பக்கங்கள்

புதன், 6 பிப்ரவரி, 2019

திருப்பதி கோவிலில் ரூ.10 கோடி மதிப்பிலான 3 தங்க வைடூரிய கிரீடம் கொள்ளை

திருப்பதி, பிப்.4 திருப்பதி ரயில் நிலையம் அருகே திருப்பதி தேவஸ் தானத்திற்கு உட்பட்ட கோவிந்தராஜூலு பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகிலேயே கோவில் உள்ளதால் உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள் அந்தக் கோவிலுக்குச் செல்வார்களாம்.

இதே கோவிலில் பிரம்மோற்சவ விழா மற்றும் திருவிழா காலங் களில் கடவுளர் சிலை வீதிஉலா நடைபெறும் போது ஏராளமான தங்க, வைர, வைடூரியம் நகைகள் அணிவித்து அலங்காரம் செய்வார்களாம்.

கடவுளர் சிலை வீதி உலா முடிந்த உடன் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து அறையில் பூட்டி வைக்கப்படும்.

பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தினமும் இரவு பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து கடவுளர் சிலை நகைகளை கணக்கெடுத்து சரிபார்ப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 9 மணியளவில் திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் கடவுளர் சிலை நகைகள் உள்ள அறையை திறந்து கணக்கெடுத்தனர். அப்போது சிலைக்கு அணிவிக்கும் 3 தங்க வைடூரிய கிரீடங்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அறை முழுவதும் தேடிபார்த்தனர். எங்கும் கிரீடம் இல்லை. வெங்கடேசபெருமாள் கிரீடம் 528 கிராம், சிறீதேவி கிரீடம் 405 கிராம், பூதேவி கிரீடம் 415 கிராம் என மொத்தம் ஒரு கிலோ 351 கிராம் மற்றும் வைர, வைடூரியம் பதிக்கப்பட்ட கிரீடங்கள் என கூறப்படுகிறது. மொத்தம் 3 தங்க கிரீடமும் சேர்த்து 1348 கிராம் ஆகும். இந்த கிரீடத்தில் பழங்கால தங்க நகைகள், வைரம் பதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ண தேவராயர் இந்த தங்க கிரீடங்களை கோவிலுக்கு வழங்கியுள்ளார். அப்போதைய மதிப்பு ரூ. ஒரு கோடி. தற்போது ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஞானபிரகாசம் திருப்பதி காவல்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அன்புராஜன் மற்றும் காவல் துறையினர் கோவிலுக்குச் சென்று நகை பாதுகாப்பு அறை மற்றும் கோவிலில் வைக்கப்பட்ட சி.சி.டிவி. 12 கேமரா பதிப்புகளை ஆய்வு செய்தனர்.  கல்யாண உற்சவத்தின் போது 3 தங்கக் கிரீடமும் இருந் துள்ளது.

காவல்துறையினரின் சோதனையில் கல்யாண உற்சவம் நடைபெறும் மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டிவி. கேமரா கடந்த ஒரு மாதமாக பழுதாகி இருந்தது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் பிரதான அர்ச்சகர்கள் 3 பேரிடமும், கோவில் ஊழியர்கள் சிலரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-  விடுதலை நாளேடு, 4.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக