பக்கங்கள்

வெள்ளி, 2 டிசம்பர், 2016

வீண் செலவால் தரித்திரம்

17-8-1930, குடிஅரசிலிருந்து....

பயனில்லாத வழியில் மதத்தின் பேரால் நமது பணத்தையெல்லாம் பாழாக்குகிறோம். ஒரு மனிதன் தினம் 8 அணா சம்பாதித்து 4 அணா மிச்சம் பிடித்தால் அவன் அதை பிதிர்களுக்கும், சடங்குகளுக்கும், சாமிகளுக்கும், பொங்கல்களுக்கும் செலவு செய்யவே வழி காட்டப்படு கிறான். அவன் ஒரு வாரத்தில் சேர்த்ததைக் குடியில் செலவு செய்கிறான். ஒரு மாதத்தின் மீதத்தைப் பண்டிகையில் செலவு செய்கிறான். ஒரு வருஷ மீதத்தைத் திதியில் செலவு செய்கிறான்.

10 வருஷ மீதத்தைக் கலியாணம் கருமாதியில் செலவு செய்து விடுகிறான். இவையன்றியும் சில்லரைச் சடங்குகளும், சில்லரைத் தேவதை களும் உற்சவங்களும் நம் செல்வத்தை விழுங்கிவிடுகின்றன. மேற்கொண்டு கடனும் வாங்கச் செய்கின்றன. இவைகளே நாம் நிரந்தர கடனாளியாகவும் தரித்திரவான்களாகவும் இருப்பதற்குக் காரணங்களாகும். இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. படிப்புக்குப் போதுமான பணம் இல்லையா? நமது தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக்கொள்ளுங்கள்.

உற்சவங்கள் காரணமாய் வருடம் 40 ஆயிரம், 50 ஆயிரம், லட்சம் ரூ வரை வருஷ வருமானமுடைய 30, 40 கோயில்கள் இருக்கின்றன. சமயங்கள் காரணமாய் வருடத்தில் 5 லட்சம், 10 லட்சம் வரும்படியை உடைய பல மடங்கள் இருக்கின்றன. கணக்குப் போட்டால் எவ்வளவு ரூபா மொத்த மதிப்பு ஆகிறது. உற்சவ செலவும்  ஜனங்கள் போக்குவரத்து, ரயில் முதலிய செலவும் சேர்த்து எல்லாம் பார்த்தால் எந்த காரணத்தினாலும் 1 கோடிக்கு குறையாது.

திருச்சிராபள்ளி ரங்கநாதர், தென்னாற்காடு நடராஜர், மதுரை மீனாட்சி, ராமனாதபுரம் ராமலிங்கம் ஆகிய சாமிகளும், மற்றும் வட ஆற்காடு ஜில்லா அருணாசலம், செங்கற்பட்டு வரதராஜ உடையவர்; சென்னப் பட்டினம் கபாலீசர், சித்தூர் வெங்கிடாசலபதி ஆகிய சாமிகளின் உற்சவங்கள் கணக்கு எவ்வளவு திருப்பதி கோயிலில் 20 வட்ச ரூபாய் காணிக்கை; ஏழரைக் கோடி ரூபாய் சொத்து, நகை, பாண்டுகள், வாகனங்கள், கட்டிடங்கள் இவற்றை எல்லாம் விற்றுக் கணக்குப் போட்டுப் பார்த்து 100க்கு 6 வட்டி வீதம் 40 லட்சம் ரூ வட்டி அடையலாம்.

இந்த ஜனங்கள் காணிக்கைகள் உண்டியலில் கொடுத்தல் போக வர செலவு எல்லாம் 60 லட்சம் ரூபாய் ஆகும். அவ்வளவும் நம் மக்கள் வீண் செலவு  செய்து விடுகிறார்கள். திருப் பதிக்குப் போய் மொட்டை அடித்துக் கொள்ளுகிறவர்களின் செலவு எல்லாம் சேர்த்து மொத்தத்தில் 1 கோடி ரூபாய் ஆகிறது. இது போலவே இந்த இரண்டு ஜில்லாவிற்கு மாத்திரம் மேற்படி 2 கோடி ரூபாயாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? மற்ற சாமிகள் பணத்தாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ஜில்லாவிலுள்ள மடங்கள் என்ன போதிக்கின்றன? என்ன அறிவை வளர்க்கின்றன?

தலைக்கு  நாள் ஒன்றுக்கு, 2, 5, 10, 15 ரூபாய் வரை, சராசரி சம்பாதிக்கக் கூடிய மக்களையுடைய அய்ரோப்பிய தேசங்கள் இருக்கின்றன. நம் தேசத்தில் ஒருவன் சராசரி ஒன்றரை அணாதான் சம்பாதிக்கிறான். இது கூட இரண் டரை அணா செலவு செய்யக் கற்ற பிறகுதான். இத்த னைக்கும் நாம் ஒரு செல்வக் கடவுளைக் கும்பிடுகிறோம். விளக்கமாறு, முறம், அம்மிக் குழவி, சாணிச் சட்டி உள்பட எல்லாம் லட்சுமி என்கிறோம். அப்படிக் கும்பிடும் நாம் இன்னும் ஏழையாகவே இருக்கிறோம்.

நம் மக்கள் சிங்கப்பூர், கொளும்பு, நெட்டால், தென்னாப்பிரிக்கா முதலிய இடங்களுக்குக் கூலி ஆட்களாகப் போகிறார்கள். இத்தனை லட்சுமிக் கடவுள்கள் இருந்தும் இந்தத் தரித்திர நிலைமையில் தான் இருக்கின்றோம். இதற்கு நம் சோம்பேறித்தனமும் நம் மக்கள் பணம் அனாவசியச் செலவு செய்யப்படுவதுமே காரணம். பணக்காரன் தொழில் துறையில் பணம் செலவு செய்வதில்லை. பணம் சேர்ந்தவன், கடவுள் தந்தார் என்கிறான். ஏழையானவன் கடவுள் நமக்குக் கொடுக்க வில்லை என்று நினைக்கிறான். ஏழை மக்கள் கடவுள் கொடுக்கவில்லை என்கின்றார்களே யொழிய அப்படிப்பட்ட கடவுளை ஒரு கை பார்ப்போம் என்று நினைப்பதில்லை. எதற்கும் கடவுள் செய்வான் என்ற கொள்கையே இருக்கிறது.

செல்வமானது கல்விக்கும் தொழிலுக்கும் உபயோக மாகும்படி செலவு செய்யப்படாமல் பணக்காரர்களால் சாமிக்கும், கோயில்களுக்கும் சடங்கிற்கும் போய்விடுகிறது. சாமிக்கு 3 வேளை 6 வேளை பூசை செய்தல் தாசி மேளம் ஏற்படுத்தல் மரக்கட்டைகளின் மேல் பொம்மைகளை ஏற்றி தேர் என்று சொல்லி இப்படியாக 5,000,10,000 பேர் இழுப்பதில் பணத்தைப் பாழ் செய்கிறார்கள். இது மோட்சமாம்! இப்படியெல்லாம் ஏழை மனிதன் தலையில் கை வைத்து மேனாட்டார் சாமிக்குக் கொடுப்பதில்லை. அவர்கள் குழவிக் கல்லை நட்டு கும்பிடுவது மில்லை. ஒரு மேல் நாட்டான் தன் சொத்தைத் தர்மம் செய்ய எண்ணினால் மருத்துவ ஆபத்திரி கல்வி அபிவிருத்திக்குக் கொடுப்பான். ஒரு கண் ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான்.

குஷ்டரோக ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான். தொத்து வியாதிகள் வராமல் தடுக்கக் கூடிய ஆஸ்பத்திரிக்காகவும் கொடுப்பான். இத்துட னில்லாமல் அவன் தன் நாட்டையும் படிக்க வைத்தப் பின் நம் நாட்டிலுள்ள ஏழைகளும், அனாதை களும் உயர்த்தப்படுவதற்காக மிஷன் பாடசாலைகள் ஏற்படுத்தியிருக்கிறான். தொழிற்சாலை வைக்கிறான். நாமும் அதில் பங்கு அனுபவிக்கிறோம். நம் பிள்ளை களையும் அவர்களுடைய பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பு கிறோம். அவர்களது ஆஸ்பத்திரிகளுக்கும் செல்லுகிறோம். நாமோ தவறான வழியாகக் குழவிக் கல்லின் தலையில் நம் செல்வத்தைப் பாழாக்குகிறோம். நம்மிடம் அறிவு இல்லை. ஆகையினால் செல்வ விருத்தியும் இல்லை.
-விடுதலை,2.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக