பக்கங்கள்

புதன், 3 ஜனவரி, 2018

மத நம்பிக்கையின் விளைவு

.


27.05.1934 - புரட்சியிலிருந்து

வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப் பட்டு சாகுந் தருவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டுமென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து போனதாக அ.பி. (அசோசியேட்டட் பிரஸ்) செய்தி கூறுகின்றது. இது எவ்வளவு பரிதாபகரமான விஷயம்? மத நம்பிக்கை யினால் எவ்வளவு கொடுமைகளும், கேடுகளும் விளைகின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்.

இந் நிகழ்ச்சிக்கு மத நம்பிக்கை காரணமல்ல. காதலே காரணம், கற்பே காரணம் என்று சிலர் தத்துவார்த்தம் சொல்லி மதத்தைக் காப்பாற்ற இருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்களை ஒன்று கேட்கின்றோம்.

காதல் என்றும் கற்பு என்றும் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டு பார்ப்போ மானாலும் இன்று உலகில் புருஷனைச் சாகக் கொடுத்துவிட்டு விதவையாகவோ அல்லது வேறு ஒருவரை மணந்தோ, இரகசியமாகவோ, இயற்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் எல்லோரும் அவரவர்கள் புருஷனிடத்தில் காதலில்லாமல் கற்பு இல்லாமல் இருந்தவர்களா என்று கேட்கின்றோம். மற்றும் இன்று புருஷன் இறந்த உடனே இறக்கப் போகும் தருவாயிலோ மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு சாவதற்குத் தயாராயில்லாத பெண்கள் எல்லோரும் காதலும் கற்பும் அற்றவர்களா? என்று கேட்கின்றோம்.

ஆகவே மதத்தின் பெயரால் கல்வி அறிவற்ற ஆண்களும் பெண்களும் எவ்வளவு கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்பதை அறிந்தும் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது அறியாமையா, மூர்க்கத்தனமா அல்லது தெரிந்தே செய்யும் அயோக்கியத்தனமா என்பது நமக்கு விளங்கவில்லை.

புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - பகுத்தறிவிலிருந்து..

நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப்படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர்களே யானால் ஒட்டு மொத்தம் பெண் சமுகத்தில் 100க்கு 20 பெண்கள் விதவைகளாய் இருக்கிறார்கள். இந்த விதவை களுள் 100க்கு 25 பேர்கள் 20 வயதிற்குக் கீழ்ப்பட்ட விதவைகள் என்றால் அவர்களின் கஷ்டத்தையும், அனு பவிக்கும் வேதனைகளையும் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நாள், கோள் பார்த்து சாஸ்திரப்படி சடங்குகள் செய்யப்பெற்ற தெய்வீகக் கலியாணங்களில் பெண்கள் 100க்கு 20 பேர் ஏன் விதவைகளாய் இருக்க வேண்டும். அவர்களில் 100க்கு 25 பெண்கள் 20 வயதுக்குட் பட்டவர்கள் விரக வேதனையில் ஏன் அழுந்திக் கொண் டிருக்க வேண்டும் இது தெய்வீக மதத்தின் பலனா?  அல்லது அசுர மனத்தின் பிசாச மனத்தின் பலனா என்று யோசித்துப் பாருங்கள். தெய்வீகம், பழக்கம், வழக்கம், சாஸ்திரம் என்கின்ற வார்த்தைகள் முன்னேற்றத்துக்கும், பகுத்தறிவுக்கும், சுதந் திரத்துக்கும், ஜென்ம விரோதியான வார்த்தைகளாகும். (ஆதலால் சுயமரியாதைக் கலியாணம் என்பதில் மேற்படி முன்னேற்ற விரோதியான வார்த்தைகளாகும்.) ஆதலால் சுயமரியாதைக் கலியாணம் என்பதில் மேற்படி முன்னேற்ற விரோதிகளுக்கும், சுதந்திர விரோதிகளுக்கும் இடமில்லை.

இந்தக் காரணங்களால்தான். பழமை விரும்பிகள், வைதிகர்கள் பகுத்தறிவற்ற கோழைகள், சுயமரியாதை இயக்க மென்றாலும், சுயமரியாதைக் கலியாண மென்றாலும் முகத்தைச் சுழித்து கண்களை மூடி விழிப்பார்கள். இவர் களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தக் கூட்டங்களுக்கு மரியாதைக் கொடுத்த எந்த தேசமோ, சமுகமோ விடுதலை பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.

ஆகையால்தான் இந்தப் பிரச்சாரம் செய்து வருகின்றோம். மற்றபடி இந்தக் கலியாணத்தில் என் போன்றாருக்கு யாதொரு வேலையும் இல்லை. புரோகிதத்துக்காக எவரும் இங்கு வரவும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன். 

- விடுதலை நாளேடு, 29.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக