பக்கங்கள்

திங்கள், 20 மே, 2019

ஆர்.எஸ்.எஸின் அடிவருடி அண்ணா தி.மு.க.வே - அண்ணாவை அவமதிக்காதே!



மின்சாரம்


அண்ணாவின் பெயரிலே கட்சியை வைத் துள்ள அண்ணாதிமுக பிரகஸ்பதிகளே!

அந்த அண்ணா இந்து என்பது பற்றி என்ன பேசினார், எழுதினார் என்பது தெரியுமா?

அண்ணா என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளாமலேயே அண்ணாவின் பெயரில் கட்சி ஒரு கேடா? அண்ணாவின் உருவம் கட்சியின் கொடியில் ஒரு கேடா?

இதோ அண்ணா பேசுகிறார் - அண்ணா திமுக பிரகஸ்பதிகளே கேளுங்கள்! கேளுங்கள்!!

"நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல!  நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மி டையே தரகர் கூடாது, தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக யாகப் புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக் கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை "இந்து" என்று கூறிக்கொள்ள முடியும்? மூடமதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத் திரன் என்று கூறிக்கொள்ள எப்படித் தான் மனம் இடந்தரும்? எப்படித் தான் துணியும்?

"இந்து மதம்" என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத் தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதை விட்டு, மாள வழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடு வாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் எனத் தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து, கொடுமைக்கு ஆளாக்கும் "இந்து மார்க்கத்தில்" போய்ச் சேர இசைவாரா? வீரத் திராவிடர் என்று ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப் பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்!! இழிவைத் தேடார்!!!"

- அண்ணா எழுதிய 'ஆரிய மாயை' பக்கம் 32, 33

அதிப்பிரசங்க அதிமுகவினரே! அமைச்சராக இருக்கக்கூடிய பிரகஸ்பதிகளே! 'இந்து' மதம் பற்றி அண்ணாவின் இந்தக் கூற்றுக்கு உங்கள் பதில் என்ன?

அண்ணாவைத் தூக்கி எறிந்து அக்கிரகார திமுக என்று பெயர் சூட்டிக் கொள்ளப் போகிறீர்களா?

திராவிடத்தை வெட்டி எறிந்து ஆர்.எஸ்.எஸ். லேபிளை ஒட்டிக் கொள்ளப் போகிறீர்களா?

திராவிடர் கழகத் தலைவரை இழித்துப் பேசும் அடக் கோமாளியே! பெரியார் சொன்னதையும், அண்ணா சொன்னதையும்தான் வீரமணியும் எடுத்துச் சொல்லி வருகிறார்.

அப்படி இருக்கும்போது வீரமணி அவர் களைச் சாடுவதாக நினைத்துக் கொண்டு, அண் ணாவை அவமதிக்கிறீர்களா?

அண்ணா சொன்னாரே - அந்த முறையில் அந்த "இந்து" என்ற பாம்பை எடுத்துப் படுக்கை யில் விட்டுக் கொள்ளப் போகிறீர்களா?

அண்ணா சொன்னாரே - அந்த "இந்து" என்ற விஷத்தை எடுத்து உணவில் சேர்க்கப் போகிறீர்களா?

பதில் சொல்லுங்கள், பதில் சொல்லுங்கள் - பதவிப் பித்தர்களே!

பெரியார் கருத்தையும், அண்ணாவின் கருத்தையும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சொன்னால் கோபம் வருகிறது. அதிலும் அண்ணா தி.மு.க. அமைச்சருக்கு என்றால், இவர்கள் அண்ணாவின் தம்பிகளா? ஆர்.எஸ்.எஸின் தரகர்களா?

அறிவு நாணயத்தோடு பதில் சொல்லிவிட்டு அண்ணா திமுகவின் ஆசாமிகள் திமிர் முறிக்கட்டும்!

ஆர்.எஸ்.எஸின் எடுபிடியாக இருந்து, முஸ் லீம்கள் மீது பாய்ந்து குதறும் பரிதாபத்துக்குரிய அண்ணா திமுகவினரே - இதுபற்றியும் உங்கள் கட்சியில் பெயர் சூட்டப்பட்டிருக்கும் அண்ணா என்ன எழுதினார் தெரியுமா?

இதோ அண்ணா பேசுகிறார் கேண்மின்! கேண்மின்!!

“இந்துக்களுக்குள் எந்தக் காரணத்தாலாவது மனக்கசப்பு இருந்தால் அதை நமக்குள் சமாதானமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஒரு வகுப்பார் தாங்கள் இந்துக்களே அல்ல என்று முஸ்லீம்களோடு சேர்ந்து ஒத்துழைப்பதா?” என்று திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரியார் கேட்கிறார்.

இந்துக்களுக்குள் தகராறு என்ற தத்துவம் மறைந்து வெகு நாட்களாகிவிட்டது! “நானும் இந்து தானே, என்னை ஏன் கொடுமைப் படுத்து கிறீர்? ஏன் தாழ்ந்த ஜாதி என்று கூறுகிறீர்?” என்று கைகூப்பிக் கேட்டபோது, நெஞ்சம் திறக்கவில்லை!

பிறகே நாம் யோசித்தோம், ஒரு சிறு கூட்டம் நம்மை இங்ஙனம் கொடுமைப்படுத்தக் காரணம் என்ன என்ற உண்மை விளங்கிற்று. இது இனப்போராட்டம் என்பது தெரிந்தது. அவர்கள் ஆரியர் - நாம் திராவிடர்! அதே ஆராய்ச்சியே, முஸ்லீம்கள் திராவிட இனம், இஸ்லாமிய மார்க் கம் என்ற உண்மையை உரைத்தது. ஆகவே திராவிட - இஸ்லாமிய கூட்டுப்படை கிளம்பிற்று.

சாஸ்திரியார் கூறுவதுபோல், திராவிட நாட்டிலி ருந்து ஆரியரை ஓட்ட அல்ல; ஆரியத்தை ஓட்ட! அதற்கு முஸ்லீம்களுடன் ஒத்துழைப்பதா? என்கிறார் சாஸ்திரியார். ஆம்! அமெரியிடம் ஒத்துழைக்கிறீர்; நீர் அதை மறக்க வேண்டா மென்று சாஸ்திரியாருக்குக் கூறுகிறோம். ஆங்கி லேயரும் - ஆரியரும் ஒரே இனம்! இனத்தோடு இனம் சேருகிறது! திராவிடரும் - இஸ்லாமியரும் ஒரே இனம்! இனத்தோடு இனம் சேருகிறது!"

- அண்ணாவின் 'ஆரிய மாயை' பக். 29

இதற்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்-சின் அடுப்பங் கரையில் நின்று கொண்டு இஸ்லாமியரைத் தாக்கப் போகிறீர்களா?

உங்களின் ஒவ்வொரு அசைவும் அண்ணா வுக்கு எதிரானது - அண்ணாவை அவமதிக்கக் கூடியது.

வேண்டும் என்றால் ஒன்று செய்யலாம்; கட்சி யிலிருந்து அண்ணாவின் பெயரை அகற்றிடலாம்; கொடியிலிருந்து அண்ணாவின் உருவத்தையும் நீக்கி விடலாம். என்ன செய்ய உத்தேசம்?

- விடுதலை நாளேடு, 15.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக