பக்கங்கள்

செவ்வாய், 16 டிசம்பர், 2025

டிசம்பர் 6இல் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் சிந்தனை இந்து மதத்தில் புதிர்கள் என்ற நூலில் உள்ள சிந்தனை முத்துகள்

 

சிறப்புக் கட்டுரை

அண்ணல் அம்பேத்கர்
எழுதிய முன்னுரை

இந்தப் புத்தகம் பிராமணிய இறையியல் என்று அழைக்கப்படக் கூடிய கோட்பாடு எடுத்துரைக்கின்ற நம்பிக்கைகளைப் பற்றிய ஒரு விளக்கவுரையாகும். இது சாதாரண ஹிந்து மக்களுக்காக எழுதப்பட்டுள்ள நூல். பிராமணர்கள் அவர்களை எத்தகைய புதை சேற்றில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியச் செய்வதற்காகவும், பகுத்தறிவு ரீதியான சிந்தனைப் பாதையில் அவர்களை இட்டுச் செல்வதற்காகவும் இது எழுதப்பட்டுள்ளது. பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள்: ஹிந்து மதம் ஸநாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் ஹிந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதையும், ஹிந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது என்பதையும் இந்தப் புத்தகத்தில் எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன். இது தொடர்பாக இந்தப் புத்தகத்தில் ‘இம்சையிலிருந்து அகிம்சைக்கு’ என்ற புதிரையும், அகிம்சையிலிருந்து மீண்டும் இம்சைக்கு’ என்ற புதிரையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். ஹிந்து மதம் ஸநாதனமானது அல்ல என்பதைச் சாதாரண மக்கள் உணரச் செய்ய விரும்புகிறேன்,

இந்தப் புத்தகத்தின் இரண்டாவது நோக்கம், பிராமணர்களின் தந்திரங்களைச் சாதாரண ஹிந்து மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து, பிராமணர்கள் எப்படியெல்லாம் தங்களை ஏமாற்றியும் திசை திருப்பியும் வந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களைச் சுயமாகச் சிந்திக்கத் தூண்டுவதாகும்.

பிராமணர்கள் எவ்வாறு மாறியும் முரண்பட்டும், வந்திருக்கிறார்கள் என்பதும் எடுத்துக் காட்டப்படும். ஒரு காலத்தில் அவர்கள் வேதங்களில் கூறப்படும் கடவுளர்களை வணங்கி வந்தார்கள். பின்பு ஒரு காலத்தில் அந்தக் கடவுளர்களைக் கைவிட்டு வேதங்களில் இல்லாத கடவுளர்களை வழிபடத் தொடங்கினார்கள். எங்கே இந்திரன், எங்கே வருணன், எங்கே பிரம்மா, எங்கே மித்ரன், வேதங்களில் கூறப்படும் இந்தக் கடவுளர்கள் எல்லோரும் எங்கே என்று அவர்களை ஒருவர் கேட்கலாம், அவர்களெல்லாம் மறைந்து போனார்கள். அது ஏன்? இந்திரனையும் வருணனையும் பிரமாவையும் வழிபடுவது லாபம் தருவதாக இல்லாமல் போனதே இதற்குக் காரணம். பிராமணர்கள் வேதக் கடவுளர்களைக் கைவிட்டது மட்டுமின்றி, சில இடங்களில் முஸ்லிம் பீர்களை வணங்குவோராகக் கூட மாறியிருக்கிறார்கள். இது தொடர்பாக, மிக வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்ற ஒரு உதாரணத்தைக் குறிப்பிலாம். பம்பாய்க்கு அருகே கல்யாண்’ என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில் பாவா மலங்க்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டு தோறும் உர்ஸ் விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்தத் தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர். அவர் முஸ்லிம் உடை அணிந்து, தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணை தான், உண்மையில், பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக ஆக்கிவிட்டார்கள், யூதர்களை வெற்றிகொண்ட மன்னன் நெபுகாத்நெசார், அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டுத் தனது மதத்தை ஏற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தியபோது கூட யூதர்கள் தங்கள் கடவுளிடம் காட்டிய விசுவாசத்தைப் பிராமணர்களின் இந்த விசுவாசமின்மையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.’

“மன்னனாகிய நெபுகாத்நெசார் அறுபது முழ உயரமும் ஆறு முழ அகலமுமான பொற்சிலை யொன்றைச் செய்வித்து, அதைப் பாபிலோன் மாகாணத்தின் துரா என்ற சமவெளியில் அமைத்தான்.

பின்பு மன்னன் நெபுகாத்நெசாா சிற்றரசர்களையும், ஆளுநர்களையும், தலைவர்களையும், நீதிபதிகளையும், ஆலோசனைக் குழுவினர்களையும், கருவூல அதிகாரிகளையும், அமைதிக் காவலர்களையும், மாகாணங்களின் ஆட்சியாளர்களையும் தான் அமைத்த சிலையின் பிரதிட்டைக்கு வருமாறு கட்டளையிட்டான்.

அவ்வாறே சிற்றரசர்களும், ஆளுநர்களும், தலைவர்களும், நீதிபதிகளும், கருவூல அதிகாரிகளும், ஆலோசனைக் குழுவினர்களும், அமைதிக் காவலர்களும், மாகாணங்களின் ஆட்சியாளர்களும் நெபுகாத்நெசார் மன்னன் அமைத்த சிலையின் பிரதிட்டைக்கு வந்த சேர்ந்து, சிலையின் முன்னால் நின்றார்கள்.

அப்போது கட்டியக்காரன் உரத்த குரலில் கூறினான்; (இதன் பின் வருவது ‘பழைய ஏற்பாடு’ தானியேல் அதிகாரம் 3-இல் இருந்து தரப்படுகிறது) “இதனால் மக்கள் அனைவருக்கும், எல்லா இனத்தினருக்கும், மொழியினருக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால்… எக்காளம், குழல், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லாவகை இசைக்கருவிகளும் ஒலிப்பதைக் கேட்டவுடன் நீங்கள் எல்லோரும் கீழே விழுந்து மன்னன் நெபுகாத்நெசார் அமைத்த பொற்சிலையை வணங்க வேண்டும்.”

“யாராவது அப்படி விழுந்து வணங்கவில்லை யென்றால், அவன் அப்போதே எரிகிற தீச்சூளையின் நடுவில் போடப்படுவான்,” ஆகவே, எக்காளம், குழல், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக்கருவிகளும் ஒலிப்பதைக் கேட்டவுடனே எல்லா மக்களும், எல்லா இனத்தவரும், எல்லா மொழியினரும் கீழே விழுந்து மன்னன் நெபுகாத்நெசார் அமைத்த பொற்சிலையை வணங்கினார்கள்.

அப்போது கல்தேயரில் சிலர் அருகில் வந்து யூதர்கள் மேல் குற்றம் சாட்டினார்கள். மன்னன் நெபுகாத்நெசாரிடம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்; “மன்னரே, நீர் நீடு வாழ்க! மன்னரே, எக்காளம், குழல், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லாவகை இசைக்கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் ஒவ்வொரு மனிதனும் கீழே விழுந்து பொற்சிலையை வணங்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தீர்;

யாரேனும் கீழே விழுந்து வணங்கவில்லை யென்றால் அவன் எரிகிற தீச்சூளையில் போடப் படுவான் என்றும் நீர் கட்டளையிட்டீர்:

ஆனால், பாபிலோன் மாகாணத்தின் காரியங் களைக் கவனிப்பதற்காக நீர் நியமித்த ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதர்கள் உமது கட்டளையை அவமதித்து உமது தெய்வங்களிடம் பற்றில்லாதவர்களாகவும், நீர் அமைத்த பொற்சிலையை வணங்காமலும் இருக்கிறார்கள்.”

அப்போது நெபுகாத்நெசார் கடும் சினம் கொண்டு ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அவர்கள் மன்னன் முன் கொண்டு வரப்பட்டார்கள். நெபுகாத்நெசார் அவர்களை நோக்கிக் கூறினான்: “ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, நீங்கள் மூவரும் என் தெய்வங்களிடம் பற்றில்லாதவர்களாகவும், நான் அமைத்த பொற்சிலையை வணங்காமலும் இருப்பது உண்மைதானா?

இப்போதாவது, எக்காளம், குழல், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலான எல்லா வகை இசைக்கருவிகளும் ஒலிப்பதைக் கேட்கும்போது நீங்கள் கீழே விழுந்து, நான் அமைத்த பொற்சிலையை வணங்கத் தயாராயிருந்தால் நல்லது; வணங்கவில்லையென்றால் அப்போதே நீங்கள் எரிகிற தீச்சூளையில் போடப்படுவீர்கள். உங்களை என்னிடமிருந்து காப்பாற்றக் கூடிய கடவுள் யார் இருக்கிறார்?”

அதற்கு ஷாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ ஆகியோர், “நெபுகாத்நெசாரே, இந்த விஷயத்தில் உமக்குப் பதில் கூற எங்களுக்கு அக்கறையில்லை”

ஏனென்றால் அரசே, நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள் எரிகின்ற தீச்சூளையிலிருந்தும், உம்முடைய கைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றி மீட்டு விடுவார்.

