சிவழியில், பல உயிர்களை இழந்து சமத்துவம் அடைவதை அறவே விரும்பவில்லை. பாரதியின் கொள்கையும், தீர்வும் வேறு. அதை கீழே படிக்கும்போது அறியலாம்.

1906இல் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் நடத்திய புரட்சியைப் பற்றி எழுதும்போது,

“இப்பொழுது மறுபடியும் பெரும் கலகம் தொடங்கி விட்டது. ருஷ்ய சக்ரவர்த்தியின் சிங்காதனம் இதுவரை எந்தக் காலத்திலும் ஆடாதவாறு அத்தனை பலமாக இருக்க, இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. பிரதம மந்திரியின் வீட்டை, வீட்டின் விருந்தின்போது வெடிகுண்டு எறியப்பட்டதும், சைன்யத் தலைவர்கள் கொலையுண்டதும், ராஜ  விரோதிகள் பகிரங்கமாக விளம்பரங்கள் பிரசுரிப்பதும், எங்கே பார்த்தாலும் தொழில்கள் நிறுத்தப்படுவதும், துருப்புகளிலே ராஜாங்கத்-தாருக்கு விரோதமாகக் கலகங்கள் எழுப்புவதும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்வதும் ஆகிய கொடூர விஷயங்களைப் பற்றித் தந்திகள் வந்த வண்ணமாக-வேயிருக்கின்றன’’ என்கிறார்.

அதேபோல், லெனின் செய்த புரட்சியையும் பாரதி கண்டிக்கிறார்.

“கொலையாலும் கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்’’ என்று கூறிவிட்டு, இதற்கடுத்த வரியிலேயே பாரதி கூறுகிறார்:

“இதற்கு நாம் என்ன செய்வோம்! கொலையாளிகளை அழிக்க, கொலையைத்-தானே கைக்கொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்கிறார். இது முற்றிலும் தவறான கொள்கை.

கொலை கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்லதாகாது. பாவத்தைப் புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும்… கொலையையும், கொள்ளையையும், அன்பினாலும், ஈகையாலும்தான் மாற்ற முடியும். இதுதான் கடைசி வரை கைகூடிவரக்கூடிய மருந்து. மற்றது போலி மருந்து.’’

“லெனின் வழி சரியான வழி இல்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோமாதலால் இந்தியாவின் ஸாத்தியா ஸாத்தியங்களைக் கருதியேதாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும், முதலாளிகளும் அய்ரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்-களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டு-மென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்ப மாட்டார்கள். எனவே, கொள்கைகளுடன் கொலைகளும், சண்டைகளும், பலாத்காரங்-களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயலவேண்டும்’’ என்கிறார்.

ஆக, புரட்சியின் மூலம் சமதர்மத்தை உருவாக்கக் கூடாது. மாறாக, பிரபுக்களிடம் பிச்சை பெற்று ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற தர்மகர்த்தா முறையை ஆதரிக்கிறார்.

அதற்கு கடயத்தில் நடந்த நிகழ்வை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.

(தொடரும்…)

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

பெண்ணுரிமையும் பாரதியும்! - எதிர்வினை (92)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (92)

ஜனவரி 16-31,2022

பெண்ணுரிமையும் பாரதியும்!

“மண வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும். இன்று ஒரு மனைவி, நாளை வேறு மனைவி என்றால், குழந்தைகளின் நிலைமை என்ன ஆகும்? குழந்தைகளை எப்படி நாம் சம்ரக்ஷணை பண்ண முடியும்? ஆதலால் குழந்தைகளுடைய சம்ரக்ஷணையை நாடி ஏகபத்னிவிரதம் சரியான அனுஷ்டானம் என்று முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்டது” என்கிறார் பாரதி.

அதாவது குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒரு பெண் கடைசி வரை ஒருவனோடே வாழ்ந்தாக வேண்டும் என்கிறார்.

பிள்ளைகளுக்காக வேண்டி ஒத்து வராத ஒருவனோடு வாழ்ந்தாக வேண்டும் என்றால், பெண் விடுதலை எப்படி வரும்? பெண்ணுரிமை எப்படி பாதுகாக்கப்படும்?

பிள்ளைகள், கணவன்_மனைவி இருவருக்கும் உரியவர்கள். கட்டாயம் பிரிய நேரிடும்போது, பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொண்டு பிரிய வேண்டும் என்பதுதானே சரியாக இருக்கும்?

மாறாக, பிள்ளைகளுக்காக வாழ முடியாத கணவனோடு வாழ்ந்தே ஆக வேண்டும் என்பது, அந்தப் பெண்ணை வாழ்நாள் முழுக்க துன்பத்தில், இன்னலில், சிக்கலில், உளைச்சலில் தள்ளிவிடுமே! அப்படிப்பட்ட அக்குடும்பச் சூழலில் பிள்ளைகள் வளர்வதும் கேடல்லவா?

ஆனால், என்ன இருந்தாலும், எப்படி இன்னல், கேடு வந்தாலும் அந்த ஆணுடனே அவள் வாழ வேண்டும் என்கிறார் பாரதி.

கணவன்_மனைவி பிரிவை, மண முறிவை, தான் எழுதிய கதைகள் மூலமும் எதிர்க்கிறார் பாரதி.

வறுமையில் வாடும் ஏழைப் பெற்றோர், தங்கள் இளம் வயது மகளை ஒரு வயதான பிராமணனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். முதியவருடன் வாழப் பிடிக்காத அப்பெண், வேறு ஓர் ஆணைத் துணையாகத் தேடிப் போய்விடுகிறாள். இது இந்து கலாச்சாரத்திற்குக் கேவலம் என்று எண்ணிய பாரதி, அப்பெண் கிறித்துவ மதத்திற்கு மாறி விடுவதாகக் கதையைக் கொண்டு போகிறார்.

ஆக, கதையில்கூட, சனாதன தர்மம், இந்து கலாச்சாரம் கெடக் கூடாது, கெட்டுவிட்டதாகக் காட்டக் கூடாது; பெண்ணுரிமை, பெண் விடுதலை வந்துவிடக் கூடாது; அப்படி இந்து கலாச்சாரத்தில் நடப்பதாகக் காட்டிவிடக் கூடாது என்று உறுதியாய் இருந்தார் பாரதி.

தன் இறுதிக் காலத்தில் பாரதி எழுதிய இன்னொரு கதையில், ஓர் இளம் விதவைப் பெண், மறுமணம் செய்துகொள்ள முடிவு செய்து, விஸ்வநாத சர்மா என்பவரை மறுமணம் செய்து கொள்கிறார். ஒன்றரை வருடத்தில் அவருக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. அவன் குடும்ப வாழ்க்கைக்குத் தகுதியில்லா தவனாகிறான். ஆனாலும், அந்தப் பெண் வாழ்நாள் முழுக்க அவனுக்குப் பணிவிடை செய்தே காலம் கழிக்கிறாள். இது தெய்வீகக் காதல் என்கிறார்.

ஆக, ஒரு பெண் தன் வாழ்வைத் தொலைத்து ஒரு பைத்தியக்காரக் கணவனுக்கு பணிவிடை செய்தே வாழ்ந்துவிட வேண்டும் என்பதுதான் பெண்ணுரிமையா?

மனநலம் பாதிக்கப்பட்டவரை மற்றவர்கள்-தான் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த இளம் பெண் வேறு ஒரு துணையைத் தேடி, தேர்ந்து அவனுடன் வாழ வேண்டியதுதானே அப்பெண்ணின் உணர்வுக்கும், உரிமைக்கும் உகந்ததாக இருக்க முடியும்?

அப்படியில்லாமல், அவள் தன் உணர்வு-களை, விருப்பங்களை அடக்கி, ஒடுக்கி, வாழ்நாள் முழுக்க ஒரு மனநலம் பாதிக்கப்-பட்டவனோடே வேலைக்காரியாய் வாழ்ந்து-விட வேண்டும் என்பதுதான் முற்போக்குச் சிந்தனையா? பெண் விடுதலையா? மனைவிக்குப் பைத்தியம் பிடித்தால், எந்த இளம் வயது ஆணாவது மறுமணம் செய்யாது, அந்த மனநலம் பாதித்த பெண்ணுக்குப் பணிவிடை செய்து காலம் கழிப்பானா?

இவை மட்டுமல்ல, தன் குடும்பத்திலும் பாரதி பெண்ணுரிமைக்கு எதிராகவே நடந்துள்ளார்.

“ஒரு நாள் பாரதி 14 வயதான தமது மூத்த மகள் தங்கம்மாவைத் தம்முடன் கடயத்திலிருந்து அய்ந்து மைலில் உள்ள ஓர் அய்யனார் கோயிலுக்கு வருமாறு உத்தரவிட்டார். அக்கோவில் மலைச்சாரலில் காட்டு நடுவே உள்ளது… தங்கம்மா தயங்கி, வர மறுத்ததால் பாரதிக்குக் கோபம் வந்துவிட்டது. மகள் கன்னத்தில் விரல் பதிய அறைந்துவிட்டார். தடுக்க வந்த மைத்துனர் மீதும், இளைய மாமனார் மீதும் காறி உமிழ்ந்தார்’’ என்று பாரதியை ஆய்வு செய்த ரா.பத்மநாபன் எழுதியுள்ளார்.

பாரதியைக் கண்ணை மூடிக் கொண்டு முற்போக்குவாதியாகக் காட்டும் சிலர் 120 ஆண்டுகளுக்கு முன்பே பாரதி எவ்வளவு முற்போக்காகப் பேசியுள்ளார் என்று அவரது தொடக்க காலக் கருத்துகளை மட்டும் எடுத்துக் காட்டி இறுதிக் காலக் கருத்துகளை மறைத்து விடுகின்றனர்.

பாரதிக்கு முன்பே இந்த மண்ணில் பலர் பெண்ணுரிமை பற்றிப் பேசியுள்ளனர். செயலிலும் காட்டியுள்ளனர்.

1882இல் “இந்து சுயக்கியான சங்கம்’’ என்ற அமைப்பு, விதவைத் திருமணம், ஜாதி மறுப்பு மணம், பெண் கல்வி, பார்ப்பனப் புறக்கணிப்பு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளது.

“தத்துவ விசாரிணி, ‘தத்துவ விவேசினி’ ஆகிய ஏடுகளையும் இந்த அமைப்பு நடத்தியுள்ளது. தத்துவ விவேசினி 17.2.1881 இதழில், “பக்குவ காலத்தில் மணம் செய்யாமல் சிறு வயதிலேயே மணத்தை முடித்து யவ்வனப் பருவம் வருவதற்கு முன்னே பெண் காலம் சென்றால் பிள்ளைக்கு மறுவிவாகம் புரியலாமென்றும், பிள்ளை காலம் சென்றால் பெண் மறு விவாகம் புரியப்படாதென்றும் கருதி நமது தேசத்தில் சில வகுப்பார் மறுமணம் செய்யாது வருகின்றனர். இப்படிச் செய்யாதிருந்ததாலுண்டாகிய தீங்குகள் எண்ணிறந்தன…

யவ்வனப் பருவடைந்த பிறகுதான் பெண்களுக்கு விவாகம் செய்யலாமென்றும், கணவரையிழந்த சிறுமியர்களுக்குப் புனர்விவாகம் செய்யலாமென்றும், இடந்தராது போன காரணம் யாதோ! அறிவிற் சிறந்த மகான்களே! யோசியுங்கள்!’’ என்று எழுதியுள்ளது. பாரதிக்கு முன்பே, பு.முனுசாமி நாயகர், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர், அயோத்திதாச பண்டிதர் போன்றோர் முற்போக்குச் சிந்தனைகளைப் பரப்பி இந்து சனாதனத்தைச் சாடியுள்ளனர்.

தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர் வாழ்வில் கொள்கை பரிணாமம் பெற்றிருக்கும் இளம் பருவத்திலிருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை மெல்ல மெல்ல அகன்றிருக்கும். ஆண்டு செல்லச் செல்ல, அவர்கள் சிந்தனைத் தெளிவு பெற்று ஒரு கொள்கை முடிவு எடுத்த பின் அவர்களின் இறுதிக் காலம் வரை அதில் பிறழ்வோ, முரண்பாடோ வந்ததில்லை. மேலும் மேலும் அறிவு, சிந்தனை, இவற்றில் வளர்ச்சியும், முதிர்ச்சியும், செம்மையும் மேம்பாடும் காணப்படும்.

ஆனால், பாரதி தொடக்க காலத்தில் மிக முற்போக்காக முழங்கிவிட்டு பின்னாளில் அதற்கு முற்றிலும் முரணாக மூட, சனாதன, பிற்போக்குக் கருத்துகளை கூறத் தொடங்கினார்.

பாரதியை முற்போக்குவாதியாகக் காட்ட முயல்வோர், அவரது தொடக்க காலக் கருத்துகளைக் கூறிவிட்டு, பிற்காலக் கருத்துகளை மறைத்து விடுகின்றனர். சிலர் சில வரிகளை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு பாரதியைப் புகழ்கின்றனர். பாரதியார் எப்படிப்பட்டவர் என்பதை அறிய இறுதிக்கால சிந்தனைகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

(தொடரும்…)

பெண்ணுரிமையும் பாரதியும்! - எதிர்வினை (91)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (91)

ஜனவரி 1-15,2022

பெண்ணுரிமையும் பாரதியும்!

நேயன்

பாரதி முரண்பாடுகளின் மொத்தம் என்பதை முன்னமே சொல்லியுள்ளோம். அதிலும் பெண்ணுரிமை குறித்து பாரதி இரண்டு உச்சத்திற்கு சென்றுள்ளார். ஒன்று முற்போக்கின் உச்சம். மற்றது பிற்போக்கின் உச்சம்.

முரண்பாடு என்பது பரிணாமம் பெற்றிருப்பின் அது ஏற்கப்படக்கூடியது. ஆனால், பாரதி தொடக்க காலத்தில் அதி தீவிரமாகப் பெண்ணுரிமை பேசிவிட்டு, பின் தலைகீழாக மாறி எழுதுகிறார். அதுதான் சந்தர்ப்பவாதம்; அறிவு வயப்படாமல், உணர்ச்சி வசப்பட்டு கருத்துகளைக் கூறும் பக்குவமின்மை.

பெரியார், பாரதிதாசன் இவர்களின் தொடக்க காலத்திற்கும், அதன்பின் இறுதிக் காலம் வரை அவர்கள் பெற்றிருந்த புரட்சிப் பரிணாமத்திற்கும் ஓர் ஏற்றமான வளர்ச்சி நிலை இருந்தது.

ஆனால், பாரதி தொடக்கக் காலத்தில் முற்போக்கும் எழுச்சியும் கொண்டு எழுதிவிட்டு, பிற்காலத்தில் முரண்பாடுகளும், பிற்போக்குச் சிந்தனைகளையும் கொண்டு எழுதினார்.

“1904 முதல் 1906 வரை “சக்கரவர்த்தினி’’ என்ற பெண்களுக்கான இதழுக்கு பாரதி ஆசிரியராக இருந்தார். அக்காலத்தில் அவர்,

“பரிபூரண ஸமத்துவம் இல்லாத இடத்தில், நாம் ஆண் மக்களுடன் வாழ மாட்டோம்! என்று சொல்லுவதானால் நமக்கு நம்முடைய புருஷராலும், புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மை உடையன வாயினும் நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; தர்மத்திற்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். பிறரும் இறக்கத்தான் செய்கிறார்கள், ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள்! நாம் வெற்றி பெறுவோம்’’ எனப் பாரதி பெண் விடுதலைக்காகப் பாடுபட பெண்களை அழைக்கிறார்.

மேலும் பாரதி,  “நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மத முண்டானால் உன்னுடன் வாழ்வேன் இல்லாவிட்டால், இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன்; எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன்; நீ அடித்து வெளியே தள்ளினால் ரெஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவும் வேண்டும்.”

பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஆண்கள்தான் ஒழுங்காக இருக்க வேண்டும்.

“அடப் பரம மூடர்களே! ஆண்பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் பதிவிரதைகளாக எப்படி இருக்க முடியும்? பதிவிரதயத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகிறது.’’

“எண்ணிறந்த ஸ்திரீஹத்தி புரிந்து, இத்தேசத்துக்கெல்லாம் அழிக்க முடியாத பெரும் பழி கொடுத்த ஸதி தஹனமென்னும் அரக்கனை மிதித்துக் கொல்லும்படியாக முதலிலே துக்கப்பட்ட ராம் மோஹனரின் திருவடியை நாம் மறந்துவிட்டால் நமக்கு உய்வுண்டாமா? எனப் பெண்களிடம் கேட்கிறார் பாரதியார்.

அது மட்டுமல்ல, ஸதியில் எரிக்கத் தயார் நிலையில் சுடுகாட்டில் இருந்த ஒரு இராசபுத்திரப் பெண்ணை (அக்பர் ஆட்சியில் சதிக்குத் தடை இருந்தது எனப் பாரதி குறிப்பிட்டுள்ளார்), ஒரு முகமதிய வாலிபன் அந்த இராச புத்திரர்களைக் கொன்று அந்தப் பெண்ணை மீட்டுச் செல்கிறான்; அந்த முசுலிம் வாலிபனுக்கும், அந்த இராசபுத்திரப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்து, திருமணம் நடப்பதாகத் துளஸிபாயி என்னும் கதையின் வாயிலாகவும் உடன்கட்டை ஏறுதலை பாரதி எதிர்த்தார்.

1906 மேற்கண்டவாறு உடன்கட்டை ஏறுதலைக் கண்டித்து எழுதிய பாரதி, பின்னாளில் உடன்கட்டை ஏறுதலை ஆதரிப்பவராக மாறி விடுகிறார்.

1910 பிப்ரவரியில் ‘கர்மயோகி’ இதழில் பாரதி எழுதியதாவது:

“நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரீகளே மஹா ஸ்திரீகளாவார்கள்” என்று உடன்கட்டை ஏறுதலை ஆதரிப்பவராக மாறிவிடுகிறார்.

தொடக்கக் காலத்தில் பாரதியார் குழந்தை மணத்தை எதிர்த்தார். கலப்புத் திருமணங்களை ஆதரித்தார். பெண்கள் விவாகரத்து செய்து கொள்வதையும் ஆதரித்துள்ளார். ஏன், பெண்கள் திருமணத்தை விரும்பவில்லை என்றால் திருமணமே செய்து கொள்ளாமல் கூட விட்டு விடலாம் என்று கூறியவர், பிற்காலத்தில் தன் கருத்துகளைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொள்கிறார்.

கற்பு நிலை யென்று சொல்ல வந்தால் – இரு

கக்ஷிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் (கும்மி)

இவ்வாறு பெண் விடுதலைக் கும்மிப் பாடலை இயற்றிய பாரதிதான் பின்னாளில்,

“ஸாவித்திரி, ஸீதை, சகுந்தலை முதலிய பெண்களின் சரிதைகளைக் கேட்கும் போது, இத்தகையோர்களுக்கு இம்மாதிரி மனப்போக்கு எவ்விதம் ஏற்பட்டதென்று நினைத்து நினைத்து மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. இம்மாதிரியான கற்புடைமை. இத்தேசத்துப் பெண்களுக்கு என்றும் ஒரு சிறந்த புவனமாக விளங்கி நின்றமை நமது நாட்டிற்கே ஒரு பெருமை ஆகும்’’ என பழைய சனாதன பெண்ணடிமை முறைகளை ஆதரிக்கிறார்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் பெண்ணடிமை நிலையை கற்பின் அடையாளமாகப் பிழைபடக் காட்டுகிறார் பாரதி.

1909 ‘ஆகஸ்ட் இந்தியா’ இதழில், ஒழுக்கம் உள்ள பெண்களைப் பற்றிப் பாரதி கூறும் போது, “ஓ இந்தியனே! சீதை, சாவித்திரி, தமயந்தி இவர்களும், இன்னும் இவர்களைப் போன்ற ஸ்திரீ ரத்தினங்களும் உன் பெண்மணிகளாவர். ஒழுக்கத்திற்கு அவர்களை நமக்கு முன்மாதிரியாக வைத்துக் கொள்ளலாம்’’ என்கிறார்.

இன்னும் பிற்காலத்தில் 1920 மே மாதத்தில் தேசியக் கல்வி’ என்ற தலைப்பில் பாரதி எழுதும் போது பெண்கள் விவாகரத்து செய்து கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அதுகுறித்து அவர், “காதல்  விடுதலை வேண்டுமென்று கூறும் கக்ஷியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித் பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது. அக்னி சாக்ஷி வைத்து உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை என்று சத்யம் பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் சஹிக்கத்தக்க அல்லது சஹிக்கத் தகாத பந்தங்களாகவே முடிகின்றன வென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்ளுதலே நியாயமென்றும், இல்லாவிட்டால் மனுஷ்ய ஸ்வதந்திரமாகிய மூலாதாரக் கொள்கைக்கே ஹானி உண்டாகின்ற தென்றும், ஆதலால் விவாகம் சாச்வபந்தம் என்று வைத்தல் பிழையென்றும் மேற்படி கக்ஷியார் சொல்லுகிறார்கள்.

ஆனால் தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம், மேற்படி விடுதலைக் காதற் கொள்கையை அங்கீகாரம் செய்தல் சாத்தியமில்லை…. விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மண வாழ்க்கைக்கும் பொருந்தாது’’ என்கிறார் பாரதி.

(தொடரும்…)