பக்கங்கள்

ஞாயிறு, 28 ஜூலை, 2024

பதிலடிப் பக்கம்: சிந்து – சரஸ்வதி நாகரிகமா?

Published July 26, 2024, விடுதலை நாளேடு

 (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)

– கவிஞர் கலி.பூங்குன்றன்

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடப் புத்தகங்களை வடிவமைத்து வருகிறது.
தற்போது, ஆறாம் வகுப்புக்கான சமூக அறிவியல் புத்தகத்தில் சில மாற்றங்கள் என்ற பெயரில் வரலாற்றைத் திரித்துள்ளனர்.
ஹரப்பா என்பது நிலப்பரப்பையும், ஹரப்பர்கள் என்பது, அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களையும் குறிக்கும் எனக் கூறி, சிந்து – சரஸ்வதி நாகரிகம் உட்பட இந்தப் பெயர்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம் என சப்பைக் கட்டு கட்டியுள்ளது.
தவிர, சரஸ்வதி நதி தொடர்பாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்பு சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட நதி தற்போது இந்தியாவில் காக்கர் என்று அறியப்படுகிறது; பாகிஸ்தானில் ஹாக்ரா என்று அழைக்கப்படுகிறது என்கிறது.

சமூக அறிவியலுக்கு ஒருங்கிணைந்த பாடநூல்
முன்பு வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் புவி யியல் பாடங்களுக்கு தனித்தனி பாடப்புத்தகங்கள் இருந்தன. இப்போது சமூக அறிவியலுக்கு ஒரே பாடநூல் உள்ளது. சமூக அறிவியல் பல துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது, ஆனால் மாணவர்கள் இந்த விதிமுறைகளால் பயப்படத் தேவையில்லை என்று புத்தகம் விளக்குகிறது. பாடநூல் அய்ந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ‘இந்தியாவும் உலகமும்: நிலமும் மக்களும்,’ ‘கடந்த காலத்தின் ஆடை,’ ‘நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவு மரபுகள்,’ ‘ஆட்சி மற்றும் ஜனநாயகம்,’ மற்றும் ‘நம்மைச் சுற்றியுள்ள பொருளாதார வாழ்க்கை’ என்று பிரிக்கப்பட்டுள்ளது.


ஹரப்பா நாகரிகத்தை சரஸ்வதி
நாகரிகமாக மாற்றிய பா.ஜ.க.
பழைய வரலாற்றுப் பாடப்புத்தகத்தில், ‘சரஸ்வதி நதி ரிக்வேத பகுதியில்’ ஒருமுறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது,
புதிய பாடப்புத்தகத்தில், இந்திய நாகரிகத்தின் தோற்றம் தொடர்பான அத்தியாயத்தில் “சரஸ்வதி நதி” பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அத்தியாயம் ஹரப்பா நாகரிகத்திற்குப் பதிலாக ‘சிந்து-சரஸ்வதி நாகரிகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகம்.
புதிய பாடப்புத்தகத்தின் புவியியல் பகுதியில் இமய மலையைக் குறிக்கும் வகையில் காளிதாசனின் ‘குமாரசம்பவ’ கவிதை இடம்பெற்றுள்ளது. தமிழ்ச் சங்கக் கவிதைகளையும் நிலப்பரப்புட னான அதன் தொடர்பையும் குறிப்பிடுகிறது.

கிரீன்விச் மெரிடியன் முதல் பிரைம் மெரிடியன் அல்ல என்று புத்தகம் விளக்குகிறது. அய்ரோப்பாவிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்தியா தனது சொந்த பிரதான நிலநடுக் கோட்டைக் கொண்டிருந்தது, இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி வழியாக சென்றது.
பழைய அரசியல் அறிவியல் பாடப்புத்த கத்தைப் போலவே, புதிய புத்தகத்திலும் பன்முகத்தன்மை பற்றிய அத்தியாயம் உள்ளது. இருப் பினும், அதில் ஜாதி அடிப்படை யிலான பாகுபாடு மற்றும் சமத்துவ மின்மை குறிப்பிடப்படவில்லை. புதிய புத்தகத்தில் ஒருமுறைதான் “ஜாதி” என்ற வார்த்தை வருகிறது. பழைய புத்தகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், அவர் நடத்திய பட்டியலின மக்கள் உரிமைகளுக்கான போராட்டம், ஜாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த அவரது அனுபவங்கள் பற்றிய முழுப் பகுதியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சரஸ்வதி – சிந்துவெளி நாகரிகம்???
20 ஆண்டுகளுக்கு முன்னால். 1995இல் பேராசிரியர் வி.என். மிஸ்ரா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘மாந்தன்’ இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதன் தலைப்பு ‘தொலைந்துபோன சரஸ்வதி – ஹரப்பா நாகரிகத்தின் தொட்டில்’. அடுத்த ஆண்டு, இந்தியத் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக் கழகத்தின் புரவலரான எஸ்.பி. குப்தா, சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் பற்றி ‘தி இண்டஸ் – சரஸ்வதி சிவிலைசேஷன்’ (சிந்து – சரஸ்வதி நாகரிகம்) என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார்.

ரிக் வேதம் என்ன சொல்கிறது?
சங் பரிவாரத்தைச் சேர்ந்த பண்டிதர்கள் கிட்டத்தட்ட ஒருவர் விடாமல் ரிக் வேதத்திலிருந்து பாடல்களை ஒப்புவிக்கிறார்கள். ரிக் வேதத்தில், சரஸ்வதி நதி மாபெரும் நதியாகவும், மலையில் தோன்றி கடலில் கலக்கும் நதியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ரிக் வேதக் கவிஞர்கள் சரஸ்வதியை நதியாகக் கற்பனை செய்திருப்பதைவிட, நதிதெய்வமாகக் கற்பனை செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. வேறொரு பார்வையும் இருக்கிறது. ருடால்ஃப் வான் ராத், ஹெய்ன்ரிச் ஜிம்மர், கே.சி. சட்டோபாத்யாய போன்றோர் சரஸ்வதி என்பது சிந்து நதியைக் குறிக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். ஆக, அரியானாவின் இன்றைய சரஸ்வதி இமயமலையில் தோன்றவில்லை என்பதும் கடலில் கலக்கவில்லை என்பதும் தெளிவு!
யமுனையும் சட்லெஜும் சரஸ்வதி நதியில் கலந்தன என்றும், இதனால் சரஸ்வதி நதி இமயமலை நதியாக மாற்றம் பெற்றது என்றும் சொல்கிறார்கள். அப்படியொரு சங்கமத்தை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில்தான் அது நடந்திருக்கக் கூடும். அப்போது சரஸ்வதி நதி, யமுனை அல்லது சட்லெஜ் நதிகளில் ஒன்றுடன் கலந்திருக்குமே தவிர, அந்த நதிகள் சரஸ்வதியுடன் கலந்திருக்காது. மேரி-அக்னெஸ் கவுண்டி என்பவரின் குழு 1983-1987 காலகட்டங்களில் காகர் சமவெளியின் நதிப் படிவுகளை அகழ்ந்தெடுத்து மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவு மேற்கண்ட சாத்தியங்களை நிராகரித்தது.

கடந்த 10,000 ஆண்டு காலத்தில் இமயமலையிலிருந்து எந்த நதியும் அந்தப் பிரதேசத்தில் பாய்ந்திருக்க வாய்ப்பில்லை என்று அந்த ஆய்வு முடிவு சொன்னது.பிரயாகையை வந்தடையும் சரஸ்வதி என்ற பழம் புராணம், சிந்து நதிக்குச் சவால் விடுக்கும் சரஸ்வதி நதி என்ற சமீபத்திய போட்டி. இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைக்காதவை. இவற்றில் ஒன்றை அரியானா அரசு தேர்ந்தெடுக்க வேண்டும். சரி, இந்தச் சிரமம் எதுவும் வேண்டாமென்று அரியானா அரசு நினைத்தால், சரஸ்வதி நதி குறித்த இன்னொரு பழைய புராணத்தைப் பரிசீலிக்கலாம்.
ரிக் வேதத்தில் நதிக்கான கீதம் (X. 75.5) யமுனை நதிக்கும் சட்லெஜுக்கும் இடையில் சரஸ்வதியை வைக்கிறது. ச

ரஸ்வதி நதியுடன் இது பொருந்திப்போகிறது. பஞ்சவிம்ஷா பிரமாணம் உள்ளிட்ட தொன்மையான நூல்கள், வினஷனா என்ற இடத்தில் சரஸ்வதி நதி மறைந்ததைப் பற்றிப் பேசுகின்றன. அப்படியென்றால், காகர் நதியுடன் அது இணைந்திருக்க முடியாது. அதற்கு மாறாக இன்னும் தெற்கு நோக்கி, அநேகமாக சிர்ஸா பகுதியின் வழியாக (இடைக்காலத்தில் இந்தப் பகுதியின் பெயர்: சரஸதி) பாய்ந்திருக்கலாம். வினஷனா என்பது அரியானாவில் இன்னும் தெற்குப் பகுதியில் இருந்திருக்கலாம். மனுஸ்மிருதி (2.17) சரஸ்வதி நதி, திருஷத்வதி நதி (சவுதங் நதி?) ஆகிய நதிகள் பாயும் பகுதிதான் பிரம்மவர்த்தம் என்று சொல்கிறது. ஆகவே, மேற்குறிப்பிட்ட வகையில் சரஸ்வதி நதி பாயும் பாதை பிரம்மவர்த்தமாக இருக்கக் கூடும்; அரியானாதான் அந்த பிரம்மவர்த்தம்.
சரஸ்வதியைப் பற்றிய புராணச் சித்தரிப்புகள் புவியியலுடனோ வரலாற்றுடனோ சற்றும் பொருந்திப் போகவில்லை என்பதே தெளிவு. அப்படியென்றால், சரஸ்வதியை உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்துக்கோ குஜராத் மேற்கு பாலைவன எல்லையான கட்சின் ரன் பகுதிக்கோ கொண்டுசெல்வதற்கு முயற்சிக்கிறார்கள். இவர்களின் கூற்று எதுவுமே உண்மையல்ல. கட்டுக்கதைகளாகும்

சிந்துவெளி திராவிட நாகரிகம்
சிந்துவெளி நாகரிகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக, உதாரணமாக சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு உடந்தையாக இருக்கின்ற போதிலும் இன்னும் பலர் நான்கு [உண்மையில் மூன்று , நாலாவது அதிகமாக தனித்தே இருக்கிறது] வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று தான் சிந்து வெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுகின்றனர். மேலும் வேதங்களுள் காலத்தால் முந்திய ரிக் வேதத்தில், வேதகாலத்தவர் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளை நாம் காணலாம்.

அதுமட்டும் அல்ல, இந்த ஆரியர்கள் மேய்ச்சல் நிலங்கள் தேடி நாடோடியாக வந்த ஆயர் கூட்டத்தினர். கிராமப் புறக் கலாச்சாரம் கொண்டிருந்த இவர்கள் கி.மு.500 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி மாதிரி நகர்ப்புறக் கலாச்சாரத்தை, நகரங்களை உருவாக்கவில்லை என்பது வரலாற்று உண்மையும் ஆகும். ஆகவே இந்தப் பின்புலத்தில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் வேதக் கலாச்சாரத்திற்குமான அடிப்படை வேறுபாடுகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் எது உண்மை எது பொய் என்பதை தீர்மானிக்கலாம்.
ஆரியரைப் பற்றி வேதத்தில் அவர்கள் ஓரளவாக இடையர்களாகவும் ஓரளவாக விவசாயம் சார்ந்த மக்களாகவும் காட்டுகிறது. மேலும் அவர்கள் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். அவர்களின் வீடுகள் பொதுவாக மூங்கிலால் கட்டப்பட்டவை. இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறுகள், வரிசையாக அமைக்கப் பட்ட வீதிகள், மழை நீர் வடிகால்கள், சாக்கடைகள், மற்றும் குளியலறைகள் கொண்ட வீடுகளால் அவர்களின் நகர்ப்புற நாகரிக நகரம் நிறைந்திருந்தது.

“தனக்குப் படையல் கொண்டு வந்த, வேத கால காசி நாட்டின் மன்னன் “திவோதாச”, விற்காக, நூறு கல் கோட்டைகளை இந்திரன் அழித்தான்” என்ற ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 30 சுலோகம் 20 இதை மேலும் உறுதிப்படுத்துகிறது, ரிக் வேதத்தில் தஸ்யுக்கள் குறிப்பிட்ட இடத்தில், வலுவான நகரங்களில் அல்லது கோட்டைகளில் வசிப்பவர்களாகக் கூறப்படுகிறார்கள். மேலும் அவர்கள் வசம் 100 கோட்டைகள் இருந்தன. இந்த சுலோகம் மூலம் தெரியவருகிறது. தசியூக்கள் என அழைக்கப் பட்ட, ஹரப்பாவிலிருந்த சாம்பன் என்னும் சம்பரன் எனும் பிற்காலச் சிந்துவெளியில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்த அரசனை வெற்றி கொள்வதற்கு, சம்பரனின் பழம்பகைவனான, ஆரிய மன்னரான திவோதாச விற்கு இந்திரன் உதவியதை இது கூறுகிறது.

2. ரிக் வேத காலத்தில் இந்தோ-ஆரியர் பாவித்த உலோகங்கள் பொதுவாக பொன், செம்பு அல்லது வெண்கலம் ஆகும். அதன் சற்று பின் அதாவது யசுர்வேத, அதர்வணவேத காலத்தில் இந்த உலோகங்கள் வெள்ளி, இரும்பு போன்றவற்றால் அதிகப்படுத்தப் பட்டன. ஆனால் சிந்து சம வெளி மக்களிடம் வெள்ளி, பொன்னை விட முதன்மையாக உபயோகத்தில் இருந்து உள்ளது. மேலும் கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அவர்களிடம் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இருக்கவில்லை. ஆனால், இந்த ஆரியர்கள் இரும்பின் பயனை அறிந்திருந்தார்கள். இரும்பு ஆயுதங்களை உபயோகித்து ஆற்றங்கரைகளில் உள்ள காடுகளைத் திருத்திக் குடியிருப்புகளை உருவாக்கினவர்கள் என்பதும் குறிப் பிடத்தக்கது. இரும்பு வேதத்தில் அயஸ் [ayas] என்று அழைக்கப்பட்டது என பொதுவாக அறிஞர்கள் கூறுகிறார்கள். பொன் என்றால் இரும்பு, தங்கம், அய்ந்து உலோகங்களில் எதையும் குறிக்கலாம். இதனால்தான் கோவிலில் உள்ள சிலைகளை அய்ம்பொன் சிலைகள் என்று கூறுகிறோம். அதே போலத்தான் அயஸ் என்ற சொல்லும் ஆகும். இதனால்தான் போலும் வேதத்திலேயே கறுப்பு அயஸ் (இரும்பு), சிவப்பு அயஸ் (செம்பு) என்ற சொற்களும் உண்டு.

3. வேதங்கள் மூலம் இந்தோ ஆரியன் வில், அம்பு, ஈட்டி, குத்துவாள், கோடாரி போன்ற தாக்குதலிற் பயன் படுத்துகிற ஆயுதங்களும் தடுப்பு நடவடிக்கைக்கு தலைக் கவசங்களும் உடல் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப் படுகிறது. ஆனால் சிந்து சமவெளி மக்களிடம் மேல்கூறிய ஆயுதங்களுடன் தண்டாயுதமும் இருந்தன. ஆனால் தற்காப்புக் கவசங்கள் காணப்படவில்லை. உதாரணமாக ‘ரிக் வேத’த்தின் பத்தாம் மண்டலத்தில் [மண்டலம் 10 மந்திரம் 95 சுலோகம் 03] புரூரவா: “நீ இல்லாவிட்டால் என் அம்புப் பொதியிலிருந்து அம்பு எய்ய முடியாது. செல்வம் கிடைக்காது. நூற்றுக்கணக்கான பசுக்களை வெற்றி கொண்டு நான் கொண்டு வர இயலாது. வீரர்களில்லாமல் என் செயல்கள் சோபிக்காது. நீ இல்லா விட்டால் என் வீரர்கள் வீர முழக்கமிடவும் தயங்குகிறார்கள்.”] என்ற புரூரவா-ஊர்வசியின் காதல் உரையாடலைக் காண்கிறோம்.

4. வேத கால ஆரியர்கள் இறைச்சி உண்பவர்கள். மேலும் பொதுவாக மீனை வெறுப்பவர்களாகவும் இருந்தார்கள். இதனால் மீன் பிடிப்பதைப் பற்றி நேரடியாக வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சிந்து சம வெளி மக்களுக்கு மீன் பொதுவான உணவு. அங்கு மீன் அதிக அளவில் உள்ளது. அது போல மிக மெலிதான ஓடுகளைக் கொண்ட மெல்லுடலி, ஆமை போன்ற மற்ற கடல் உணவுகளும் அங்கு காணப்படுகின்றன. சோமா என்பது ஒரு பானத்தின் பெயர் மட்டு மல்ல. அது ஒரு கடவுளின் பெயராகவும் விளங்கியது. அந்தக் கடவுளுக்கு கால் நடைகள் உட்பட விலங்கினங்கள் உணவாகப் படைக்கப்பட்டன. அக்னிக்குக் குதிரைகள், எருமைகள், காளைகள், பசுக்கள் பலியிடப் பட்டன என்று ரிக்வேதம் 10.91.14 சொல்கிறது. மேலும் மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 9 இதை உறுதிப் படுத்துகிறது. அதாவது, “இந்திரனே! போர் செய்வதிலே வல்லமை படைத்த உனக்கு நாங்கள் (ஆரியர்கள்) அவியை (ஆட்டைக்கொன்று அதன் கறியைச் சமைத்துச் செய்யும் விருந்து) அளிக்கிறோம்” என்கிறது. ஆரியர்கள் கிழக்கு பாரசீகத்தில் (Persia) இருந்து இந்தியா வந்தவர்கள் என்பதால் அவர்களின் முக்கிய உணவாக மாமிச உணவே இருந்தது என்பது இதனால் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

5. வேத காலத்தில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை வேதங்களில் குறிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிந்து சமவெளி மக்களுக்கு குதிரை பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்களது முத்திரைகளில் குதிரை காணப்படவில்லை. மேலும் மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 96,பாடல் (சுலோகம்) 8 இப்படி கூறுகிறது: ‘சோமக் குடியனான இந்திரன், நீண்ட கழுத்தை யுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக்கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக் கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப் பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் (தமிழர்களால்) தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’ அது மட்டும் அல்ல, ரிக் வேதத்தில் குதிரைகள் பற்றியும் அவற்றை வளர்த்தவர் பற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. அந்தச் சமூகத்தவர்க்கு குதிரை ஒரு முக்கியமான வளர்ப்பு மிருகம் என்பதால் அது கடவுளுக்கு பலியாகவும் கொடுக்கப்பட்டது.

வேத காலத்திற்கும் முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்தில் வணிகர் பயன்படுத்திய சுடுமண், மாவுக்கல் முத்திரைகளில் ஆடு, மாடு, யானை, காண்டாமிருகம், பன்றி, ஒட்டகம், மயில் போன்ற உயிரினம் சித்தரிக்கப் பட்டதைக் காணலாம். அவற்றில் இல்லாத விலங்கு குதிரை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது சிந்து வெளி நாகரிகத்துடன் தொடர்புடைய தொல்லியல் தடயங்களில் குதிரைகளோ குதிரை வண்டிகளோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிந்து வெளியில் 1920இல் கண்டெடுக்கப்பட்ட ஒரு பாதி உடைந்த முத்திரையின் பதிவைக் காட்டி சிலர் அது குதிரையின் உருவம் என்றும், சிந்துவெளி நாகரிகத்தவர் குதிரைகளை வளர்த்தனர் என்பதைத் தாம் கண்டு பிடித்து விட்டதாகவும் அறிவித்தனர். சிந்துவெளி நாகரிகத்தில் குதிரைகள் வளர்க்கப்பட்டன என்பதற்கு அவர்கள் காட்டிய ஆதாரங்கள் போலியானவை என்பதை ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர் மைக்கேல் விட்ஸலும் (Michael Witzel), வரலாற் றாய்வாளர் ஸ்டீவ் ஃபார்மரும் (Steve Farmer) திறம்பட விளக்கித் தம் கடுமையான மறுப்புகளை ப்ரண்ட்லைன் (Frontline, அக். 13, 2000) இதழில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் தன் வாழ்நாள் முழு வதையும் சிந்துவெளி ஆய்விற்கு அர்ப்பணித்திருக்கும் அஸ்கோ பர்ப்போலா (Asko Parpola) குதிரையின் பின்பாகம் என சித்தரித்த அந்த படம் உண்மையில் ஒற்றைக் கொம்புடன் சித்தரிக்கப்பட்ட மாட்டின் உருவமே என்பதைக் உறுதிப்படுத்தினார்.

6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது. ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில் ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார் [Horses of dusky colour stood beside me, ten chariots, Svanaya’s gift, with mares to draw them. Kine [cows] numbering sixty thousand followed after. Kaksivan gained them when the days were closing] (1.126.3). இவை வேத காலத்தில் பசுவிற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்து வெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. உதாரணமாக, ரிக் வேதத்தில் இரண்டு பாடல்களில் [சுலோகங்களில்] ஒரு கை கொண்ட மிருகம்-Mrga Hastin-என யானை குறிக்கப்பட்டுள்ளது. பாடல், 1.64.7 “Mighty, with wondrous power and marvellously bright, self strong like mountains, ye glide swiftly on your way. Like the wild elephants ye eat the forests up when ye assume your strength among the bright red flames” என்று கூறுகிறது. யானையை சங்க காலத்தில் இதே மாதிரி ஒரு கை கொண்ட மிருகம் “கைம்மா” என்று கலித்தொகை 23 “இலங்கு ஒளி மருப்பின் கைம்மா” – பளபளப்பான பிரகாசமான தந்தங்களைக் கொண்ட யானை என்றும், புறநானுறு 368 “ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக் கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன” – ஒளியுடன் கூடிய மேகங்களைத் தடுக்கும் மலை போன்ற யானைகளெல்லாம் அம்பு பட்டு இறந்து கிடக்கின்றன என்றும் கூறுகிறது.

இராமன் ஆண்டாலும்… இராவணன் ஆண்டாலும்…!

 


-கி.தளபதிராஜ்

சூத்திரன் தவம் செய்தான் என்பதால் அவன் தலையைக் கொய்தவன்தான் இராமன். வருணாசிரம தருமத்திலிருந்து வழுவாமல் ஆட்சி புரிந்தவன். அவாள் தருமப்படி பெண்களும் சூத்திரர்கள் தானே? அதனால்தான் கட்டிய மனைவியையே தீக்குளிக்கச் சொன்னான். இராமாயணம் ஆரிய திராவிடப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை என்றனர் பல்வேறு ஆய்வாளர்கள். ஆரியத்தின் அடையாளச் சின்னமான இராமனை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும் என்றார் பெரியார்.

1956 இல் புத்தரின் 2500 ஆவது பிறந்தநாள் விழா அரசு சார்பில் சென்னை கோகலே அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தந்தை பெரியார் அவர்கள் இராமாயணத்தில் புத்தரை திருடன் என்று குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இராமனை விமர்சித்துப் பேசினார். இந்த விழா நிகழ்ச்சியை சென்னை வானொலி நிலையம் பதிவு செய்து அன்று இரவே ஒலிபரப்புவதாக இருந்தது. பெரியாரின் உரையை சர்ச்சைக்குரியதாக கருதி அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப் படவில்லை. “ஒரு வாரத்திற்குள் நிகழ்ச்சியை ஒலிபரப்ப வேண்டும். அல்லது ஒலிபரப்பாததற்கான காரணத்தையாவது சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இராமன் படம் தமிழ்நாடு முழுவதும் கொளுத்தப்பட்டு அந்த செய்தி மக்கள் அறியும்படி செய்யப்படும்!” என்று அறிவித்தார் பெரியார்.

1.7.1956 அன்று திருச்சியில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை நாள் விழாவில் நடைபெற்ற ஊர்வலத்தில் வால்மீகியின் குடிகார ராமன், சீதை, அனுமார் வேடங்களைத் தரித்து கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் அவர்கள் உடல்நிலை நலிவுற்ற நிலையிலும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு பேசினார்.

“ராமனை துடைப்பக் கட்டையால் அடிக்க வேண்டும் என்று சொன்னேன்! ஏன்? இதனால் எங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கப் போகிறதா? அப்போதாவது ராமனை ஒரு கடவுள் என்று கும்பிடுபவர்களுக்கு புத்தி வராதா என்பதற்காகத்தான்! நம்மை மானங்கெட்டவர்களாக ஆக்கிவிட்டார்களே! அதற்கு ஒரு படிப்பினை!” என்றார்.

விடுதலையில், “அயோக்கிய ராமனுக்கு கொடும்பாவி! திராவிடர்களைக் கொன்று குவித்து வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டிய ராமனுக்குக் கொடும்பாவி! திராவிடப் பெண்ணின் மூக்கு, காது, முலையை அறுக்கச் செய்த ராமாயண ராமனுக்குக் கொடும்பாவி! சூத்திரனைக் கொன்றால் பாவம் இல்லை என்று சொல்லிய ராமனுக்குக் கொடும்பாவி! சூத்திரர்களை, அசுரர்களை, அரக்கர்களைக் கொல்வதற்காகவே அவதாரம் எடுத்த ராமனுக்கு கொடும்பாவி கட்டி இழுத்து கொளுத்த தயாராக இருங்கள்!” என்ற அறிவிப்பு வந்தது! (விடுதலை 2.7.1956)

21ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் ராமர் படத்தை கொளுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது!

“ஆகஸ்ட் 1ஆம் தேதி கழகத் தோழர்கள் ஹிந்தி எதிர்ப்புக்காகவும், ராமன் கடவுள் அல்ல என்ற கருத்தில் ராமன் உருவத்தை அழிப்பதற்காகவும் பொதுக்கூட்டங்களை நடத்தி, அந்தக் கூட்டத்தில் ‘ஹிந்தித் திணிப்பில் அரசாங்கத்தார் வாக்குறுதிக்கு விரோதமாக நடந்து கொள்வார்களேயானால் அரசாங்கக் கொடி எரிக்கப்படும்’ என்று எச்சரிக்கை செய்துவிட்டு அடுத்த காரியமாக ராமன் உருவத்தை தட்டியிலோ, அட்டையிலோ, துணியிலோ, காகிதத்திலோ எழுதி, ‘இராமன் எந்த ஆதாரப்படியும் நமக்கு கடவுள் அல்ல! என்றும், ஆரியர்கள் நம்மை இழிவு படுத்துவதற்காகவும் மடமையாக்குவதற்காகவும் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவும் செய்து கொண்ட ஒரு கற்பனைச் சித்திரமே அன்றி வேறொன்றுமில்லை என்பதை நன்றாக உணர்வதால் இந்த எண்ணத்தை பொதுமக்களிடையே பரப்ப வேண்டும்!’ என்றும் கூறி ராமன் படத்தைக் கொளுத்த வேண்டும்!” என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.

‘ராமன் உருவம் கொளுத்தப்பட்டாக வேண்டும் ஏன்?’ எனத் தலைப்பிட்டு பெரியாரின் அறிக்கை விடுதலையில் வெளிவந்தது.

“ராமன் வர்ணாசிரம தர்மத்தை, ஜாதியைக் காப்பாற்றுவதற்கு வேத சாஸ்திர ஆதாரமாக மக்களிடையில் இருப்பதற்கென்றே ஆரியரால் பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள்! அதுவும் பார்ப்பன மூல ஆதாரமாகிய வேதத்தின் படியும் மனுதர்ம சாஸ்திரத்தின் படியும் பார்த்தால் ராமன் ஒரு கடவுளே அல்ல! ஜாதி முறையையும் வருணாசிரமதர்ம முறையையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற தமிழ் மக்கள் ஜாதி முறையையும் வருணாசிரம தர்மத்தையும் காப்பாற்றுவதற்காக பார்ப்பனர் பயன்படுத்துகிற ராமனை கடவுளாகக் கருதும்படி விட்டு வைப்பது பெரும் பழியும் மானக்கேடும் ஆகும்!” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். (விடுதலை 25.7.1956)

“ராமாயண கதைப்படி ராமன் தமிழன் அல்ல! ராமன் தமிழ்நாட்டவனும் அல்ல! அவன் வட நாட்டான்! ராமாயணக் கதை தமிழனை இழிவு படுத்துவதைத் தவிர அதில் வேறு கருத்து இல்லை. தமிழ்நாட்டில் ராமாயணத்தையோ ராமனையோ வைத்திருப்பதானது மனித சுயமரியாதைக்கும் இன சுயமரியாதைக்கும் தமிழ்நாடு சுயமரியாதைக்கும் மிக மிகக் கேடும் இழிவுமானதாகும். ராமாயண ராமன், சீதை ஆகியவர்களைப் பொறுத்த வரைக்கும் கடுகளவு கடவுள் தன்மை என்பது காணப்படவில்லை. நாடு சுதந்திரம் பெற்றவுடன் நாட்டில் உள்ள இடங்களுக்கும் பல

ஸ்தாபனங்களுக்கும் வெள்ளையர் பெயர்களை மாற்றி இந்நாட்டவர் பெயர்களை வைத்தது போலும் வெள்ளையர் உருவங்களை பெயர்த்து அப்புறப்படுத்தியிருப்பது போலவும் தமிழன் சுயமரியாதை உணர்ச்சி பெற்ற பிறகு தமிழர்களை இழிவு படுத்தி கீழ் ஜாதி மக்களாக்கிய ஆரிய சின்னங்களையும் ஆரிய கடவுள்கள் என்பதான உருவங்களையும் அழித்து ஒழிக்க வேண்டியது சுத்த ரத்த ஓட்டம் உள்ள தமிழன் கடமையாகும்.” என்றார். (விடுதலை 27.7.1956)

மேலும் ஒரு அறிக்கையில் தந்தை பெரியார் அவர்கள், “ராமாயண பாத்திரங்களில் ஒன்றான ராமாயண ராமனிடம் நானும் கடவுள் லட்சணப்படி ஏதாவது கடவுள் தன்மையோ, ஒழுக்கமோ, நாணயமோ, சாதாரண அறிவோ இருக்கிறதா என்றும் இல்லாவிட்டாலும் துரோகம், வஞ்சகம், பேராசை, மதுவருந்தல், புலால் உண்ணல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் முதலிய கூடா ஒழுக்க குணங்கள் என்பவைகளாவது இல்லாமல் இருக்கிறதா என்றும் துருவித் துருவிப் பார்த்து, இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஆகவே அப்படிப்பட்ட ஒருவனை மக்கள் கடவுளாக, வழிகாட்டியாக, பிரார்த்தனை பக்தி செலுத்தத்தக்கவனாக கருதக்கூடாது என்பதற்காகவே ராமாயண ராமனை கொளுத்துங்கள் என்கிறேன்.” என்று குறிப்பிட்டார். (விடுதலை 28.7.1956)

சென்னையில் ராமர் பட எரிப்பு போராட்டம் 22 இடங்களில் நடைபெறும் என்ற அறிவிப்பு விடுதலையில் வெளிவந்தது. தந்தை பெரியார் அவர்கள் சென்னையில் கலந்து கொள்வார் என்றும் குறிப்பிட்டிருந்தது (விடுதலை 29.7.1956)

ராமர் பட எரிப்பு போராட்டத்திற்கு சென்னை போலீஸ் கமிஷனர் தடை விதித்ததைத் தொடர்ந்து தந்தை பெரியார் அவர்கள் விடுதலையில் விளக்கம் அளித்தார்.

“நான் சர்க்கார் உத்தரவை, போலீஸ் உத்தரவை மீறக்கூடாது என்கின்ற லட்சியம் உடையவன் என்றாலும் என்னுடைய பல நாளைய எழுத்துக்கும் பேச்சுக்கும் நடத்தைக்கும் திருச்சி 21ஆம் தேதி தீர்மானத்திற்கும் பெரிய இழிவையும் சுயமரியாதைக்கு ஈனத்தையும் கொடுக்கத் தக்கதாய் இந்த உத்தரவு இருப்பதாலும் சுதந்திர ஆட்சி என்பதில் வாசம் செய்யும் மனிதனின் உரிமைக்கு கேடாய் இருப்பதாலும் இதை லட்சியம் செய்ய என் மனம் இடம் கொடுக்கவில்லை.

தமிழர்கள் இழிவையும் தன்மானமில்லா தன்மையையும் நீக்குவதில் என் உடல் பொருள் ஆகியவற்றை ஒப்புவித்து விட்டு ஆவியை ஒப்புவிக்க வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறவன் நான். இந்த உண்மை நிலையில் நான் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?” என்றார் (விடுதலை 29.7.1956)
தமிழ்நாடு முழுவதும் பெரியார், குத்தூசி குருசாமி, கடலூர் வீரமணி (தமிழர் தலைவர்) உட்பட பல கழகத் தோழர்கள் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் ராமர் படம் எரிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுதும் தொடர்ந்து ராமர் பட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போகும் வீரர்களின் பட்டியல் விடுதலையில் வெளிவந்து கொண்டிருந்தது தொடர் போராட்டத்தை கட்டுப்படுத்த ராமர் பட எரிப்பு போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை மட்டுமின்றி தமிழ்நாடு முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி தோழர்கள் ஆங்காங்கே ஆரிய இராமனுக்குத் தீயிட்டு சிறை புகுந்தனர். முக்கிய கழக பிரமுகர்கள் முன்கூட்டியே கைது செய்யப்பட்டும் 5000க்கும் மேற்பட்ட தோழர்கள் ராமர் படத்தை எரித்து தமிழ்நாடு முழுதும் கைதாகினர்.

“ராமன் பட எரிப்புக் கிளர்ச்சியில் இமாலய வெற்றி!” என்று விடுதலை தலைப்புச் செய்தி வெளியிட்டது. “வெற்றி வெற்றி இமாலய வெற்றி!” எனத் தலையங்கம் எழுதி வெற்றியைக் கொண்டாடியது.

“கொளுத்தியது குற்றமல்ல!” என பெரியார் விடுத்த அறிக்கையில், “ராமன் கடவுள் அல்ல! ராமாயணக் கதையின் பாத்திரமான ராமன் ஒழுக்கமுள்ள ஒரு யோக்கியன் அல்ல! என கருதுபவர்கள் யாரும், நாட்டு நன்மையை சமுதாய சுயமரியாதையை கருதுபவர்கள் யாரும் ராமன் படத்தை கொளுத்தலாம்!” என்று எழுதினார். (விடுதலை 2.8.1956)

அதனைத் தொடர்ந்து, “நான் ஏன் ராமனை எரிக்கச் சொன்னேன்” என ஒரு தலையங்கம் எழுதினார். அதில், “இன்றைய தினம் எனது சமுதாயத் தொண்டின் முதலானதும் முக்கியமானதுமான ஜாதி ஒழிப்பை எடுத்துக் கொண்டால் ராமனின் முதல் செய்கையும் கடைசி செய்கையும் ஜாதியைக் காப்பாற்ற பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டு செத்ததே ஆகும். நம் நாட்டில் சமுதாய சீர்திருத்த வேலையோ, ஒழுக்கப் பிரச்சார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ எந்த ஒரு சிறிய அளவுக்கு நடக்க வேண்டுமானாலும் முதல் இலட்சிய செய்தியாக, ஸ்லோக சொல் காரியமாக, துவக்கக் குறியாக ராமாயணம் ராமன் அழித்து ஒழிக்கப்பட்டாக வேண்டும்!

தமிழனுக்கு இன்று தன்மானம் தான் தேவை! இது தாயினும் (மதத்தினும்) உயிரினும் (கடவுளினும்) சிறந்ததாகும். தாயை வெறுத்தாவது உயிரை விட்டாவது மானத்தை மனிதத்தன்மையை ஒழுக்கத்தை காப்பாற்றவே ராமாயண ராமனை கொளுத்தச் சொன்னேன்! என்று குறிப்பிட்டார்.(விடுதலை (3.8.1956)
அண்ணா, ‘கம்ப ரசமா? காமரசமா?’ என்றார்! ‘தீ பரவட்டும்!’ என்றுரைத்தார். சேது கால்வாய் திட்டத்திற்கு ‘இராமர் பாலம்’ என்ற கற்பனை தடையாக இருந்த போது கலைஞர், ‘இராமன் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தான்?’ என்று வினா எழுப்பினார்.

“இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை!” என்றொரு வழக்கு சொல் உண்டு. இந்த வரியில் ஒரு திரைப்பாடலும் உண்டு. அதைக் கேட்கும் போதெல்லாம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேடைகளில் முழங்கும் ஒரு வரி நினைவில் வரும். “இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்று நாங்கள் பொறுப்பற்று இருந்து விட முடியாது. இந்த நாட்டை இராவணன்கள் தான் ஆள வேண்டும் என்பார்.” அதில் எத்தனை பொருள் அடங்கியிருக்கிறது. காலம் முழுவதும் நமக்கு வரலாறு ஆரிய திராவிட போராட்டத்தைக் கற்பித்துக் கொண்டே இருக்கிறது. நாம் ஒரு அடி பிசகினாலும் மீண்டும் பார்ப்பனீயம் நம்மை அதல பாதாளத்தில் தள்ளி விடும் என்பதை மனதில் கொள்வோம். எச்சரிக்கை!

புதன், 24 ஜூலை, 2024

மகா மகா சாணக்கியர் என்று பார்ப்பனர்களால் கூறப்பட்ட பானகல் அரசர் (9.7.1866)

 


விடுதலைஞாயிறு மலர்

-முனைவர் க.அன்பழகன் கிராம பிச்சார குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்

மனித இனம் தோற்றம் கண்டபின் தொடக்கத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நிலையில், குடும்பம் தோன்றியபின் குடும்பத் தலைவர், அதன்பின் பல குடும்பங்கள் இணைந்த தொகுப்பிற்கு ஒரு தலைவர், அதனைத் தொடர்ந்து ஒரு பகுதியில் வாழும் மக்களின் தலைவர், தொடர்ந்து குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் இனக்குழுவின் தலைவர், பிறகு பெருநிலப்பரப்பின் தலைவர் – அவரே மன்னர் அல்லது அரசர் என்றும், அவரது ஆட்சி மன்னராட்சி என்றும் இருந்து – இற்றை நாளில் மக்களே தங்களை ஆளும் மக்களாட்சி வரை ஆட்சிகள் வளர்ந்து வந்துள்ளன.

அரசர்கள் காலம் முடியாட்சியாக விளங்கிய காலத்தில் அனைத்தும் அரசனுக்குச் சொந்தமானது. அரசர்கள் அவ்வளவு பெருமையும் உரிமையும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்.

இச்சிறப்பிற்குரிய அரச குடும்பத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள பானகல்லு கிராமத்திற்குரிய அரச குடும்பத்தில் பிறந்தவர்தான் பானகல் அரசர். இவரது பெயர் பி. இராமராய நிங்கர் என்பதாகும்.

பானகல் அரசரின் மூதாதையர்கள் பானகல்லு என்ற கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்து காளாஸ்திரியில் குடியேறியபின், காளாஸ்திரியில் தான் பானகல் அரசர் பிறந்தார்.

இவர் தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்தார். சமஸ்கிருதத்தில் நன்கு புலமை பெற்றிருந்தார்.

இவர் பிறந்த நாள் 9.7.1866. இவர் பின்னாளில் சென்னை இராஜதானியின் பிரதம அமைச்சராக (Premier of Madras Presidency) பொறுப்பேற்று புரட்சிகரமான சாதனைகளை நிகழ்த்தி சரித்திரம் படைத்தார். சாகாச் சரித்திரம் ஆனார்.
அரச குடும்பத்தில் பிறந்து, அடிமைகளாய் – உரிமை இழந்தவர்களாய் – நாடோடி ஆரிய இனத்தின் சுரண்டல் கொடுமையைச் சுகமாக ஏற்றிருந்த திராவிடர் இன மக்களுக்கு உரிமை இரத்தத்தை உடலில் செலுத்தி, உணர்ச்சியூட்டி அவர்களை உயர்த்திய உத்தமர்.

பானகல் அரசரின் ஆட்சிச் சிறப்பை- ஆளுமை நெருப்பை- அதனால் விளைந்த திராவிடர் செழிப்பைக் கண்டோம்.
டாக்டர் நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகிய முப்பெரும் மேதைகள் – திராவிடர் இனத்தை வாழ்விக்க வழிகண்ட வரலாற்று நாயகர்கள் – இணைந்து உருவாக்கிய அமைப்புதான் – 1916இல் உருவான தென்னிந்திய நல உரிமைச் சங்கம். இதன் சிறப்புப் பெயர் நீதிக்கட்சி. இந்த அமைப்பு ‘ஜஸ்டிஸ்’ என்னும் பெயரில் பத்திரிகை ஒன்று நடத்தியதால் நீதிக்கட்சி அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்டது.

இந்த அமைப்பின் நோக்கம் பார்ப்பனரல்லாத மக்களான திராவிடர் இன மக்கள் கல்வி மற்றும் அரசு உத்தியோகங்களில் உரிய விகிதாச்சார அளவில் சட்டப்படியான வாய்ப்பைப் பெறப் பாடுபடுவது என்ப தேயாகும்.
நீதிக்கட்சி தொடங்கு வதற்கு அடித்தளமிட்ட முதல் சிறப்புக் கூட்டம் 1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் அன்று சென்னை வேப்பேரி எத்திராஜுலு (முதலியார்) இல்லத்தில் நடைபெற்றது.

நீதிக்கட்சியின் கொள்கை விளக்க அறிக்கை பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்க அறிக்கை” (The Non-Brahmin Manifesto December – 1916) என்ற பெயரில், புதியதோர் வரலாற்றை திராவிடர் இனத்து மக்களுக்கு வழங்கிடும் புகழ்மிக்க புரட்சிகர அறிக்கையாக வெளியானது.

மாண்டேகு – செம்ஸ்போர்டு வழங்கிய இரட்டை ஆட்சித் திட்டத்தின் கீழ் நீதிக்கட்சி 1920ஆம் ஆண்டு தேர்தலை முதன்முதல் சந்தித்து – வெற்றியும் பெற்று சென்னை இராஜதானியில் திராவிடர் ஆட்சியை நிறுவியது.

நீதிக்கட்சியின் தந்தை என்ற பெருமைக்குரிய சர்.பிட்டி தியாகராயர் அவர்களை ஆங்கிலேயக் கவர்னர் லார்டு வெல்லிங்டன் முதலமைச்சராகப் பொறுப்பேற்க அழைத்தார். தான் முதலமைச்சராக விரும்பவில்லை என அறிவித்து கடலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் திரு.ஏ. சுப்பராயலு (ரெட்டியார்) அவர்களை முதலமைச்சராக்கினார்.

இந்திய அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்திட்ட- மக்கள் பணியே மகத்தான பணி என்று வாழ்ந்திட்ட வணக்கத்திற்குரிய முதல் மனிதர் சர்.பிட்டி தியாகராயர் ஆவார்.

அந்த வரிசையில் இரண்டாமவராக ஏன், இறுதி மனிதர் என்றே கருதிடும் ஆங்கிலேய கவர்னரால் இரண்டு முறை (வெவ்வேறு காலகட்டங்களில்) சென்னை ராஜதானிக்கு முதல்வர் பொறுப்பேற்க (Premier) அழைத்தும் பதவியைவிட மானமுள்ள சமுதாயமாக திரா விடர் சமுதாயத்தை மாற்றும் தொண்டு என்ற மாபெரும் பணி என்று வாழ்ந்து காட்டிய புதிய வரலாற்றுக்குப் புகழ் சேர்த்த தந்தை பெரியார்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு முதல்வர் பொறுப்பேற்ற திரு.ஏ. சுப்பராயலு (ரெட்டியார்) அவர்கள் ஆட்சி பெறுப்பேற்ற சில மாதங்களில் உடல் நலம் குன்றிய நிலையில் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் திரு.பி. இராமராய நிங்கர் எனும் பெயர் கொண்ட பானகல் அரசர் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1921 முதல் 1926 வரை முதலமைச்சராக இருந்த பானகல் அரசர் நீதிக்கட்சியின் கொள்கை வழிநின்று ஆற்றிய தொண்டுகள் ஏராளம். அவற்றில் சில இங்கே கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

நீதிக்கட்சியின் சாதனைகள்

பார்ப்பனரல்லாதார் என்பவர்கள் யார் என்பதற்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி – வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வருவதற்கான அடிப்படையை உருவாக்கினார்.

பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்க உரிமையில்லை என்றிருந்த தடையை அரசாணை எண்.108 சட்டம் (legislative) (நாள்: 10.05.1921) மூலம் நீக்கி பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கினார்.

1921 ஆகஸ்ட் 16ஆம் நாள் எல்லாச் சமூகத்திற்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தார்.

ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக் குழு ஒன்று அமைத்து அதன் மூலம் அனைத்து சமூக மாணவர்களும் கல்லூரிப் படிப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசாணை எண்: 636 சட்டம் (கல்வி) நாள்: 20.8.1922 மூலம் உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக பார்ப்பனர் இனத்து மாணவர்களே படித்திடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை பார்ப்பனரல்லாதார்க்கு 60% பார்ப்பனர்களுக்கு 40% என வரையறை செய்து அரசாணை எண்.1880 சட்டம் (கல்வி) (நாள்: 20.05.1922) ஒன்றைப் பிறப்பித்தார். பார்ப்பன ஏகபோகக் கொள்ளைக்கு முடிவு கட்டினார்.

அரசாணை எண்: 817 சட்டம்(பொது) (நாள்: 25.03.1922) மூலம் பஞ்சமர் – பறையர் என்று தொல் திராவிடர் குடியினரை அழைக்கும் – எழுதும் நிலைக்கு முடிவுகட்டி, தமிழில் “ஆதிதிராவிடர்” என்றும் தெலுங்கில் “ஆதி தெலுங்கர்” என்றும் அழைத்திட – எழுதிட ஆணையிட்டார்.

ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பட்டியலை அனுப்பும்போது தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்று அரசாணை எண்: 205 சட்டம் (கல்வி) (நாள்: 11.12.1924) ஒன்றைப் பிறப்பித்தார்.

முதன்முதல் சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரியை நிறுவிய பெருமைக்குரியவர் பானகல் அரசரே ஆவார்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக பானகல் அரசர் காலத்திலே தான் அடிப்படைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டது.

இந்து அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம் பானகல் அரசர் ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. அரசாணை எண்: 29 சட்டம் (legislative) (நாள்: 27.01.1925)

அரசு அலுவல்களுக்கு அந்தந்த துறையினரே நியமனங்கள் செய்து வந்தனர். பெரும்பாலும் உயர் ஜாதியினரே இருந்த நிலையில் அவர்களுக்கே வாய்ப்பு கிடைத்தது. பனகல் அரசர் ஆட்சிக்கு வந்தவுடன் நியமனங்களை ஒருமுகப்படுத்த (Staff Selection Board) “அலுவலர் தேர்வு வாரியம்” அமைத்தார். இதுவே இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் பணியாளர் தேர்வு வாரியம் ஆகும். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கும் முன்னோடி அமைப்பு இது. வகுப்புரிமை ஆணை அமலுக்கு வந்த பின் இதன் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு 1929ஆம் ஆண்டைய சென்னை சர்வீஸ் கமிஷன் சட்டம் ஏற்பட்டது. மேன்மைமிகு இந்திய கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்தார். அரசு ஆணை எண் 484 சட்டம் (லெஜிஸ்லேடிவ்) (18.10.1929) இதைக் குறிப்பிடுகிறது.

பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.
துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப் பட்டன.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன ஜாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25 நிதி உதவிகள் (ஸ்காலர் ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.

ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற ஜாதியினரிடமிருந்து பாதுகாப்பு – அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை, இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.

அருப்புக்கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டது.

மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப் பட்டார்.

கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.

நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக்கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமை யாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

பி அண்டு சி மில்லின் வேலை நிறுத்தத்தின் விளை வுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப் பட்டன.
தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.

ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.

குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற – மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.
ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.

தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறைச் செலவுகளை ஏற்றல். சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.

மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டது.

மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (Stipend) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

பானகல் அரசர் நிறைவேற்றிய மேற்கண்ட சட்டங்கள்தான் தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது என்பதோடு – இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமை ஏற்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆணிவேருமாகும் என்றால் அது மிகையாகாது.

நீதிக்கட்சியின் சார்பில் முதல் பார்ப்பனரல்லாதார் மாநாடு கோவை ஜில்லா மாநாடாக- ஒப்பனைக்காரத் தெரு நாடக மேடையில் 1917 ஆகஸ்ட் 19ஆம் நாள் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் அன்றைய நாளில் இம்பீரியல் கவுன்சில் மெம்பராக இருந்திட்ட திரு.பானகல் அரசர் ஆவார். இந்த மாநாட்டில் அவரது எழுச்சி உரை திராவிடர் இனத்து மக்களின் சமூகநீதிச் சாசனமாகும்.

பானகல் அரசரின் மறைவு 1928 டிசம்பர் 15 அன்று திடீர் உடல்நலக் குறைவால் நிகழ்ந்தது. சென்னை தியாகராயர் நகரில் பானகல் அரசருக்குச் சிலை வைத்து – பானகல் பூங்காவும் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பானகல் அரசர் காலமானபின் தந்தை பெரியார் எழுதிய இரங்கல் செய்தியின் தலைப்பு

“மறைந்தார் நம் அருமைத் தலைவர்!
எனினும் மனமுடைந்து போகாதீர்!”

பெரியார் தனது இரங்கல் செய்தியில் ஒரு இடத்தில் குறிப்பிடும்போது,
“நாயர் பெருமான் அவர்களும் இதே மாதிரி நெருக்கடியான சமயத்தில் தேசம் விட்டுத் தேசம் போய் உயிர் துறந்தார்.
தியாகராய வள்ளலும் இதேபோல் இறந்தார்.

பானகல் வீரரும் அவர்களைப் பின்பற்றி நடந்தார். ஆனால் நாயர் பெருமான் காலமானவுடன் மக்கள் கண்ணிலும் மனதிலும் தியாகராய வள்ளல் தோன்றினார். அதுபோலவே தியாராய வள்ளல் மறைந்தவுடன் நமது பானகல் வீரர் தோன்றினார். பானகல் வீரர் மறைந்த பிறகு யாரும் தோன்றக் காணோம். அவர் மறைந்த பிறகு சந்றேறக் குறைவாக இரவும் பகலுமாக 192 மணி நேரம் – லட்சக்கணக்கானவர்கள் காலஞ்சென்ற தலைவரைப்போல் ஒரு தலைவரைத் தேடித்தேடி களைத்தாய்விட்டது. இன்னமும் ஒருவரும் புலப்படவில்லை. இது ஒன்றே நம் பானகல் வீரர், ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவர் என்பதைக் காட்டுகிறது.”

தந்தை பெரியாரின் இரங்கல் செய்தி குறிப்பிட்டுள்ள திலிருந்து பானகல் அரசர் – பானகல் வீரர் வாழ்வும் தொண்டும் நம்மினத்திற்கு எந்த அளவிற்குப் பயன் தந்தது என்பதும், அவரது மறைவும் இழப்பும் யாரும் நிரப்ப முடியாத இடமென்பதும் அறிந்திடும் நிலையில் அப்பெரும் வரலாற்று நாயகர் பானகல் அரசர் பிறந்த நாளில் (9.7.1866) சமூகநீதி

நிலைக்க – திராவிடம் வெல்ல சூளுரைப்போம்!

வாழ்க பானகல் அரசர்!

சனி, 6 ஜூலை, 2024

கருப்புச் சட்டை அணிவது போலவா பூணூல் அணிவது? - எதிர்வினை (51)

 

ஜனவரி 01-15 2020

கருப்புச் சட்டை அணிவது போலவா பூணூல் அணிவது?

கேள்வி: ஈ.வெ.ரா. கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்கிற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்கிற பயமா?

பதில்: பதிப்புரிமை பற்றிய வழக்கைப் புரிந்துகொள்ளாமல், திரிபுவாதம் பேசுவதற்கு இது நல்ல ஓர் எடுத்துக்காட்டு. பெரியார் கொள்கையை யார் பரப்ப வேண்டாம் என்றது. அவர் கொள்கை பரப்ப ஒரு நிறுவனம் அவரால் அமைக்கப்பட்டு இருக்கையில் அவர் நூலை வெளியிடும் உரிமை அதற்குத்தானே இருக்க முடியும்? அது வெளியிடும் நூலை ஆயிரக்கணக்கில் யார் வேண்டுமானாலும் வாங்கிப் பரப்பலாமே? ஆளாளுக்கு அச்சிட்டு விற்கத் தலைப்படும்போது திரிபுகள், வர வாய்ப்புண்டு.

பெரியாரின் மூத்த தொண்டர் ஒருவர் வெளியிட்ட நூலிலே பெரியார் பாஸ்போர்ட் இல்லாமல் அயல்நாடு போனார் என்று தவறான கருத்து வெளிவந்த வரலாறு உமக்குத் தெரியாது. இதுபோன்ற தவறு நிகழக் கூடாது என்பதற்காகச் சொல்லப்பட்டதே அது!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இலாப நோக்கில் நூல் வெளியிடுவதில்லை என்பது உமக்குத் தெரியுமா? தெரிந்தால் சில்லறைத்தனமாக இப்படிக் கேட்க மாட்டீர்!

கேள்வி : பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்புச் சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டை பற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

பதில் : அசல் அயோக்கியத்தனமான கேள்வி இது! பூணூலும் கருப்புச் சட்டையும் ஒன்றா? கருப்புச் சட்டை என்பது ஓர் இயக்கத்தின் சீருடை. அது இழிவு நீக்கவந்த ஏற்பாடு. அது யாரையும் எப்போதும் இழிவு படுத்தாது.

ஆனால், பூணூல் என்பது பெரும்பாலான மக்களை இழிவுபடுத்தும் அடையாளம். 3% ஆரியப் பார்ப்பனர்கள் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் இழிமக்கள்; தீட்டு உள்ளவர்கள் என்று இழிவு செய்யும் ஏற்பாடு பூணூல். ஆரிய பார்ப்பனர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக அவர்களால் அணியப்படுவது.

ஒரு தெருவில் இது பத்தினியின் வீடு என்று ஒரு வீட்டில் எழுதி வைத்தால் அதன் பொருள் என்ன? மற்ற வீடெல்லாம் விபச்சாரிகளின் வீடுகள் என்பதுதானே! நான் மட்டும் உயர்ந்தவன் என்று ஆரிய பார்ப்பனர்கள் பூணூல் மாட்டிக்கொள்வது மற்றவர்கள் இழிமக்கள் என்று கூறத்தானே?

அப்படியிருக்க கருப்புச் சட்டை போடுவது போல்தான் பூணூல் போடுவது என்கிற உமது வாதம் அறிவற்ற, அடிமுட்டாள்தனமானது என்பதை இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டும். கருப்புச் சட்டை இழிவு நீக்கப் பாடுபடும் தொண்டர்களின் அடையாளம். அப்படிப் பாடுபடும் எவரும் அதை அணியலாம். ஆனால், பூணூலை எல்லோரும் அணிய முடியுமா?

பூணூல் அணிவது உரிமை என்கிறீரே… அந்த உரிமையைக் கொடுத்தது யார்? அந்த உரிமை ஆரியப் பார்ப்பானுக்கு மட்டும் எப்படி வந்தது? உம்மால் பதில் சொல்ல முடியுமா?

97% மக்களை ஏமாற்ற சாஸ்திரங்களை தாங்களே எழுதி, அதில் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் இழிவானவர்கள், எங்களுக்கு மட்டுமே பூணூல் என்று எழுதிக்கொண்ட மோசடிக் கூட்டம்தானே ஆரிய பார்ப்பனக் கூட்டம். அப்படிப்பட்ட ஏமாற்றுக்கும், பித்தலாட்டத்திற்கும் உரிமை என்று பெயரா?

கேள்வி : ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதைப் பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் திட்டியே பொழப்பு நடத்துகிறீர்களே, உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?

பதில்: மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்தும் கூட்டம் இந்தக் கேள்வியைக் கேட்பதுதான் வேடிக்கை! தன் வீட்டுச் சாப்பாடு, தன் பணம், பதவி  பலன் எதிர்பாராத ஆனால், இழிவு, ஏச்சு, பேச்சு எல்லாவற்றையும் ஏற்று இந்த மக்கள் சுயமரியாதையும், சூடு, சொரணையும், விழிப்பும் சமவாய்ப்பும் பெற உழைப்பவர்கள் நாங்கள். இதில் பிழைப்புக்கு, வருவாய்க்கு வழியேது? மூடநம்பிக்கையால் அறிவு, மானம், உரிமை, உயர்வு இழந்து, அடிநிலையில் உழலும் மக்களை சிந்திக்கச் செய்து அவர்களை மானமும் அறிவும் உள்ளவர்களாக்கி, அவர்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து, பார்ப்பனர்களை விடவும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து, உயர்ந்து வர பாடுபடுபவர்கள் நாங்கள்.

 இது பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு நன்கு தெரியும். இந்து என்கிற போர்வையில் நீங்கள் பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று பகற்கனவு காணாதீர்கள்! பார்ப்பனரல்லாதார் விரைவில் விழிப்புடன் வீறு கொண்டு எழத்தான் போகிறார்கள். அப்பொழுது தெரியும் உங்கள் நிலை! எச்சரிக்கை!

நேயன்

                                                                  (தொடரும்)