அப்படி ஆகாமற்போனாலும் உம்முடைய தெய்வங்களுக்கு நாங்கள் பணிசெய்யமாட்டோம். நீர் அமைத்த பொற்சிலையை வணங்க மாட்டோம் என்பதை நீர் தெரிந்துகொள்ளும்” என்றார்கள்.

அப்போது நெபுகாத்நெசாருக்குக் கடும் சினம் மூண்டது; அவன் கடுகடுப்பான முகத்தோடு ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைப் பார்த்தான். தீச்சூளையைச் சாதாரணமாகச் சூடாக்குவதைவிட ஏழு மடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி அவன் கட்டளையிட்டான்.

பின்பு ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூவரையும் கைகால்களைக் கட்டி, அந்த எரிகிற தீச்சூளையில் போடும்படித் தன் படைவீரர்களுள் மிகுந்த உடல்வலிமை உள்ளவர்களுக்குக் கட்டளை யிட்டான்.

உடனே அந்த மனிதர்களை அவர்களுடைய மேலங்கிகளோடும் நிசார்களோடும், தொப்பிகளோடும், மற்ற ஆடைகளோடும் கட்டி எரிகின்ற தீச்சூளையின் நடுவில் போட்டார்கள்,

மன்னனின் ‘கட்டளையை உடனடியாக நிறை வேற்ற வேண்டியிருந்ததாலும், தீச்சூளை மிக அதிக வெப்பமாய் இருந்ததாலும், ஷாத்ராக், பேஷாக், ஆபேத்-நேகோ ஆகியோரைத் தூக்கிச் சென்றவர்களைத் தீயின் சுவாலை கொன்றுவிட்டது.

ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூவரும் கட்டப்பட்டவர்களாய் எரிகின்ற , தீச்சூளையின் நடுவில் விழுந்தார்கள்”.

இந்தியாவின் பிராமணர்கள் தங்கள் கடவுளர் களுக்கும் தங்கள் மத நம்பிக்கைக்கும் இத்தகைய உறுதியான விசுவாசத்தையும் பற்றுதலையும் காட்டமுடியுமா?

பக்கிள் (Buckle), நாகரிகத்தின் வரலாறு” என்னும் தமது நூலில் கூறுகிறார்:

“அய்யம் எழத் தொடங்காதவரை முன்னேற்றம் ஏற்படமுடியாது என்பது தெளிவு. நாகரிகத்தின் முன்னேற்றம் முற்றிலுமாக மனித அறிவு பெறுகின்ற வளங்களையும், அந்த வளங்கள் எந்த அளவுக்கு மக்களிடையே பரப்பப்படுகின்றன ‘என்பதையும் பொறுத்தது என்பதை நாம் ஏற்கெனவே தெளிவாகக் கண்டோம். ஆனால், தங்களது சொந்த அறிவைப் பற்றி முழுமையாகத் திருப்தியடைந்திருப்பவர்கள் அதை வளர்க்க ஒரு போதும் முயற்சி செய்யமாட்டார்கள். தங்களுடைய கருத்துகள் சரியானவை என்று முழுமையாக நம்புகின்றவர்கள் அவற்றின் அடிப் படையை ஆராய முயலமாட்டார்கள். தங்கள் தந்தையர் களிடமிருந்து பரம்பரையாகப் பெற்ற கருத்துகளுக்கு முரணான கருத்துகளை அவர்கள் வியப்புடனும் பல சமயங்களில் வெறுப்புடனும் பார்க்கிறார்கள்; அவர்கள் இத்தகைய மன நிலையில் இருக்கும் போது, தாங்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுள்ள முடிவுகளில் குறுக்கிடுகின்ற எந்தப் புதிய உண்மைகளையும் வரவேற்க மாட்டார்கள்.

இந்தக் காரணத்தினால், புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க முடியும் என்றாலும், அந்த அறிவைப் பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்படவேண்டும். இந்த ஆர்வம் வரவேண்டுமானால் அய்யம் எழுப்பும் மனப்பான்மை ஏற்படவேண்டும். ஏனென்றால், அய்யம் இல்லை என்றால் ஆய்வு நடக்காது: ஆய்வு இல்லையென்றால் அறிவு வளராது. ஏனென்றால், அறிவு என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மிடம் வந்து சேருகின்ற பொருள் அல்ல; தேடித் தேடித்தான் அதை அடைய முடியும். பெரும் முயற்சியும், அதன் காரணமாகப் பெரும் தியாகமும் செய்வதன் விளைவாகத் தான் அறிவு கிட்டுகிறது.

ஆனால், தாங்கள் ஏற்கெனவே முழுமையாகத் திருப்தியடைந்திருக்கும் விஷயங்களுக்காக மனிதர்கள் அத்தகைய உழைப்பையும் தியாகத்தையும் மேற்கொள்வார்கள் என்று எண்ணுவது தவறாகும். இருளை உணராதவர்கள் ஒளியைத் தேட மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்திலேனும் நாம் நிச்சயமான கருத்தை அடைந்துவிட்டால் அதைப் பற்றி மேலும் ஆய்வு செய்யமாட்டோம்; ஏனென்றால் அது பயனற்றது மட்டுமின்றி ஒரு வேளை ஆபத்தானதாகவும் இருக்கலாம். அய்யம் குறுக்கிட்டால் தான் ஆய்வு தொடங்கும். எனவே அய்யப்படும் செயல் தான் எல்லா முன்னேற்றங்களையும் தோற்றுவிக்கிறது, அல்லது முன்னேற்றத்துக்கு முதல் படியாக அமைகிறது எனக் காண்கிறோம்.”

பிராமணர்கள் அய்யம் எழுவதற்கு இடமே வைக்கவில்லை; ஏனென்றால், அவர்கள் மிகவும் விஷமத்தனமான ஒரு கருத்தை மக்களிடையே பரப்பியிருக்கிறார்கள். வேதங்கள் பொய்யாதவை, தவறுக்கிடமற்றவை என்பதே இந்தக் கருத்து. ஹிந்துக்களின் அறிவு வளர்ச்சி நின்று விட்டதென்றால், ஹிந்து நாகரிகமும் பண்பாடும் தேக்கமடைந்து முடை நாற்றக் குட்டை ஆகிவிட்டது என்றால் இதுதான் காரணம். இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தக் கருத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கவேண்டும். வேதங்கள் உதவாக்கரையான படைப்புகள். அவற்றைப் புனிதமானவை என்றோ பொய்யாதவை என்றோ கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பிராமணர்கள் தான் அவற்றைப் புனிதம் என்றும் பொய்யாதவை என்றும் போற்றும்படிச் செய்து வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் பிற்காலத்திய இடைச் செருகலான புருஷ சூக்தத்தின் மூலம் வேதங்கள், பிராமணர்களைப் பூமியின் அதிபதிகளாக ஆக்கியுள்ளன. இனக்குழுவின் கடவுளர்களைத் துதித்து, அவர்கள். எதிரிகளை அழித்து, அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து, தங்களை வழிபடுவோருக்குக் கொடுக்கும்படிக் கேட்டுக்கொள்ளும் வேண்டுகோள்களைத் தவிர வேறெதுவும் இல்லாத இந்த உதவாக்கரை நூல்களைப் புனிதமானவை என்றும் பொய்யாதவை என்றும் ஆக்கப்பட்டது ஏன் என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லாமற் போயிற்று. ஆனால் பிராமணர்கள் பரப்பியுள்ள இந்த விவேகமற்ற கருத்தின் பிடியில் (‘பிடி’ என்ற சொல் எங்களால் சேர்க்கப்பட்டது. கையெழுத்துப் பிரதியில் இந்தச் சொல் படிப்பதற்குத் தெளிவாகத் தெரியவில்லை) இருந்து ஹிந்து மனத்தை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த விடுதலை ஏற்படாமல் இந்தியாவுக்கு வருங்காலம் இல்லை. இதில் உள்ள அபாயத்தை (‘அபாயத்தை’ என்ற சொல்லும் மூலப் பிரதியில் இல்லை) நன்றாக அறிந்தே இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். விளைவுகளுக்கு நான் அஞ்சவில்லை. மக்களைத்தட்டி எழுப்பி விடுவதில் நான் வெற்றி பெற்றால் பெரிதும் மகிழ்வேன்.

– பி.ஆர்.அம்பேத்கர்

நன்றி: சிந்தன் புக்ஸ் வெளியிட்டுள்ள
‘இந்து மதத்தில் புதிர்கள்’ நூல்

இது ஏழு பக்கங்கள் கொண்ட ஒரு எழுத்துப் பிரதி. இதில் டாக்டர் அம்பேத்கர் தமது கையெழுத்தில் திருத்தங்கள் செய்திருக்கிறார். தட்டச்சு செய்யப்பட்ட பிரதியின் இறுதியில் டாக்டர் அம்பேத்கர் கைப்பட எழுதிய சில பத்திகள் சேர்க்கப்பட்டன.

– பதிப்பாசிரியர்கள்

- விடுதலை நாளேடு,5.12.25

வெள்ளி, 12 டிசம்பர், 2025

பாரதியாரின் பாடல்களில் சாதி இல்லையா ? அது ஆரிய பார்ப்பன அடிவருடி


1.பாடல் : வந்தே மாதரம் -   
   சரணம் -2 - வரி -1
    " ஆரிய பூமியில் "

2.எங்கள் நாடு - பாடல் - 3- வரி 7
     "உன்னத ஆரிய நாடெங்கள்
    நாடே "

3.பாரதமாதா - 
    (1)பாடல் -1,வரி 4
    "ஆரிய ராணியின் வில்  "
    (2)பாடல் -4 , வரி 4
     " ஆரிய ராணியின் சொல் "
    (3)பாடல் -6 , வரி 4
     " ஆரிய தேவியின் தோள் "

4.பாரத தேவியின் திருத்த 
    சாங்கம் - பாடல் 2 - நாடு ,வரி4
    " ஆரிய நாடென்றே அறி "

5.தாயின் மணிக்கொடி
    பாடல் 5 - வரி 5
    " ஆரியக் காட்சியோர்
    ஆனந்தம் அன்றோ ?"

6.தமிழ் நாடு - பாடல் 2 வரி 1
    " வேதங்கள் நிறைந்த
     தமிழ்நாடு "

7.தமிழ்த் தாய் , 
    (1)பாடல் 1 ,வரி 2
    "ஆரிய மைந்தன் " 
    (2)பாடல் 2, வரி 3-4
    " உயர் ஆரியத்திற்கு
    நிகரென வாழ்ந்தேன் "

8.தமிழ் சாதி , வரி 132-133
    " ஆரிய நாட்டின் அறிவும்
     பெருமையும் "

9.வாழிய செந்தமிழ் , வரி 6 -7
    " ஆரிய நாட்டினர்
    ஆண்மையோடியற்றும் சீரிய
    முயற்சிகள் "

10.சுதந்திர தாகம்
     (1) பாடல் 1 , வரி 6
     " ஆரியர் வாழ்வினை
     ஆதரிப்போனே "
    (2) பாடல் 2 , வரி 6
      " ஆரிய ! நீயும் நின் அறம்
       மறந்தாயோ "
     (3) பாடல் 2 , வரி 8
      " வீர சிகாமணி ! ஆரியர்
       கோனே ! "

11.தேசிய இயக்கப் பாடல்கள்
      (1) வரி 60
      " ஆரியர் புலையருக்
       கடிமைக  ளாயினர் "
       (2) வரி 72
       " அச்சமுற்  றிருப்போன்
        ஆரிய  னல்லன் "
       (3) வரி 72
        " அன்பிலா திருப்போன்
        ஆரிய  னல்லன் "
       (4) வரி 76
         " ஆட்சியி  லடங்குவோன்
         ஆரிய  னல்லன் "
       (5) வரி77-78
         " ஆரியத் தன்மை
         அற்றிடுஞ் சிறியர் "
        (6) வரி 91
        " ஆரியர் இருமின் !
        ஆண்கள் இருமின் ! "
        (7) வரி 168
        " ஆரிய நீ  திநீ அறிகிலை
        போலும் ! "
        (8) வரி 182
        " ஆரிய வீரர்காள் ! "

12,தேசியத் தலைவர்கள்-
      (1)வரி122
      " ஐவரன் னோர் தமை 
      அருளினன் ஆரியன் "
      (2) வரி184
       " ஆரியர் சாதியுள் ஆயிரஞ்
        சாதி "
      (3)லாஜபதியின் பிரலாபம்
      (i) கண்ணி 6 , வரி 1
        " ஆதிமறை தோன்றியநல்
       லாரியநா டெந்நாளும் "
      ( ii) கண்ணி 12 , வரி 1
        " ஆரியர் தம் தர்மநிலை "
      (iii)கண்ணி 15 , வரி 1
        " ஆரியர் பாழாகா
        தருமறையின் "

13.கண்ணன் திருவடி , பாடல் 6
       " தீர்ப்பான் இருளைப்
         பேர்ப்பான் கலியை
         ஆர்ப்பா ரமரர்
         பார்ப்பார் தவமே " 

14. சங்கு - பாடல் 3 , வரி 4
        " ஆரிய ராமென்றிங்
         கூதேடா  சங்கம் "

#TrollBharathi

வெள்ளி, 7 நவம்பர், 2025

இந்திய வரலாறு பல்வேறு கதைகளால் நிறைந்துள்ளது' - ஆட்ரி ட்ருஷ்கே

 


ஆட்ரி ட்ருஷ்கே தனது புதிய புத்தகத்தில், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக துணைக்கண்டத்தின் முக்கியமான அரசியல், சமூக, மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளார்.

அவர் ஔரங்கசீப்: தி மேன் அண்ட் தி மித் எழுதியதிலிருந்து , அறிஞர்களும் வரலாற்று ஆர்வலர்களும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட வரலாற்றாசிரியர் ஆட்ரி ட்ருஷ்கேவைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள், அவர் இந்திய வரலாற்றைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை அடிக்கடி முன்வைக்கிறார். அவரது சமீபத்திய புத்தகமான, இந்தியா: 5000 ஆண்டுகள் வரலாறு துணைக்கண்டத்தில் , வாழ்க்கையின் ஆரம்ப அறிகுறிகளிலிருந்து 21 ஆம் நூற்றாண்டு வரையிலான துணைக்கண்ட வரலாற்றின் பரந்த பார்வையை வழங்குகிறது, இது மிக முக்கியமான அரசியல், சமூக, மத, அறிவுசார் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஆவணப்படுத்துகிறது. ஒரு நேர்காணலிலிருந்து திருத்தப்பட்ட பகுதிகள்.

கேள்வி: இந்தியாவின் ஆரம்பகால மக்கள் யார்? நமது வரலாறு சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடங்கியதா?

பதில்: முதல் மனிதர்கள் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 120,000 ஆண்டுகளுக்கு முன்பு காலடி எடுத்து வைத்தனர், மேலும் நவீன இந்தியர்கள் வந்த முதல் மனிதர்கள் சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்த ஆரம்பகால இந்தியர்களைப் பற்றி நமக்கு மிகக் குறைவாகவே தெரியும், அவர்கள் குடியேறியவர்கள் என்பதைத் தவிர. சிந்து சமவெளி நாகரிகம் இந்தியாவில் நகர்ப்புற வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இருப்பினும் ஒரு சிலருக்கு மட்டுமே. சிந்து நாகரிகத்தின் உச்சத்தில் கூட, துணைக்கண்டத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் வாழ்ந்தனர்.

கேள்வி: சிந்து சமவெளி நாகரிகம் நவீன கால இந்து மதத்திற்கு முன்னோடியாக இல்லையா?

ப: ஒரு வார்த்தையில்: இல்லை. இந்து மதத்தின் வேர்களைக் கருத்தியல் செய்வதற்கு பல வழிகள் உள்ளன, இறுதியில் அந்த மதத்திற்கு பல தோற்றப் புள்ளிகள் உள்ளன. ஆனால் இந்து நடைமுறைகள் அல்லது நம்பிக்கைகளுக்கான முன்னோடிப் புள்ளிகளில் சிந்து சமவெளி நாகரிகத்தை முன்னிறுத்துவதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. மாறாக, இன்று நாம் இந்து மதம் என்று அழைக்கக்கூடிய எதன் ஆரம்பகால தடயங்களும் வேத குடியேறிகளிடமிருந்து வருகின்றன ("ஆரியர்கள்" என்றும் அழைக்கப்படுகிறார்கள், இருப்பினும் குழப்பத்தைத் தவிர்க்க எனது புத்தகத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதை நான் தவிர்க்கிறேன்). சிந்து நாகரிகம் வீழ்ச்சியடைந்த சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, வேத குடியேறிகள் துணைக்கண்டத்தின் வடமேற்கில் நுழைந்தனர், சடங்கு மற்றும் தியாகம் மற்றும் சமஸ்கிருதமாக வளர்ந்த ஒரு மொழி பற்றிய பல கருத்துக்களை அவர்களுடன் கொண்டு வந்தனர்.

கேள்வி: பண்டைய இந்தியாவில் பெண்கள் வேதங்களைக் கேட்பது தடைசெய்யப்பட்டது. அவர்களுக்கு முறையான கல்வி மறுக்கப்பட்டது. இந்தப் பாகுபாடு சாதி மற்றும் மதத் தடைகளைத் தாண்டிச் சென்றதா?

ப: பாகுபாடு என்பது அரிதாகவே முழுமையானது, மேலும் உயர் சாதி ஆண்களால் தடைசெய்யப்பட்ட போதிலும், கல்வி, சமஸ்கிருதத்தில் சரளமாகப் பேசக்கூடிய பல பெண்கள் எங்களிடம் உள்ளனர். மேலும், வேதங்களை மதிக்கும் நபர்கள் மட்டுமே நவீன காலத்திற்கு முந்தைய இந்தியாவில் வசிக்கும் ஒரே மதக் குழு அல்ல. உதாரணமாக, வேத சகாக்களின் பாலினக் கட்டுப்பாடுகளில் பங்கேற்காத ஆரம்பகால இந்திய பௌத்தர்களின் வரலாற்றை மறுகட்டமைக்க பெண்களின் குரல்களை நான் பயன்படுத்துகிறேன்.

கேள்வி: நீங்கள் 7 ஆம் நூற்றாண்டில் நாலந்தாவில் படித்த சுவான்சாங் பற்றி எழுதியுள்ளீர்கள் . பிற்காலத்தில் நாலந்தாவின் அழிவு குறித்து முரண்பட்ட கணக்குகளைப் படித்திருக்கிறோம். உண்மை என்ன?

ப: டெல்லி சுல்தானியத் தாக்குதல்களால் நாளந்தா குறிவைக்கப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை, இது நிச்சயமாக அப்பகுதியில் உள்ள பிற புத்த மடாலயங்களைப் பாதித்தது. நாளந்தா தாக்கப்பட்டால், அது மீண்டது. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நாளந்தாவில் வசித்து பௌத்த துறவிகள் படித்ததற்கான பதிவுகள் எங்களிடம் உள்ளன.

கேள்வி: இந்திய கலாச்சாரத்தின் ஏற்றுமதியாக பஞ்சதந்திரக் கதைகள் வகித்த முக்கிய பங்கை வரலாற்றாசிரியர்கள் எப்போதும் மதிப்பிட்டதில்லை. அதன் பங்களிப்பை நீங்கள் பாராட்டக் காரணம் என்ன?

A: எனது வயதுவந்த வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை, சமஸ்கிருதத்திற்கு முந்தைய நூல்களைப் படிப்பதில் செலவிட்டுள்ளேன், இது பாரம்பரியத்தின் இலக்கிய மற்றும் வரலாற்று மதிப்பை எனக்கு நன்கு உணர்த்தியுள்ளது. அதில் பஞ்சதந்திரமும் அடங்கும். மேலும், பஞ்சதந்திரக் கதைகள், பல்வேறு மொழிபெயர்ப்புகளில், நவீனத்துவத்திற்கு முந்தைய பாரசீக மொழி பேசும் உலகில், குறிப்பிடத்தக்க வகையில் பிரபலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன, இது எனது முந்தைய ஆராய்ச்சியில் வந்துள்ளது. கடைசியாக, பஞ்சதந்திரம் குறித்த மெக்கோமாஸ் டெய்லரின் 2007 ஆம் ஆண்டு புத்தகம், தி ஃபால் ஆஃப் தி இண்டிகோ ஜாக்கல் , சிறந்தது, மேலும் கதைத் தொகுப்பின் கலாச்சாரத் தனித்தன்மையைப் பற்றி சிந்திக்க இது உதவியாக இருந்தது.

கேள்வி: சோழர்கள் இலங்கையின் சில பகுதிகளைக் கைப்பற்றி, சுமத்ரா மற்றும் மலாய் தீபகற்பத்தில் செல்வாக்கு செலுத்தினர். அப்படியானால், துணைக்கண்டத்தின் வரலாற்றில் வலிமையான ஆட்சியாளர்களில் அவர்களுக்குரிய சரியான இடம் ஏன் மறுக்கப்படுகிறது?

ப: என் பார்வையில், பெரும்பாலான தெற்காசிய வரலாற்றுப் புத்தகங்களிலும், நிச்சயமாக என்னுடையதிலும் சோழர்கள் தங்கள் பங்கைப் பெறுகிறார்கள் (மாறாக, புத்தகத்தில் நான் விளக்கும் காரணங்களுக்காக குப்தர்களுக்கு நான் குறைவான கவனம் செலுத்துகிறேன்). இருப்பினும், தெற்காசிய வரலாற்றின் நிலையான கதைகளை கேள்விக்குட்படுத்துவது பற்றி சிந்திக்க ஆர்வமுள்ளவர்கள் கேட்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்: நாம் ஏன் மன்னர்களைப் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறோம்? அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திய சிலரைப் பற்றி நாம் கவனம் செலுத்தும்போது யாருடைய கதைகளை நாம் தவறவிடுகிறோம்? உதாரணமாக, சோழர்கள் பற்றிய எனது அத்தியாயத்தில், தமிழ் வணிகர்களின் செல்வாக்கு மற்றும் அந்தக் கால கைவினைஞர்களின் சாதனைகளையும் நான் விரிவாகக் கூறுகிறேன்.

கே: இடைக்கால இந்தியாவுக்கு வரும்போது, ​​சிவாஜி பற்றி உங்கள் பார்வை என்ன?

ப: எனது புத்தகத்தில், சிவாஜியை ஒரு குறிப்பிட்ட வகையான இந்திய அரசாட்சியைக் கோருவதற்காக க்ஷத்ரியராக இருக்க விரும்பிய ஒரு சூத்திர மன்னராக நான் முன்வைக்கிறேன். [அவர் உண்மையில் ஒரு க்ஷத்ரியன் என்று நம்பும் ஒரு பள்ளி உள்ளது.] குறிப்பாக, சிவாஜி தனது சகாப்தத்தின் ஒரே சூத்திர மன்னர் அல்ல, மேலும் தென்னிந்தியாவின் நாயக்க ஆட்சியாளர்களைப் பற்றியும் நான் விவாதிக்கிறேன், அவர்கள் வேறு சாதியாக மாற முயற்சிக்கவில்லை, மாறாக சூத்திர ஆட்சியாளர்களாக அதிகாரத்தை வெளிப்படுத்தும் பிற வழிகளைப் பின்பற்றினர்.

கேள்வி: நீங்கள் சொல்வது போல் வரலாறு சோகக் கதைகளால் நிறைந்துள்ளது. இந்திய வரலாற்றைப் பற்றி நீங்கள் கண்டுபிடித்த வெள்ளித் தகவல்கள் யாவை?

A: இந்திய வரலாறு என்பது மனித முயற்சிகளால் நிறைந்தது, இது பல்வேறு சமூக, அரசியல், கலாச்சார, அறிவுசார் மற்றும் மத சாத்தியக்கூறுகளை உருவாக்கியது. இப்போதெல்லாம், இந்திய கடந்த காலத்திற்குள் இருக்கும் நேர்த்தியான பன்முகத்தன்மையைப் பற்றி பலர் பெருமைப்படுவதில்லை, அது உண்மையிலேயே அவமானகரமானது. இந்திய வரலாறு உண்மையில் சோகமான கதைகளால் நிறைந்துள்ளது, ஆனால் அது மற்ற வகையான கதைகளாலும் நிறைந்துள்ளது. இந்திய வரலாற்றை உள்ளடக்கிய மனிதநேயம் மற்றும் மனித அனுபவங்களின் நம்பமுடியாத வரம்பைப் பற்றிய ஒரு அலங்காரமின்றிச் சொல்வதன் மூலம் அவற்றை மதிக்கவும் கௌரவிக்கவும் நான் பாடுபடுகிறேன்.

உபயம்: 'தி இந்து' – 15 ஜூன் 2025

- தி மாடர்ன் ரேடினலிஸ்ட்டு, 1.10.25

வெள்ளி, 31 அக்டோபர், 2025

அவரங்கசீப் மதவெறியாரா? மனித நேயரா ? ( 1,2)

 - மரு.கவுதமன்


துருக்கிய, பாரசீக, மங்கோலிய, தைமூர் இனத்தைச் சேர்ந்த “பாபர்” முதலாம் பானிபட் போரில், இங்கு ஆண்டு வந்த இப்ராகீம் லோடியை வென்று முகலாயப் பேரரசை நிறுவினார். 1712 வரை பெரும் பேரரசாக இவர்கள் ஆட்சி இருந்தாலும் 1857இல் தான் ஆங்கிலேயர்களால் இவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது. மிகவும் புகழ்பெற்ற இந்தப் பேரரசு இந்த மண்ணில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாபருக்குப்பின் ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் ஆகிய பேரரசர்களுக்குப் பின் வந்த பேரரசர்தான் “அவ்ரங்கசீப்”. முகலாயர்களின் ஆறாவது பேரரசர் இவர். இவர் ஆட்சி ஏறக்குறைய இந்தத் துணைக் கண்டம் முழுதும் பரவியிருந்தது. இவர் 1658 முதல் 1707 வரை ஆட்சியிலிருந்தார். 88 வயது வரை (1618-1707) உயிர் வாழ்ந்த முகலாயப் பேரரசர் இவர். மிகவும் பரந்து, விரிந்த முகலாயப் பேரரசு, இவர் காலத்தில் உருவானது.

இவரது ஆட்சியின் பிற்பகுதியில் மாராட்டியத்தில் சிவாஜி தலைமையில் ஆட்சி அமைந்தது. சிவாஜியின் ஆட்சியில் “பேஷ்வாக்கள்” என்ற சித்பவன் பார்ப்பனர்கள் முழுமையாக ஆட்சியை பின்னணியில் இருந்து நடத்தினர். சிவாஜியின் பேரன் இரண்டாம் சாகுஜியைக் கொன்று பாஜிராவ் பேஷ்வா, பார்ப்பன ஆட்சியை நிறுவினார். சிவாஜியும், பேஷ்வாக்களும் முழு பேஷ்வா ஆட்சியையே நடத்தினர். அவுரங்கசீப்பை, சிவாஜி எதிர்த்த காலகட்டத்தில் பார்ப்பனர் ஆட்சியை நிலைநாட்ட, அவ்ரங்கசீப்பைப் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. அது இன்றளவும் நிலை பெற்றுள்ளது.

பேஷ்வாக்கள் என்ற பரம்பரையில் வந்த சித்பவன் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது தான் R.S.S. அமைப்பு. அவ்ரங்கசீப்பின் மேல் இருந்த வெறுப்பு அவர்களுக்கு இன்னும் மாறவில்லை.  R.S.S.இன் அரசியல் வடிவமான BJP ஆட்சியில் டில்லியில் இருந்த “அவ்ரங்கசீப் மார்க்”, (Aurangaship Marg) அப்துல் கலாம் சாலையாக மாற்றப்பட்டது. மராட்டியத்தில் இருந்த “அவ்ரங்கபாத்” என்ற நகர் “சம்பாஜி நகர்” (இவர் சிவாஜியின் மூத்த மகன், மராட்டியத்தின் இரண்டாம் அரசர்) என்று மாற்றப்பட்டது. உண்மையில் “அவ்ரங்கசீப்” யார்? கொடுங்கோலனாகச் சித்திரிக்கப்பட்ட அவரின் உண்மை முகம் என்ன? இதைப் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முகயல்தீன் முகம்மது என்ற அவ்ரங்கசீப் தான் முகலாயப் பேரரசின் ஆறாவது பேரரசர் (1618-1707). ‘அவ்ரங்க சீப்’ என்றால் “அரியணையின் ஆபரணம்” என்று பொருள். முதலாம் “ஆலம்கீர்”என்ற பட்டத்துடன் பதவியில் அமர்ந்த இவர் அரியணையைப் பிடிக்க ஒரு பெரும் போராட்டமே நிகழ்த்தினார். ஆட்சியைக் கைப்பற்றிய அவ்ரங்கசீப் 1658 முதல் 1707 வரை (தன் இறப்பு வரை) ஆட்சியில் இருந்தார். பேரரசர் ஷாஜஹானுக் கு நான்காவது மகனாகப் பிறந்தவர் இவர். ஒவ்வொரு மகனையும் ஷாஜஹான் தன் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளுக்கு ஆளுஞர்களாக நியமித்திருந்தார்.தன் முதல் மகன் தாராசிக்கோவை தனக்கு அடுத்த பேரரசராக ஷாஜஹான் அறிவித்தார்.அதை அவ்ரங்கசீப் ஏற்றுக் கொள்ள வில்லை.தன் தந்தையை ஆக்ரா கோட்டையில் சிறை வைத்தார். அவ்ரங்கசீப்பின் தங்கை சகாதாரா, தந்தையைக் கவனித்துக் கொள்ள பேரரசரால் அனுமதிக்கப்பட்டார். தன் மூத்த அண்ணன் தாராசிக்கோவைக் கொன்று அவரது துண்டித்தத் தலையை ஆக்ரா கோட்டையில் சிறையில் இருந்த தந்தைக்கு அனுப்பி வைத்தார். 1658இல் தன்னைத் தானே பேரரசராக அறிவித்துக் கொண்டு ஆட்சியில் அமர்ந்த அவ்ரங்கசீப் தன்னுடைய மற்ற சகோதரர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் கொன்றார். அவர் காலத்தில் ஏறத்தாழ இந்திய துணைக் கண்டம் முழுவதும் முகலாயப் பேரரசின் ஆட்சி விரிவடைந்தது. இந்தியாவை ஆண்ட எந்தப் பேரரசர் காலத்திலும் இவ்வளவு பரந்த பேரரசு இருந்ததில்லை.

கி.பி. 1707இல் அவ்ரங்க சீப் மரணமடைந்தார்.அவர் உடல் மஹாராஷ்ட்ராவில் உள்ள குல்தாபாத் என்னும் ஊரில் அடக்கம் செய்யப் பட்டது என்பது உங்களுக்குத தெரியுமா?

வரலாற்று ஆசிரியர்கள் அவ்ரங்கசீப்பைப் பற்றி பலவாறு தாக்கிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் மறைக்க முடியாத பல வரலாற்றுக் குறிப்புகளும் அவரைப் பற்றி உண்டு. இஸ்லாம் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் அவர். தன் கையாலே இஸ்லாமியர்களின் வேதமான
“குர்ஆன்” எழுதியவர். இஸ்லாமியர்களுக்கு விதிக்கப்பட்ட அய்ந்து கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றியவர் அவர். தான் அணியும் தொப்பியைக்கூட தன் கையாலே தைத்து பயன்படுத்தியவர் அவ்ரங்கசீப். ஆடம்பரங்களை வெறுத்தவர். பேரரசராக இருந்தாலும் மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். அவரே அவர் கைப்பட உயில் எழுதி வைத்தார். அவரது எளிய வாழ்க்கையை விளக்கும் வண்ணம் அந்த உயில் இருந்தது.

அவ்ரங்கசீப் தன்கையாலேயே எழுதிய உயிலில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார், “நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய், இரண்டணாக்கள் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன.அதைக் கொண்டு என் உடல் மீது போர்த்த வேண்டிய “கஃபன்” துணியை வாங்கிக் கொள்ளுங்கள். என் கையால் திருக்குர்ரானை எழுதிப் பிரதியெடுத்து விற்றதன் மூலம் கிடைக்கப் பெற்ற ரூபாய் முன்னூற்று அய்ந்து என் வசமுள்ளன. நான் இறக்கும் அன்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குத் தானமாகக் கொடுத்து விடுங்கள். என் தலையை எதைக் கொண்டும் மூடாமல் திறந்து வைத்து விடுங்கள். இறைவன் எனக்குக் கருணை காட்ட அது உதவும். என் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் ஆடம்பரங்கள் ஏதுமின்றி அடக்கம் செய்யுங்கள்” என்பதே அந்த உயில். முகலாயப் பேரரசர்கள் அனைவரும் ஆடம்பரமாகவே வாழ்ந்த நிலையில் அவ்ரங்க சீப் மட்டும் எளிமையாக வாழ்ந்தார்.

இப்படிபட்ட அவ்ரங்கசீப்பை ஒரு கொடுமைக்கார மன்னனாகவே நமக்கு வரலாற்று நூல்கள் அறிமுகம் செய்துள்ளன.ஆனால், உண்மை வேறு விதமாகத்தான் இருந்தது. மிகவும் எளிமையாக வாழ்ந்த அவர் தன் மணி மகுடத்தில் கூட ஒரே, ஒரு சிறிய கல்லைத்தான் பொறித்திருந்தார். டில்லிக்கும், ஆக்ராவுக்கும் அருகே ஒரு துண்டு நிலத்தை அவர் தனக்கென வாங்கினார். அதில் ஆட்களை வைத்து விவசாயம் செய்தார்.அந்த செலவுகளையும் கூட குர்ரானை தன் கைப்பட எழுதி, விற்ற காசில் செலவு செய்தார். நிலமும் அவர் சொந்தக் காசில்தான் வாங்கினார். அந்த நிலத்திலிருந்து வந்த வருமானத்தில்தான் அவர் உணவுக்கே செலவழித்தார். தன் சொந்த பயன்பாட்டுக்கு என்று அரசாங்கப் பணத்தை அவர் பயன்படுத்தவே இல்லை. அவர் புலால் உணவை அறவே தவிர்த்தார். சைவ உணவையே உட்கொண்டார். மாம்பழம் அவருக்கு மிகவும் பிடித்த பழம். இஸ்லாமியர்களின் அய்ந்து கடமைகளில் ஒன்றான அய்ந்து நேரத் தொழுகையைத் தவறாமல் கடைப் பிடித்தார். போர்க்களத்தில் இருந்த காலத்திலும் அவர் தொழுகையை நிறுத்தியதில்லை. ஒரு நாளில் நான்கு மணி நேரம் மட்டுமே உறங்கும் வழக்கமுடையவர் அவ்ரங்கசீப். இரவில் தரையில்தான் படுப்பார். மேலே ஒரு புலித்தோலைத் தான் போர்த்திக் கொண்டு தூங்குவாராம்.

அரண்மனையிலும், மற்ற அரசாங்கக் கட்டடங்களிலும் இருந்த தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்தப் பொருள்களை நீக்க உத்தரவிட்டார். தன் மேஜை மீதிருந்த தங்க மைப்புட்டியை மாற்றிவிட்டு கல்லாலான மைப்புட்டியை வைத்துக் கொண்டாராம்.

பாபர் காலத்தில் இருந்து ஷாஜஹான் காலம் வரை இசையிலும், பாடல்களிலும் மற்ற கலைகளிலும் அதிகளவு நாட்டம் கொண்டிருந்தனர். அவர்கள் அவையில் இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் எப்பொழுதும் பேரரசர்களை மகிழ்ச்சிப் படுத்தினர். அவ்ரங்கசீப் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் இவை அனைத்தையும் தடை செய்து விட்டார். ஆனால் அவர்களுக்கு அரசு வழங்கி வந்த மானியத்தை நிறுத்தவில்லை.தன்பேரரசின் கீழ் உள்ள எந்த மன்னரும், பிரபுக்களும் இது போன்ற கேளிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அவ்ரங்கசீப் கட்டளையிட்டார். தன் நேரடி நிருவாகத்தில் இருந்த கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார்.

(தொடரும்…)

- உண்மை இதழ்,16.30.09.25

அவ்ரங்கசீப் மதவெறியரா? மனித நேயரா? (2)

நாட்டில் எந்தவித உல்லாச விடுதிகளும் நடக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். பிறந்தநாள் கொண்டாட் டங்களுக்குத் தடை விதித்தார். பிறரிடமிருந்து பரிசுப் பொருள்கள் வாங்குவதை அறவே தவிர்த்தார். ஆண்கள் தாடி, மீசை வைப்பதற்குக் கூட கட்டுப்பாடுகள் விதித்தார்.

உதடுகள் தெரியும்படி மீசை இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இறைவன் பெயரை உச்சரிக்கும்போது தடையிருக்காது என்பது அவர் எண்ணம். மதுவை வெறுத்தவரான அவர் தன் பேரரசில் மது உற்பத்தி, விற்றல் ஆகியவற்றைத் தடை செய்தது அவரது அரசாங்கம். கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கினார்.

இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் மக்கள் ஒரு ஒழுங்கான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான். அதைவிட முக்கியமான சீர்திருத்தங்களாக அவர் செய்தது, தன் பேரரசிலும், தன் கீழ் இருந்த இராஜபுத்திரர்கள் நாடுகளிலும் “சதி” என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடை செய்தார்.

ராஜபுத்திரர்கள் அந்தக் கொள்கைக்கு எதிராக பேரரசரிடம் பெரிய அளவில் விவாதித்தனர். ஆனால் பேரரசர் அதற்கு இணங்கவில்லை. விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை ஆதரித்தார். அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள், சனாதனத்திற்கு எதிரான கொள்கைகள் அவரை ஒரு கொடுங்கோலராகச் சித்தரிக்க வேத விற்பன்னர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அவ்ரங்கசீப் இந்துக்களுக்கு
“ஜிஸியா” என்ற தலைவரி

விதித்ததைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் பெரிதாகக் குறிப்பிடுகிறார்கள். பேரரசில் வாழும் பிற மக்களின் பாதுகாப்புக்காக ஆகும் செலவினங்களுக்காக இந்த வரி விதிக்கப்பட்டதாக பேரரசர் அறிவித்தார். இது இந்து மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.ஆனால். முதியோர், பிச்சைக்காரர்கள், ஊனமுற்றோர், துறவிகள், கிறிஸ்துவ குருமார்கள், குழந்தைகள் முக்கியமாக பார்ப்பனர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஜிஸியா வரியைப் பற்றி இவ்வளவு பேசுகின்ற வரலாற்று ஆசிரியர்கள் அவ்ரங்கசீப்பின் மற்ற வரி விதிப்புக் கொள்கைகளைப் பற்றி அதிகம் பேசவில்லை.

வரிவிலக்கு

பேரரசர் அவ்ரங்கசீப், இந்துக்கள் தீபாவளியன்று வீடுகளில், வீதிகளில் கோவில்களில் வரிசையாக விளக்குகள் ஏற்றுவர். இதற்கு வரி விதிக்கப்பட்டிருந்தது.இது இந்துக்களுக்கு மட்டுமல்ல. ஷியா முஸ்லிம்களும் முகரம் பண்டிகையின் போது விளக்குகள் ஏற்றும் வழக்கம் வைத்திருந்தனர்.அரசு அதற்கு வரி விதித்திருந்தது. அவ்ரங்கசீப் அந்த வரியை நீக்கினார்.

முகலாயர்கள் ஆட்சியில் கங்கை நதியில் நீராட வரி விதிக்கப்பட்டது. அதே போல் இறந்தவர்களின் அஸ்தியைக் கங்கையில் கரைக்க இந்துக்கள் வரி செலுத்த வேண்டியிருந்தது.அவ்ரங்கசீப் இந்த வரிகளை இனிமேல் கட்ட வேண்டியதில்லை என்று உத்தரவு பிறப்பித்தார். நதிகளில் மீன் பிடிப்பவர்களுக்கு வரி, பால் கறந்து விற்பவர்களுக்கு வரி, காய்கறிகள் விற்பவர்களுக்கு வரி, வரட்டியைத் தட்டி விற்பவருக்கும் வரி என்று மக்கள் மீது வரி விதிப்புத் தாக்குதல்கள் பல வகையிலும் நடந்தன. அவை அனைத்தையும் பேரரசர் அவ்ரங்கசீப் நீக்கி அதற்கெல்லாம் இனிமேல் வரி கட்ட வேண்டியதில்லை என்று ஆணையிட்டார்.கோவில் திருவிழாக்களின் போது வணிகர்கள் போடும் சந்தை கடைகளுக்கு வரி செலுத்த வேண்டும். அதையும் நீக்கினார் பேரரசர்.இது போன்று வரிகளை நீக்கியது பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் பெரிய ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தந்தது.

மதம் சார்ந்த கொள்கை முடிவுகள்:

அவ்ரங்கசீப் மற்ற மதத்தினரை முக்கியமாக (இந்து?)க்களைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுவது உண்மையில்லை தன் கீழ் பணியாற்றிய வாரணாசி கவர்னருக்கு அவ்ரங்கசீப் ஓர் உத்தரவிட்டுள்ளார்.(Maasir | Alamgiri – அவ்ரங்கசீப்பின் அதிகாரபூர்வ அவைக்குறிப்பு, 15th of Jumada A.H.1069 “நமது பேரரசில் வாழும் அனைத்து நிலை மக்களின் நலனுக்காகவும், நமது மத விதிகளின்படியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புராதனக் கோயில்கள் எல்லாம் அப்படியே இருக்கட்டும்.

புதிய கோயில்கள் கட்ட அனுமதிக்க வேண்டாம். வாரணாசியிலும், அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும், இந்துக்கள் வாழ்விடங்களிலும், கோயில்களிலும் துன்புறுத்தப்படுவதாகக் கேள்விப்பட்டேன். இந்த உத்தரவு உங்கள் கைக்குக் கிடைத்ததும், இது போன்ற செயல்கள் தொடராமல் உடனடி நடவடிக்கை எடுக்கவும். இறைவனை அமைதியாக வழிபடும் யாருக்கும், எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது” என்பதே அந்த உத்தரவு. சைவ சமயத்தைப் பரப்பியவர்களில் (அந்தக் காலகட்டத்தில் “இந்து” என்ற சொல்லோ, மதமோ கிடையாது. சைவம், வைணவம் என்றேதான் இருந்தது.) குமரகுருபரர் என்பவர் முக்கியமானவர்.(1625–1688)

அவ்ரங்கசீப் காலத்தில் சைவ சமயத்தைப் பரப்பியவர்களில் முக்கியமானவர் அவர். குமரகுருபரர் காசியில் சைவ மடங்களை நிறுவ அரசு நிலங்களை இலவசமாக வழங்கியவர் அவ்ரங்கசீப். அதேபோல் பல சைவ, வைணவக் கோயில்களுக்குள் மானியங்கள் அவர் வழங்கியதற்கான குறிப்புகளும் உள்ளன. மற்ற மதத்தினரை அவ்ரங்கசீப் எப்படி நடத்தினார் என்பதற்கு எடுத்துக்காட்டான நிகழ்வுகள் இவை.

கோயில்களை இடித்தாரா?

சைவ, வைணவக் கோயில்களை இடிக்கச் சொல்லி அவ்ரங்கசீப் உத்தரவிட்டார் என்று ஒரு பரப்புரை அவருக்கு எதிராகச் செய்யப் படுகிறது. ஆனால், அதுபோன்று  எதுவும் நிகழவில்லை என்பதே உண்மை. மற்ற மத வழிபாட்டுத் தலங்களை இடிக்க வேண்டாம் என்று அவர் கூறியது உண்மை. ஆனால், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழைய வழிபாட்டுத் தலங்களை அழிக்க வேண்டாம் என்ற அவ்ரங்கசீப், புதிய வழிபாட்டுத் தலங்களைக் கட்ட அனுமதியில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்ததுதான் உண்மை. ஆனால், டில்லியைச் சுற்றியுள்ள மசூதிகளை அவர் புதுப்பித்தார். (டில்லியைச் சுற்றியுள்ள 600 மசூதிகளை அவர் புதுப்பித்ததாக ஒரு குறிப்பு காணப்படுகிறது. இந்த வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து தெரிகின்ற செய்தி என்னவென்றால், அவர் மதத்தின் மீது ஆழ்ந்த பற்று வைத்திருந்த அவர், மற்ற மதத்தினரை அவர் தொல்லைப்படுத்தவில்லை என்பதே உண்மை.

வாராணாசி விஸ்வநாதர் கோயிலை இடித்தது ஏன்?

வாரணாசிக்கு அய்ந்து மைல்களுக்கு முன்பே தன் பரிவாரங்களோடு கூடாரமிட்டு அவ்ரங்கசீப் தங்கினார். இந்து மன்னர்களின் ராணிகள் காசி, கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரைத் தரிசிக்கச் சென்று அந்த வழிபாடு முடியும் வரை பொறுமையாகக் காத்திருந்தார் ஆலம்கீர் அவ்ரங்கசீப்.அப்பொழுது அவருக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலும், கோரிக்கையும் வந்தது. கங்கையில் குளித்து விட்டு, விஸ்வநாதரைத் தரிசிக்கச் சென்ற ராணிகள் எல்லோரும் திரும்பி விட்டனர், ஒருவரைத் தவிர.

அவர் “கட்ச்” தேசத்து ராணி. மிகவும் அழகான அவர் விஸ்வநாதரை வணங்கச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி பேரரசரிடம் கோரிக்கை வந்தது. அவர் தன் படை வீரர்களை அனுப்பி அரசியைத் தேடச் சொன்னார். அவர்கள் தேடிச் சென்ற போது கட்ச் ராணி கோயிலின் கருவறைக்குக் கீழே மிகவும் அலங்கோலமான நிலையில் அழுது கொண்டிருந்தார்.

அவரைப் பாலியல் வன்முறை செய்து அலங்கோலமாக்கியவர்கள் கோயிலின் தலைமை அர்ச்சகப் பார்ப்பனரும், அவரின் சீடர்களும்! இந்தச் செய்தி அவ்ரங்கசீப்பின் காதுகளுக்கு எட்டியது. ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்பான அவர் கடும் கோபம் கொண்டார்.இந்த இழி செயலால் பார்ப்பனர்கள் கோயிலின் புனிதத்தையே (அதுவும் விஸ்வநாதரின் சிலை அமைந்திருந்த இடத்திற்கு நேர் கீழே) கெடுத்து விட்டார்கள் என்று கூறி, அந்த அர்ச்சகப் பார்ப்பனர்களுக்குக் மரண தண்டனை விதித்தார்.

அந்தக் கோயிலையும் இடிக்க உத்தரவிட்டார். அந்தக் கோயிலை இடித்ததைப் பற்றி பெரிதாகப் பேசும் சங்கிக் கூட்டங்கள், நடந்த அக்கிரமத்தைப் பார்ப்பனர்கள் செய்ததால் அதை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்து விட்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? (அன்று கருவறைக்குக் கீழ் தொடங்கிய பார்ப்பனர்கள் வன்புணர்வு அக்கிரமம் இன்று வரை காஞ்சிபுரம் மச்சேசுவர் கோயில் அர்ச்சகன் தேவநாதன் முதல் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் அர்ச்சகன் வரை நீள்கிறது!

[“முகலாயர்கள்” by முகில், பக்கம் 310, 311]

(நிறைவு…)

- உண்மை இதழ்,01.15.10.25

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

இந்தியா ? பாரத் ? ஒரு வரலாற்றுப் பார்வை- பேரா.இரவிசங்கர் கண்ணபிரான்

 


பரதநாடு என்பது வட இந்தியா மட்டுமா? தென்னிந்தியா அந்த நாட்டின் ஒரு பகுதி இல்லையா?

பரதநாடு என்பது மகாபாரதக் கதையின் படி பரத இனக்குழுவினர் ஆண்ட வட இந்தியாவை உள்ளடக்கிய ஒரு பகுதியே ஆகும். அதில் தென்னிந்திய நிலப்பரப்பு இணையவில்லை என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கங்கைச் சமவெளி முடிவுக்கு வரும் இடமே பரதநாட்டின் எல்லையாக மகாபாரதத்தில் காட்டப்பட்டுள்ளது.

விந்திய மலைக்குத் தெற்கே அமைந்த நிலப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களாகத் திராவிடர்களையும் கேரளர்களையும் கர்நாடகர்களையும் சோழர்களையும் மற்றும் பல மன்னர்களையும் மகாபாரதம் சுட்டிக்காட்டி அவர்களும் அந்தக் குருச்சேத்திரப் போரிலே பங்கேற்றதாகக் குறிக்கின்றது.
மனுஸ்மிருதியில் (Manu 2-6-23) தென்னிந்திய நிலப்பரப்பு ‘பரத வர்ஷா’ நாட்டின் பகுதியாகச் சுட்டிக் காட்டப்படவில்லை. அதற்கும் மேலாக இந்தத் தென்னிந்திய நாட்டினரை ‘மிலேச்ச தேசத்தினர்’ அதாவது காட்டுமிராண்டிகள், கீழ்நிலை ஜாதியினர், சமஸ்கிருதம் அறியாத அயலவர்கள் என்று குறிப்பிடுகின்றது.

மகாபாரதத்தின் அனுசாசன பருவா (Book13, Sec. 35) உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் வெறுப்பைச் சம்பாதித்த கீழ் ஜாதி சூத்திரர்களாகத் தென்னிந்திய மக்களையும் மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.

மேகலா, திராமிடா என்னும் சொற்கள் இந்தப் பகுதியிலே குறிப்பிடப்படுகின்றது.

புராணங்களில் பரதவர்ஷா

பாகவத புராணம், வாயுபுராணம், அக்னி புராணம், மார்க்கண்டேய புராணம், ஸ்கந்த புராணம் ஆகிய புராணங்களில் பரதவர்ஷத்தைப் பற்றிய கற்பனைக் கதைகள் அள்ளிவிடப்பட்டிருக்கின்றன.

வாயு புராணத்தில் பரத வருஷத்தில் ஒன்பது தீவுகள் இருந்தன என்றும், அவற்றிற்கு இடையே கடல் இருந்தது என்றும், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு யாரும் போக முடியாது என்றும் கதை சொல்லப்பட்டிருக்கின்றது.

பரதவர்ஷத்தைச் சுற்றி ஏழு கடல்கள் இருந்ததாக இந்தப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவை,

உப்புக்கடல்
கரும்புச்சாற்றுக் கடல்
மதுக் கடல்
வெண்ணை நெய்க் கடல்
தயிர்க் கடல்
பாற்கடல்
நன்னீர்க் கடல்

பரதவர்ஷத்தின் நிலப்பரப்பைக் குறிப்பிடும் மேற்கண்ட குறிப்புகள் எல்லாம் கற்பனையில் விளைந்த கதைகளே என்று சொல்லத் தேவையில்லை.

ஹத்திக்கும்பா கல்வெட்டு சொல்வதென்ன?

இன்றைய ஒரிசா மாநிலத்தின் உதயகிரி மலைப்பகுதியில் பிராக்ருதி மொழியில் பிராமி எழுத்துருவால் வெட்டப்பட்டுள்ள ஹத்திகும்பாக் கல்வெட்டு அந்தப் பகுதியைக் காரவேல மன்னன் கி.மு. முதலாம் நூற்றாண்டில் ஆண்ட வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்கின்றது.

17 அடிகள் கொண்ட அந்தக் கல்வெட்டிலே பத்தாவது அடியிலே ‘பாரத வாஸா’ என்ற சொற்றொடர் வருகின்றது. காரவேல மன்னன் பாரத வர்ஷா நாட்டின் மீது படை எடுத்துச் சென்ற செய்தியை இந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. காரவேல மன்னன் ‘கலிங்காதிபதி’ என்றும் ‘கலிங்க ராஜ வம்ச’ என்றும் ‘கலிங்க நகரி’ என்றும் காரவேல மன்னன் கலிங்க சாம்ராஜ்யத்தின் குடிமகனாகவே இந்தக் கல்வெட்டில் பதிவுசெய்யப் பட்டிருக்கின்றார் என்பதும் பாரதவர்ஷத்தில் கலிங்க நாடு சேர்ந்து இருக்கவில்லை என்பதும் இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் செய்திகளாகும்.

இந்தக் காரவேல மன்னனை, 113 ஆண்டு களாகக் கலிங்கப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த திராவிட மன்னர்களின் கூட்டமைப்பை முறியடித்தவனாகவும், பாண்டிய மன்னர்களிடம் இருந்து முத்துக்களைப் பரிசாகப் பெற்றவனாகவும் இந்தக் கல்வெட்டுக் காட்சிப்படுத்துகின்றது.
இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய செய்திகளாக இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் முக்கியமான மூன்று முடிவுகளாவன:

1. கி.மு. முதலாம் நூற்றாண்டி
லேயே பரதவர்ஷாநாடு அமைந்திருந்தது

2. பரதவர்ஷா நாடு என்பது வட இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே.

3. அந்தக் காலகட்டத்தில் கலிங்கப் பகுதியும் தென்னிந்தி யப் பகுதியும் பரதவர்ஷா நாட்டின் பகுதிகளாக இருக்க வில்லை. சமண மதத்தின் பரத மன்னன்
பரதவர்ஷா என்பது பார்ப்பனிய மதத்தின் சொல்லாடல் மட்டும் அன்று. அந்தச் சொல்லாடல் சமணத்திலும் பவுத்தத்திலும் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘பாரத்’ என்னும் சொல் மத ரீதியான சொல்லாடல் இல்லை. அது பல பண்பாடுகளைத் தன்னுள்ளே கொண்ட மானுடவியலின் ஒரு சொல்லாடலாகும்.
சமண மதக் குறிப்புகளின் படி முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் நூறு மகன்களில் ஒருவன்தான் பரதன். ரிஷப தேவரின் மகளின் பெயர் பிராமி என்றும், அது அன்றைக்கு வழக்கத்திலிருந்த எழுத்துருவுக்குப் பெயராகக் (பிராமி எழுத்து) கொள்ளப்பட்டது என்பதும் கூடுதல் செய்தி.

கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சமண இலக்கியமான ஆதி புராணத்தின் படி ரிஷப தேவர் தனது நாட்டை 100 மகன்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து ஆட்சி செய்ய வைத்துள்ளார். ஆனால், பரதன் மற்ற 98 சகோதரர்களையும் போரில் தோற்கடித்து அவர்களுடைய பகுதியையும் கைப்பற்றிக் கொள்கின்றான். இறுதியாக ஒரே ஒரு சகோதரன் பாகுபலி மட்டும் இன்னும் தனது நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றான். பாகுபலியுடன் பரதன் செய்த போரிலே பரதன் தோற்றுப் போய் விடுகின்றான். ஆனால், பாகுபலி சகோதர பாசத்தால் தனது நாட்டை பரதனுக்கு அளித்துவிட்டு, தான் ஒரு சமணத் துறவியாகப் போய் விடுகின்றான் என்று ஆதி புராணம் சொல்கின்றது.

இன்றைக்கும் கர்நாடகத்தின் சரவண பெலகுலா சமணக் கோயிலிலே மிக உயர்ந்த பாகுபலியின் சிலைக்கு அருகிலே பரத மன்னனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது இந்தக் கதையை உறுதி செய்வதாக உள்ளது.

மேலும் இந்த சமணமதக் கதையைப் பார்ப்பனிய விஷ்ணு புராணமும் ஸ்ரீமத் பாகவதமும் உறுதி செய்கின்றது. ரிஷப தேவரின் மூத்த மகனான பரதனின் பெயராலேயே இந்த நாடு பாரதவர்ஷா என்று அழைக்கப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் (5-4-9) அறுதியிட்டுச் சொல்கின்றது.

மேலே சுட்டப்பட்ட வேதிய இந்துமதப் புராணங்களின்படியும் சமண மத ஆதி புராணத்தின்படியும் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவனின் மகனான பரதனே இந்த நாட்டை பேரரசனாக ஆண்ட சக்கரவர்த்தி என அறிய முடிகின்றது.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்கள் பாரத் என்று அறியப்படும் இந்தியா அரசமைப்புச் சட்டத்தின் முதல் விதியில் நாட்டின் பெயர் அறிவிக்கப்படுகின்றது. அதில் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று வரையறுக்கப்பட்டது.

இந்த முதல் விதியின் மீது நடந்த விவாதத்தில் ஒரு சிலரின் கருத்துகளைக் கீழே பார்ப்போம்.

திரு. அனந்த சயனம் அய்யங்கார்:

இந்தியா என்ற சொல்லுக்குப் பதிலாக பாரத், பாரத் வர்ஷா அல்லது ஹிந்துஸ்தான் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்கிறார்.
திரு.லோக்நாத் மிஸ்ரா அவர்களும் பாரத் வர்ஷா என்ற பெயரை ஆதரிக்கிறார்.

திரு.சிபன்லால் சக்சேனா அவர்கள் இந்தியா என்ற வார்த்தையைக் கூடாது என்றும், பாரத் என்ற வார்த்தை மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், இந்திய நாட்டின் தேசிய மொழியாக இந்தி அறிவிக்கப்பட வேண்டும் என்றும், வந்தே மாதரம் நாட்டின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றார்.

திரு.எச்.வி. காமத் என்பவர் மாநிலங்கள் என்ற வார்த்தையை மாற்றிப் பிரதேசங்கள் என்னும் ஹிந்தி வார்த்தையைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றார்
இந்த வேளையில் குறுக்கிட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு, பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு. எனவே, ஒரு மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறுவது சரியான முடிவு அல்ல என்று தனது கருத்தை முன்வைத்து உறுப்பினர்கள் தங்களின் சக்தியை அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசமைப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளில் செலவழிக்க வேண்டுமென்றும் இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத பிரச்சனைகளில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பண்டித நேரு அவர்களின் கருத்துக்கு ஒத்திசைவு தந்து பிறர் கொண்டு வந்த திருத்தங்கள் அனைத்தையும் எதிர்க்கின்றார்.
பின்னர் ஒரு சமரசத் தீர்வாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாரத் என்று அறியப்படும் இந்தியா India that is Bharat என்னும் திருத்தத்தை முன் வைக்கிறார்.
திரு.எச் வி காமத் அவர்களும் திரு.சேத் கோவிந்த் தாஸ் அவர்களும் பாரத் அல்லது ஹிந்து என்னும் சொல் முதலில் வரவேண்டும் இந்தியா என்னும் சொல் பின்னால் வரவேண்டும் என்னும் திருத்தத்தை முன்வைக்கின்றார்கள்.

திரு.காலா வெங்கட் ராவ் அவர்கள், ஹிந்த் & இந்தியா என்ற சொற்கள் அயற்சொற்கள் என்னும் கருத்தியலால் இந்தி மொழியின் பெயரையே பாரதி என்று மாற்ற வேண்டும் என வேண்டினார்.

திரு.கமலபதி திருபாதி அவர்கள் மேலுலகத்தில் வசிக்கின்ற கடவுள்கள் பாரத் என்றே இந்த நாட்டின் பெயரை நினைவில் வைத்துள்ளார்கள் என்று சொல்கின்றார்.

இந்த நிலையிலே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறுக்கிட்டு இந்த விவாதங்கள் எல்லாம் தேவையா இன்னும் முக்கியமான வேலை நிறைய இருக்கின்றது என்று அவையின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

பின்னர் திருத்தங்கள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு அண்ணல் அம்பேத்கரின் திருத்தமே அரசமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதன்படி India that is Bharat இந்தியா எனும் பாரத் என்னும் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

முடிவுரை :

இந்தக் கட்டுரையில் வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா மற்றும் பாரத் ஆகிய சொல்லாடல்களைப் பற்றி ஆராய்ந்தபின் இந்த நாட்டின் பெயராக அந்தச் சொற்கள் எப்படி நிறுவப்பட்டன என்பதை ஆய்ந்த பின்னே நாம் கீழ்க்கண்ட முடிவுகளை எளிதாக எட்டலாம்.

01. இந்தியா மற்றும் பாரத் ஆகிய இரண்டு பெயர்களுமே காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரில் மக்களுக்கு உந்துதல் தந்தது.
02. பல நூற்றாண்டுகளாக இந்த நிலப்பரப்பு இந்தியா என்னும் பெயராலும் அறியப்பட்டிருந்தது.
03. பாரத் என்னும் பெயரும் வெகு காலமாக இங்கு புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
04. இந்தியா என்னும் பெயர் காலனியாதிக்கம்

நம் நாட்டின் மீது திணித்த பெயர் என்று கருதுவது தவறாகும். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிந்து என்னும் சொல்லாடலின் அகவழக்கின் புறவழக்கே (Exonym of Endonym) இந்தியா என்னும் சொல்லாடலாகும். இந்தியா என்பது அயற்சொல் இல்லை.

05. யாரேனும் இந்தியா என்னும் சொல்லை அயற்சொல்லாகக் கருதி அதன் மீது வெறுப்பை உமிழ்ந்தால், பாரத் என்னும் சொல்லும் ஈரானிய வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த சொல் என்பதால் அதையும் அயற்சொல்லாகக் கருதி அதன் மீதும் வெறுப்பை உமிழ வேண்டும்.

06. யாக வேள்வியில் வார்க்கப்படுகின்ற காணிக்கைகளை நெருப்பானது மேலுலகில்வாழ்கின்ற தேவர்களிடம் கொண்டு சேர்ப்பதால் நெருப்புக்குப் பரதா என்னும் பெயர் வந்தது. இதனாலேயே நெருப்புக்கு ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயரும் வந்தது.

07. பரதப் பழங்குடியினர் வடமேற்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கங்கைச்சமவெளியில் குடி அமர்ந்து குரு ராஜ்ஜியத்தை அமைத்தார்கள்.

08. மகாபாரதத்தில் வருகின்ற பரத என்னும் சொல்லாடல் சகுந்தலை துஷ்யந்தன் ஆகியோரின் மகனான பரதனைக் குறிக்கவில்லை. அது பரதப் பழங்குடியினரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது.

09. சமண மதத்தின் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் மகனான பரதச் சக்கரவர்த்தியின் பெயராலேயே இந்த நாடு பரதவர்ஷா என்று அழைக்கப்பட்டது என்பதை சமணத்தின் ஆதி புராணத்தின் வழியாகவும் அதே கருத்தை உறுதி செய்யும் வேதியத்தின் விஷ்ணு புராணம் ஸ்ரீமத் பாகவதத்தின் வழியாகவும் நாம் அறிந்தோம்.

10. பரதவர்ஷத்தில் தென்னிந்தியப் பகுதிகள் அடங்கி இருக்கவில்லை. மனுவின் ஸ்ருதிகள் இந்தக் கூற்றை உறுதி செய்கின்றன. கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே பரதவர்ஷா நாட்டின் எல்லைப் பரப்பாக அமைந்திருந்தது.

11. மிகப் பழமையான தொன்மவியல் ஆதாரமான ஹத்திகும்பாக் கல்வெட்டு கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா இருந்துள்ளதையும் கலிங்கமும் தென்னாடும் பரதவர்ஷத்தில் இணையாமல் தனித்து இருந்ததையும் காட்சிப்படுத்தியது.

12. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்களில் சில உறுப்பினர்கள் இந்தியா என்னும் சொல் அயற்சொல் என்று கருதி அதை நீக்க முற்பட்டதுடன் இந்தி மொழியின் மேல் கொண்ட அபிமானத்தாலும் இந்து மதத்தின் பால் கொண்ட அபிமானத்தாலும் பாரத் என்ற சொல்லே நம் நாட்டின் பெயராக இருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

13. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தியா என்னும் பாரத் என்னும் ஒரு திருத்தத்தை கொண்டு வந்து வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா, பாரத் ஆகிய இரண்டு பெயர்களையும் அரசியல் சட்டத்தில் இடம் பெறச் செய்தார்.

14. மானுடவியலின் அடிப்படையிலும் வரலாற்றின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்
பட்ட இந்த ஆய்வு என்பது இந்த இரண்டு சொற்களின் உண்மைத் தன்மையை உணர வைக்கின்றது.

- உண்மை இதழ், 1-15.2.25