பக்கங்கள்

சனி, 30 நவம்பர், 2019

பெரியாரின் கணிப்பு

1.            “நான் ஒரு சனாதன இந்து’’.

2.            “வேத - புராண - இதிகாச முதலிய தர்ம சாஸ்திரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’

3.            “பகவான் அவதாரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’

4.            “மறு பிறப்பில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’

5.            “வேத சாஸ்திரங்களில் கூறியுள்ள வர்ணாசிரம தர்மங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’

6.            “விக்கிரக ஆராதனையில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’

                என்று காந்தி முதலில் கூறினார்; எழுதினார்; அதன்படி நடந்தார். ஆகவேதான் அவர் மகாத்மா ஆக்கப்பட்டார்.

காந்தியாரை பார்ப்பனர் ஏன் சுட்டுக்கொன்றார்?

ஆனால், அதே காந்தியார் பின்னர்,

1.            “கடவுள் என்ற ஒரு வஸ்து இருப்பதாக எனக்கு நம்பிக்கை இல்லை.’’

2.            “இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை.’’

3.            “அல்லாவும் _ இராமனும் எனக்கு ஒன்றுதான்-.’’

4.            “பார்ப்பனர்கள் படிக்க வேண்டிய அவசியமில்லை.’’

5.            “வேதத்தைப் போலவே கொரானையும் மதிக்கிறேன்.’’

6.            “பலாத்காரமாய் சுவாதீனம் செய்துகொண்ட முஸ்லீம் பள்ளிவாசலை அவர்களுக்கு காலிசெய்து கொடுத்துவிட வேண்டும்.’’ என்று சொன்னார்.

ஆதலால், சுட்டுக் கொல்லப்பட்டார்.

புத்தரை விரட்டி, புத்த மதத்தைக் கொன்ற பார்ப்பனர் அவரை எப்படி விஷ்ணுவின் 10ஆவது அவதாரம் என்றார்களோ, அதுபோல் காந்தியாரை சுட்டுக்கொன்றுவிட்டு கொளுத்தி, அவர் சாம்பலை வைத்து கோவில் கட்டுகிறார்கள்.

இது பெரியாரின் துல்லிய கணிப்பு.

- உண்மை இதழ், 1-15.10.19

இராமலிங்க அடிகள்

பிறப்பு: 5.10.1823

வியாழன், 21 நவம்பர், 2019

வள்ளலாரின் சமுதாய புரட்சிக் கருத்துக்கள்! 1&2

டாக்டர் துரை.சந்திரசேகரன்

(வடஅமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 27.10.2019 அன்று மேரிலாண்டில் நடத்திய விழாவில் 'வள்ளலாரின் சமுதாயப் புரட்சி' எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் வாசித்த கட்டுரை)

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோறு மிரந்தும் பசியராத யர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்

நேர் உறக்கண்டு உளம் துடித்தேன்

ஈபுல் மாணிகளாய் ஏழைகளாய் நெஞ்சு

இளைத்தவர்தமைக் கண்டே கிளைத்தேன்"

என்று உயிர்கள் உற்ற வாட்டத்தை, துன்பத்தைக் கண்டு தன்னையே வருத்திக் கொண்டவரான வள்ளலார் சமுதாயம் சீர் உற அன்பை விதைத்தார். அருளை போற்றினார்; கருணையே வடிவாகி கசிந்துருகினார்; தயையுடன் உதவினார். உடல் பசிக்கும், அறிவுப்பசிக்கும் வழிகண்டு சத்திய தருமச்சாலை கண்டும், திருவருட்பா திருமுறை தந்தும் பயன் விளைவித்தார், எம்மார்க்கத்துக்கும் பொதுவான சன்மார்க்க நெறிகாட்டி, சன்மார்க்கக் கொடி நாட்டி, பேருபதேசம் செய்து வழிகாட்டினார்.

ஆம்!

"அகத்தே கருத்து புறத்தே வெளுத்து

இருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க

சங்கத்து அடைவித்திட வந்தேன்"

என்று தம்மைப்பற்றி அறிவித்துக் கொண்டு தொண்டாற்றினார்.

பசித்திரு - தனித்திரு - விழித்திரு என பறைசாற்றினார்.

"மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும்

வருத்தத்தை ஒரு சிறிது எனினும்

கணணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்

கண்டும் நான் சகித்திட மாட்டேன்" என்று ஆர்ப்பரித்தார்.

வெறுக்கப்பட வேண்டியவை

மக்களிடையே ஒருமைப்பாடு தேவையெனில் எவற் றையெல்லாம் விரட்டிட வேண்டும் - வெறுத்திட வேண் டும் என்பதை வரையறை செய்கிறார் வள்ளலார். மனித சமுதாயத்தை பிரிப்பது ஜாதியும், மதமும், சமயமும் என்பதை உணர்ந்த வள்ளலார், அவற்றுக்கு எதிராக மக்களிடையே பரப்புரை செய்தார். கல்வி அறிவும், போதிய விழிப்புணர்ச்சியும் இல்லாத காலம் அப்போது. கடவுளை, மதத்தை, சமயத்தை, ஜாதியத்தை விமர்சனம் செய்வது, எதிர்த்து பிரச்சாரம் செய்வது எவ்வளவு கடினமான செயல் என்பதை நாம் உணர வேண்டும்.

நலிதரு சிறிய தெய்வங்களை நம்பி கிடந்த மக்களை வீண்பொழுது கழிக்கின்றவர்களாக, பொய்யான கலை பல புகன்றிடுவோராக சுட்டுகிறார் வள்ளலார். 'எமது தெய்வம் எமது தெய்வம்' என்று உரிமை கொண்டாடு வோருக்கு வள்ளலார் தந்த பதில் "இவற்றையெல்லாம் கண்ட காலத்திலும் பயந்தேன்", "அவையெல்லாம் சமுதாயத்தில் நலிவைத் தரக்கூடிய கருத்துக்களே தவிர வலிவினை தரக்கூடியவைகள் அல்ல" என்பதேயாகும். 19ஆம் நூற்றாண்டில் திரு வருட்பா ஆறாம் திருமுறை யில், கொடியேற்று உரையில் பேருபதேசத்தில் வள்ள லார் வலியுறுத்தியுள்ள சிந்த னைகள் புரட்சிகரமானவை - புதுமையானதும் கூட!

அந்தக் காலம்

உலகெலாம் உணர்ந்து ஓதர்க்கரியவனாக கடவுளைப் பற்றிய பார்வை மக்கள் மனதில் ஆழமாக படிந்திருந்த காலத்தில் தெய்வங்கள் பலப்பல என்று சிந்தை செய்யக் கூடாது என்பது முற்போக்கான விஷயம்தானே! மக்களின் உள்ளத்தில் மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளை, புராண - இதிகாச பழமைக் கருத்துக்களை, அறிவை மயக்கும் அறியாமைக் கருத்துக்களை கலை உரைத்த கற்பனை களாகக் கண்ட வள்ளலார் அப்படிப்பட்ட கண்மூடித்தன மான கருத்துக்களையெல்லாம் மண்மூடிடச் செய்ய வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார். அவைகளை வலியுறுத்தியோரை புதைக்கப்பட வேண்டிய கருத்துக் களை விதைத்துக் கொண்டிருக்கும் வீணர்கள் என்றார்.

"நலிதருசிறிய தெய்வம் அய்யோ

நாட்டிலே பல பெயர் நாட்டிப்

பலிதர ஆடுபன்றி குக்குடங்கள்

பலிகடா முதலிய உயிரைப்

பொலிவுறக் கொண்டே போகவுங்கண்டே

புந்திநொந்து உளம் நடுக்குற்றேன்

கலி உறு சிறிய தெய்வம் கோயில்

கண்ட காலத்திலும் பயந்தேன்"

படிப்போர் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் வள்ளலார் ஆக்கிய மேற்கண்ட பாடல் உணர்த்துவது என்ன? கடவுளுக்கு ஆடுகடா பூசையா? குக்குடங்கள் படையலா? பலியிடுவதற்கு இந்த உயிர்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்டு உள்ளம் நடுங்கினேன் என்கிறாரே வள்ளலார். உயிர்கள் மீது அவர் கொண்டிருந்த கருணையின் அன்பின் வெளிப்பாடல்லவா இந்தப் பாடல்! இப்படிப்பட்ட தெய்வங்களை, கோயில்களை கண்ட காலத்திலும் அஞ்சியவராக தன்னை ஆளாக்கிக் கொள்ளும் வள்ளலாரின் அறிவுநெறி தான் எம்மார்க்கத்துக்கும் பொதுவான சன்மார்க்கம் எனும் நெறியாகும்.

பலி தரலாமா?

வள்ளலாரையே 'கடவுள்' என எண்ணி தொழுதிடும் அன்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரை மனிதநேய தத்துவத்தின் வழிகாட்டியாகக் கொள்ளாமல், கருணைமிக்க அவரின் சிந்தனைகளை எண்ணிப்பாராமல் பூசத்திருநாளில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக வழி படுகிறார்களே என்னே கொடுமை! இன்னமும் கிராமப் புறங்களில் குலதெய்வ வழிபாடு என்று சொல்லி விலங் குகளை, பறவைகளை பலிதரக் கூடியவர்கள் இருக்கி றார்களே - அது வள்ளலாரின் கொள்கைக்கு எதிரான செயல்பாடு அல்லவா?

"தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

சேர்கதி பலபல செப்பு கின்றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடுவாரும்

பொய்ச்சமயாதியை மெச்சுகின்றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்

மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்"

"வெறிக்கும் சமயக்குழியில் விழ

விரைந்தேன் றன்னை விழாத வகை

வறிக்கும் ஒரு பேர் அறிவே"

"மதத்திலே சமய வழக்கிலே மாயை

மருட்டிலே இருட்டிலே மறவாக்

கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது

கழிக்கின்றார்..."

அறிவே பிரதானம்...

அறிவுதான் தம்மை சமயக் குழியில் விழாமல் காப்பாற்றியது என்றும், மதத்திலும், சமயத்திலும் மனதை வைத்து அச்சத்திலும், அறியாமையிலும் உழலும் மக்களை வீண் பொழுது கழிக்கின்றவர்களாகவும் வள்ளலார் உரைப்பது 19ஆம் நூற்றாண்டில் புதுமைக் கருத்துக்கள் தானே!

எத்தனை எத்தனை தெய்வங்கள் மக்களின் சிந்தனையில்! ஒன்றா - இரண்டா? முப்பத்து முக்கோடி சாமிகள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிமார், அறுபத்து மூன்று நாயன்மார்கள், பனிரெண்டு ஆழ்வார்கள், கின்னரர், கிம்புருடர், அட்டதிக்கு பாலகர்கள் அடடா... எத்தனை எத்தனை சாமிகள்? அத்தோடு விட்டார்களா? சொர்க்கம் - நரகம் என்று இறுதியில் மனிதன் சேரக்கூடிய இடம் ஆக 'ரிசர்வேஷன்' செய்யப்படுவது வேறு! புராண - இதிகாச - சாஸ்திர சம்பிரதாயங்கள் என்று எத்தனை எத் தனை கலைகள்... இவையெல்லாம் பொய்கள் என்கிறாரே வள்ளலார். சமயவாதிகள் பொய்யர்கள் என்கிறாரே...

"தூக்கமும் துயரமும் அச்சமும் மடமும்

தொலைந்தன தொலைந்தன எனைவிட்டு

ஏக்கமும் விளையும் மாயையும் இருளும்

இரிந்தன ஒழிந்தன முழுதும்

ஆக்கமும் அருளும் அறிவும் மெய்அன்பும்

அழிவுறா உடம்பும் மெய்இன்ப

ஊக்கமும் எனையே உற்றன உலகீர்

உண்மை இவ்வாசகம் உணர்மின்"

"எத்துணையும் பேதமுறா தெவ்வுயிருந்

தம்முயிர் போலெண்ணி யுள்ளே

யொத்துரிமை யுடையவரா யுவக்கின்றார்

யாவரவருளந்தான் சுத்த சித்தம்"

உண்மை அறிவுடையோர் யார் என்றால் உயிர்களிடத்தில் வேறுபாடு காட்டாமல் எந்த உயிரையும் தமதுயிர் போல எண்ணி ஒத்த உரிமை உடையவர்கள் எனக்கருதி நடந்து கொள்ள கூடியவர்களே என்கிறார் வள்ளலார். மடமைத் தன்மையும், பயமும், துன்பதுயரங்களும் தொலைந்தனவாம்; மருட்டும் மாயையும் அறியாமை இருளும் ஒழிந்தனவாம்; ஆக்கம், அருள், இன்பம், அன்பு, அறிவு அனைத்தும் பற்றினவாம் வள்ளலாரிடம் என்று சொல்லும்போது எவை எவை மனிதனை பற்றிட வேண்டும், எவை எவை மனிதனை விட்டு நீங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

வேறுபாடு ஏன்?

"வரையில் உயரகுலம் என்றும் தாழ்ந்தகுலம் என்றும்

வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக் காண்கின்றீர்

புரை உறுநும் குலங்கள் எல்லாம் புழுக்குலம் என்றறிந்தே"

உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்று வகுத்துரைத்த வர்களை நோக்கி வினா தொடுக்கிறார் வள்ளலார். அனைவருமே சாகத்தானே செய்கின்றனர். அப்படி யென்றால் மேல், கீழ் எப்படி என்கிறார். எல்லோரும் ஓர்குலம் என்பதே வள்ளலாரின் முடிவு.

"சாதிமதம் சமயமுதல சங்கற்ப

விகற்பம் எல்லாம் தவிர்ந்துபோக"

"மதமெனும் பேய் பிடித்தாட! ஆடுகின்றோர்

தோத்திரஞ் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே"

"சாதிசம யங்களிலே விதிபல வகுத்த

சாத்திரக் குப்பைகள் எலாம் பாத்திரம் அன்று"

"பேருற்ற உலகில் உறு சமயமத நெறியெலாம்

பேய்பிடிப் புற்ற பிச்சுப்

பிள்ளை விளையாட்டென உணர்ந்திடாது உயிர்கள் பல

பேதம்உற்று அங்கும் இங்கும்

போர்உற்று இறந்து வீண் போயினார் - இன்றும் வீண்

போகாதபடி விரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்க நெறி காட்டு"

சமுதாயச் சிந்தனைகள்...

மதத்தை, சமயத்தை, ஜாதியத்தை எதிர்த்து வள்ள லார் மொழிந்துள்ள கருத்துக்கள் அருட்பா பாடல்களாக மேலே பார்த்தீர்கள். அவரின் பாடல்களில் குறிப்பாக சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளாக, புரட்சி மொழி களாக திகழ்பவை ஜாதி, மத, சமய கண்டனப் பாடல்களே என்றால் மிகையில்லை. உரைநடையில் வள்ளலார் வலியுறுத்தி உள்ள கருத்துக்களுள் மிகுதியானவை இவையே ஆகும்.

கடவுள் - மதக்கருத்துக்களுக்கு ஆதரவாக வாதிடு வோர் "மனிதர்களை நெறிப்படுத்திடத்தான், ஒன்றுபடுத் திடத்தான், ஒழுக்கவாதிகளாக உருவாக்கிடத்தான் மதங் களும், சமயங்களும் உருவாக்கப்பட்டன" என்பார்கள். ஆனால் இன்று நாம் பார்க்கும் உலகில் போர்கள் ஏன்? எதனால்? என்றால் மதங்களால் தான் என்பதே விடையாகக் கிடைக்கும். நாடுகளுக்குள்ளே - சச்சர வுகள், மனிதர்களுக்குள்ளே மோதல்கள் எல்லாவற்றுக் கும் முதன்மைக் காரணியாக காட்சி தருவது மதமே. ஜாதிக்கோட்பாடே, மதக்கருத்துக்களே இன்றைய இந்தியத் துணைக்கண்டத்தின் வளர்ச் சிக்குத் தடை.. முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. ஜாதிக் கலவரங் களும், மதவெறிக் கலவரங்களும் மனித அழகியலை அழிக்கின்றன. காரல்மார்க்ஸ் கூறுவார், "மதம் என்பது ஒடுக்கப்பட்ட உயிர்களின் துயரப்பெரு மூச்சு; இதயம் இல்லாத உலகத்தின் இதயம். உயிரற்ற நிலைகளின் உயிர். மக்களுக்கு மயக்கம் ஏற்படுத்தும் அபின் போன் றது" என்று, "கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதனை வெறுப்பதும்; கடவுளை தொழுவதும்தான் மதக்கோட் பாடுகள்" என்று இங்கர்சால் கூறியதும் நினைவில் கொள்ளத்தக்கதே!

அடுத்த நூற்றாண்டுக்கு...

"மதம் மனிதனை மிருகமாக்கும்

ஜாதி மனிதனை சாக்கடையாக்கும்"

என்று பெரியார் கூறியதும், "மதம் அற்ற இடத்தி லேதான் மனித சமத்துவம் நிலை பெறமுடியும்" என்ற தும் கூட 19ஆம் நூற்றாண்டில் வள்ளலாரின் அறி வுறுத்தலை அடுத்த நூற்றாண்டுக்கு எடுத்துச் சென்ற புரட்சிக் கருத்துக்களே ஆகும்.

சமுதாய ஒற்றுமைக்கு ஜாதி, மத, சமயக் கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மதம் எனும் பேய் பிடித்து ஆட வேண்டாம் என்றும், ஜாதி மதக்கருத்துக்கள் எல்லாம் சாத்திரக் குப்பைகள் என்றும், சமய மத நெறி யெலாம் பிள்ளை விளையாட்டு என்றும், மனிதர்கள் வேறுபட்டு நின்று போரிட்டுக் கொள்ளும் வீண் கருத் தாக்கம் என்றும் வள்ளலார் அறிவுறுத்திய பாங்கு எந்த அளவு மனித நலத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தை அக்கறையைக் காட்டுகிறது. ஜாதிக்கும், சமயத்துக்கும், மதத் துக்கும் எதிராக சமர் செய்ய வேண்டியவர்கள் சன் மார்க்கிகள் என்பதை உணர வேண்டும்.

- (தொடரும்)

- விடுதலை நாளேடு 14 11 19

வள்ளலாரின் சமுதாய புரட்சிக் கருத்துக்கள்! (2)

டாக்டர் துரை.சந்திரசேகரன்

(வடஅமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 27.10.2019 அன்று மேரிலாண்டில் நடத்திய விழாவில் 'வள்ளலாரின் சமுதாயப் புரட்சி' எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் வாசித்த கட்டுரை)

நேற்றையத் தொடர்ச்சி...

வீண்வாதம்

"பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர்

பவநெறி இதுவரை பரவியது இதனால்

சென்னெறி அறிந்திலர் செறி இருள் அடைந்தனர்

ஆதலின் இனி நீ

புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும்வான்

புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்

தன்னெறி செலுத்துக"

"சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி

நேத்திரங்கள் போங்காட்ட நேராகவே"

"வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாகமத்தின் விளைவறீயீர் - சூதாகச்

சொன்ன அலால் உண்மைவெளி தோன்ற உரைத்தலிலை

என்ன பயனோ இவை"

சாத்திரக் குப்பை

மனு சாத்திரங்கள் முதல் வாஸ்து சாஸ்திரம் வரை, அனைத்து சாஸ்திரங்களும் தடுமாற்றம் ஏற்படுத்தக் கூடியனவே தவிர நல் வழிகாட்டங் கூடியன அல்ல என்பது அருளாளர் வள்ளலாரின் அருமையான கருத்து. மக்களைப் பிரிக்கவும், வேற்றுமையை ஓங்கச் செய்ய வுமே அவைகள் உதவும். எனவே இதுவரை பரவியுள்ள பல்நெறி சமய - மதக்கருத்துக்கள் மன்பதைக்கு பவநெறி கருத்துக்களே ஆகும். அறியாமை இருள் மட்டுமே அதனால் நிறைந்தது. பொது நெறியான அருள்நெறியான உண்மை சன்மார்க்க நெறி நின்று ஒழுக வாரீர் என்று அழைத்தவர் வள்ளலார்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளு வனின் கருத்தே வள்ளலார் கருத்து.

"காணப்பா சாதிபேதம் எங்கட்கில்லை

கருத்துடனே எங்கள் குலம் சுக்கிலம்தான் - மைந்தா

தோணப்பா தோணாமல் சாதி மதம்

சொல்லுவோர் சுருக்கமாகச் சுருண்டு போவார்"

"சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்

சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்"

"பறைச்சியாவ தேதடா, பணத்தியாவ தேதடா

இறைச்சி தோல் எலும்பினுள் இலக்கமிட்டிருக்குதோ

பனத்தி போகம் வேறெதோ

பறைச்சி போகம் வேறெதோ

பகுந்து பாரும் உம்முளே"

என்றும் கருத்துக்களை விதைத்த சித்தர்களின் அறிவுக் கருத்துக்களே வள்ளலாரின் கருத்துக்கள்.

சூதான வேதம்

வேதத்தில் இல்லாத கருத்துக்களே இல்லை என்று பொய்வாதம் பேசுகின்றார் பலர். உண்மையில் வேதத் தில் அசிங்கமும், ஆபாசக் கருத்துக்களும், கொலை பாதகச் சுலோகங்களும் மட்டுமே உள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மறுப்புக் கருத்துக்களே, பார்ப்பனீய பாதுகாப்புக் கருத்துக்களே வேதங்களில் மிளிர்ந்து காணப்படுகின்றன. பார்ப்பனர்களுக்குத் தங்களை அடிமைகளாக ஒப்புக் கொடுக்காதவர்கள் மீதான துவேஷமே வேதங்களில் விரவிக்கிடக்கின்றன.

"அக்னியே! எங்களை துவேஷிப்பவனை உனது சுடரால் எரித்துவிடு!"

"இந்திரா! சத்ரு சேனையை மயக்கம் செய்க. கண்களைப் பிடுங்கு; அவனைக் கொல்; எலும்புகளை நொறுக்கு; அவன் ஜீவனற்றவனாகுக; அவன் சுவாசம் நீங்குக"

"இந்திரனே! வஜ்ஜிராயுதத்தால் அவர்கள் சிரங்களை துண்டித்திடுக"

"எங்கள் எதிரிகளை ருத்ரன் நாசம் செய்க!"

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுலோகங்கள் அனைத் தும் அதர்வண வேதத்தில் உள்ளவைதான்!

இப்படி வேத மந்திரங்கள் முழுக்கவும் பார்ப்பன ரல்லாத மக்கள் மீது வெறுப்புதான். முழுக்கவும் பார்ப் பனர் சுயநலம்தான் மிகுந்திருக்கிறது. அதனால்தான் வள்ளலார் எந்தப் பயனுமில்லாத வேதங்கள் அனைத் தும் சூதாகச் சொன்னவை என்றார்.

மண்மூடிப் போகட்டும்

"புல்லலா மனத்தேன் என்னிலும் சமயம்

புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்

சொல்லவா பிறரைத்  துதிக்கவா சிறிதோர்

சொப்பனத் தாயினும் நினையேன்"

"மலைவுறு சமயவலை அகப்பட்டே மதி மயங்கினேன்"

"இருளான மலம் அறுத்து

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்

வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போக..."

"மதமென்றும் சமயமென்றும் சாத்திரங்கள் என்றும்

மன்னுகின்ற வேரென்றும் மற்றவர்கள் வாழும்

பதமென்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்க

பட்ட அனுப வங்கள் என்றும் பற்பலவா விரிந்த

விதம் ஒன்றுந் தெரியாது மயங்கினனே"

வள்ளலார் மதிமயங்கி இருந்த காலமாக அவர் மதத்தை, சமயத்தை ஏற்றுக் கொண்டிருந்த காலத்தை குறிப்பிடுகிறார். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுமெனில் மருளினை இருளினை ஏற்படுத்தும் மார்க்கங்கள் எல்லாம் மண்மூடிப் போக வேண்டும் என்கிறார். அதுவும் வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகட்டும் என்கிறார். சமயங்களை அடிமைப்படுத்தும் வலை என்கிறார், பொய்நெறி என்கிறார். அவரின் சிந்தனைகள் இன்றைக்கும் வழிகாட்டும் நெறிகளாக நின்று உண்மையை போதிக்கின்றன.

புராண, இதிகாச, வேத கருத்துக்கள் இந்திரஜால கருத்துக்கள் -  அதாவது ஏமாற்று கருத்துக்கள் என்பதே வள்ளலாரின் கருத்து. இவைகள் விதித்த நெறி முழுவதும் சூதாகச் சொன்னவைகளே. அறிவுதான் இவற்றின் உண்மையை உள்ளதை உள்ளபடி உணர காரணம் ஆயிற்று என்கிறார் வள்ளலார். பாடலைப் பாருங்கள்:

வெற்றுச் சொற்கள் இவை

"இயல்வேதா கமங்கள் புராணங்கள் இதிகாசம்

இவை முதலா இந்திரசாலம் கடையாய் உரைப்பர்"

"வேதநெறி  ஆகமத்தின் நெறி பவுராணங்கள்

விளிம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உள அனைத்துங் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே சித்தமே"

"கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக"

வள்ளலாரைப் போல வேதங்களை, இதிகாச புராணங்களை வெறுத்தொதுக்கியவர்கள் அப்போது இல்லை என்றே சொல்லலாம். வேத பாராயணங்கள் வெற்றுச் சொற்கள் என்பதுணர்ந்து விமர்சனம் செய் தவர் அவர்.

இப்படிப்பட்ட வெறுப்பை மட்டுமே விதைக்கும், வேத - இதிகாச - புராண கருத்துக்கள், கலை - காவியம் என்ற பேரால் புகுத்தப்பட்ட கருத்துக்கள் முழுவதுமே கற்பனைகள். அந்தக் கற்பனைக் கருத்துக்கள் ஏற்படுத் திய கண்மூடி வழக்கங்கள் அனைத்தும் மண்மூடிப் போகட்டும் என்கிறார் வள்ளலார். புத்தாக்கச் சிந் தனைகள் தானே இவை; புரட்சிக் கருத்துக்கள் தானே பத்தொன்பதாம் நூற்றாண்டில்!

சமயக்கூட்டம் என்பது கொள்ளைவினைக் கூட் டுறவால் கூட்டப்பெற்ற கூட்டம். அக்கூட்டத்தே கூவுகின்ற கள்ளமுறும்  கலைகள் காட்டிடும் கதியும், காட்சிகளும், அந்த காட்சிகள் ஏற்படுத்திய கடவுளரும் பிள்ளை விளையாட்டு என்கிறார் வள்ளலார். ஆம்! சிறுபிள்ளைகளாக நாம் இருந்தபோது சிறிய சிறிய பொம்மைகளை வைத்து விளையாடினோம்.பெரிய வர்களானதும் பெரிய பெரிய பொம்மைகளை (கடவுளர் உருவங்களை) வைத்து விளையாடுகிறோம்... உண்மை தானே வள்ளலாரின் கூற்று! இதோ படியுங்கள்...

நால்வருண மோசடி

"கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும் அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்

கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல்கதியும்

காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும் எல்லாம்

பிள்ளைவிளை யாட்டென நன்கு அறிவித் தனையே..."

"நால்வருணம் ஆச்சிரம ஆசாரம் முதலாம்

நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே..."

வேதங்கள் விளைத்தவை நால்வருணக் கோட்பாடு; மனு சாத்திரம் உரைத்தது வருணாசிரமம்; கீதை பகன்றது பாழும் நால்வருண வேற்றுமை விதைகள்.

"முகத்திலே பிறந்தவன் பிராமணன்

தோளிலே பிறந்தவன் சத்ரியன்

இடுப்பிலே பிறந்தவன் வைசியன்

காலிலே பிறந்தவன் சூத்திரன்"

இதுதான் நால் வருணம். நானே படைத்தேன் என்று பகவான் (!) கிருஷ்ணன் சொன்னதாக (சதுர்வர்ணம் மாய சிருஷ்டம்) கீதா உபதேசம் உபதேசிக்கிறது. பிரம்மா படைத்ததாக உரிமை கோருகிறது மனுசாத்திரம். இப் படிப்பட்ட கருத்துக்கள் எல்லாம் பிள்ளை விளையாட்டே என்று வருணாசிரமக் கோட்பாட்டை தகர்த்து எறிகிறார் வள்ளலார்.

உயர்ந்த நெறி...

உயர்ந்த நெறியை போதித்த வள்ளலாரின் நெறியினின்று வாழ முற்படுகின்றவர்கள் யாராக இருந்தாலும், வேதங்களை, இதிகாச, புராணங்களை, சாத்திரங்களை வெறுத்து ஒதுக்கி வாழ வேண்டும். இவற்றின் சாரங்கள் அனைத்தும் வெறும் குப்பைகள். இவற்றை புன்செய் நிலத்தில் எருவாக்கிப் போட வேண்டும். ஜாதி, சமய, மத வழக்கங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும். ஏனென்றால் அவெயெல்லாம் சூதாகச் சொல்லப் பட்டவை.

வீணே அழியாதீர்...

"சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந்து அலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே"

"எய்வகை சார் மதங்களிலே பொய்வகைச் சாத்திரங்கள்

எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வமென்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றென்றறீயிர்"

"சாதிகுலம் என்றும் சமய மதம் என்றும் உப

நீதியில் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற

பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிக்க வேதியர்தம்

வாலாட்டடந் தீர்ந்தனவே மற்று"

வேதியரின் வாயாட்டம்

ஜாதிகுலம் என்பதோ, சமய மதமென்பதோ, உபநிடதங்கள் என்பதோ வெறும் பேயாட்டம். அதாவது கற்பனை. இந்த கற்பனை எல்லாம் நிலையென வலி யுறுத்தியவர்கள் வேதியர்களே. அவர்களின் வாயாட்டம் இனியும் எடுபடாது - தீர்ந்தனவே என்கிறார் வள்ளலார். (வாயாட்டம் மட்டுமன்று வாலாட்டமும் இருக்கிறது - அதனை விரட்டியாக வேண்டும்.)

ஜாதியிலும், மதங்களிலும், சமயநெறிகளிலும், சாத்திரங்களிலும், கோத்திரச் சண்டையிலும் விருப்புற்று அலையும் மக்களைப் பார்த்து வள்ளலார் சொல்கிறார் "அலைந்து அலைந்து அழியாதீர்கள் - மனிதருக்கு அழகல்ல" என்று அறிவுறுத்துகிறார்.

மதங்களும், சாத்திரங்களும் எடுத்துரைத்த தெய் வங்களை எல்லாம் எமது எமது என கொண்டாடு கின்றீர்கள். கடவுள் ஒருவரே என்று உணர மறுக்கிறீர்கள் என்று 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' எனும் திருமூலரின் கருத்தை வழிமொழிகிறார் வள்ளலார்.

இதோ வள்ளலாரின் உச்சமான திருமுறை பாடல்கள்:

"சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்"

"இருட்சாதித் தத்துவச் சாத்திரக்குப்பை

இருவாய்ப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம

வழக்கமெலாம் குழிக்கொட்டி மண்மூடிப்போக..."

"சாதி மதம் சமயமெனும் சங்கடம் விட்டு அறியேன்

சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன்"

"கூறுகின்ற சமயமெலாம் மதங்களெலாம் பிடித்துக்

கூவுகின்றார் பலனொன்றுங் கொண்டறியார் வீணே

நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார்..."

"சாதியை நீள் சமயத்தை மதத்தையெலாம் விடுவித்தேன்

சாதி மதம் சமயமெனும் சழக்கையும் விட்டேன்"

இன்றைக்கும் நாட்டை பீடித்து பிற்போக்குத் தனத்தில் மூழ்கச் செய்யவும், மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கவும், மனிதனைவிட மாடுகளுக்கு மகத்துவம் பேசவும் ஆன நிலையும், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே தேசம் என்ற தேசிய இனங்களின் உணர்வுகளும் உரிமைகளும் மறுக்கப்படவுமான முடிவும் நாட்டை எங்கே கொண்டுபோய் நிறுத்தும்? மதப்பித்தம் தலைக்கேறி மனிததத்துவம் சிதைக்கப்படும் நிலையில் அன்பும், கருணையும் நிறைந்த வள்ளலாரின் கருத்துக்கள் அவசியம் தேவையாகிறது. வாடிய பயிரைக் கண்டபோது வாடிய உள்ளம் பெற்றவர் வள்ளலார். பயிர் வாடியபோதே வாட்டம் அடைந்த வள்ளலார் மனித உயிர் வாடும் சூழலில் இன்றைக்கும் தேவைப்படுகிறார். அவரின் அறிவுக் கருத்துக்கள், ஒருமைப்பாட்டுக் கருத்துக்கள் அவசியமாகின்றன. ஜாதியும், மதமும் சமயமும் சாத்திரக் குப்பையும் தவிர்ப்போம்! மாந்தநேயம் தழைத்திட உழைப்போம்!!

(முற்றும்)

-  விடுதலை நாளேடு 15 11 19

வெள்ளி, 25 அக்டோபர், 2019

கடவுள் சக்தியைப் பார்த்தேளா?

கழிவுநீர் வாய்க்காலில் ஆண்டாள் சிலையாம்!

கும்பகோணம், அக்.25 கும்ப கோணத்தில் கழிவுநீர் வாய்க்காலிலிருந்து சாக் குப்பையில் கட்டி தூக்கி வீசப்பட்ட சிலையை துப்புர வுத் தொழிலாளர்கள் கண் டெடுத்துள்ளனர்.

கும்பகோணத்தில் வாய்க் காலை சுத்தம் செய்தபோது, சாக்குமூட்டையில் இருந்து, 2 அடி உயரமுள்ள, அய்ம் பொன் ஆண்டாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஓலைப்பட்டினம் கழிவுநீர் வாய்க்காலை, நேற்று காலை, 10க்கும் மேற்பட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, கால்வாயில், சாக் குப்பை ஒன்று, கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அதை, துப்புரவு பணியாளர்கள் பிரித்து பார்த்தபோது, சிலை ஒன்று இருந்தது. இதுகுறித்து, கும்பகோணம் மேற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. காவல்துறையினர் சென்று, சிலையை மீட்டு, ஆய்வு செய்த போது, 2 அடி உயரமுள்ள, அய்ம் பொன்னாலான ஆண்டாள் சிலை என்பது, தெரிய வந்தது.

பட்டறையில் இருந்து மெருகேற்றம் செய்வதற்கு முன் சிலையைத் திருடியவர் கள், அச்சிலையை மறைத்து வைக்க, கழிவுநீர் வாய்க்காலில் போட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப் படுகிறது.

அப்பகுதிகளில் உள்ள சிலைகள் செய்யும் பட்ட றைகளில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள் ளனர்.

வாய்க்காலில் கண்டெ டுக்கப்பட்ட ஆண்டாளின்  சிலை கும்பகோணம் வட் டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

- விடுதலை நாளேடு 25 10 19

சனி, 19 அக்டோபர், 2019

சதி மாதா ஆகப் போகிறதா - நமது தாய்க் குலம்?

மகளிர் சிந்திக்க வேண்டிய தருணம்

சதி மாதா ஆகப் போகிறதா - நமது தாய்க் குலம்?


கலி. பூங்குன்றன்




இந்தியா ஒரே நாடு - ஈங்கு ஒரே கலாச்சாரம் - இது இந்து நாடு - இந்துக்கலாச்சாரமே நமது கலாச்சாரம் என்று கதையளப்போர் யார்? அவர்கள் எத்தகையவர்கள்? அவர் களின் இதயத்தில் குடிகொண்டு கொழுந்து விட்டு எரியும் தீ எத்தகையது? என்பதைத் தந்தை பெரியார் மொழியிலோ, திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்திலோ நம்ப வேண்டாம் - நம்ப வைக்கவும் வேண்டாம்!

பிறப்பில் பேதம் பேசும் இழிதன்மை கொண்டது இந்து மதம் என்று நாம் சொன்னால் ஏற்க வேண்டாம் - ஏற்கவே வேண்டாம்.

மண்ணுக்கும் கேடாய் மங்கையரை நினைக்கக் கூடிய மாபாதகச் சிந்தனை கொண்டது எது?

இந்த மனு மந்தாதாவின் இந்து மதம் என்று கூறும் கருஞ்சட்டையினர்தம் கருத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டாம் - கொள்ளவே வேண்டாம்!

மாறாக இந்து மதம் கூறுவதையே கவனியுங்கள். இந்து ராஜ்ஜியத்தைச் சமைக்கப் போகிறோம் என்று மீசை முறுக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கருத்தையே கவனியுங்கள், கவனியுங்கள்!

ஆர்.எஸ்.எஸின் தலைவர் - சர்சங்சாலக் மோகன் பாகவத் கூறும் மோகனசுந்தர அருள் வாக்கைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

கருஞ் சட்டையினர் கதறிக் கதறி கூறும் கருத்துகளை இந்த இடத்தில் கண்டிப்பாக தள்ளி வைத்து விட்டு, இந்தக் காவித் தலைவரின் கருத்து என்ன என்பதைக் காது கொடுத்துக் கேளுங்கள்! கேளுங்கள்!!

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று ஆர்.எஸ்.எஸின் தலைமைப் புரியாகிய நாகபுரியில், அதன் தலைவர் அறிவிக்கும், பிரகடனப்படுத்தும் செய்தி முக்கியமானது என்று அந்தமுகாமைச் சேர்ந்தவர்கள் சொல்லுவது வழக்கம். அது போல்தான் நடந்துமுடிந்த விஜயதசமியன்று ஆர்.எஸ்.எஸின் தலைவர் திருவாளர் மோகன் பாகவத் முழங்கி யிருக்கிறார். (8.10.2019)

"இது பெண்கள் அனைவரையும் தாய்மார்களாகக் கருதப்பட்ட நாடு. பெண்களின் சுய மரியாதையைக் காக்க மாபெரும் போர்கள் நடந்த நாடு இது. அவை ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் கதைக் களங்களாகவும் இருந்துள்ளன. பெண்களின் கற்புக்கு களங்கம் ஏற்படும் அபாயக் கட்டங்களில் "ஜோஹர்" போன்ற அக்கினிப் பிரவேச நிகழ்வுகளால் (உடன் கட்டையால்) பெண்கள் அமரத்துவம் பெற்ற நாடு இது. இப்படிப்பட்ட நம் நாட்டில் இன்று நடைபெற்றுவரும் சம்பவங்களைப் பார்க்கும்போது வீட்டிலும் சரி, வெளியிலும் சரி - நம் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் பாதுகாப்பு  அறவே இல்லை என்பதை உணர முடிகிறது. இது நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம்!" என்றார் மோகன் பாகவத்.

இப்படியெல்லாம் இதோபதேசம் செய்திருப்பவர் சாதாரணமானவர் அல்லர். ஆர்.எஸ்.எஸின் பிதாமகன் சர்சங்சாலக் ஆர்.எஸ்.எஸின் தலைமைப் பீடத்திலிருந்து பேசியிருக்கிறார் - அதுவும் இந்துக்களின் 'புனித நாளான'  (?) விஜயதசமியன்று விண்டுரைத்திருக்கிறார்.

பெண்கள் தங்கள் சுய கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால்  மரணம் அடைந்த கணவனை எரியூட்டும் போது அதனை மலர்ப் படுக்கையாகக் கருதிமனையாளும் அந்தத் தீயிலே வெந்து மடிய வேண்டும்.

அதுதான் பெண்ணின் சுயகவுரவத்துக்கும், கற்புக்கும் அணிகலன் இதனை வெள்ளைக்கார மிலேச்சர்கள் சட்டம் போட்டுத் தடுத்து விட்டார்கள்.

எமதருமைச் சகோதரிகளே! இதை ஏதோ இந்த மோகன் பாகவத்துதான் பகர்ந்து விட்டார் என்று தவறாகக் கருத வேண்டாம்.

இவர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்த அர்த்தமுள்ள (?) இந்து மதத்தின் ஆணி வேர்க் கலாச்சாரத்தைத்தான் காலட்சேபம் செய்திருக்கிறார்.

ஆரியர்களின் ருக்வேதம் இதனைக் கூறுகிறது.

"இன்னமும் விதவையாகாமல்  மாங்கலிகளாய் இருக்கிற பெண்கள் விலையுயர்ந்த தைலம், வாசனைத் திரவியங் களுடனும், மலர்ந்த முகத்துடனும், ஆபரணாதிகள் அணிந்து எவருக்கும் முன்னதாக கணவனின் சடலம் வைக்கப்பட்ட கட்டையண்டே வருவர்" என்று ருக் வேதம் கூறுகிறது.

கருட புராணமும் கூறுகிறது "சுத்தி" என்று நாம கரணம் சூட்டப்படுகிறது.

"மாசுடைய பொன்னை அக்னியானது அம்மாசை மாத்திரம் போக்கி, அப்பொன்னை கெடுக்காமை போல கொழுனனோடு உயிர் விடும் புண்ணியவதியின் மேனியை மாத்திரம் அக்னியானவன் தகனிப் பானே யன்றி அவளைச் சிறிதும் வருத்தான். தாய், தந்தை, மகன், பேரன், அண்ணன், தம்பி முதலியோரையும் மற்றுமுள்ள சுற்றத்தாரையும், மனை முதலிய பொருள்களையும், உயிரையும் துறந்து, கணவனே தெய்வம், அவனைப் பிரிந்து வாழ்வது என்பது அடுக்காது என்று தனது கணவனுடனே துஞ்சும் உத்தமியை ஒப்பவர் உலகில் யாருள்ளார்? சகமனம் (உடன்கட்டை ஏற்றல்) செய்த புண்ணியவதி  மூன்றரைக் கோடி தேவ வருஷ காலமும் சுவர்க்கத்தில் கணவனோடு இன்பம் துய்ப்பாள். அவ்வாறு நாயகனுடன் உடன்கட்டை ஏறி இறக்காத மங்கை எந்த ஜென்மத்திலும் துக்கமே அடைவாள்"

- இப்படி கூறுவது விஷ்ணு புராணம் (அத்தியாயம் 14)

அன்று ருக்வேதமும், விஷ்ணு புராணமும் கூறும் 'அர்த்தமுள்ள' ஆபாச இந்து மதத்தின் 'அர்த்த புஷ்டியான வாக்கிய மலர்களைத்தான்' இன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பாச மணமாய்த் தூவுகின்றார்.

பாகவத் மட்டுமல்ல; உண்மையான இந்துக் கலாச் சாரத்தைத் தூக்கிப் பிடிக்கும் 'தூதுவர்கள்' யாராக இருந்தாலும் இவ்வாறு தான் கூறுவார்கள்.

மறைந்த காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்ததென்ன?



"ஆஞ்சநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பாதி வரத்யத்தால் (கற்புச் சக்தியால்) அவரைப் பாதிக் காமலேயே இருந்தது. குமாரில பட்டர் உமிக் காந்தல் அக்னியில் கருகின போது எதிரே நின்ற (சங்கர) ஆசார்யாளின் ஸாந்நித்யத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில் லென்று இருந்தது. அனேக பதிவிரதைகளுக்கு அவர் களுடைய பதி பக்தியினாலேயே  சிதாக்னி சந்தனமாக  இருந்திருக்கிறது. அவர் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்குமாம், அதை எடுத்து வைத்துப் பூஜை பண்ணுவதுண்டு" ('தெய்வத்தின் குரல்' இரண்டாம் பகுதி 'உடன்கட்டை ஏறுதல்' எனும் பகுதியில் பக்கம் 967,968).

அருமைச் சகோதரிகளே! இதுதான் அர்த்தமுள்ள இந்து மதக் கலாச்சாரத்தின் உச்சம். கணவன் இறந்த நிலையில் அவன் மனைவியை என்னென்னவெல்லாம் செய்வார்கள்?

பெண்களின் உணர்ச்சியை அழிக்கவும், அவர்களை சுயநினைவற்றவர்களாக ஆக்கவும் அபின் போன்ற போதைப் பொருட்களையும் ஊட்டுவார்கள். உடன்கட்டை ஏறவேண்டிய பெண்ணைக் குளிப்பாட்டி அவளின் உடலில் மஞ்சள் பூசி வாசனைத் திரவியங்களைத் தடவி நெற்றியில் குங்கும திலகம் இட்டு, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்தி; ஆபரணங்களை எல்லாம் பூட்டி அவள் விதவையாகையால் சுமங்கலிகளின் கண்களில் படக்கூடாது என்பதற்காக அவளது உடல் முழுதும் மலர்ந்த மலர்களால் மறையும்படி மூடி, அவளது மடியில் ஏராளமான எலுமிச்சம் பழங்களையும் கட்டி, சூடத்தையும் கட்டிவிட்டு மேளவாத்தியம் தாரை தப்பட்டை, முதலியவற்றுடன் கணவனின் பிணத்திற்குப் பின்னதாக ஊர்வலமாகச் சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்லுவார்கள்.

சுடுகாட்டில் 15 சதுர அடி பரப்பு உள்ளதாயும், இரண்டு முழ ஆழம் உள்ளதாயும் வெட்டப்பட்ட குழியில் அகில், சந்தனம், துளசி ஆகியவற்றின் கட்டைகளை அடுக்கி அதன்மீது இறந்தவன் சடலத்தை வைத்து ஈமக்கிரிகைகளைத் துவங்குவார்கள்.

விதவை மனைவியானவள் கணவன் சடலம் வைக்கப்பட்ட சிதையை மூன்று முறை வலம் வந்து தமது குலதெய்வத்தைக் கைகூப்பி வழிபடுவாள். பிறகு, தான் அணிந்து இருக்கும் நகைகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் கழற்றித் தமது உறவினர்களிடம் கொடுப்பாள். பிறகு, அவள் கையில் எண்ணெயை ஊற்றுவார்கள். அதை வாங்கித் தனது தலையில் தேய்த்துக் கொள்ளுவாள். பிறகு, மீண்டும் மூன்று முறை சிதையை வலம் வந்து ஈமப்படுக்கையில் தனது கணவனின் சடலத்தின் பக்கத்தில் படுப்பாள். பிறகு, கயிறிட்டு கட்டி மேலும் விறகுகள் அடுக்குவதுடன் எளிதில் தீப் பிடிக்கக்கூடிய உலர்ந்த இலைகள், வைக்கோல் முதலியவற்றைச் சிதையின்மீது போட்டுத் தீ வைப்பார்கள்.

இப்படித் தீ வைப்பதற்கு முன்னதாகவே விதவைப் பெண்ணின் உறவினர்கள் இரண்டு பச்சை மூங்கில்களைக் கொண்டு அப்பெண் சுடுபட்டு எழுந்து ஓடிவிடாத வண்ணம் அழுத்திப் பிடித்துக் கொள்ளுவார்கள்.

நெருப்பின் சூடு பொறுக்க மாட்டாமல் அந்தப் பெண் அலறும் சப்தம் வெளியே கேளாதபடி தாரை, தப்பட்டை, ஊதுகொம்பு முதலிய முரட்டு வாத்தியங்களை வேகமாக முழக்கிக் கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் இப்படித் தீயில் இடப்பட்ட பெண்கள் சூடு பொறுக்க முடியாமல், எழுந்து ஓடுவதும் உண்டு. அப்படி எழுந்து ஓடும் விதவைகளை முரட்டுத் தடிகொண்டு அடித்து நெருப்பில் தள்ளிக்கொன்று சாம்பலாக்குவார்கள்.

இப்படிப் பெண்ணானவள் எழுந்து ஓடிவிடக் கூடாதே என்பதற்காக விதவை பெண்ணின் உறவினர்கள் தீ  இடப்பட்ட உடன் அத்தீயில் குடங்குடமாக எண்ணெய், வெண்ணெய், நெய் முதலியவற்றைக் கொட்டி தீயின் வேகத்தை அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். இந்தக் காட்டுமிராண்டித்தனமான கோரக் கொலை நிகழ்ச்சிகள் பழம்பெரும் பூமி, ஞான பூமி, புண்ணிய பூமி என்று புகழப்படும் இந்தப் பாரதத்தில் பண்டைக்காலம் தொட்டு சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்வரையிலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்காக நடந்த வண்ணமாகவே இருந்து இருக்கின்றன.

எத்தகைய மனிதநேயம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்?  - நம்புங்கள், உண்மையான பத்தினிப் பெண்ணாக அவள் இருந்தால், அந்தப் பெண்ணை நெருப்பு சுடாதாம் - நம்புங்கள், சங்கராச்சாரியார்  அப்படித்தானே சொல்லி யிருக் கிறார்.

ஆகா, எத்தகைய இளகிய உள்ளம், கருணா சாகரம்!

மனிதாபிமானமற்ற மட்டரகமான இந்தக் காட்டு விலங் காண்டித் தனத்தை மனம் பொறுக்காமல் ஒழித்திடத்  தடை சட்டம் கொண்டு வந்தவர் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆளுநராக இருந்த லார்ட் வில்லியம் பெண்டிங்.

1829ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 4ஆம் தேதியை மனித நேயத்துடன் மனிதகுலம் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்.

கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்கால் 'சதி' தடை செய்யப்பட்ட போது, இந்திய இராணுவத்தில் கமாண்டர் - இன் சீஃப் சர் சார்லஸ் நேப்பியரை பார்ப்பனர் குழு ஒன்று கண்டு தேசிய பழக்க வழக்கங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட்டிஷ் அரசு உறுதியளித்து இருப்பதை அவருக்கு நினைவூட்டியபோது, அதற்கு நேப்பியர் சொன்ன பதில்: "என்னுடைய தேசத்திலும் ஒரு வழக்கம் இருக்கிறது. பெண்களை உயிருடன் எரிக்கும் ஆண்களைத் தூக்கில் தொங்க விடுவதுதான் அந்தப் பழக்கம். நாம் எல்லோரும் நமது தேசங்களின் வழக்கப்படிதான் நடக்கிறோம்" என்றாரே பார்க்கலாம்.

(''The Week  -  அக்டோபர் 11 - 1987)

மதவாத வெறித்தனத்துடன் பெண்ணை துடிக்கத் துடிக்க தீயில் வைத்துக் கொளுத்திய கொடுமையை ஒழிந்த வெள்ளைக்காரன் இவர்கள் பாஷையில் 'மிலேச்சன்!'

ஈவுரக்கமின்றி பெற்ற மகளையும், உடன் பிறந்த சகோதரிகளையும் பதைக்கப் பதைக்கத் தீயிட்டுப் பொசுக்கும் குரூரம்தான் மகத்துவமாம் - இந்த அர்த்தமுள்ள இந்து மத அகராதியில்.

பிறப்பால் இந்து வாக்கப்பட்ட நமது தாய்க்குலம் உரக்கச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

இங்கு ஒரு இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்லுகின்ற ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன்பாகவத்  - பெண்களின் சுயகவுரவம் என்பது உடன்கட்டை ஏறுவதுதான் இப்பொழுது சொல்லுகிறார்.

அதைத் தடுத்து விட்டார்களே என்று ஆவேசப்படுகிறார். இவர்கள் விரும்பும் இந்து ராஜ்ஜியம் இங்கு வந்தால் இதுதான் நடக்கும் எச்சரிக்கை!  பிஜேபி ஆண்ட ராஜஸ்தானில் என்ன நடந்தது?

ரூப்கன்வரை மறந்து விட முடியுமா? சதிமாதா கோயில் இன்றும் இருக்கிறதே! இவர்கள் கூறும் இந்து ராஜ்ஜியம் அமைந்தால் உடன்கட்டை என்ற காட்டு விலங்காண்டித்தனம் தேவை என்று சட்டம் செய்ய மாட்டார்கள் என்று சொல்ல முடியுமா? எண்ணிப் பார்க்க வேண்டிய தருணம் இது.

இந்த இந்து ராஜ்ஜியம் விரும்பிகளுக்குப் பாடம் கற்பிப்பதில் முதல் வரிசையில் நிற்க வேண்டியது நம் நாட்டுத் தாய்மார்கள் அல்லவா! ஏன், பார்ப்பனப் பெண்கள்கூட சிந்திக்க வேண்டியவர்களே! இந்து ராஜ்ஜியம் வந்தால் ஒட்டு மொத்த பெண்களின் உரிமையே சதியில் எரிந்து விடும் - எச்சரிக்கை!

அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு  விழா ஆண்டு இது!

தாய்க் குலமே சிந்திப்பீர்!

- விடுதலை நாளேடு 12 10 19

வெள்ளி, 11 அக்டோபர், 2019

மூடநம்பிக்கையால் முடிந்துபோன ராஜ்ஜியம்



தஞ்சையை ஆண்ட முதலாம் மராட் டிய மன்னர் வெங்காஜி, இந்த வெங்காஜி பிஜப்பூர் சுல்தான் அடில்ஷாவின் படைத் தளபதி ஆவார். இவரது திறமையைப் பாராட்டி பெங்களூர் நிர்வாகத்தை ஒப் படைத்திருந்தார் அடில்ஷா. இந்த நிலை யில் சத்ரபதி சிவாஜி பெங்களூர் மீது படையெடுக்க வரவே, வெங்கோஜி சனவரி 1676இல் தஞ்சையை நோக்கி நகர்ந்தார்.

அப்போது மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் தம்பி அழகிரி நாயக்கர் தஞ்சையை ஆண்டு வந்தார்.

வெங்காஜி  தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமய மானது, ஆயுத பூஜை சமயமாகும். படை வீரர்களது ஆயுதங்கள் அனைத்தும் பூஜைக்காக புதிதாக்கப்பட்டு சந்தனம் பொட்டு வைத்து கொலுவில் வைக்கப்பட்டு இருந்தன.

வெங்காஜியின் படையெடுப்பை அறிந்த மன்னன் அழகிரி நாயக்கருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன அமைச்சர்களையும், பார்ப்பனக் குருமார் களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட் டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படை யெடுத்து வருபவன் சுல்தான் அடில்ஷா வின் தளபதியான வெங்காஜியாவான். அவனோ இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசிச் செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவி விட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான் என்று சொன்னார்கள்.

மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லை யில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.

வெங்காஜியின் படைகளின் குதிரை களோ, குவித் திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும், அனாயாசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கவ்விக் கொண்டு நகருக்குள் புகுந்தன.

இதனைக் கேள்வியுற்ற மன்னன் அழ கிரி நாயக்கர் வைணவனான  வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்து ழாயினை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி மதுரையில் தஞ்சமடைந்தான்.  வெங் காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்கா மலும் எளிதில் தஞ்சையினைக் கைப் பற்றின. அன்றிலிருந்து  தஞ்சாவூர் மராத்திய மன்னர்களின் ஆளுமைக்குச் சென்றது.  வரலாற்றில் எந்த ஒரு பதிவிலும் தஞ்சாவூரைக் கைபற்ற வெங்காஜி போரிட் டதாக இல்லை. அப்படியே இருந்தாலும் அது மதம் தொடர்பான கற்பனைக் கதையாக உள்ளது. 1680இல் நாயக்க மன்னரின் முட்டாள் தனத்தால் எளிதாக கைப்பாற்றிய தஞ்சை சமஸ்தானத்தில் 1855-ஆம் ஆண்டுவரை மராட்டியர்கள் ஆட்சி செய்தனர்.  எந்த நாயக்கர்களின் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவர பார்ப்பனர்களின் ஆலோசனை காரணமாக அமைந்ததோ அதே பார்ப்பனர்களால் தான் மராட்டியர் களின் ஆட்சியையும் முடிவிற்கு வந்தது.  கடைசி மன்னர் தஞ்சாவூர் சிவாஜி தனக்கு வாரிசு இல்லாதாதால் தனது சகோதரி மகனை முடிசூட்ட முயற்சி செய்தார். ஆனால் சூத்திரனான தஞ்சாவூர் சிவாஜி தனது வாரிசாக யாரையுமே நியமிக்க முடியாது என்று மனுதர்மத்தை சுட்டிக் காட்டி ஆங்கிலேய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், அங்கு வாதாடிய பார்ப் பனர்கள் கலியுகத்தில் பார்ப்பனர் மற்றும் சூத்திரர்கள் மட்டுமே, சத்திரியர் வைசியர் என யாருமே கிடையாது என்று கூறி விட்டனர். இதனை அடுத்து டல்ஹொசி பிரபு கொண்டுவந்த அவகாசியிலிக் கொள்கை என்ற வாரிசு இழப்புக் கொள்கையின் படி தஞ்சை ஆங்கிலேயர் வசம் சென்றது. அப்போது பார்ப்பனர்கள் தான் தஞ்சையின் முன்சீப் ஆக நியமிக் கப்பட்டனர்.

நாயக்கர் தஞ்சையைப் பறிகொடுத்ததை வைத்தே ”பார்ப்புப் பெருத்தல்லோ நாயக் கர் துரைத்தனம் கெட்டது”! என்ற பழமொழி ஏற்பட்டது.  ஆயுத பூஜையால் ஆட்சியும் அரண்மனையும் அழிந்தது, அதன் பிறகு பார்ப்பனர்களால் மராட்டிய சாம்ராஜியமும் ஆங்கிலேயரிடம் சென்றது. ஆனால், தொடர்ச்சியாக பார்ப்பனர்கள் மட்டுமே வளமாக வாழ்ந்துகொண்டு வந்தனர்.

- விடுதலை ஞாயிறு மலர், 5 .10 .19

வெள்ளி, 4 அக்டோபர், 2019

சிந்தனைத் திரட்டு

அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராததை பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனா கான்.

பேராசை இல்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்பிப் பின்பற்றமாட்டான்.

கடவுள் நம்பிக்கைகூட மனிதனுக்கு அநேகமாய்ப் பேராசையினாலும் பயத்தினாலும் ஏற்படுவதே அல்லாமல் உண்மையைக் கொண்டல்ல.

எந்தக் காரியத்தையும் வெளிப்படையாய்ச் செய்கிறவன் திருடனானாலும் கொலைகாரனானாலும் அவன் யோக்கியனே.

ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும், நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல.

கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது.

கடவுளைக் காப்பாற்ற மக்கள் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகின்றது.

அரசனும் செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்கவேண்டியவர்களா கின்றார்கள். ஏனெனில் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்றால் பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான். பிறவியிலும் பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும், ஆளப்படுவதிலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று அரசன் பயப்படுகிறான்.

ஆட்சி, பிரபுத்துவம், ஜாதி உயர்வு இம்மூன்றும் உயிர் ஒன்றும் உடல் மூன்றுமாயிருக்கின்றன.

கொள்ளைக்காரர்களாய் இருந்தவர்களே அரசரா கிறார்கள். கொடுமைக்காரராய் இருந்தவர்களே பிரபுக் களாகின்றார்கள். அயோக்கியர்களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக்காரர்களாகின்றார்கள்.

வேதங்கள் இல்லாவிட்டால் மதங்கள் இருக்க முடியா. மதங்கள் இல்லாவிட்டால் கடவுள்கள் இருக்க முடியா.

******


இப்பொழுது மத சம்பந்த மாகவோ, சாஸ்திர சம்பந்தமாகவோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்டு களுக்குக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம் தான் இருந்து வருகின்றது. அது என்ன வென்றால் கடவுளை நம் பாதவன் நாஸ்திகன் என்பதுவே.

- பெரியார் ஈ.வெ.ரா.

 - விடுதலை நாளேடு, 4 .10. 19