பக்கங்கள்

திங்கள், 24 அக்டோபர், 2022

பாரதியின் பாதையில் ஆர்.எஸ்.எஸ் (90)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (90)

டிசம்பர் 16-31,2021

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (90)

பாரதியின் பாதையில் ஆர்.எஸ்.எஸ்

நேயன்

பசுவதைத் தடைச் சட்டம் என்று இன்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தி, வன்முறையில் ஈடுபடுவதை, ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்-படுவதற்கு முன்னரே கூறியவர் பாரதி.

1917 நவம்பர் 8ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் பசுவதைத் தடுப்பைப் பற்றி எழுதியுள்ளார் கீழ்க்கண்டவாறு:

“பசுவின் சாணத்துக்கு நிகரான அசுத்த நிவாரண மருந்து உலகத்தில் அக்னியைத்தான் சொல்லலாம். வீட்டையும் யாகசாலையையும் கோவிலையும் நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம். அதனைச் சாம்பல் ஆக்கி அச்சாம்பலை விபூதி என்று ஜீவன் முக்தியாக வழங்குகிறோம். பசுமாடு பத்தினிக்கும் மாதாவுக்கும் ஸமானம். அதன் சாணமே விபூதி. அதன் பால் அமிர்தம், வைத்தியரும் யோகிகளும் பசுவின் பாலை அமிர்தம் என்கிறார்கள். வேதமும் அப்படியே-தான் சொல்கிறது.

பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும் பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்துமாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும்.

இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர் சாஹெப், தமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார். ஹிந்துக்களின் கண்ணுக்குப் படாமல் என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொண்டு போங்கள் என்று எழுதியுள்ளார் பாரதி.

கிறித்துவப் பள்ளிகளில் இந்துப் பிள்ளை-களைச் சேர்க்கக் கூடாது என்று இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்துவதை, 18.8.1906ஆம் ஆண்டிலேயே பாரதி ‘இந்தியா ஏட்டில்’ தலையங்கம் எழுதியுள்ளார். அப்பள்ளிகளில் படிப்பவர்களுக்கு இந்துக் கடவுள் பற்றிக் கூற மாட்டார்கள். அதனால் இந்துப் பிள்ளை-களுக்கு இந்துக் கடவுள் பற்றித் தெரியாமல் போகிறது.

அதனால் அவர்களுக்குத் தேசபக்தி வராது. கிறிஸ்துவர்களாக மாறிவிடுவார்கள். எனவே அவர்களை அப்பள்ளிகளில் சேர்க்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளார்.

பாரதியார் கிறித்துவர்களைத் தேசபக்தி அற்றவர்கள், இந்த மதத்தைக் கெடுக்க வந்தவர்கள் என்று 1906இல் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்துபோய் மஹத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லு-கிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்திரிகளை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை எல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.

இதைப் போன்று 1909இல் இசுலாமியர்கள் தேசபக்தி அற்றவர்கள் என்றும் ‘இந்தியா’ ஏட்டில் கருத்துப் படம் போட்டு எழுதியுள்ளார்.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், “இந்தியாவில் மொழிப் பிரச்சினை தீர ஒரே வழி சமஸ்கிருதம்தான் இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்கின்றனர்.

இதே கருத்தைப் பாரதி, இந்தியாவிற்குப் பொது மொழியாக சமஸ்கிருதம்தான் வரவேண்டும் என்று 1920 இலேயே எழுதியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமஸ்கிருதம் மட்டும்தான் (தேவ பாஷை) தெய்வமொழி என்கின்றனர். பாரதியும் இதே கருத்தைத் தான் கூறியுள்ளார்.

பாரதி, இன்னும் தீவிரமாக ஒரு படி மேலே போய், இந்தியாவிற்குச் சுதந்திரம் ஏன் தேவையென்றால் இந்து தர்மத்தைக் காப்பாற்றவே என்று, 1921இல் ‘லோக குரு பாரதமாதா’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

“எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக்கிடக்கிறது. ஆனால் இக்கொள்கையை முற்றும் அனுஷ்டித்தல் அன்னிய ராஜ்ஜியத்தின் கீழே ஸாத்யப் படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி.’’

பாரதி அகண்ட பாரதக் கொள்கை உடையவர். என்றைக்கும் இந்தியா உடையக் கூடாது என்பதில் மிகவும் உறுதியானவர். பாரதியின் காலத்திலேயே 1917இல் தெலுங்கர்கள் தங்களுக்குத் தனி மாகாணம் தேவை என்ற கொள்கையை முன்வைத்தார்கள். அப்போது பாரதி கீழ்க்கண்ட கருத்துகளை முன்வைக்கிறார்:

“என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கையெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது. ஆனாலும் அந்தச் சமயத்தில் ஆந்திரத்தைத் தனிப்பிரிவாக ருஜுபடுத்துவதைக் காட்டிலும், ஆப்கான் முதல் குமரி வரை உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் மதபேதம், ஜாதி பேதம், குலபேதம், பாஷாபேதம் ஒன்றும் கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடல், என்று கூறும் பாரதி,

பாப்பா பாட்டில் கூட,

“சேதமில்லாத இந்துஸ்தானம் -_ அதை

தெய்வமென்று கும்பிடடி பாப்பா’’

என்று பாப்பா பாட்டில் கூறியுள்ளார் பாரதி.

இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் போலவே பாரதியும் உடன் கட்டை ஏறி இறந்து போனவர்களை உத்தமிகள் என்று கூறுகிறார்.

செத்துப்போன காஞ்சி பெரிய சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரலில், உடன்கட்டை ஏறுதலை மிகவும் போற்றி எழுதியுள்ளார். அந்த நெருப்பு சுடாது, சந்தனம்போல் குளிர்ச்சியாய் இருக்கும், புடவைகூட எரியாது என்றும், அவ்வாறு உடன்கட்டை ஏறும் பெண்கள் உத்ததமிகள் என்று எழுதியுள்ளார்.

இதே கருத்தை அன்றைக்கே பாரதி எழுதியுள்ளார், என்பதிலிருந்து அனைத்து சனாதன செயல்பாடுகளுக்கும் பாரதி முன்னோடி என்பது விளங்குகிறது.

இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கொள்கைகளை அன்றைக்கு வகுத்துக் கொடுத்தவர் பாரதியார் என்று ஆணித்தரமாக நாம் சொல்லலாம்.

சுருங்கக் கூறின், இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருதல், இசுலாமியரும், கிறித்துவரும் மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தேசபக்தி அற்றவர்கள், கிறித்துவர் பள்ளிகளில் இந்து மாணவர்களைச் சேர்க்கக் கூடாது. முகமதியர்களும், கிறித்துவர்களும் இந்துக்களின் விரோதிகள், இந்தியா முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்து மதத்தைப் பரப்ப வேண்டும் என்று தனது இந்து மத வெறியை வெளிப்படுத்திய பாரதி மற்ற மதங்களின் மீது வெறுப்பைக் கக்கினார் என்று உறுதியாகிறது.

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக