பக்கங்கள்

ஞாயிறு, 19 மே, 2019

நாகரிகமும் நமது கடமையும் - 1


- பெரியார்
10.01.1948 - குடிஅரசிலிருந்து...
நாகரிகம் என்கின்ற வார்த்தைக்குப் பொருளே, பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் நாகரிகம் என்பதற்கு ஒவ்வொரு தனிப்பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ், குறளில் நாகரிகம் என்கிற வார்த்தை வள்ளு வரால் உபயோகப்படுத்தப் பட்டிருப்பதாக நான் 10, 20 வருஷங்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாட்சண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்படுத்தப் பட்டிருப்பதாக வும் எனக்கு ஞாபகம்.
நாகரிகமும், மக்களின் மாறுதல்களும்
நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக்கொண்டு பேசினாலும் மக்கள் சமுகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லாப் பாவனைகளிலும் பெரிதும் மாறுப்பட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக்கின்றது என்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில்தான் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது. மறுபடி கீழே இறங்கியது. இப்பொழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல் நாட்டு திரீகளும் - தெருக்களில் தெருக் கூட்டுவது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்தக் காலத்தில் துணிகளைத் தூக்கிப்பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரிகம் இப்பொழுதோ என்றால், ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாவற்றையும் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரிகமென்றுதான் கருதுகிறோம்.
பற்றுகளை விடுத்துப் பார்ப்பீர் உண்மையை!
நாம் இவைகளைப் பற்றி எல்லாம் பேசும் பொழுதும், யோசிக்கும் பொழுதும் எந்த விதப் பற்றுதலும் இல்லாமல், அதாவது, ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டு விட்டுச் சுயேச்சையாகக் சீர்தூக்கிப் பார்த்தால் தான், விஷயங்களை நன்றாகத் தெரிந்து கொள் ளலாம். அதன் உண்மையும் அப்பொழுதுதான் விளங்கும்.
ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவசிவா என்று ஜெபிப்பதுதான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்தமானங்கள், மேல் சொன்ன விஷயத்தைக் கேலி செய்கின்றது.
புருஷன், பெண் ஜாதி என்கிற இரு சாரர் களை எடுத்துக் கொண்டாலும், முன்பு கல் என்றாலும் கணவன்,  புல் என்றாலும் புருஷன்  என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமை யென்று நடந்துவந்த பெண்களைப் பற்றிப் பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால், இன்றோ புருஷனிடம் மனைவியானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக்கிரதையாய் இருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்ததும், சம உரிமையும், சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண்களையே நாகரிகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம். முன்பு புராணத்தைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் பேசுவதுதான் வித்வத்தன் மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகிப் பரிகசிக்கத்தக்கதாக ஆகிவிட்டது. புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கையிருந் ததைச் சிலாக்கித்துப் பேசினோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியஷமாக எதையும் எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துவதையும் - விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுனர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம்.
இடம் காலங்களுக்கு
ஏற்ப நாகரிகம்
நாகரிகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும் - காலப்போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. கால தேச வர்த்தமான - வழக்கத்தையே ஒட்டி நாகரிகம் காணப்படுகிறது.
காலப் போக்கானது எந்தத் தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை-ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும் - புரட்சி ஏற்படவும் செய்கிறது.
மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர்கள். எது நாகரிகமென்று கருதுகின்றோமோ, அது பெருத்த அஜீரணத் துக்கு வந்து விடுகிறது. மீண்டும் அந்த நிலை மையானது மாறிக்கொண்டு போகத்தான் செய்கிறது. ஒரு விஷயமானது வாய்ச் சாமர்த்தியத் தினால் செலாவணியாகி விடும். அது மெய்யோ, பொய்யோ - சரியோ - தப்போ எப்படியும் இருக்கலாம்.
நாகரிகத்தின் முடிவு
நாம் ஏன், எதற்காக உழைத்துப் பாடுபட வேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடு பட்டுத்தான் ஆக வேண்டுமா? நாகரிகம் என்பது சதா உழைத்துத்தான் உண்ண வேண் டுமா? என்கின்ற கேள்விகள் எழுந்து மக்கள் சமுகம் கஷ்டம் தியாகமின்றி-நலம் பெற முயற்சிக்கலாம். இது நாகரிகமாகக் கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம்.
இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங் களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரிகமாகப் பாவிக்கப் பட்டிருந்தது, பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப்படுத்தப் பட்டு, அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு, இராட்டை சுற்றுவதும் - தக்ளி நூல் நூற்பதும் நாகரிகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம்,ஜாதி) பற்றுதலுமில்லாத பொது மனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது. நாம் ஒரு காலத்தில் தேசம் - தேசியம் - தேசப்பற்று என்பதை நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம்.
தொடரும்...
 - விடுதலை நாளேடு, 11.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக