பக்கங்கள்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

பெண்ணுரிமையும் பாரதியும்! (91)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (91)

ஜனவரி 1-15,2022

பெண்ணுரிமையும் பாரதியும்!

நேயன்

பாரதி முரண்பாடுகளின் மொத்தம் என்பதை முன்னமே சொல்லியுள்ளோம். அதிலும் பெண்ணுரிமை குறித்து பாரதி இரண்டு உச்சத்திற்கு சென்றுள்ளார். ஒன்று முற்போக்கின் உச்சம். மற்றது பிற்போக்கின் உச்சம்.

முரண்பாடு என்பது பரிணாமம் பெற்றிருப்பின் அது ஏற்கப்படக்கூடியது. ஆனால், பாரதி தொடக்க காலத்தில் அதி தீவிரமாகப் பெண்ணுரிமை பேசிவிட்டு, பின் தலைகீழாக மாறி எழுதுகிறார். அதுதான் சந்தர்ப்பவாதம்; அறிவு வயப்படாமல், உணர்ச்சி வசப்பட்டு கருத்துகளைக் கூறும் பக்குவமின்மை.

பெரியார், பாரதிதாசன் இவர்களின் தொடக்க காலத்திற்கும், அதன்பின் இறுதிக் காலம் வரை அவர்கள் பெற்றிருந்த புரட்சிப் பரிணாமத்திற்கும் ஓர் ஏற்றமான வளர்ச்சி நிலை இருந்தது.

ஆனால், பாரதி தொடக்கக் காலத்தில் முற்போக்கும் எழுச்சியும் கொண்டு எழுதிவிட்டு, பிற்காலத்தில் முரண்பாடுகளும், பிற்போக்குச் சிந்தனைகளையும் கொண்டு எழுதினார்.

“1904 முதல் 1906 வரை “சக்கரவர்த்தினி’’ என்ற பெண்களுக்கான இதழுக்கு பாரதி ஆசிரியராக இருந்தார். அக்காலத்தில் அவர்,

“பரிபூரண ஸமத்துவம் இல்லாத இடத்தில், நாம் ஆண் மக்களுடன் வாழ மாட்டோம்! என்று சொல்லுவதானால் நமக்கு நம்முடைய புருஷராலும், புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மை உடையன வாயினும் நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; தர்மத்திற்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். பிறரும் இறக்கத்தான் செய்கிறார்கள், ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள்! நாம் வெற்றி பெறுவோம்’’ எனப் பாரதி பெண் விடுதலைக்காகப் பாடுபட பெண்களை அழைக்கிறார்.

மேலும் பாரதி,  “நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மத முண்டானால் உன்னுடன் வாழ்வேன் இல்லாவிட்டால், இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன்; எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன்; நீ அடித்து வெளியே தள்ளினால் ரெஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவும் வேண்டும்.”

பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஆண்கள்தான் ஒழுங்காக இருக்க வேண்டும்.

“அடப் பரம மூடர்களே! ஆண்பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் பதிவிரதைகளாக எப்படி இருக்க முடியும்? பதிவிரதயத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகிறது.’’

“எண்ணிறந்த ஸ்திரீஹத்தி புரிந்து, இத்தேசத்துக்கெல்லாம் அழிக்க முடியாத பெரும் பழி கொடுத்த ஸதி தஹனமென்னும் அரக்கனை மிதித்துக் கொல்லும்படியாக முதலிலே துக்கப்பட்ட ராம் மோஹனரின் திருவடியை நாம் மறந்துவிட்டால் நமக்கு உய்வுண்டாமா? எனப் பெண்களிடம் கேட்கிறார் பாரதியார்.

அது மட்டுமல்ல, ஸதியில் எரிக்கத் தயார் நிலையில் சுடுகாட்டில் இருந்த ஒரு இராசபுத்திரப் பெண்ணை (அக்பர் ஆட்சியில் சதிக்குத் தடை இருந்தது எனப் பாரதி குறிப்பிட்டுள்ளார்), ஒரு முகமதிய வாலிபன் அந்த இராச புத்திரர்களைக் கொன்று அந்தப் பெண்ணை மீட்டுச் செல்கிறான்; அந்த முசுலிம் வாலிபனுக்கும், அந்த இராசபுத்திரப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்து, திருமணம் நடப்பதாகத் துளஸிபாயி என்னும் கதையின் வாயிலாகவும் உடன்கட்டை ஏறுதலை பாரதி எதிர்த்தார்.

1906 மேற்கண்டவாறு உடன்கட்டை ஏறுதலைக் கண்டித்து எழுதிய பாரதி, பின்னாளில் உடன்கட்டை ஏறுதலை ஆதரிப்பவராக மாறி விடுகிறார்.

1910 பிப்ரவரியில் ‘கர்மயோகி’ இதழில் பாரதி எழுதியதாவது:

“நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரீகளே மஹா ஸ்திரீகளாவார்கள்” என்று உடன்கட்டை ஏறுதலை ஆதரிப்பவராக மாறிவிடுகிறார்.

தொடக்கக் காலத்தில் பாரதியார் குழந்தை மணத்தை எதிர்த்தார். கலப்புத் திருமணங்களை ஆதரித்தார். பெண்கள் விவாகரத்து செய்து கொள்வதையும் ஆதரித்துள்ளார். ஏன், பெண்கள் திருமணத்தை விரும்பவில்லை என்றால் திருமணமே செய்து கொள்ளாமல் கூட விட்டு விடலாம் என்று கூறியவர், பிற்காலத்தில் தன் கருத்துகளைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொள்கிறார்.

கற்பு நிலை யென்று சொல்ல வந்தால் – இரு

கக்ஷிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் (கும்மி)

இவ்வாறு பெண் விடுதலைக் கும்மிப் பாடலை இயற்றிய பாரதிதான் பின்னாளில்,

“ஸாவித்திரி, ஸீதை, சகுந்தலை முதலிய பெண்களின் சரிதைகளைக் கேட்கும் போது, இத்தகையோர்களுக்கு இம்மாதிரி மனப்போக்கு எவ்விதம் ஏற்பட்டதென்று நினைத்து நினைத்து மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. இம்மாதிரியான கற்புடைமை. இத்தேசத்துப் பெண்களுக்கு என்றும் ஒரு சிறந்த புவனமாக விளங்கி நின்றமை நமது நாட்டிற்கே ஒரு பெருமை ஆகும்’’ என பழைய சனாதன பெண்ணடிமை முறைகளை ஆதரிக்கிறார்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் பெண்ணடிமை நிலையை கற்பின் அடையாளமாகப் பிழைபடக் காட்டுகிறார் பாரதி.

1909 ‘ஆகஸ்ட் இந்தியா’ இதழில், ஒழுக்கம் உள்ள பெண்களைப் பற்றிப் பாரதி கூறும் போது, “ஓ இந்தியனே! சீதை, சாவித்திரி, தமயந்தி இவர்களும், இன்னும் இவர்களைப் போன்ற ஸ்திரீ ரத்தினங்களும் உன் பெண்மணிகளாவர். ஒழுக்கத்திற்கு அவர்களை நமக்கு முன்மாதிரியாக வைத்துக் கொள்ளலாம்’’ என்கிறார்.

இன்னும் பிற்காலத்தில் 1920 மே மாதத்தில் தேசியக் கல்வி’ என்ற தலைப்பில் பாரதி எழுதும் போது பெண்கள் விவாகரத்து செய்து கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அதுகுறித்து அவர், “காதல்  விடுதலை வேண்டுமென்று கூறும் கக்ஷியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித் பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது. அக்னி சாக்ஷி வைத்து உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை என்று சத்யம் பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் சஹிக்கத்தக்க அல்லது சஹிக்கத் தகாத பந்தங்களாகவே முடிகின்றன வென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்ளுதலே நியாயமென்றும், இல்லாவிட்டால் மனுஷ்ய ஸ்வதந்திரமாகிய மூலாதாரக் கொள்கைக்கே ஹானி உண்டாகின்ற தென்றும், ஆதலால் விவாகம் சாச்வபந்தம் என்று வைத்தல் பிழையென்றும் மேற்படி கக்ஷியார் சொல்லுகிறார்கள்.

ஆனால் தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம், மேற்படி விடுதலைக் காதற் கொள்கையை அங்கீகாரம் செய்தல் சாத்தியமில்லை…. விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மண வாழ்க்கைக்கும் பொருந்தாது’’ என்கிறார் பாரதி.

(தொடரும்…)

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (105) யார் புரட்சிக்கவி?பாரதியா? பாரதிதாசனா?

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (105)

2022 ஆகஸ்ட் 01-15 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை

யார் புரட்சிக்கவி?
பாரதியா? பாரதிதாசனா?
என்ற தலைப்பில் ஜெ.இராமதாஸ் எம்.ஏ.பி.எல்., அவர்கள் விடுதலையில் எழுதியவை:
நேயன்


தந்தை பெரியாரின் படையில்…
பெரியாரின் பெரும் படையில் பல திறத்தினர் பங்கு கொண்டனர். ஆண், பெண், முதியோர், இளைஞர், பாமரர், பணக்காரர், படித்தோர், படியாதோர் அனைவரையும் அவ்வியக்கம் தன்பால் ஈர்த்தது. கல்லூரி கண்ட பலபேர்களைத் தன்வயப்படுத்தியது. கவிஞர் பலரை உருவாக்கியது. அந்தப் படை வரிசையில் முன்னணியிலிருந்தவர்கள், தளபதியாகத் திகழ்ந்தவர்கள் அறிஞர் அண்ணாவும், பாவேந்தர் பாரதிதாசனும் இவர்கள் ‘உலா’வை ‘மூவர் உலா’ எனக் குறிப்பிட்டது அன்றைய தமிழ்நாடு; சாக்ரட்டீஸ், பெர்னாட்ஷா, ஷெல்லி எனக் கூறி மகிழ்ந்தனர், மக்கள்.
பெரியாரின் புரட்சிக் கருத்துகளை இயற்றமிழ், நாடகத் தமிழில் ஏற்ற மிகச் செய்தவர் அறிஞர் அண்ணா. ‘பா’ அமைத்து பண்ணிசைத்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இன்று பெரியாரின் வழியிலே பல பேராசிரியர்கள், பட்டதாரிகள், ஆற்றல் படைத்த இளைஞர்கள் பணிபுரியக் காண்கிறோம். நாட்டிற்கு நல்வாய்ப்பு ரூசோ, வால்டேர், கார்க்கி எழுத்துகள் பயன்பட்டது போன்று.

மதவாதிகள் நடுங்கினர்
பெரியாரின் தொண்டு மதவாதிகளைக் கலக்கியது. கலக்கியது, மட்டுமல்லாமல் உள்துறை சீர்திருத்தமும், செய்யத் தூண்டியது. (Interior Reformation) அதன் பலன் தான் தெய்வீகப் பேரவை. காவி கட்டிய குன்றக்குடி அடிகளாரின் சீர்திருத்தப் பேச்சுகள். “திருப்பாவை _ திருவெம்பாவை கூட்டு, ஜாதியில்லை, தீண்டாமை இல்லை என்ற பேச்சு அரசியல் சட்டங்கள், பட்டை, கொட்டை, பூச்சு மறைந்தது. ‘கண்டு முட்டு’ ‘கேட்டு முட்டு’ பறந்தது.

புரட்சிக்கவிஞர்
பாவேந்தர் காலத்திற்கு முற்பகுதியில் தோன்றிய மற்றொரு தமிழ்க்கவி பாரதியார் _ சுப்பிரமணிய பாரதி இவர் காலத்தில் தான் சூழ்நிலைக் குழந்தை பிறந்த இடம், வாழ்ந்த காலம் இவற்றின் பயனாய் உருவானவர். காந்தியத்தில் தோய்ந்த தேசியக் கவி, தமிழ்நாட்டின் முந்தைய கவிஞர்களிலிருந்து மாறுபட்டவர் இலகு தமிழில் பண்ணிசைத்தவர். பாமரருக்குப் புரியும்படி பாடினார். கவிதை புனைந்தார். ஆனால், இவரைப் புதுமைக் கவி என்றோ, புரட்சிக்கவி என்றோ கூறவியலாது. மேலே கூறிய புரட்சி விளக்க அளவுகோலைக் கொண்டு நோக்கினால் பாரதி, தேசியக் கவி. பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றியவர் _ சனாதனி _ ஆரிய மதக் காவலர் _ பழமை விரும்பி. பல கடவுள் மதம், சாஸ்திரம், புராணம், மூடபழக்க வழக்கங்கள் மாறக் கூடாது. ‘சதுர்வர்ணம் _ மாயாவாதம்’ நீடிக்க வேண்டுமென்ற எண்ணம் படைத்த மிகப் பிற்போக்குவாதி.

பச்சைப் பார்ப்பனர்
புதுமைக் கருத்துகளுகெல்லாம் புரட்சி எண்ணங்களுக்கெல்லாம் பழைய முலாம்பூசி பாடி மகிழ்ந்த கவி _ வேதத்தில் _ ஆரிய மதத்தில் அசையாத நம்பிக்கையுடையவர். எனவேதான் பெரியார் அவர்கள் ‘பார்ப்பான் புத்தி போகாது’ என்பார்கள். ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைத்த பச்சைப் பார்ப்பனர், புதுமை புரட்சி எண்ணங்கள் மிளிர்வதை இலகு தமிழில் கவிதை பாடி அணை போட்டுத் தடுக்க முயன்றவர்.

முற்போக்கு பேசும் பார்ப்பனர்கள்!
இதைப் படித்தவுடன் பலருக்கு அய்யமேற்படலாம். ஏதோ கதைப்பதைப் போல் தோன்றலாம்! ஆனால், அத்துணையும் உண்மை!! அவரது பாடலிலிருந்து அசைக்க முடியாத ஆதாரத்துடன் எடுத்தியம்பலாம். அவருடைய வாதம் எதிர்மறை வாதம் (Negative approach) சட்டத்தில் ஆண் யாரென்றால் பெண் அல்லாதவர்கள் என்றும், பெண் யாரென்றால் ஆண் அல்லாதவர்கள் என்றும் கூறுவது போலிருக்கும். யாருக்கும் புரியாது! படிக்கப் படிக்கக் குழம்பும்! வழவழா கொழ கொழ வெண்டைக்காய் அத்தனையும் எப்படியும் பொருள் கொள்ளலாம். ஆனால், மிகப் பரவலான கருத்துகள் பழமை விரும்பியாக இருக்கும். காலநிலைக்கேற்ப பூதக்கண்ணாடி வைத்துத் தேட வேண்டிய அளவில் புதுமைக் கருத்து தூவப்பட்டிருக்கும். அறிஞர் அண்ணா கூறியதுபோல் முற்போக்கு பேசும் பார்ப்பனர் மிக ஆபத்தானவர்கள். காலத்திற்கேற்ப முறையை மாற்றிக்கொண்டவர்கள்.
பாரதியாரின் நூல் தலைப்பில் எல்லாம் பழமைப் புழு நெளியும். மூடநம்பிக்கை முடைநாற்றம் வீசும், புரையோடிய சமுதாயத்துக்கு புனுகு பூசப்பட்டிருக்கும். பாரதி பிரசுராலயத்தார் தோத்திரப் பாடல்கள் ஏழாம் பதிப்புக்கு எழுதிய முன்னுரை ஒன்றே போதும் பாரதியாரை யார் என்று புரிந்துகொள்ள. “பக்தி மலர்ந்த நம் பரத கண்டத்தில் தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு பாமாலை சூட்டுவது புலவர்களின் இயற்கைக் குணமாகும். பாரதியாரும் இந்துக்கள் சாதாரணமாக வணங்கும் எல்லாத் தெய்வங்களைப் பற்றியும் பாடல்கள் இசைத்துள்ளார்.’’

பாரதி எழுதிய நூலின் தலைப்புகள்: தேசியகீதம், பாஞ்சாலி சபதம், சுயசரிதை, தோத்திரப் பாடல்கள், விநாயகர் நான்மணிமாலை (அதுவும் புதுவை மனக்குளப் பிள்ளையார்) கண்ணன் பாட்டு. பிற பாடல்கள் தலைப்பு: ஸ்ரீநிவேதிதா தேவியின் துதி, கவிதாதேவி அருள் வேண்டல், ராதைப்பாட்டு, வள்ளிப்பாட்டு, அக்னிக்குஞ்சு சாதாரண வருஷத்து தூமகேது, ஸ்ரீசுப்பராம தீக்ஷிதர் இரங்கற்பா, குரு கோவிந்த ஸம்ஹ விஜயம், சக்தி, கிருஷ்ண தோத்திரம் ஜெகத்சித்திரம் புரிகிறதா இப்போது பாரதி-யார் என்று? இங்கிலாந்து நாட்டு மன்னரை வரவேற்ற பாடலுமுண்டு என்று கூறுவர்! நான் கண்ட அளவிலே எந்தக் கருத்தைச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களோ, அந்தக் கருத்துகளுக்கு ‘பா’ அமைத்தார். விலை போகும் சரக்காகத் தயாரித்தார். எதிர்நீச்சல் போட்டவர் அல்லர். ஒரு குறுகிய இந்து மதக் கண்ணோட்டத்தில் கவிதை புனைந்தவர். புதுமைக் கருத்துகளுக்கு பழமைத் தத்துவம் புகட்டும் ‘மோசடி’ என்ற மன்னிக்க முடியாத குற்றத்துக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டவர்.

அவரது பாட்டுகளில் சில…
அவரது பாக்களில் சிலவற்றைக் கூறி அவரது உள்ளக்கிடக்கையை வெளிக்கொணர முயல்கிறேன். சிந்தியுங்கள். சிந்தை தெளிவு பெறுங்கள். ‘இலக்கிய ஆசிரியன் படிப்பவன் உள்ளத்தில் என்ன சிந்தனையைக் கிளறுகின்றானோ அதனைக் கொண்டே அவன் மதிப்பிடப் பெறுகின்றான்’’ என்கிறார் மாத்யூ அர்னால்டு.“Poets are judged by the frame of mind they induce”- Mathew Arnold.
சில பாடல் வரிகள்:
“விதியேவாழி _ விநாயகா வாழி
பிறைமதிசூடிய பெருமான் வாழி
சக்தி தேவி _ சரணம் வாழி’’
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதநாடு..
யாகத்திலே தவவேகத்திலே _ தனி யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்தி கொண்டார் தம்
அருளினிலே யுயர் நாடு’
‘உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவுமிஃகை யெமக்கிலை யீடே
“நாவினில் வேத முடையவள் _ கையில்
நலத்திகழ்வாறுடையாள்தனை’’
“வேதங்கள் பாடுவள் காணீர் –
உண்மை வேல் கையிற்பற்றிக் குதிப்பாள்’’
ஓதருஞ் சாத்திரங் கோடி -_
உணர்த் தோதி யுலகெங்கும் விதைப்பாள்’’
(தொடரும்…)

ஞாயிறு, 17 ஜூலை, 2022

இதுதான் கடவுள் ச(ப)க்தி! அமர்நாத் 'புனித' யாத்திரையாம் 20 பக்தர்கள் உயிர்ப் பலியாம்!

சனி, 9 ஜூலை, 2022

மன்னர்கள் கட்டிய கோயில்களும், மக்களின் பொருளாதார வீழ்ச்சியும்!

மதசார் ‘சதி’ வழக்கத்துக்கு சமாதி அமைக்க வழி வகுத்தவர்

பானகல் அரசர் - சமூகநீதிக்கான வரலாற்று நாயகர்

வியாழன், 9 ஜூன், 2022

அசல் பிராமணனா - டூப்ளிக்கேட் பிராமணனா?