பக்கங்கள்

புதன், 7 ஆகஸ்ட், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்!




 நேயன்


அம்பேத்கரும், பெரியாரும் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள் என்று  பித்தலாட்டப் பிரச்சாரம் செய்து இளைஞர்களைக் குழப்ப சிலர் முனைந்துள்ளனர். இதன்மூலம் ஒருங்கிணைந்து செயல்படும் பெரியார் அம்பேத்கர் தொண்டர்களிடையே பிளவை உண்டுபண்ண முயற்சிக்கின்றனர். அம்பேத்கார் மனித நேயப்பற்றாளராகவும், பெரியார் சமூக விரோதி போலவும் சித்தரித்துக் காட்ட, கத்தரித்த செய்திகளையும், கற்பனைச் செய்திகளையும் காட்டி வாதிடுகின்றனர்.

எனவே, அவர்களது ஒப்பீடுகளும், அவர்கள் சுட்டிக்காட்டும் கருத்துக்களும் உண்மைக்கு மாறானவை, திரிக்கப்பட்டவை, மறைக்கப்பட்டவை என்பதை ஆணித்தரமான ஆதாரங்களோடு இங்கு விளக்கியுள்ளோம். ஊன்றிப் படியுங்கள், உண்மையை உணருங்கள்! உணர்வு கொள்ளுங்கள்!

அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களின் சாரம் இவைதான்.

1) ஆரிய திராவிட பாகுபாட்டை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பெரியார் அதையே அடிப்படையாகக் கொண்டு இயக்கமும் பிரச்சாரமும் நடத்தினார்.

2) ஒரே கடவுள் கோட்பாட்டை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பெரியார் ஒரு கடவுள் கோட்பாட்டில் நம்பிக்கைக் கொண்டவர்.

3) ஈ.வெ.ரா. ஒரு ஜனநாயகவாதி அல்ல. ஆனால் அம்பேத்கர் ஒரு ஜனநாயகவாதி.

4) ஈ.வெ.ரா. இந்தியர்களுக்கு எதிரானவர். அம்பேத்கர் இந்திய கலாச்சாரத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர்.

5) அம்பேத்கர் சமஸ்கிருத ஆதரவாளர். ஆனால் சமஸ்கிருதத்தை எதிர்த்தவர் பெரியார்.

6) ஈ.வெ.ரா. பார்ப்பனர்களுக்கு எதிரான வெறுப்பைப் பரப்பியவர். ஆனால் அம்பேத்கர் எப்போதும் பார்ப்பனர்களுக்கு எதிராய் வெறுப்பைக் காட்டியதில்லை.

7)  இந்திய பாதுகாப்பில் சாதியற்ற சமூக உருவாக்கத்தில் அம்பேத்கர் உறுதியாய் இருந்தவர். ஆனால் பெரியார் இனவெறியை மட்டுமே தூண்டினார்.

8) அம்பேத்கர் சீர்திருத்தக் கருத்துக்களை உபநிஷத்துக்களிலிருந்து பெற்றவர். ஆனால் பெரியாருக்கு இதுபோன்ற ஆழமான மூலக்கருத்துக்கள் இல்லை.

9) இரட்டைப் பேச்சு அம்பேத்கர் பேசியதில்லை. மனித எதிர் செயல்களைக் கண்டித்தார். ஆனால் பெரியார் கீழ்வெண்மணி கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடவில்லை.

10) தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பெரியார் செயல்பட்டதில்லை. ஆனால் அம்பேத்கர் அவர்களுக்காகவே பாடுபட்டவர்.

இவைதாம் இந்த ஆர்.எஸ்.எஸ். (அ)யோக்கியர் வைக்கும் வாதங்கள்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இவற்றைக் கேள்விப்பட்டால் சராசரி பாமர மனிதன் கூட கேவலமாய் சிரிப்பான்.

1.            ஆரிய திராவிட வேறுபாட்டை அம்பேத்கர் ஏற்கவில்லை. ஆனால் பெரியார் அதையே முதன்மையாக கொண்டார் என்பது சரியா?

இது தந்தை பெரியாருக்கு எதிராகக் கூறும் முதல் வாதம். இதுபோன்ற ஒரு மோசடியான பிரச்சாரத்தை உலகத்திலே காணமுடியாது. ஆரியர்கள் பற்றி அம்பேத்கர் ஒரு தெளிவான பார்வையும், அவர்களின் ஆதிக்கக் கொடுமைகள், இழிவுகள், மனித எதிர்செயல்களையெல்லாம் நூற்றுக்கணக்கான பக்கங்களில் அலசி ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

அப்படிப்பட்ட ஆரியத்தை எதிர்த்த காரணத்தாலேதான் அவர் பௌத்தத்தை ஆதரித்தார், ஏற்றார். மற்றவர்களை ஏற்கும்படிச் செய்தார். பௌத்தம் ஆரியத்திற்கு எதிரான பெரும் புரட்சி என்று கூறுகிறார். “பௌத்தம் ஒரு புரட்சி. பிரஞ்சுப் புரட்சியைப் போன்றது. அது ஒரு மாபெரும் புரட்சி. இந்தப் புரட்சி எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது என்பதை அறிய வேண்டுமாயின் இப்புரட்சி வருவதற்கு முன்பிருந்த சமூகநிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

புத்தரின் போதனைகளால் உண்டான மாபெரும் மாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், புத்தம் தோன்றிய காலத்திலிருந்த ஆரிய நாகரிகத்தின் தரம் குறைந்த நிலைபற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது ஆரிய சமூகத்தின் சமூக, சமய அறஞ்சார்ந்த நிலை பெரிதும் தரங்கெட்டு தாழ்ந்து கிடந்தது. சூதாடுவதிலும், மது குடிப்பதிலும் ஆரியர்கள் மூழ்கிக்கிடந்தனர். சோமபானம் தயாரிக்கும் முறையைத் தங்களுக்குள் இரகசியமாக வைத்திருந்தனர். ஆரியர்களின் இன்றைய வழித்தோன்றல்கள் அன்றைய ஆரிய சீர்கேட்டை அறிந்தால் அதிர்ச்சியடைவர்.

பெற்ற மகளைப் புணர்வது, சகோதரியைப் புணர்வது, ஒரு பெண் பல ஆணை மணப்பது பாட்டன் பேத்தியை உடலுறவு கொள்வது என்ற கேவலங்கள் அவர்களிடம் காணப்பட்டன.

ஆரியர்கள், பலரும் காணும் வகையில் வெட்ட வெளிகளில் பெண்களோடு புணருவதைப் பற்றிக் கவலைப்படாது பலர் பார்க்கப் புணருவார்கள். தன் மனைவியை சிறிது காலம் அயலாருக்கு வாடகைவிடும் வழக்கமும் ஆரியர்களிடம் இருந்தது. பொலிகாளையைத் தேர்வு செய்து பசுவை சினைப்படுத்துவதுபோல, ஆணைத் தேர்வு செய்து பிள்ளை பெற்றுக்கொள்ளும் வழக்கமும் ஆரியரிடையே இருந்தது.

ஆரியர்கள் விலங்குகளையும் புணரும் பழக்கம் உடையவர்கள். ஆரிய பெண்டிர் குதிரையோடு உடலுறவு கொண்டுள்ளனர். விவசாயத்திற்கு அதிகம் பயன்படும் பசுக்களும் காளைகளும்தான் ஆரியர்களால் அதிகம் பலியிடப்பட்டன. ஆக புத்தர் புரட்சி தொடங்கிய காலத்தில் சமூக, அரசியல், சமயத் துறைகளில் வரம்புமீறிய ஒழுக்கக்கேட்டில் ஆரிய இனம் மூழ்கித் திளைத்தது.

இப்படிப்பட்ட ஆரிய ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள புஷ்யமித்ரசுங்கன் காலத்தில் எழுதப்பட்டதே மனுஸ்மிருதி என்கிறார். மனுஸ்மிருதி மூலம் எந்த அளவிற்கு ஆரியர்கள் தங்களுக்கென ஒரு செல்வாக்கை அதிகாரத்தை சட்ட பூர்வமாகச் செய்து கொண்டார்கள் என்பதையும் பல பக்கங்களில் காட்டுகிறார். மனுவின் காலம் கி.மு. 170க்கும் கி.மு.180 இடைப்பட்டது என்கிறார்.

மனு நூல் ஆரிய பார்ப்பனர்களுக்கு (பிராமணர்களுக்கு) கொடுக்கும் தனித்தகுதியை உயர்நிலையை அம்பேத்கர் வரிசைப்படுத்திக் கூறுகிறார். மனு ஸ்மிருதியில் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனி இடம் ஆகும். மனு நூலில் உள்ள பின்வரும் விதிகளைக் கவனிக்கவும்:

1 : 96 ‘‘படைக்கப்பட்டவற்றுள் உயிர் உள்ளவை சிறந்தவை என்று கூறப்படுகிறது, உயிருள்ளவற்றுள் அறிவுத்திறத்தால் வாழ்பவை சிறந்தவை, அறிவுள்ள உயிர்களுள் மனிதன் சிறந்தவன், மனிதர்களுக்குள் பிராமணர்கள் சிறந்தவர்கள்’’

1 : 100 ‘‘உலகில் உள்ள அனைத்துமே பிராமணர்களின் உடமையாகும், பிராமணனது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக, உண்மையில் அவனே எல்லாவற்றுக்கும் உரியவனாயிருக்கிறான்.’’

1 : 101 ‘‘பிராமணன் தன்னுடைய சொந்த உணவையே உண்கிறான். தனது சொந்த உடையையே அணிகிறான், தனக்குச் சொந்தமானவற்றையே கொடுக்கிறான், மற்ற மனிதர்கள் பிராமணனின் கருணையின் மூலமே உயிர் வாழ்கிறார்கள்.’’

                                                                   (தொடரும்)

 - உண்மை இதழ், 16-30.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக